சீறுவோர் சிந்திக்க வேண்டும்

சீறுவோர் சிந்திக்க வேண்டும்

அப்துல் மஜீத் உமரி

நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர்.

அல்குர்ஆன் 33:6

இந்த வைர வாக்கியத்தின் உயிரோட்டம் இன்று உலக முஸ்லிம்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பை அவ்வப்போது வெளிப்படுத்துகின்றது.

உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் என்பவர் ஷாபானு வழக்கில் ஷரீஅத்துக்கு எதிரான தீர்ப்பை வழங்கிய போதும், நமது உயிரை விடவும் மேலாக நாம் மதிக்கும் நபி (ஸல்) அவர்களை டென்மார்க்கில் ஒருவன் கேலிச் சித்திரம் வரைந்த போதும் நாம் வெளிக்காட்டிய எதிர்ப்புக்கள் மாபெரும் வரலாற்றுச் சுவடுகள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

மார்க்கெட் நிலவரத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் இந்த அவரச உலகில் மார்க்கத்தைப் பற்றிய விழிப்புணர்வு செழிப்படைந்திருப்பது மனதுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது.

இதுபோன்ற கட்டங்களில் வரம்பு மீறி வன்முறையில் ஈடுபடுவது, பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவிப்பது போன்ற ஒரு சிலரின் செயல்கள், “தனது நாவினாலோ, கரங்களினாலோ பிறருக்குத் தீங்கு ஏற்படுத்தாதவனே முஸ்லிம்” என்று நபி (ஸல்) அவர்கள் வகுத்துத் தந்த இலக்கணத்திற்கு எதிரானது என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

இதையெல்லாம் தாண்டி ஒரு விஷயத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய மிக முக்கியமான தருணம் இது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை குறும்(பு) படம் எடுத்துக் கொச்சைப்படுத்திய ஸாம் பாசில் என்பவன் மீது பாய்கின்ற நாம், அந்த நபி (ஸல்) அவர்களை மதிக்க வேண்டிய முறையில் மதிக்கின்றோமா?

நாம் அல்லாஹ்வை நேசிக்கின்றோம் என்றாலும் அல்லாஹ் நம்மை நேசிக்க வேண்டும் என்றாலும் அதற்கான நிபந்தனை, நாம் நபியைப் பின்பற்ற வேண்டும் என்ற கட்டளையை திருக்குர்ஆன் பிறப்பிக்கின்றது.

நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 3:31

நபியை நமது உயிரை விடவும் அதிகமாக நேசிக்க வேண்டும் என்று மேலே நாம் சுட்டிக்காட்டிய 33:6 வசனம் வலியுறுத்துகின்றது. நாம் நமது நபியை அவ்வாறு தான் நேசிக்கிறோமா? பின்பற்றுகிறோமா?

இதற்குப் பெரிய ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை.

இயற்கை மரபுகள் என்று வர்ணிக்கப்பட்ட நபிமொழி, சுகாதாரத்தை நமக்கு நேரடியாகவே அள்ளித் தருகின்றது என்பதை இந்தச் சமுதாயம் எந்த அளவுக்கு விளங்கியிருக்கின்றது?

மீசையைக் கத்தரித்தல்:

உதடு தெரியாத அளவுக்கு மீசை வளர்ந்து கிடப்பதை எத்தனை முஸ்லிம்கள் கண்டுகொள்கின்றார்கள்? அதை முறைப்படி கத்தரிப்பதில்லையே!

தாடி வளர்த்தல்:

ஆண்களுக்கான முக அடையாளமான தாடியைப் பேணுபவர்கள் நம்மில் எத்தனை பேர்? சிலர் ஃபேஷன் தாடி வளர்க்கின்றார்கள். அதைப் பார்ப்பதற்குப் பூதக்கண்ணாடி தேவைப்படுகின்றது.

நகங்களை வெட்டுதல்:

நகங்களில் உள்ள அழுக்குகள் காலரா உள்ளிட்ட நோய்கள் பரவுவதற்கு ஏதுவாகின்றது என்று மருத்துவக் குறிப்பு சொல்கின்றது. வலது கைவிரல் நகங்களில் உணவுத் துகள்கள் தேங்குகின்றன. இடது கைவிரல் நகங்களிலோ மலஜலக் கழிவுகள் தேங்குகின்றன. (இதில் சிலருக்கு நகம் கடிக்கும் பழக்கம் வேறு!) இவற்றின் மூலம் ஏற்படும் சுகாதாரக் கேடுகளை நினைக்கும் போதே அருவருப்பாக இருக்கின்றது.

தேவையற்ற முடிகளைக் களைதல்:

அக்குள் மற்றும் மறைவிடங்களின் முடிகளைக் களைய வேண்டும் என்ற நபிவழியை நம்மில் அனேகர் அறிந்திருப்பதில்லை. காற்றுப் புகாத அந்த இடங்களில் எத்தனை வாசனைத் திரவியங்கள் பூசினாலும் சுகாதாரம் ஏற்படுமா?

பேருந்துகளில் கம்பியைப் பிடித்து நிற்பவர்களின் அருகில் நிற்பவர்கள் மயக்கம் போட்டு விழுகின்ற அளவுக்குத் துர்நாற்றம் அடிக்கின்றதே! அக்குள் முடிகளைக் களைந்தால் இந்நிலை ஏற்படுமா?

நபிவழியில் ஏராளமான வழிகாட்டுதல்கள் கிடக்கும் போது நம்மவர்களிடம் சுன்னத் என்று பேணப்படுவது இரண்டே இரண்டு தான்.

அந்நிக்காஹு மின் சுன்னத்தீ என்று அரபியில் உலமாக்கள் நீட்டி மொழிவார்களே அந்தத் திருமணம் ஒன்று!

திருமணம் எனது வழிமுறை என்ற கருத்தில் அமைந்த அந்த சுன்னத்தை மேற்கொள்ளப் போகும் மணமகன் தாடியைச் சிரைத்து விட்டு வந்து சபையில் அமர்ந்திருப்பார். அந்நிக்காஹு மின் சுன்னத்தீ என்று முழங்கும் உலமாக்களில் பெரும்பாலோர், சுன்னத்தைச் சிரைத்துவிட்டு, சிதைத்துவிட்டு அமர்ந்திருக்கும் மணமகனைத் தட்டிக் கேட்பதோ, சுட்டிக் காட்டுவதோ கிடையாது. அதே நேரத்தில் சுன்னத்தாக இல்லாத தொப்பி, மாலையெல்லாம் அணிந்தாக வேண்டும் என்று ஜமாஅத்தார்கள் வரிந்து கட்டிக் கொண்டு வருவார்கள்.

இரண்டு சுன்னத்துகளில் மற்றொன்று, விருத்தசேதனம் என்று கூறப்படும் கத்னா தான். சில பகுதிகளில சுன்னத் என்றாலே கத்னா தான்.

இந்த இரண்டையும் தவிர சுன்னத் – நபிவழி என்ற வகையில் அக்கறை காட்டப்படும் அம்சங்கள் வேறு ஏது?

கத்னாவை வலியுறுத்தும் அதே தொடரில் தான் மீசை, தாடி, நகம், அக்குள் மற்றும் மறைவிடத்திலுள்ள முடி சம்பந்தமான வழிகாட்டுதல்கள், வலியுறுத்தல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது,

நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:

இயற்கை மரபுகள் ஐந்தாகும்அல்லது “ஐந்து செயல்கள் இயற்கை மரபுகளில் (இறைத் தூதர்கள் வழியில்) அடங்கும்‘. (அவையாவன:) விருத்த சேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைவது, நகங்களை வெட்டிக்கொள்வது, அக்குள் முடிகளை அகற்றுவது, மீசையைக் கத்தரித்துக்கொள்வது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (தமிழாக்கம் எண்: 429)

இன்னொருபுறம் பார்த்தால் சுன்னத்களை ஒழிப்பதற்கென்றே சில பித்அத்களை சமுதாயம் உருவாக்கியுள்ளது.

  • முஸ்லிம்களின் அடையாளமாகத் தாடி அமைந்திருக்கும் போது, சம்பந்தமில்லாத தொப்பியை சுன்னத்துடன் முடிச்சுப் போடுதல்
  • மழைத் தொழுகை என்று ஒரு சுன்னத் இருக்கும் போது, மவ்லிதில் உள்ள மழை பைத்து என்ற பித்அத்தை அரங்கேற்றுதல்
  • கிரகணத்தின் போது தொழுகை நடத்துகின்ற நபிவழியை செயல்படுத்தாமல் திக்ரு மஜ்லிஸ் நடத்துதல்
  • மக்ரிப் தொழுகைக்கு முன் சுன்னத்தான இரண்டு ரக்அத்கள் தொழவிடாமல் தடுக்கும் வகையில், தொழுகை நேர அட்டவணையில் பாங்கு முடிந்தவுடன் இகாமத் என்று எழுதி வைத்தல்.
  • ஜனாஸா தொழுகையில் முதல் தக்பீருக்குப் பின் சூரத்துல் ஃபாத்திஹா ஓதுவது நபிவழி என்றிருக்கும் போது அதில் ஸனா ஓதவேண்டும் என்று கூறுவது. (ஹனபி மத்ஹப்)
  • ஜனாஸா தொழுகை முடிந்த பின் ஃபாத்திஹா ஓதுதல்
  • பாங்குக்குப் பின் ஸலவாத் ஓதி, பாங்கு துஆ ஓதுவது சுன்னத் என்றிருக்கும் போது பாங்குக்கு முன் ஸலவாத் ஓதுதல்
  • ஸலவாத் இவ்வாறு தான் என்று நபிவழியில் கற்றுத் தரப்பட்டிருக்கும் போது அதை விட்டுவிட்டு ஸலாத்துன் நாரிய்யா, திப்பில் குலூப் ஸலாவத் என உருவாக்குதல்
  • பாரக்கல்லாஹு லக்க.. என்ற துஆவை மணமக்களுக்காக ஓதுவது சுன்னத் என்றிருக்கும் போது, “அல்லாஹும்ம அல்லிஃப் பைனஹுமா என்ற துஆவை பிடிவாதமாக ஓதுதல்
  • ஃபாத்திஹா சூராவின் முடிவில் ஆமீன் சப்தமிட்டுக் கூறும் வழிமுறையைப் புறக்கணித்து விட்டு, கூட்டு துஆவில் ஆமீன் கூறச் சொல்வது.

இப்படிப் பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். விரிவஞ்சி இத்துடன் விட்டு விடுவோம்.

போதாக்குறைக்கு குர்ஆன் ஹதீஸ் என்ற நிரந்தரமான வழிகாட்டுதல்களை ஓரங்கட்டிவிட்டு மத்ஹபுகளையும் மவ்லிதுகளையும் அரங்கேற்றத் துடிக்கும் உலமாக்களை நினைக்கும் போது நெஞ்சம் பதறுகின்றது.

ஒரேயொரு படத்தின் மூலம் நபியைக் கொச்சைப்படுத்திய டெர்ரி ஜோன்ஸ், ஸாம் பாசில் போன்றவர்களைக் கூட மன்னிக்கலாம். ஏனெனில் அவர்கள் சத்திய வாசனையைக் கூட நுகராதவர்கள்.

இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். ஏமாற்றுவதற்காக கவர்ச்சிகரமான சொற்களை அவர்களில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கின்றனர். உமது இறைவன் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக் கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!

அல்குர்ஆன் 6:112

இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ளது போன்று டெர்ரி ஜோன்ஸ், ஸாம் பாசில் போன்றோரின் நடவடிக்கைகளை ஒரு முன்னறிவிப்பாகக் கூட எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால் பல கட்டங்களில் நபிவழியை திட்டமிட்டுக் கொச்சைப் படுத்துபவர்களை எப்படி விடமுடியும்?

மத்ஹபுப் போர்வையில் சுன்னத் என்ற வார்த்தைக்கு “ஃபர்ழ் அல்லாதது – கடமையல்லாதது’ என்ற தவறான வரைவிலக்கணம் கொடுத்திருப்பதன் மூலம் உண்மையான சுன்னத்தின் வீரியத்தைக் குறைத்து விட்டனர்; குலைத்து விட்டனர். அதன் காரணமாகத் தான், “சுன்னத்து தானே!’ என்ற அலட்சியப் போக்கு காணப்படுகின்றது.

தாடி வளர்ப்பது நபி (ஸல்) அவர்களின் சுன்னத்! அது ஒரு கட்டளை! ஆனால் மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்? தாடி ஒரு சுன்னத்து தானே என்று தான் பேசிக் கொள்கிறார்கள்.

நெஞ்சின் மீது தக்பீர் கட்டுவதும், அத்தஹிய்யாத்தில் விரலசைப்பதும் கூட சுன்னத்து தானே என்று கூறி நபிவழித் தொழுகையையே தவறாகச் சித்தரிக்கின்றனர்.

“என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்” என்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையின் உள்ளடக்கத்தில் நெஞ்சின் மீது கைகளைக் கட்டுவதும், அத்தஹிய்யாத்தில் விரல் அசைப்பதும் சேரத் தானே செய்யும்?

அப்படியானால் “சுன்னத்து தானே’ என்பது எவ்வளவு அபாயகரமான சிந்தனை! அதைப் பற்றிய அல்லாஹ்வின் தூதரின் எச்சரிக்கையும் மிகக் கடுமையானது.

யார் எனது சுன்னத்தை (வழிமுறையை) புறக்கணிக்கின்றானோ அவன் என்னைச் சார்ந்தவன் அல்லன்.

நூல்: முஸ்லிம் (தமிழாக்கம் எண்: 2176)

இந்த நபிமொழி சொல்வதென்ன? நபிவழியைக் கொச்சைப்படுத்துவோர் நபியைச் சார்ந்தவர்கள் அல்லர், அவர்கள் ஸாம் பாஸில், டெர்ரி ஜோன்ஸ் வகையறாக்கள் என்பது தானே இந்த ஹதீஸின் பொருள்.

யாரோ நபியைக் கொச்சைப்படுத்தியதற்காகச் சீறுகின்றோம்; சிங்கமாகக் கர்ஜிக்கின்றோம். நமக்குள் நடக்கும் இந்தச் சீர்கேட்டைப் பற்றிச் சிந்திக்கவும் வேண்டும். சிந்திப்போமா?