தீண்டாமைக்குத் தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே!

தீண்டாமைக்குத் தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே!

பரமக்குடியில் 7 பேரின் உயிரைப் பலி கொண்ட இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு அடிப்படைக் காரணம், சாதித் தகராறு தான் என்று தமிழக முதல்வரே சட்டமன்றத்தில் அறிவிக்கின்றார்.

சாதிப் பாகுபாட்டின் காரணமாகவும், தீண்டாமையின் காரணமாகவும் இந்தியாவில் தலித் மக்கள் தாக்கப்படுவதென்பது தனி நிகழ்வல்ல! இது அன்றாடம் நடைபெறும் அநியாயமும் அக்கிரமும் ஆகும்.

1968ம் ஆண்டு கீழ் வெண்மணி என்ற கிராமத்தில் கூலியை உயர்த்திக் கேட்டார்கள் என்ற காரணத்திற்காக 44 தலித்துக்களை, உயர்சாதி நிலச் சுவான்தார்கள் எரித்துக் கொன்ற வடு இன்னும் ஆறவில்லை. அதன் நினைவு தினம் டிசம்பர் 25ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

1992ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி தர்மபுரி மாவட்டம் வச்சாத்தி என்ற கிராமத்தில் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த 18 பெண்கள் காவல்துறையினரால் கற்பழிக்கப்பட்ட வழக்கு தற்போது தான் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.

1997ஆம் ஆண்டு தென்மாவட்டங்களில் நடைபெற்ற சாதிக் கலவரங்கள்

1999ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர் பேரணியில் காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் தாமிரபரணி ஆற்றில் 17 பேர் கொல்லப்பட்டனர்.

இப்படி தமிழகத்தில் நடைபெற்ற அநியாயங்களை மட்டும் பட்டியல் போட்டால் கூட இந்த ஏடு தாங்காது. அனைத்திந்திய அளவில் எனும் போது அதை அளவிடவே முடியாது.

2002ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று ஹரியானா மாநிலத்திலுள்ள துலினி கிராமத்தில், செத்த மாட்டின் தோலை உரித்தார்கள் என்பதற்காக 5 தலித்துகள் அடித்துக் கொல்லப்பட்டனர்.

உதாரணத்திற்கு ஒன்றிரண்டு சம்பவங்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் இந்தக் கொடூரங்கள் அனுதினமும் நடந்தேறிய வண்ணம் இருக்கின்றன.

அடிப்படைக் காரணங்கள்

இதற்கு அடிப்படைக் காரணம் என்ன? இந்துக்களின் வேத நூலான மனு சாஸ்திரம் தான். அது பிராமணரை உயர் குலத்தோர் என்று சித்தரித்தது.

பிரம்மா தம் முகத்திலிருந்து பிரம்மர்களையும், தோளிலிருந்து சத்திரியர்களையும், தொடையில் இருந்து வைசியர்களையும், காலிலிருந்து சூத்திரர்களையும் பிறப்பித்தார். (மனு தர்மம் 2:35)

பிராமணரைச் சூத்திரர் கையாலேனும், கருவியாலேனும் தாக்கினால் பிராமணரை எந்தெந்த இடத்தில் அடித்தானோ, அடித்தவனின் உறுப்புகளைக் குறைப்பதே தக்க தண்டனையாகும்.

பிராமணனுக்குச் சமமாக அகங்காரத்தோடு அமர்கின்ற சூத்திரனுக்கு உயிருக்குத் தீங்கற்ற தண்டனை தருக. இடுப்பில் சூடு போடுக. உட்கார்ந்த உறுப்பை அறுத்திடுக. ஊரை விட்டும் அவனைத் துரத்துக.

பிராமணன் மீது காறி உமிழ்பவன் உதடுகளை அறுத்திடு. மூத்திரம் பெய்தால் குறியை வெட்டு. மலத்தை வீசினால் ஆசனப் பகுதியை அறுத்து விடு.

சூத்திரன் பிராமணனின் குடுமி, மீசை, தாடி, கழுத்து, குறி முதலியவற்றைப் பற்றியிழுத்தால் அவன் கையைத் துண்டித்து விடுக.

சூத்திரன் பிராமணனைக் கடுமையாக வைதால் சூத்திரன் நாக்கை அறுத்தெறியவும். பிராமணனின் குலம் குறித்து இழித்துரைத்தால் பத்து அங்குல நீளக் கம்பியைப் பழுக்கக் காய்ச்சி சூத்திரன் வாயினுள் திணிக்க வேண்டும்.  (மனு தர்மம் 9:263-267)

வேதமறிந்த பிராமணர்க்குப் பணிவிடை செய்வதே சூத்திரர் தர்மம். சூத்திரர்க்கு அதுவே மோட்சப் பாதை.  (மனு தர்மம் 10:276)

பிராமண, சத்திரிய, வைசியர்க்கு ஒருவரில்லாவிடில் அடுத்தவருக்குத் தொண்டு புரிவதே சூத்திரருக்குத் தர்மம் ஆகும். (மனுதர்மம் 10:277)

இழி பிறப்பாளன் ஒருவன் பிராமணப் பணியைப் புரியும் போதும் அவன் இழி பிறப்பாளன் தான். இழி தொழில் யாது புரிந்தாலும் பிராமணன் ஒரு போதும் இழி பிறப்பாளன் ஆகான். அவன் பிறப்பு உயர் பிறப்பு தான். பிரமனின் ஆணை அவ்வாறு.  (மனு தர்மம் 11:33)

பிராமணனுக்கு மங்களம், சத்திரியனுக்கு பலம், வைசியனுக்குச் செல்வம், சூத்திரனுக்கு அவனது அடிமை நிலை தோன்றும்படியான பெயர்களைச் சூட்ட வேண்டும். (மனு தர்மம் 3:23)

மக்களை இப்படி வர்ணாஸ்ரம அடிப்படையில் பல கூறுகளாகப் பிரித்து வைத்திருப்பதால் தான்  தீண்டாமை எனும் நுகத்தடியில் இந்தியா சிக்கித் தவிக்கின்றது.

பிராமணர்கள், சூத்திரப் பெண்களைத் திருமணம் முடிக்கக் கூடாது.

சூத்திரர்கள் கல்வி கற்கக் கூடாது; மீறிக் கற்றால் அவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்.

உயர்ஜாதிக்காரர்களின் தெருக்களில் நாய்கள், பன்றிகள் செல்லலாம்; ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்லக் கூடாது.

உயர்ஜாதிக்காரர்களின் குளத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குளிக்கக் கூடாது; குளத்தில் தண்ணீர் அள்ளக் கூடாது.

தாழ்த்தப்பட்டவர்கள் வேத மந்திரங்கள் ஓதக் கூடாது; பூஜை செய்யக் கூடாது; ஏன்? கோயில்களுக்குள் நுழையவே கூடாது.

இப்படி ஆண்டாண்டு காலம் மக்களை மனு தர்ம வர்ணங்களின் அடிப்படையில் பிரித்து வைத்துள்ளனர். தொட்டால் தீட்டு! பட்டால் பாவம் என்று தீண்டாமை தலைவிரித்தாடுகிறது. இது தான் இந்தியாவின் நிலை!

தீர்வு காண வந்த திருத்தவாதிகள்

இந்தியாவில் புறையோடிப் போன இந்தத் தீண்டாமையைக் களைய, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த, பிற இனங்களைச் சார்ந்த சீர்திருத்தவாதிகள், புரட்சியாளர்கள் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தனர்.

  1. நாத்திகம்

கடவுள், விதி, பாவம், புண்ணியம், வேதம் போன்றவற்றின் மீது கொண்ட நம்பிக்கையும் தீண்டாமைக்கு ஒரு காரணம் என்று முடிவு செய்து, கடவுள் கிடையாது என்று கூறி நாத்திகத்தின் பால் சென்றார் ஈ.வெ. ராமசாமி.

கடவுள் கிடையாது; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; காட்டு மிராண்டி என்று அவர் தமிழக மக்களிடம் போதிக்கலானார். சாதிய ஒழிப்புக்கு அவர் எடுத்துக் கொண்ட இந்த ஆயுதத்திற்கு, படித்தவர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. பல அறிஞர்கள் இந்தக் கொள்கையில் விரைவாகக் கவரப்பட்டனர்.

இதற்காக இவர் திராவிடர் கழகம் என்ற அமைப்பைக் கண்டார். அண்ணாத்துரை, நெடுஞ்செழியன், எம்.என். நடராஜன் போன்றோர் இந்த இயக்கத்தில் ஐக்கியமாயினர். தமிழகமெல்லாம் இந்தத் தீயைக் கொண்டு சென்றனர்.

புரட்சித் தீயில் பொசுங்கிய புராணங்கள்

தீண்டாமைக்கு எதிராக அவர்கள் கொளுத்திய புரட்சித் தீயில் புராணங்கள் பொசுங்கின. அவர்களின் எரிமலைப் பேச்சுக்களில் இதிகாசங்கள் எரிந்தன. பூணூல் போட்ட பார்ப்பனர் இவர்களது பொறி பறக்கும் பேச்சில் பொரிந்து போனார்கள்.

“பாம்பையும் பார்ப்பனனையும் கண்டால் பாம்பை அடிக்காதே! பார்ப்பனனை அடி!” என்ற பெரியாரின் பேச்சின் வீரியத்தால் பாம்பு விஷத்தை விடவும் கொடிய விஷமான ஆதிக்க வெறி அடங்கியது. அண்ணாத்துரை எழுதிய ஆரிய மாயை என்ற நூல் ஆரியத்தை அரவமில்லாமல் ஆக்கியது. நாத்திகக் கொள்கை இந்த வகையில் ஓரளவு பலனளித்தது; சாதி ஒழிப்பு இதன் மூலம் நடைபெற்றது.

சாதிக் கொடுமை ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று! ஆரியம் வாழ்வதற்கும், ஆள்வதற்கும் அஸ்திவாரமாக இருக்கும் வர்ணாஸ்ரம தர்மம் துடைக்கப்பட வேண்டும்; தூக்கியெறியப்பட வேண்டும். ஆனால் அதற்காகக் கடவுள் இல்லை என்ற கொள்கையை ஏற்க முடியுமா? என்று நாத்திகக் கொள்கையைப் பலரால் ஏற்க முடியவில்லை. அத்துடன் திராவிடர் கழகத்தில் பிளவு ஏற்பட்டு தி.மு.க. உருவானது. அதிலிருந்து அ.தி.மு.க. உருவானது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கொள்கை பின்னுக்குப் போனது. ஆட்சியைத் தக்க வைப்பது தான் அதன் குறியானது. இறுதியில், ஆரியத்தை வீழ்த்தப் புறப்பட்ட திராவிடம், ஆரியத்திடம் தோற்றுப் போனது. ஆம்! ஆரிய பி.ஜே.பி.யிடம் கூட்டணி வைத்து, செயல்பாட்டில் மட்டுமல்ல! சிந்தனையளவிலும் ஆரியமெனும் ஆக்டோபஸிடம் மாட்டிக் கொண்டது.

தீண்டாமையை ஒழிப்பதற்கு நாத்திகம் என்ற வாகனத்தில் புறப்பட்டு வந்த திராவிட இயக்கங்கள் அரை நூற்றாண்டு காலத்திற்குள் சாதியத்தை உயிர் மூச்சாகக் கொண்ட ஆரியத்திடம் சரணாகதி அடைந்தன. அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் இயற்றத் தான் முடிந்ததே தவிர அனைவரும் பிராமணர் ஆகலாம் என்ற மாற்றத்தைத் தர முடியாமல் ஆனது.

  1. கல்வி

தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியறிவு பெற்று விட்டால் சாதியம் கரைந்து விடும் என்று கருதி தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக் கண் திறப்பதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் புரட்சியாளர்கள், புதிய சிந்தனைவாதிகள் செய்தனர்.

காலங்காலமாக அழுத்தப்பட்ட இந்த மக்கள் ஏற்கனவே முன்னேறிய சமுதாயத்தவருடன் போட்டி போட்டுக் கொண்டு முன்னேற முடியாது. அதற்கு இட ஒதுக்கீடு அவசியம் என்று கருதி இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தனர்.

நாடு விடுதலை பெற்று அரை நூற்றாண்டைத் தாண்டி விட்டது. கல்வியாலும் தீண்டாமை ஒழிந்தபாடில்லை; ஒழியப் போவதுமில்லை. அவர்கள் கல்வியறிவு பெற்றது அந்தச் சமூகத்தில் கவுரவம் பெறுவதற்கு வழிவகுக்கவில்லை; அவர்கள் களப்பலி ஆவதற்குத் தான் வழிவகுத்திருக்கின்றது. அதற்கு எடுத்துக்காட்டு தான் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிர்ப்பலிகள். எனவே கல்வியறிவு பெற்றுவிட்டால் சாதியம் ஒழிந்து விடும் என்று நாம் கனவு காண முடியாது.

  1. பொருளாதாரம்

தாழ்த்தப்பட்டவர்கள் பொருளாதார வளர்ச்சி பெற்று விட்டால் சாதியம் ஒழிந்து போகும் என்று கருதி அவர்களது பொருளாதார முன்னேற்றத்திற்கு அரசாங்கத்தின் அனைத்து வாசல்களும் திறக்கப்பட்டன; வாய்ப்புகள் வழங்கப்பட்டன. தாழ்த்தப்பட்ட மக்களில் இன்று பொருளாதாரத்தில் சிகரத்தைத் தொட்டவர்கள் இருக்கிறார்கள்; இமயத்தில் ஏறியவர்களும் இருக்கிறார்கள்.

என்ன தான் பொருளாதார வளர்ச்சி பெற்றிருந்தாலும் அவர்கள் ஒரு பிராமண வீட்டில் போய் திருமணம் செய்ய முடியுமா? பிராமண ஆச்சாரம் அவர்களிடத்தில் சம்பந்தம் கொள்ள அனுமதிக்குமா? ஆசீர்வதிக்குமா? ஒருபோதும் அனுமதிக்காது.

ஒரு தாழ்த்தப்பட்டவரிடம் சரியான பண வசதியிருக்கலாம். ஆனால்  அதன் மூலம் பிராமண குடும்பத்தில் சம்பந்தம் பண்ண உதவாது. எனவே இந்த வகையில் பொருளாதார முன்னேற்றத்தினால் சாதியம் ஒழிந்து விடாது; சமூக அந்தஸ்து கிடைத்து விடாது.

  1. ஆட்சியதிகாரம்

இவ்வளவு காலம் அடங்கிப் போன மக்களிடம் ஆட்சி, அதிகாரம் வந்து விட்டால் இந்த இழிநிலை மாறிப் போய் விடும்; தீண்டாமையெனும் கோட்டை தகர்ந்து போய் விடும் என்றெண்ணி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சிகள் உயர் பதவிகள் அளித்தன. இட ஒதுக்கீட்டிலும் பதவிகள் வழங்கப்பட்டன. ஆனால் அவற்றால் எதிர்பார்த்த தீர்வைத் தர முடியவில்லை. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்பவர், இந்திரா காந்தி அமைச்சரவையில் இராணுவ அமைச்சராகப் பணி புரிந்த பாபு ஜெகஜீவன் ராம் அவர்கள்.

இராணுவ அமைச்சர் என்பது இந்தியாவின் மிகப் பெரிய பொறுப்பாகும். இப்படிப்பட்ட பொறுப்பை வகித்த ஒருவர், சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்; ஒரு தாழ்த்தப்பட்டவர் அந்தச் சிலையைத் திறந்து வைத்ததால் அது தீட்டுப்பட்டு விட்டது என்று கூறி உயர்ஜாதிக்காரர்கள் கங்கை நீரால் அதைக் கழுவினார்கள். இந்த நிகழ்வை இந்தியா மறந்திட முடியுமா?

இங்கே ஆட்சி, அதிகாரத்தில் இருந்து விட்டால் தீண்டாமை தொலைந்து விடும் என்பது தொலைவான கருத்து என்பதை நாம் உணரலாம். எனவே அமுக்கப்பட்ட ஓர் இனம் ஆளும் வர்க்கமாகி விட்டால் அதற்கு அந்தஸ்து வரும்! ஆனால் தீண்டாமை அகலாது; அழியாது என்பதற்கு ஜெகஜீவன் ராமின் நிகழ்ச்சி சிறந்த எடுத்துக்காட்டு!

இட ஒதுக்கீடு முறையில் தலித்துகளுக்கு ஒதுக்கப்படும் தனித் தொகுதிகளில் கூட பார்ப்பனர்களைத் தலைவர்களாகக் கொண்ட கட்சியினர் ஜெயித்து விடுகின்றார்கள். அதன் பின் அவர்கள் இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிராகவே போராடுகின்றார்கள். இது தான் அரசியலில் இட ஒதுக்கீடு பெற்ற தலித்துகளின் நிலை.

  1. கலப்புத் திருமணம்

கலப்புத் திருமணம் செய்தால் தீண்டாமை ஒழிந்து விடும் என்று கூறி அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதுவும் எடுபடாமல் போனது.

தமிழகத்தில் சாதியக் கட்சிகள் பெருக்கெடுத்து, அவற்றின் ஆதிக்கம் வலுப்பெற்று வருகின்றது. தேவர் சமுதாயம் தங்களுக்கென ஒரு அமைப்பையும், நாடார் சமுதாயம் தங்களுக்கென ஒரு பேரவையையும் வன்னியர்கள் தங்களுக்கென ஒரு கட்சியையும் உருவாக்கி சமுதாயத்தின் வாக்குகளை தங்கள் கட்சிகளுக்கு வாரிக் கொண்டிருக்கின்றனர்.

“வன்னியர் வாக்கு அந்நியருக்கு இல்லை” என்பது ஒரு சமுதாயத்தின் முழக்கம். வாக்கே அடுத்தவருக்கு இல்லை எனும் போது வாழ்க்கை அடுத்த சமுதாயத்திற்கு எப்படிக் கிடைக்கும்? அது எப்படித் தாரை வார்க்கப்படும்?

எனவே கலப்புத் திருமணமும் கானல் நீரானது; கால வேகத்தில் சாதிய கட்சிகளின் வெள்ளப் பெருக்கில் கரைந்து போனது.

ஆக, கல்வி, பொருளாதாரம், ஆட்சியதிகாரம், கலப்புத் திருமணம் என்று தீண்டாமைக்கு எதிராகக் கிளம்பிய திட்டங்கள் எதுவும் தீர்வாகவில்லை; திருப்புமுனை ஆகவில்லை. அதிலும் அண்மையில் தமிழகத்தில் விஷ விருட்சங்கள் போல் முளைத்துக் கிளம்பி, பெருகி வரும் சாதிக் கட்சிகளும் அவற்றின் சாம்ராஜ்யங்களும் இங்கு சாதிகள் ஒழியாது என்பதற்குச் சரியான சாட்சிகள். திராவிட இயக்கங்களின் சாதிய ஒழிப்பு தோல்வி கண்டதற்கு இவை தலைசிறந்த எடுத்துக்காட்டுகள்.

குறைபட்ட சிந்தனையும் குறுகிய வட்டமும்

தீண்டாமை என்பது தமிழகத்தில் மட்டுமோ, அல்லது இந்தியாவில் மட்டுமோ தொற்றி நிற்கும் நோயல்ல! உலகமனைத்திலும் பற்றிப் பரவி மக்களை அழிக்கும் ஒரு கொடிய, கோரத் தீ! எனவே அதற்குரிய தீர்வு ஒரு குறுகிய வட்டத்தில் இருக்கக் கூடாது. தீண்டாமையை ஒழிக்க நாம் மேலே கண்ட தீர்வுகள் எல்லாம் தமிழக அளவில், அல்லது இந்திய அளவில் தான் அமைந்திருக்கின்றன. உலக அளவில் தீண்டாமை ஒழிப்பிற்குப் பொருந்தக் கூடியவையாக இல்லை.

ஆப்பிரிக்கா இதுவரை தீண்டாமை எனும் தீயில் எரிந்து, கரிந்து கொண்டிருக்கின்றது. இதற்கு யார் தீர்வு தருவது? ஆப்பிரிக்கா மட்டுமல்ல! அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என உலகின் அனைத்துக் கண்டங்களிலும் நிலவுகின்ற தீண்டாமையைத் துடைத்தெடுக்கும் வகையில் உலகளாவிய தீர்வாக இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட மொழி, இனம், வட்டாரம் சார்ந்ததாக இருக்கக் கூடாது. அப்படி இருக்குமானால் அது குறைவுபட்ட குறுகிய சிந்தனையாகவே அமையும்; தூர நோக்குடன் கூடிய சிந்தனையாக அமையாது.

அப்படிப்பட்ட தூர நோக்குள்ள திட்டம் எங்கு இருக்கின்றது? எதில் இருக்கின்றது?

மனு தர்மம்

இந்து மதத்தில் இருக்கின்றதா என்று பார்த்தால் அங்கு இல்லை  என்று சொல்வதை விட அது தான் சாதியத்தின் வேராகவும், விருட்சமாகவும் அமைந்திருக்கின்றது என்பதை மேலே மனு தர்மத்திலிருந்து நாம் எடுத்துக் காட்டிய வசனங்களைப் பார்த்தாலே விளங்கிக் கொள்ளலாம்.

புத்த மதம்

சட்ட மேதை என்று வர்ணிக்கப்படும் டாக்டர் அம்பேத்கார் தீண்டாமைக்குத் தீர்வு புத்த மதம் தான் என்று தன்னுடைய தொண்டர்களுடன் புத்த மதம் புகுந்தார்.

02.10.2006 அன்று அம்பேத்காரின் புத்த மதப் பிரவேசத்தின் அடையாள நாள். ஆம்! லட்சக்கணக்கான தொண்டர்களுடன் அம்பேத்கார் புத்த மதம் புகுந்ததன் ஐம்பதாவது ஆண்டு நினைவு நாள். அந்த நினைவு நாளுக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர், அதாவது 29.09.2006 அன்று மகராஷ்ட்ரா மாநிலம், பாந்த்ரா மாவட்டத்திலுள்ள கைர்லாஞ்சியில் நான்கு தலித்துக்கள் பட்டப்பகலில் பகிரங்கமாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். இதில் இரண்டு பெண்கள் நடுத்தெருவில் நிர்வாணப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் கற்பழிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்தக் கோரச் சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு ரயில்கள் கொளுத்தப்படுகின்றன. மகராஷ்ட்ரா முழுவதும் வன்முறை பற்றி எரிகின்றது.

மகராஷ்ட்ராவில் தான் அம்பேத்காரின் புத்த மதத் தழுவல் நடைபெற்றது. இந்த மதமாற்றம் நடந்து அரை நூற்றாண்டுகள் ஆன பின்னர் அதே மகராஷ்ட்ராவில் நடைபெற்றுள்ள இந்த வன்முறைச் சம்பவங்கள் எதைக் காட்டுகின்றன? அம்பேத்காரின் புத்த மதத் தழுவல் தீண்டாமைக்குத் தீர்வாகவில்லை என்பதையே காட்டுகின்றன.

யூத, கிறித்தவ மதங்கள்

யூத மதத்தை எடுத்துக் கொண்டால் பார்ப்பனியத்தின் மறு பதிப்பு தான் அது! பிறப்பால் தான் யூதராக முடியுமே தவிர மத மாற்றம் அங்கு இல்லை. கிறித்தவ மதத்திலும் தீண்டாமைக்குத் தீர்வு இல்லை.

அன்னியன் ஒருவன் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது. ஆசாரியன் வீட்டில் தங்கி இருக்கிறவனும் கூலி வேலை செய்பவனும் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது. (லேவியராகமம் 22:10)

ஆசாரியனுடைய குமாரத்தி அன்னியனுக்கு வாழ்க்கைப்பட்டால் அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே புசிக்கலாகாது. (லேவியராகமம் 22:12)

ஆசாரியர் (புரோகிதர்) குலத்தில் பிறந்து விட்ட பெண், அன்னிய ஜாதிக்கு வாழ்க்கைப்பட்டு விட்டால் அவளும் அந்த ஜாதியில் சேர்ந்து விடுவாள் என்று பைபிள் கூறுகின்றது.

அப்போது அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானியஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் (இயேசுவிடம்) வந்து, “ஆண்டவரே! தாவீதின் குமாரனே! எனக்கு இரங்கும். என் மகள் பிசாசினால் கொடிய வேதனை செய்யப்படுகிறாள்” என்று சொல்லிக் கூப்பிட்டாள். அவளுக்குப் பிரதியுத்திரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.

அப்போது அவருடைய சீடர்கள் வந்து, “இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே! இவளை அனுப்பி விடும்” என்று அவரை வேண்டிக் கொண்டார்கள்.  அதற்கு அவர் “காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப் பட்டேனே அன்றி மற்றபடி அல்ல” என்றார்.

அவள் வந்து, “ஆண்டவரே! எனக்கு உதவி செய்யும்” என்று அவரை நோக்கிப் பணிந்து கொண்டாள். அவர் அவளை நோக்கி, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல” என்றார். அதற்கு அவள், “மெய் தான் ஆண்டவரே! ஆயினும் நாய்க் குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜைகளிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே!” என்றாள். (மத்தேயு 15:22-27)

இந்தச் சம்பவத்தில், இஸ்ரவேல் புத்திரர்களை பிள்ளைகள் என்றும், கானானிய இனத்தவர் நாய்களைப் போன்றவர்கள் என்றும் பைபிள் கூறுகின்றது. வர்க்க பேதத்தை, வர்ணாசிரம தத்துவத்தை பைபிள் ஆதரிப்பதற்கு இதை விடச் சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை.

மேலும் இஸ்ரவேல் மக்களைத் தவிர வேறு யாருக்காகவும் தாம் அனுப்பப்படவில்லை என்று இயேசு கூறியதாகவும் மேற்கண்ட வசனம் கூறுகின்றது. இஸ்ரவேல் மக்களைத் தவிர வேறு யாரையும் ஏற்றுக் கொள்வதற்குக் கிறித்தவ மார்க்கம் தயாராக இல்லை.

கடவுள் என்பவன் இஸ்ரவேலர்களுக்கு மட்டும் தான். பூமியில் வேறு யாருக்கும் இல்லை. (செகண்ட் கிங் 5:15)

நாம் பிறப்பால் யூதர்கள். நாம் யூதரல்லாத பாவிகள் இல்லை. (கேல் 2:15)

இதனால் தான் தாழ்த்தப்பட்டவர்கள் இன்று கிறித்தவ மதத்திற்கு மாறினாலும் அங்கு தலித் கிறித்தவர்களாகவே வாழ்கின்றனர். நாடார்கள் கிறித்தவ மதத்திற்குச் சென்றாலும் கிறித்தவ நாடார்கள் ஆகின்றனர்.

தீண்டாமைக்குத் தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே!

இவ்வாறு உலகத்தில் எங்கு பார்ப்பினும் தீண்டாமைக்குத் தீர்வு இல்லை. அதற்குரிய திட்டமும் இல்லை. தீண்டாமைக்குரிய தீர்வும் திட்டமும் திருக்குர்ஆனில் மட்டும் தான் இருக்கின்றது. வாய் இனிக்கும் வகையில் ஏட்டளவில் நிலைத்திருக்கும் தத்துவார்த்தமாக மட்டுமில்லாமல் நடைமுறை வாழ்க்கையின் செயல்பாடாக அமைந்திருக்கின்றது.

இந்தத் தீர்வு ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு – குலத்தாருக்கு – கோத்திரத்தாருக்கு – நிறத்தாருக்கு – மொழியினருக்கு என்று பார்க்கவில்லை.

திருக்குர்ஆன் அருளப்படுவதற்கு முன்னால் இருந்த அரபிகள், பாரசீகர்கள், ரோமாபுரியினர், கிரேக்கர்கள், இந்தியர்கள் என யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்களிடம் ஈரடுக்கு வர்க்கங்கள், மூன்றடுக்கு வர்க்கங்கள், நான்கடுக்கு வர்க்கங்கள் இருந்தன. எனவே அப்போது அருளப்பெற்ற திருக்குர்ஆன் அரபகத்தை மட்டும் குறியீடாகக் கொள்ளவில்லை. முழு மனித சமுதாயத்தையும் குறியீடாகக் கொண்டது.

மனித குலத்தில் உள்ள இந்த வேறுபாடுகளின் வேரை நோக்கி குர்ஆன் தனது தூர நோக்குப் பார்வையை, தீர்க்கமான சிந்தனையைச் செலுத்தியது. தீண்டாமை என்ற நோயின் காரணத்தைக் கண்டறிந்தது.

அன்றிருந்த ஆளும் வர்க்கங்கள் தங்களிடம் தெய்வீகத் தன்மை இருப்பதாகப் பறை சாற்றினர். குடிமக்களின் உள்ளங்களிலும், உணர்வுகளிலும் அதை உறையச் செய்தார்கள். இதன் விளைவாக அந்த மக்கள் தங்கள் ஆட்சியாளர்களை, சாதாரண ஆட்சியாளர்கள் என்று பார்க்காமல் கடவுளர்களாகப் பார்த்தனர். அவர்களுக்கு வணக்கமும் செலுத்தினார்கள்.

ஆட்சியாளர்கள் தெய்வங்கள் ஆயினர்; மக்கள் அடிமைகளாயினர். ஆட்சியாளர்கள் சொகுசு வாழ்க்கையில் திளைத்தார்கள்; குடிமக்களோ சுரண்டப்பட்டார்கள்.

ஒருவனே தேவன்

சுருங்கக் கூறின், மனிதன் மனிதனைக் கடவுளாக்கினான். இங்கு தான் தெய்வீகத்தன்மை யாருக்குச் சொந்தம் என்பதைத் திருக்குர்ஆன் விளக்கியது. தெய்வீகம் என்பது படைத்த இறைவனுக்கு மட்டும் சொந்தம்; அவனுடைய தனித்தன்மை; அந்தத் தனித்தன்மையில் மனிதனுக்கு எள்ளளவும் சம்பந்தமில்லை என்று முழங்கியது.

இதோ திருக்குர்ஆன் கடவுள் கொள்கையைப் பற்றி முழங்குகின்றது.

மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர். அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரியது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான்என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 7:158)

மனிதர்களே! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருளை எண்ணிப் பாருங்கள்! வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிக்கிறான். அல்லாஹ்வைத் தவிர படைப்பவன் உண்டா? அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்? (அல்குர்ஆன் 35:3)

அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை. அதாவது அவன் மட்டுமே கடவுள் தன்மை உள்ளவன். அவனது கடவுள் தன்மையில் வேறு யாரும் கூட்டாளி இல்லை; அவனுக்கு நிகரில்லை; இணையில்லை என்று இந்த வசனம் கூறுகின்றது.

தாயின் வயிற்றில் உருவாக்கியவன் அவனே!

உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான். (அல்குர்ஆன் 39:6)

அவனன்றி நான் தான் வணக்கத்திற்குரியவன்என்று கூறுபவனுக்கு நரகத்தையே கூலியாக வழங்குவோம். அநீதி இழைத்தோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம். (அல்குர்ஆன் 21:29)

மேற்கண்ட இந்த வசனங்கள் மனிதர்களில் எவரும் கடவுளாக முடியாது; கடவுளைத் தவிர்த்துள்ள மற்ற பொருட்கள் அனைத்தும் அவனால் படைக்கப்பட்டவை; எனவே அவையும் கடவுளாக முடியாது என்பதைக் கூறுகின்றன.

தான் ஒருவன் மட்டுமே கடவுள்! தன்னைத் தவிர வணங்கப்படுவதற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லை; எதுவுமில்லை என்று இறைவன் தெளிவுபடுத்தி விடுகின்றான்.

இப்போது உலக மக்கள் அனைவரும் வெள்ளையர், கருப்பர் என்று வேறுபாடு எதுவுமின்றி அல்லாஹ்வின் அடிமை என்றாகி விடுகின்றனர். வல்ல இறைவனைத் தவிர்த்து அவர்களுக்கு வேறு எஜமானர்கள் யாரும் இல்லை. அவன் ஒருவன் தான் அவர்களுக்கு எஜமானன். அதாவது அவன் ஒருவனே தேவன்; மற்றவர்கள் அனைவரும் அடிமைகளே!

இதன் மூலம் மனிதர்களுக்கு மத்தியில் உள்ள இனம், மொழி, குலம், கோத்திரம், கலாச்சாரம் என்ற அனைத்துத் திரைகளும், வேறுபாடுகளும் அகன்று விடுகின்றன. அனைத்துத் தடைகளும் அடித்து நொறுக்கப்பட்டு விடுகின்றன.

இப்படிக் கடவுள் கொள்கையில் ஓர் ஒற்றுமை, ஒருங்கிணைப்பு ஏற்பட்டவுடன் அங்கே மக்கள் தாமாகவே ஒரே குலம், ஒரே இனம் என்றாகி விடுகின்றார்கள்.

தொடர்ச்சி அடுத்த இதழில் இன்ஷா அல்லாஹ்.