விஷமா? விவிலியமா? கிறங்கிப் போன கிறிஸ்தவ அணி

விஷமா? விவிலியமா?

கிறங்கிப் போன கிறிஸ்தவ அணி

உண்மையும் பொய்யும் ஒன்றாகாது; ஒருபோதும் ஒத்திராது. உண்மையின் வேடத்தில் பொய் ஊடுறுவும் போது அதற்காக வைக்கப்படுகின்ற வேதியியல் பரிசோதனையில் பொய் வெந்து பஸ்பமாகி விடும். ஒரு வேதத்திற்கு வைக்கப்படுகின்ற வேதியியல் சோதனை என்ன? விவாதம் தான்.

அல்லாஹ்வின் பாதையில் அழைக்கும் பணியில் தேவைப்படுகின்ற மூன்று முக்கிய ஆயுதங்கள் விவேகம், அழகிய விளக்கவுரை, விவாதம் ஆகியவையாகும். முதல் இரண்டு ஆயுதங்கள் பயன்படாத போது கடைசி ஆயுதம் விவாதம்.

இன்று கிறித்தவர்கள் முஸ்லிம்களின் வீடுவாரியாகப் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். அவ்வாறு பிரச்சாரம் மேற்கொள்கின்ற போது குர்ஆனில் ஈஸா (அலை) அவர்கள் தொடர்பாக இடம் பெற்றுள்ள வசனங்களைத் திரித்து, தில்லுமுல்லுகள் செய்து, கிறித்தவத்தைத் தான் இஸ்லாம் போதிக்கின்றது என்று திருகுதாளம் செய்கின்றனர்.

இப்போது இஸ்லாத்தைக் காப்பதற்காக விவாதம் என்ற ஆயுதத்தைக் கையில் ஏந்துவது அழைப்புப் பணியின் முக்கிய அணுகுமுறையாகும். இதைத் தான் தவ்ஹீத் ஜமாஅத் இப்போது செய்து கொண்டிருக்கின்றது.

இந்த விவாதக் களத்தில், தங்கள் வேத வாக்கு, பைபிள் என்ற விவிலியம் உண்மையென்றால் தவ்ஹீத் ஜமாஅத் அளித்த விஷத்தை கிறிஸ்தவர்கள் அருந்தி நிரூபித்துக் காட்டியிருக்க வேண்டும். அதை அவர்கள் செய்யவில்லை. இப்படி ஆக்கப்பூர்வமாக, செயல்பூர்வமாக அவர்கள் பதிலளிக்காததால் அவர்கள் அசத்தியத்தில் இருக்கிறார்கள் என்பதை இந்த விவாதத்தின் இடையே நடைபெற்ற “விஷப்’பரீட்சை எனும் வேதியியல் பரிசோதனை வெளிப்படுத்தியது.

அவர்கள் உமக்குப் பதிலளிக்காவிட்டால் அவர்கள் தமது மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக! அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நேர்வழியின்றி தனது மனோ இச்சையைப் பின்பற்றியவனை விட வழி கெட்டவன் யார்? அல்லாஹ் அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 28:64)

இவர்களின் விசுவாசத்தை விஷம் வென்று விட்டது. இவர்களின் இமாலய வேதாகம விசுவாசத்தை ஒரு சாதாரண விஷ பாட்டில் பிசுபிசுக்க வைத்து விட்டது. ஏன்? அவர்களின் வேதாகமம் உண்மையல்ல. பொய்யின் கலப்படம். அதைத் தான் இந்த விவாதக் களம் வெளிப்படுத்தியது.

இந்த முன்னுரையுடன் வாருங்கள்; சகோதரர் நாஷித் அஹ்மத் நடத்திய விவாத உலாவைப் பார்த்து விட்டு வருவோம்.

பைபிள் இறை வேதமா? விவாதம் குறித்த ஒரு பார்வை

நாஷித் அஹமத்

வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு விவாதம் இனிதே நிறைவேறியுள்ளது. கிறிஸ்தவர்களுடனான இந்த விவாதம் பல வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

மற்ற கிறிஸ்தவ பாதிரிமார்களுடன் நடைபெறும் விவாதம் போலல்லாமல், இந்த விவாதத்தில் கலந்து கொண்ட SAN என்று சொல்லப்படக்கூடியவர்கள் பல வகையில் வேறுபட்டு நிற்கின்றனர்.

பொதுவாக, கிறிஸ்தவர்கள் தங்கள் கொள்கை தான் சரி என்றும், பிறரது கொள்கைகள் தவறு என்றும் பொது மேடைகளில் அதிகமாகப் பிரச்சாரம் செய்யும் வழக்கம் உடையவர்களல்லர். தாங்கள் உண்டு, தங்கள் மார்க்கம் உண்டு என்று இருப்பவர்கள் தான்.

ஆனால், இந்த SAN அமைப்பினரும், அதன் தலைவரான ஜெர்ரி தாமஸ் அவர்களும் தங்கள் மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்வதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், பிற மதங்களை, அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கத்தைக் கடுமையாக விமர்சித்தும் சாடியும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஜாகிர் நாயக், மதங்களை ஒப்பீட்டு நோக்கும் அறிவை Comparitive study) பெற்றிருக்கிறார் என்பதை அறிந்து, ஜாகிர் நாயக்கை வீழ்த்த வேண்டும், அவரிடம் எந்த ஞானமும் கிடையாது என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவரை போன்று நாங்களும் Comparitive study செய்துள்ளோம், இஸ்லாம் பொய்யான மார்க்கம் என்பதை அவருடன் நேருக்கு நேரான விவாதம் மூலம் நிரூபிப்போம் என்று பகிரங்கமாக சவால் விடுத்தனர். அதோடு, தாங்கள் விடுத்த விவாத அறைகூவலை ஏற்றுக்கொள்ளாமல் ஜாகிர் நாயக் பின்வாங்கி ஓடி விட்டார் என்று அவர்களது எழுத்துக்களிலும் அவர்கள் நடத்தும் இணையதளத்திலும் செய்தி வெளியிட்டு தாங்கள் தான் சத்திய மார்க்கத்தைச் சொல்கிறோம் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டனர் இவர்கள்.

(உண்மையில், ஜாகிர் நாயக் இவர்களுடன் விவாதிக்க முன்வரவில்லை என்றால், அதற்கான காரணம் என்ன என்பதை இந்த விவாதத்தை முழுமையாகக் கவனிக்கும் அனைவரும் புரிந்து கொள்ளலாம். அது குறித்து இந்த கட்டுரையின் இறுதியில் பார்ப்போம்.)

ஆக, இந்த SAN அமைப்பினர், தங்கள் மதத்தைப் பரப்புகிற தொழிலைச் செய்வதுடன் நிறுத்திக் கொள்ளாமல், இஸ்லாமிய மதத்தையும், இஸ்லாமியர்களையும் அதிக அளவில் சீண்டிப் பார்க்கும் வேலையை பல காலமாக செய்து வந்துள்ளனர். விவாதம் என்கிற பெயரில், இஸ்லாத்தை அதிக அளவில் விமர்சனம் செய்து, கிறிஸ்தவம் தான் தூய்மையான மார்க்கம் என்று நிலைநாட்ட முயல்வது இவர்களால் சர்வ சாதாரணமாக செய்யப்படும் வழிமுறை.

ஜாகிர் நாயக்கின் அமைப்பில் இருந்து விலகி தனி இயக்கம் (IREF) நடத்திக் கொண்டிருக்கும் அவரது மாணவர் இம்ரான் என்பவருக்கும் இந்த ஜெர்ரி தாமசுக்கும் நடந்த விவாதத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

மேலும் கேரளா மாநிலத்தில், அதிகமான திருச்சபைகளை கொண்டவர்களாக தங்களை சொல்லிக் கொள்ளும் இவர்கள், கேரளா இஸ்லாமிய அமைப்புகள் மத்தியிலும் பல விவாதங்களை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதிக்க இவர்கள் ஆயத்தமானார்கள்.

எது இறை வேதம் என்ற தலைப்பில் முதலில் விவாதிப்பது என்று, இவர்கள் இடையே நிகழ்ந்த முதல் கலந்துரையாடலில் முடிவு எடுக்கப்பட்டது. எது இறை வேதம், குர்ஆனா? பைபிளா? என்பதை ஒரே தலைப்பாக வைக்காமல், இரண்டையும் இரண்டு வெவ்வேறு தலைப்புகளாக மாற்றலாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியது.

அந்த அடிப்படையில், பைபிள் இறை வேதமா இல்லையா? என்கிற தலைப்பில் ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும், குர்ஆன் இறை வேதமா இல்லையா? என்கிற தலைப்பில் 28, 29 ஆகிய தேதிகளிலும் விவாதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இது தவிர, இன்னும் ஆறு தலைப்புகள் அடுத்தடுத்த மாதங்களில் விவாதிக்கப்பட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சந்தித்த விவாதங்களில் இந்த விவாதம் முக்கியமான ஒரு வேறுபாட்டைக் கொண்டிருந்தது. தங்கள் வாதங்கள் ஒவ்வொன்றையும் தமிழில் சொல்வதுடன் அதை ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்ய வேண்டும் என்கிற விதி ஒப்பந்தத்தில் உள்ளது என்கிற வகையில், தவ்ஹீத் ஜமாஅத் அன்பர்களுக்கு இந்த விதி புதிய ஒன்று என்றாலும், சத்தியத்தை மேலோங்கச் செய்ய வேண்டும் என்கிற நோக்கில், ஆங்கிலப் புலமை அதிகம் பெற்றிராத தவ்ஹீத் ஜமாஅத்தினர் அதற்கும் தயாரானார்கள்.

விவாதத்தைக் குறித்து அறிந்து வைத்துள்ள எவருக்கும் புரியக்கூடிய ஒரு அடிப்படையான விஷயம், பைபிள் இறை வேதமா என்கிற விவாதம் என்றால், அதில் முஸ்லிம்கள் கேள்வி கேட்கக்கூடியவர்களாகவும், கிறிஸ்தவர்கள் பதில் சொல்லக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதாகும்.

என்ன காரணத்தால் பைபிளை இறை வேதம் என்று சொல்கிறீர்கள்?

பைபிளில் மனிதக் கையாடல் பல இருப்பதாக ஆதாரங்கள் தந்திருக்கிறோமே, இவைகளுக்கு என்ன பதில்?

இவையெல்லாம் கடவுள் வார்த்தையாக இருக்க முடியுமா?

என்றெல்லாம் முஸ்லிம்கள் கேட்கின்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லி, பைபிளை இறை வேதம் தான் என்று நிலைநாட்ட வேண்டிய கடமை கிறிஸ்தவர்களுக்கு உண்டு. இதற்கு ஏற்றாற்போல தான் தலைப்பையும் நாம் ஒப்பந்தத்தின் போது முடிவு செய்திருந்தோம்.

ஆனால், இந்த விவாதத்தின் துவக்கத்தில் இருந்தே, கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்த முறையானது, முஸ்லிம்களை மட்டுமல்லாது அவர்கள் அழைத்து வந்த கிறிஸ்தவப் பார்வையாளர்களையும் கூட வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

ஏனெனில், இரண்டு நாட்கள் நடைபெற்ற விவாதத்தில், துவக்கம் முதல் இறுதி அமர்வு வரை, இன்னின்ன காரணத்தால் தாங்கள் புனிதம் என்று கருதும் பைபிள் இறை வேதம் தான் என்பதை இவர்கள் சொல்லவேயில்லை!

ஒரே ஒரு காரணத்தைக் கூட சொல்லாமல், இரண்டு நாட்களையும் கடத்தினார்கள் என்பது, தங்கள் பரமபிதாவின் நாமத்தைப் போற்றுவார்கள் என்று யாரை நம்பி அந்தப் பார்வையாளர்கள் வந்தார்களோ, அவர்கள் அனைவரையும் மிகுந்த ஏமாற்றமடையச் செய்தது. இதற்கு, இரண்டாம் நாளில் அவர்கள் அணியில் காலியாகி விட்ட கிட்டத்தட்ட 85 இருக்கைகளே சாட்சி பகர்ந்தது.

சரி! பைபிள் இறை வேதமா இல்லையா என்கிற தலைப்பில் பேச வந்து விட்டு, பைபிள் இறை வேதம் தான் என்பதற்கு ஆதாரம் சொல்லாமல், இரண்டு நாட்கள் கடத்துவதற்கும் ஒரு திறமை வேண்டுமா இல்லையா? அந்தத் திறமையை அழகாக அவர்கள் காட்டினார்கள். எப்படி?

தவ்ஹீத் ஜமாஅத் தரப்பில், பைபிளில் இன்னின்ன வசனங்களில், அகோரமான, ஆபாசமான வார்த்தைகளும் கதைகளும் சம்பவங்களும் சொல்லப்பட்டிருக்கின்றனவே! இதை ஒரு மனிதன் சொன்னான் என்று சொன்னாலே எங்களை செருப்பால் அடிக்க வருவார்களே! நீங்கள் என்னவென்றால், இதை இறைவன் சொன்னான் என்று சொல்கிறீர்களே! உங்கள் இறைவன் இவ்வளவு மட்ட ரகமா? என்று அடுக்கடுக்காக பல கேள்விகளும் ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டன.

இவைகளுக்கு முறையான பதில்களைச் சொல்லி, இந்த வசனத்தில் நீங்கள் சொல்வது போல இல்லை என்றோ, அல்லது இந்த வசனம் இப்படி தான் சொல்கிறது, அதற்கு இன்ன விளக்கம் என்றோ சொல்லி, தங்கள் வேத நூலைப் பாதுகாக்கக் கடமைப்பட்டவர்கள், அதற்கெல்லாம் மூச்சு விடாமல், உங்கள் குர்ஆனிலும் தானே விந்து என்கிற வார்த்தை உள்ளது, உங்கள் குர்ஆனிலும் தான் விபச்சாரம் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது, ஹதீஸிலும் தானே இப்படி உள்ளது என்று சிறு பிள்ளை விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தனர்.

அடப்பாவிகளா! உங்கள் பைபிளில், காமக் களியாட்டங்கள், பெண்களின் மார்புகளை மாதுளைப் பழங்களாகச் செய்யும் ஒப்பீடுகள், அண்ணன்-தங்கை தகாத உறவு, கள்ளக்காதல் கதைகள் என்று உங்கள் பைபிள் என்பது ஒரு முழு நீள காமக்கதை புத்தகத்தை ஒத்து இருக்கிறதே என்று கேட்டால், அதற்குப் பதில் சொல்லி தங்கள் தூய்மையை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், குர்ஆனிலும் தானே விந்து என்று வருகிறது, அதிலும் தானே விபச்சாரம் குறித்து பேசப்படுகிறது என்று சொல்கிறீர்களே!

விந்து வந்தால் குளிப்பது கடமை, விந்து வந்தால் சுத்தம் செய்து கொள்ளாமல் தொழுகைக்கு வராதீர்கள், விபச்சாரம் செய்தால் மரண தண்டனை என்று சொல்வது ஆபாசமா? இப்படித் தான் பைபிளில் இருக்கிறது என்று நாங்கள் சொல்கிறோமா?

இதைக் கேட்டால் அதற்கும் பதில் இல்லை. சமாளித்து சமாளித்துப் பார்த்து ஒன்றும் வேலைக்காகாது என்றவுடன், குர்ஆனிலும் தானே அடிமைப் பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளலாம் என்று உள்ளது என்று சொல்லலாயினர்.

பைபிளில் இத்தனை வண்டவாளங்கள் இருக்கின்றன என்று குற்றம் சுமத்தியுள்ள தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு, பதிலைச் சொல்லாமல், குர்ஆனிலும் தானே இருக்கிறது என்று வறட்டு வாதம் புரிந்து கொண்டிருந்தனர் இந்த கிறிஸ்தவர் பாதிரிக்கூட்டம்.

இவ்வாறு சமாளிப்பீர்கள் என்று தெரிந்தே தான், குர்ஆன் இறை வேதமா இல்லையா என்பதை தனித் தலைப்பாக விவாதிப்பதற்கு ஏதுவாக அடுத்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது, அந்த விவாதத்தின் போது குர்ஆனைக் குறித்துக் கேளுங்கள்; இப்போது பைபிளுக்குப் பதில் சொல்லுங்கள் என்று ஒரே முடிவுடன் தவ்ஹீத் ஜமாஅத் இருந்தனர்.

இருப்பினும், ஓரிரு ஹதீஸ்களை அவர்களது மனம் போல திரிபு வேலை செய்து, வார்த்தைகளை மாற்றியமைத்து விவாதத்தில் சமர்ப்பித்த போது, வெகுண்டெழுந்த நாம் இதற்குரிய மூல ஆதாரங்களைத் தர வேண்டும், இல்லையேல், பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆவேசமாக தெரிவித்தோம்.

ஹதீஸ் என்று எதைச் சொன்னாலும் நம்பி விடுவார்கள் என்று தப்புக் கணக்கு போட்டுக் கொண்டு வந்த பாதிரிக்கூட்டம், மார்க்க ஞானத்தில் உச்சாணிக்கொம்பில் இருக்கிற தவ்ஹீத் ஜமாஅத் ஆலிம்களிடம் இவர்களது திரிபு வேலை எடுபடாது என்று ஆனவுடன் செய்வதறியாது திகைத்தனர். பின்னர், சுதாரித்து, நாங்கள் ரஹ்மத் ட்ரஸ்டில் எடுத்தோம் என்று ஒரு ஆதாரத்தை தந்தனர்.

அந்த ஆதாரமாவது உண்மையா என்று பார்த்தால் இல்லை. விடாமல், அது ரஹ்மத் ட்ரஸ்டில் இவர்கள் சொல்லும் பாகத்தில் இல்லை – பொய் சொல்கிறார்கள் என்றோம்.

பின்னர், “நாங்கள் உங்கள் தளத்தில் பார்த்தோம்’ என்றனர். நமது தளத்திலும் அவ்வாறு இல்லை, தற்போது நேரடி ஒளிபரப்பு ஓடிக் கொண்டிருக்கிறது என்பதால் இணையதளத்தைத் திறப்பது முடியாது. தவிர, இதைப் பேசி நேரத்தைக் கடத்தினால், பைபிள் குறித்து நாங்கள் அள்ளிப் போட வேண்டிய இன்னும் பல செய்திகளுக்கு நேரமில்லாமல் போய் விடும், ஆகவே உங்களை அடுத்த வார தலைப்பின் போது கவனித்துக் கொள்கிறேன் என்று கூறி, இந்த விஷயத்தை முடிவுக்குக் கொண்டு வந்தோம்.

அடுத்து, பைபிள் இறை வேதம் தான் என்பதைத் தாங்கள் வைத்திருக்கிற பைபிளின் மூலமே நிரூபிக்கக் கடமைப்பட்டவர்கள், அதைச் செய்யாமல், “உங்கள் குர்ஆனில் தவ்ராத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறதே! இன்ஜீல் குறித்து சொல்லப்பட்டிருக்கிறதே! அவை அனைத்தையும் அல்லாஹ் தான் ஈசா நபிக்கு (இயேசுவுக்கு) கொடுத்ததாகச் சொல்கிறானே! அப்படியானால், இந்தக் கால பைபிளில் மனிதக் கையாடல் உள்ளது என்று சொல்வது, அல்லாஹ், தவ்ராத்தையும் இன்ஜீலையும் பாதுகாக்கவில்லை என்று தானே ஆகிறது” என்று கேள்வி வைத்தனர்.

ஆனால், இந்த வாதமாவது சரியா என்று பார்த்தால் அதுவும் சரியில்லை!

“பைபிள் இறை வேதம் தான் என்பதை, பைபிளைக் கொண்டே நிரூபிக்க வேண்டியவர்கள், அதை கூட குர்ஆனைக் கொண்டு நிரூபிக்கிற கட்டாயத்தில் தான் உள்ளனர்” என்று ஒரு போடு போட்டோம்

மேலும், குர்ஆனில் அல்லாஹ் சொல்லியுள்ள தவ்ராத் மற்றும் இன்ஜீலுக்கும் இன்று உங்கள் கைகளில் இருக்கிற பைபிளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும்

“இது உங்கள் சுய கருத்து, இதற்கான ஆதாரத்தைத் தர முடியுமா?’ என்று மறு வாதம் வைத்தவர்களை நோக்கி, “எந்தக் குர்ஆனில் தவ்ராத்தையும் இன்ஜீலையும் குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறதோ, அதே குர்ஆனில் தான், ஈசா நபிக்கு வழங்கப்பட்ட இன்ஜீலுக்கான சில அடையாளங்கள் குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது” என்று வாதிக்கப்பட்டது.

ஈசா நபிக்கு வழங்கப்பட்ட அந்த இன்ஜீலில் இருப்பதாக ஓரிரு வசனங்களை அல்லாஹ் குர்ஆனில் மேற்கோள் காட்டுகிறான் என்று அதற்குரிய வசனங்களை வாசித்தோம்.

இந்த வசனம், நீங்கள் வைத்திருக்கிற பைபிளில் இருக்கிறது என்று காட்டி விட்டால், அந்தக் கால தவ்ராத், இன்ஜீலும் இன்றைய பைபிளும் ஒன்று தான் என்பதை நானே ஒப்புக் கொள்கிறேன் என்று அறைகூவல் விடுக்கப்பட்டது.

இதைச் சற்றும் எதிர்ப்பார்க்காத பாதிரிகள், மீண்டும் தலைப்பைத் திசை திருப்பி,  “இதுதான் பைபிள்’ நூலில் அது தவறு, இது தவறு என்று சம்பந்தமில்லாமல் பேசத் துவங்கினர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், குர்ஆனில், தவ்ராத் குறித்தும் இன்ஜீல் குறித்தும் எந்த வசனதிலெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறதோ, அவைகளை எல்லாம் நீண்ட பட்டியலாக தயாரித்துக் கொண்டு வந்து, ஒவ்வொரு வசனத்தையும் வாசித்து முதல் கேள்வி, இரண்டாம் கேள்வி என்று பட்டியல் போட்டனர்.

“நீங்கள் ஆயிரம் கேள்விகள் என்று பட்டியல் போட்டாலும், அதன் மூலம் நீங்கள் எடுத்து வைக்கும் வாதம் ஒன்றே ஒன்று தான். குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கிற தவ்ராத்தும் இன்ஜீலும் நாங்கள் இன்று வைத்திருக்கும் பைபிளும் ஒன்று என்பது தான் நீங்கள் சொல்ல வருகிற விஷயம். அது தவறு என்று நிரூபித்து விட்டோம். நீங்கள் அடுக்கிய பதினைந்து கேள்விகளின் நிலை இது தான்” என்று மிக எளிதாக விளக்கமளித்தனர் தவ்ஹீத் ஜமாத்தினர்.

முதல் நாளின் இறுதி அமர்வில், சகோ. அப்பாஸ் அலியும், சகோ. செய்யது இப்ராஹீமும் பைபிளில் உள்ள ஆபாசங்களை ஒரு பக்கம் பட்டியல் இட, மற்றொரு பக்கம், சகோ. கலீல் ரசூல் அவர்கள், பைபிளின் மூலப்பிரதிகள் எவ்வாறு இருந்தன? ஒவ்வொரு நூற்றாண்டிலும் அது எவ்வாறு மனிதக் கையாடல் மூலம் திருத்தப்பட்டன? எத்தனை எத்தனை முரண்பாடுகள் தோன்றின? என்பதையெல்லாம் தக்க ஆதாரங்களுடனும், மூலப் பிரதிகளை ப்ரஜக்டரின் மூலம் காண்பித்தும் அழகிய முறையில் விளக்கினார்.

ஏற்கனவே இந்த பாதிரிகள் எதிர் கொண்ட விவாதங்களில் இப்படிப்பட்ட ஆதாரங்களை எதிர் கொள்ளாததால், தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த ஆழமான ஆதாரங்களைக் கண்டு பாதிரிகள் குலைநடுங்கத் துவங்கினர் என்பது, விவாதத்தைக் கண்டு வந்த அனைவருக்கும் புரிய துவங்கியது.

எதற்கும் பதில் இல்லை என்று ஆனவுடன், இப்படியெல்லாம் ஆதாரம் என்ற பெயரில் சொல்வீர்கள் என்று எங்களுக்குத் தெரியும், உங்களையெல்லாம் விட மிகப் பெரிய முஸ்லிம் அறிஞர்கள் எழுதிய “பைபிளில் நூறு தவறுகள்” போன்ற நூல்களுக்கு எல்லாம் பல மறுப்பு நூல்கள் இருக்கின்றன. அவைகளையும் கொண்டு தான் வந்துள்ளோம் என்றனர் பாதிரிகள்.

சரி, மறுப்பு நூல்களைத் தான் கொண்டு வந்திருக்கிறீர்களல்லவா? அப்படியானால், அந்த நூல்களிலிருந்து வாசித்து எங்களுக்கு மறுப்பு தர வேண்டியது தானே என்று தவ்ஹீத் ஜமாஅத்தினர் கேட்டனர். அதற்கும் பதில் இல்லை!

“உங்கள் சுய சிந்தனையை உபயோகித்துத் தான் எங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்ல இயலவில்லை. குறைந்த பட்சம், வேறு அறிஞர்கள் எழுதிய நூல்களிலிருந்தாவது மறுப்பு தர வேண்டியது தானே? அதையும் உங்களால் செய்ய இயலவில்லை என்றால் இதன் பொருள் என்ன? உங்களிடம் மறுப்பு இல்லை! எந்த முஸ்லிம் அறிஞர்கள் பைபிளில் நூறு தவறுகள் என்று நூல் எழுதியதாகச் சொல்கிறீர்களோ, அந்த நூலில், நாங்கள் இப்போது காட்டும் குற்றச்சாட்டுக்கள் இல்லை! அதனால் தான் எங்களின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் அறிஞர்களின் மறுப்பு நூல்களில் பதிலும் இல்லை” என்று ஆணித்தரமாக வாதம் வைத்தனர் தவ்ஹீத் ஜமாஅத்தினர்.

இரண்டாம் நாளின் இறுதியில், “பைபிளில் இருந்து நீங்கள் தான் எந்த ஆதாரத்தையும் காட்டி அதை இறை வேதம் என்று நிரூபிக்கவில்லை,

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.

மாற்கு 16:17, 18

கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப்பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 17:20

அதற்குக் கர்த்தர்: கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.

லூக்கா 17:6

இந்த வசனங்களைக் காட்டி, எவருக்காவது கடுகளவு இறை நம்பிக்கை இருக்கிறதோ, அவர் “பூ’ என்று ஊதினால் மலை பறந்து விடும், கொடிய விஷம் கொண்ட சர்ப்பம் (பாம்பு) தீண்டினாலும் சாக மாட்டார், கொடிய விஷத்தை அருந்தினாலும் உயிர் பிழைத்துக் கொள்வார் என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது.

இங்கு வந்திருக்கிற அனைவருக்கும் கடுகளவாவது இறை நம்பிக்கை இருக்கும். எனக்கு மலையை எல்லாம் இங்கு கொண்டு வர வேண்டாம். இதோ! இந்த பேப்பர் வெயிட் – இதை “பூ’ என்று ஊதித் தள்ளி விடுங்கள், நாங்கள் பைபிளை இறை வேதம் என்று ஒப்புக் கொள்கிறோம் என்று தெரிவித்தோம்.

அதோடு நிறுத்திக் கொள்ளாமல், கையோடு ஒரு விஷ பாட்டில் ஒன்றையும் எடுத்துக் கொண்டு வந்த நாம், அதை ஜெர்ரி தாமஸ் அணியினரிடம் கொடுத்து, “இதை அருந்தி விட்டு உயிருடன் இருந்து காட்டுங்கள்” என்றோம்.

இந்நேரம் வயிற்றில் புளியைக் கரைத்தது அவர்களுக்கு! ஆத்திரத்தில் எடுத்துக் குடித்தாலும் குடித்து விடுவார்கள் என்று தான் நாமும் எண்ணினோம். ஆனால், அவர்கள் வழக்கம் போல, உங்கள் குர்ஆனிலும் ஹதீஸிலும், நோய் ஏற்பட்டாலோ, எந்த விஷம் உடம்பில் ஏறினாலோ, இந்த பேரீச்சம் பழத்தை ஒற்றைப்படை எண்ணிக்கையில் சாப்பிட்டால் உயிர் பிழைப்பார் என்று இருக்கிறதே, நீங்களே இந்த விஷத்தையும் குடித்து இந்த பேரீச்சம் பழத்தையும் சாப்பிட்டுக் காட்டுங்கள் என்று திருப்பிக் கொடுத்தார்.

இதை ஏற்கனவே எதிர்பார்த்த தவ்ஹீத் ஜமாத்தினர், “நீங்கள் ஹதீஸ் என்று எதை சொல்கிறீர்களோ, அது ஹதீஸ் அல்ல, அது பொய், கட்டுக்கதை! இதை அடுத்த வாரத் தலைப்பில் கேளுங்கள், அக்கு வேறு ஆணி வேறாக அன்றைக்கு விளக்குகிறோம். அதே நேரம், இது தான் உங்கள் வாதம் என்றால், நாங்கள் எப்படி இந்த ஹதீசை பொய் என்று அறிவிக்கிறோமோ, அதே போன்று பைபிளையும் பொய் என்று அறிவித்து விடுங்கள், பிரச்னையை முடித்துக்கொள்ளலாம்” என்றனர்.

இதற்குப் பதில் சொன்னவர்கள், பைபிளில், இயேசுவை யாரும் பரீட்சித்துப் பார்க்கக் கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே நாங்கள் இந்தப் பரீட்சைக்கு வர மாட்டோம் என்று பின் வாங்கினர்.

விடாமல் சுற்றி வளைத்து “இயேசுவை நாங்கள் பரீட்சிக்கவில்லை, உங்களைத் தான் பரீட்சிக்கிறோம், இது இயேசுவின் வார்த்தையா அல்லது நீங்கள் திரித்துள்ளீர்களா என்பதைத் தான் பரீட்சிக்கிறோம்” என்று பதில் அளிக்கப்பட்டது.

அதோடு, எந்த பைபிள் வசனத்தில், இயேசுவை பரீட்சித்துப் பார்க்கக் கூடாது என்று இயேசுவே சொல்கிறாரோ, அதே வசனத்தின் கடைசியில், இயேசு அந்தப் பரீட்சையில் கலந்து கொள்கிறார் என்று தான் வருகிறது என்பதையும் சுட்டிக் காட்டினோம்.

அதாவது, என்னை பரீட்சிக்காதீர்கள் என்று சொல்லிக் கொண்டே, அந்தப் பரீட்சையில் கலந்து கொண்டுள்ளார் இயேசு. அதே போன்று, எங்களைப் பரீட்சிக்காதீர்கள் என்று சொல்லிக் கொண்டே அந்த விஷத்தை நீங்கள் அருந்தத் தான் வேண்டும். பைபிளும் அருந்தத் தான் சொல்கிறது என்று ஒரே போடாகப் போட்டனர் தவ்ஹீத் ஜமாஅத் அணியினர்.

வெலவெலத்துப் போன பாதிரிகூட்டம், செய்வதறியாது திகைத்த நிலையிலேயே விவாதத்தின் இறுதி அமர்வு வந்தது.

இறுதியாகப் “தலைப்பை நிலைநாட்ட வேண்டி ஒரே ஒரு ஆதாரத்தைக் கூட எதிர் அணி வைக்காமல் இருப்பது மிகவும் ஆச்சர்யமான ஒரு விஷயமாக உள்ளது. நாங்கள் எதிர்கொண்ட விவாதங்களிலேயே இந்த விவாதம் தான் மிகவும் அதிசயமானது”

“பைபிளில் உள்ள ஆபாசங்கள், முரண்பாடுகள், பொய்கள், கட்டுக்கதைகள் என்று எத்தனை விஷயங்களை அள்ளிப் போட்டோம், அவைகளுக்கெல்லாம் பதிலைச் சொல்லாமல் உங்கள் குர்ஆனிலும் தானே இப்படி உள்ளது, ஹதீஸிலும் தானே அப்படி உள்ளது என்று இப்படி சமாளிக்கிறீர்களே! குர்ஆன் குறித்தோ, ஹதீஸ் குறித்தோ கேட்பதாக இருந்தால் அடுத்த வாரம் வாருங்கள், இன்றைக்கு நீங்கள் தலை குனிந்து நிற்பதைப் போன்று அன்றைக்கு நாங்கள் தலை குனிந்து நிற்க மாட்டோம். ஆணித்தரமான பதில்களைத் தருவோம்” என்று கூறி முடிக்கப்பட்டது..

ஆங்கிலத்தில் Clean Sweep என்று சொல்கின்ற அளவிற்கு, முழுமையான வெற்றியை நமக்குத் தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

இந்த விவாதத்தின் மூலம் ஏகத்துவவாதிகளுக்குச் சில படிப்பினைகள் உள்ளன.

இது போன்ற விவாதத்தைச் சந்திக்க தவ்ஹீத் ஜமாஅத் முன்வந்துள்ள நிலையில், ஜாகிர் நாயக் போன்ற மற்ற இஸ்லாமிய அறிஞர்கள் ஏன் பின்வாங்கினர் என்பதற்கான காரணத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய அடிப்படைக் கொள்கை என்றால் என்ன என்பதை அதன் ஆணி வேரிலிருந்தே தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிற நம்மைப் போன்ற ஒருவரால் தான் “குர்ஆன் குறித்தோ, ஹதீஸ் குறித்தோ எந்தக் கேள்வி என்றாலும் கேள்’ என்று துணிச்சலாக விவாதத்திற்கு அழைக்க முடியும். காரணம், குர்ஆன் எப்படி இறை வார்த்தையோ, அதே போன்று ஹதீசும் இறை வார்த்தை தான் என்பதை தெளிவாகப் புரிந்து வைத்துள்ள நாம், இரண்டும் சமமான அந்தஸ்தில் உள்ளவை அல்ல என்பதையும் சேர்த்தே புரிந்து வைத்துள்ளோம். இதன் மூலம் குர்ஆனுக்குரிய முக்கியத்துவமும், ஹதீசுக்குரிய முக்கியத்துவமும் ஒரே நேர்கோட்டில் வைத்து அலசப்பட முடியாது என்பதையும் நாம் அறிந்து வைத்துள்ளோம்.

குர்ஆனைப் பாதுகாக்க நபி (ஸல்) அவர்களின் அன்றைய ஸஹாபாக்கள் அத்தனை பேரும் ஒன்று திரண்டு செய்த முயற்சிகளைப் போன்று ஹதீஸ்கள் விஷயத்தில் செய்யவில்லை. எனவே, ஹதீஸ் என்ற பெயரில் சில பொய்களும் கட்டுக்கதையும் கூட இடைச்செறுகல்களாக மார்க்கத்தின் உள்ளே நுழைய ஆரம்பித்தன.

இந்தத் தூய மார்க்கத்தை அழித்து ஒழிப்பதையே தங்கள் ஒரே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் அல்லாஹ்வின் எதிரிகள், இது போன்ற கட்டுக்கதைகளை ஹதீஸ் என்று கூறி நம்மை நம்ப வைக்க முயற்சி செய்தனர். இதன் மூலம், உண்மையான இந்த மார்க்கத்தில் களங்கத்தை ஏற்படுத்தி விடலாம் என்று கணக்குப் போட்டனர்.

அவர்களின் அந்த கணக்கிற்குப் பலியான நம் சமூகத்தில் சிலர், ஹதீஸ் என்கிற பெயரில் எதைச் சொன்னாலும் அதை நம்புவதற்குத் தயாராயினர்.

அந்த வகையில், நபியவர்களின் மரணத்திற்குப் பிறகு குர்ஆனிலேயே சில வசனங்கள் மாற்றப்பட்டு விட்டன என்று ஹதீஸில் இடைச்செறுகலாகச் சேர்க்கப்பட்டதையும் ஹதீஸ் என்று நம்பினர்.

அல்லாஹ்வுக்கு இணையாக நபிமார்களுக்கும் மறைவான ஞானம் உண்டு என்று கூறி, குர்ஆனுக்கு எதிராக யுத்தம் செய்தாலும், அதையும் ஹதீஸ் என்றே நம்பினர்.

நபி (ஸல்) அவர்கள் அந்நியப் பெண்களுடன் தனியாக இருந்தார்கள் என்று சில பொய்களைக் கட்டவிழ்த்து விட்டாலும், அதையும் ஹதீஸ் என்றே நம்பினர்.

இன்னும் சொல்லப்போனால், நபி (ஸல்) அவர்கள் ஆறு மாதம் பைத்தியமாக இருந்தார்கள் என்று சொன்னாலும் கூட, சொல்லப்படும் செய்தியைக் குறித்து சிந்திக்காத இவர்கள், ஹதீஸ் நூல்களில் அல்லவா இது பதியப்பட்டுள்ளது, ஆகவே இதுவும் ஹதீஸ் தான் என்று நம்பினர்.

சொல்லப்படுகிற செய்தி உண்மையா, அது குர்ஆனுக்கு முரணா? அது நபிகளாரின் தன்மைக்கு உகந்த செய்தியா என்றெல்லாம் தங்கள் சிந்தனையை செலுத்தாமல், தாங்கள் இமாம்களாக நம்பிக் கொண்டு வந்தவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறது என்ற ஒரே அளவுகோலைக் கொண்டு பார்க்கலாயினர்.

இத்தகையோரால், குர்ஆனுக்கு எதிரான விமர்சனங்கள் என்று கூறி தொடுக்கப்படும் மேற்கண்ட கேள்விகளை, கிறிஸ்தப் பாதிரிகளால் எழுப்பப்பட்ட கேள்விகளை எதிர் கொள்ள இயலுமா? நிச்சயமாக இயலாது.

குர்ஆன் மட்டும் தான் மார்க்கம், குர்ஆனை உறுதி செய்கிற, குர்ஆனின் வரம்புகளைத் தாண்டாத ஹதீஸ்கள் மட்டுமே ஏற்கத்தக்கவை, இந்த இரண்டு அளவுகோல்கள் அல்லாத வேறு எதுவும் இஸ்லாமாகாது என்கிற கொள்கையை யார் கொண்டிருக்கிறாரோ, அவர்களால் தான் நெஞ்சுறுதியுடன் குர்ஆன், ஹதீஸ் குறித்த எந்த விவாதத்திற்கும் தயாராக முடியும் என்பதற்கு நடந்து முடிந்த இந்த விவாதமே சாட்சி.

எது இறை வேதம்? பைபிளா? குர்ஆனா? என்று ஒரே தலைப்பாக விவாதம் செய்வதையே வழக்கமாகக் கொண்ட நம் சமூகத்தினர் மத்தியில், பைபிள் குறித்த அலசலை தனித் தலைப்பாகவும், குர்ஆன் குறித்த அலசலை தனித் தலைப்பாகவும் தவ்ஹீத் ஜமாஅத் பிரித்து விவாதிக்க அழைத்ததன் மூலம், எதிர் அணியினருக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்த முடிந்தது என்பதும் இந்த விவாதத்தின் மூலம் தெரிகின்ற உண்மை.

ஆக, எல்லா வகையிலும் இந்த விவாதத்தின் மூலமாக இஸ்லாமிய சமுதாயத்தை தலை நிமிரச் செய்திருக்கிறான் அந்த ஏக இறைவன்! எல்லாப் புகழும் அவனுக்கே!