டெல்லியில் ஜஹாங்கீர்பூர் பகுதியில் நீதி மன்ற உத்தரவையும் மீறி முஸ்லிம் குடியிருப்புப் பகுதிகள் இடிக்கப்பட்டு இருக்கிறதே?

நாட்டின் மிகப் பெரிய ஜனநாயக தூண்களில் ஒன்றாக நீதி மன்றங்கள் இருக்கிறது, சாமானிய மக்களின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் நீதி மன்றங்களை முதன்மையாக மதிப்பளிக்கப்பட வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை.
நீதி மன்றத்தின் உத்தரவையும் மீறி டெல்லியில் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் வீடு கடைகளை இடித்து தள்ளியுள்ளது டெல்லி காவல்துறையும், டெல்லி அரசும் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் அவமதித்து அரசு கேலிக் கூத்தாக்கி இருக்கிறது.
சாமானிய மக்களின் மீது அதிகார வர்க்கங்கள் அடக்கு முறைகள் செய்வது போல நீதி மன்றங்கள் மீது அரசு அடக்கு முறை செய்து இருப்பதாகவே இதை பார்க்க வேண்டி இருக்கிறது.
பல்வேறு மாநிலங்களில் ராமநவமி பெயரில் சங்பரிவாரங்கள் ஊர்வலங்களை நடத்தி முஸ்லிம்களின் கடைகள் வீடுகளை கல்வீசி தாக்கி, அடித்து நொறுக்கி, தீ வைத்து கலவரம் செய்துள்ளனர்.
ஒரு சில இடங்களில் முஸ்லிம்கள் தற்காப்புக்காக திருப்பித் தாக்கி இருக்கின்றனர்.
எங்கெல்லாம் முஸ்லிம்கள் திருப்பி தாக்கினார்களோ அங்கு விதி முறையை மீறிக் கட்டியதாக முஸ்லிம் கடை வீடுகளை அரசு இடித்துத் தள்ளி உள்ளது.
உச்ச நீதி மன்றம் தடை விதிக்கப்பட்ட நிலையிலும் இடிக்கப்படுவது நிறுத்தப்படாமல் அவசர அவசரமாக இரண்டு மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது. திட்டமிட்டே இடிக்கப்பட்டவையாகவே தெரிகிறது இதுமுஸ்லிம்கல் மீது தொடுக்கப்பட்ட அரசு பயங்கரவாதம்.
முஸ்லிம் பகுதிக்குள் ஊடுருவிய கலவரக்காரர்களை முஸ்லிம்கள் தற்காப்புக்காகக் கூட திருப்பித் தாக்க கூடாது. அப்படி நடந்தால் முஸ்லிம் வீடுகள் ஜேசிபிகளால் இடித்துத் தரை மட்ட மாக்கப்படும் என்று மறைமுகமாக முஸ்லிம்களுக்கு அரசு விடுத்த எச்சரிக்கை.
கலவரங்களில் பாதிக்கப்படுவது முஸ்லிம்களாக இருந்தாலும் கைது செய்யப்படுவதும் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களாக தான் இருக்கிறார்கள். காவல்துறையின் கைது நடவடிக்கைகள் எல்லாம் சங்பரிவாரங்கள் கலவரம் செய்தால் எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாது என்பதையே காட்டுகிறது.
முஸ்லிம்கள் விசயத்தில் நீதி மன்ற உத்தரவு கூட மதிப்பளிக்கப்படுவதில்லை. டெல்லி சம்பவம் முதல் தடவை அல்ல
பாபர் மசூதி விசயத்திலும் இப்படி நடந்திருக்கிறது.
அத்துமீறி ராமர் சிலையை உள்ளே வைத்து பாபர் மசூதியை சொந்தம் கொண்டாட பார்த்தது சங்பரிவார கும்பல், அப்போது நியாயம் கேட்டு அறவழியில் போராடிக் கொண்டிருந்தது முஸ்லிம் சமூகம்,. நாடே உற்று நோக்கிய இந்த விவகாரம் நீதி மன்றம் சென்ற போது தீர்ப்பு வரும் வரை பாபர் மசூதியை அரசு இயந்திரங்கள் பாதுகாக்க வில்லை.
பாபர் மசூதியை இடிக்க சங்பரிவார கும்பலால் பகிரங்கமாக நாள் குறித்து, கரசேவை என்ற பெயரில் நாடு முழுவதும் ஆள் திரட்டி, லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு ஓர் இடத்தில் குழுமி இருந்தது அரசுக்கு தெரியாமல் போக வில்லை, பல கிலோ மீட்டர் ஊர்வலமாக மண்வெட்டி போன்ற ஆயுதங்களுடன் சென்றவர்களைத் தடுக்க வில்லை, காவல்துறையும், ராணுவமும் இருக்க கண்ணெதிரே பாபர் மசூதி இடித்து தரை மட்ட மாக்கப்பட்டது.
துப்பாக்கிகளையும் நவீன ஆயுதங்களையும் கையில் ஏந்தி நின்ற காவல்துறையும், ராணுவமும் வன்முறையாளர்களை கலைக்க வில்லை. கைகட்டி வேடிக்கை பார்த்தனர். இடிக்கப்படுவது முஸ்லிம்களின் பள்ளிவாசல் என்பதால். நீதிமன்ற உத்தரவுகள் காற்றில் பறக்க விடப்பட்டன.
எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் முஸ்லிம்களின் கடை வீடுகள் இடிக்கப்படுவதற்கு தடை விதித்த நீதி மன்ற உத்தரவுகள் இப்போது டெல்லியிலும் காற்றில் பறக்க விடப்பட்டு இருக்கின்றன.
சாமானிய மக்களைப் பாதுகாக்கவே காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன முஸ்லிம்கள் விசயத்தில் அதிகாரங்கள் தவறாக பயன் படுத்தப்படுகின்றன.
நாடு முழுவதும் வன்முறையில் பாதிக்கப்படும் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்க வில்லை, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. இது தான் மதச் சார்பற்ற இந்தியாவில் முஸ்லிம்கள் பாதுகாக்கப்படும் லட்சணம்.