பொருள் திரட்டும் வழிமுறை

பொருளியல்    தொடர்: 14

பொருள் திரட்டும் வழிமுறை

நபிமார்களுக்கும் மற்ற மனிதர்களுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் நபிமார்கள் அல்லாஹ் தந்த அருட்கொடைகளைப் பெற்று அதற்கு நன்றி செலுத்தினார்கள்.

உலகிலேயே நாம் குறைவான அமல் செய்து ஒருவனை திருப்திப்படுத்த முடியும் என்றால் அது அல்லாஹ்வை மட்டும் தான். உதாரணத்திற்கு நாம் வயிறு நிறைய உண்ண வேண்டும் என்றால் நாம் அதற்காகக் கடுமையாக ஒருவனிடம் உழைக்க வேண்டும்.

ஆனால் அல்லாஹ்வைப் பொறுத்த வரையில் அவன் குறைந்த அமலிலேயே அவன் திருப்தி அடைகிறான் நாம் வயிறு நிறைய உண்டு விட்டு வெறும் அல்ஹம்துலில்லாஹ் சொன்னால் போதும் என்று கூறுகிறான்.

சுலைமான் நபி அவர்களுக்கு அல்லாஹ் ஏராளமான அருட்கொடைகளை வழங்கியிருந்தான். அவர்கள் அதைப் பெற்றுவிட்டு, இது தமது இறைவனிடமிருந்து தமக்குக் கிடைத்த  அருட்கொடை என்று கூறினார்கள் அதனால் அவர்கள் ஒரு நல்லடியாராக, நபியாக இருக்கிறார்கள்.

“நான் நன்றி செலுத்துகிறேனா? அல்லது நன்றி மறக்கிறேனா?” என்று என்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனின் அருட்கொடை. நன்றி செலுத்துபவர் தமக்காகவே நன்றி செலுத்துகிறார். யார் நன்றி மறக்கிறாரோ என் இறைவன் தேவையற்றவன்; கண்ணியமிக்கவன்.

அல்குர்ஆன் 27:40

ஸஃது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் அவர்களே (அல்லாஹ்விற்காக) மக்களில் அதிகமாக சோதிக்கப்பட்டவர்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், “நபிமார்கள்; பிறகு அவர்களைப் போன்றவர்கள். பிறகு அவர்களைப் போன்றவர்கள். ஒவ்வொரு மனிதனும் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு சோதிக்கப்படுவான். அவனுடைய மார்க்கப் பிடிப்பு முதுகெலும்பாக (உறுதியாக) இருந்தால் அவனுடைய சோதனைகள் அதிகரிக்கப்படும். அவனுடைய மார்க்கப்பிடிப்பு உறுதியற்றதாக இருந்தால் அவனுடைய மார்க்கப் பிடிப்பின் அளவிற்கு அவன் சோதிக்கப் படுவான்.  ஒரு அடியான் அவன் பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் அவன் மீது எந்தப் பாவங்களும் இல்லாமல் ஆகின்றவரை அவனை விட்டும் சோதனைகள் நீங்காமலேயே இருக்கும்” என்று கூறினார்கள்.

நூல்: திர்மிதி 2322

அதேபோல் நபி (ஸல்) அவர்களும் அதிகம் சோதிக்கப்பட்டார்கள்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்று அவர்களை என் கையால் தொட்டு, “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே!” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,  “ஆம்;  உங்களில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று நான் (ஒருவனே) அடைகிறேன்” என்று சொன்னார்கள்.  நான், “(இந்தத் துன்பத்தின் மூலம்) தங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதா இதற்குக் காரணம்?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆம்’ என்று கூறிவிட்டுப் பிறகு, “ஒரு முஸ்-முக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் விடுவதில்லை” என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 5660

நாம் கஷ்டத்தை அடைந்தால் அதற்குப் பகரமாக அல்லாஹ் சொர்க்கத்தைத் தருகிறான்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

அல்குர்ஆன் 2:155

எனவே நாம் சோதனையைக் காணும் போது நாம் தடம் புரளாமல் நாம் அதை மறுமைக்கான நன்மைகளாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

இஸ்லாமிய மார்க்கம் பொருளாதாரத்தைத் திரட்டுவதற்கு சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இப்படி பொருளாதாரத்தைத் தேடுகின்ற விஷயத்தில் ஹலால் ஹராம் என பிரிப்பதைப் பார்க்கின்ற இறை நம்பிக்கை இல்லாதவர்கள் அல்லது அரைகுறை இறை நம்பிக்கையாளர்கள், “இந்த தேவையில்லாத கட்டுப்பாடுகள் ஏன்?’ எனக் கேட்கின்றனர்.

ஆனால் அல்லாஹ் ஹலாலாக்கிய விஷயங்களையும் ஹராமாக்கியதையும் பிரித்துப் பார்த்தால் ஆயிரம் விஷயங்களை அல்லாஹ் ஹலாலாக்கியிருந்தால் ஒரு விஷயத்தை ஹராமாக்கியிருப்பான். உலகத்தில் நாம் வாழும் போது சம்பாதிப்பதில் மனிதன் விதித்திருக்க கூடிய சட்டங்களுக்குக் கட்டுப்படுகிறோம்.

வெளிநாட்டில் நாம் சம்பாதிப்பதை உண்டியல் மூலம் சொந்த நாட்டிற்கு அனுப்பக் கூடாது என இந்திய அரசு கட்டளையிட்டால் அதற்குக் கட்டுப்படுகிறோம். ஆனால் அல்லாஹ் ஹராமாக்கிய விஷயங்களில் கட்டுப்பட மறுக்கிறோம். எனவே இதை உணர்ந்து ஹராமான வழிகளில் சம்பாதிக்காமல் விலகிக் கொள்ள வேண்டும்.

மனிதர்களே! பூமியில் உள்ள வற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி.

அல்குர்ஆன் 2:168

நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்.

அல்குர்ஆன் 2:172

ஹராமான வழியில் சம்பாதிப்பதைக் கண்டிக்கும் விதமாக நபி (ஸல்) அவர்கள் சிறு பிள்ளைக்கு சொல்வதைப் போன்று சொல்வதைப் பாருங்கள்:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையானதையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளை யிட்டவற்றையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்” என்று கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை) ஓதிக்காட்டினார்கள்:

“தூதர்களே! தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நல்லறம் செய்யுங்கள்! நீங்கள் செய்வதை நான் அறிந்தவன்” (அல்குர்ஆன் 23:51). “நம்பிக்கை கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள்”

(அல்குர்ஆன் 2:172)

பிறகு ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். “அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற் கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி “என் இறைவா, என் இறைவா’ என்று பிரார்த்திக்கிறார். ஆனால், அவர் உண்ணும் உணவு தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அருந்தும் பானம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; அவர் அணியும் உடை தடை செய்யப்பட்டதாக இருக்கிறது; தடை செய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?” என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1844

நபி (ஸல்) அவர்கள் இந்தச் செய்தியில் இரண்டு விஷயங்களைச் சொல்கிறார்கள். ஒன்று நம்முடைய துஆக்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றால் நமது சம்பாத்தியம் தூய்மையான முறையில் இருக்கவேண்டும். அடுத்தது ஹராமான பொருளாதாரத்திலிருந்து நாம் செய்யக்கூடிய தர்மங்களுக்கு நன்மை கிடைக்காது.

அதீ பின் அமீரா அல்கிந்தீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நாம் உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நியமித்திருந்து, பின்னர் அவர் ஓர் ஊசியையோ அதை விடச் சிறியதையோ நம்மிடம் (கணக்குக் காட்டாமல்) மறைத்துவிட்டால் அது மோசடியாகவே அமையும். அவர் மறுமை நாளில் அந்தப் பொருளுடன் வருவார்” என்று கூறியதை நான் கேட்டேன். அப்போது அன்சாரிகளில் ஒரு கறுப்பு நிற மனிதர் எழுந்து, -அவரை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது- “அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் தாங்கள் ஒப்படைத்திருந்த பணியை நீங்கள் (திரும்ப) ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். அவர், “தாங்கள் இன்னின்னவாறு கூறியதை நான் கேட்டேன்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் இப்போதும் அவ்வாறே கூறுகிறேன். நாம் உங்களில் எவரையேனும் ஒரு பணிக்கு அதிகாரியாக நியமித்தால், அவர் அதில் கிடைக்கும் சிறியதையும் அதிகத்தையும் (நம்மிடம்) கொண்டுவந்து சேர்க்கட்டும். பிறகு எது அவருக்கு வழங்கப்படுகிறதோ அதை அவர் பெற்றுக்கொள்ளட்டும். எது அவருக்கு மறுக்கப்படுகிறதோ அதிலிருந்து அவர் விலகிக்கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 3743

ஹலால், ஹராமைப் பேணாத காலம் வரும் நபி (ஸல்) அவர்கள் என்று எச்சரித்தார்கள். அது நம்முடைய காலம் தான் என்று நினைக்கத் தோன்றுகிறது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மனிதர்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் வரும்..

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2083

ஹராமை ஹலாலாகச் சித்தரிக்கின்ற முஸ்லிம்களைப் பார்க்கிறோம். இப்படித் தந்திரம் செய்து ஹராமை ஹலாலாக்குவது பற்றியும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக என்னுடைய சமுதாயத்தில் சில மனிதர்கள் மதுவை அருந்துவார்கள். அவர்கள் அதற்கு வேறு பெயரைச் சூட்டிக் கொள்வார்கள்.

அறிவிப்பவர்: அபூமாலிக் (ரலி), நூல்: ஆபுதாவுத் 3203

யூதர்கள் ஹராமை ஹலாலாக்கக் கூடிய தந்திரத்தைத் தான் செய்தார்கள். அவாகளுக்கு அல்லாஹ் தடை செய்தவற்றை, தந்திரமாக ஹலாலாக்கிக் கொண்டார்கள்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, “நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்” என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!” எனக் கேட்கப்பட்டது.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், “கூடாது! அது ஹராம்!” எனக் கூறினார்கள்.  அப்போது தொடர்ந்து, “அல்லாஹ் யூதர்களை தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்!” என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 2236

ஹராமிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அதற்கு இஸ்லாம் எளிமையான வழிமுறையைக் காட்டுகிறது. அதாவது ஹலாலுக்கும் ஹராமுக்கும் மத்தியில் சில சந்தேகமான விஷயங்கள் உள்ளன. அந்தச் சந்தேகமான விஷயங்களை விட்டுவிடப் பழகினால் ஹராமான விஷயங்களை விட்டு விலகி விடுவோம்.

உதாரணமாக நம்மிடத்தில் பால் கொடுக்கப்படுகிறது. ஒருவர் அதில்  தேன் கலந்துள்ளது என்கிறார். இன்னொருவர் விஷம் கலந்துள்ளது என்கிறார். இந்நிலையில் நாம் பேணுதல் என்ற அடிப்படையில் அந்தப் பாலை குடிக்க மாட்டோம். இதே அடிப்படையில் தான் நாம் மார்க்கத்தைப் பார்க்க வேண்டும். சந்தேகமானதை விட்டு விட வேண்டும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்