முஹம்மது (ஸல்) அவர்களின் அழகிய வரலாறு – பகுதி 1

ஆக்கம் : உம்மு சுஹைப்

மாநகரம் மக்கா

அரேபிய தீபகற்பத்தின் மேற்கு பகுதியில் மக்கா என்னும் வணிக நகரம்..

பாலைவனமாய் இருந்தாலும், இடையில் ஒரு பாரம்பரிய கட்டிடத்தை(கஅபாவை) தாங்கிநிற்கும் ஒரு பண்டைய கால நகரம் அது..

அந்த கட்டிடம் முழுவதையும் ஏறக்குறைய முன்னூற்றைம்பது சிலைகள் ஆக்கிரமித்திருந்தன..

தினம் தினம் வழிபாடு செய்யப்பட்டு திருவிழா கொண்டாட ஆண்டு முழுவதும் அந்நகரம் திருவிழா கோலம் தான்…

ஒரு நாள் திருவிழா என்றாலே நம்மூர் களைகட்டும்..அங்கு சொல்ல வேண்டியதே இல்லை..எப்போதும் கூட்டம் தான் …

புதுப்புது சிலைகளுக்கு புதுபுது வழிபாடுகள்…

சுற்றிலும் கடைவீதிகள் வியாபாரிகள்..

பக்கத்து நாடுகளான சிரியா ஏமன் யஸ்ரிப் கொஞ்சம் தூர நாடான அபீசீனியா மற்றும் பல நாடுகளிலிருந்தும் கொண்டுவரப்பட்ட சரக்குகள் ,விலை உயர்ந்த வாசனை திரவியங்கள், போர் கருவிகள் , உணவு பொருட்கள் இன்னும் ஏராளமாக புதுப்புது சாதனங்கள் ..துணி சாக்கு கயிறு போன்றவை சந்தையில் கடைவிரிக்கப்பட்டு இருக்கும்……

எங்கும் மக்கள் திரளாக ஒரே ஜகஜோதியாய் இருக்கும்…

அரசே இல்லா அரசாங்கம்

பல கோத்திரங்களாகவும் குலங்களாகவும் வசித்துவந்த உள்ளூர் மக்கள் தங்களில் யார் பெருமைக்குரியவர் என்பதை தீர்மானிக்கும் இடமாகவும் கஅபா இருந்ததென்றால் பாருங்களேன்…

ஆண்டு முழுவதும் இப்படி என்றால் வருடத்தில் ஒரு முறை வரும் துல்ஹஜ் மாதத்தில் சுற்றியுள்ள அனைத்து ஊர்களில் இருந்தும் ஏராளமான மக்கள் திரளுவார்கள்…அது புனித மாதம்..

 புனத மாதமென்றால்…….!?

போர் செய்ய மாட்டார்கள்…!..

என்ன போரா?

இவர்களுக்குள் யார் அரசன்? ஏன் போர் ?

அதான் விசயமே..

இவ்வளவு சிறப்பு வாய்ந்த நகரத்துக்கு அதுவரை என்றுமே அரசனிருந்ததில்லை என்பது தான் பரிதாபம்..!!

கோத்திரத்தின் தலைவர்கள் ஒன்றுகூடி ஊர்த்தலைவரை தேர்ந்தெடுப்பார்கள்..தலைவராக உள்ளவருக்கு மற்றவர்கள் கீழ்படிவார்கள்…இது தான் அரசாங்கம்

சுற்றியுள்ள ரோம பைசாந்திய பேரரசுகள் பாரசீக பேரரசுகள் மலை முழுங்கி போல  தேசங்களை முழுங்கிக்கொண்டிருந்த போது அரபுதேசத்தை விட்டுவிட்டார்களோ?!!

இந்த அரபுதேசம் அலக்சாண்டர் கண்களுக்குமா படவில்லை??

என்று நீங்கள் யாராவது அறிவுப்பூர்வமாக சிந்தித்தால்…

 இந்த நகரத்தை அடைவது அவ்வளவு இலேசான காரியமல்ல பல நூறு மைல்கள் வெற்று பாலைவனம் ஆறு நதி இல்லை……படைகளை திரட்டி வந்து பிடிப்பது ரொம்ப சிரமம்….அப்படியே கஸ்டப்பட்டு பிடித்தாலும் எந்த வளமும் இல்லை..(இன்றைய பெட்ரோல் வளம் அந்த மன்னர்களுக்கு தெரியாது அல்லவா?)

வளமில்லை என்பதை கூட சகிக்கலாம்……இந்த ஊர்மக்களை சகிக்கவே முடியாது…

அப்படி என்ன செய்துவிட்டார்கள் அவர்கள்??

 

கலாச்சாரம் , பண்பாடு

மன்னர்கள் ஹிஜாஸ் மாகானத்தின் மீது படையெடுக்க ஆர்வம் காட்டவில்லை..

அப்புறம்??

அங்கே என்ன பாலாறும் தேனாறுமா ஓடும்? பாம்பும் தேளும் வேண்டுமானால் இருக்கும்…

ஹிஜாஸ் என்பது மக்கா மதீனா மற்றும் அதன் சுற்றுப்புறத்தை குறிக்கும்..

மக்களும் ஒன்னும் பெரிய நல்லவர்கள் இல்லை…

யாருக்கும் கட்டுப்படாத காட்டுமிராண்டி சமூகம் அது…

பெயரளவுக்கு தான் தலைவர்களே ஒழிய அவர்களுக்குள் பகையும் போரும் மூள்வதற்கு காரணமெல்லாம் வேண்டியதே இல்லை…

அவர்களது வாய் பேசுவதை விட வாள் தான் அதிகம் பேசும்…

ஒழுக்கமெல்லாம் மருந்துக்கும் இருக்காது…

 வெளிப்படையாக கொடி நட்டி விபச்சாரம் செய்வதற்கு திருமணம் என்று பெயர் சூட்டி இருந்தார்கள் என்றால் பாருங்களேன்..

ஒரு பெண் எத்தனை கணவர்களுக்கு வேண்டுமானாலும் மனைவியாக இருப்பாள் .அவளுக்கு பிறக்கும் மகனுக்கு அவள் யாரை கைகாட்டுகிறாளோ அவனே தகப்பன்..இதெல்லாம் பண்டைய அரபு சமூகத்தில் மிக சாதாரணம்..அது தான் அவர்கள் கலாச்சாரம்…

அட ..இதுக்கே முகம் சுளிக்கிறீர்களா??

புனித ஆலயத்திற்கு தரும் மரியாதை எப்படி தெரியுமா?ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக வலம் வருவார்கள்..இதுவே அவர்களது வணக்கம்…

பெண்களே இப்படி என்றால் ஆண்களுக்கு இருக்கும் மனைவிகளுக்கு எண்ணிக்கை சொல்ல வேண்டுமா என்ன??

சாதி குல இனப்பாகுபாடு தலைவிரித்து ஆடியது…

உயர்ந்தவர் தாழ்ந்தவர்களை எவ்வளவு இழிவுபடுத்தினாலும் அத்துமீறினாலும் கேட்பதற்கு நாதியில்லை..

அடிமைகளெல்லாம் ஆடு மாடுகளை விட கேவலமாக நடத்தப்பட்டனர்….

எஜமானர்கள் சாட்டைகளுடனே திரிவார்கள். அடிமைகள் முதுகு எந்நேரமும் தோலுரிய தயாராகவே காத்திருக்கும்..

எவரும் கேள்வி கேட்க முடியாது…

பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுப்பதை தான் நாம் கேள்விப்பட்டிருப்போம் ..ஆனால் அரபு காட்டுமிராண்டிகள் உயிருடன் இரக்கமின்றி மண்ணில் புதைப்பார்கள்…

கணவன் இறந்த கைம்பெண்களை ஒரு அரையில் பூட்டி வைத்து ஒரு வருடம் சிறை வைத்துவிடுவார்கள் வெளிவரும் நாளில் கழுதையில் போய் தங்கள் உடலை தேய்தது தீட்டை கழிக்கும் கேடுகெட்ட பழக்கம் இருந்தது…

இது போன்று கற்பனைக்கெட்டாத காட்டுமிராண்டி தனங்கள் நிறைந்த அந்த சமூகத்தை யார் தான் விரும்புவார்??

ஊரை சுற்றிலும் கொள்ளைக்கூட்டம்…

வழிப்பறி.. அது அவர்களது குலத்தொழில்….

ஏராளமான கொள்ளை கோத்திரங்கள் மக்கா மதீனாவை சுற்றி இருந்தன. மற்ற தேசங்களிலிருந்து வியாபாரம் செய்து அந்த வழியாக வருபவர்கள் இந்த கொள்ளையர்களிடம் சிக்காமல் தப்பித்தால் தான் உண்டு….

அல்லது போரிட்டு ஜெயிக்க வேண்டும்…

இவர்களில் விதிவிலக்குகளும் உண்டு..சேற்றிலும் செந்தாமரைகள் இருக்கும் தானே?!!

 சிலர் ஒழுக்கத்தோடும் உயர்ந்த மாண்புகளுடனும்  இருந்தனர்…

அத்கையவர்களில் ‘குரைஷி குலத்திலுள்ள சிலர்களும்’ அடக்கம்..குரைஷி என்பது மக்காவின் உயர்ந்த குலம் என அன்றைய மக்களால் கருத்தப்பட்டது..

(நபியவர்கள் இந்த குலத்தில் பிறந்தவர்கள் தான்)

ஆனால் குரைஷியர்களிடம் உயர்ந்த பண்புகள் இருந்தாலும் குலப்பெருமை மற்றவர்களை விட மிக அதிகமாக இருந்தது..மற்றவர்களை தங்களுக்கு சமமாக ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்…

தீண்டாமை பற்றி இந்தியர்களுக்கு நான் பாடம் நடத்த வேண்டியதில்லை உங்களுக்கே தெரியும்…

மற்றபடி அவர்களிடம் சில நல்ல பழதக்கங்களும் இருந்தன…

உயிரை விட்டாலும் வாக்கு மீறமாட்டார்கள்..விருந்தோம்பல் பண்பில் சிறந்து விளங்கினார்கள்…

இப்படிப்பட்ட சமூகத்தில் தான்

குரைஷி குல தலைவரான அப்துல் முத்தலிப் என்பவருக்கு பேரனாக..

அப்துல்லாஹ்விற்கும் ஆமினாவிற்கும் மகனாக.. “முஹம்மது” என்ற அழகிய ஆண்குழந்தை கி.பி 571 ஆம் ஆண்டில் ஒரு திங்கட்கிழமை பிறக்கிறது…

முஹம்மது (ஸல்) அவர்கள் தாய் வயிற்றில் சிசுவாக இருந்த போதே அவர்களது தந்தை அப்துல்லாஹ் இறந்து விடுகின்றார்…

எனவே தந்தை மரணத்திற்கு பிறகு பிறந்த இந்த ஆண்குழந்தையை அவர்களது குடும்பமே கொண்டாடுகிறது….

இன்ஷா அல்லாஹ் தொடரும்……