மஹ்ஷர் மன்றத்தில் உயர் தூதரின் உலமாக்களுக்கு எதிரான புகார்

மஹ்ஷர் மன்றத்தில்  உயர் தூதரின் உலமாக்களுக்கு எதிரான புகார்

அபூஜாஸிர்

அகில உலகத்தையும் திருத்துவதற்காக, நேர்வழியின் பக்கம் செலுத்துவதற்காக அருள்மிகு திருக்குர்ஆனை மனித குலத்திற்கு அல்லாஹ் வழங்கினான். இலக்கிய நயமிக்க, அதே சமயம் எளிமையான திருக்குர்ஆனை எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வழங்கி ஓர் அற்புதத்தைப் படைத்து விட்டான்.

இந்த அற்புத வேதம், இன்று வரை உலக மக்களில் ஒரு பெருந்தொகையினரைத் தன் வசப்படுத்தி வைத்திருக்கின்றது.

திருக்குர்ஆன் இறங்கத் துவங்கிய காலத்திலேயே தனது ஈர்ப்பு சக்தியைக் காட்டத் துவங்கி விட்டது. இதைக் கண்ட அரபுலகம் நடுநடுங்க ஆரம்பித்து விட்டது. தங்களது புரோகித பீடத்தின் தலைமையைத் தலைகீழாகப் புரட்டி விடும் என்பதை மிகத் தெளிவாகக் கணித்த அரபுத் தலைவர்கள், முஹம்மத் (ஸல்) அவர்களை பைத்தியம் என்றழைத்தனர்.

அறிவுரை அருளப்பட்டவரே! நீர் பைத்தியக்காரர் தான்என்று அவர்கள் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 15:6

பைத்தியக்காரக் கவிஞருக்காக நாங்கள் எங்கள் கடவுள்களை விட்டு விடுவோமா?” என்று கேட்கின்றனர்.

அல்குர்ஆன் 37:36

நபியவர்களை கவிஞர் என்றும் அவர்கள் கூறினர்.

“(இவர் ஒரு) கவிஞர். இவரது அழிவை எதிர்பார்க்கிறோம்என்று கூறுகிறார்களா?

அல்குர்ஆன் 52:3

சூனியம் பிடித்தவர் என்றும் மக்காவிலிருந்த இறை மறுப்பாளர்கள் கூறினர்.

சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள் என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம்.

அல்குர்ஆன் 17:47

இவை முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு எதிராக அம்மக்கள் செய்த கடும் விமர்சனமும், வேதனைச் சொற்களுமாகும்.

மந்திரிக்க வந்தவரை மயக்கிய வேதம்

இப்படி நபி (ஸல்) அவர்களைப் பைத்தியம் என்று அம்மக்கள் கிண்டலடித்துக் கொண்டிருக்கும் போதே, பலர் இஸ்லாத்தைத் தழுவ ஆரம்பித்தனர். இதற்குக் காரணம் திருக்குர்ஆனின் ஈர்ப்பு சக்தி தான்.

லிமாத் என்பவர் மக்காவிற்கு வந்தார். அவர் “அஸ்த் ஷனூஆஎன்ற கோத்திரத்தைச் சார்ந்தவர். அவர் பைத்தியத்திற்கு மந்திரிப்பவராக இருந்தார். மக்காவாசிகளைச் சேர்ந்த அறிவிலிகள், முஹம்மது பைத்தியக்காரர் என்று கூறக் கேட்டிருந்தார். “நான் அந்த ஆளை (முஹம்மதை) பார்க்க நேர்ந்தால் அல்லாஹ் என் முன்னிலையில் அவருக்கு நிவாரணத்தை வழங்கி விடலாம்என்று சொன்னார்.

அவ்வாறே நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, “முஹம்மதே!  நான் பைத்தியத்திற்கு மந்திரிக்கிறேன். அல்லாஹ், தான் நாடியவருக்கு என் முன்னிலையில் நிவாரணம் அளிப்பான். உங்களுக்கு விருப்பமா?” என்று கேட்டார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

(இன்னல் ஹம்துலில்லாஹ்! நஃமதுஹு வநஸ்தயீனுஹு மன்(ய்) யஹ்திஹில்லாஹு ஃபலா முழில்ல லஹு. வமன்(ய்) யுழ்லில்ஹு ஃபலா ஹாதிய லஹு. வஅஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு வஅன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு அம்மா பஅத்)

அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! அவனையே நாம் புகழ்கிறோம். அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். அல்லாஹ் வழி காட்டியவரை கெடுப்பவன் இல்லை. அவன் வழிகேட்டில் விட்டவரை நல்வழிப்படுத்துபவன் இல்லை. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்றும்முஹம்மது அவனது அடியார் என்றும், அவனது தூதர் என்றும் உறுதி கூறுகின்றேன். நிற்க!என்று சொன்னார்கள்.

உங்களுடைய இந்த வார்த்தைகளை என்னிடம் மீண்டும் ஒரு முறை கூறுங்கள்என்று லிமாத் கூறினார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வார்த்தைகளை மீண்டும் திரும்பக் கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை திரும்பக் கூறச் சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று தடவை கூறினார்கள்.

அப்போது லிமாத், “நான் சோதிடக்காரர்களின் சொல்லையும், சூனியக்காரர்களின் சொல்லையும், கவிஞர்களின் சொல்லையும் செவியுற்றிருக்கிறேன். ஆனால் உங்களுடைய இந்த வார்த்தைகளை நான் செவியுற்றதே இல்லை. இவை ஆழ்கடலைத் தொட்டு விட்டனஎன்று சொன்னார். அதன் பின்னர், “உங்கள் கையைத் தாருங்கள். உங்களிடம் நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு உடன்படிக்கை செய்யப் போகிறேன்என்றார். நபி (ஸல்) அவர்கள், அவரிடம் உடன்படிக்கை செய்து கொடுத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், “(இந்த உடன்படிக்கை) உன்னுடைய மக்களுக்கும் சேர்த்துத் தானே!என்று கேட்டார்கள். “என்னுடைய மக்களுக்கும் சேர்த்துத் தான்என்றார் லிமாத்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு படையை (லிமாதும், அவரது மக்களும் வசிக்கும் வழியாக) அனுப்பினார்கள். அந்தப் படையினர் அவரது மக்களைத் தாண்டிச் சென்ற போது படையின் தளபதி படையினரிடம், “இம்மக்களிடமிருந்து எதையேனும் கைப்பற்றினீர்களா?” என்று கேட்டார். அதற்கு அப்படை வீரர்களில் ஒருவர், “சுத்தம் செய்யும் ஒரு பாத்திரத்தை இவர்களிடமிருந்து எடுத்தேன்என்று கூறினார். “அதைத் திரும்பக் கொடுங்கள். இவர்கள் லிமாதின் மக்கள்என்று தளபதி கூறினார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 1436

இந்தச் சம்பவத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குர்ஆனில் இடம் பெற்றுள்ள நேரடியான வசனம் எதையும் கூறவில்லை. ஆனால் பல்வேறு குர்ஆன் வசனங்களின் தொகுப்பை ஓர் உரையாகக் கூறுகிறார்கள். அதற்கு இப்படியோர் ஈர்ப்பு சக்தி! குர்ஆனுக்கு விளக்கமாக அமைந்த நபியவர்களின் வார்த்தைகளும் இறை அறிவிப்பு. அதனால் இப்படியோர் இழுப்பு சக்தி!

மந்திரிக்க வந்தவர் எழுந்திருக்க வில்லை. பைத்தியத்திற்கு வைத்தியம் செய்ய வந்தவர், வஹீயில் வயப்பட்டு விட்டார். இப்படி மக்களைத் தன் பக்கம் இழுத்துப் போடும் இந்த அபார ஆற்றல் மிக்க வரிகள் மக்கத்து மக்களின் மனங்களில் அலை மோத விடுவார்களா அந்நகரத்து காஃபிர்கள்? அதை அடக்குவதற்கு ஆர்த்தெழுந்து விட்டார்கள். இருப்பினும் அல்குர்ஆனின் அற்புதம் அவர்களை விட்டு வைக்கவில்லை. இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்:

என் பெற்றோர் அபூபக்ரும், உம்மு ரூமானும் எனக்கு விவரம் தெரிந்தது முதல் இஸ்லாத்தைக் கடைப் பிடிப்பவர்களாகவே இருந்தனர். பகலின் இரண்டு ஓரங்களான காலையிலும், மாலையிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வருகை தராமல் எங்களின் எந்த நாளும் கழிந்ததில்லை. மக்காவில் முஸ்லிம்கள் சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட போது அபூபக்ர் (ரலி) அபிசீனிய நாட்டை நோக்கி நாடு துறந்து (ஹிஜ்ரத்) சென்றார்கள். அவர்கள் எமன் செல்லும் வழியில் “பர்குல் கிமாத்என்னும் இடத்தை அடைந்த போது இப்னு தஃகினா என்பவர் அவர்களைச் சந்தித்தார். அவர் அல்காரா எனும் குலத்தின் தலைவராவார். அவர், “அபூபக்ரே! எங்கே செல்கிறீர்கள்?” என்று கேட்டார். “என் சமுதாயத்தினர் என்னை நாட்டை விட்டு வெளியே செல்லும் நிலைக்குத் தள்ளி விட்டனர். ஆகவே நான் பூமியில் பரவலாகப் பயணம் செய்து நிம்மதியாக என் இறைவனை வணங்கப் போகிறேன்என்று அபூபக்ர் (ரலி) பதிலளித்தார்கள். அப்போது இப்னு தஃகினா, “அபூபக்ரே! தங்களைப் போன்றவர்கள் நாட்டை விட்டு தாமாகவும் வெளியேறக் கூடாது, மற்றவர்களால் வெறியேற்றப்படவும் கூடாது. ஏனெனில் நீங்கள் ஏழைகளுக்காக உழைக்கின்றீர்கள். இரத்த பந்த உறவுகளைப் பேணி நடந்து கொள்கிறீர்கள்.  சிரமப் படுவோரின் பாரத்தைச் சுமக்கிறீர்கள். விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள். சோதனைகளில் ஆட்பட்டோருக்கு உதவி புரிகிறீர்கள்என்று புகழ்ந்து கூறினார். பின்னர் “தங்களுக்கு நான் அடைக்கலம் தருகிறேன்.  நீங்கள் மக்காவிற்குத் திரும்பிச் சென்று உங்களது சொந்த ஊரிலேயே இறைவனை வணங்குங்கள்என்று கூறினார்.

இதைக் கேட்ட அபூபக்ர் (ரலி) தமது அபிசீனிய பயணத்தை ரத்துச் செய்து விட்டு மக்காவிற்குத் திரும்பினார்கள். அவர்களுடன் இப்னு தஃகினாவும் மக்காவிற்குத் திரும்பினார். அன்று மாலை இப்னு தஃகினா குறைஷிக் குல பிரமுகர்களைச் சந்தித்து அவர்களிடம், “அபூபக்ரைப் போன்றவர்கள் மக்காவிலிருந்து தாமாக வெளியேறுவதோ, அல்லது பிறரால் வெளியேற்றப் படுவதோ கூடாது. ஏழைகளுக்காக உழைக்கக் கூடிய, உறவுகளைப் பேணி, சிரமப்படுவோரின் பாரங்களைச் சுமந்து, விருந்தினர்களை உபசரித்து சத்திய சோதனைகளில் ஆட்பட்டோருக்கு உதவி வரும் ஓர் ஒப்பற்ற மனிதரையா நாடு துறந்து வெளியேறிச் செல்லும் நிலைக்கு நீங்கள் உள்ளாக்குகிறீர்கள்?” என்று கேட்டார். 

அபூபக்ர் (ரலி)க்கு இப்னு தஃகினா அடைக்கலம் தருவதாகக் கூறியதை குரைஷிகள் மறுக்கவில்லை. அவர்கள் இப்னு தஃகினாவை நோக்கி, “அபூபக்ர் தமது இல்லத்திற்குள்ளேயே தமது இறைவனை வணங்கவோ, தொழவோ, தாம் விரும்பியதை ஓதவோ செய்யட்டும்.  ஆனால் இவற்றின் மூலம் எங்களுக்கு இடையூறு செய்யவோ, இவற்றை பகிரங்கமாகச் செய்வதோ கூடாது. ஏனெனில் எங்கள் மனைவி மக்கள் இவரது வணக்க வழிபாடுகளைப் பார்த்து, குழப்பமடைந்து விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்பதை அவரிடம் கூறிவிடுங்கள்என்று கூறினார்கள். 

அதன்படி அபூபக்ர் (ரலி) தமது இல்லத்திற்குள்ளேயே அல்லாஹ்வை வணங்கியும் தமது தொழுகையைப் பகிரங்கப்படுத்தாமலும் குர்ஆன் வசனங்களை வீட்டிற்கு வெளியே ஓதாமலும் இருந்து வந்தார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு மாற்று யோசனை தோன்றியது. தமது வீட்டு முற்றத்தில் தொழும் இடம் ஒன்றை உருவாக்கி அதில் தொழுது கொண்டும் திருக்குர்ஆனை ஓதியும் வந்தார்கள்.

அப்போது இணை வைப்பவர்களின் மனைவி மக்கள் அபூபக்ர் (ரலி)யைப் பார்த்து ஆச்சரியப்பட்டு வேடிக்கை பார்ப்பதற்காக அவர்கள் மீது முண்டியடித்து விழுந்தனர். அபூபக்ர் (ரலி) குர்ஆன் ஓதும் போது தமது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிகமாக அழுபவர்களாக இருந்தனர். அவர்களின் இந்த நடவடிக்கை தங்களது இளகிய மனம் படைத்த மனைவி மக்களை மதம் மாறச் செய்து விடுமோ என்ற அச்சம் இணை வைப்பவர்களான குரைஷிகளைப் பீதிக்குள்ளாக்கியது. 

அவர்கள் இப்னு தஃகினாவிடம் ஆள் அனுப்பினார்கள். அவர் குரைஷிகளிடம் வந்தார். அப்போது அவர்கள், “அபூபக்ர் தமது இல்லத்திற்கு உள்ளேயே அவருடைய இறைவனை வழிபட்டுக் கொள்ளட்டும் என்ற நிபந்தனையோடு நீங்கள் அடைக்கலம் தந்தீர்கள். அதனால் தான் அவருக்கு நாங்கள் அடைக்கலம் அளித்தோம். அதை அவர் மீறி விட்டு தமது வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அந்த இடத்தில் பகிரங்கமாகத் தொழுது கொண்டும், ஓதிக் கொண்டும் இருக்கிறார். எங்கள் மனைவி மக்கள் குழப்பத்திற்கு உள்ளாகி விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம். எனவே அபூபக்ரைத் தடுத்து வையுங்கள். அவர் தனது வீட்டில் தனது இறைவனை வணங்குவதோடு நிறுத்திக் கொள்ள விரும்பினால் அவ்வாறு செய்யட்டும். அவர் அதை மறுத்து பகிரங்கப்படுத்துவேன் என்றால் அவரிடம் உங்களது அடைக்கலப் பொறுப்பை திரும்பத் தருமாறு கேளுங்கள்.  ஏனென்றால் உங்களது உடன்பாட்டை முறித்து உங்களுக்கு மோசடி செய்வதை நாங்கள் வெறுக்கிறோம். அதே சமயம் அபூபக்ர் இவ்வாறு பகிரங்கமாகச் செய்வதையும் எங்களால் அனுமதிக்க முடியாதுஎன்று கூறினார்கள். 

இப்னு தஃகினா அபூபக்ர் (ரலி)யிடம் வந்து, “நான் எந்த நிபந்தனையின் பேரில் உங்களிடம் ஒப்பந்தம் செய்தேன் என்பதைத் தாங்கள் அறிவீர்கள். ஆகவே ஒன்று அதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளுங்கள்! அல்லது எனது அடைக்கலப் பொறுப்பை திரும்பத் தந்து விடுங்கள். ஏனென்றால் நான் உடன்படிக்கை செய்த ஒரு மனிதர் விஷயத்தில் ஏமாற்றப்பட்டு விட்டேன் என்று அரபுகள் கேள்விப்படுவதை நான் விரும்பவில்லைஎன்று கூறினார். அதற்கு அபூபக்ர் (ரலி) “உமது அடைக்கலத்தை உம்மிடமே திரும்பத் தந்து விடுகிறேன்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 2297

இன்ஷா அல்லாஹ் தொடரும்.