அல்லாஹ்வின் பெயரால் என்று கடிதத்தை துவக்கலாமா?

கேள்வி :

கடிதம் எழுதும் போது நாம் அல்லாஹ்வின் திருப்பெயரால் என்று ஆரம்பிக்கிறோம். ஆனால் இவ்வாறு எழுதுவது கூடாது. முழுமையாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்றே எழுத வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.இது சரியா?

பதில் :

பொதுவாக ஒரு செயலைத் துவக்கும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் திருப்பெயரால்) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனினும் கடிதங்களின் துவக்கத்தில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று முழுமையாக எழுதியதாகத் தான் ஹதீஸ்களில் காணப்படுகின்றது.

حدثنا محمد بن مقاتل أبو الحسن أخبرنا عبد الله أخبرنا يونس عن الزهري قال أخبرني عبيد الله بن عبد الله بن عتبة أن ابن عباس أخبره أن أبا سفيان بن حرب أخبره أن هرقل أرسل إليه في نفر من قريش وكانوا تجارا بالشأم فأتوه فذكر الحديث قال ثم دعا بكتاب رسول الله صلى الله عليه وسلم فقرئ فإذا فيه بسم الله الرحمن الرحيم من محمد عبد الله ورسوله إلى هرقل عظيم الروم السلام على من اتبع الهدى أما بعد

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹெர்குலிஸ் மன்னருக்கு இஸ்லாத்தை ஏற்குமாறு எழுதி அனுப்பிய கடிதத்தில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதி அனுப்பினார்கள்.

பார்க்க: புகாரி 6261

சுலைமான் நபியவர்கள் ஸபா நாட்டு அரசிக்குக் கடிதம் எழுதிய போது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதியதாக திருக்குர்ஆன் கூறுகின்றது.

பிரமுகர்களே! என்னிடம் மகத்துவமிக்க கடிதம் போடப்பட்டுள்ளது. அது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… என்னை மிகைக்க நினைக்காதீர்கள். கட்டுப்பட்டவர்களாக என்னிடம் வாருங்கள்! என்று அதில் உள்ளது என்று அவள் கூறினாள்.

திருக்குர்ஆன் 27:30, 31

எனவே கடிதங்கள் எழுதும் போது, பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் (அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்) என்று துவங்குவது தான் சரியானதாகும்.