TNTJ போராட்டத்துக்கும் மற்றவர்களின் போராட்டத்துக்கும் வேறுபாடு என்ன?

கேள்வி :

நபிகள் நாயகத்தைக் கொச்சைப்படுத்திய அமெரிக்காவிற்கு எதிராக டிஎன்டிஜே நடத்திய போராட்டத்திற்கும் மற்றவர்களின் போராட்டத்திற்கும் என்ன வேறுபாடு?

சம்சுதீன், கோவை

பதில் :

அமெரிக்காவுக்கு எதிரான போராட்டத்தைப் பகிரங்கமாக எதிர்த்த சம்சுத்தீன் காசிமி, கேவிஎஸ் ஹபீப் முஹம்மத் போன்றவர்களைத் தவிர நபிகள் நாயகத்திற்கு எதிரான எந்த ஒன்றையும் எந்த ஒரு முஸ்லிமும் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பதற்கான அடையாளமாக அனைத்து இயக்கத்தினரும் இதற்காகப் போராடியுள்ளனர்.

இதில் நாம் யாருடைய போராட்டத்திற்கும் நோக்கம் கற்பிக்க மாட்டோம். அனைவருமே நபிகள் நாயகத்தின் மீது வைத்துள்ள அன்பின் காரணமாகத்தான் போராட்டம் நடத்தினார்கள். அதில் கலந்து கொண்டவர்களும் இயக்கத்திற்காக கலந்து கொள்ளவில்லை. நபிகள் நாயகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு கொதிப்படைந்துதான் கலந்து கொண்டார்கள்.

எல்லா அமைப்புகளின் போராட்டங்களிலும் பலர் கலந்து கொண்டதையும் நாம் பார்க்க முடிந்தது. இதில் இயக்கங்களை முன்னிலைப்படுத்த நாம் விரும்பவில்லை. அதே சமயத்தில் அனைவருக்கும் நாம் ஆலோசனை சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

கொள்கையிலும், பெயர்களிலும் வேறுபட்டவர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவது அறிவுடைமை அல்ல. ஒரு பொதுக்கூட்டம் நடத்தினால் அதில் பிரச்சினைகள் இல்லாமல் நடத்திவிடலாம்.

தடையை மீறி நடக்கும் போராட்டங்களையும், உணர்ச்சிகரமான போராட்டங்களையும் பிரச்சினை இல்லாமல் நடத்திட முடியாது. ஒரு இயக்கம் போராட்டம் நடத்தும்போது அதன் தலைவர்களும், தொண்டர்களும் மக்களைக் கட்டுப்படுத்த இயலும். மக்களும் கட்டுப்படுவார்கள்.

ஆனால் பல இயக்கங்கள் ஒன்று சேர்ந்து நடத்தும் போராட்டங்களில் யாரும் யாருக்கும் கட்டுப்பட மாட்டார்கள். எந்த ஒருங்கிணைப்பும் இருக்காது. பாரதூரமான விளைவுகள் ஏற்பட்டால் அதைத் தடுக்க இயலாது. இதை உணர்ந்து உணர்ச்சிகரமான விஷயங்களில் இதுபோன்ற கூட்டுப் போராட்டங்களைத் தவிர்க்குமாறு அறிவுரை கூறுகிறோம்.

நடந்த அசம்பாவிதத்தில் இருந்து இதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகத்திற்குப் பெருமை சேர்ப்பதற்குப் பதில் முஸ்லிம்கள் வன்முறையாளர்கள் என்ற கருத்தையே இது விதைத்துவிடும். இதை உணர்ந்துதான் தவ்ஹீத் ஜமாஅத் இது போன்ற கூட்டுப் போராட்டங்களில் பங்கெடுப்பதில்லை என்பதைக் கொள்கையாகவே வைத்துள்ளது.