அழைப்பாளன் ஓர் அழகிய முன்மாதிரி

அழைப்பாளன் ஓர் அழகிய முன்மாதிரி

நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!

அல்குர்ஆன் 3:110

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அல்குர்ஆன் 3:104

இந்த வசனங்களின் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதாகச் சொல்லிக் கொள்ளும் ஒவ்வொரு இயக்கமும் தாங்கள் தான் இப்பணியைச் செய்கிறோம் என்று உரிமை கொண்டாடுவதை நாம் பார்க்கிறோம்.

ஆனால் அவ்வாறு உரிமை கொண்டாடும் தகுதி அவர்களுக்கு இல்லை என்பதை அவர்களின் பணிகளிலிருந்தும், செயல்பாடு களிலிருந்தும் தெரிந்து கொள்ளலாம்.

உதாரணத்திற்கு தப்லீக் இயக்கத்தை எடுத்துக் கொள்வோம். இவர்கள் நன்மையை ஏவி தீமையைத் தடுக்கின்ற ஒட்டுமொத்த பணியையும் குத்தகைக்கு எடுத்தது போன்று பேசுவார்கள். மக்கள் எதை நன்மை என்று ஒத்து, உடன்பாடு கொண்டிருக்கிறார்களோ அதையே ஏவுவார்கள்.

உதாரணத்திற்கு ஐங்காலத் தொழுகையை ஏவுவார்கள். இது நன்மை என்பதில் எந்தவொரு முஸ்லிமும் கருத்து வேறுபாடு கொள்ளவே இல்லை. அதனால் தொழாதவனைத் தொழுகைக்கு அழைக்கும் போது அவன் அதில் எதிர்ப்பு காட்டுவதும் இல்லை.

இவர்கள் வட்டியை விட்டும் முஸ்லிம்களைத் தடுப்பார்கள். வட்டி ஒரு தீமை என்பதில் முஸ்லிம்களுக்கு மாற்றுக் கருத்தே கிடையாது. அதனால் வட்டித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் முஸ்லிம் கூட வட்டியை விட்டுத் தடுக்கும் போது எதிர்ப்பதில்லை.

ஆனால் முஸ்லிம் என்று சொல்லிக் கொள்பவர்களை, தர்ஹா வழிபாட்டை விட்டுத் தடுக்கும் போது அவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். இந்தப் பிரச்சாரத்தைச் செய்வோரைக் கொலை செய்யவும் துணிகின்றனர். ஏன்?

தீமையான தர்ஹா வழிபாட்டை அவர்கள் நன்மை என்று கருதுவதால் தான்.

எனவே இவ்வாறு தர்ஹா வழிபாட்டைத் தடுக்கும் பணியை தப்லீக் ஜமாஅத் ஒரு போதும் செய்வதில்லை. அந்தப் பணியை தவ்ஹீது ஜமாஅத் மட்டுமே செய்கின்றது.

தவ்ஹீதில் இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்கின்ற மற்ற இயக்கங்களும் இந்தப் பணியைச் செய்கின்றனர். ஆனால் அவர்கள் குர்ஆன், ஹதீஸ் என்ற இரு அடிப்படைகளைத் தாண்டி ஸஹாபாக்கள் என்ற மூன்றாவது அடிப்படையையும் சேர்த்துக் கொண்டுள்ளனர். இதனால் இவர்கள் இந்தப் பணிக்குத் தகுதியற்ற வர்களாகி விடுகின்றனர்.

தவ்ஹீது ஜமாஅத் மட்டுமே இந்தத் தகுதியைப் பெற்றிருக்கின்றது என்பதால் அதன் ஒவ்வொரு அழைப்பாளரின் செயல்பாடும் மக்களின் ஆந்தைப் பார்வைக்கு உள்ளாகின்றது.

எனவே இந்த இயக்கத்தில் உள்ள ஒவ்வொரு அழைப்பாளரும் தங்களுடைய வாழ்க்கையைத் திறந்த புத்தகமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

திறந்த புத்தகமான திருநபியவர்கள்

நபி (ஸல்) அவர்கள் பள்ளி வாசலில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அவசரப் படாதே! நானும் உன்னோடு வருகிறேன்!என்றார்கள். என் அறை உசாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்து விட்டுக் கடந்து சென்றனர்.

நபி (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, “இங்கே வாருங்கள்! இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!எனக் கூறினார்கள். அவ்விருவரும் “சுப்ஹானல்லாஹ்(அல்லாஹ் தூயவன்)-அல்லாஹ்வின் தூதரே!என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்; உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டு விடுவான் என நான் அஞ்சினேன்என்று தெளிவுபடுத்தினார்கள்.

அறிவிப்பவர்: ஸஃபிய்யா (ரலி)

நூல்: புகாரி 2038, 2039, 3281, 6219

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாழ்க்கையை எந்த அளவு திறந்த புத்தகமாக வைத்திருந்தார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

தம் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தாலும் பார்ப்பவர்களிடம் ஷைத்தான் விளையாடி விடக் கூடாது என்பதால் அவர்களை அழைத்து, இது என் மனைவி என்று தெளிவு படுத்துகின்றார்கள்.

முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே இவ்வளவு பேணுதலாக இருக்கும் போது, நாம் எந்த அளவுக்குப் பேணுதலாக இருக்க வேண்டும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மார்க்கம் தடுத்திருக்கின்ற காரியங்களான இணை வைத்தல், வட்டி, கொலை போன்ற பெரும்பாவங்களை விட்டும் ஓர் அழைப்பாளன் முற்றிலும் விலகி இருக்க வேண்டும்.

இணை வைப்பு நடக்கும் நிகழ்ச்சிகளை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். இறைவனுக்கு இணை கற்பிக்கப்படும் திருமணங்கள், வரதட்சணை வாங்கப்படும் திருமணங்களை விட்டும் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். புகை பிடிக்கும் பழக்கம் கூட இருக்கக் கூடாது.

அந்த அளவுக்கு அவருடைய வாழ்க்கை சிறந்த முன்மாதிரியாகத் திகழ வேண்டும். குறிப்பாக “பெண்’ விவகாரத்தில் ஒழுக்கம் மிக்கவராக இருக்க வேண்டும்.

செல்போனில் செக்ஸ் பேச்சு

ஒரு பெண்ணுடன் செல்போனில் பேசினால் கூட கவனமாகப் பேச வேண்டும். அந்தப் பெண்ணுடன் பேசுகின்ற அந்தப் பேச்சு, மற்றவர்களுக்கு முன்னால் பேசப்படும் போது குறை காணப்படாத அளவுக்கு இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு முன்னால் பேசப்படுவதற்குத் தகுதியில்லாத ஒரு பேச்சை ஒரு பெண்ணுடன் செல்போனில் பேசினால் அது ஆபாசப் பேச்சாகும்.

ஆணும் பெண்ணும் சந்திக்காமல் தூரத்தில் இருந்து கொண்டு செல்போனில் பேசினாலும் அவர் அந்தப் பெண்ணுடன் தனியாக சந்தித்துப் பேசுவதைப் போன்றது தான்.

ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பிரயாணம் செய்ய வேண்டாம்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர்  எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப்  பதிவு செய்து கொண்டுள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டு விட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)” என்று கேட்டார். அதற்கு  நபி (ஸல்) அவர்கள், “நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 3006

செல்போனை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், இது தான் தீமைகளின் திறவுகோலாக அமைந்துள்ளது.

ஒரு பெண்ணுடன் தனித்திருப்பது அல்லது அருகருகே அமர்ந்து பேருந்தில் பயணம் செய்வது என்பதெல்லாம் ஓர் அழைப்பாளனை விட்டு விடுவோம்; சாதாரண முஸ்லிமுக்குக் கூட இது ஒரு பெரிய பாவ காரியமாகத் தெரியும். ஆனால் செல்போனில் ஆபாசமாகப் பேசுவதை சாதாரண காரியம் என்று கருதிக் கொண்டிருக்கின்றனர் என்பதால் இதை இங்கு குறிப்பிட்டுக் கூற வேண்டியுள்ளது.

பாவத்தைப் பற்றிய பார்வை

இறை நம்பிக்கையாளர் தம் பாவங்களை மலைகளைப் போன்று (பாரமாகக்) கருதுவார். அவர்       ஒரு மலை அடிவாரத்தில் உட்கார்ந்திருப்பதைப் போன்றும், அந்த மலைத் தம் மீது விழுந்து விடுமோ என அஞ்சுபவரைப் போன்றும் அவர் இருப்பார். ஆனால், பாவியோ தன் பாவங்களைத் தனது மூக்கின் மேல் பறந்து செல்லும் ஈயைப் போன்று (அற்பமாகக்) காண்பான்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 6308

இதன்படி செல்போனில் ஆபாசமாகப் பேசுவதே ஓர் அழைப்பாளனுக்கு மலை போல் தெரிய வேண்டும்.

இது போன்று சர்வ சாதாரணமாகத் தெரியும் பாவமான சினிமா பார்ப்பது போன்ற தீமையும் ஓர் அழைப்பாளனுக்கு மலை போல் தெரிய வேண்டும்.

இந்தச் சிறு சிறு பாவங்கள் மலை போல் தெரிய ஆரம்பித்து விட்டால் விபச்சாரம், பொருளாதார மோசடி போன்ற பெரும் பாவங்களுக்கு ஓர் அழைப்பாளன் ஆளாக மாட்டான். ஆளாகவும் கூடாது.

ஏனெனில் அழைப்பாளன் ஓர் அழகிய முன்மாதிரியாவான். இந்த இயக்கத்தில் ஆலிம்கள் மட்டும் அழைப்பாளர்கள் அல்லர்!

ஒவ்வொரு மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகளும், ஒவ்வொரு செயல் வீரரும் ஓர் அழைப்பாளரே!

அவர்கள் இந்தப் பண்புகளைக் கொண்ட மணிகளாக, மாணிக்கங் களாகத் திகழ வேண்டும். சொல்லால் அழைக்கும் பணியை விட, செயலால் அழைக்கும் அழைப்புப் பணியே வலுவானதாகும். இதையே அல்லாஹ் கூறுகின்றான்.

அல்லாஹ்வை நோக்கி (மக்களை) அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?

அல்குர்ஆன் 41:33

தனிமனித வழிபாடு

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.

அல்குர்ஆன் 3:144

இது திருக்குர்ஆனின் ஓர் அற்புதமிக்க வசனமாகும். இந்த வசனத்தின் முன் பின் வசனங்களை வைத்து இது உஹதுப் போர்க் களத்தின் போது அருளப்பட்டது என்பதை விளங்கிக் கொள்ளலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், உஹதுப் போர்க்களத்தில் தான் கொல்லப்பட்டதாகச் செய்தி பரவுகின்றது.

(உஹதுப் போரில்) அபூசுஃப்யான் முன்வந்து “(உங்கள்) கூட்டத்தில் முஹம்மது இருக்கின்றாரா?” என்று (பலமுறை) கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவருக்குப் பதிலளிக்க வேண்டாம்என்று (தம் தோழர்களிடம்) கூறினார்கள். மீண்டும், (உங்கள்) கூட்டத்தில் அபூ குஹாஃபாவின் மகன் (அபூபக்ர்) இருக்கிறாரா?” என்று கேட்டார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு நீங்கள் பதில் தர வேண்டாம்என்று கூறி விட்டார்கள்.

பிறகு, “கூட்டத்தில் கத்தாபின் மகன் (உமர்) இருக்கிறாரா?” என்று கேட்டு விட்டு (பிறகு தம் தோழர்களின் பக்கம் திரும்பி) “இவர்களெல்லாம் கொல்லப்பட்டு விட்டனர்; இவர்கள் உயிருடன் இருந்தால் (என் அறை கூவலுக்குப்) பதிலளித்திருப்பார்கள்என்று சொன்னார். (புகாரி 4043)

இந்தப் போர்க் களம் முஸ்லிம்களுக்குப் பெரும் கவலை அளித்த போர்க்களமாகும். நபித்தோழர்கள், “இனி நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு நாம் வாழ்ந்தென்ன பயன்? முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை முடிந்தவுடன் இந்த மார்க்கமும் முடிந்து விட்டது’ என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இதைக் கண்டிக்கும் விதமாக அல்லாஹ் இந்த வசனத்தை அருளுகின்றான்.

தூதர் முஹம்மது இறந்து விடலாம்; ஆனால் அவர் கொண்டு வந்த தூதுச் செய்தி இறக்காது என்று இந்த வசனத்தில் தெளிவுபடுத்துகின்றான்.

அன்று ஓர் ஒத்திகை மரணம்

உண்மையில் உஹதுப் போர்க்களம் ஓர் ஒத்திகைக் களம் என்றே சொல்ல வேண்டும்.

அதிரடியாக எதிரிகளை எப்படிச் சந்திப்பது? என்பதற்கு இராணுவ வீரர்களுக்கு முற்கூட்டியே போலி எதிரிகளை வைத்துப் பயிற்சி ஒத்திகை நடைபெறும்.

ஒரு பேச்சாளர் தொலைக் காட்சியில் பேசப் போகின்றார் என்றால் அதற்காக அவர் ஒத்திகை பார்த்துக் கொள்கின்றார்.

நபி (ஸல்) அவர்கள் இறந்து விட்டால் இந்த மக்கள் என்ன செய்யப் போகின்றார்கள்? என்ற ஓர் ஒத்திகையை, ஒரு வித்தியாசமான பயிற்சியை நபித்தோழர்களுக்கு, நபியவர்களின் வாழ்நாளிலேயே அல்லாஹ் நடத்திக் காட்டுகின்றான்.

அத்துடன், முஹம்மது கடவுள் அல்லர்! அவர் மனிதர் தாம். அவர் இயற்கையாக மரணத்தைத் தழுவுவார்; அல்லது கொல்லப்படுவார். இந்த இரண்டை விட்டும் தப்பி, சாகாவரம் பெற்றவர் என்று விளங்கி விடாதீர்கள் என்ற ஏகத்துவப் பாடத்தையும் அந்த மக்களுக்குப் படித்துக் கொடுக்கிறான்.

தூதர் இறந்து விட்டாலும் தூதுச் செய்தி இறக்காது. அந்த தூதுச் செய்தி குர்ஆன்! அது ஒரு போதும் மரணிக்காது. அது சாகாவரம் பெற்ற சத்திய வேதம்! அதனால் தூதர் இறந்தவுடன் நீங்கள் வந்த வழியே, அதாவது அசத்திய வழிக்குத் திரும்பி விடாதீர்கள்; அப்படிச் சென்று விட்டால், மதம் மாறி விட்டால் அதனால் அல்லாஹ்வுக்கு எந்த நஷ்டமும் இல்லை என்பதையும் இந்த வசனம் கூறுகின்றது.

தூதர் இறந்த பின்னும் மதம் மாறாமல் இருந்தால் நீங்கள் நன்றியுடையவர்கள்; அந்த நன்றியுடையோருக்கு நான் நற்கூலி வழங்குவேன் என்றும் அல்லாஹ் உறுதியளிக்கின்றான்.

இத்துடன் அல்லாஹ் ஒரு முன்னறிவிப்பும் செய்கிறான்.

நபி (ஸல்) அவர்கள் இறந்த பின்பு சிலர் மதம் மாறுவார்கள் என்பதே அந்த முன்னறிவிப்பு!

இப்போது அந்த மத மாற்றத்தையும் அதற்குக் காரணமான மரணத்தையும் பார்ப்போம்.

உண்மை மரணம்

உஹதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணித்தது போன்ற ஒத்திகை நடந்தது. இப்போது உண்மையில் மரணித்து விடுகின்றார்கள். அவர்கள் இறந்ததும் உமர் (ரலி) அவர்கள் எழுந்து, நபியவர்கள் இறக்கவில்லை என்று உரையாற்றுகின்றார்கள்.

அதிர்ச்சியில் ஆழ்ந்து போயிருந்த நபித் தோழர்களுக்கு மத்தியில் உமர் (ரலி) உரையாற்றத் தொடங்கினார்கள்.

அந்த உரையில் “நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ் உயிருடன் எழுப்புவான்.  இறந்து விட்டார்கள் என்று பிரச்சாரம் செய்தவர்களின் கை கால்களை வெட்டி விடுவார்கள். இது தான் என் மனதில் படுகின்ற கருத்தாகும்” என்று கூறினார்கள்.  நபி (ஸல்) அவர்கள் இறந்ததை ஒத்துக் கொள்ள மறுத்த நபித்தோழர்களின் உள்ளங்களுக்கு உமர் (ரலி) யின் இந்த உரை ஓர் ஒற்றடமாக அமைந்திருந்தது.

அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்ததும் நபித்தோழர்கள் தங்களை மறந்த நிலையில் ஆகி விட்டார்கள்.  பாசமிகு தாய்ப் பறவையின் கதகதப்பான அரவணைப்பில் கிடக்கும் குஞ்சுகள் தாய்ப் பறவை இறந்துவிட்டால் எவ்வாறு தவியாய்த் தவிக்குமோ அது போன்ற தவிப்பிற்கு அவர்கள் உள்ளானார்கள்.  இந்த நேரத்தில் உமர் (ரலி) அவர்களின் வார்த்தைகள் அவர்களுக்கு ஆறுதலாகவும், அருமருந்தாகவும் அமைந்தன.

அமைதியாகக் கிடக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீண்டும் தங்களை அரவணைக்க வரப் போகின்றார்கள் என்ற ஆதரவில், அற்புதம் நிகழப் போகின்றது என்ற நம்பிக்கைக் கடலில் அமிழ்ந்து போய் விட்டார்கள்.  “அவர்கள் இறந்திருப்பது நிரந்தரமாக அல்லவே அல்ல! அது தற்காலிகமாகத் தான்’ என்பதில் அவர்களுக்கு எள்ளளவும் சந்தேகம் ஏற்படவில்லை.

இப்படிப்பட்ட அழுத்தமான நம்பிக்கை ஏற்படக் காரணம் அவர்களின் முன்னால் நின்று சொன்னவர் சாதாரணமானவர் அல்ல!  இவரது நாவில் சத்தியம் ஓடுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் யாரைப் பார்த்து சொன்னார்களோ அந்த உமர் (ரலி) அவர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அடுத்தக் கட்டத் தலைவர் என்ற தகுதியைப் பெற்ற இனிய தோழராவார்.

அதனால் தான் அவர்களுடைய வார்த்தைகள் சோக மயத்தில் நிற்கும் நபித் தோழர்களை வயப்படுத்தும் அளவுக்கு வைரங்களாக அமைந்து விட்டன.

இறைத்தூதர் இறந்து விட்டார்; அபூபக்ரின் விளக்கம்!

உமர் (ரலி) அவர்களின் உரையைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்ற எண்ணத்தில் உறைந்து போயிருந்த இந்த நேரத்தில், குழப்பமான இந்தக் கட்டத்தில் ஒரு குதிரையின் குழம்படிச் சப்தம் கேட்கின்றது.  இதமானவர் – இளகிய மனம் படைத்தவர் என்று எல்லோராலும் கூறப்படுகின்ற அபூபக்ர் (ரலி) அதன் மீது அமர்ந்து வருகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணிக்கும் சமயத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள், தாம் வசித்து வந்த சுன்ஹு என்ற பகுதியில் இருந்தார்கள்.  அப்போது தான் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் மரணச் செய்தி கிடைக்கின்றது.  மரணச் செய்தி கிடைத்த மாத்திரத்தில் தமது குதிரையைத் தட்டிக் கொண்டு மஸ்ஜிதுந்நபவியை நோக்கி வேகமாக வருகின்றார்கள்.

அவர்களின் பயணக் குதிரை மின்னல் வேகத்தில் தனது ஓட்டத்தைக் கொண்டிருந்த அவ்வேளையில் அவர்களின் மனக் குதிரை சோகத்திலிருந்த நபித் தோழர்களின் மன ஓட்டத்தைக் கண்டறிந்தது.  இந்த உண்மையை அபூபக்ர் (ரலி) அவர்களிடமிருந்து ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து நிகழும் செயல்கள் நமக்கு உணர்த்திக் காட்டும்.

குதிரை பள்ளியை அடைந்ததும் கூடியிருந்த கூட்டத்திடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் பள்ளிக்குள் சென்று ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லத்தில் நுழைந்தார்கள்.  முதன் முதலில் நபி (ஸல்) அவர்களின் உடலை நோக்கிச் சென்று அதைத் தழுவியிருந்த போர்வையை நீக்கினார்கள்.  முகிழ் கிழித்து வரும் முழுமதியைப் போன்று காட்சியளித்த முஹம்மது நபி (ஸல்) அவர்களின் முகத்தில் முத்த மழை பொழிந்தார்கள்.  அவ்வளவு தான்!  அவர்களின் கண்கள் அருவியானது.

“அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! இருக்கும் போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள்.  இறந்த பிறகும் நறுமணம் கமழ்கின்றீர்கள்” என்று எடுத்த எடுப்பில் சொல்கின்றார்கள்.  அவர்களின் இந்தச் சொல் கல்லாகப் பாய்ந்து, நபி (ஸல்) அவர்கள் மரணிக்கவில்லை என்ற நபித் தோழர்களின் தவறான நம்பிக்கையை ஒரு நிமிடத்தில் உடைத்தெறிகின்றது.

“என் உயிரைத் தன் கைவசம் வைத்திருக்கும் அந்த இறைவன் மீது ஆணையாக! ஒரு போதும் அல்லாஹ் இரண்டு மரணங்களை சுவைக்கச் செய்ய மாட்டான்.  உங்களுக்கென்று விதிக்கப்பட்ட மரணத்தை நீங்கள் சுவைத்து விட்டீர்கள்” என்றும் அபூபக்ர் (ரலி) கூறுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து வந்து மீண்டும் மரணிப்பார்கள் என்ற கருத்தில் உமர் (ரலி) கூறிய இரு மரணத் தத்துவத்தை அபூபக்ர் (ரலி) அவர்களின் இந்த வார்த்தைகள் சுக்கு நூறாக்குகின்றன.  அது மட்டுமல்ல! இறந்து விட்ட நபி (ஸல்) அவர்களிடம் அபூபக்ர் (ரலி) அவர்கள் நேர்முகமாக, உங்களுக்கு இரு மரணத்தைத் தரவில்லை என்று பேசுவதன் மூலம் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்தால் இதற்குப் பதிலளிக்காமல் மவுனமாக இருந்திருப்பார்களா? என்பதையும் இங்கே தெளிவாக உணர்த்துகின்றார்கள்.

இவ்வாறு உணர்த்தி விட்டு நேராக உமர் (ரலி) அவர்களிடம் விரைந்து வருகின்றார்கள். வந்ததும் அவர்களை நோக்கி, “ஆணையிட்டு உரை ஆற்றுபவரே! அமர்க! அமர்க!” என்று கூறுகின்றார்கள். அபூபக்ர்           (ரலி) அவர்களின் இந்த வார்த்தைகளை உமர் (ரலி) கண்டு கொள்ளாமல் தனது உரையைத் தொடர்கின்றார்கள். இடைவிடாமல் தனக்கு இடம் கொடாமல் தனது உரையைத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற அவ்வேளையில் அபூபக்ர் (ரலி) இடைமறித்து, அல்லாஹ்வைப் புகழ்ந்து பாராட்டி தனது உரையைத் துவக்கினார்கள்.

“யார் முஹம்மதை வணங்க நினைக்கின்றாரோ அவர் அறிந்து கொள்ளட்டும்.  நிச்சயமாக முஹம்மது (ஸல்) இறந்து விட்டார்கள். உங்களில் யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன், மரணிக்கவே மாட்டான்” என்று கூறினார்கள். அதற்கு ஆதாரமாக அல்குர்ஆனின் வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள்.

நீரும் மரணிப்பவர்.  அவர்களும் மரணிப்பவர்களே!  (அல்குர்ஆன் 39:30)

முஹம்மது தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன்னர் பல தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப் பட்டு விட்டால் வந்த வழியில் நீங்கள் திரும்பி விடுவீர்களா?     வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்ய முடியாது.  நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் பரிசு வழங்குவான். (அல்குர்ஆன் 3:144)

ஆகிய வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

அவ்வளவு தான்! உரத்த குரலில் மக்கள் அழத் துவங்கி விட்டார்கள்.  அது வரை அவர்கள் மவுனம் சாதித்துக் கொண்டிருந்தார்கள். அது வரை உமர் (ரலி)யின் உரையைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அபூபக்ர் (ரலி)யின் உரையின் பக்கம் சென்று விட்டனர்.

நபி (ஸல்) அவர்கள் மீண்டும் எழுந்து வருவார்கள் என்று உமர் (ரலி) கூறிய கருத்தை நம்பிக் கொண்டிருந்த மக்கள், அபூபக்ர் (ரலி) எடுத்து வைத்த வாதத்தின் உண்மையை உணர்ந்து சோகத்தின் உச்சிக்குச் சென்று விட்டார்கள்.

இங்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் சோகமும், சோர்வும் கொண்டு நிற்கும் அம்மக்களிடம் இத்தகைய உண்மையை எடுத்து வைத்த விதம் ஒரு வித்தியாசமான அம்சமாகும். அவர்களிடம் மிளிர்கின்ற தனிச் சிறப்பு மிக்க ஆளுமையும் அவர்களிடம் குடி கொண்டிருக்கின்ற உறுதியான கொள்கைப் பிடிப்பும் ஆகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மரணம் சாதாரண தலைவரின் மரணமல்ல! தமது ஆட்காட்டி விரலின் அசைவில் உயிர், உடல், உடைமை அத்தனையையும் அர்ப்பணிக்கின்ற ஒரு தியாகக் கூட்டத்தையே தன்னகத்தே கொண்ட தன்னலமற்ற தலைவரின் மரணமாகும்.

அப்படிப்பட்ட தலைவரைப் பறி கொடுத்து நிற்கும் அம்மக்களுக்கு மத்தியில், உணர்ச்சிப்பூர்வமான இந்த சோதனையான காலகட்டத்தில் தமக்கே உரிய நிதானப் போக்குடன் நிலை குலையாத தன்மையுடன் அறிவுப்பூர்வமான வகையில் ஆதாரங்களை எடுத்து வைத்து அந்த இஸ்லாமிய சமுதாயத்தை, ஏகத்துவத்தை விட்டுத் தடம் புரளாமல் காத்து நின்றார்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள்.

சாகா வரம் பெற்ற சத்திய வேதம்

“யார் முஹம்மதை வணங்குகி றாரோ அவர் அறிந்து கொள்ளட்டும் முஹம்மது (ஸல்) அவர்கள் நிச்சயமாக இறந்து விட்டார்கள்” என்ற வார்த்தைப் பிரயோகத்தைப் பாருங்கள்.

நபித்தோழர்கள் முஹம்மது (ஸல்) அவர்களை வணங்கும் அளவுக்கா கொள்கையில் பலவீனர்களாக இருந்தார்கள்? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. அப்படியானால் இப்படி ஒரு கடினமான வார்த்தைப் பிரயோகத்தை அபூபக்ர் (ரலி) ஏன் கையாள வேண்டும்?

நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்று உமர் (ரலி) உரையாற்றியது மக்களிடம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இறப்பின்மை – சாகா தன்மை என்பது இறைவனுக்கு உரிய தனித் தன்மையாகும்.

நபி (ஸல்) அவர்கள் எழுந்து வருவார்கள் என்றால் அவர்கள் என்றும் வாழும் இறைத்தன்மை உடையவர்கள் என்ற அந்தஸ்தை அடைந்து விடுவார்கள். இதனால் நபி (ஸல்) அவர்கள் வணங்கப்படும் தகுதிக்கு உயர்த்தப்படும் பாதக நிலை ஏற்படும்.

எனவே அத்தகைய நிலையை உடைத்தெறியும் விதமாகவே அபூபக்ர் (ரலி) அவர்கள் தூர நோக்குடன் சிந்தித்து இந்தக் கடின வார்த்தைகளைப் பயன்படுத்து கிறார்கள். அத்துடன் நின்று விடாது அதற்கு ஆதாரமாக அல்லாஹ்வின் மேற்கண்ட இரண்டு வசனங்களையும் கொண்டு வந்து நிறுத்துகின்றார்கள்.

அதிலும் குறிப்பாக அபூபக்ர் (ரலி) ஆலஇம்ரான் 144வது வசனத்தை ஓதிக் காட்டியவுடன் “இப்படி ஒரு வசனத்தை அல்லாஹ் இறக்கியிருப்பதை நாம் அறியாமல் இருந்து விட்டோமே! என்று நபித்தோழர்கள் எண்ணியிருக்கின் றார்கள் என்றால் அவர்கள் எந்த அளவுக்கு நபி (ஸல்) அவர்களின் பிரிவால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

அபூபக்ர் (ரலி) இந்த வசனத்தை ஓதியதும் அது எல்லோருடைய நாவுகளிலும் ஆக்கிரமித்து அலங்கரிக்கத் துவங்கியது. அதை ஓதாத எந்த நபித்தோழரையும் நான் காணவில்லை. அதை அசை போடாத எந்த நபித்தோழரையும் நான் பார்க்கவில்லை என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்கள்.

அபூபக்ர் (ரலி)யிடமிருந்து இந்த வசனத்தைச் செவியுற்றதும் உமர் (ரலி) கூறும் வார்த்தைகள் இதோ:

“அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ர் (ரலி) இவ்வசனத்தை ஓத நான் கேட்ட போது தான் அது என் நினைவுக்கே வந்தது. எனவே அதிர்ச்சி அடைந்தேன். அப்போது என் கால்களால் என் (உடல்) சுமையையே தாங்க முடியவில்லை. அபூபக்ர் (ரலி) ஓதிக் காட்டிய இவ்வசனத்தைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை உணர்ந்து நான் தரையில் விழுந்து விட்டேன்” (புகாரி)

அபூபக்ர் (ரலி) இந்த வசனத்தை ஓதிய போது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்று நான் விளங்கிக் கொண்டேன் என்று உமர் (ரலி) கூறுகின்றார்கள். அப்படியானால் உமர் (ரலி) அவர்களுக்கு இந்த விளக்கம் தெரியாமல் போனது ஏன் என்ற கேள்வி இயற்கையாகவே எழுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் இறந்த மறுநாள் அபூபக்ர் (ரலி) அவர்கள் முன்னிலையில் உமர் (ரலி) மிம்பரில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது அவர்களிடமே இந்தக் கேள்வி முன்வைக்கப்படுகின்றது.

“நமக்கெல்லாம் இறுதியாகத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பார்கள். அது வரை அவர்கள் உயிர் வாழ்வார்கள் என்றே நான் எதிர் பார்த்திருந்தேன். ஆனால் முஹம்மது (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்றாலும் மேலான அல்லாஹ் நீங்கள் நல்வழியில் செல்ல உங்களிடையே (குர்ஆன் எனும்) ஓர் ஒளியை அமைத்துள்ளான். அதன் மூலம் தான் அல்லாஹ் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் நேர்வழியைக் காண்பித்தான்” என்று உமர் (ரலி) பதில் அளிக்கின்றார்கள்.

இவ்வாறு உஹதுப் போர்க்களத்தில் ஒத்திகை மரணத்தில் அல்லாஹ் அருளிய அந்த வசனம், இப்போது முஹம்மது (ஸல்) அவர்கள் உண்மையில் இறந்ததும் நபித்தோழர்களைத் தடம் புரளாமல் காத்தது. இதன் மூலம் இந்த இறைவேதம், தான் ஒரு சாகாவரம் பெற்ற வேதம் என்பதை நிரூபித்து நிற்கின்றது.

கொள்கையில் உறுதி மிக்க நபித்தோழர்கள், நபி (ஸல்) அவர்கள் இறந்த பின்பும் கொள்கையில் குன்றாய் நின்றனர்; நிலைத்தனர். ஆனால் ஒரு கூட்டம் தடம் புரண்டது. அது தான் அல்குர்ஆன் தெரிவித்த மதமாற்ற முன்னறிவிப்பாகும்.

நபி (ஸல்) அவர்கள் இறந்து அபூபக்ர் (ரலி) அவர்கள் (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) காஃபிர்களாகி விட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூபக்ர் தயாரானார்கள்.) உமர் (ரலி) அவர்கள், “லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று கூறியவர் தமது உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார் -தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர- அவரது விசாரணை அல்லாஹ்விடமே உள்ளதுஎன நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போர் செய்ய முடியும்?” என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், உமரை நோக்கி, “அல்லாஹ்வின் மீது ஆணையாக, தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போர் செய்வேன். ஸகாத், செல்வத்திற்குரிய கடமையாகும்; அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்ததற்காக நான் இவர்களுடன் போர் செய்வேன்என்றார்கள். இது பற்றி உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெறும் விதத்தில்) அல்லாஹ் விசாலமாக்கி இருந்ததாலேயே இவ்வாறு கூறினார்கள். அவர்கள் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1400

நாம் இந்த ஹதீஸில் கவனிக்க வேண்டிய விஷயம், மதம் மாறியவர்களைத் தான். இவர்கள் நபி (ஸல்) அவர்கள் இருக்கும் வரை மார்க்கத்தில் இருந்தார்கள். அவர்கள் இறந்ததும் மார்க்கத்தை விட்டு வெளியேறி விட்டார்கள். அதாவது முஹம்மது என்ற தனி நபருக்காக மார்க்கத்தில் இருந்தார்கள். அதனால் ஜகாத் கொடுத்தார்கள்.

அல்லாஹ் சொன்னான்; அவனது வேதம் அல்குர்ஆன் சொன்னது என்பதற்காக இவர்கள் ஜகாத் கொடுக்கவில்லை. அல்லாஹ்வுக்காகக் கொடுப்பவர்கள் முஹம்மது (ஸல்) இறந்த பின்பும் கொடுப்பார்கள் அல்லவா? அதனால் இவர்கள் தனிநபர் வழிபாடு செய்த தரங்கெட்ட வழிகேடர்கள்! அவர்களை எதிர்த்துத் தான் ஆட்சித் தலைவர் அபூபகர் (ரலி) அவர்கள் போர் தொடுத்தார்கள்.

மேற்கண்ட வசனம் மற்றும் ஹதீஸின் பின்னணியில் தவ்ஹீது ஜமாஅத்தில் உள்ளவர்கள் தங்களிடம் தனிநபர் வழிபாடு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உதாரணத்திற்கு, தர்ஹா வழிபாடு கூடும் என்றோ, அல்லது குர்ஆன் மட்டும் போதும் என்றோ ஒருவர் கூறுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். (அல்லாஹ் காப்பாற்றுவானாக!) அப்போது அவர் கூறும் அந்தக் கருத்துக்கு நாம் சென்று விடுவோமா? ஒரு போதும் செல்ல மாட்டோம். அப்படிச் செல்லக் கூடாது என்பதற்காகத் தான் இந்த விளக்கம்!

இது போன்று தவ்ஹீது ஜமாஅத்தின் தலைவர்களில் ஒருவர் அடுத்தவரது சொத்தை அபகரித்து விட்டார்கள் என்பதற்காகவோ, அல்லது பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியோ நீக்கப்படுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவருக்குப் பின்னால் ஒரு சிலர் செல்கிறார்கள் என்றால் அவர்களும் நிச்சயமாகத் தனிநபர் வழிபாடு செய்பவர்கள் தான்; வழிகேட்டில் செல்பவர்கள் தான்.

மத்ஹபுகளைப் பின்பற்றுபவர்களை நோக்கி நாம் சொல்கின்ற குற்றச்சாட்டு, தனிநபர் வழிபாடு என்ற குற்றச்சாட்டுத் தான்.

உதாரணமாக, ஹனபி மத்ஹபினர் ஃபஜ்ருத் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்ட பிறகும் முன் சுன்னத் தொழுவது வழக்கம். “தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டால் கடமையான தொழுகையைத் தவிர வேறு எதுவும் தொழக் கூடாது’ என்ற நபிமொழியை ஆதாரமாகக் காட்டி இவ்வாறு தொழுவது கூடாது என்று நாம் சொல்கிறோம். ஆனால் ஹனபி மத்ஹபினர் இந்த ஹதீஸை ஏற்காமல், “எங்கள் இமாம் அபூஹனீபா இப்படித் தான் சொல்லியிருக்கிறார்’ என்று சொன்னால் அதை நாம் தனிநபர் வழிபாடு என்கிறோம்.

ஹதீசுக்கு மாற்றமாக அமைந்த இந்த இமாம்களின் கருத்தை விட்டு விலகி தவ்ஹீதுக்கு வந்தோம். ஏன்? இதுவெல்லாம் தனிநபர் வழிபாடு என்பதால் தான்.

நாம் அது வரை பின்பற்றி வந்த அந்த இமாம்கள் ஒழுக்கத்திலும், நன்னடத்தையிலும் சிறந்தவர்கள். அவர்களது ஆய்வில் ஏற்பட்ட குறைபாடுகளைத் தனிநபர் வழிபாடு என்று கூறி அந்த மத்ஹபுகளை விட்டு வெளியே வந்தோம்.

அப்படிப்பட்ட நாம், அல்லாஹ்வுடைய பயம் ஒருபுறம் இருக்கட்டும்; அடுத்தவர்கள் பார்ப்பார்களே என்ற பயமும் வெட்கமும் இல்லாமல் ஒழுக்கக் கேட்டில் வீழ்பவர்களுக்குப் பின்னால் செல்வது தனிநபர் வழிபாட்டிலும் தரங்கெட்ட வழிபாடாகும்.

ஏகத்துவத்தில் கடுகளவு பிடிமானம் உள்ளவர்களிடம் கூட இந்தத் தன்மை ஏற்பட்டு விடக்கூடாது. இந்தத் தனிநபர் வழிபாடு கொள்பவர்கள் தவ்ஹீதுவாதிகளாக இருக்க முடியாது. இது போன்ற வழிகேடுகளிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

கட்டுப்பாடு காத்த கஅப் பின் மாலிக்

அண்மையில் நம்முடைய ஜமாஅத்திலிருந்து நீக்கப்பட்ட சிலர், ஒரு பாட்டைத் தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்திற்காகத் தியாகம் செய்த பாக்கரை இப்படி அநியாயமாகத் தூக்கி எறிந்து விட்டார்கள் என்பது தான் அந்தப் பாட்டு! இதற்குரிய விளக்கத்தை “தியாகமா? துரோகமா?’ என்ற தலைப்பின் கீழ் பார்க்கலாம்.

இங்கே நாம் காணப் போவது கஅப் பின் மாலிக் அவர்களின் வரலாறு! இது முழுக்க முழுக்க புகாரியில் இடம்பெறும் ஹதீஸாகும்.

நபித்துவம் பெற்ற முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவில் மாபெரும் சோதனைக்குள்ளான கட்டத்தில், மதீனாவிலிருந்து ஹஜ் செய்ய வரும் மக்களிடம் சத்தியத்தைப் போதிக்கலானார்கள்.

மினாவில் முதல் (ஜம்ரத்துல்) அகபா என்ற இடத்தில், மதீனத்துத் தோழர்களுடன் அழைப்புப் பணி சந்திப்பு நடைபெற்றது. இதற்கு அகபா (கணவாய்) உடன்படிக்கை என்று பெயர் வழங்கப்படுகின்றது.

நபித்துவம் பெற்ற 11, 12, 13வது ஆண்டுகளில் இந்த வரலாற்றுப் புகழ் பெற்ற சந்திப்புகள் நடந்தன.

இதில் இரண்டாம் சந்திப்பின் போது இஸ்லாத்தை ஏற்றவர் தான் கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள்.

அகபா உடன்படிக்கை போலவே வரலாற்றில் நிலைத்து நிற்பது பத்ருப் போர்! இந்தப் போர் திட்டமிட்ட போர் அல்ல! திடுமென நடந்த ஒரு திடீர் போர்!

சிரியா சென்று விட்டுத் திரும்ப வருகின்ற அபூசுஃப்யானின் வாணிபப் படையை வழிமறிக்க வந்த நபித்தோழர்கள் மீது அல்லாஹ்வால் வலிய திணிக்கப்பட்ட போர் தான் பத்ருப் போர்!

திருப்புமுனை மிக்க அந்தத் திருப்போரில் கலந்து கொண்ட அத்தனை நபித்தோழர்களும் தியாகிகளாயினர். அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும், திருப்தியையும் பெற்றனர்.

இதை நபி (ஸல்) அவர்களின் இந்த ஹதீஸிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

(ஹாத்திப் பின் அபீ பல்தஆ என்ற நபித்தோழர், மக்காவாசிகளான இணை வைப்போர் சிலருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரகசியத் திட்டங்கள் சிலவற்றை முன்கூட்டியே தெரிவித்துக் கடிதம் அனுப்பி, மாட்டிக் கொண்ட போது) உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள்; (சதி வேலைகள் செய்த) இவரது கழுத்தைக் கொய்து விடுகிறேன்” என்று சொன்னார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒரு வேளை மாண்பும் மகத்துவமும் வாய்ந்தவனான அல்லாஹ், பத்ருப் போரில் பங்கேற்றவர்களிடம் “நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள்; உங்களை நான் மன்னித்து விட்டேன்’ என்று கூறிவிட்டிருக்கலாம்” என்று சொன்னார்கள். (நூல்: புகாரி 4890)

அகபா உடன்படிக்கையில் கலந்து கொண்ட கஅப் பின் மாலிக், பத்ருப் போரில் கலந்து கொண்ட முராரா பின் ரபீஃ அல் அம்ரீ, ஹிலால் பின் உமைய்யா அல் வாகிஃபீ ஆகிய மூன்று பேரும் தபூக் போரில் கலந்து கொள்ளாததால் நபி (ஸல்) அவர்களால் 50 நாட்கள் ஊர் விலக்கி வைக்கப்படுகின்றார்கள்; சமூக பகிஷ்காரம் செய்யப் படுகிறார்கள்.

தியாகிகளான இம்மூவரும் தண்டிக்கப்பட்ட பின்னரும், “நாங்கள் தியாகிகள்; எங்களைத் தண்டிக்கலாமா? ஊரை விட்டு ஒதுக்கி வைத்து உறவை விட்டும் துண்டிக்கலாமா?’ என்று கேட்கவில்லை. கட்டுப்பட்டார்கள். இஸ்லாமிய ஜமாஅத்தை விட்டு வெளியே போய் விடவில்லை.

தவ்ஹீது ஜமாஅத் தலை தூக்குவதற்காக யார் தியாகம் செய்திருந்தாலும் அந்தத் தியாகத்தை, துரோகத்தால் அழித்துவிடக் கூடாது என்பதற்கு கஅப் பின் மாலிக்கின் சுயசரிதை ஒரு சுடர் விடும் பாடமும் படிப்பினையும் ஆகும்.

கஅப் பின் மாலிக், முராரா பின் ரபீஃ அல் அம்ரீ, ஹிலால் பின் உமைய்யா அல் வாகிஃபீ ஆகியோரைப் போன்று கட்டுப்படுவோம்; கட்டுப்பாட்டையும் கட்டுக்கோப்பையும் கட்டமைப்பையும் காப்போம் என்று கூறி அந்த சுய சரிதைக்குள் செல்வோம்.

பத்ருப் போரா? அகபா பிரமாணமா?

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தபூக் போரைத் தவிர நபி (ஸல்) அவர்கள் புரிந்த எந்தப் போரிலும் நான் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. இது தவிர, நான் பத்ருப் போரிலும் கலந்து கொள்ளவில்லை. பத்ரில் கலந்து கொள்ளாத எவரும் (அல்லாஹ்வால்) கண்டிக்கப்படவுமில்லை. (ஏனெனில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷிகளின் வணிகக் குழுவை (வழி மறிக்க) நாடியே (பத்ருக்குப்) போனார்கள். (போன இடத்தில்) போர் செய்யும் திட்டம் இல்லாமலேயே அவர்களையும் எதிரிகளையும் அல்லாஹ் (பத்ருக் களத்தில்) சந்திக்கும்படி செய்து விட்டான்.

“இஸ்லாத்தில் நாங்கள் நிலைத்திருப்போம்’ என (அன்சாரிகளான) நாங்கள் உறுதிமொழி அளித்த “அகபா இரவில்’ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் இருந்தேன். இதற்குப் பதிலாக பத்ருப் போரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்க வேண்டும் என நான் விரும்பியதில்லை; “அல்அகபா’ பிரமாணத்தை விட “பத்ர்’ மக்களிடையே பெயர் பெற்றதாக இருந்தாலும் சரியே!

தகிக்கும் வெயிலில் தபூக் போர்

அந்த (தபூக்) போரில் நான் கலந்து கொள்ளாத போது இருந்த உடல் பலமும் பொருள் வசதியும் (என் வாழ் நாளில்) வேறெப்போதும் எனக்கு இருந்ததில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரே நேரத்தில் இரண்டு ஒட்டகங்கள் ஒரு போதும் என்னிடம் இருந்ததில்லை. ஆனால், அந்தப் போரின் போது ஒரே நேரத்தில் இரண்டு ஒட்டகங்களை நான் வைத்திருந்தேன். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்குச் செல்ல நாடினால் (பெரும்பாலும்) வேறெதற்கோ செல்வது போன்று அதை மறைக்காமல் இருந்ததில்லை.

ஆனால், தபூக் போர் (நேரம்) வந்த போது அதற்காகக் கடும் வெயிலில் நபி (ஸல்) அவர்கள் படையெடுத்துச் செல்லவிருந்தார்கள். தொலைதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், பெரும் (பாலைவன) வனாந்திரப் பிரதேசத்தைக் கடந்து செல்ல வேண்டியிருக்கும் என்றும், அதிக (எண்ணிக்கையிலான) எதிரிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எதிர்பார்த்தார்கள்.

எனவே, முஸ்லிம்களுக்கு அவர்கள் எதிர்கொள்ள வேண்டியது பற்றி வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார்கள். அப்போது தான் அவர்கள் தங்களின் போருக்கான ஆயத்த ஏற்பாடுகளைச் செய்து கொள்ள முடியும். தாம் விரும்பிய திசையை (தபூக்கை) அவர்களுக்குத் தெரிவித்தும்

விட்டார்கள். “எழுதப்படும் எந்தப் பதிவேடும் இத்தனை பேருக்கு இடமளிக்காது’ எனும் அளவிற்கு முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தார்கள்.

பழுத்துக் குலுங்கும் பேரீச்சம்பழங்கள்

(போரில் கலந்து கொள்ளாமல்) தலை மறைவாகி விடலாமென நினைக்கும் எந்த மனிதரும், அல்லாஹ்விடமிருந்து இறை அறிவிப்பு வராத வரையில் (தான் போருக்கு வராத) விஷயம் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிய வராது என்று எண்ணவே செய்வார். (அந்த அளவிற்குப் படையினரின் எண்ணிக்கை மிகுந்திருந்தது. பேரீச்சம்) பழங்கள் பழுத்து மர நிழல்கள் அடர்ந்து நின்ற காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் போருக்குச் செல்ல ஆயத்தமானார்கள்.

தள்ளிய பயணம் தப்பிய பயணமே!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அவர்களுடன் முஸ்லிம்களும் பயண ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர்.

நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு பயண ஏற்பாடுகளைச் செய்யக் காலை நேரத்தில் செல்லுவேன். எனது பயணத்திற்கான எந்த ஏற்பாட்டையும் செய்து முடிக்காமல் திரும்பி வந்து விடுவேன்.

“(நினைக்கும் போது) அந்த ஏற்பாடுகளைச் செய்து முடிக்க எனக்குத் தான் சக்தியிருக்கிறதே! (பிறகு, நான் ஏன் அவசரப் படவேண்டும்?)’ என்று என் மனத்திற்குள் கூறிக் கொண்டேன். என் நிலை இப்படியே நீடித்துக் கொண்டிருந்தது. மக்கள் பெரும்பாடு பட்டனர்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம்முடன் முஸ்லிம்களை அழைத்துக் கொண்டு காலை நேரத்தில் புறப்பட்டு விட்டார்கள். அப்போதும் நான் எனது பயணத்திற்கு வேண்டிய எந்த ஏற்பாட்டையும் செய்து முடித்திருக்கவில்லை.

“நபி (ஸல்) அவர்கள் சென்ற பின் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் பயண ஏற்பாடுகளைச் செய்துகொண்டு அவர்களுடன் போய்ச் சேர்ந்து கொள்வேன்’ என்று நான் (என் மனதிற்குள்) சொல்லிக் கொண்டேன்.

அவர்கள் அனைவரும் சென்ற பிறகு மறுநாள் காலை பயண ஏற்பாடுகளைச் செய்ய நினைத்தேன். ஆனால், அன்றைய தினமும் எந்த ஏற்பாட்டையும் செய்து முடிக்காமல் திரும்பி வந்தேன். அதற்கு அடுத்த நாள் காலையிலும் நினைத்தேன். அன்றும் எந்த ஏற்பாடும் செய்து முடிக்கவில்லை. (இன்று நாளை என்று) எனது நிலை இழுபட்டுக் கொண்டே சென்றது.

முஸ்லிம்கள் விரைவாகப் புறப்பட்டுச் சென்று விட்டனர். (எனக்கு) அந்தப் போர் கை நழுவிவிட்டது. நான் உடனடியாகப் புறப்பட்டுச் சென்று படையினருடன் சேர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். அப்படி நான் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அது என் விதியில் எழுதப்பட்டிருக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போருக்குச் சென்றதன் பின்னால், மதீனாவில் நான் மக்களிடையே சுற்றி வரும் போது எனக்குப் பெரும் வருத்தமே ஏற்பட்டது. நயவஞ்சகர் எனச் சந்தேகிக்கப்பட்ட மனிதர்களையும் இறைவனால் சலுகை வழங்கப்பட்ட (முதியோர், பெண்கள் போன்ற) பலவீனர்களையும் தவிர வேறெவரையும் நான் (மதீனாவிற்குள்) பார்க்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தபூக் சென்றடையும் வரையில் என்னை நினைவு கூரவேயில்லை. தபூக்கில் மக்களிடையே அமர்ந்து கொண்டி ருக்கும் போது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கஅப் என்ன ஆனார்?” என்று கேட்டார்கள்.

பனூ சலிமா குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! அவரின் இரு சால்வைகளும் (ஆடை அணி கலன்களும்) அவற்றைத் தம் தோள்களில் போட்டு அவர் (அழகு) பார்த்துக் கொண்டிருப்பதும் தான் அவரை வரவிடாமல் தடுத்து விட்டன” என்று கூறினார்.

உடனே, முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், (அந்த மனிதரை நோக்கி), “தீய வார்த்தை சொன்னாய். அல்லாஹ்வின் மேல் ஆணையாக! அவரைக் குறித்து நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை; அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள்.

மனதில் தோன்றிய பொய்

நபி (ஸல்) அவர்கள் (தபூக்கிலிருந்து) திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி எனக்கு எட்டிய போது கவலை என் மனதில் புகுந்தது. (அல்லாஹ்வின் தூதரிடம் சாக்குப் போக்குச் சொல்வதற்காகப்) பொய்யான காரணங்களை நான் யோசிக்கத் தொடங்கினேன்.

“நாளை நபியவர்களின் கோபத்திலிருந்து நான் எப்படித் தப்புவேன்?” என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். மேலும், அதற்காக நான் என் குடும்பத்தாரில் கருத்துள்ள ஒவ்வொருவரிடமும் உதவி தேடினேன்.

ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நெருங்கி வந்து விட்டார்கள் என்று சொல்லப்பட்ட போது (நான் புனைந்து வைத்திருந்த) பொய்மை என் மனத்தை விட்டு விலகி விட்டது.

“பொய்யான காரணம் எதையும் சொல்லி நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு போதும் தப்பித்துக் கொள்ள முடியாது. (அல்லாஹ் தன் தூதருக்கு உண்மை நிலவரத்தைத் தெரிவித்து விடுவான்)’ என்று உணர்ந்து, நபி (ஸல்) அவர்களிடம் உண்மையைச் சொல்லிவிட முடிவு செய்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலை நேரத்தில் (மதீனாவிற்கு) வருகை புரிந்தார்கள்.

சாக்குச் சொன்ன சந்தர்ப்பவாதிகள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தால் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று அங்கு இரண்டு ரக்அத்கள் தொழுத பின் மக்களைச் சந்திப்பதற்காக (அங்கு) அமர்ந்து கொள்வது அவர்களின் வழக்கம். அதை அவர்கள் செய்த போது, (தபூக் போரில் கலந்து கொள்ளச் செல்லாமல்) பின்தங்கி விட்டவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அவர்களுக்கு முன்னால் சத்தியமிட்டு (வராமல் போனதற்கு) சாக்குப் போக்குக் கூறத் தொடங்கினர். அவர்கள் எண்பதுக்கும் மேற்பட்ட நபர்களாக இருந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களின் வெளிப்படையான காரணங்களை ஏற்றுக்கொண்டு அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தார்கள். அவர்களுக்காகப் பாவமன்னிப்பும் தேடினார்கள். அவர்களின் அந்தரங்கத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டார்கள்.

உண்மையே உரைத்தல்

அப்போது, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுக்கு நான் சலாம் சொன்ன போது கோபத்திலிருப்பவர் எவ்வாறு புன்னகைப்பாரோ அது போலப் புன்னகைத்தார்கள். பிறகு, “வாருங்கள்” என்று கூறினார்கள். உடனே, நான் அவர்களிடம் நடந்து சென்று அவர்களின் முன்னிலையில் அமர்ந்து கொண்டேன்.

அப்போது அவர்கள் என்னிடம், “(போரில்) நீங்கள் ஏன் கலந்துகொள்ளவில்லை. நீங்கள் (போருக்காக) வாகனம் வாங்கி வைத்துக் கொண்டிருக்கவில்லையா?” என்று கேட்டார்கள்.

நான், “ஆம். (வாங்கி வைத்திருந்தேன்.) அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அல்லாத (வேறு எவரேனும் ஓர்) உலகாதாயவாதிக்கு அருகில் நான் அமர்ந்து கொண்டிருந்தால் ஏதாவது (பொய்யான) சாக்குப் போக்குச் சொல்லி கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உடனடியாக வழி கண்டிருப்பேன். வாதத் திறன் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களிடம் ஏதாவது பொய்யைச் சொல்லி இன்று உங்களை நான் என்னைக் குறித்துத் திருப்தியடையச் செய்துவிட்டாலும், அல்லாஹ் வெகுவிரைவில் (உண்மை நிலவரத்தைத் தங்களுக்குத் தெரியப்படுத்தி) என் மீது தங்களைக் கடுங்கோபம் கொள்ளச் செய்து விடுவான் என்பதை நான் நன்கு அறிந்துள்ளேன். (அதே சமயம்) தங்களிடம் நான் உண்மையைச் சொல்லிவிட்டால் (தற்சமயம்) அது தொடர்பாக என் மீது தாங்கள் வருத்தப்படுவீர்கள். ஆயினும், அது விஷயத்தில் அல்லாஹ்வின் மன்னிப்பை நான் எதிர்பார்க்கிறேன். இல்லை; அல்லாஹ்வின் மீது ஆணையாக! (நான் போரில் கலந்து கொள்ளாததற்கு) என்னிடம் எந்தக் காரணமும் இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களை விட்டும் நான் பின்தங்கிவிட்ட அந்த நேரத்தில் எனக்கு இருந்த உடல் பலமும் வசதி வாய்ப்பும் அதற்கு முன் ஒரு போதும் எனக்கு இருந்ததில்லை” என்று கூறினேன்.

காத்திருக்கக் கட்டளை

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவர் உண்மை சொல்லி விட்டார்” (என்று கூறிவிட்டு என்னை நோக்கி) சரி! எழுந்து செல்லுங்கள். உங்கள் விஷயத்தில் அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான்” என்று கூறினார்கள். உடனே நான் எழுந்து சென்றேன்.

மீண்டும் தோன்றிய பொய்

பனூ சலிமா குலத்தைச் சேர்ந்த சிலர் என்னைப் பின் தொடர்ந்து ஓடி வந்து, “அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு முன்னால் எந்தப் பாவத்தையும் நீங்கள் செய்ததாக நாங்கள் அறிந்ததில்லை. (போரில்) கலந்து கொள்ளாத (மற்ற)வர்கள் சொன்ன அதே (பொய்க்) காரணத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்வதற்குக் கூட உங்களால் இயலாமற் போய் விட்டதே! நீங்கள் செய்த பாவத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்கும் பாவ மன்னிப்பே உங்களுக்குப் போதுமானதாய் இருந்திருக்குமே!” என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! பனூ சலிமா குலத்தினர் என்னைக் கடுமையாக ஏசிக் கொண்டேயிருந்தனர். எந்த அளவிற்கென்றால், நான் (அல்லாஹ்வின் தூதரிடம்) திரும்பிச் சென்று (இதற்கு முன்) நான் சொன்னது பொய் என்று (கூறி, போரில் கலந்து கொள்ளாததற்கு ஏதாவது பொய்க் காரணத்தைச்) சொல்லி விடலாமா என்று நான் நினைத்தேன்.

பிறகு நான் பனூ சலிமா குலத்தாரை நோக்கி, “(தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்ட) இந்த நிலையை என்னுடன் வேறு யாரேனும் சந்தித்திருக்கின்றார்களா?” என்று கேட்டேன். அதற்கவர்கள், “ஆம். இரண்டு பேர் நீங்கள் சொன்னதைப் போலவே (உண்மையான காரணத்தை நபியவர்களிடம்) சொன்னார்கள். உங்களுக்குச் சொல்லப்பட்டது தான் அப்போது அவர்கள் இருவருக்கும் சொல்லப்பட்டது” என்று கூறினார்கள்.

உடனே நான், “அவர்கள் இருவரும் யார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “முராரா பின் ரபீஉ அல் அம்ரீ அவர்களும், ஹிலால் பின் உமய்யா அல் வாக்கிஃபீ அவர்களும்” என்று பத்ருப் போரில் கலந்து கொண்ட இரண்டு நல்ல மனிதர்களின் பெயர்களை என்னிடம் கூறினர். அவர்கள் இருவராலும் (எனக்கு) ஆறுதல் கிடைத்தது. அவர்கள் இருவரின் பெயர்களையும் பனூ சலிமா குலத்தார் என்னிடம் சொன்னவுடன் நான் (என் இல்லத்திற்குச்) சென்று விட்டேன்.

பகிஷ்கரிக்கப்பட்ட பத்ரு ஸஹாபாக்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் போரில் கலந்து கொள்ளாதவர்களில் எங்கள் மூவரிடம் மட்டும் (யாரும்) பேசக் கூடாதென முஸ்லிம்களுக்குத் தடை விதித்து விட்டார்கள். எனவே, மக்கள் எங்களைத் தவிர்த்தனர். மேலும், அவர்கள் (முற்றிலும்) எங்கள் விஷயத்தில் மாறிப் போய் விட்டனர். (வெறுத்துப் போனதால்) என் விஷயத்தில் இப்பூமியே மாறிவிட்டது போலவும் அது எனக்கு அன்னியமானது போலவும் நான் கருதினேன்.

இதே நிலையில் நாங்கள் ஐம்பது நாட்கள் இருந்தோம். எனது இரு சகாக்களும் (முராராவும், ஹிலாலும்) செயலிழந்து போய்த் தம் இல்லங்களிலேயே அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தனர்.

பேச்சுக்கும் தடை

நான், மக்களிடையே (உடல்) பலம் மிக்கவனாகவும் (மன) வலிமை படைத்தவனாகவும் இருந்தேன். எனவே, நான் (வீட்டை விட்டு) வெளியேறி முஸ்லிம்களுடன் (ஐங்காலத்) தொழுகையில் கலந்து கொண்டும், கடை வீதிகளில் சுற்றிக் கொண்டுமிருந்தேன். என்னிடம் எவரும் பேச மாட்டார்கள்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்வேன். தொழுகையை முடித்துக் கொண்டு அவர்கள் அமர்ந்திருக்கும் போது சலாம் கூறுவேன். எனக்கு பதில் சலாம் சொல்வதற்காக அவர்கள், தம் உதடுகளை அசைக்கிறார்களா இல்லையா என்று எனக்கு நானே கேட்டுக்கொள்வேன். பிறகு, அவர்களுக்கு அருகிலேயே (கூடுதலான) தொழுகைகளை நிறைவேற்றுவேன். அப்போது என்னை நபி (ஸல்) அவர்கள் பார்க்கிறார்களா என்று ஓரக் கண்ணால் இரகசியமாகப் பார்ப்பேன்.

நான் என் தொழுகையில் ஈடுபட்டவுடன் அவர்கள் என்னைக் கவனிப்பதும், அவர்கள் பக்கம் நான் திரும்பியதும் அவர்கள் என்னிடமிருந்து முகத்தைத் திருப்பிக் கொள்வதுமாக இருந்தார்கள்.

ஸலாமுக்கும் பதிலில்லை

மக்களின் புறக்கணிப்பு நீடித்துக் கொண்டே சென்ற போது, நான் நடந்து போய் அபூ கத்தாதா (ரலி) அவர்களின் தோட்டத்தின் மதிற் சுவர் மீதேறினேன். அவர் என் தந்தையின் சகோதரர் புதல்வரும், மக்களில் எனக்கு மிகவும் பிரியமானவரும் ஆவார். அவருக்கு நான் சலாம் சொன்னேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் எனக்குப் பதில் சலாம் சொல்லவில்லை.

உடனே நான், “அபூ கத்தாதா! அல்லாஹ்வை முன் வைத்து உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நான் நேசிக்கிறேன் என்று நீ அறிவாயா?” என்று கேட்டேன். அதற்கு அவர் (பதில் கூறாமல்) மௌனமாயிருந்தார். பிறகு மீண்டும் அவரிடம் அல்லாஹ்வை முன்வைத்து (முன்பு போலவே) கேட்டேன். அப்போதும் அவர் மௌனமாகவேயிருந்தார். மீண்டும் அவரிடம் நான் அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்டேன்.

அப்போது அவர், “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று (மட்டும்) பதிலளித்தார். அப்போது என் இரு கண்களும் (கண்ணீரைப்) பொழிந்தன. பிறகு நான் திரும்பி வந்து அந்தச் சுவரில் ஏறி (வெளியேறி)னேன்.

அரசனிடமிருந்து வந்த அழைப்பு

ஒரு நாள் மதீனாவின் கடைத் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது மதீனாவிற்கு உணவு தானிய விற்பனைக்காக வந்திருந்த ஷாம் நாட்டு விவசாயிகளில் ஒருவர், “கஅப் பின் மாலிக்கை எனக்கு அறிவித்துத் தருவது யார்?” என்று விசாரித்துக் கொண்டிருந்தார். மக்கள் (என்னை நோக்கி) அவரிடம் சைகை செய்யலாயினர். உடனே அவர் என்னிடம் வந்து, “ஃகஸ்ஸான்’ நாட்டின் அரசனிடமிருந்து (எனக்கு எழுதப்பட்டிருந்த) கடிதமொன்றைத் தந்தார். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:

நிற்க! உங்கள் தோழர் (முஹம்மது) உங்களைப் புறக்கணித்து (ஒதுக்கி) விட்டார் என்று எனக்குச் செய்தி எட்டியது. உங்களை இழிவு செய்து (உங்கள் உரிமைகள்) வீணடிக்கப்படும் நாட்டில் நீங்கள் நீடிக்க வேண்டுமென்ற அவசியத்தை உங்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. எனவே, எங்களிடம் வந்து விடுங்கள். நாங்கள் உங்களிடம் நேசம் காட்டுகிறோம்.

இதை நான் படித்த போது, “இது இன்னொரு சோதனை ஆயிற்றே!” என்று (என் மனத்திற்குள்) கூறிக் கொண்டு அதை எடுத்துச் சென்று அடுப்பிலிட்டு எரித்து விட்டேன்.

தாம்பத்யத்திற்கும் தடை

ஐம்பது நாட்களில் நாற்பது நாட்கள் கழிந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய ஒரு தூதர் என்னிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் உங்கள் மனைவியை விட்டும் விலகி விட வேண்டுமென்று உத்தரவிடுகிறார்கள்” என்று கூறினார். அதற்கு நான், “அவளை நான் விவாகரத்துச் செய்துவிடவா? அல்லது நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டேன். அவர், “இல்லை. (விவாகரத்து செய்ய வேண்டாம்.) அவரை விட்டு நீங்கள் விலகிவிட வேண்டும். அவரை நெருங்கக் கூடாது (இதுவே இறைத் தூதர் உத்தரவு)” என்று கூறினார்.

இதைப் போன்றே என் இரு சகாக்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் உத்தரவு அனுப்பியிருந்தார்கள். ஆகவே, நான் என் மனைவியிடம், “உன் குடும்பத்தாரிடம் சென்று, இது விஷயத்தில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் அவர்களிடத்திலேயே இருந்து வா!” என்று சொன்னேன்.

ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்களின் மனைவி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “(என் கணவர்) ஹிலால் பின் உமய்யா செயல்பட முடியாத வயோதிகர். அவரிடம் ஊழியர் யாருமில்லை. நானே (தொடர்ந்து) அவருக்கு ஊழியம் செய்வதைத் தாங்கள் வெறுப்பீர்களா?” என்று கேட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை. ஆயினும், அவர் உன்னை (உடலுறவு கொள்ள) நெருங்க வேண்டாம்” என்று சொன்னார்கள். ஹிலால் அவர்களின் மனைவி, “அல்லாஹ்வின் மீதாணையாக! என் கணவரிடம் எந்த இயக்கமும் இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவருடைய விஷயத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதிலிருந்து இந்த நாள் வரையில் அழுது கொண்டே இருக்கிறார்” என்றும் கூறினார்.

என் வீட்டாரில் ஒருவர், “தம் கணவருக்குப் பணிவிடை புரிய ஹிலால் பின் உமய்யா அவர்களின் மனைவியை அனுமதித்தது போல், உங்கள் மனைவியை (உங்களுக்குப் பணிவிடை புரிய) அனுமதிக்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டால் (நன்றாயிருக்குமே)” என்று கூறினார்.

அதற்கு நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவி விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் அனுமதி கேட்க மாட்டேன். என் மனைவி விஷயத்தில் நான் அனுமதி கோரும்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன (பதில்) சொல்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நானோ இளைஞனாக இருக்கிறேன். (ஹிலால், வயோதிகர். அதனால் அவருக்கு அல்லாஹ்வின் தூதர் சலுகை காட்டியிருக்கலாம்)” என்று கூறி விட்டேன். அதற்குப் பின் பத்து நாட்கள் (இவ்வாறே) இருந்தேன்.

சுப்ஹில் வந்த சுபச் செய்தி

எங்களிடம் பேசக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்த நாளிலிருந்து ஐம்பது நாட்கள் எங்களுக்குப் பூர்த்தியாயின. நான் ஐம்பதாம் நாளின் ஃபஜ்ருத் தொழுகையை எங்கள் வீடுகளில் ஒன்றின் மாடியில் நிறைவேற்றிவிட்டு அல்லாஹ் (எங்கள் மூவரையும் குறித்து 9:118ஆவது வசனத்தில்) குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருந்தேன். (அதாவது:) “பூமி இத்தனை விரிவாய் இருந்தும் என்னைப் பொறுத்த வரையில் அது குறுகி, நான் உயிர் வாழ்வதே மிகக் கஷ்டமாயிருந்தது.

அப்போது, “சல்உ’ மலை மீதேறி பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவர் உரத்த குரலில், “கஅப் பின் மாலிக்கே! நற்செய்தி பெற்றுக் கொள்க!” என்று கூறினார். உடனே நான் சஜ்தாவில் விழுந்தேன். சந்தோஷம் வந்து விட்டது என்று நான் அறிந்து கொண்டேன். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுது கொண்டிருந்த போது (வஹீ அறிவிக்கப்பட்டு) எங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் என்று அறிவித்து விட்டார்கள்’ என நான் விளங்கிக் கொண்டேன். எங்களுக்கு நல்வாழ்த்துச் சொல்ல மக்கள் வரலாயினர். என் இரு சகாக்களை நோக்கி நற்செய்தி சொல்பவர்கள் சென்றனர். என்னை நோக்கி ஒருவர் குதிரையில் விரைந்து வந்தார்.

வழிநெடுகிலும் வாழ்த்தும் மக்கள்

அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் ஓடிச் சென்று மலை மீது ஏறிக் கொண்டார். (மேலும், உரத்த குரலில் எனக்கு நற்செய்தி சொன்னார்.) மேலும், அந்தக் குரல் அக்குதிரையை விட வேகமாக வந்து சேர்ந்தது. எவரது குரலை (மலை மீதிருந்து) கேட்டேனோ அவர் என்னிடம் நற்செய்தி சொல்ல (நேரடியாக) வந்தபோது நான் என் இரு ஆடைகளையும் கழற்றி அவர் சொன்ன நற்செய்திக்குப் பகரமாக (பரிசாக) அவருக்கு அணிவித்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (ஆடைகளில்) அந்த இரண்டைத் தவிர வேறெதுவும் அப்போது எனக்குச் சொந்தமானதாக இருக்கவில்லை. (வேறு) இரண்டு ஆடைகளை (அபூகத்தாதா அவர்களிடமிருந்து) இரவல் வாங்கி நான் அணிந்து கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தேன். அப்போது (வழியில்) மக்கள் கூட்டங் கூட்டமாக வந்து என்னைச் சந்தித்து, எனக்குப் பாவமன்னிப்புக் கிடைத்ததால், “அல்லாஹ் உங்கள் பாவத்தை மன்னித்து விட்டதற்காக உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறோம்’ என்று கூறலாயினர்.

நபிகளாரின் நல்வாழ்த்துக்கள்

நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கு தம்மைச் சுற்றிலும் மக்களிருக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அப்போது என்னை நோக்கி தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் எழுந்தோடி வந்து எனக்குக் கைலாகு கொடுத்து என்னை வாழ்த்தவும் செய்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹாஜிர்களில் அவர்களைத் தவிர வேறெவரும் என்னை நோக்கி (வருவதற்காக) எழவில்லை. தல்ஹா (ரலி) அவர்களின் இந்த அன்பை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்ன போது, சந்தோஷத்தினால் முகம் மின்னிக் கொண்டிருக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன்னை உன் தாய் பெற்றெடுத்தது முதல் உன்னைக் கடந்து சென்ற நாட்களில் மிகச் சிறந்த நாளான இன்று உனக்கு (பாவ மன்னிப்புக் கிடைத்த) நற்செய்தி கூறுகிறேன்” என்று கூறினார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! (இந்த நற்செய்தியைத்) தாங்களே தங்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கிறீர்களா? அல்லது அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (வந்த வேத அறிவிப்பின் அடிப்படையில்) தெரிவிக்கிறீர்களா?” என்று கேட்டேன். அவர்கள், “இல்லை. அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (வந்த வேத அறிவிப்பின் அடிப்படையில்) தான் தெரிவிக்கிறேன்” என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சந்தோஷம் ஏற்படும் போது அவர்களது முகம் சந்திரனின் ஒரு துண்டு போல் ஆகி பிரகாசிக்கும். அவர்களது முகத்தின் பிரகாசத்தை வைத்து அவர்களது சந்தோஷத்தை நாங்கள் அறிந்து கொள்வோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் நான் அமர்ந்து கொண்டபோது, “அல்லாஹ்வின் தூதரே! எனது பாவம் மன்னிக்கப்பட்டதற்காக என் செல்வமனைத்தையும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (அவர்கள் விரும்பும் வழியில் செலவிடுவதற்காக) தர்மமாக அளித்து விடுகிறேன்” என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்கள் செல்வத்தில் சிறிதளவை உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது” என்று கூறினார்கள்.

உண்மைக்குக் கிடைத்த உயர் பரிசு

“கைபர் போரில் எனக்குக் கிடைத்த பங்கை நான் (எனக்காக) வைத்துக் கொள்கிறேன். அல்லாஹ்வின் தூதரே! உண்மை பேசிய காரணத்தினால் தான் அல்லாஹ் என்னைக் காப்பாற்றினான். (உண்மைக்குக் கிடைத்த பரிசாக) என் பாவம் மன்னிக்கப்பட்டதை அடுத்து நான் உயிரோடு வாழும் வரையில் உண்மையைத் தவிர வேறெதையும் பேச மாட்டேன்” என்று கூறினேன்.

ஆகவே, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த வார்த்தையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறிய நாளிலிருந்து உண்மை பேசியதற்காக எனக்கு அல்லாஹ் அருள் புரிந்தது போன்று வேறெந்த முஸ்லிமுக்கும் அல்லாஹ் அருள் புரிந்ததாக நான் அறியவில்லை. இந்த உறுதி மொழியை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்ன நாளிலிருந்து எனது இந்த நாள் வரை நான் பொய்யை நினைத்துப் பார்த்தது கூட இல்லை. நான் (உயிரோடு) எஞ்சியிருக்கும் காலத்திலும் அல்லாஹ் என்னைப் (பொய் சொல்லவிடாமல்) பாதுகாப்பான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மன்னிப்பை வழங்கிய மகத்தான வசனம்

மேலும், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ், “இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தவர்களையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களை மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன். தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான்.) பூமி விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது சுருங்கி விட்டது. அவர்களது உள்ளங்களும் சுருங்கி விட்டன. அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க) அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உண்மையாளர்களுடன் ஆகுங்கள்!” எனும் (9:117-119) வசனங்களை அருளினான்.

ஆகவே, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு இஸ்லாத்திற்கு வழி காட்டிய பின், தன் தூதர் (ஸல்) அவர்களிடம் என்னை உண்மை பேசச் செய்து உபகாரம் புரிந்தது போன்று வேறெந்த உபகாரத்தையும் நான் மிகப் பெரியதாக ஒரு போதும் கருதவில்லை. நான் அவர்களிடம் பொய் பேசியிருந்தால், (போருக்குச் செல்லாமல்) பொய் சொன்னவர்(களான நயவஞ்சகர்)கள் அழிந்து போனது போல நானும் அழிந்து விட்டிருப்பேன். ஏனெனில், இறைவன் வேத அறிவிப்பு (வஹீ) அருளிய போது யாருக்கும் சொல்லாத கடுமையான சொற்களைப் பொய் சொன்னவர்கள் குறித்து அருளினான்.

“அவர்களிடம் நீங்கள் திரும்பும் போது அவர்களை நீங்கள் விட்டு விடுவதற்காக உங்களிடம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கின்றனர். அவர்களை விட்டு விடுங்கள்! அவர்கள் அசுத்தமாவர். அவர்களின் தங்குமிடம் நரகம். இது அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கான தண்டனை. நீங்கள் அவர்கள் மீது திருப்தியடைய வேண்டுமென்பதற்காக உங்களிடம் சத்தியம் செய்கின்றனர். நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டாலும் குற்றம் புரியும் கூட்டத்தை அல்லாஹ் பொருந்திக் கொள்ள மாட்டான்” என்று அல்லாஹ் கூறினான். (9:95, 96)