நினைத்தாலே நன்மை! செய்தால் தான் தீமை!

நினைத்தாலே நன்மை! செய்தால் தான் தீமை!

மனித சுபாவம் தீமையின் பால் ஈர்க்கப்படும் தன்மையுடையதாக இருக்கிறது. ஓர் அழகிய பெண் நம் கண் முன்னே நகரும் போது எத்தனையோ தவறான எண்ணங்கள் அலைமோதி விட்டுச் செல்கின்றன. இப்படி மனித மனத்தில் தோன்றுபவை எல்லாம் பாவமாகப் பதியப்பட்டால் மனிதனின் கதி என்னவாகும்?

நம்முடைய மனம் எண்ணுகின்ற நல்லவற்றையும், தீயவற்றையும் கொஞ்சம் பட்டியல் போட்டுப் பார்த்தோம் என்றால் தீயவை தான் மிகைத்து நிற்கும். நரகத்திற்குச் செல்வதற்கு வேறெந்த தீமையான செயல்களும் தேவையில்லை. நமது உள்ளத்தில் தோன்றுகின்ற தவறான எண்ணங்களே போதும். இப்படிப்பட்ட மனித உள்ளத்தின் சுபாவத்தை நன்கு அறிந்த வல்ல நாயன் அளிக்கும் சலுகையைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் (வானவர்களிடம்) கூறுகின்றான்: என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள். அதை அவன் செய்து விட்டால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள். அதை அவன் எனக்காக விட்டு விட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள். அவன் ஒரு நன்மை புரிய எண்ணி, அதைச் செய்யாவிட்டாலும் கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள். அதை அவன் செய்து விட்டாலோ அதை அவனுக்குப் பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூற்கள்: புகாரி 7501, முஸ்லிம் 183

மலக்குகளுக்கு அல்லாஹ் இடுகின்ற இந்தக் கட்டளை மனித சமுதாயத்தின் மன நிலையை அறிந்த மாபெரும் படைப்பாளனின் மகத்தான பேரருட்கொடையாகும்.

இத்தகைய எளிய மார்க்கத்தை அளித்த இறைவா உனக்கே புகழனைத்தும் என்று போற்றி நிற்போமாக!