பாஜக பலம் பொருந்திய கட்சி என்பது உண்மையா?

2014 நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத் மாடல் என்று ஊடகங்களால் முன்னிறுத்தப்பட்டவர் தான் மோடி. குஜராத்தைப் போல சிறந்த நிர்வாகத்தை தருவார் என நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே!
பாஜகவின் பலம் எது என நீங்கள் நினைக்கிறீர்கள்?
மோடி ஆட்சியில் தான் பட்டினி நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பிடித்தது. பெண்கள் வாழத் தகுதியற்ற நாடாக பேசப்பட்டதும் இவரது ஆட்சியில் தான். நாளுக்கு நாள் விலைவாசி உயர்வு, அதிகரிக்கும் வேலையின்மை, இப்படி நகர்கிறது இந்திய மக்களின் வாழ்வு.
ஹிமாச்சல பிரதேசத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பு, பங்குச் சந்தையில் நடைபெற்ற 32 இலட்சம் கோடி அளவுக்கான ஊழல், சரிந்து வரும் ஜி.டி.பி, ரயில்வே, விமானம், எல்.ஐ.சி, கப்பல் தளம் உள்ளிட்ட பொதுத்துறைகளை தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டது ஆகிய அனைத்தும் நடந்தது மோடி ஆட்சியில் தான்.
இந்தியா இதுவரை இல்லாத மோசமான நிலையை சந்தித்து வருகிறது. மத துவேச வன்முறைக் கருத்துக்கள், மதவாத வெறுப்பு அரசியல் நாட்டில் எப்போது கண்டிராத அமைதியின்மை கடந்த எட்டு ஆண்டுகளில் அன்றாட நிகழ்வாகி விட்டது.
இதில் என்ன ஆச்சர்யம் என்றால், இத்தனை மோசமான நிலையை இந்தியா அடைந்தும் சிறந்த பிரதமராக இப்போதும் ஊடகங்களால் மோடி தூக்கி நிறுத்தப்படுகிறார்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 7 பைசா பொட்ரோல் விலை ஏற்றத்திற்கு பாஜக நாட்டையே அல்லோலப் படுத்திய போது ஊடகங்கள் அதனைத் தலைப்புச் செய்தியாக்கின. ஆனால் இன்று கட்சா எண்ணெய் விலை குறைந்த போதும் பொட்ரோல் 110 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 400 ரூபாயாக இருந்த சமையல் கேஸ் சிலிண்டர் 1000 ரூபாயைத் தாண்டி விட்டது,
விலைவாசி உயர்வால் மக்கள் படும் அவதியைப் பற்றி ஊடகங்கள் விவாதிப்பதில்லை. சுதந்திர இந்தியாவில் மோசமான பிரதமர் என சமூக செயல்பாட்டாளர்களால் பார்க்கப்படும் மோடியை இந்தியாவின் பிதாமகனாக ஊடகங்கள் காட்டத் தவறுவதில்லை.
ஊடகங்களே மோடி அரசின் பலம். அதனால் தான் எத்தகைய மக்கள் விரோதச் சட்டங்களையும் கொண்டு வர மோடி அரசு தயங்குவதில்லை. விவசாய திருத்தச் சட்டம் மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து வரலாறு காணாத போரட்டங்களை மக்கள் முன்னெடுத்தனர். தங்களுக்கு ஊடகங்களின் பலம் இருப்பதால் தான் மோடி அரசு அதனை அலட்சியப்படுத்தியது.
அரசின் தவறான நடவடிக்கைகளை விமர்ச்சிப்பது ஊடகங்களின் கடமை. தென் இந்தியாவில் ஒன்றிய அரசை விமர்சிக்கும் அளவுக்குக் கூட வட இந்திய ஊடகங்கள் விமர்சிப்பதில்லை,
வட இந்திய முன்னணி ஊடகங்கள் பாஜகவின் பிரச்சார மீடியாக்களாகவே மாறி இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தைச் செய்கின்றன. அதனால் தான் வட மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு குறைய வில்லை.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. கடும் பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்தித்து வருகிறது. ஆனாலும் மக்கள் அதைப் பற்றி எதுவும் அறியாதவர்களாக இருப்பதற்கு இந்திய ஊடகங்களே காரணம்.
இலங்கையில் பணவீக்கம் அதிகரித்து விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். அரசியல் நெருக்கடி காரணமாக ராஜபக்சே பதவி விலகிய போது வரலாறு காணாத பொருளாதாரச் சரிவை இந்தியா சந்தித்தும் கூட இந்திய மக்கள் பொறுமை காப்பதாக அவர் குறிப்பிட்டார்.
குஜராத் மாடல் என்று பொய்ப் பிரச்சாரம் செய்து ஆட்சி கட்டிலில் அமர வைத்த ஊடகங்கள் தான், மோடியின் திறமையற்ற நிர்வாகத்தை மூடி மறைக்கின்றன. ஊடகங்களின் பின்னால் ஒளிந்து கொண்டு பாஜக ஆட்சி நடத்துவதை மக்கள் உணரவேண்டும்.