திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பில் “இஸ்தவா அலல் அர்ஷ்” என்பதை “அர்ஷின் மீது (அல்லாஹ்) அமர்ந்தான்” என்று மொழிபெயர்த்துள்ளீர்கள்.

? திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பில் “இஸ்தவா அலல் அர்ஷ்” என்பதை “அர்ஷின் மீது (அல்லாஹ்) அமர்ந்தான்” என்று மொழிபெயர்த்துள்ளீர்கள். “இஸ்தவா’ என்பதற்கு “அமருதல்’ என்ற அர்த்தம் கிடையாது. “அமருதல்’ என்பதற்கு அரபியில் “ஜலசா’ என்ற வார்த்தை தான் சரியானது என்று சிலர் கூறுகிறார்கள். விளக்கம் தரவும்

அஹ்மத்

அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்துள்ளான் என்று குர்ஆனில் ஏழு இடங்களில் கூறப்பட்டுள்ளது. இஸ்தவா என்ற அரபுச் சொல்லே இவ்விடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் (7:54)

உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் (10:3)

நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன்; (13:2)

அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் (20:5)

அவனே வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். அளவற்ற அருளாளனைப் பற்றி, அறிந்தவரிடம் கேட்பீராக!

அல்குர்ஆன் (25:59)

வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் அல்லாஹ்வே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். உங்களுக்கு அவனன்றி பொறுப்பாளரோ, பரிந்துரைப்பவரோ இல்லை. நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?

அல்குர்ஆன் (32:4)

வானங்களையும், பூமியையும் அவனே ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் (57:4)

இதே சொல் குர்ஆனில் வேறு இடங்களிலும் அமர்தல் என்ற அர்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

“பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!” என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. “அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்” எனவும் கூறப்பட்டது.

அல்குர்ஆன் (11:44)

இவ்வசனத்தில் அமர்ந்தது என மொழிபெயர்த்துள்ள இடத்தில் இஸ்தவா என்ற அரபுச் சொல்லே இடம்பெற்றுள்ளது. இங்கே அமர்தல் என்ற அர்த்தத்தைத் தவிர வேறு எந்த அர்த்தத்தையும் கொடுக்க இயலாது.

இதே போன்று பின்வரும் வசனத்திலும் அமர்தல் என்ற பொருளில் இவ்வார்த்தை இடம் பெற்றுள்ளது.

நீரும், உம்முடன் உள்ளோரும் கப்பலில் அமர்ந்ததும் “அநீதி இழைத்த கூட்டத்தை விட்டும் நம்மைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் (23:28)

எனவே இஸ்தவா என்பதற்கு அமர்தல் என்ற பொருள் இருப்பது இவ்வசனங்களின் மூலம் உறுதியாகிறது.

ஆனால் நீங்கள் குறிப்பிட்ட ஜலச என்ற அரபுச் சொல்லுக்கும் இஸ்தவா அரபுச் சொல்லுக்கும் அமர்தல் என்ற பொருள் இருந்தாலும் இவ்விரு சொல்லுக்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்கின்றது.

ஜலச என்ற சொல் சாதாரணமாக தரையில் அமர்வதற்கு அரபு மொழியில் பயன்படுத்தப்படும். ஆனால் இஸ்தவா என்ற சொல் சாதாரணமாக தரையில் அமர்வதற்கு பயன்படுத்தப்படாது. மாறாக உயரமான ஒரு பொருளின் மீது அமர்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

உதாரணமாக கப்பலின் மீது அமர்தல், மலையின் மீது அமர்தல், வாகனத்தின் மீது அமர்தல், மிம்பரின் மீது அமர்தல் ஆகிய அர்த்தங்களில் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் இவ்வார்த்தை கூறப்பட்டுள்ளது.

வாகனத்தின் மீது அமர்தல் என்ற பொருளில் பின்வரும் வசனத்தில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

நீங்கள் அதன் முதுகுகளில் அமர்ந்து உங்கள் இறைவனின் அருட்கொடையை நினைப்பதற்காகவும், “எங்களுக்கு இவற்றை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதற்குச் சக்தி பெற்றோராக இல்லை. நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்வோர்” என்று நீங்கள் கூற வேண்டுமென்பதற்காகவும் (அவற்றை வழங்கினான்).

அல்குர்ஆன் (43:13, 14)

அபூ கத்தாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் மக்காவை நோக்கிச் செல்லும் சாலை ஒன்றில் இருந்த போது இஹ்ராம் அணிந்திருந்த தம் தோழர்களை விட்டுப் பின்தங்கி விட்டார்கள். நான் மட்டும் இஹ்ராம் அணிந்திருக்கவில்லை. அப்போது காட்டுக் கழுதை ஒன்றை நான் கண்டேன். குதிரை மீதேறி அமர்ந்து கொண்டேன்.

குதிரையின் மீதேறி அமர்தல் என்ற பொருளில் இங்கே இஸ்தவா என்ற சொல் கூறப்பட்டுள்ளது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள், தமது வாகனத்தில் நன்கு அமர்ந்து கொண்ட போது ஒரு பால் பாத்திரத்தை…. அல்லது தண்ணீர்ப் பாத்திரத்தை…. கொண்டு வரும்படிக் கூறி, அதைத் தம் உள்ளங்கையில் ….அல்லது தமது வாகனத்தில்…. வைத்தார்கள். பிறகு மக்களைப் பார்த்தார்கள். உடனே நோன்பை விட்டு விட்டவர்கள் நோன்பு நோற்றிருந்தவர்களிடம், “நீங்களும் நோன்பை விடுங்கள்” என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (4277)

இந்தச் செய்தியிலும் நன்கு அமர்தல் என்ற பொருளில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்றும் போது பள்ளியின் ஒரு தூணாக இருந்த பேரீச்ச மரத்தின் மீது சாய்ந்து கொள்வார்கள். மிம்பர் செய்யப்பட்ட பிறகு நபி (ஸல்) அவர்கள் அதன் மீது அமர்ந்தார்கள்.

நூல்: நஸாயீ (1379)

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் இறந்த மறு நாள் முஸ்லிம்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (அவர்களை கலீஃபாவாக ஏற்று) விசுவாசப் பிராமணம் (பைஅத்) செய்து கொடுத்த போது உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தார்கள்.

நூல்: புகாரி (7269)

மிம்பரின் மீது அமர்தல் என்ற பொருளில் இவ்விரு ஹதீஸ்களில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டள்ளது.

லிசானுல் அரப் என்ற பிரபல அரபு அகராதி நூலில் இவ்வார்த்தைக்கு இப்பொருள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதாவது ஒரு பொருளின் மேற்பகுதியில் இருத்தல் என்று இதற்கு அர்த்தம் எனக் கூறப்பட்டுள்ளது.

இஸ்தவா என்றால் மேல் இருத்தல் என்பது பொருள். வாசனத்தின் மேல் இருத்தல், வீட்டினுடைய முகட்டின் மீது இருத்தல் என்று கூறப்படும்.

லிசானுல் அரப் (பாகம்: 14 பக்கம்: 408)

எனவே இறைவன் அர்ஷ் மீது அமர்ந்து உயர்வாக இருக்கின்றான் என்று பொருள் கொள்வதே சரியானது.

இவ்வாறு அர்த்தம் செய்யக்கூடாது என்று கூறுபவர்கள் இவ்வார்த்தைக்கு வேறு விளக்கங்களைத் தருகின்றார்கள். அந்த விளக்கங்கள் அனைத்தும் அரபு இலக்கணத்தின் படி பார்த்தாலும் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தாலும் தவறாகவே இருக்கின்றன.