தொடர்: 1 ஸிஹ்ர் ஓரு விளக்கம்

தொடர்: 1

ஸிஹ்ர் ஓரு விளக்கம்

இலங்கையில் வெளியாகும் “உண்மை உதயம்’ என்ற பத்திரிகையில், “மறுக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்’ என்ற தலைப்பில் இஸ்மாயில் ஸலஃபி என்பவர் ஒரு கட்டுரைத் தொடரை எழுதி வருகிறார். அந்தத் தலைப்பின் கீழ் தனது வாதத்தை அறவே நிரூபிக்காமல் ஸிஹ்ர் என்ற தலைப்பில் தான் முழுத் தொடரையும் அமைத்திருந்தார்.

ஸிஹ்ர் தொடர்பாக நாம் கூறுவதை ஒருவர் மறுத்து கட்டுரை எழுதுவதாக இருந்தால், அது குறித்து நாம் எடுத்து வைக்கும் அனைத்து ஆதாரங்களுக்கும் பதில் சொல்ல வேண்டும். அவ்வாறு அவர் செய்யவில்லை.

நாம் என்ன கூறுகிறோமோ அதைப் புரிந்து கொண்டு அதற்கு மறுப்பு எழுத வேண்டும். இதையும் அவர் செய்யவில்லை.

மார்க்க அறிவு இல்லாத ஒரு பாமரர் எப்படி விமர்சிப்பாரோ, மார்க்க அறிவு இல்லாத ஒரு பாமரர் எப்படி கேள்வி கேட்பாரோ அந்தத் தரத்தில் தான் அவர் தனது கட்டுரையை அமைத்துள்ளார்.

வாதம் என்று சொல்ல முடியாத பல தமாஷ்களையும் இடையிடையே வாதம் என்ற பெயரில் எடுத்து வைக்கிறார். அனைத்தையும் இந்தத் தொடரில் இன்ஷா அல்லாஹ் நாம் விரிவாக எடுத்துக் காட்டுவோம்.

கடந்த காலத்தில் ஸிஹ்ர் பற்றியும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸிஹ்ர் வைக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்கள் பற்றியும் முதலில் நாம் கூறியதற்கு மாற்றமாக இப்போது கூறுகிறோம் என்பதை எடுத்துக் காட்டுவதற்காக ஒட்டு மொத்தக் கட்டுரைத் தொடரில் கால் பாகத்தைப் பயன்படுத்தியுள்ளார்.

கடந்த காலத்தில் கூறப்பட்டது தவறு என்பது ஆதாரத்துடன் நமக்குத் தெரிய வந்தால் தவறான கருத்தை மாற்றிக் கொள்வது மார்க்கக் கடமையாகும். இப்போது நாம் கூறும் கருத்து சரியா என்பது மட்டுமே ஆய்வு செய்யப்பட வேண்டும்.

எஞ்சிய விஷயங்களுக்கு அவர் கூறிய வரிசைப்படி பதில் அளிப்பதை விட எளிதில் புரிந்து கொள்ள ஏற்ற வகையில் தலைப்பு வாரியாக அமைத்து விளக்கக் கட்டுரையை அமைத்துள்ளோம்.

  • ஸிஹ்ர் என்பது நிஜமா? பொய்யா?
  • ஸிஹ்ர் என்பது நிஜமல்ல, கற்பனையே என்று சொல்பவர்கள் முஃதஸிலாக்களா?
  • அறிவுக்குப் பொருந்தவில்லை என்பதற்காகத் தான் ஸிஹ்ர் என்பதை மறுக்கிறோமா?
  • நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸிஹ்ர் செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஹதீஸின் நிலை என்ன?

ஆகிய விஷயங்களை ஒவ்வொன்றாக அலசுவோம்.

இத்தலைப்புகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸிஹ்ர் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஹதீஸ் பற்றிய நமது பார்வை என்ன? அதற்கு இஸ்மாயில் சலபி அளிக்கும் பதில் என்ன என்பதை முதலாவதாக நாம் ஆய்வு செய்வோம். அதன் பிறகு ஸிஹ்ர் என்றால் என்ன என்று ஆராய்வோம்.

தவறு – 1

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்ததால் அவர் தாம்பத்தியத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக போலித் தோற்றம் அவருக்கு ஏற்பட்டது. அதையும் அவர் அறிந்தே இருந்தார். அதனால் தான் அவர் தனது ஈடேற்றத்திற்காகப் பிரார்த்தித்தார். இதை மனநிலை பாதிப்பு என்று கூறமுடியாது. இந்தப் பதத்தின் மூலம் சூனியத்தால் நபி (ஸல்) அவர்களுக்குப் பைத்தியம் பிடித்ததாக ஹதீஸ் கூறுவதாகச் சித்தரிக்க முயற்சிக்கின்றார். அவரது அமைப்பின் அழைப்பாளர்கள் தமது உரைகள், உரையாடல்கள் மூலம் சூனியம் செய்யப்பட்டதால் நபி (ஸல்) அவர்களுக்குப் பைத்தியம் பிடித்ததாக ஹதீஸ் கூறுவதாகக் கூறியுள்ளனர். இது நபி (ஸல்) அவர்கள் மீது துணிந்து இட்டுக்கட்டும் இவர்களது இழிசெயலின் ஒரு பகுதி எனலாம்.

இவ்வாறு இஸ்மாயில் ஸலபி தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.

இவர் என்ன சொல்ல வருகிறார்? தாம்பத்தியத்தில் ஈடுபடாமலேயே ஈடுபட்டதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் போலித் தோற்றம் ஏற்பட்டது என்கிறார். இது மனநிலை பாதிப்பு என்று கூற முடியாது என்கிறார்.

மனிதன் எளிதில் மறந்து விட முடியாத, குளிப்பது கடமை என்ற மார்க்கச் சட்டத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு காரியத்தில், ஈடுபடாமலேயே ஈடுபட்டதாகப் போலித் தோற்றம் ஏற்படுவது தானே மனநிலை பாதிப்பு.  இருப்பதை இல்லை என்று எண்ணுவதும், இல்லாததை இருப்பதாக எண்ணுவதும் தானே மனநிலை பாதிப்பின் அடிப்படை.

மறுப்பதாக எண்ணிக் கொண்டு வார்த்தையைத் தான் மாற்றிப் போட்டுள்ளாரே தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநிலை பாதிக்கப்பட்டது என்று தான் இவரும் கூறுகிறார்.

“மறுக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்ற தொடரை, நாம் உண்மை உதயம் பத்திரிகையில் எழுதவே இல்லை” என்று இஸ்மாயில் சலபிக்குத் தோன்றிக் கொண்டு இருந்தால் அது மனநிலை பாதிப்பு இல்லையா?

ஒரு மனிதரை நாம் முட்டாள் என்று கூறுகிறோம். இதை மறுக்கப் புகுந்த இஸ்மாயீல் ஸலபி “அவருக்கு அறிவு இல்லை. அவ்வளவு தான். முட்டாள் என்று சொல்ல முடியாது’ என்று கூறினால் அவரைப் பற்றி என்ன நினைப்பீர்கள்? அப்படித் தான் இஸ்மாயீல் ஸலபி கூறுகிறார்.

மறுக்கப் புகுந்த நேரத்தில் கூட நபிகள் நாயகத்துக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டதை வேறு வார்த்தையில் கூறும் அளவுக்குத் தான் இவரது நிலைமை இருக்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டது என்ற கருத்து இவர்களின் எழுத்துக்களைக் கொண்டே உறுதியாகி விட்டதால் இந்த ஹதீஸ் மறுக்கப்பட வேண்டும் என்பது மேலும் உறுதியாகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பைத்தியம் ஏற்பட்டது என்று நாம் கூறி அவர்களை இழிவுபடுத்துவதாக நெஞ்சழுத்தத்துடன் கூறுகிறார்.

மத்ஹபு நூல்களில் கொஞ்சமாகக் கஞ்சா அடிக்கலாம் என்று உள்ளதை எடுத்துக் காட்டி இத்தகைய மத்ஹப் தேவையா என்று கேட்டோம். மத்ஹப் வாதிகள் என்ன செய்தார்கள்? நாம் கஞ்சா அடிக்கச் சொன்னதாகக் கூறி மக்களை ஏமாற்ற முயன்றனர். அந்த வழிமுறையை இஸ்மாயீல் ஸலபி கற்றுக் கைதேர்ந்துள்ளார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மன நிலை பாதிப்பு, செய்யாததைச் செய்ததாக எண்ணும் பொய்த் தோற்றம், பைத்தியம் ஏற்பட்டதாகக் கூறும் அனைத்தும் பொய்யானவை என்று நாம் கூறுவது இட்டுக்கட்டும் இழிசெயலா?

அல்லது இஸ்மாயில் ஸலபியைப் போன்று, “இது சரியான செய்தி தான்’ என்று கூறி வேறு வார்த்தையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மனநோயாளி என்று உறுதிப்படுத்துவது நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் செயலா? சுய நினைவுடன் தான் இவர் இதை எழுதினாரா என்று கேட்க விரும்புகிறோம்.

மனநிலை பாதிப்பு இல்லை என்பதை நிரூபிக்க பயங்கரமான காரணத்தையும் கூறுகிறார்.

“அதையும் அவர் அறிந்தே இருந்தார். அதனால் தான் அவர் தனது ஈடேற்றத்திற்காகப் பிரார்த்தித்தார்’ என்பது தான் அந்தக் காரணம்.

தமக்கு ஏற்பட்டுள்ள நிலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தெரிந்திருக்கும் போது அது எப்படி மனநிலை பாதிப்பாக இருக்க முடியும் என்பது இதன் உள்ளர்த்தம்.

மனநிலை பாதிப்பு என்பது ஏராளமான உட்பிரிவுகளைக் கொண்டது. தங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதே சில பேருக்குத் தெரியாது. மற்றவர்கள் தான் அவரது நிலையைப் பார்த்து முடிவு செய்வார்கள்.

இன்னொரு வகையினர் தங்களுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டதைச் சில நேரங்களில் தாங்களே உணர்வார்கள். தாங்களே தக்க மருத்துவர்களையும் ஆலோசகர்களையும் தேடிச் சென்று சிகிச்சை பெறுவார்கள்.

“நீர் தான் மஹ்தி என்று யாரோ என்னை நோக்கி கூறுவதாக உணர்கிறேன். நான் திட்டமிடாவிட்டாலும் இப்படி எனக்குத் தோன்றிக் கொண்டே இருக்கிறது” என்பது போன்று கூறும் பலரை நானே சந்தித்திருக்கிறேன்.

மனநல ஆலோசகர்களும் இத்தகையோர் உள்ளனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டது என்பது தான் இந்த ஹதீஸின் மையக் கருத்து எனும் போது அதை மறுத்தே ஆக வேண்டும் என்பதை இஸ்மாயில் சலபியும் உறுதிப்படுத்துகிறார்.

அடுத்து அவர் கண்டு பிடித்துள்ள இரண்டாவது தவறைப் பாருங்கள்.

தவறு – 2

தாம் செய்யாததைச் செய்ததாகக் கருதும் அளவுக்கு அந்தப் பாதிப்பு இருந்தது என்று முதல் பத்தியில் கூறி விட்டு அடுத்த பத்தியிலேயே “தமக்கு சூனியம் வைக்கப்பட்டதின் காரணமாக தாம் செய்யாததைச் செய்ததாக நபிகள் நாயகம்(ஸல்) கூறினார்கள்’ .. என்று ஹதீஸின் கருத்தை மிகைப்படுத்தி, திரிபுபடுத்தியுள்ளார்

தான் செய்யாததைச் செய்ததாகப் போலித் தோற்றம் (மாயை) நபியவர்களுக்கு ஏற்பட்டது என்று தான் ஹதீஸ் கூறுகின்றது. தான் செய்யாததைச் செய்ததாக நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் கூறவே இல்லை. அப்படியிருக்க முதல் பத்தியில் கருதினார்கள் என்றும், இரண்டாம் பத்தியில் செய்யாததைச் செய்ததாகக் கூறினார்கள் என்றும் ஏன் நபி (ஸல்) மீது இட்டுக்கட்ட வேண்டும்? ஹதீஸில் கூறப்படாத ஒரு கருத்தை ஏன் பொது மக்கள் மனதில் பதிக்க வேண்டும்?

முதல் தவறு என்று குறிப்பிட்ட விஷயத்திலும் வார்த்தை விளையாட்டுத் தான் ஆடினார் என்றால் இரண்டாவது தவறு என்ற தலைப்பிலும் அதே தான்.

நபிகள் நாயகம் (ஸல்) கருதினார்கள் என்று முதலில் எழுதிய நான் பின்னர், “கூறினார்கள்’ என்று மிகைப்படுத்தி திரிபு வேலை செய்து விட்டேனாம்.

ஹதீஸில் “கருதினார்கள்’ என்று இருக்கும் போது “கூறினார்கள்’ என்று எழுதியதால் நபிகள் நாயகம் (ஸல்) மீது இட்டுக்கட்டிக் கூறி விட்டேனாம்.

நாம் கூறியதில் எந்தத் தவறும் இல்லை என்பதை விளக்குவதற்கு முன் முக்கியமான கேள்வியைக் கேட்க வேண்டியுள்ளது.

தான் செய்யாததைச் செய்ததாக ஒருவர் நினைக்கிறார் என்றாலும் கூறினார் என்றாலும் இவரது வாதத்துக்கு எந்த வகையிலும் அது உதவப் போவதில்லை. இரண்டுமே மனநிலை பாதிப்பு ஏற்பட்டது என்ற ஒரே கருத்தைத் தந்து அந்த ஹதீஸ் கட்டுக்கதை என்பதைத் தான் உறுதிப்படுத்தும்.

உருப்படியான வாதம் இல்லாததால் வார்த்தைக்கு வார்த்தை பிழை கண்டு பிடிப்பதில் தான் எட்டுத் தொடரையும் வீணடித்திருக்கிறார்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) மேற்கண்டவாறு கருதினாலும் அது மன நிலை பாதிப்பு தான்; அப்படி சொல்லிக் கொண்டிருந்தாலும் அதுவும் மன நிலை பாதிப்புத் தான்.

கருதினார்கள் என்றும் கூறினார்கள் என்றும் சொல்வது முரண்பட்டதா என்பதைப் பார்ப்போம்.

கருதுதல் என்பது ஒருவரின் உள்ளத்தில் உள்ளதாகும். மனிதர்களின் உள்ளத்தில் உள்ளதை அவர் மற்றவருக்குக் கூறாமல் அறிந்து கொள்ள முடியாது. ஒருவரது மனதில் தோன்றியதை இன்னொருவர் சொல்லி விட்டார் என்றால் அவருக்கு இறைத் தன்மை இருப்பதாகி விடும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தாம்பத்தியத்தில் ஈடுபடாமலே ஈடுபட்டதாகப் போலித் தோற்றம் ஏற்பட்டது என்றால், எனக்கு இப்படியெல்லாம் ஏற்படுகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சொல்லாமல் ஆயிஷா (ரலி) அறிய முடியாது.

ஒரு மனிதர் கற்பனை செய்வதை மற்றொருவர் கூறுகிறார் என்றால், கற்பனை செய்தவர் அந்த மற்றொரு மனிதரிடம் அதைத் தெரிவித்து விட்டார் என்பது தான் பொருள்.

கருதினார்கள் என்று ஆயிஷா (ரலி) கூறியதாக ஹதீஸில் கூறப்பட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை ஆயிஷா (ரலி)யிடம் கூறி விட்டார்கள் என்பது தான் பொருள். இதில் இட்டுக்கட்டுதல் ஏதும் இல்லை.

இஸ்மாயில் ஸலபி மேலும் எப்படியெல்லாம் வார்த்தை விளையாட்டு விளையாடுகிறார் என்று பாருங்கள்.

தனது தர்ஜமாவில் 1298ம் பக்கத்தில் இக்கருத்தை மேலும் வலுவூட்டுவதற்காக அழுத்தம் கொடுத்து பின்வருமாறு கூறுவது வேதனையானது. “முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார் செய்ததைச் செய்யவில்லை என்கின்றார். செய்யாததைச் செய்தேன் என்கின்றார்’                 (பக்: 1298)

நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதால் இப்படியான பாதிப்பு எல்லாம் ஏற்பட்டன என்று ஹதீஸில் இடம்பெறாத கருத்துக்களை ஹதீஸின் கருத்தாகப் புனைந்து, அவற்றைப் பெரிதுபடுத்தி, நபியவர்களது அந்த சூழ்நிலை பற்றித் தப்பெண்ணத்தை ஏற்படுத்தி குறிப்பிட்ட அந்த ஸஹீஹான ஹதீஸை மறுக்கும் மனநிலைக்கு மக்களைக் கொண்டுவர முயற்சிக்கின்றார். நியாயமாக விமர்சிப்பதாக இருந்தால் ஹதீஸில் கூறப்பட்டது குர்ஆனுக்கு முரண்படுகின்றது என்பதையல்லவா எடுத்துக் காட்ட வேண்டும். அதை விட்டு விட்டு ஹதீஸில் சொல்லப்படாத கருத்தைத் திணித்து நிரூபிக்க முனைவது எந்த வகையில் நியாயமானது என்பதைப் பொதுமக்கள் நடுநிலை நின்று நிதானமாகச் சிந்திக்க வேண்டும். எவ்வித அறிவு நாணயமும் இல்லாமல் எப்படி சித்து வேலை ஸிஹ்ர் வேலை செய்கிறார் என்று பாருங்கள்.

இவ்வாறு இஸ்மாயில் ஸலபி எழுதியுள்ளார்.

நாம் எழுதியதை இருட்டடிப்புச் செய்து தில்லு முல்லு செய்துள்ளதைக் காணுங்கள்.

”முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்; செய்ததைச் செய்யவில்லை என்கிறார்; செய்யாததைச் செய்தேன் என்கிறார்; இவர் கூறுவதை எப்படி நம்புவது?” என்று நிச்சயம் விமர்சனம் செய்திருப்பார்கள். இந்த வாய்ப்பை நிச்சயம் தவற விட்டிருக்க மாட்டார்கள்.

நாம் எழுதியது இது தான். இதில் அடிக்கோடிட்ட முக்கியமான பகுதியை வெட்டி எடுத்து விட்டு, மூஸா நபி காலத்து சூனியக்காரர்களை மிஞ்சும் வகையில் கண்கட்டி வித்தை காட்டுகிறார்.

இஸ்மாயில் சலபி பின் வருமாறு தனது பத்திரிகையில் ஒரு வாசகம் எழுதுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

“நானே கடவுள் என்று பிர்அவ்ன் கூறினான்”

அவரை விமர்சிக்கப் புகுந்த நாம், “இஸ்மாயில் சலபி, நானே கடவுள் என்று எழுதிவிட்டார்” என்று கூறினால் இஸ்மாயில் சலபி ஆமாம் என்று ஒப்புக் கொள்வாரா?

மேற்கண்டவாறு காஃபிர்கள் விமர்சிப்பார்கள் என்று தான் நாம் குறிப்பிட்டோம். காபிர்கள் விமர்சிப்பார்கள் என்பதை வெட்டி விட்டு, அதை நாமே கூறுவதாகச் சித்து விளையாட்டு காட்டுகிறார்.

இந்த லட்சணத்தில் நின்று நிதானமாகச் சிந்திக்க வேண்டும் என்ற அறிவுரை வேறு!

கட்டுரை ஸிஹ்ர் எனும் பித்தலாட்டம் பற்றியதாக இருப்பதால் அந்தப் பித்தலாட்டத்தை உண்மை என்று இவர் நம்புவதால் தனது மறுப்பில் ஆங்காங்கே ஸிஹ்ர் செய்து மக்களை ஏமாற்ற முயன்றுள்ளார்.

அவற்றை அடுத்த தொடரில் காணலாம், இன்ஷா அல்லாஹ்!