பெண்களுக்கான திருமணச் சட்டங்கள்

ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்குச் செய்து கொள்ளும் ஒப்பந்தம் திருமணமாகும். இந்தத் திருமணத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இஸ்லாம் சிறந்த வழிகாட்டுதலைச் சொல்கிறது.

பெண்ணின் சம்மதம்

தனக்குப் பிடித்தக் கணவனை, தன் விருப்பப்படி தேர்வு செய்வதற்குப் பெண்ணிற்கு முழுமையாக இஸ்லாத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. பெண்ணுடைய விருப்பமில்லாமல் நடத்தப்படும் திருமணம் செல்லாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “கன்னி கழிந்த பெண்ணை, அவளது (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒரு முறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்’’ என்று சொன்னார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)’’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அவள் மௌனம் சாதிப்பதே (அவளது சம்மதம்)’’ என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (5136)

கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார். எனக்கு இதில் விருப்பமிருக்கவில்லை. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் போனேன். அத்திருமணத்தை நபி (ஸல்) அவர்கள் ரத்து செய்தார்கள்.

அறிவிப்பவர்: கன்ஸா பின்த் கிதாம் அல்அன்சாரியா (ரலி)

நூல்: புகாரி (5138)

துணையைத் தேர்வு செய்வதில் கவனிக்க வேண்டியவை

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தன் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும்போது ஒழுக்கத்தையும் மார்க்கப் பிடிப்பபையும் முதலில் கவனத்தில் கொண்டு தேர்வு செய்ய வேண்டும். கணவன் செல்வந்தனாக இருக்கவேண்டும் என்று பெண்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லை.

கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (உரியோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்).

அல்குர்ஆன் (24:26)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். 1. அவளது செல்வத்திற்காக.   2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளது அழகிற்காக. 4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன் இரு கரங்களும் மண்ணாகட்டும்!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (5090)

‘‘முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்க மாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்து விடுபவர்). முஆவியாவோ ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உசாமா பின் ஸைதை மணந்து கொள்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் (2953)

நேரடியாகச் சம்மதம் கேட்கலாமா?

மனதுக்குப் பிடித்த ஆணிடத்தில் ஒரு பெண் நேரடியாக, ‘என்னைத் திருமணம் செய்து கொள்கிறீர்களா?’ என்று கேட்பது குற்றமில்லை.

நான் அனஸ் (ரலி) அவர்கள் அருகில் இருந்தேன். அன்னாருடன் அவர்களுடைய புதல்வியார் ஒருவரும் இருந்தார். (அப்போது) அனஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தன்னை மணந்து கொள்ளுமாறு கோரியபடி ஒரு பெண் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (மணமுடித்துக் கொள்ள) நான் தங்களுக்கு அவசியமா?’ எனக் கேட்டார் என்று கூறினார்கள். அப்போது அனஸ் (ரலி) அவர்களுடைய புதல்வி, “என்ன வெட்கங்கெட்டத் தனம்! என்ன அசிங்கம்! என்ன அசிங்கம்’’ என்று சொன்னார். அனஸ் (ரலி) அவர்கள், “அந்தப் பெண்மணி உன்னை விடச் சிறந்தவர்; அந்தப் பெண் நபியவர்களை (மணந்து கொள்ள) ஆசைப்பட்டார். ஆகவே, தன்னை மணந்து கொள்ளுமாறு கோரினார்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸாபித் அல் புனானி

நூல்: புகாரி (5120)

மஹர் – மணக்கொடை

திருமணம் செய்வதற்காக மணமகன், மணமகளுக்கு வழங்கும் பொருள் மஹர் (மணக்கொடை) எனப்படும்.

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளைக் கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!

 அல்குர்ஆன் (4:4)

அப்பெண்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக்கொடைகளைக் கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்தால் உங்களுக்குக் குற்றம் இல்லை.

அல்குர்ஆன் (4:24)

ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் தம்மை (அர்ப்பணித்து) அன்பளிப்புச் செய்து விட்டதாகக் கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனக்கு எந்தப் பெண்ணும் தேவையில்லை’’ என்று சொன்னார்கள்.

அப்போது அங்கிருந்த ஒரு மனிதர் “இந்தப் பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள்!’’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “ஏதேனும் ஆடையொன்றை அவளுக்கு (மஹ்ர் எனும் விவாகக் கொடையாக)க் கொடு!’’ என்று (அந்த மனிதரிடம்) சொன்னார்கள். அவர், “என்னிடம் இல்லை’’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “அவளுக்கு (எதையேனும் மஹ்ராகக்) கொடு! அது இரும்பாலான மோதிரமாக இருந்தாலும் சரியே’’ என்று சொன்னார்கள்.இதைக் கேட்டு அந்த மனிதர் கலங்கினார்.

எனவே, நபி (ஸல்) அவர்கள், “குர்ஆனிலிருந்து உன்னிடம் என்ன (அத்தியாயம் மனனமாக) இருக்கிறது?’’ என்று கேட்டார்கள். அவர் “இன்ன இன்ன அத்தியாயங்கள் (எனக்கு மனப்பாடமாக) உள்ளன’’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “உம்முடன் இருக்கும் குர்ஆன் அத்தியாயங்களுக்காக இவளை உமக்கு மணமுடித்து வைத்தேன்’’ என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி)

நூல்: புகாரி (5029)

ஒரு பெண் திருமண வாழ்வின் மூலம் தனக்கு ஏற்படும் இழப்புகளைக் கருத்தில் கொண்டு எவ்வளவு வேண்டுமானாலும் மஹர் கேட்பதற்கு உரிமை உள்ளது. அதை அவள் மட்டுமே உடைமையாக வைத்துக் கொள்வதற்கும் உரிமை உள்ளது.

இல்லற வாழ்க்கையில் அதிகமான இழப்புக்கு ஆளாவது பெண்கள் தான். தங்களின் அழகையும் இளமையையும் இழந்த பின் அவர்கள் விவாகரத்து செய்யப்படக் கூடும். அந்த நிலையை எண்ணிப் பார்த்து மஹர் தொகையைத் தீர்மானிக்கும் உரிமையை பெண்களுக்கு இஸ்லாம் வழங்குகின்றது.

மஹர் தொகையை எவ்வளவு வேண்டுமானாலும் பெண்கள் கேட்கலாம். இவ்வளவுதான் கேட்க வேண்டும் என்று வரையறை செய்யும் உரிமை எவருக்கும் இல்லை.

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள இந்த உரிமையைப் பெண்கள் பயன்படுத்தத் தவறிவிட்டதால் அவர்களின் நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. இவர்கள் மஹர் கேட்காததால் ஆண்கள் வரதட்சணை கேட்கும் கொடுமை அதிகமாகி விட்டது.

கொடுக்கக் கடமைப்பட்ட ஆண்கள், கேட்டுப் பெறும் அளவுக்கு மானமிழந்து விட்டனர். ‘வரதட்சணை வாங்காதீர்கள்’ என்று கூறுவதை விட ‘நீங்கள் கொடுங்கள்’ என்பது கடுமையான கட்டளையாகும். உண்மையான எந்த முஸ்லிமும் வரதட்சணை கேட்கத் துணிய மாட்டான்.

மணவாழ்வில் பெண்களே அதிகமான தியாகத்தைச் செய்கின்றனர். அதிகமான சிரமங்களையும் சுமக்கின்றனர். எனவே பெண்களுக்கு ஆண்கள் கொடுப்பது தான் நீதியாகும்.

ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடந்த பின் ஆண் தனது வீட்டிலேயே தனது தாயுடனும் தந்தையுடனும் உறவினருடனும் இருக்கிறான். ஆனால் அவனை விட வயதில் குறைந்த பெண் தனது பெற்றோரையும் சொந்தங்களையும் துறந்து விட்டுக் கணவன் வீட்டுக்கு வந்து விடுகிறாள். இந்த தியாகத்திற்காக, பெண்களுக்குத்தான் ஆண்கள் வழங்க வேண்டும்.

திருமணத்திற்குப் பின் மனைவிக்காகக் கணவன் எந்தச் சேவையும் செய்வதில்லை. அதிகப்பட்சமாக அவளது வாழ்க்கைச் செலவினங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறான். ஆனால் பெண்கள் கணவனுக்காகச் சமைத்தல், உடைகளைத் துவைத்தல், வீட்டைப் பராமரித்தல், கணவனுக்கு மட்டுமின்றி கணவனின் உறவினர்களுக்கும் சேர்த்துப் பணிவிடை செய்தல் என ஏராளமான சுமைகளைத் தம் தலையில் சுமந்து கொள்கின்றனர். மாமியார் கொடுமைகளையும் சில பெண்கள் கூடுதலாக தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.

இல்லறத்தில் ஈடுபட்டு ஒரு பெண் கருவுற்றால் ஆணுக்கு இதனால் எந்தச் சிரமமும், சுமையும் இல்லை. பெண்தான் சிரமப்படுகிறாள். அவள் எதையும் உண்ண முடியாத மசக்கை நிலையை அடைகிறாள். இயல்பாக நடக்கவும், படுக்கவும் முடியாத சிரமத்தைத் தாங்கிக் கொள்கிறாள். அத்துடன் மரணத்தின் வாசல் கதவைத் தட்டி விட்டு பிரசவித்து மீள்கிறாள். இந்த ஒரு காரணத்துக்காகவே அவளுக்குக் கோடி கொடுத்தாலும் போதாது.

பிரசவித்த பின் குழந்தைக்காகத் தந்தை எதையும் செய்வதில்லை. பாலூட்டுவதும் சீராட்டுவதும் கண் தூங்காது கவனிப்பதும் என ஏராளமான சுமைகளும் அவள் மீதுதான் சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் காரணத்திற்காகவும் ஆண்கள் பெண்களுக்கு மஹர் கொடுப்பதுதான் நேர்மையானது.

அடுத்தடுத்துக் குழந்தைகள் பிறந்துவிட்டால் பெண் தனது எல்லா வசந்தங்களையும் துறந்து விடும் நிலையை அடைகிறாள்.

எனவே பெண்களுக்கு ஆண்கள்தான் கொடுக்க வேண்டும் என்பதை மனிதாபிமானம் உள்ள எந்த மனிதனும் மறுக்க முடியாது.

வரதட்சணை கேட்கும் கொடிய வழக்கம் காரணமாக ஏராளமான தீய விளைவுகள் ஏற்படுகின்றன. வரதட்சணை கேட்போரும் அதை ஆதரிப்போரும் அத்தனை தீய விளைவுகளிலும் பங்காளிகளாகின்றனர்.

வரதட்சணை காரணமாக பெண்கள் முப்பது வயது வரை கூட மண வாழ்வு கிடைக்காத நிலையில் உள்ளனர்.

இதன் காரணமாகப் பெண்களில் சிலர் வீட்டை விட்டே வெளியேறி ஓடி விடுகின்றனர்; ஏமாற்றப்படுகின்றனர்; விபச்சார விடுதியில் கூட அவர்களில் பலர் தள்ளப்படுகின்றனர். இந்தப் பாவங்கள் அனைத்திலும் வரதட்சணை வாங்கியவர்களுக்கும் ஒரு பங்கு நிச்சயமாக உள்ளது.

சில பெண்கள் இதனால் இஸ்லாத்தையே உதறித் தள்ளிவிட்டு பிற மதத்தவர்களுடன் ஓடிப் போகும் நிலையும் உள்ளது.

மணவாழ்வு கிடைக்காது என்ற நிலையில் தம் உயிரைத் தாமே மாய்த்துக் கொள்ளும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர். பெண்ணைப் பெற்றவர்களும் கூண்டோடு தற்கொலை செய்கின்றனர். வரதட்சணை கேட்போர் இந்தப் பாவத்திலும் பங்காளிகள் ஆகின்றனர்.

மணவாழ்வு கிடைக்காது என்பதால் ஒருத்தி ஓடி விட்டால் அவளது குடும்பத்தில் எஞ்சியுள்ள பெண்களுக்கும் வாழ்வு கிடைக்காத நிலை ஏற்படும். இதிலும் வரதட்சணை கேட்பவர்களுக்குப் பங்கு இருக்கிறது.

வரதட்சணை வழக்கத்தையும், அதனால் ஏற்படும் கேடுகளையும் முன்கூட்டியே உணர்பவர்கள் பெண் குழந்தை பிறந்ததும் தமது குழந்தைகளைக் கொன்று விடுகின்றனர். வேறு சிலர் ஸ்கேன் மூலம் கருவில் உள்ள குழந்தை பெண் என்பதை அறிந்து கருவில் சமாதி கட்டுகின்றனர். இந்த மாபாதகச் செயலிலும் வரதட்சணை கேட்பவர்கள் பங்காளிகளாகின்றனர்.

மானத்துடன் வாழ்ந்த ஒருவனை, பெண்ணைப் பெற்ற காரணத்துக்காக ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுக்க வைக்கின்றனர். இந்தப் பாவமும் இவர்களைச் சும்மா விடாது.

பருவத்தில் எழுகின்ற உணர்வுகளுக்கு வடிகால் இல்லாத நிலையில் பெண்களில் பலர் மனநோயாளிகளாகி விடுகின்றனர். இந்தக் கொடுமையிலும் இவர்கள் பங்கு பெற்றுக் கொள்கின்றனர்.

இப்படி ஏராளமான தீமைகளின் மொத்த வடிவமாகத் திகழும் வரதட்சணையை வாங்குவோர், இவ்வளவு பாவங்களுக்கான தண்டனைக்காகத் தம்மை முன்பதிவு செய்கிறார்கள். நியாயத் தீர்ப்பு வழங்கும் நாளில் இறைவன் முன்னால் நாம் நிறுத்தப்படுவோம் என்ற அச்சம் கடுகளவாவது இருந்தால் கூட எவரும் வரதட்சணை கேட்கவே மாட்டார். மஹர் கொடுத்தே திருமணம் செய்வார்.

பெண்ணுக்குச் சொந்தமானவை

திருமணம் செய்து வரும் பெண்ணுக்காக, அவளது வீட்டில் கொடுக்கப்பட்ட பொருட்கள், நகைகள் அனைத்தும் கணவனுக்குச் சொந்தம், அல்லது மாமியார் வீட்டிற்குச் சொந்தம் என்று சிலர் எண்ணுகிறார்கள். மார்க்கப்படி பெண் வீட்டில் வழங்கப்படும் பொருட்கள் அப்பெண்ணுக்கே உரியதாகும்.

சிலரை விட சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:32

நான் பள்ளிவாசலில் இருந்தபோது நபி(ஸல்) அவர்கள், “பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்’’ எனக் கூறினார்கள். நான் “என் (கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கும் மற்றும் என் அரவணைப்பில் உள்ள அநாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் எனது அரவணைப்பில் வளரும் அநாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவழிப்பது ஸதகாவாகுமா? என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள்’’ எனக் கூறினேன். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்’’ எனக் கூறி விட்டார். எனவே நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டு வாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால் (ரலி) வந்தார். அவரிடம் நான் “எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அநாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என நபி (ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள், ‘அவ்விருவரும் யார்?’ எனக் கேட்டதற்கு அவர் ‘ஸைனப்’ எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் ‘எந்த ஸைனப்?’ எனக் கேட்டதும் பிலால் (ரலி), ‘அப்துல்லாஹ்வின் மனைவி’ எனக் கூறினார். உடனே நபி (ஸல்) “ஆம்! ஸைனபுக்கு இரு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது’’ எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் மனைவி ஸைனப் (ரலி)

நூல்: புகாரி (1466)

கருகமணி அணியலாமா?

திருமணத்தின்போது தாலி அணிவதும், கருகமணி கட்டுவதும் முழுக்க முழுக்க பிற மதக் கலாச்சாரமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிற சமுதாயத்தின் சம்பிரதாயங்களை (கலாச்சாரத்தை) ஏற்படுத்திக் கொள்கிறானோ அவனும் அவர்களைச் சார்ந்தவனே!

(நூல்: பஸ்ஸார் 2966)

இந்த ஹதீஸின் அடிப்படையில் ஒரு மதத்தின் கலாச்சாரத்தை, சடங்குகளைப் பின்பற்றுபவர் அந்த மதத்தைச் சேர்ந்தவராகவே கருதப்படுவார். எனவே எக்காரணம் கொண்டும் இந்தக் காரியத்தைச் செய்யக் கூடாது.

திருமணத்தின் போதும், திருமணத்திற்குப் பிறகும் பெண் கழுத்தில் ஏதாவது அணிந்து தான் ஆக வேண்டும் என்ற நம்பிக்கையும் பரவலாக உள்ளது. இதுவும் பிற மதத்தினரின் நம்பிக்கை தான். மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் இதுவும் தடுக்கப்பட்ட செயல் தான். இஸ்லாத்தைப் பொறுத்த வரை திருமணம் என்பது ஒரு வாழ்க்கை ஒப்பந்தமே ஆகும். இதற்கென எந்தவித அடையாளத்தையும் மார்க்கம் ஏற்படுத்தவில்லை.

மெட்டி அணியலாமா?

பெண்கள் திருமணமானதற்கு அடையாளமாகக் கால் பெருவிரலுக்கு அடுத்த விரலில் அணிந்து கொள்ளும் மோதிரம் போன்றுள்ள அணிகலனுக்கு மெட்டி என்று கூறுகின்றனர்.

இந்த அணிகலனைப் பெரும்பாலும் பிற மதத்தில் திருமணமானதற்கு அடையாளமாக அணிகின்றனர். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் திருமணத்திற்கு அடையாளமாக இதுபோன்று எதையும் அணியவில்லை. இதுவும் பிற மதக் கலாச்சாரமே ஆகும். எனவே  மெட்டியைத் திருமணத்தின் அடையாளமாக அணிவது கூடாது.

பதிவுத் திருமணம் செய்யலாமா?

தனது திருமணத்திற்கு, தன் வீட்டார்களின் ஒப்புதல் இல்லாவிட்டாலும் யாரையாவது சாட்சியாக வைத்துக் கொண்டு பதிவுத் திருமணத்தின் மூலம் ஒருவர் திருமணம் செய்து கொள்ள முடியும். பெற்றோர்களின் விருப்பத்திற்கு மாற்றமாக கள்ளத்தனமாகத் திருமணம் செய்து கொள்பவர்களே பெரும்பாலும் இவ்வழிமுறையைக் கடைப்பிடிக்கிறார்கள்.

இஸ்லாம் திருமணத்திற்கென்று சில விதிமுறைகளை விதித்துள்ளது. இந்த விதிமுறைகளைக் கடைப்பிடித்தால் பதிவுத் திருமணம் செய்வதற்கு எந்தத் தேவையும் இருக்காது. அதே நேரத்தில் யாருடைய உரிமையும் பறிக்கப்படாது.

தனது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் உரிமையை இஸ்லாம் பெண்ணுக்கு முழுமையாக வழங்கியுள்ளது. அதே நேரத்தில் ஒரு பெண் வலீ (பொறுப்பாளர்) இல்லாமல் யாரோ ஒருவரை சாட்சியாக வைத்துத் திருமணம் செய்வதை இஸ்லாம் தடை செய்கிறது.

தந்தையே ஒரு பெண்ணுக்கு வலீ ஆவார். அவர் இல்லாவிட்டால் உடன் பிறந்த சகோதரர்கள் வலீயாக இருப்பார்கள். அவர்களும் இல்லாவிட்டால் அவளுடைய சிறிய தந்தையும் பெரிய தந்தையும் வலீ ஆவார்கள்.

ஒரு பெண்ணுக்கு வலீ (பொறுப்பாளர்) யாரும் இல்லாவிட்டால் ஜமாஅத் தலைவர் அவருக்குப் பொறுப்பாளராக இருப்பார்.

வலீ இல்லாமல் திருமணம்

திருமண வாழ்வில் அதிகச் சிரமங்களுக்கும் நஷ்டங்களுக்கும் ஆளாகிறவள் பெண்தான். மணமுறிவு ஏற்பட்டால் அதனால் பாதிக்கப்படுவதும் பெண்தான். வக்கிர புத்தி கொண்ட பல ஆண்கள் அபலைப் பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்துவிட்டு மறுநாளே அவர்களைத் தெருவில் விட்டு விட்டு ஓடிவிடுகிறார்கள்.

பெண்கள் ஏமாற்றப்பட்டுவிடக் கூடாது என்பதால் அவர்களுக்கு ஆண் பொறுப்பாளர் இருக்க வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஒரு பெண், இன்னொரு பெண்ணுக்கு (அவளது ஆண் பொறுப்பாளர் இன்றி) திருமணம் செய்து வைக்கலாகாது. மேலும் ஒரு பெண் (பொறுப்பாளர் யாரும் இன்றி) தானாக திருமணம் செய்து கொள்ளக் கூடாது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: இப்னுமாஜா (1872)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஒரு பெண் தனது பொறுப்பாளரின் உத்தரவின்றி திருமணம் செய்யப்பட்டால் அவளது திருமணம் செல்லாது. அவளது திருமணம் செல்லாது. அவளது திருமணம் செல்லாது. திருமணம் முடித்தவன் அவளை அடைந்துவிட்டால் அவளை அடைந்ததற்காக அவளது மஹர் தொகை அவளுக்கே உரியதாகும். (அவனிடம் அதை அவள் திருப்பித் தர வேண்டியதில்லை). பொறுப்பாளர்கள் பிரச்சனையில் ஈடுபட்டால் அப்போது பொறுப்பாளர் இல்லாதவருக்கு அதிகாரம் பெற்ற(தலை)வர் பொறுப்பாளர் ஆவார்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: அஹ்மத் (23074)

வரம்பு மீறும் பொறுப்பாளர்கள்

வலீ என்பவர் திருமணத்திற்கு சாட்சியாகவும் மணப்பெண்ணுக்குப் பொறுப்பாளராகவும் இருப்பாரே தவிர அப்பெண்ணுக்குப் பிடிக்காத மாப்பிள்ளையை அவளுக்குத் திருமணம் செய்து வைக்க முடியாது.

மணப்பெண்ணின் உரிமையைப் பறிக்கின்ற வகையில் வலீ மார்க்க வரம்பைக் கடந்து செயல்பட்டால், அப்போது பிரச்சனை ஜமாஅத் தலைவரிடம் கொண்டு செல்லப்பட்டு, அவர் வலீயாக இருந்து இப்பிரச்சனையை முடித்து வைப்பார். இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

கன்ஸா பின்த் கிதாம் அல் அன்சாரிய்யா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

கன்னி கழிந்த பெண்ணாயிருந்த என்னை என் தந்தை (ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு அதில் விருப்பமில்லை. ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (என் தந்தை முடித்து வைத்த) அத்திருமணத்தை நபி (ஸல்) அவர்கள் ரத்து செய்தார்கள்.

நூல்: புகாரி (6945)

ஒரு பெண்ணுக்கு விருப்பமில்லாத திருமணத்தை அப்பெண்ணின் தந்தையே முன்னின்று நடத்தினாலும் கூட அத்திருமணத்தை ரத்து செய்யும் உரிமை ஜமாஅத் தலைவருக்கு உண்டு என்பதை இந்த ஹதீஸ் விவரிக்கிறது.

இரண்டு சாட்சிகள்

இஸ்லாம், திருமணத்தை உறுதியான வாழ்க்கை ஒப்பந்தம் என்று கூறுகிறது.

உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் (மஹர் தொகையை) பிடுங்கிக் கொள்ள முடியும்?

அல்குர்ஆன் (4:21)

சாட்சிகள் என்பது ஒப்பந்தத்தில் முக்கியமான அம்சமாகும்.

கணவன் மனைவிக்கு இடையே பிரிவு ஏற்படும்போது இரண்டு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுமாறு திருக்குர்ஆன் கூறுகிறது.

அவர்கள் தமக்குரிய தவணையை அடையும்போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலை நாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.

அல்குர்ஆன் (65:2)

மண முறிவு ஏற்படும்போது இரண்டு சாட்சிகள் இருக்க வேண்டுமென்றால் அந்த மணவாழ்க்கையைத் துவங்குவதற்கும் இரண்டு சாட்சிகள் இருப்பது கட்டாயம் என்பதை அறியலாம்.