ஹதீஸ்களை மறுக்கும் ஹதீஸ்கலை விதிகள்

ஹதீஸ்களை மறுக்கும் ஹதீஸ்கலை விதிகள்

முஹம்மது அலீ, ஸபீர் அலீ

இஸ்லாமியக் கல்லூரி மாணவர்கள்

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தமிழகத்தில் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக ஏகத்துவச் சுடரை ஒளிரவிட்டதின் விளைவாக மத்ஹபுகளிலும், தரீக்காக்களிலும், கஃப்ஸாக்களிலும், பெரியார்களின் புராணத்திலும், ஷேகு முரீதுகளிலும் மூழ்கித்திளைத்த சமுதாயத்தை திருமறைக் குர்ஆன் ஹதீஸ்கள் என்ற ஏகத்துவப் பாதையில் ஒன்றிணைத்தது.

தொழுகையில் மாத்திரம் குர்ஆன் ஓதிய சமுதாயத்தின் வாழ்க்கையிலும் குர்ஆனை மிளிரவைத்தது.

ஹதீஸ்கள் என்ற பெயரில் வயிற்றுப் பிழைப்புக்காக கட்டுக்கதைகளை கட்டவிழ்த்துக் கொண்டிருந்த சமுதாயத்தில் செவியேற்பதெல்லாம் ஹதீஸ்களாகாது; அதற்கென்று வழிமுறைகளையும் விதிமுறைகளையும் ஹதீஸ்துறை அறிஞர்கள் வகுத்துத் தந்துள்ளார்கள் என்று உலகத்திற்குப் பறைசாற்றியது.

இதன் மூலம் கட்டுக்கதைகள் மற்றும் கஃப்ஸாக்களை விட்டும் ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டன.

ஏகத்துவ வாதிகளின் வாழ்க்கையில் குர்ஆனைப் போன்று ஹதீஸ்களும் ஓர் அங்கமாக மாறியது. அதன் விளைவுதான் சில ஹதீஸ்களை நிலைநாட்டியதற்காக ஏகத்துவ சொந்தங்கள் புரட்டி எடுக்கப்பட்டார்கள், ஊரை விட்டு விரட்டி அடிக்கப்பட்டார்கள், செல்வங்களை இழந்தார்கள், சொந்தங்களால் பகைக்கப்பட்டார்கள். இன்னும் ஒருபடி மேல போய் சில ஏகத்துவவாதிகளின் உயிர்களும் பறிக்கப்பட்டது. அத்தனை போராட்டங்களும் குர்ஆனையும் ஹதீஸ்களையும் நிலைநாட்டுவதற்குத்தான்.

ஹதீஸ்களுக்காக இத்தனை துன்பங்களையும் சுமந்த இந்த ஜமாஅத்தை இன்று ஹதீஸ்களை மறுக்கும் ஜமாஅத் என்று சொல்வதுதான் மிகப்பெரும் வேடிக்கை!

இன்று நம்மைப் பார்த்து ஹதீஸ்களை மறுக்கிறார்கள் என்று குறை சொல்லக்கூடியவர்கள் தங்களை அறிந்தோ அறியாமலோ அவர்களும் பல ஹதீஸ்களை மறுக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், நாம் மறுப்பது திருமறைக் குர்ஆனுக்கு மாற்றமாக இருக்கிறது என்ற காரணத்தினால் ஆகும். ஆனால் அவர்கள் மறுப்பதோ ஹதீஸ்கலை விதிக்கு மாற்றமாக இருப்பதினால் ஆகும்.

ஹதீஸ்கலை விதிகளுக்கு முரணாகிறது என்று மறுப்பதை விட குர்ஆனுக்கு முரணாகிறது என்று கூறி மறுப்பது மிகவும் உறுதியானது என்பதை இங்கே அவர்கள் மறந்து விடுகிறார்கள்.

நம்மைப் பார்த்து இவர்கள் “நவீன முஃதஸிலாக்கள், காரிஜியாக்கள்” என்று வசைபாடுகிறார்கள். முஃதஸிலாக்கள் குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று கூறி ஹதீஸ்களை மறுத்ததால் அந்த விதியையே மறுக்க வேண்டும் என்று வாதிடுகின்றார்கள்.

இந்த வாதத்தில் அவர்கள் உண்மையாளர்கள் எனில், முஃதஸிலாக்கள், அல்லாஹ் ஒருவன் என்று கூறுகிறார்கள். அதற்கு மாற்றமாக இவர்கள் கூறத் துணிவார்களா?

மார்க்க விஷயத்தில் முஃதஸிலாக்களும், காரிஜியாக்களும் எதைக் கூறியிருக்கிறார்கள் என்று கவனித்து, அதற்கு நேர் எதிராகக் கூறுவது அறிவார்ந்த செயலா? அல்லது அதில் குர்ஆனும் ஹதீசும் என்ன கூறுகிறது என்று முடிவு செய்வது அறிவார்ந்த செயலா?

நம்மைக் குறை கூறுபவர்கள், ஹதீஸ் கலையின் விதிகளின் அடிப்படையில் எவ்வாறு ஹதீஸ்களை மறுக்கிறார்கள் என்று கூறுவதற்கு முன்னால் இஸ்லாத்தின் ஓர் அடிப்படையை இங்கே பதிவுசெய்கிறோம்.

குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் பாதுகாப்பு தன்மை

இஸ்லாம் என்ற மாளிகையில் இரு மாபெரும் தூண்களான குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் பாதுகாப்புத் தன்மை ஒரே சமமானதாக இல்லையென்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இவ்வாறு நாம் கூறுவதினால் ஹதீஸ்கள் என்றாலேயே சந்தேகத்திற்கு இடமானது என்பது நமது வாதமல்ல.

மாறாக, குர்ஆனில் எவ்வித தவறோ, குறையோ, கலப்படமோ, கூட்டலோ, குறைத்தலோ, திரித்தலோ, மாற்றலோ இருக்கவே முடியாது என்பதை நாம் அனைவரும் ஒருமித்த கருத்தோடு ஏற்றுக்கொள்கிறோம்.

அதற்கு, இலட்சக்கணக்கான நபித்தோழர்கள் சான்று பகர்கிறார்கள். அதற்கடுத்து, அதற்கடுத்து என்று பல தலைமுறையினர் அதை உறுதிப்படுத்துகிறார்கள்.

அதைவிட, படைத்தவனே அதைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான்.

“இந்த உபதேசத்தை நாமே இறக்கினோம். இதை நாமே பாதுகாப்போம்”.

(அல்குர்ஆன் – 15:9)

ஆனால் ஹதீஸ்கள், குர்ஆனைப் போன்று அல்லாமல் வேறு முறையில் பாதுகாப்பைப் பெற்றுள்ளது. அதாவது குர்ஆனிற்கும், ஹதீஸிற்கும் மத்தியில் பாதுகாப்புத் தன்மையில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை.

அதனால் தான் குர்ஆனுடைய வசனத்தை யாரேனும் கூறினால் அது நம்பகமானதா என்று ஆராய்வதற்கு அணுவளவும் இடமின்றி அதை அப்படியே தங்குதடையின்றி உடனே ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால், ஹதீஸ்கள் என்று யாராவது கூறினால் அந்தச் செய்தி சரியானது தானா? அதனை அறிவிப்பவரின் நம்பகத்தன்மை எவ்வாறு? அவருடைய குலம் என்ன? கோத்திரம் என்ன? அவர் எந்தக் காலத்தில் வாழ்ந்தவர்? அவருக்கு அறிவித்தவர் யார்? அவருடைய நம்பகத்தன்மை என்ன? நபி (ஸல்) அவர்களுடைய செய்தியை அறிவிப்பதற்கு அவர் தகுதியானவரா? என்று சல்லடை போட்டு வேறு யாருடைய வாழ்க்கையையும் இந்த அளவிற்கு ஆராய்ந்ததில்லை என்று சொல்லுமளவிற்கு அவர் மீது கழுகுப் பார்வைகள் சுமத்தப்படுகிறது.

அத்துடன் விட்டுவிடாமல் அந்தச் செய்தியைப் பற்றியும் ஆய்வுசெய்து, இதே போன்ற வேறு செய்திகளுக்கு மாற்றமாக இந்த செய்தி இருக்கிறதா? அல்லது குர்ஆனுடைய ஏதேனும் வசனத்தின் கருத்திற்கு மாற்றமாக இது இருக்கிறதா? என்று நமக்கு முன்னால் வாழ்ந்த ஹதீஸ்கலை முன்னோடிகளான பல இமாம்கள் அதுபற்றிய சட்டங்களை நமக்கு வகுத்து தந்துள்ளார்கள்.

அந்தச் சட்டங்களை இன்று உலகமே ஏற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

ஆனால், சில இடங்களில் அது தெளிவாகப் பேசப்படாமல் மூடலாக விடப்பட்டதின் காரணத்தினால், இன்று ஹதீஸ் கலையை சரியான ஆய்வுக் கண்ணோட்டத்தோடு அணுகாத சிலர் அறிவிப்பாளர் வரிசை சரியாக இருக்கிறது என்ற ஒரு விதி மட்டுமே ஒரு ஹதீஸ் சரியானது என்பதற்கு ஆதாரமாகும் என்று கூறுகின்றனர்.

“அதனுடைய இஸ்னாத் (அறிவிப்பாளர் வரிசை) மாத்திரம்தான் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியது, அதன் மத்தன் (ஹதீஸின் கருத்து) என்ன கருத்தை தருகிறது என்பதை ஆய்வு செய்யக்கூடாது, அப்படி ஆய்வுசெய்வது நம்மை ஹதீஸ் மறுப்புக் கொள்கையில் கொண்டு சேர்த்து விடும், இது போன்ற ஒரு விதி ஹதீஸ்கலையில் எங்குமே கிடையாது, இந்த விதியை எந்த நல்லறிஞர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை, அறிவிப்பாளர்கள் வரிசை சரியாக அமைந்த ஹதீஸ்கள் குர்ஆனுடன் ஒருபோதும் முரண்படாது, அப்படி வருமென்று நாம் நம்பினால் அது நமது அறிவுடைமை’ என்று பரவலாக வாதிடுவதை நாம் பார்க்க முடிகிறது.

இவர்களுடைய இந்த வாதம் திருமறைக் குர்ஆனுடைய அடிப்படையையே அறியாததின் விளைவாக எழுந்துள்ளது என்பதை திருக்குர்ஆனின் அடிப்படைகளை அறிந்திருக்கும் அனைவரும் புரிந்துக் கொள்வார்கள்.

ஏனென்றால், இஸ்லாமிய மார்க்கம் மற்ற அனைத்து மதங்களை விடவும் விலகி நிற்கும் முக்கியமான இடமே, இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கண்மூடிப் பின்பற்றாமல் அவற்றை அறிந்து சிந்தித்துப் பின்பற்ற வேண்டும் என்பதில்தான்.

அதனால்தான் அல்லாஹ் கூறுகிறான்,

(இறை நம்பிக்கையாளர்களுக்கு) தங்களின் இறைவனின் வசனங்களின் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அதன் மீது செவிடர்களாகவும் குருடர்களாகவும் விழமாட்டார்கள். (அல்குர்ஆன் 25:73)

அவர்கள் இக்குர்ஆனை சிந்திக்க வேண்டாமாஅல்லது உள்ளங்களின் மீது பூட்டுகள் உள்ளதா? (அல்குர்ஆன் 47:24)

இதுபோன்று இன்னும் ஏராளமான வசனங்கள், இறை நம்பிக்கையாளர்கள் இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கண்மூடி பின்பற்றக்கூடாது, கருத்தை விளங்கித்தான் பின்பற்றவேண்டும் என்பதைத் தெளிவாக விளக்குகின்றன.

ஆனாலும், இந்த ஆதாரங்களை மறந்து ஹதீஸ்கலை விதிகளை மாத்திரம் முன்னிறுத்தி வாதிடக்கூடியவர்களுக்கு ஹதீஸ்கலை விதிகளும் இதைத்தான் சொல்கிறது என்பதை எவ்வித காய்தல் உவத்தலின்றி நேரான கண்ணோட்டத்தோடும், தெளிவான சிந்தனையுடனும், ஹதீஸ் கலை விதிகளிலிருந்தே சில கேள்விகளை நாம் முன்வைக்கின்றோம்.

ஷாத்

ஹதீஸ்கலையில் “ஷாத்” என்ற ஒரு விதியிருக்கிறது. அதாவது, ஒரு நம்பகமான அறிவிப்பாளர் அறிவிக்கும் செய்தி, அவரைவிட நம்பகமான  ஒரு அறிவிப்பாளரோ அல்லது பலரோ அறிவிக்கும் செய்திக்கு மாற்றமாக இருந்தால் அந்தச் செய்தி ஷாத் எனப்படும்.

நம்பகமான ஒரு அறிவிப்பாளர் அவரை விட நம்பகத்தன்மையில் சற்று வலுவான ஒருவருக்கோ அல்லது ஒரு கூட்டத்திற்கோ மாற்றமாக அறிவிக்கும் போது அவருடைய ஹதீஸ் ஷாத் என்று கூறி மறுக்கப்படும். அதே நேரத்தில் அவரை விட வலுவானவருடைய செய்தி மக்பூல் என்று ஏற்றுக்கொள்ளப்படும்.

ஷாதிற்கு உதாரணம்

“உங்களில் ஒருவர் ஃபஜர் தொழுகையை தொழுதால் அவர் தனது  வலது புறம் ஒருக்களித்து படுத்துக் கொள்ளட்டும்” என்று நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் என்ற செய்தி அபூதாவூத் (1070) மற்றும் திர்மிதியில் (385) பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைப் பற்றி இமாம் பைஹகீ அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான அப்துல் வாஹித் என்பவர் இந்தச் செய்தியில் பல அறிவிப்பாளர்களுக்கு மாற்றமாக அறிவிக்கிறார்.

ஏனென்றால், பெரும்பான்மையான அறிவிப்பாளர்கள் இந்தச் செய்தியை நபியவர்களுடைய கூற்றாக அல்லாமல், நபியவர்கள் செய்ததாகத் தான் அறிவிக்கிறார்கள். இன்னும், இந்த ஹதீஸை அஃமஷ் எனும் அறிவிப்பாளர் வழியாக அறிவிக்கக்கூடிய நம்பகமான அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் அப்துல் வாஹித் மாத்திரம் (நபியவர்களின் செயலாக அல்லாமல் கட்டளையாக) அறிவிக்கிறார் என்று இமாம் பைஹகீ கூறுகிறார்கள்.

(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ் – பக்கம் 124)

மேற்கண்ட செய்தியில், பல நம்பகமான அறிவிப்பாளர்கள் நபியவர்கள் ஒருக்களித்துப் படுத்துக்கொள்வார்கள் என்று அறிவிக்கும் போது ஒரு அறிவிப்பாளர் மாத்திரம் “படுத்துக் கொள்ளட்டும்” என்று நபியவர்கள் மக்களுக்குக் கட்டளையிடும் விதமாக அறிவிப்பதினால், பெரும்பான்மையான அறிவிப்பாளர்களுக்கு மாற்றமாக இவர் அறிவிக்கும் செய்தி அமைந்திருக்கிறது என்ற அடிப்படையில் அந்த ஒரு அறிவிப்பாளருடைய செய்தியை ஷாத் என்று கூறி மறுக்கிறார்கள்.

இங்கு, ஷாத் என்று மறுக்கப்படக்கூடிய அறிவிப்பு மறுக்கப்படுவதன் காரணமே அவரை விட வலுவானவருக்கு அவர் முரணாக அறிவிக்கின்றார் என்பதுதான்.

அப்படியென்றால் ஓர் உறுதியான அறிவிப்பாளரை விட பலகோடி உறுதியான அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்பட்ட திருமறைக்குர்ஆனுக்கு, அறிவிப்பாளர் சரியாக இருக்கின்ற ஒரு ஹதீஸ் நேர்முரணாக வருகிறது என்றால் அதை மறுப்பது வழிகேடா?

இரண்டு ஹதீஸ்களுக்கிடையில் இது போன்ற முரண்பாடு வரும்போது ஷாத் என்று கூறி மறுப்பவர்கள், குர்ஆனுக்கு எதிராக ஒரு ஹதீஸ் வரும்போது, அதை மறுப்பதற்கு தயங்குவதேன்?

அறிவிப்பாளர் தொடர் சரியான எந்தச் செய்தியும் குர்ஆனுக்கு மாற்றமாக வராது. ஆனால், ஹதீஸிற்கு மாற்றமாக அறிவிப்பாளர் சரியான செய்திகள் வரும், என்றால் இது குர்ஆனை விட ஹதீஸை முன்னிறுத்தும் போக்கு இல்லையா?

முத்ரஜ்

ஹதீஸ்கலையில் “முத்ரஜ்” என்ற ஒரு வகை உள்ளது.

அதாவது, அறிவிப்பாளரின் சொந்தக் கருத்து நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் போன்று இடம் பெற்று விடும். இதற்கு இடைச் செருகல் (முத்ரஜ்) என்று கூறுவர்.

இது போன்ற இடங்களில் இந்த வார்த்தை, யாரோ ஒரு அறிவிப்பாளரால் அறிந்தோ, அறியாமலோ நுழைக்கப்பட்டது என்று கண்டுப்பிடிப்பதற்குப் பல வழிமுறைகளை ஹதீஸ்கலை மேதைகளான இமாம்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதில் ஒரு முறைதான் “நபி(ஸல்) அவர்கள் இந்த வாசகத்தைக் கூறுவது அசாத்தியமானது என்று முடிவெடுப்பது”.

(முத்ரஜை அறியும் வழிமுறைகளில் ஒன்று) நபியவர்களுடன் அதை இணைப்பது அசாத்தியமாவதாகும்.

(நுகத் அலா கிதாபி இப்னிஸ் ஸலாஹ் பாகம் 2 / பக்கம் 812)

அதாவது, நபி (ஸல்) ஒருபோதும் இதுபோன்ற வார்த்தையைக் கூறியிருக்க மாட்டார்கள் என்று உளப்பூர்வமாக முடிவெடுப்பதாகும்.

முத்ரஜிற்கு உதாரணம்

“அடிமைக்கு இரண்டு கூலிகள் இருக்கிறது. என்னுடைய உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுவது மற்றும் ஹஜ் செய்வதும், எனது தாய்க்கு நல்லறம் செய்வதும் இல்லையென்றால் நான் அடிமையாக மரணிப்பதற்கே விரும்புகிறேன்” என்று நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியை ஹதீஸ் துறை இமாம்கள் எடுத்து சொல்லி முத்ரஜிற்கு உதரணமாக குறிப்பிட்டு விட்டு “என்னுடைய உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுவது மற்றும் ஹஜ் செய்வதும், எனது தாய்க்கு நல்லறம் செய்வதும் இல்லையென்றால் நான் அடிமையாக மரணிப்பதற்கே விரும்புகிறேன்” என்ற கூற்று அபூஹுரைராவுடைய கூற்றாகும்.

நபியவர்கள் இதைக் கூறுவதற்கு சாத்தியமில்லை. ஏனென்றால், நபியவர்கள் அடிமைத்தனத்தை ஆசைப்படவும் மாட்டாகள். மேலும் நபியவர்கள் தன்னுடைய தாய்க்குப் பணிவிடை செய்வதற்கு நபியவர்களின் தாயார் உயிரோடிருக்கவுமில்லை என்று கூறி மேற்கண்ட வாசகத்தை ஹதீஸ்கலை அறிஞர்கள் “முத்ரஜ்” என்று குறிப்பிடுகிறார்கள்.

(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ் – பக்கம் 132)

இதே வழிமுறையைத் தான் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை நாம் விமர்சனம் செய்யும் போது அதனுடைய முரண்பாட்டை விளக்கிவிட்டு, ஒருபோதும் நபி (ஸல்) அவர்கள் வஹீ செய்திக்கு முரணாகப் பேசவே மாட்டார்கள் என்று ஆணித்தரமாகக் கூறுகிறோம்.

இப்படிக் கூறுவதை ஹதீஸ் மறுப்பு கொள்கை என்று கூறினால், மேலே நாம் எடுத்துக் காட்டிய இந்த ஹதீஸ்கலை விதியை, ஹதீஸ்கலையை தொகுத்த ஏராளமான இமாம்கள் கூறுகிறார்களே இவர்கள் அனைவரும் ஹதீஸ் மறுப்புக் கொள்கையைப் போதிக்கிறார்கள் என்று நம்மை எதிர்ப்பவர்கள் கூறத்தயாரா?

இங்கே, ஒரு விஷயத்தை நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும்.

குர்ஆனில் இது போன்ற இடைச்செருகல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆகையினால்தான் குர்ஆனுடைய பாதுகாப்பிற்கும் ஹதீஸ்களுடைய பாதுகாப்பிற்கு மத்தியில் வித்தியாசம் இருக்கிறது என்று நாம் கூறுகிறோம். ஹதீஸ்களை மறுப்பதற்கல்ல.

மக்லூப்

நம்பகமான அறிவிப்பாளர்கள்கூட சில இடங்களில் மாற்றமாக அறிவிப்பார்கள் என்பதை நிரூபிக்கும் மற்றுமொறு ஹதீஸ்கலை விதிதான் “மக்லூப்” என்பதாகும்.

அதாவது, ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஒருவருடைய பெயரை மாற்றி அறிவிப்பதோ அல்லது அதனுடைய மத்தனின் (கருத்தின்) வார்த்தைகளை முற்படுத்தியோ அல்லது பிற்படுத்தியோ அறிவித்துவிடுவது.

மக்லூபிற்கு உதாரணம்

“தன்னுடைய நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத நாளில் அல்லாஹ் ஏழு நபர்களுக்கு தனது நிழலைத் தருவான். அதில் ஒருவர், “தனது இடது கை செலவு செய்ததை வலது கை அறியாத அளவுக்கு மறைத்து தர்மம் செய்தவர்” என்று நபியவர்கள் கூறியதாக முஸ்லிமில் (1712) வரக்கூடிய செய்தியில் சில அறிவிப்பாளர்கள் வலது கை என்று வரக்கூடிய இடத்தில் இடது கை என்று மேற்கூறப்பட்டவாறு மாற்றமாக அறிவிக்கிறார்கள் என்று ஹதீஸ்துறை அறிஞர்கள் “இடது கை செய்கின்ற தர்மம்” என்ற செய்தியை “மக்லுப்” என்று மறுக்கிறார்கள்.

(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ் – பக்கம் 135)

இந்த இடத்தில் தவறு செய்திருப்பவர் நம்பகமான அறிவிப்பாளர்தான். அவர் பல நம்பகமானவர்கள் “வலது கரம் செய்யும் தர்மம்” என்று அறிவித்திருக்க அதற்கு மாற்றமாக இவர் மாத்திரம் “இடது கை” என்று அறிவிப்பதினால், அவர் தவறாக அறிவித்துவிட்டார் என்று ஹதீஸ் துறையில் அனைத்து இமாம்களும் முடிவெடுத்து விட்டனர்.

அப்படியென்றால், திரும்பவும் நாம் ஆரம்பத்தில் கேட்ட அதே கேள்வியை இங்கே கேட்பது பொருத்தமாக இருக்கும்.

நம்பகமான மனிதர்களுக்கு மாற்றமாக இங்கு ஒருவர் அறிவித்திருப்பதினால் இது மறுக்கப்படுகிறது என்றால் அனைத்து இமாம்களும் ஏன் நம்மை எதிர்ப்பவர்களும் இந்த விதியை ஏற்றுக் கொள்வதின் மூலம் ஹதீஸ் மறுப்பு கொள்கையை தங்களுக்குத் தாங்களே கூறிக் கொள்கிறார்கள். அல்லது நம்பகமான அறிவிப்பாளர் தவறுவிட்டிருக்கிறார் என்று புரிந்துகொண்டு குர்ஆனுக்கு முரணாகவும் இது போன்று அவர் அறிவிக்க வாய்ப்புள்ளது என்று தங்களையும் அறியாமல் ஒப்புக் கொள்கிறார்கள்.

முஸஹ்ஹஃப்

நம்பகமான அறிவிப்பாளர், தான் அறிவிக்கும் ஒரு ஹதீஸின் வார்த்தையையோ அல்லது கருத்தையோ அவர் அறிவிக்காத விதத்தில் மாற்றி அறிவிப்பதை ஹதீஸ் கலையில் “முஸஹ்ஹஃப்” என்று சொல்வார்கள்.

முஸஹ்ஹஃபிற்கு உதாரணம்

“நாங்கள் அனஸா எனும் கோத்திரத்தைச் சார்ந்த அந்தஸ்து மிக்க கூட்டத்தினர். நபியவர்கள் எங்களை நோக்கி தொழுதார்கள் என்று அபூ மூஸா அவர்கள் கூறுவதின் நோக்கம், “நபியவர்கள் அனஸாவை நோக்கி தொழுதார்கள்” எனும் அஹ்மதில் (18783) இடம்பெற்றிருக்கும் ஹதீஸாகும். நபியவர்கள் அபூ மூஸாவுடைய கோத்திரத்தை நோக்கி தொழுதார்கள் என்று அவர்கள் தவறாக விளங்கி கொண்டார்கள்.

இங்கே அனஸா என்ற வார்த்தையின் மூலம் குறிப்பிடுப்படுவது தொழக்கூடியவனுக்கு முன்னால் நட்டப்படும் ஈட்டியாகும் என்று கூறி “எங்களை நோக்கி தொழுதார்கள்” என்ற அறிவிப்பை “முஸஹ்ஹஃப்” என்று ஹதீஸ்கலை வல்லுனர்கள் முடிவுசெய்கிறார்கள்.

(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ் – பக்கம் 146)

இது போன்று தவறாக அறிவிக்கும் ஒரு அறிவிப்பாளர் பல தடவை தவறாக அறிவிக்கும் போதுதான் அவர் பலவீனமானவராக கருதப்படுவார்.

ஓரிரு முறை இவ்வாறு அறிவிப்பதால் அந்த அறிவிப்பாளர் பலவீனமானவர் என்ற தரத்தை அடையமாட்டார் என்பதும், ஹதீஸ்கலை இமாம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதியாகும்.

அவர், தொடர்ந்து தவறாக அறிவிப்பதை வேறு சில ஹதீஸ்களை ஆய்வு செய்வதின் மூலம் கண்டுபிடிக்க முடியும். இவ்வாறு ஹதீஸை ஆய்வு செய்து மற்ற ஹதீஸ்களுக்கு மாற்றமாக அவர் அறிவித்திருக்கிறார் என்று தெரியும்போது ஒரு அறிவிப்பாளரை பலவீனமாக்க முடியும் என்றால் திருமறை குர்ஆனின் நம்பகத்தன்மையை முன்னிறுத்தி அதற்கு முரணாக வருகின்ற செய்திகளை மறுப்பதில் என்ன தவறிருக்கிறது என்பதை அறிவுடையோர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

முழ்தரிப்

இறுதியாக ஹதீஸ்கலையில் “முழ்தரிப்” என்று ஒரு வகை உண்டு.

முழ்தரிப் என்றால், ஒரு செய்தி முரண்பாடாக பல வழிகளில் அறிவிக்கப்படும். ஆனால், அந்த அறிவிப்புகளுக்கு மத்தியில் ஷாத் என்ற வகையில் கூறியது போன்று எந்த காரணமும் கூறி அதில் ஒரு அறிவிப்பை மற்ற அறிவிப்புகளை விட உயர்த்தவோ தாழ்த்தவோ முடியாதவாறு முரண்படும். அதாவது, அந்த அறிவிப்புகள் பலத்திலும் சமமானதாக இருக்கும்.

அல்லது, ஒரு குறிப்பிட்ட அறிவிப்பாளர் ஒரே செய்தியை முரண்பட்ட பல வகைகளில் அறிவிப்பார்.

உதாரணமாக, ஓருவர் ஒருமுறை அறிவிக்கும்போது நான் இவரைப் பார்த்திருக்கிறேன் என்றும், மற்றொரு முறை அறிவிக்கும்போது நான் இவரைப் பார்க்கவில்லை என்றும் மாற்றி மாற்றி அறிவிப்பதாகும்.

முழ்தரிபுக்கு உதாரணம்

“ஸகாத்தைப் பற்றி நபியவர்களிடம் கேட்கப்பட்டது. செல்வத்தில் ஸகாத் அல்லாத ஏனைய கடமைகளும் இருக்கிறது என்று நபியவர்கள் கூறியதாக ஃபாத்திமா பினத் கைஸ் (ரலி) அவர்களுடைய செய்தி திர்மிதியில் (596) பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம், இமாம் இப்னு மாஜாவில் (1779)  “செல்வத்தில் ஸகாத்தைத் தவிர வேறு கடமையில்லை” என்ற செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இமாம் இராகீ அவர்கள், இந்தச் செய்திகள் இணைத்து விளக்கம் கொடுக்க முடியாத அளவுக்கு ஒன்றுக்கொன்று நேர் முரணான “முழ்திரிப்” என்ற வகையை சார்ந்ததாகும் என்று கூறுகிறார்கள்.

(தைஸீருல் முஸ்தலஹில் ஹதீஸ் – பக்கம் 143)

இதுபோன்று முரண்பட்டு அறிவிக்கப்படும் அந்த அறிவிப்புகளில் அறிவிப்பாளர் வரிசை அனைத்தும் சரியானதாக இருக்கும்.

ஆனால், அதில் கூறப்படும் செய்தி முரண்பட்ட பல கோணங்களில் வருவதினால் அது பலஹீனமானது என்று முடிவு செய்யமுடியும் என்பது ஹதீஸ்கலை விதி என்றால், இந்த விதிக்கும் குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுக்கவேண்டும் என்ற விதிக்கும் மத்தியில் என்ன வித்தியாசம் இருக்கிறது? என்பதை அறிவுடையோர் சிந்திக்கட்டும்!

இந்த இடத்தில் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். இரண்டு ஹதீஸ்கள் நம்பகமானவர் வழியாக வந்திருந்தாலும், அதில் ஒன்று மற்றொன்றுடன் மோதும் போது, அதில் ஒன்று மற்றொன்றை விட இந்த விதத்தில் சிறந்தது என்று காரணம் சொல்ல முடியாமல் போகும் நேரத்தில் அந்த இரண்டு செய்தியுமே மறுக்கப்படும் என்பது ஹதீஸ்கலை விதி.

அப்படி மறுக்கப்படும் போது இந்தச் செய்தியை அறிவிக்கின்ற அறிவிப்பாளர் இதுவரை நம்பகமானவராகக் கருதப்பட்டவர்தான். ஆனால், அவர் அறிவிக்கின்ற  செய்திகளில் முரண்பாடு தெளிவாகிறது என்பதினால் அவருடைய அறிவிப்புகள் பலவீனமாக்கப்படுகிறது என்றால், குர்ஆனோடு இது போன்ற முரண்பாடுகள் ஒரு போதும் நிகழாது என்று சொல்வதை எவ்வாறு நாம் ஏற்றுக்கொள்வது?

மேலே நாம் எடுத்து காட்டிய உதாரணங்கள் அனைத்தும் ஹதீஸ்கலை இமாம்களால் எடுத்துக்காட்டப்படும் உதாரணங்களாகும். விளக்கத்திற்காக வேண்டி இங்கே அதை குறிப்பிட்டுள்ளோம்.

திருமறைக்குர்ஆனுடன் அறிவிப்பாளர் சரியான சில ஹதீஸ்கள் முரண்படும் என்ற கருத்தை ஹதீஸ் கலையில் ஆழ்ந்த ஞானமுள்ள பல இமாம்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை இதற்கு முன்னால் பல இடங்களில் நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். ஆகையால் அதை இங்கே கூறுவதைவிட்டும் சுருக்கி விட்டோம். அது போன்ற இமாம்களுடைய கருத்துக்களைப் பார்க்க விரும்பக்கூடியவர்கள் ஹதீஸ் கலை சம்பந்தமான நமது ஆக்கங்களை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

எனவே, நம்பகமான அறிவிப்பாளர்கள் கூடத் தவறாக அறிவித்து விடுவார்கள் என்பதற்கு ஒரே ஒரு ஹதீஸை மாத்திரம் இங்கே உங்கள் பார்வைக்கு முன்வைக்கிறோம்.

நபி(ஸல்) அவர்கள், மைமூனா (ரலி) அவர்களை இஹ்ராம் அணிந்த நிலையில் மணம் முடித்து கொண்டார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் (3517)

ஆனால், மைமூனா (ரலி) அவர்களே அறிவிக்கக்கூடிய பின்வரும் செய்தியில் இதற்கு மாற்றமாக இருப்பதைக் காணலாம்.

நபி(ஸல்) அவர்கள், என்னை இஹ்ராம் அணியாத நிலையில்தான் திருமணம் முடித்துக் கொண்டார்கள் என மைமூனா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் (3519)

இந்த இரண்டு செய்தியுமே “ஸஹீஹ் முஸ்லிமில்” 3517, 3519 ஆகிய எண்களில் அறிவிப்பாளர் வரிசை சரியான செய்தியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இந்த இரண்டு செய்திகளில், மைமூனா (ரலி) அவர்கள் தன்னைப் பற்றி அறிவிப்பதுதான் சரியாக இருக்க முடியும் என்பதை, நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியவர் திருமணம் முடிக்கக்கூடாது என்று தடை செய்த முஸ்லிமில் 3516வது செய்தியாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கும் ஹதீஸ் தெளிவுப்படுத்துகிறது.

இறுதியாக, ஹதீஸ்கலையில் ஒரு ஹதீஸை ஸஹீஹானது என்று அந்த துறையின் இமாம்கள் உறுதிசெய்துவிட்டால் எந்தச் சந்தேகமும் இல்லாமல் அது ஸஹீஹானது தான் என்று கூறமுடியாது. இதை நாம் கூறவில்லை. ஹதீஸ் கலையின் அடிப்படையே இதுதான்.

ஒரு ஹதீஸ் சரியானது என்று முடிவு செய்வதற்கு 5 நிபந்தனைகள் அவசியமாகும் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

  1. ஆரம்ப அறிவிப்பாளரிடமிருந்து கடைசி அறிவிப்பாளர் வரை ஒரு தொடரில் எந்த ஒரு அறிவிப்பாளரும் விடுபடாமல் தொடர வேண்டும்.
  2. ஒவ்வொரு அறிவிப்பாளரும் நேர்மையானவராக இருக்க வேண்டும்.
  3. மனனமாகவோ அல்லது எழுத்து வடிவிலோ ஹதீஸைத் துல்லியமாகப் பாதுகாத்திருக்க வேண்டும்.
  4. தன்னை விட மிக நம்பமான அறிவிப்பாளருக்கு மாற்றமாக செய்தியை அறிவிக்கக்கூடாது.
  5. ஹதீஸைப் பாதிக்கின்ற குறை இடம்பெற்றிருக்கக்கூடாது.

இந்த ஐந்த நிபந்தனைகள் இடம்பெற்றுவிட்டால் அந்த ஹதீஸ் சரியானது என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இந்த அடிப்படையில் ஒரு ஹதீஸ் சரியானது என்று சொன்னால், மேற்கண்ட ஐந்து நிபந்தனைகள் அந்த ஹதீஸில் உறுதியாகின்றது என்று தான் அர்த்தமே தவிர அது நூற்றுக்கு நூறு சரி என்றாகி விடாது.

ஏனென்றால் மறதி, தவறு போன்றவை ஒரு நம்பகமானவருக்கும் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.

ஸஹீஹாக வரக்கூடிய ஒரு செய்தியில் அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையை முன்னிறுத்தி அதை ஏற்றுக் கொள்ளவேண்டும்.

அதில் குர்ஆனுக்கு மாற்றமான கருத்துக்கள் இடம்பெற்றிருப்பது உறுதியாகத் தெளிவாகும் போது அதை நிறுத்தி வைத்து விட்டு திருமறைக் குர்ஆனை முன்னிறுத்துவது தான் அறிவவுடையோரின் தன்மையாக இருக்க முடியும்.

ஆகையால், நாம், குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று ஒரு செய்தியை மறுப்பது குர்ஆனையும் ஹதீஸ்களையும் பாதுகாக்கும் நோக்கில் தானே தவிர அதை மறுக்க வேண்டும் என்ற நோக்கில் அல்ல என்பதை மேற்கூறப்பட்ட விஷயங்களை வைத்து அறிவுடையோர் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.