அல்முர்ஸலாத் – அனுப்பப்படுபவை

அத்தியாயம் : 77

வசனங்களின் எண்ணிக்கை: 50

அளவிலா அருளாளன், நிகரிலா அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
1. தொடர்ந்து அனுப்பப்படுபவைமீது சத்தியமாக!607
2. கடுமையாக வீசும் புயல்களின்மீது சத்தியமாக!
3. நன்றாகப் பரப்பிவிடக்கூடியவைமீது சத்தியமாக!
4. உறுதியாக வேறுபடுத்திக் காட்டுபவைமீது சத்தியமாக!
5, 6. மன்னிப்பாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ அறிவுரையைப் போடுகின்ற (வான)வர்கள்மீது சத்தியமாக!
7. உங்களுக்கு வாக்களிப்படுவதெல்லாம் நிகழக்கூடியதே!
8. நட்சத்திரங்கள் ஒளியற்றதாக்கப்படும்போது,
9. வானம் பிளக்கப்படும்போது,
10. மலைகள் தூள் தூளாக்கப்படும்போது,
11. தூதர்களுக்கு நேரம் நிர்ணயிக்கப்படும்போது (உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது நிகழும்.)
12. எந்த நாளுக்காக (இவை) பிற்படுத்தப்பட்டுள்ளன?
13. தீர்ப்பு நாளுக்காக!
14. தீர்ப்பு நாள் என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
15. பொய்யெனக் கூறுவோருக்கு அந்நாளில் கேடுதான்.
16, 17. முன்னிருந்தோரை நாம் அழித்துவிட்டுப் பின்வந்தவர்கள் அவர்களைத் தொடருமாறு செய்யவில்லையா?
18. நாம் குற்றவாளிகளை இப்படித்தான் நடத்துவோம்.
19. பொய்யெனக் கூறுவோருக்கு அந்நாளில் கேடுதான்.
20. அற்ப நீரிலிருந்து உங்களை நாம் படைக்கவில்லையா?608
21, 22. பின்னர், நிர்ணயிக்கப்பட்ட காலம் வரை பாதுகாப்பான இடத்தில் அவனை ஆக்கினோம்.
23. நாமே நிர்ணயித்தோம். நிர்ணயிப்போரில் நாமே சிறந்தவர்கள்.
24. பொய்யெனக் கூறுவோருக்கு அந்நாளில் கேடுதான்.
25. அரவணைக்கக் கூடியதாக நாம் பூமியை ஆக்கவில்லையா?
26. உயிருடன் இருப்போரையும், மரணித்தோரையும் (அரவணைக்கிறது.)
27. அதில் உயரமான மலைகளை ஏற்படுத்தினோம். சுவையான நீரை உங்களுக்குப் புகட்டினோம்.
28. பொய்யெனக் கூறுவோருக்கு அந்நாளில் கேடுதான்.
29. நீங்கள் எதைப் பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தீர்களோ அதை நோக்கிச் செல்லுங்கள்!
30. மூன்று கிளைகளையுடைய நிழலை நோக்கிச் செல்லுங்கள்!
31. அது நிழல் அளிக்கக்கூடியதல்ல! தீச்சுவாலையிலிருந்து காப்பாற்றவும் செய்யாது.
32. அது மாளிகையைப் போன்ற தீக்கங்குகளை எறிந்து கொண்டிருக்கும்.
33. அது மஞ்சள் நிற ஒட்டகங்களைப் போல் இருக்கும்.
34. பொய்யெனக் கூறுவோருக்கு அந்நாளில் கேடுதான்.
35. அது அவர்கள் பேச முடியாத நாளாகும்.
36. சாக்குப்போக்குகளைக் கூற அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட மாட்டாது.
37. பொய்யெனக் கூறுவோருக்கு அந்நாளில் கேடுதான்.
38. இது தீர்ப்பு நாள். உங்களையும், முன்னோரையும் ஒன்றுசேர்த்து விட்டோம்.
39. உங்களிடம் ஏதேனும் சூழ்ச்சி இருந்தால் எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்!
40. பொய்யெனக் கூறுவோருக்கு அந்நாளில் கேடுதான்.
41. இறையச்சமுடையோர் நிழல்களிலும், நீருற்றுகளிலும் இருப்பார்கள்.
42. அவர்கள் விரும்பும் பழங்கள் உள்ளன.
43. “நீங்கள் செய்து கொண்டிருந்த (நற்)செயல்களின் காரணமாக மகிழ்ச்சியுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்” (என்று கூறப்படும்.)
44. நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.
45. பொய்யெனக் கூறுவோருக்கு அந்நாளில் கேடுதான்.
46. சிறிது காலம் (இவ்வுலகில்) உண்ணுங்கள்! சுகமனுபவியுங்கள்! நீங்கள் குற்றவாளிகளே!
47. பொய்யெனக் கூறுவோருக்கு அந்நாளில் கேடுதான்.
48. அவர்களிடம், ‘ருகூவு செய்யுங்கள்’ என்று கூறப்பட்டால் அவர்கள் ருகூவு செய்ய மாட்டார்கள்.
49. பொய்யெனக் கூறுவோருக்கு அந்நாளில் கேடுதான்.
50. இதற்குப் பிறகு எந்தச் செய்தியைத்தான் அவர்கள் நம்பப் போகிறார்கள்?