அஷ்ஷுஅரா – கவிஞர்கள்

அத்தியாயம் : 26

வசனங்களின் எண்ணிக்கை: 227

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. தா, ஸீம், மீம்.
2. இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
3. (நபியே!) அவர்கள் இறைநம்பிக்கையாளர்களாக ஆகவில்லை என்பதால் நீர் உம்மையே மாய்த்துக் கொள்வீர் போலும்!
4. நாம் நாடினால் அவர்களுக்கு வானிலிருந்து ஒரு சான்றை இறக்கியிருப்போம். அப்போது அவர்களின் கழுத்துகள் அதற்குப் பணிந்தவையாகி விடும்.
5. அளவிலா அருளாளனிடமிருந்து அவர்களிடம் புதிதாக எந்த நற்போதனை வந்தாலும் அவர்கள் அதைப் புறக்கணிக்காமல் இருந்ததில்லை.
6. அவர்கள் பொய்யெனக் கூறினர். எனவே, அவர்கள் எதனைக் கேலி செய்து கொண்டிருந்தார்களோ அதுகுறித்த செய்திகள் அவர்களிடம் வந்து சேரும்.
7. அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? அதில் சிறப்பான ஒவ்வொரு (தாவர) வகைகளிலிருந்தும் ஏராளமாக முளைக்கச் செய்துள்ளோம்.
8. இதில் சான்று உள்ளது. எனினும் அவர்களில் பெரும்பாலோர் இறைநம்பிக்கையாளர்களாக இருக்கவில்லை.
9. உமது இறைவனே மிகைத்தவன்; நிகரிலா அன்பாளன்.
10, 11. “ஃபிர்அவ்னின் சமுதாயமான அநியாயக்காரக் கூட்டத்தாரிடம் செல்வீராக! அவர்கள் (என்னை) அஞ்ச வேண்டாமா?” என உமது இறைவன் மூஸாவை அழைத்ததை நினைவூட்டுவீராக!
12, 13, 14. “என் இறைவனே! அவர்கள் என்னைப் பொய்யரெனக் கூறுவதை அஞ்சுகிறேன். என் உள்ளம் நெருக்கடிக்குள்ளாகி விடும். எனது நாவு சரளமாகப் பேச வராது. எனவே ஹாரூனுக்கும் தூதர் எனும் தகுதியை வழங்குவாயாக! அவர்களுக்கு என்மீது ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. அதனால் என்னைக் கொன்று விடுவார்கள் என அஞ்சுகிறேன்” என அவர் கூறினார்.
15, 16, 17. (அதற்கு இறைவன்,) “அவ்வாறல்ல! நீங்கள் இருவரும் நமது சான்றுகளுடன் செல்லுங்கள். நாம் உங்களுடன் செவிமடுத்தவராக இருப்போம். நீங்கள் ஃபிர்அவ்னிடம் சென்று, ‘நாங்கள் அகிலங்களின் இறைவனுடைய தூதர்கள்! எங்களுடன் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை அனுப்பிவிடு!’ என்று கூறுங்கள்” எனக் கூறினான்.
18, 19. (அவர்கள் ஃபிர்அவ்னிடம் சென்றபோது அவன்,) “நம்மிடம் குழந்தையாக இருந்தபோது உம்மை நாங்கள் வளர்க்கவில்லையா? உம் ஆயுளில் பல்லாண்டுகள் எங்களுடன் தங்கியிருந்தீர். நீர் செய்த உமது (குற்றச்) செயலையும் செய்து விட்டீர். நீர் நன்றி கெட்டவர்களில் உள்ளவர்” என்று கூறினான்.
20, 21, 22. “நான் அறியாதவனாக இருந்த நேரத்தில் அதைச் செய்தேன். உங்களுக்கு அஞ்சி உங்களிடமிருந்து ஓடி விட்டேன். அப்போது என் இறைவன் எனக்கு ஞானத்தைக் கொடுத்து, என்னைத் தூதர்களில் ஒருவனாக ஆக்கினான். நீ இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை அடிமைப்படுத்தியிருக்கிறாயே! இதுதான் நீ என்னிடம் சொல்லிக் காட்டும் உதவி (ஆகுமா?)” என்று (மூஸா) கூறினார்.
23. “அகிலங்களின் இறைவன் என்றால் யார்?” என ஃபிர்அவ்ன் கேட்டான்.
24. “நீங்கள் உறுதியாக நம்புவோராக இருந்தால், (அவன்) வானங்கள், பூமி, இவற்றுக்கு இடைப்பட்டவற்றின் இறைவன்” என்று பதிலளித்தார்.
25. அவன் தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம், “நீங்கள் செவியுற வில்லையா?” எனக் கேட்டான்.
26. “(அவன்) உங்களுக்கும் இறைவன்; முன்சென்று விட்ட உங்கள் முன்னோருக்கும் இறைவன்” என்று (மூஸா) கூறினார்.
27. “உங்களுக்கு அனுப்பப்பட்ட உங்கள் தூதர் பைத்தியக்காரரே!” என அவன் கூறினான்.
28. “நீங்கள் சிந்திப்போராக இருந்தால், (அவனே) கிழக்கு, மேற்கு, இவற்றுக்கு இடைப்பட்டவற்றுக்கு இறைவன்” என்று அவர் கூறினார்.
29. “என்னையன்றி வேறு கடவுளை நீர் எடுத்துக் கொண்டால் உம்மைச் சிறைப்பட்டோரில் ஆக்கிவிடுவேன்” என்று அவன் கூறினான்.
30. “உன்னிடம் நான் ஒரு தெளிவான விஷயத்தைக் கொண்டு வந்தாலுமா?” என்று அவர் கேட்டார்.
31. “நீர் உண்மையாளர்களில் இருந்தால் அதைக் கொண்டு வாரும்!” என்று அவன் கூறினான்.
32. அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது தெளிவான, பெரிய பாம்பாகி விட்டது.
33. அவர் தமது கையை வெளியில் எடுத்தார். அப்போது அது பார்ப்ப்பவர்களுக்கு வெண்மையாக இருந்தது.
34, 35. “இவர் திறமையான சூனியக்காரர். தன் சூனியத்தால் உங்கள் நாட்டிலிருந்து உங்களை வெளியேற்ற நினைக்கிறார். எனவே என்ன ஆணையிடுகிறீர்கள்?” என்று தன்னைச் சுற்றியிருந்த பிரமுகர்களிடம் கேட்டான்.
36, 37. “இவருக்கும், இவரது சகோதரருக்கும் தவணையளிப்பாயாக! (ஆள்) திரட்டுவோரைப் பல ஊர்களுக்கும் அனுப்புவாயாக! அவர்கள், திறமை மிக்க சூனியக்காரர்கள் அனைவரையும் உன்னிடம் அழைத்து வருவார்கள்” என அவர்கள் கூறினர்.
38. குறிப்பிட்ட நாளில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் சூனியக்காரர்கள் ஒன்றுசேர்க்கப்பட்டனர்.
39. “நீங்கள் ஒன்றுதிரள்வீர்களா?” என்று மக்களிடம் கேட்கப்பட்டது.
40. ‘சூனியக்காரர்கள் வென்றுவிட்டால் நாம் அவர்களைப் பின்பற்றலாம்” (என்றும் கூறப்பட்டது.)
41. சூனியக்காரர்கள் வந்தபோது அவர்கள் ஃபிர்அவ்னிடம், “நாங்கள் வெற்றியாளர்களாகி விட்டால் எங்களுக்கு ஏதேனும் வெகுமதி உண்டா?” என்று கேட்டனர்.
42. “ஆம்! அப்போது நீங்களே நெருக்கமானவர்களில் உள்ளவர்கள்” என அவன் கூறினான்.
43. “நீங்கள் (சூனியத்திற்காகப்) போட வேண்டியதைப் போடுங்கள்!” என அவர்களிடம் மூஸா கூறினார்.
44. அவர்கள் தமது கயிறுகளையும் கைத்தடிகளையும் போட்டு விட்டு, “ஃபிர்அவ்னுடைய மகத்துவத்தின்மீது சத்தியமாக நாங்களே வெற்றி பெறுவோம்” என்று கூறினர்.
45. மூஸா தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது (பாம்பாக மாறி) அவர்கள் பொய்யாகத் தோற்றுவித்தவைகளை விழுங்கியது.
46. சூனியக்காரர்கள் (அல்லாஹ்வுக்கு) ஸஜ்தா செய்தோராக விழுந்தனர்.
47, 48. “மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனான அகிலங்களின் இறைவனை நம்பினோம்” என அவர்கள் கூறினர்.
49. “நான் உங்களுக்கு அனுமதி தருவதற்கு முன்னரே இவரை நம்பி விட்டீர்களா? இவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த உங்களில் பெரியவர். எனவே (இதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்! நான் உங்களின் மாறு கை, மாறு கால்களைத் துண்டித்து, உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைவேன்” என (ஃபிர்அவ்ன்) கூறினான்.
50, 51. “(எங்களுக்கு) எந்தத் தீங்கும் இல்லை! நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம். இறைநம்பிக்கை கொண்டோரில் நாங்கள் முதன்மையானவர்களாக இருப்பதால் எங்கள் இறைவன் எங்களின் பாவங்களை எங்களுக்கு மன்னிப்பதையே விரும்புகிறோம்” என அவர்கள் கூறினர்.
52. “என்னுடைய அடியார்களை இரவில் அழைத்துச் செல்வீராக! நீங்கள் பின்தொடரப்படுவீர்கள்” என மூஸாவுக்கு அறிவித்தோம்.
53. ஃபிர்அவ்ன், (படை) திரட்டுவோரைப் பல ஊர்களுக்கும் அனுப்பி வைத்தான்.
54, 55, 56. “இவர்கள் சின்னஞ்சிறிய கூட்டத்தினர்தான். அவர்கள் நம்மை ஆத்திரமூட்டுகிறார்கள். நாமோ எச்சரிக்கையாக இருக்கும் படையினர்” (என ஃபிர்அவ்ன் கூறினான்.)
57, 58. தோட்டங்கள், நீரூற்றுகள், செல்வக் களஞ்சியங்கள், சிறந்த வசிப்பிடம் ஆகியவற்றை விட்டும் அவர்களை வெளியேற்றினோம்.
59. இவ்வாறுதான் (அவர்களை வெளியேற்றினோம்.) அவற்றுக்கு இஸ்ராயீலின் வழித்தோன்றல்களை உரிமையாளர்களாக ஆக்கினோம்.
60. சூரியன் உதிக்கும் நேரத்தில் (ஃபிர்அவ்ன் கூட்டத்தினர்) அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.
61. இரண்டு கூட்டத்தாரும் ஒருவரையொருவர் கண்டபோது, “நாம் அகப்பட்டுக் கொண்டோம்” என மூஸாவின் தோழர்கள் கூறினர்.
62. “அவ்வாறல்ல! என் இறைவன் என்னுடன் இருக்கிறான். அவன் எனக்கு வழிகாட்டுவான்” என (மூஸா) கூறினார்.
63. அப்போது நாம் மூஸாவிடம், “உம்முடைய கைத்தடியால் கடலை அடிப்பீராக!” என அறிவித்தோம். அக்கடல் பிளந்து, ஒவ்வொரு பகுதியும் பெரும் மலையைப் போல் ஆனது.
64. (துரத்தி வந்த) மற்றவர்களையும் அந்த இடத்திற்கு நெருங்கிவரச் செய்தோம்.
65. மூஸாவையும் அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம்.
66. பிறகு, மற்றவர்களை (கடலில்) மூழ்கடித்தோம்.
67. இதில் சான்று உள்ளது. எனினும் அவர்களில் பெரும்பாலோர் இறைநம்பிக்கையாளர்களாக இருக்கவில்லை.
68. உமது இறைவனே மிகைத்தவன்; நிகரிலா அன்பாளன்.
69. அவர்களுக்கு இப்ராஹீமின் செய்தியை எடுத்துரைப்பீராக!
70, 71. அவர் தம் தந்தையிடமும் சமுதாயத்தினரிடமும், “எதை வணங்குகிறீர்கள்?” என்று கேட்டபோது, “சிலைகளை வணங்குகிறோம்; அவற்றை வணங்கிக் கொண்டே இருப்போம்” என்று அவர்கள் கூறினர்.
72,73. “நீங்கள் அழைக்கின்றபோது அவை உங்களுக்குச் செவி சாய்க்கின்றனவா? அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா? அல்லது தீமை செய்கின்றனவா?” என அவர் கேட்டார்.
74. “எனினும் இவ்வாறு செய்பவர்களாக எங்கள் முன்னோரைக் கண்டோம்” என அவர்கள் கூறினர்.
75, 76. “நீங்களும் முன்சென்று விட்ட உங்கள் முன்னோரும் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள் என்பதைச் சிந்தித்தீர்களா?” என அவர் கேட்டார்.
77. அவை எனக்கு எதிரிகளே! அகிலங்களின் இறைவனைத் தவிர!
78. அவனே என்னைப் படைத்தான். அவனே என்னை நேர்வழியில் செலுத்துகிறான்.
79. அவனே எனக்கு உணவளிக்கிறான்; எனக்கு அருந்துவதற்கும் தருகிறான்.
80. நான் நோயுற்றால் அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.
81. அவனே என்னை மரணிக்கச் செய்வான்; பின்னர் என்னை உயிர்ப்பிப்பான்.
82. இறுதித் தீர்ப்பு நாளில் அவன் என் குற்றங்களை மன்னிக்க வேண்டும் என அவனிடமே ஆதரவு வைக்கிறேன்.
83. என் இறைவனே! எனக்கு ஞானத்தை வழங்குவாயாக! நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக!
84. பின்வருவோரிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக!
85. இன்பம் நிறைந்த சொர்க்கத்திற்கு உரிமை கொள்வோரில் ஒருவனாக என்னை ஆக்கி வைப்பாயாக!
86. என் தந்தையை மன்னிப்பாயாக! அவர் வழிகேடர்களில் ஆகி விட்டார்.
87. (உயிர்ப்பித்து) எழுப்பப்படும் நாளில் என்னை இழிவுக்குள்ளாக்கி விடாதே!
88. அந்நாளில் செல்வமும் பிள்ளைகளும் பயனளிக்காது.
89. எனினும், தூய உள்ளத்துடன் அல்லாஹ்விடம் வருபவரே (வெற்றிபெறுவார்.)
90. இறையச்சமுடையோருக்கு அருகில் சொர்க்கம் கொண்டு வரப்படும்.
91. வழிகேடர்களுக்காக நரகம் வெளியாக்கப்படும்.
92, 93. “அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தவர்களை எங்கே? அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்களா? அல்லது அவர்கள் தமக்குள் உதவிக் கொள்வார்களா?” என அவர்களிடம் கேட்கப்படும்.
94, 95. (வணங்கப்பட்ட) அவர்களும், அவ்வழிகேடர்களும், இப்லீஸின் படையினரும் ஒட்டுமொத்தமாக முகம் குப்புற அ(ந்நரகத்)தில் தள்ளப்படுவார்கள்.
96, 97, 98. அங்கு அவர்கள் தமக்கிடையே தர்க்கித்தவாறு, “அல்லாஹ்வின்மீது சத்தியமாக! உங்களை நாங்கள் அகிலங்களின் இறைவனுக்குச் சமமாக்கியதால், பகிரங்க வழிகேட்டில் ஆகிவிட்டோம்” என்று கூறுவார்கள்.
99, 100, 101, 102. “இக்குற்றவாளிகளைத் தவிர வேறெவரும் எங்களை வழிகெடுக்கவில்லை. எங்களுக்குப் பரிந்துரைப்போர் யாருமில்லை. நெருங்கிய நண்பனும் இல்லை. எங்களுக்கு (உலகத்திற்குத்) திரும்பும் வாய்ப்பு இருந்தால், அப்போது நாங்கள் இறைநம்பிக்கையாளர்களாக ஆவோம்” (என்றும் கூறுவர்.)
103. இதில் சான்று உள்ளது. எனினும் அவர்களில் பெரும்பாலோர் இறைநம்பிக்கையாளர்களாக இருக்கவில்லை.
104. உமது இறைவனே மிகைத்தவன்; நிகரிலா அன்பாளன்.
105. நூஹுடைய சமுதாயத்தினர், தூதர்களைப் பொய்யரெனக் கூறினர்.
106. அவர்களிடம் “நீங்கள் அஞ்ச மாட்டீர்களா?” என அவர்களுடைய சகோதரர் நூஹ் கூறியதை நினைவூட்டுவீராக!
107, 108, 109, 110. “நான் உங்களுக்கு அனுப்பப்பட்ட நம்பிக்கைக்குரிய தூதர். எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சி, எனக்குக் கட்டுப்படுங்கள்! இதற்காக நான் உங்களிடம் எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனது கூலி அகிலங்களின் இறைவனிடமே தவிர வேறில்லை. எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, எனக்குக் கட்டுப்படுங்கள்!” (என்றும் கூறினார்.)
111. “இழிந்தவர்கள் உம்மைப் பின்பற்றும்போது, நாங்கள் உம்மை நம்புவோமா?” என அவர்கள் கேட்டனர்.
112, 113, 114, 115. “அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி எனக்குத் தெரியாது. நீங்கள் அறிவோராக இருந்தால், அவர்களை விசாரிப்பது என் இறைவனிடமே உள்ளது. இறைநம்பிக்கையாளர்களை நான் விரட்டக்கூடியவன் அல்ல! நான் பகிரங்கமாக எச்சரிப்பவன் தவிர வேறில்லை” என அவர் கூறினார்.
116. “நூஹே! நீர் விலகிக் கொள்ளாவிட்டால் கல்லெறிந்து கொல்லப்படுவோரில் ஆகிவிடுவீர்!” என அவர்கள் கூறினர்.
117. “என் இறைவனே! என் சமுதாயத்தினர் என்னைப் பொய்யரெனக் கூறி விட்டனர்” என அவர் கூறினார்.
118. “எனவே எனக்கும், அவர்களுக்குமிடையே சரியான தீர்ப்பை வழங்குவாயாக! என்னையும், என்னுடன் இருக்கும் இறை நம்பிக்கையாளர்களையும் காப்பாற்றுவாயாக!” (என இறைஞ்சினார்.)
119. எனவே, நிறைந்த கப்பலில் (ஏற்றி) அவரையும், அவருடன் இருந்தவர்களையும் காப்பாற்றினோம்.
120. பின்னர், எஞ்சியிருந்த (கெட்ட)வர்களை (நீரில்) மூழ்கடித்தோம்.
121. இதில் சான்று உள்ளது. எனினும் அவர்களில் பெரும்பாலோர் இறைநம்பிக்கையாளர்களாக இருக்கவில்லை.
122. உமது இறைவனே மிகைத்தவன்; நிகரிலா அன்பாளன்.
123. ஆது சமுதாயத்தினர், தூதர்களைப் பொய்யரெனக் கூறினர்.
124. அவர்களிடம், “நீங்கள் அஞ்ச மாட்டீர்களா?” என அவர்களின் சகோதரர் ஹூது கூறியதை நினைவூட்டுவீராக!
125, 126, 127. “நான் உங்களுக்கு அனுப்பப்பட்ட நம்பிக்கைக்குரிய தூதர். எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சி, எனக்குக் கட்டுப்படுங்கள்! இதற்காக நான் உங்களிடம் எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனது கூலி அகிலங்களின் இறைவனிடமே தவிர வேறில்லை”
128, 129. “ஒவ்வோர் உயரமான இடத்திலும் அடையாளச் சின்னங்களை எழுப்பி வீணான காரியங்களைச் செய்கிறீர்களா? நீங்கள் நிரந்தரமாக வாழலாம் என்பதற்காக மாளிகைகளை எழுப்புகிறீர்களா?”
130. “நீங்கள் பிடித்தால் கொடுமையாளர்களைப் போல் பிடிக்கிறீர்கள்”
131. “எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, எனக்குக் கட்டுப்படுங்கள்!”
132. “நீங்கள் அறிந்து வைத்துள்ள பொருட்களைக் கொண்டே உங்களுக்கு உதவி செய்தவனை அஞ்சுங்கள்!”
133, 134. “கால்நடைகள், பிள்ளைகள், தோட்டங்கள், நீரூற்றுகள் ஆகியவற்றால் அவன் உங்களுக்கு உதவி செய்துள்ளான்”
135. “உங்கள்மீது மகத்தான நாளின் வேதனையை அஞ்சுகிறேன்” (என்றும் ஹூது கூறினார்.)
136, 137, 138. “நீர் எங்களுக்கு அறிவுரை சொல்வதும், அறிவுரை சொல்பவராக இல்லாதிருப்பதும் எங்களிடம் சமமே! இது, முன்னோரின் வழக்கமே தவிர வேறில்லை. நாங்கள் வேதனை செய்யப்படுவோர் அல்ல!” என அவர்கள் கூறினர்.
139. அவர்கள் அவரைப் பொய்யரெனக் கூறினர். எனவே அவர்களை அழித்தோம். இதில் சான்று உள்ளது. எனினும் அவர்களில் பெரும்பாலோர் இறைநம்பிக்கையாளர்களாக இருக்கவில்லை.
140. உமது இறைவனே மிகைத்தவன்; நிகரிலா அன்பாளன்.
141. ஸமூது சமுதாயத்தினர், தூதர்களைப் பொய்யரெனக் கூறினர்.
142. அவர்களிடம் “நீங்கள் அஞ்ச மாட்டீர்களா?” என அவர்களின் சகோதரர் ஸாலிஹ் கூறியதை நினைவூட்டுவீராக!
143, 144. “நான் உங்களுக்கு அனுப்பப்பட்ட நம்பிக்கைக்குரிய தூதர். எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சி, எனக்குக் கட்டுப்படுங்கள்!”
145. “இதற்காக நான் உங்களிடம் எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனது கூலி அகிலங்களின் இறைவனிடமே தவிர வேறில்லை”
146, 147, 148. “இங்குள்ள தோட்டங்களிலும், நீரூற்றுகளிலும், விளைச்சல்களிலும், குலை தள்ளிய கனிந்த பேரீச்சை மரங்களிலும் நீங்கள் அச்சமற்ற நிலையில் விட்டு வைக்கப்படுவீர்களா?”
149, 150, 151, 152. “நீங்கள் திறமையானவர்களாக மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொள்கிறீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சி, எனக்குக் கட்டுப்படுங்கள்! வரம்புமீறுவோரின் ஆணைக்குக் கட்டுப்படாதீர்கள்! அவர்கள் பூமியில் குழப்பம் விளைவிப்பார்கள்; சீர்திருத்தம் செய்ய மாட்டார்கள்” (என்றும் ஸாலிஹ் கூறினார்.)
153, 154. “நீர் சூனியம் செய்யப்பட்டவர்களில் ஒருவரே! நீர் எங்களைப் போல் மனிதரே தவிர வேறில்லை. நீர் உண்மையாளராக இருந்தால் ஏதேனும் சான்றைக் கொண்டு வாரும்!” என அவர்கள் கூறினர்.
155, 156. “இதோ! ஒட்டகம். அது நீரருந்துவதற்கும், நீங்கள் நீரருந்துவதற்கும் (தனித்தனியாக) நிர்ணயிக்கப்பட்ட நாள் உண்டு. அதற்குத் தீங்கிழைத்து விடாதீர்கள்! அவ்வாறு செய்தால் மகத்தான நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்” என்று கூறினார்.
157. ஆனால் அவர்கள் அதை அறுத்தனர். எனவே துயரப்படுவோராக ஆகி விட்டனர்.
158. அதனால் அவர்களை வேதனை பிடித்துக் கொண்டது. இதில் சான்று உள்ளது. எனினும் அவர்களில் பெரும்பாலோர் இறைநம்பிக்கையாளர்களாக இருக்கவில்லை.
159. உமது இறைவனே மிகைத்தவன்; நிகரிலா அன்பாளன்.
160. லூத்துடைய சமுதாயத்தினர், தூதர்களைப் பொய்யரெனக் கூறினர்.
161. அவர்களிடம், “நீங்கள் அஞ்ச மாட்டீர்களா?” என அவர்களின் சகோதரர் லூத் கூறியதை நினைவூட்டுவீராக!
162, 163, 164. “நான் உங்களுக்கு அனுப்பப்பட்ட நம்பிக்கைக்குரிய தூதர். எனவே, அல்லாஹ்வுக்கு அஞ்சி, எனக்குக் கட்டுப்படுங்கள்! இதற்காக நான் உங்களிடம் எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனது கூலி அகிலங்களின் இறைவனிடமே தவிர வேறில்லை”
165, 166. “உங்களுக்காக உங்கள் இறைவன் படைத்திருக்கும் உங்கள் மனைவியரை விட்டுவிலகி, உலகத்திலுள்ள ஆண்களிடம் செல்கிறீர்களா? மேலும், நீங்கள் வரம்பு மீறும் கூட்டமாகவே இருக்கிறீர்கள்!” (என்றும் லூத் கூறினார்.)
167. “லூத்தே! நீர் விலகிக் கொள்ளாவிட்டால் வெளியேற்றப்படுவோரில் ஒருவராக ஆகிவிடுவீர்” என அவர்கள் கூறினர்.
168, “நான் உங்கள் செயலை வெறுப்போரில் உள்ளவன்” என அவர் கூறினார்.
169. “என் இறைவனே! இவர்கள் செய்வதை விட்டு, என்னையும் என் குடும்பத்தினரையும் காப்பாற்றுவாயாக!” (எனப் பிரார்த்தித்தார்.)
170, 171. வேதனையில் தங்கிவிட்ட கிழவியைத் தவிர, அவரையும், அவரது குடும்பத்தினர் அனைவரையும் காப்பாற்றினோம்.
172. பின்னர் மற்றவர்களை அடியோடு அழித்தோம்.
173. அவர்கள்மீது (கல்) மழையைப் பொழிந்தோம். எச்சரிக்கப்பட்டோரின் (மீது பொழிந்த) மழை மிகக் கெட்டது.
174. இதில் சான்று உள்ளது. எனினும் அவர்களில் பெரும்பாலோர் இறைநம்பிக்கையாளர்களாக இருக்கவில்லை.
175. உமது இறைவனே மிகைத்தவன்; நிகரிலான அன்பாளன்.
176. தோப்புவாசிகள், தூதர்களைப் பொய்யரெனக் கூறினர்.
177. “நீங்கள் அஞ்ச மாட்டீர்களா?” என அவர்களிடம் ஷுஐப் கூறியதை நினைவூட்டுவீராக!
178, 179, 180. “நான் உங்களுக்கு அனுப்பப்பட்ட நம்பிக்கைக்குரிய தூதர். எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சி, எனக்குக் கட்டுப்படுங்கள்! இதற்காக நான் உங்களிடம் எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனது கூலி அகிலங்களின் இறைவனிடமே தவிர வேறில்லை”
181, 182. “நீங்கள் அளவை நிறைவாக்குங்கள்! குறைப்போராக ஆகி விடாதீர்கள்! சரியான தராசினால் நிறுத்துக் கொடுங்கள்!”
183, 184. “மக்களுக்கு, அவர்களுக்குரிய பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் குழப்பம் செய்து கொண்டு அலையாதீர்கள்! உங்களையும், முன்சென்ற சமுதாயத்தையும் படைத்தவனை அஞ்சுங்கள்!” (என்றும் ஷுஐப் கூறினார்.)
185, 186, 187. “நீர் சூனியம் செய்யப்பட்டவர்களில் ஒருவரே! நீர் எங்களைப் போல் மனிதரே தவிர வேறில்லை. நாங்கள் உம்மைப் பொய்யர்களில் உள்ளவராகவே கருதுகிறோம். நீர் உண்மையாளராக இருந்தால் வானத்தைத் துண்டு துண்டாக எங்கள்மீது விழச் செய்வீராக!” என அவர்கள் கூறினர்.
188. “நீங்கள் செய்வதை என் இறைவன் நன்கறிந்தவன்” என அவர் கூறினார்.
189. அவர்கள் அவரைப் பொய்யரெனக் கூறினர். எனவே, மேகத்தை உடைய நாளின் வேதனை அவர்களைப் பற்றிப் பிடித்தது. அதுவே மகத்தான நாளின் வேதனையாகிவிட்டது.
190. இதில் சான்று உள்ளது. எனினும் அவர்களில் பெரும்பாலோர் இறைநம்பிக்கையாளர்களாக இருக்கவில்லை.
191. உமது இறைவனே மிகைத்தவன்; நிகரிலா அன்பாளன்.
192. இது அகிலங்களின் இறைவனால் அருளப்பட்டுள்ளது.
193, 194, 195. (நபியே!) நீர் எச்சரிப்போரில் ஆவதற்காக, தெளிவான அரபு மொழியில் நம்பிக்கைக்குரிய (ஜிப்ரீல் எனும்) ரூஹ் இதை உமது உள்ளத்தில் இறக்கி வைத்தார்.
196. இது முன்சென்றவர்களின் வேதங்களிலும் உள்ளது.
197. இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிலுள்ள அறிஞர்கள் இதை அறிந்திருப்பது இவர்களுக்குச் சான்றாக இருக்கவில்லையா?
198, 199. இதை நாம் அரபியல்லாதவர்களில் ஒருவருக்கு இறக்கி, அவர் அதை அவர்களுக்கு ஓதிக் காட்டியிருந்தாலும் அதன்மீது நம்பிக்கை கொண்டிருக்க மாட்டார்கள்.
200. இப்படித்தான், குற்றவாளிகளின் உள்ளங்களில் இதைச் செலுத்தி விட்டோம்.
201. அவர்கள் துன்புறுத்தும் வேதனையைக் காணும்வரை இ(வ்வேதத்)தை நம்ப மாட்டார்கள்.
202. அது, அவர்கள் அறியாத விதத்தில் திடீரென அவர்களிடம் வரும்.
203. அப்போது அவர்கள், “நாங்கள் அவகாசம் அளிக்கப்படுவோமா?” என்று கேட்பார்கள்.
204. நமது தண்டனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்?
205, 206, 207. நாம் அவர்களுக்குப் பல்லாண்டுகளாகப் போதிய வசதி வாய்ப்புகளை வழங்கிய பின்னர், அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டது அவர்களிடம் வந்துவிட்டால், அவர்களுக்கு வழங்கப்பட்டவை அவர்களைக் காப்பாற்றாது என்பதைச் சிந்தித்தீரா?
208. எந்த ஊரையும், அதை எச்சரிப்போர் இன்றி நாம் அழித்ததில்லை.
209. அறிவுறுத்துவதற்காகவே (எச்சரிப்போரை அனுப்புகிறோம்.) நாம் அநியாயம் செய்வோராக இல்லை.
210, 211. ஷைத்தான்கள் இதைக் கொண்டு இறங்கவில்லை. அது அவர்களுக்குத் தகுதியானதல்ல! (அதற்கு) அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்.
212. அவர்கள் (இதைச்) செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவர்கள்.
213. அல்லாஹ்வுடன் இணைத்து வேறு கடவுளைப் பிரார்த்திக்காதீர்! அவ்வாறு செய்தால் நீர் தண்டிக்கப்படுவோரில் ஆகிவிடுவீர்.
214. (நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக!368
215. உம்மைப் பின்பற்றும் இறைநம்பிக்கையாளர்களிடம் (பணிவு எனும்) உமது சிறகைத் தாழ்த்துவீராக!
216. உமக்கு அவர்கள் மாறுசெய்தால் “நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகிக் கொண்டவன்” என்று கூறுவீராக!
217. மிகைத்தவன், நிகரிலா அன்பாளன்மீதே நம்பிக்கை வைப்பீராக!
218, 219. நீர் நின்று தொழும்போது அவன் உம்மைப் பார்க்கிறான். ஸஜ்தா செய்வோருடன் (சேர்ந்து) நீர் செயல்படுவதையும் (பார்க்கிறான்.)
220. அவன் செவியேற்பவன்; நன்கறிந்தவன்.
221. யார்மீது ஷைத்தான்கள் இறங்குகின்றனர் என்பதை உங்களுக்கு நான் அறிவிக்கவா?369
222, 223. பாவியான, பெரும் பொய் கூறும் ஒவ்வொருவர்மீதும் இறங்குகின்றனர். அவர்கள் செவியுற்றதைப் (பிறரின் காதில்) போடுகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் பொய்யர்களே!
224. வழிகேடர்களே கவிஞர்களைப் பின்பற்றுகின்றனர்.370
225, 226. ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் அவர்கள் அலைந்து திரிவதையும், தாம் செய்யாதவற்றை(ச் செய்ததாக)க் கூறுவதையும் நீர் பார்க்கவில்லையா?
227. (கவிஞர்களில்) யார் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து, அல்லாஹ்வை நன்கு நினைவுகூர்ந்து, தமக்கு அநியாயம் செய்யப்பட்ட பிறகு பழிதீர்த்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர! தாம் எந்த இடத்திற்குத் திரும்பிச் செல்லவிருக்கிறோம் என்பதை அநியாயக்காரர்கள் அறிந்து கொள்வார்கள்.