அடிமைகள் விடுதலை இன்று சாத்தியமா?

கேள்வி

கர்ப்பிணிப் பெண்ணொருத்தியின் கர்ப்பம் ஒருவரால் கலைக்கப்பட்டால் அதற்கு உயிரீடாக ஓர் ஆண் அடிமை அல்லது ஓர் அடிமைப் பெண் கொடுக்கப்பட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்புக் கூறியதாக புகாரியில் 5758, 5759, 5760, 7317 ஆகிய ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது. முக்கிய கருத்தை மட்டுமே நான் மேலே குறிப்பிட்டுள்ளேன்.

இன்னும் பல குற்றங்களுக்குப் பரிகாரமாக அடிமைகளை விடுதலை செய்தல் உள்ளிட்ட வேறு பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன். ஆனால் மேற்கண்ட குற்றத்துக்கு அடிமைகளை விடுதலை செய்தல் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.

அடிமைகள் இல்லாத காலத்தில் என்ன செய்வது?

இந்த ஹதீஸ்களுடன் சேர்த்து வாசித்து விளக்கம் பெறப் போதுமான குர்ஆன் வசனமோ, அல்லது மற்றும் ஹதீஸ்களோ உள்ளனவா?

அவ்வாறில்லை என்றால் இந்த ஹதீஸ்களின் தரம் என்ன?

P.G.M.M. ளாஃபிர், புளுகஹதென்னை, அக்குறணை, இலங்கை

பதில்:

வயிற்றில் உள்ள குழந்தையை தவறுதலாகக் கொலை செய்தால் அடிமையை நட்ட ஈடாகக் கொடுக்க வேண்டும் என்று மட்டும் மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் அது அல்லாத பரிகாரம் வேறு ஹதீஸில் சொல்லப்படுள்ளது.

أخبرنا يعقوب بن إبراهيم وإبراهيم بن يونس بن محمد قالا حدثنا عبيد الله بن موسى قال حدثنا يوسف بن صهيب عن عبد الله بن بريدة عن أبيه أن امرأة حذفت امرأة فأسقطت فجعل رسول الله صلى الله عليه وسلم في ولدها خمسين شاة ونهى يومئذ عن الخذف أرسله أبو نعيم

ஒரு பெண் கல்லைச் சுண்டி விட்டு இன்னொரு பெண்ணின் கருவைக் கலையச் செய்து விட்டாள். அவளது குழந்தைக்கான நட்ட ஈடாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஐம்பது ஆடுகளை நிர்ணயித்தார்கள்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)

நூல் : நஸாயீ

தவறுதலாக கர்ப்பத்தில் உள்ள குழந்தையைக் கொன்றால் அடிமையையும் விடுதலை செய்யலாம். நட்ட ஈடாக ஐம்பது ஆடுகளையும் கொடுக்கலாம். தற்காலத்தில் அடிமைகள் இல்லாததால் ஐம்பது ஆடுகள் நட்ட ஈடாக கொடுக்க வேண்டும்.