முஸ்லிம்கள் திசையை வணங்குகிறார்களா?

கேள்வி :

முஸ்லிம்கள் திசையை வணங்குகிறார்களா?

பதில் :

ஒரே ஒரு கடவுளை மட்டும் வணங்குவதாகக் கூறிக்கொள்ளும் முஸ்லிம்கள் மற்ற மதத்தவர்களைப் போல பல கடவுள் வழிபாடு செய்பவர்களாகவே உள்ளனர் என்பது பிற மதத்தவர்களின் விமர்சனங்களில் முக்கியமானதாகும்.

இவ்வாறு விமர்சனம் செய்வதற்குச் சில சான்றுகளையும் முன் வைக்கின்றனர்.

முஸ்லிம்கள் ஒரே கடவுளை வணங்குவதாகக் கூறிக் கொண்டாலும் உண்மையில் அவர்கள் மேற்குத் திசையைத் தான் வணங்குகின்றனர். எல்லாப் பள்ளிவாசல்களும் மேற்கு நோக்கித் தான் கட்டப்பட்டுள்ளன என்பது அவர்கள் எடுத்துக் காட்டும் சான்றுகளில் ஒன்றாகும்.

பாமர மக்கள் மட்டுமின்றி பண்டிதர்களும் கூட இவ்வாறு விமர்சனம் செய்துள்ளனர். பாரதியார் கூட முஸ்லிம்களைப் பற்றிக் குறிப்பிடும் போது திக்கை வணங்கும் துருக்கர் எனப் பாடியுள்ளார்.

முஸ்லிம்கள் திசையை வணங்குவதாகக் கூறுவதே அடிப்படையில் தவறான வாதமாகும்.

மக்கா நகரில் கஅபா எனும் ஆலயம் இருக்கிறது. அந்த ஆலயத்தை நோக்கித் தொழ வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் கட்டளை. மேற்குத் திசையை நோக்கித் தொழ வேண்டும் என்று கட்டளையிடப்படவில்லை.

மக்காவில் அமைந்த கஅபா ஆலயம் இந்தியாவுக்கு மேற்கில் உள்ளதால் இந்திய முஸ்லிம்கள் மேற்கு நோக்கி ஏக இறைவனை வணங்குகின்றனர்.

உலக முஸ்லிம்கள் அனைவரும் மேற்கு நோக்கித் தொழ மாட்டார்கள். தொழவும் கூடாது.

மக்காவிற்கு மேற்கில் உள்ளவர்கள் கிழக்குத் திசை நோக்கியும், மக்காவுக்கு வடக்கே உள்ளவர்கள் தெற்குத் திசை நோக்கியும் மக்காவுக்கு தெற்கே உள்ளவர்கள் வடக்குத் திசை நோக்கியும் தொழுகின்றனர்.

உலக முஸ்லிம்கள் அனைவரும் மேற்குத் திசை நோக்கித் தொழுதால் தான் முஸ்லிம்கள் திசையை வணங்குகிறார்கள் என்ற விமர்சனத்தில் உண்மை இருக்க முடியும்.

முஸ்லிம்கள் மேற்குத் திசையை வணங்குகிறார்கள் எனக் கூறுவது வேண்டுமானால் தவறாக இருக்கலாம். கஅபாவின் திசையை வணங்குகிறார்கள் என்று கருதலாம் அல்லவா? என்று மற்றொரு சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.

இதுவும் கூட தவறான எண்ணம் தான். ஒன்றை நோக்குவது அதை வணங்குவதாக ஆகும் என்பது அறிவுக்குப் பொருந்தாத வாதமாகும்.

மனிதர்கள் எல்லா நிலையிலும் ஏதேனும் ஒரு திசையை நோக்காமல் இருக்க முடியாது. ஒரு காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் ஒன்றுமே செய்யாமல் இருந்தாலும் ஏதேனும் ஒரு திசையை நோக்குவதைத் தவிர்க்கவே இயலாது. எனவே நோக்குவதையெல்லாம் வணக்கம் என்று யாருமே கூற மாட்டார்கள். வணங்குவது வேறு, நோக்குவது வேறு. இவ்விரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் இந்தச் சந்தேகம் விலகிவிடும்.

ஒரு பொருளை வணங்குவது என்றால் நமது குறைகளைத் தீர்க்கும் ஆற்றல் அதற்கு இருக்கிறது. நாம் தவறு செய்தால் நம்மைத் தண்டிக்கும் வலிமையும் அதற்கு இருக்கிறது என்று நம்பி அதையே கடவுளாகப் பாவித்தால் தான் அதை வணங்குகிறார்கள் எனக் கூற முடியும்.

கஅபா எனும் ஆலயத்தைப் பற்றி முஸ்லிம்கள் இப்படி நம்புகிறார்களா? நிச்சயமாக இல்லை.

கஅபா ஆலயம் நம்மைப் பாக்காது. நமக்கு எந்த உதவியும் செய்யும் ஆற்றல் அதற்குக் கிடையாது. நாம் செய்யும் தவறுகளுக்காக அந்த ஆலயத்தால் நம்மைத் தண்டிக்க முடியாது. மற்ற பொருட்களெல்லாம் அழிந்து போகும் போது அந்த ஆலயமும் அழிந்து போய்விடும் என்று தான் முஸ்லிம்கள் நம்புகிறார்கள். அப்படித் தான் நம்ப வேண்டும்.

கஅபா ஆலயமே! நீ தான் எங்களின் துன்பங்களைத் துடைக்க வேண்டும் எங்கள் வாழ்வை வளப்படுத்த வேண்டும் என்று இஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு ஞானமுள்ள முஸ்லிம்கள் கூட நினைப்பதில்லை. நினைக்கவும் கூடாது.

கஅபா எனும் ஆலயத்தை நோக்கித் தொழுமாறு கட்டளையிடும் திருக்குர்ஆன் அக்கட்டளையுடன் முக்கிய அறிவுரையையும் சேர்த்துக் கூறுகிறது.

நீங்கள் எத்திசையில் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் திருமுகம் உள்ளது.

திருக்குர்ஆன் 2 : 15

என்பது தான் அந்த அறிவுரை.

கஅபாவை நோக்கும் போது கஅபா தான் கடவுள் என்றோ, கஅபாவுக்குள் தான் கடவுள் இருக்கிறான் என்றோ எண்ணி விடக் கூடாது. என்று தெளிவாக அறிவுறுத்தி விட்டுத்தான் கஅபாவை நோக்குமாறு குர்ஆன் கட்டளையிட்டுள்ளது.

எனவே முஸ்லிம்கள் மேற்கையும் வணங்கவில்லை. கஅபாவையும் வணங்கவில்லை. கஅபா இருக்கும் திசையையும் வணங்கவில்லை. மாறாக கடவுளின் கட்டளைப்படி கஅபாவை நோக்கியவர்களாக அந்த ஒரு கடவுளைத் தான் வணங்குகிறார்கள்.

கஅபாவை நோக்கி முஸ்லிம்கள் அல்லாஹ்வைத் தான் வணங்குகிறார்கள் என்பதை தொழுகையில் கூறப்படும் ஜெபங்களிலிருந்தும் உறுதி செய்யலாம்.

தொழுகையைத் துவக்கும் போது அல்லாஹ் பெரியவன் என்று தான் முஸ்லிம்கள் கூறுவார்கள். தொழுகையின் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் போதும் அல்லாஹ் பெரியவன் என்று தான் கூறுவார்கள். தொழுகைக்கு உள்ளேயும் அல்லாஹ்வைத் தான் புகழ்வார்கள்.

இந்த இடத்தில் மற்றொரு சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம். கடவுளை வணங்கும் போது நோக்குவதற்கு கஅபா ஆலயத்தைக் குறிப்பாக ஏன் தேர்வு செய்ய வேண்டும்? என்பது தான் அந்தச் சந்தேகம். இந்தச் சந்தேகத்திற்கும் திருக்குர்ஆன் தெளிவான விடையை வைத்திருக்கிறது.

இஸ்லாமிய நம்பிக்கையின்படி கடவுள் ஒரே ஒரு ஜோடி மனிதர்களைத் தான் படைத்தான். அந்த ஒரே ஒரு ஜோடியின் மூலமாகத் தான் மனித குலம் பல்கி இன்று அறுநூறு கோடியைத் தாண்டியுள்ளது.

கடவுளால் முதன் முதலில் படைக்கப்பட்ட ஆதம், இப்போது மக்கா நகரம் என்றழைக்கப்படும் பகுதியில் இப்போது கஅபா ஆலயம் இருக்கும் இடத்தில் ஒரே இறைவனை வணங்குவதற்காக ஒரு ஆலயத்தை எழுப்பினார்.

உலகில் ஒரே கடவுளை வணங்குவதற்காக முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் என்பதால் அதை நோக்கித் தொழுகை நடத்துமாறு இஸ்லாம் கட்டளையிடுகிறது. கஅபா ஆலயத்தை நோக்குமாறு கட்டளையிட்டதற்கு இது தான் முக்கிய காரணம்.

மனித சமுதாயத்திற்கு (இறைவனை வணங்குவதற்காக) முதலில் அமைக்கப்பட்ட ஆலயம் பக்கா (எனும் மக்கா)வில் உள்ள ஆலயமாகும்.

திருக்குர்ஆன் 3 : 36

முதன் மனிதரால் உலகின் முதல் ஆலயமாக எழுப்பப்பட்ட ஆலயத்தை நோக்கி அந்த ஒரே இறைவனை வணங்குவது மிகவும் பொருத்தமானதாகவும் உள்ளது.

கஅபா ஆலயத்தை முஸ்லிம்கள் வணங்குவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள மற்றுமொரு சான்றையும் பார்க்கலாம்.

கஅபா ஆலயம் எத்திசையில் இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாத நிலை ஒருவருக்கு ஏற்படுவதாக வைத்துக் கொள்வோம். அந்த நிலையில் இருப்பவர் எந்தத் திசையை நோக்கியும் தொழலாம். தொழுது முடித்த பின்னர் அவர் தொழுதது கஅபாவுக்கு எதிரான திசை என்பது தெரிய வந்தால் ஏற்கனவே தொழுததை மீண்டும் தொழ வேண்டியதில்லை என்பது இஸ்லாத்தின் கோட்பாடு.

கஅபா ஆலயம் தான் வணங்கப்படுகிறது என்றிருந்தால் கஅபா ஆலயம் இருக்கும் திசை தெரியாவிட்டால் தொழக் கூடாது என்று கட்டளையிடப்பட்டிருக்கும். அல்லது தொழுத பின் கஅபா இருக்கும் திசையில் தொழவில்லை என்பது தெரிய வந்தால் மீண்டும் தொழ வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு கட்டளையிடப்படாததால் முஸ்லிம்கள் கஅபாவை கடவுளாகக் கருதுகிறார்கள் என்பதும், கஅபாவை வணங்குகிறார்கள் என்பதும் முற்றிலும் தவறானது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இந்த இடத்தில் சிலருக்கு மற்றொரு சந்தேகம் ஏற்படலாம்.

கஅபாவை நோக்கி கடவுளை வணங்குமாறு கூறாமல் அவரவர் விருப்பத்தின் பால் இதை விட்டு விடலாமே! என்பதே அந்தச் சந்தேகம்.

தொழுகை எனும் வணக்கத்தை முஸ்லிம்கள் ஓரிடத்தில் கூட்டாக நடத்த வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. பலரும் கூட்டாகக் குழுமி வணங்கும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையை நோக்கி நின்றால் அதில் கட்டுப்பாடோ, ஒழுங்கோ இருக்காது. அனைவரும் ஒரே திசையை நோக்கியவர்களாக நின்றால் தான் அதில் ஒழுங்கு இருக்கும்.

ஒரு வீட்டில் ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் தனித்தனியாக தொழும் போது கூட ஒழுங்கு அவசியமானது தான். ஒருவர் வடக்கு நோக்கியும், மற்றொருவர் தெற்கு நோக்கியும், இன்னொருவர் கிழக்கு நோக்கியும், வேறொருவர் மேற்கு நோக்கியும் தொழுதால் அதில் கூட ஒழுங்கின்மை தான் வெளிப்படும்.

இந்த ஒழுங்கை ஏற்படுத்துவதற்காகத் தான் ஏதாவது ஒரு திசையை நோக்குமாறு அனைவருக்கும் கட்டளையிட வேண்டி வருகிறது.

இதைப் புரிந்து கொண்டவர்கள் முஸ்லிம்கள் திசையையோ, கஅபா ஆலயத்தையோ வணங்குகிறார்கள் என்று கூறமாட்டார்கள்.