அஸ்ஸாஃப்ஃபாத் – அணிவகுத்து நிற்போர்

அத்தியாயம் : 37

வசனங்களின் எண்ணிக்கை: 182

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. வரிசையாக அணிவகுத்து நிற்போர்மீது சத்தியமாக!432
2. தீவிரமாக விரட்டுவோர்மீது சத்தியமாக!
3. அறிவுரையை எடுத்துரைப்போர்மீது சத்தியமாக!
4, 5. உங்களுடைய கடவுள் ஒருவன்தான். வானங்களுக்கும், பூமிக்கும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றுக்கும் (அவனே) இறைவன். கிழக்குத் திசைகளுக்கும் இறைவனாவான்.
6, 7. அருகிலுள்ள வானத்தை நட்சத்திரங்களின் அலங்காரத்தால் அழகாக்கினோம். வரம்பு மீறிய ஒவ்வொரு ஷைத்தானை விட்டும் பாதுகாப்பாக (ஆக்கினோம்).
8, 9, 10. மிக உயர்வான (வானவர்கள்) கூட்டத்தாரிடமிருந்து அவர்கள் ஒட்டுக் கேட்க முடியாது. ஒவ்வொரு புறத்திலிருந்தும் விரட்டுவதற்காக அவர்கள் (தீப்பிழம்புகளால்) எறியப்படுவார்கள். அவர்களுக்கு நிரந்தரமான வேதனையும் உண்டு. விரைவாக ஒட்டுக் கேட்பவனைத் தவிர! அப்போது ஒளிரும் தீப்பிழம்பு அவனைத் துரத்தும்.
11. இவர்கள் கடினமான படைப்பா? அல்லது நாம் படைத்த மற்றவையா? என அவர்களிடம் கேட்பீராக! பிசுபிசுப்பான களிமண்ணால் இவர்களைப் படைத்தோம்.
12. உண்மையில் நீர் வியக்கின்றீர். அவர்களோ கேலி செய்கின்றனர்.
13. அவர்களுக்கு அறிவுறுத்தப்படும்போது அவர்கள் நல்லுணர்வு பெறுவதில்லை.
14. அவர்கள் எந்தச் சான்றைக் கண்டாலும் கேலி செய்கின்றனர்.
15, 16, 17. “இது அப்பட்டமான சூனியத்தைத் தவிர வேறில்லை, நாம் இறந்து, மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகி விட்டாலும் நாமும், முன்சென்ற நம் முன்னோர்களும் (உயிர்ப்பித்து) எழுப்பப்படுவோமா?” என்று கேட்கின்றனர்.
18. “ஆம்! நீங்கள் இழிவடைந்தோராக (எழுப்பப்படுவீர்கள்)” என்று கூறுவீராக!
19, 20. “அது ஒரேயொரு சப்தம்தான். உடனே அவர்கள் விழித்து, “எங்களின் கேடே! இது தீர்ப்பு நாள்” எனக் கூறுவார்கள்.
21, 22, 23, 24. “நீங்கள் எதைப் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தீர்களோ அந்தத் தீர்ப்பு நாள் இதுதான்! அநியாயக்காரர்களையும், அவர்களின் கூட்டாளிகளையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றையும் ஒன்று திரட்டுங்கள்! அவர்களுக்கு நரகத்தின் பாதையை நோக்கி வழிகாட்டுங்கள்! அவர்களை நிறுத்தி வையுங்கள்! அவர்கள் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்” (என்று கூறப்படும்.)
25. “உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஒருவருக்கொருவர் உதவவில்லையே!” (என்று கேட்கப்படும்)
26. எனினும், அன்று அவர்கள் சரணடைந்து விடுவார்கள்.
27. அவர்கள் ஒருவரையொருவர் முன்னோக்கி வினவிக் கொள்வார்கள்.
28. “நீங்கள்தான் எங்களை நிர்ப்பந்திப்போராக இருந்தீர்கள்” என்று அவர்கள் கூறுவார்கள்.
29. “அவ்வாறல்ல! நீங்கள் இறைநம்பிக்கையாளர்களாக இருக்க வில்லை” என்று (வழிகெடுத்தோர்) கூறுவார்கள்.
30, 31, 32. “எங்களுக்கு உங்கள்மீது எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை. எனினும், நீங்கள் வரம்பு மீறிய கூட்டமாகவே இருந்தீர்கள். எனவே நமது இறைவனின் வாக்கு நம்மீது உறுதியாகிவிட்டது. நாம் (வேதனையைச்) சுவைக்கக் கூடியவர்களே! உங்களை நாங்கள் வழிகெடுத்தோம். நாங்களே வழிகெட்டவர்களாகத்தான் இருந்தோம்” என்றும் கூறுவார்கள்.
33. அன்று அவர்கள் வேதனையில் கூட்டாளிகளாக இருப்பார்கள்.
34. நாம் குற்றவாளிகளை இவ்வாறே நடத்துவோம்.
35. “அல்லாஹ்வைத் தவிர எந்தக் கடவுளுமில்லை” என்று அவர்களிடம் கூறப்பட்டால் கர்வம் கொள்வோராக இருந்தனர்.
36. “ஒரு பைத்தியக்காரக் கவிஞருக்காக நமது கடவுள்களைக் கைவிடுவோமா?” என்று அவர்கள் கேட்கின்றனர்.
37. அவ்வாறல்ல! உண்மையைத்தான் அவர் கொண்டு வந்தார். தூதர்களையும் உண்மைப்படுத்தினார்.
38. நீங்கள் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கக் கூடியவர்களே!
39. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கே கூலி வழங்கப்படுவீர்கள்.
40, 41, 42. எனினும், தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களுக்கு அறியப்பட்ட உணவாக பழங்கள் உண்டு. இன்பங்கள் நிறைந்த சொர்க்கங்களில் கண்ணியப்படுத்தப்படுவார்கள்.
43, 44. கட்டில்கள்மீது ஒருவரையொருவர் முன்னோக்கி இருப்பார்கள்.
45, 46. வெண்மையாகவும், அருந்துவோருக்குச் சுவையாகவும் உள்ள ஊற்றிலிருந்து (மதுக்) கிண்ணம் அவர்களுக்கிடையே சுற்றிவருமாறு செய்யப்படும்.
47. அதில் எந்தக் கெடுதியும் இல்லை. அதனால் மதிமயங்கமாட்டார்கள்.
48, 49. அவர்களுக்கு அருகில் பார்வை தாழ்த்திய கண்ணழகிகள் இருப்பார்கள். அப்பெண்கள் மறைத்து வைக்கப்பட்ட முட்டைகளைப் போன்று (வெண்மையாக) இருப்பார்கள்.
50. அவர்கள் ஒருவரையொருவர் முன்னோக்கி விசாரித்துக் கொள்வார்கள்.
51, 52, 53. அவர்களில் ஒருவர், ‘நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவும், ஆகி விட்டாலும் (மீண்டும் எழுப்பப்பட்டு) கூலி வழங்கப்படுவோமா? (இதை) நம்புவோரில் நீயும் ஒருவனா?’ என்று கேட்கும் ஒரு நண்பன் எனக்கு (உலகில்) இருந்தான்” எனக் கூறுவார்.
54. “நீங்கள் (அவனைப்) பார்க்கின்றீர்களா?” என்று கேட்பார்.
55. பிறகு அவர் எட்டிப் பார்ப்பார். அவனை நரகத்தின் மையப் பகுதியில் காண்பார்.
56. “அல்லாஹ்வின்மீது சத்தியமாக! என்னை நீ அழிக்க முயன்றாய்” என்று கூறுவார்.
57, 58, 59. “என் இறைவனின் அருள் இல்லையேல் நானும் (நரகத்திற்குக்) கொண்டு வரப்படுவோரில் இருந்திருப்பேன். எங்களின் முந்தைய மரணத்தைத் தவிர (இனி) நாங்கள் மரணிப்போர் இல்லையே! நாங்கள் வேதனை செய்யப்படுவோரும் இல்லை” (என்றும் கூறுவார்.)
60. இதுவே மகத்தான வெற்றியாகும்.
61. செயல்படுவோர் இதுபோல ஒன்றுக்காகவே செயல்பட வேண்டும்.
62. இது சிறந்த விருந்தா? அல்லது ஸக்கூம் மரமா?
63. அநியாயக்காரர்களுக்குச் சோதனையாகவே அதனை நாம் ஆக்கியுள்ளோம்.
64. அது நரகத்தின் அடிப்பகுதியிலிருந்து வெளிப்படும் ஒரு மரமாகும்.
65. அதன் பாளை, ஷைத்தான்களின் தலைகளைப் போலிருக்கும்.
66. அவர்கள் அதிலிருந்தே உண்பார்கள்; அதிலிருந்தே வயிறுகளை நிரப்புவார்கள்.
67. பிறகு, அதற்கு மேலாகக் கொதிநீரின் கலவையும் அவர்களுக்குண்டு.
68. பின்னர் அவர்களின் மீளுமிடம் நரகமாகும்.
69. இவர்கள் தமது முன்னோரை வழிகேடர்களாகக் கண்டார்கள்.
70. அவர்களின் அடிச்சுவடுகளின்மீதே இவர்களும் விரைந்து செல்கின்றனர்.
71. இம்முன்னோரில் பெரும்பாலோர் இவர்களுக்கு முன்பே வழிகெட்டு விட்டனர்.
72. அவர்களிடம் எச்சரிக்கை செய்வோரை அனுப்பி வைத்தோம்.
73, 74. தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர (ஏனைய) எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதைக் கவனிப்பீராக!
75. நூஹ் நம்மிடம் பிரார்த்தித்தார். (நாமே) பதிலளிப்போரில் சிறந்தவர்கள்.
76. கடுமையான துன்பத்திலிருந்து அவரையும், அவரது குடும்பத்தினரையும் காப்பாற்றினோம்.
77. அவரது தலைமுறைகளையே எஞ்சியிருப்போராக ஆக்கினோம்.
78. பின்வருவோரிடம் அவருக்கு (நற்பெயரை) நிலைக்கச் செய்தோம்.
79. அகிலத்தில் உள்ளவர்களில் நூஹ்மீது அமைதி உண்டாகட்டும்!
80. இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி வழங்குவோம்.
81. அவர் இறைநம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் உள்ளவர்.
82. பின்னர் நாம் மற்றவர்களை (நீரில்) மூழ்கடித்தோம்.
83. அவரது வழிவந்தவர்களில் உள்ளவர்தான் இப்ராஹீம் ஆவார்.
84. தமது இறைவனிடம் அவர் தூய்மையான உள்ளத்துடன் வந்ததை நினைவு கூர்வீராக!
85. அவர் தமது தந்தையிடமும், சமுதாயத்திடமும் “நீங்கள் எதை வணங்குகிறீர்கள்?” என்று கேட்டதை நினைவு கூர்வீராக!
86, 87. “அல்லாஹ்வையன்றி பொய்யைக் கடவுள்கள் என எண்ணுகிறீர்களா? அவ்வாறாயின் அகிலங்களின் இறைவனைப் பற்றி உங்களுடைய எண்ணம் என்ன?” (என்று கேட்டார்.)
88. பின்னர் அவர் நட்சத்திரங்களைக் கூர்ந்து கவனித்தார்.
89. மேலும் “நான் நோயாளியாவேன்” எனக் கூறினார்.433
90. அவர்கள், அவரை விட்டும் திரும்பிச் சென்றனர்.
91, 92. அவர், அவர்களின் கடவுள்களிடம் சென்றார். “நீங்கள் சாப்பிட மாட்டீர்களா? நீங்கள் பேசாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?” எனக் கேட்டார்.
93. பின்னர் அவற்றை நோக்கிச் சென்று, வலதுகையால் தாக்கினார்.
94. அவரிடம் அவர்கள் விரைந்து வந்தனர்.
95, 96. “நீங்கள் செதுக்கிக் கொண்டவற்றையே நீங்கள் வணங்குகிறீர்களா? உங்களையும், நீங்கள் உருவாக்கியவற்றையும் அல்லாஹ்வே படைத்தான்” என்று அவர் கூறினார்.
97. “அவருக்காக ஒரு கிடங்கை அமைத்து, அவரை நெருப்பில் போட்டு விடுங்கள்!” என அவர்கள் கூறினர்.
98. அவருக்கு (எதிராக) அவர்கள் சதி செய்ய நாடினார்கள். அவர்களை நாம் இழிந்தோராக ஆக்கினோம்.
99. “நான் என் இறைவனை நோக்கிச் செல்கிறேன். அவன் எனக்கு வழிகாட்டுவான்” என்று அவர் கூறினார்.
100. “என் இறைவனே! எனக்கு (வழித்தோன்றலாக) நல்லவரை அளிப்பாயாக!” (என்று இறைஞ்சினார்.)
101. எனவே, பொறுமைமிக்க ஒரு குழந்தையைக் கொண்டு அவருக்கு நற்செய்தி கூறினோம்.
102. அவருடன் சேர்ந்து உழைக்கும் பருவத்தை அவர் அடைந்தபோது “என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பதாகக் கனவில் கண்டேன். நீ என்ன நினைக்கிறாய் என்பதை யோசித்துக் கொள்!” என்று கூறினார். “என் தந்தையே! உமக்கு ஏவப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் பொறுமையாளர்களில் உள்ளவனாக என்னைக் காண்பீர்கள்” என்று அவர் கூறினார்.
103, 104, 105. அவர்கள் இருவரும் கட்டுப்பட்டு, அவரை (இப்ராஹீம்) முகங்குப்புறக் கிடத்தியபோது, “இப்ராஹீமே! நீர் கனவை உண்மையாக்கி விட்டீர்!” என்று (கூறி) அவரை அழைத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி வழங்குவோம்.
106. இதுவே பகிரங்க சோதனையாகும்.
107. அவருக்கு மகத்தான ஒரு பலிப் பிராணியை ஈடாக்கினோம்.
108. பின்வருவோரிடம் அவருக்கு (நற்பெயரை) நிலைக்கச் செய்தோம்.
109. இப்ராஹீமின்மீது அமைதி உண்டாகட்டும்!
110. இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம்.
111. அவர் இறைநம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் உள்ளவர்.
112. அவருக்கு, நல்லோரிலுள்ள நபி இஸ்ஹாக் (எனும் மகன்) குறித்து நற்செய்தி கூறினோம்.
113. அவருக்கும் இஸ்ஹாக்கிற்கும் அருள்வளம் புரிந்தோம். அவ்விருவரின் தலைமுறைகளில் நன்மை செய்வோரும் உள்ளனர்; பகிரங்கமாகத் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்வோரும் உள்ளனர்.
114. மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் அருள் புரிந்தோம்.
115. கடும் துன்பத்திலிருந்து அவ்விருவரையும், அவர்களின் சமுதாயத்தையும் காப்பாற்றினோம்.
116. நாம் அவர்களுக்கு உதவி புரிந்தோம். எனவே அவர்கள் வெற்றி பெற்றோராக ஆனார்கள்.
117. அவ்விருவருக்கும் தெளிவான வேதத்தையும் கொடுத்தோம்.
118. அவர்களுக்கு நேரான பாதையைக் காட்டினோம்.
119. பின்வருவோரிடம் அவ்விருவருக்கும் (நற்பெயரை) நிலைக்கச் செய்தோம்.
120. மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் அமைதி உண்டாகட்டும்!
121. இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம்.
122. அவ்விருவரும் இறைநம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் உள்ளவர்கள்.
123. இல்யாஸும் தூதர்களில் உள்ளவராவார்.
124, 125, 126. அவர் தமது சமுதாயத்தினரிடம் “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா? உங்கள் இறைவனும், முன்பிருந்த உங்கள் முன்னோரின் இறைவனுமாகிய அழகிய படைப்பாளன் அல்லாஹ்வையன்றி, ‘பஅல்’ எனும் சிலையை நீங்கள் வணங்குகிறீர்களா?” என்று கேட்டதை நினைவூட்டுவீராக!
127. அவர்கள் அவரைப் பொய்யரெனக் கூறினர். எனவே அவர்கள் (நரகத்திற்குக்) கொண்டு வரப்படுவார்கள்.
128. தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர!
129. பின்வருவோரிடம் அவருக்கு (நற்பெயரை) நிலைக்கச் செய்தோம்.
130. இல்யாஸீன்மீது அமைதி உண்டாகட்டும்!
131. இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம்.
132. அவர் இறைநம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் உள்ளவர்.
133. லூத்தும் இறைத்தூதர்களில் உள்ளவர்.
134, 135. (வேதனையில்) தங்கிவிட்ட கிழவியைத் தவிர, அவரையும், அவரது குடும்பத்தினர் அனைவரையும் நாம் காப்பாற்றியதை நினைவு கூர்வீராக!
136. பின்னர் மற்றவர்களை அடியோடு அழித்து விட்டோம்.
137, 138. நீங்கள் காலையிலும், இரவிலும் அவர்க(ளது ஊர்க)ளைக் கடந்து செல்கிறீர்கள். சிந்திக்க மாட்டீர்களா?
139. யூனுஸும் இறைத் தூதர்களில் உள்ளவர்.
140, 141. நிறைந்த கப்பலை நோக்கி அவர் ஓடியபோது, அ(திலுள்ள)வர்கள் சீட்டுக் குலுக்கிப் போட்டனர். அவர் தோல்வியடைந்தோரில் ஆகிவிட்டார்.
142. அவர் பழிப்புக்கு இடமான நிலையில் அவரை மீன் விழுங்கியது.
143, 144. அவர் (நம்மைப்) போற்றுவோரில் ஒருவராக இல்லையேல் அவர்கள் (உயிர்ப்பித்து) எழுப்பப்படும் நாள்வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார்.
145. அவர் நோயுற்றிருந்த நிலையில் அவரை (மீன் வயிற்றிலிருந்து) ஒரு வெட்ட வெளியில் எறிந்தோம்.
146. அவர்மீது (நிழலிட) ஒரு சுரைக்கொடியை முளைக்கச் செய்தோம்.
147. ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு அவரைத் தூதராக அனுப்பினோம்.
148. அவர்கள் இறைநம்பிக்கை கொண்டனர். எனவே அவர்களைக் குறிப்பிட்ட காலம்வரை சுகம் அனுபவிக்கச் செய்தோம்.
149. “உமது இறைவனுக்குப் பெண் மக்களும், அவர்களுக்கு ஆண் மக்களுமா?” என்று அவர்களிடம் (நபியே!) கேட்பீராக!
150. அல்லது இவர்கள் பார்த்துக் கொண்டிருக்க நாம் வானவர்களைப் பெண்களாகப் படைத்தோமா?
151, 152. அறிந்து கொள்ளுங்கள்! “அல்லாஹ் பிள்ளை பெற்றுள்ளான்” என்று கூறுவது, அவர்களின் பச்சைப் பொய்களில் ஒன்றாகும். அவர்கள் பொய்யர்களே!
153. ஆண் மக்களை விட்டுவிட்டுப் பெண் மக்களை அவன் தேர்ந்தெடுத்துக் கொண்டானா?
154, 155. உங்களுக்கு என்ன நேர்ந்தது? எப்படி (இதை) முடிவு செய்கிறீர்கள்? நீங்கள் சிந்திக்கமாட்டீர்களா?
156. அல்லது உங்களிடம் தெளிவான ஆதாரம் இருக்கிறதா?
157. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களின் வேதத்தைக் கொண்டு வாருங்கள்!
158. அவனுக்கும், ஜின்களுக்குமிடையில் ஒரு வழித்தோன்றல் உறவை இட்டுக்கட்டுகின்றனர். தாம் (இறைவனிடம்) கொண்டு வரப்படுவோர் என்பதை ஜின்கள் அறிந்துள்ளன.
159. அவர்கள் வருணிப்பதை விட்டும் அல்லாஹ் தூயவன்.
160. தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர! (அவர்கள் இவ்வாறு வருணிக்க மாட்டார்கள்.)
161, 162. நீங்களும், நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவையும் அவனுக்கு எதிராக எவரையும் வழிகெடுத்துவிட முடியாது.
163. நரகத்தில் நுழையக்கூடியவனைத் தவிர!
164, 165, 166. “எங்களில் யாராயினும் அவருக்கென அறியப்பட்ட ஓர் இடம் உண்டு. நாங்கள் அணிவகுத்து நிற்போர். நாங்கள் (இறைவனைப்) போற்றுவோர்” (என்று வானவர்கள் கூறினர்.)434
167, 168, 169. “முன்னோரிடமிருந்து (வேத) அறிவுரை எங்களுக்குக் கிடைத்திருந்தால் நாங்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களாக இருந்திருப்போம்” என்று இ(ணை வைப்ப)வர்கள் கூறுவோராக இருந்தனர்.
170. இப்போது அவர்கள் இ(வ்வேதத்)தை மறுத்து விட்டனர். அவர்கள் (விரைவில்) அறிந்து கொள்வார்கள்.
171. தூதர்களாகிய நம் அடியார்களுக்கு நமது வாக்கு முந்திவிட்டது.
172. அவர்களே உதவி செய்யப்படுவோர்.
173. நம் படையினராகிய அவர்களே வெற்றி பெறுவோர்.
174. எனவே, இ(ணை வைப்ப)வர்களைச் சிறிது காலம்வரை புறக்கணிப்பீராக!
175. அவர்களைக் கவனிப்பீராக! பின்னர் அவர்கள் கண்டுகொள்வார்கள்.
176. நமது தண்டனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்?
177. அது அவர்களின் முற்றத்தில் இறங்கும்போது, எச்சரிக்கப்பட்டவர்களின் விடியல் மிகக் கெட்டதாகவே இருக்கும்.435
178. அவர்களைச் சிறிது காலம்வரை புறக்கணிப்பீராக!
179. அவர்களைக் கவனிப்பீராக! பின்னர் அவர்கள் கண்டுகொள்வார்கள்.
180. அவர்கள் வருணிப்பதை விட்டும் கண்ணியத்தின் நாயனாகிய உமது இறைவன் தூயவன்.
181. தூதர்கள்மீது அமைதி உண்டாகட்டும்!
182. அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.