ஆதம் நபி கண்ட ஐந்து பெயர்கள்

தொடர்: 2   ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு

ஆதம் நபி கண்ட ஐந்து பெயர்கள்

எம். ஷம்சுல்லுஹா

மவ்லிதுகள் அனைத்தும் ஷியாக்களின் வழியில் அமைந்தவையாகும். காரணம், ஷியாக்கள் தங்கள் இமாம்களை அல்லாஹ்வின் இடத்தில் கொண்டு போய் வைப்பார்கள்.

அத்துடன் அல்லாஹ்வின் மீதும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீதும் துணிந்து பொய் சொல்பவர்கள். அந்த வேலையை ஹுஸைன் மவ்லிதை ஆக்கியவர் நன்கு, தங்கு தடையின்றி செய்திருக்கின்றார்.

அதற்கு எடுத்துக்காட்டாக ஹுஸைன் மவ்லிதில் ஆறாவது ஹிகாயத்தாக (சம்பவமாக) இடம்பெற்றுள்ள ஒரு செய்தியைப் பார்ப்போம்.

அல்குர்ஆன் 2:37 வசனம் தொடர்பாக சிறப்புமிகு தலைவர் ஜாஃபர் சாதிக் அறிவிக்கின்றார்.

சுவனத்தின் வீட்டிற்குள் ஆதமும் ஹவ்வாவும் அமர்ந்திருந்தனர். அவ்விருவரிடமும் ஜிப்ரீல் வருகையளித்து, தங்கம் வெள்ளியினால் கட்டப்பட்ட கோட்டைக்கு அழைத்துச் சென்றனர். அந்தக் கோட்டையின் ஓரங்கள் பச்சை மரகதத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்து. கோட்டைக்குள் சிகப்பு மாணிக்கத்தால் அமைந்த கட்டில் கிடந்தது.

அந்தக் கட்டில் மீது ஒளியினால் அமைந்த மாடம் இருந்தது. அதில் ஃபாத்திமாவின் தோற்றம் காட்சியளித்தது. அவரது தலையில் கிரீடம் இருந்தது. இரு காதுகளிலும் இரண்டு வெண்முத்து வளையங்கள் தொங்கின. கழுத்தை ஒளி மின்னுகின்ற ஒரு மாலை அலங்கரித்துக் கொண்டிருந்தது.

ஃபாத்திமாவின் ஒளியைப் பார்த்து ஹவ்வா (அலை) ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். ஹவ்வாவின் அழகை மறக்கின்ற அளவுக்கு ஆதம் (அலை) அந்த ஆச்சரியத்தில் அமிழ்ந்து போனார்.

இது என்ன உருவம்? என்று ஆதம் கேட்டார்.

அந்த உருவம் ஃபாத்திமா! கிரீடம் அவரது தந்தை முஹம்மது (ஸல்) அவர்கள். கழுத்து மாலை அவரது கணவர் அலீ (ரலி). இரு காது வளையங்கள் ஹஸன், ஹுஸைன் ஆகிய அவரது செல்வங்கள் என்று கூறிவிட்டு ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது தலையை உயர்த்தி மாடத்தை ஏறிட்டுப் பார்த்தார்கள். அதில் ஐந்து பெயர்கள் ஒளியினால் பொறிக்கப்பட்டிருந்தன.

(அல்லாஹ்வாகிய) நான் மஹ்மூத் – புகழப்படக்கூடியவன்; இவர் முஹம்மது – புகழப்படக்கூடியவர்.

நான் அஃலா – மிக உயர்ந்தவன்; இவர் அலீ – உயர்வானவர்.

நான் ஃபாத்திர் – முன்மாதிரியின்றி படைப்பவன்; இவர் ஃபாத்திமா

நான் அல்முஹ்ஸின் – நன்மை செய்பவன்; இவர் ஹஸன் – நன்மை.

என்னிடம் இஹ்ஸான் – நன்மை உள்ளது; இவர் ஹுஸைன் – சிறிய நன்மை

இந்த ஐந்து பேர் தான் அந்த மாடத்தில் ஒளி சிந்தும் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளார்கள்.

அப்போது ஜிப்ரீல், “ஆதமே! இந்தப் பெயர்களை நீங்கள் மனனம் செய்து கொள்ளுங்கள். இவை உங்களுக்குத் தேவைப்படும்” என்று சொன்னார்கள்.

ஆதம் (அலை) பூமியில் இறங்கியதும் முன்னூறு ஆண்டுகள் அழுது தீர்த்தார்கள். அதன் பிறகு இந்தப் பெயர்களைக் குறிப்பிட்டு, “யா அல்லாஹ்! முஹம்மது, அலீ, ஃபாத்திமா, ஹஸன், ஹுஸைன் ஆகியோர் பொருட்டால் உன்னிடம் கேட்கிறேன். யா மஹ்மூத்! யா அலீ! யா ஃபாத்திர்! யா முஹ்ஸின்! இஹ்ஸானைக் கையில் வைத்திருப்போனே! என்னை மன்னித்துவிடு! என்னுடைய பாவமன்னிப்பை நீ ஏற்றுக் கொள்” என்று ஆதம் (அலை) பிரார்த்தனை செய்தார்கள்.

உடனே அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களிடம், “உன்னுடைய சந்ததிகளுக்கும் சேர்த்து நீ மன்னிப்புக் கோரியிருந்தால் நான் அவர்களுக்கும் சேர்த்து மன்னித்திருப்பேன்” என்று வஹீ அறிவித்தான்.

இவ்வாறு ஹுஸைன் மவ்லிதின் ஹிகாயத்தில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள சுன்னத் வல்ஜமாஅத்தினர் எனப்படுவோர் பக்கா ஷியாக்கள் தான் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் இந்தச் செய்தியை மவ்லூஆத் (இட்டுக்கட்டப்பட்டவை) என்ற நூலில் பதிவு செய்து, இதன் தொடரில் இடம்பெற்றிருக்கும் பலவீனமான அறிவிப்பாளர்களின் முகத்திரையைக் கிழித்தெறிகின்றார்கள். இதுபோல் இமாம் சுயூத்தி அவர்கள், அல் லஆலில் மஸ்னூஆ (போலி முத்துக்கள்) என்ற நூலிலும், இமாம் இப்னு இராக் அவர்கள் தன்ஸீஹுஷ் ஷரீஅத் (பொய்யான செய்திகளை விட்டும் ஷரீஅத்தைத் தூய்மைப்படுத்துதல்) என்ற நூலிலும் இந்த போலிச் செய்தியை அம்பலப்படுத்துகின்றார்கள்.

இந்தக் கேடுகெட்ட செய்திக்கு அறிவிப்பாளர் வரிசை வேறு! இதில் ஹஸன் பின் அலீ அஸ்கரிய்யு இடம் பெறுகின்றார். ஷியாக்களுக்கு 12 இமாம்கள் உள்ளனர். அவர்களில் இவர் இறுதியானவர். இவருடன் 12 இமாம்களின் வரிசை நிறைவுபெறுகின்றது.

இவர் ஒன்றுக்கும் ஆகாதவர் என்று இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இங்குதான் ஹதீஸ் கலை அறிஞர்களின் வேலைப்பாட்டை எண்ணி அதிசயிக்க வேண்டியுள்ளது. ஹுஸைன் மவ்லிதில் வந்திருக்கும் இந்த ஹதீஸை அறிஞர்கள் அடையாளம் காட்டியிருப்பார்களா என்ற ஐயத்துடன் இதை ஆய்வு செய்தால் இது தொடர்பான பொய்ச் சரக்குகளையும் அதைப் பற்றி அறிஞர்களின் ஆய்வுப் பார்வையையும் நம்மால் பார்க்க முடிகின்றது.

சுன்னத் ஜமாஅத்தினர் சுத்த ஷியாக்களே!

ஹுஸைன் மவ்லிதில் இடம்பெற்றுள் இந்தச் செய்தி, “அஸ்ஸய்யித் ஜஃபர் சாதிக் (ரலி) அறிவிக்கின்றார்கள்’ என்று துவங்குகின்றது. ஜஃபர் சாதிக் என்பவர் ஷியாக்களின் இமாம்களில் ஆறாவது இமாம் ஆவார். இவர்களுக்கெல்லாம் இமாம் என்ற பெயர்; அதற்கு ரலியல்லாஹு அன்ஹு என்ற துஆ வேறு!

இந்த ஜஃபர் சாதிக்கின் பெயரில் தான் ரஜப் மாதத்தில் பூரியான் பாத்திஹா என்ற பூஜை, மவ்லானா மவ்லவி பாகவி மிஸ்பாஹிகளால் நடத்தப்படுகின்றது. சுன்னத் வல்ஜமாஅத் என்று தம்பட்டம் அடிக்கின்ற இந்த ஐயாக்கள் சுத்த ஷியாக்கள் தான் என்பதை இந்த ஹுஸைன் மவ்லிதைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

ஷியாக்களின் ஆறாவது இமாமை மதிப்பவர்கள் அவரது ஹதீஸ ஏற்பவர்கள் எப்படி சரியான முஸ்லிமாக இருக்க முடியும்?

இதை வருடாவருடம் முஹர்ரம் மாதத்தில் பயபக்தியுடன் படிக்கின்றார்கள் என்றால் இவர்கள் யார்? என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட இந்தப் பொய்ச் சரக்கு தான் இந்த மவ்லிது கிதாபில் ஜஃபர் சாதிக்கின் பெயரால் விற்கப்படுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் மீது யார் இட்டுக்கட்டி பொய் சொல்வானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 110

இந்த அளவுக்கு நபி (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டித்திருந்தும், அவர்கள் மீது திட்டமிட்டு இப்படிப் பொய் சொல்கிறார்கள் என்றால் இவர்கள் நரகத்திற்குச் செல்வதற்குத் தங்களை பயிற்சியும் பக்குவமும் படுத்திக் கொண்டார்கள் என்பது தான் இதன் பொருளாகும். அல்லாஹ் நம்மைக் காக்க வேண்டும்.

ஷியாக்கள் நபி (ஸல்) அவர்கள் மீது பொய் சொல்வதில் எந்த வஞ்சமும் செய்ய மாட்டார்கள்; எந்த தயவு தாட்சண்யமும் காட்ட மாட்டார்கள்.

அதுபோன்று இந்தப் போலி சுன்னத் வல் ஜமாஅத்தினரும் நபி (ஸல்) அவர்கள் மீது பொய்களைச் சொல்லத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு இது மற்றொரு எடுத்துக்காட்டாகும்.

இதுவரை இந்த ஹதீஸ் முழுவதும் இட்டுக்கட்டப்பட்ட பொய் என்பதை அறிவிப்பாளர் ரீதியாகப் பார்த்தோம். இனி இந்தப் பொய்ச் செய்தியின் உள்ளே புகுந்து, இது எப்படி குர்ஆன், ஹதீஸை விட்டும் முரண்படுகின்றது என்பதை உரசிப் பார்ப்போம்.

ஜிப்ரீலை இழிவுபடுத்துதல்

ஜிப்ரீல் (அலை) அவர்களை அல்லாஹ் தனது திருமறையில் உயர்த்திப் பேசுகின்றான்; சிறப்பித்துக் கூறுகின்றான்.

எச்சரிக்கை செய்வோரில் (முஹம்மதே) நீர் ஆவதற்காக, உமது உள்ளத்தில் தெளிவான அரபு மொழியில் நம்பிக்கைக்குரிய ரூஹ் இதை இறக்கினார்.

அல்குர்ஆன் 26:193-195

(அவர்) வலிமை மிக்கவர்; அர்ஷுக்கு உரியவனிடத்தில் தகுதி பெற்றவர்.  வானவர்களின் தலைவர்; அங்கே நம்பிக்கைக்குரியவர்.

அல்குர்ஆன் 81:20, 21

இத்தகைய சிறப்புக்குரிய ஜிப்ரீலை, நபி (ஸல்) அவர்களின் குடும்பச் செயலாளர் போன்று இந்தச் சம்பவம் சித்தரித்துக் காட்டுகின்றது. இந்த வகையில் இது மலக்குகளை இழிவாகப் பேசுகின்ற இழிசெயலாகும்.

சுவனத்தின் சொந்தங்கள்

சுவனம் முழுவதையும் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்திற்காக அல்லாஹ் பட்டா போட்டுக் கொடுத்துவிட்டதாக இந்தச் செய்தி சித்தரிக்கின்றது. சுவனம் என்பது யார் அமல் செய்கின்றார்களோ அவர்களை அதற்கு வாரிசாக்கி விடுகின்றான். இதைப் பின்வரும் வசனங்கள் உணர்த்துகின்றன.

உங்கள் செயல்களின் காரணமாக உங்களுக்கு உரிமையாக்கப்பட்டுள்ள சொர்க்கம் இதுவேஎன்று அவர்களுக்குக் கூறப்படும்.

அல்குர்ஆன் 7:43

இதுவே நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக உங்களுக்கு உரிமையாக்கப்பட்ட சொர்க்கம்.

அல்குர்ஆன் 43:72

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு ஃபஜ்ர் தொழுகை (முடிந்த) நேரத்தில் நபி (ஸல்) பிலால் (ரலி) அவர்களிடம், “பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பின் நீங்கள் செய்த ஓர் நற்செயல் (அமல்) பற்றிக் கூறுங்கள்! ஏனெனில் சொர்க்கத்தில் எனக்கு முன்பாக (நீங்கள் நடந்து செல்லும்) செருப்போசையை நான் செவியுற்றேன்என்று கூறினார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “நான் இரவு பகல் எந்த நேரத்தில் அங்கசுத்தி (உளூ) செய்தாலும் அந்த அங்க சுத்திக்குப் பின் நான் தொழ வேண்டுமென என் விதியில் எழுதப்பட்டிருப்பதை நான் தொழாமல் இருப்பதில்லை. இந்த நற்செயலைத்தான் நான் மிகுந்த எதிர்பார்ப்புடன் செய்ததாக நான் கருதுகிறேன்என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 1149

சமுதாயத்தில் ஒதுக்கப்பட்ட ஒரு மனிதருக்கு இம்மாபெரிய மகத்துவத்தைக் கொடுப்பதற்குக் காரணம் அவர் செய்த அமல் தான். இந்த அடிப்படையில் சுவனம் என்பது அமல் செய்தவர்களுக்குரியதாகும். நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் நம்பிக்கை கொண்டு, நல்லமல் செய்தால் அவர்கள் சுவனத்தின் சொந்தக்காரர்கள். இல்லையென்றால் இந்தப் பாக்கியத்தை இழந்துவிடுவார்கள். இதுதான் அல்லாஹ்வின் நியதி!

இதற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்களின் மகளாகப் பிறந்ததால் அல்லாஹ் அவர்களுக்கு சுவனத்தைப் பட்டா போட்டுக் கொடுத்துவிட்டதாக ஹுஸைன் மவ்லிதில் இடம்பெற்றுள்ள இந்தச் செய்தி சித்தரிக்கின்றது. இந்த அடிப்படையில் குர்ஆன், ஹதீஸின் நிலைப்பாட்டிற்கு முரணாக இது அமைந்துள்ளது.