இனிய ரமலான் – இது இறைவனின் தர்பியா

அல்லாஹ்வின் அருளால் புனிதமிக்க ரமலான் நம்மை அடைந்திருக்கின்றது. இந்த ரமலான் துவங்கியதை முன்னிட்டு நம் வாழ்நாள் துலங்க வேண்டும்.
இவ்வாறு நாம் சொல்லும்போது, பொதுவாக ஒரு நல்ல நாளை முன்னிட்டு நமது தொழில் துலங்கட்டுமாக என்று பிறமத சகோதரர்கள் கூறுவதுபோன்று நாமும் சொல்கின்றோம் என்று நினைத்து விடக்கூடாது.
ரமலான் மாதம் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஒரு பயிற்சிக் காலமாகவும், பயிற்சி முகாமாகவும் அமைந்திருக்கின்றது.

அதிகாலை எழுவதற்குரிய பயிற்சி
ரமலான் மாதம் துவங்கியதும் அது தருகின்ற முதல் பயிற்சி, அதிகாலையில் ஸஹர் உணவுக்காக எழுந்திருக்கும் பயிற்சியாகும். ரமலான் காலத்தில் பள்ளியில் பாங்கு சொல்வதற்கு சுமார் 1 மணி நேரத்திற்கு முன்பாகவே எழுந்து விடுகின்றோம்.
ஸஹர் நேரத்தில் செய்யப்படும் பிரார்த்தனை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறுகின்றார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ்வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது, ‘என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்குக் கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்’ என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 1145


இந்த ஹதீஸ், ஸஹர் நேரத்தில் கேட்கப்படும் துஆ இறைவனிடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கின்றது. அதனால் இந்த ஹதீஸின்படி இந்த நேரத்தில் ஒருவர் தொழுகையிலும், பாவமன்னிப்புத் தேடுவதிலும், துஆவிலும் ஈடுபடுகின்றபோது அது அவருக்கு ஒரு பயிற்சியாக அமைந்து விடுகின்றது. இந்தப் பழக்கம் ரமலானுக்குப் பிறகு அவரை தொடரச் செய்யும் போது அந்த ரமலான் அவரிடம் வாழ்நாள் முழுவதும் துலங்கும் வகையில் அமைந்து விடுகின்றது.
ஒருவர் சுபுஹுக்கு முன்பே எழுந்து தஹஜ்ஜத் தொழுகின்ற பழக்கத்தைக் கைக்கொண்டு கடைப்பிடிக்கின்ற போது சுபுஹ் தொழுகை அவருக்கு ஒரு பாரமாகவும், பளுவாகவும் இருப்பதில்லை. இது இறை தர்பியா தருகின்ற இனிய பயிற்சி ஆகும்.

ஜமாஅத் தொழுகை
பொதுவாக ரமலான் மாதத்தில் மக்கள் தன்னார்வமாகவே ஐவேளை தொழுகைகளிலும் ஜமாஅத்தில் கலந்து கொள்கின்றனர். அதுவரை தொழாதவர்கள் கூட தொழத் துவங்கி விடுகின்றனர். இந்த வகையில் மக்களின் செயல்பாடுகள் நபி (ஸல்) அவர்களின் கீழ்க்காணும் கூற்றுக்கேற்ப அமைந்து விடுகின்றன.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ரமலான் மாதம் வந்துவிட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 1899

அதாவது, ரமலானில் ஷைத்தானின் ஆதிக்கம் முற்றிலும் கட்டுக்குள் வைக்கப்படுவதை நாம் காண முடிகின்றது. இந்த அடிப்படையில் ரமலான் மாதம் தொழுகைக்குரிய பயிற்சிக் களமாகவும், காலமாகவும் அமையப்பெறுகின்றது.

இரவுத் தொழுகை

கடமையான தொழுகைகளைத் தாண்டி மக்கள் இரவு நேரங்களில் அதிகமானோர் முன் நேரங்களிலும், குறிப்பிட்ட மக்கள் பின்னிரவு நேரங்களிலும் இரவுத் தொழுகையைத் தொழுவதற்கு ரமலான் ஓர் உந்து விசையாக அமைந்து விடுகின்றது.

குர்ஆனுடன் அதிகத் தொடர்பு

குர்ஆன் இறங்கிய மாதம் என்பது பெயரளவில் இல்லாமல் அது உயிரோட்டமாக அமைந்து விடுகின்றது. அதனால் மக்கள் அதிகமதிகம் குர்ஆனுடனும், குர்ஆன் தொடர்புடைய சொற்பொழிவுகளுடனும் பின்னிப் பிணைந்து விடுகின்றனர். குர்ஆன் ஏற்றி வைக்கின்ற தீப்பந்தம் ரமலானைத் தாண்டி வாழ்நாள் முழுவதும் ஒரு முஸ்லிமிடம் பற்றி எரியத் தொடங்கி விடுகின்றது. அந்த வகையில் இந்த ரமலான் ஒரு தலைசிறந்த தர்பியாவாக ஆகி விடுகின்றது.

லைலத்துல் கத்ருக்கான தேடல்

எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் லைலத்துல் கத்ர் எனும் இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது என்று கூறுகிறான்.

மதிப்புமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும்.

அல்குர்ஆன் 97:3

அதாவது அந்த இரவில் நின்று வணங்குவது ஆயிரம் மாதங்கள் நின்று வணங்கியதைக் காட்டிலும் நன்மையைப் பெற்றுத் தருகின்றது.

நபி (ஸல்) அவர்கள் ‘ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2017


இதன்படி, அல்லாஹ்வின் அருளால் முஸ்லிம்கள் ரமலானின் பிந்திய 10 இரவுகளில் கண் விழித்து நின்று வணங்குகின்றனர். ஒரு சிலர் பிந்திய 10 நாட்களும் பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருந்தும் லைலத்துல் கத்ரைத் தேடுவதில் ஈடுபடுகின்றனர்.
இது, மேலே நாம் பார்த்த புகாரி 1899 ஹதீஸின் அடிப்படையில் ஒவ்வொரு முஸ்லிமும் திறக்கப்பட்ட சுவனத்தின் வாசல்களை எட்டு வைக்கும் தூரத்தில் எட்டிப் பார்த்து வருகின்ற ஓர் உணர்வைப் பெற்று விடுகின்றார்கள். அப்படி ஒரு பயிற்சியை இந்த ரமலான் அளித்து விடுகின்றது. இதன் பின்னர் அவர் எப்படிப் பாவங்கள் செய்ய முடியும் என்றளவுக்கு மறுமையின்மீது ஒரு நெருக்கத்தை இம்மாதம் ஏற்படுத்தி விடுகின்றது.

தர்ம சிந்தனை
ரமலான் வந்துவிட்டால் ஒவ்வொரு முஸ்லிமிடமும் தர்ம சிந்தனை ஊற்றெடுக்க ஆரம்பித்து விடுகின்றது. ரமலான் மாதத்தில் ஒவ்வொரு முஸ்லிமுடைய உள்ளத்திலும் ஈகை உணர்வு பொங்கிப் பெருக ஆரம்பித்து விடுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகப் பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சாதாரண நாட்களை விட) ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களை ரமலான் மாதத்தில் சந்திக்கும்போது நபி(ஸல்) மிக அதிகமாக வாரி வழங்கும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள். (சுருக்கம்)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 6

இந்த உணர்வை மக்கள் ரமலான் மாதத்தில் பிரதிபலிப்பவர்களாக உள்ளனர். இந்த வகையில் ரமலான் மாதம் தர்மத்திற்கான பயிற்சிக் களமாகவும் அமைகின்றது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

நோன்பு


ஒரு மாத காலம் ஒவ்வொரு நாளும் ஆண், பெண் என்ற பாகுபாடில்லாமல் அனைத்து முஸ்லிம்களும் நோன்பிருக்கின்றனர். நோன்பிலிருந்து விதிவிலக்கு பெற்றவர்களைத் தவிர ஒவ்வொரு முஸ்லிமும் அதிகாலை முதல் அந்தி மாலை வரை பகல் நேரங்களில் உண்ணாமலும் பருகாமலும் இருக்கின்றனர். இது ஆண்டு முழுவதும் அன்றாடம் அவர் அனுபவித்து வந்த உணவுப் பழக்கத்தை முற்றிலுமாகப் பறித்து, அவருடைய வாழ்க்கையை தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிடும் நிகழ்வாகும்.


உணவு உண்ணாமல் இருப்பதைக் கூட ஒருவர் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் கடுமையான தாக நேரத்திலும் பச்சைத் தண்ணீர் கூடப் பருகாமல் இருப்பது ஒரு பெரிய சோதனையாகும்.


உணவையாவது ஒருவர் நோன்பு துறந்ததும்தான் வாயில் வைப்பார். ஆனால் ஐவேளைத் தொழுகையின்போது உலூச் செய்யும் நேரத்தில் தண்ணீரை அன்றாடம் அவர் வாயில் வைக்க நேரிடுகின்றது. கடுமையான கோடையில் வெயில் நேரத்தில் தாகத்தில் தண்ணீருக்காக வாய் தவிக்கையில், உலூவின் போது தொண்டைக்குழி வரை தண்ணீர் உள்ளே சென்று ஊடாடி, உறவாடி விட்டுத் தனது சுவையை நாவில் பதிய வைத்தப் பின்னர் வெளியே திரும்ப வருவது ஒவ்வொரு முஸ்லிமும் அனுபவிக்கும் ஒரு வித்தியாசமான, சுகமான சோதனையாகும்.
இவ்வாறு ஒருவர் வாயில் செலுத்திய தண்ணீரை அப்படியே கொப்பளிக்கின்றார் என்றால் தன்னை “அல்லாஹ் பார்க்கிறான்” என்று கொண்டிருக்கும் இறையச்சத்தைத் தவிர வேறு என்ன காரணமாக இருக்க முடியும்? ரமலான் கழிந்த பிறகும் இந்த உணர்வை அவர் பெறுகின்றபோது இது அவரைப் பெரிய, சிறிய பாவங்களை விட்டும் தடுக்கின்ற, தற்காக்கின்ற தடுப்பரணாக அமைந்து விடுகின்றது. இதைத்தான் எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.


இறைநம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தோர்மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்கள்மீதும் குறிப்பிட்ட நாட்கள் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (இதனால்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.


அல்குர்ஆன் 2:183


இந்த அடிப்படையில் ரமலான் ஒரு முஸ்லிமுக்கு முதல் பயிற்சிக் களமாகவும், பயிற்சிக் காலமாகவும் ஆகி விட்டது. இது இறைவன் அளிக்கின்ற உடல் ரீதியிலான ஒரு தர்பியா (பயிற்சி) ஆகும்.
ரமலான் ஒரு முஸ்லிமுக்குத் தனது பட்டறையில், பயிற்சிப் பாசறையில் பசி, பட்டினி, தாகம், காமத்தைக் கட்டுப்படுத்துகின்ற உடல்ரீதியான பயிற்சியை மட்டும் கற்றுக் கொடுக்கவில்லை. உளவியல் ரீதியான பயிற்சியையும் சேர்த்தே கற்றுக் கொடுக்கின்றது. இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

“பொய்யான பேச்சையும், பொய்யான நடவடிக்கைகளையும் விட்டுவிடாதவர் தம் உணவையும் பானத்தையும் விட்டுவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!”

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 1903

நோன்பு என்பது தாகம், பசி, பகல் நேர இல்லறம் தவிர்ப்பு போன்ற விஷயங்களை ஒரு முஸ்லிம் அனுபவிக்கின்ற ஒரு வித்தியாசமான சோதனை என்று பார்த்தோம். ஆனால் இதையெல்லாம் மார்க்கம் ஒரு பெரிய விஷயமாகக் கருதவில்லை. உளவியல்ரீதியிலான மாற்றத்தை உருவாக்காத நோன்பினால் அவருக்கு எந்தப் பயனுமில்லை என்று இந்த ஹதீஸ் ஆணித்தரமாக அடித்துச் சொல்லி விடுகின்றது.
ஒருவர் ஒரு மாத காலம் பொய் பேசாமல் இருக்கப் பயிற்சி எடுத்தாலே போதும். அவர் வாழ்நாள் முழுவதும் பொய் பேசாமல் உண்மை மட்டும் பேசும் பக்குவத்தையும், பண்பையும் பெற்று விடுகின்றார்.
ரமலான் மாதத்தில் உண்மையாளராகத் துவங்கிய அவர் வாழ்நாள் முழுவதும் உண்மை பேசுபவராகத் துலங்கி விடுகின்றார். இந்த அடிப்படையில்தான் ரமலான் துவங்கியதை முன்னிட்டு வாழ்நாள் துலங்கட்டுமாக என்று மேலே குறிப்பிட்டோம்.
எனவே நம்மை அரவணைத்திருக்கின்ற இந்த ரமலான் மூலம் உடல்ரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் பக்குவப்பட்டவர்களாக நம்மை நாம் ஆக்கிக் கொள்வோம். பின்வரும் ஹதீஸ் அடிப்படையில் ரமலான் மாதத்தில் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களாக ஆவோமாக!

நபி (ஸல்) அவர்கள், “அனைவரும் மிம்பருக்கு (அருகில்) வாருங்கள்” என்று கூறினார்கள். நாங்கள் அனைவரும் ஆஜரானோம். அப்போது முதல் படியில் ஏறும்போது “ஆமீன்’’ என்று கூறினார்கள். இரண்டாவது படியில் ஏறும்போதும் “ஆமீன்’’ என்று கூறினார்கள். மூன்றாவது படியில் ஏறும்போதும் “ஆமீன்’’ என்று கூறினார்கள். அவர்கள் இறங்கிய உடன் “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (என்றைக்குமே) கேள்விப்படாத ஒன்றை இன்று உங்களிடமிருந்து செவியேற்றோமே!” என்று கேட்டோம்.
நான் முதல் படியில் ஏறும்போது ஜிப்ரீல் (அலை) எனக்கு காட்சி தந்து, ‘யார் ரமலான் மாதத்தை அடைந்தும் அவன் பாவங்கள் மன்னிக்கப்படவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும்’ என்றார்கள். நான் ஆமீன் என்றேன். நான் இரண்டாவதில் ஏறும்போது, ‘யாரிடத்தில் (முஹம்மதாகிய) நீங்கள் நினைவுகூரப்பட்டும் அவன் உங்கள் மீது ஸலவாத் கூறவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும்’ என்றார்கள். நான் ஆமீன் என்று கூறினேன். நான் மூன்றாவதில் ஏறும்போது ‘ஒருவனிடத்தில் அவனுடைய பெற்றோர்கள் வயோதிகப் பருவத்தை அடைந்து (அவர்களுக்கு பணிவிடை செய்வதன் மூலம்) அந்த இருவரும் இவனை சொர்க்கத்தில் நுழைவிக்கவில்லையோ அவனுக்கு இறையருள் தூரமாகட்டும்’ என்றார்கள். நான் ஆமீன் என்று கூறினேன் என்றார்கள்.


அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி)
நூல்: ஹாகிம் (7256)