உலகத்தில் எங்குமே பிறை பார்க்க முடியவில்லை என்றால் சவூதியிலும், மலேஷியாவிலும் எப்படிப் பார்த்தார்கள்?

? அக்டோபர் மாத இதழில், முகத்திரையைக் கிழித்த முதல் பிறை என்ற தலைப்பில், “உலகத்தில் எங்குமே பிறை பார்க்க முடியாத அமாவாசை தினத்தில் முதல் பிறை என்று அறிவித்து உள்ளனர்’ என்று எழுதியுள்ளீர்கள். ஆனால் அதே நாளில் சவூதியிலும், மலேஷியாவிலும் நோன்பைத் துவக்கியுள்ளனர். உலகத்தில் எங்குமே பார்க்க முடியவில்லை என்றால் சவூதியிலும், மலேஷியாவிலும் எப்படிப் பார்த்தார்கள்? இரண்டும் வேறு கிரகங்களில் உள்ளதா? மேலும் அதே கட்டுரையில், கமாலுத்தீனின் அடிவருடிகள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். மார்க்கப் பத்திரிகையில் இது போன்ற மஞ்சள் பத்திரிகை வார்த்தைகள் இடம் பெறுவது ஏன்?

பி. ஹபீப் முஹம்மது, மேற்கு மாம்பலம், சென்னை

ஜாக் இயக்கத்தினர் 12.09.07 அன்று முதல் பிறை என்று அறிவித்தனர். 11.09.07 அன்று பிறை பார்த்தால் தான் 12ஆம் தேதி முதல் பிறையாக இருக்க முடியும். ஆனால் 11ஆம் தேதி உலகத்தில் எங்குமே பிறை பார்க்க முடியாது என்று நாம் மட்டும் கூறவில்லை. ஒட்டு மொத்த அறிவியல் உலகமும் கூறுகின்றது. மேலும் அன்றைய தினம் பிறை பார்த்ததாக உலகத்தில் யாருமே கூறவில்லை. முதல் பிறை என்று கூறியவர்கள் கூட பிறை பார்த்ததன் அடிப்படையில் முதல் பிறை என்று சொல்லவில்லை. கணிப்பின் அடிப்படையில் தான் கூறினார்கள்.

சவூதியிலும், மலேசியாவிலும் அன்றைய தினம் (12.09.07) நோன்பைத் துவக்கியதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இது பச்சைப் பொய். இந்த இரண்டு நாடுகளிலும் 13.09.07 அன்று தான் நோன்பைத் துவக்கினார்கள். மார்க்க விஷயத்தில் தெளிவடைய வேண்டும் என்ற எண்ணம் தங்களுக்கு இருந்திருந்தால் இது போன்ற பொய்யான தகவலைக் கூறியிருக்க மாட்டீர்கள்.

ஒரு வேளை அன்றைய தினம் வேறு எங்காவது நோன்பைத் துவக்கியிருந்தாலும் அதற்காக அன்று பிறை தென்பட்டது என்று கூற முடியாது. கணிப்பின் அடிப்படையில் தான் நோன்பைத் துவக்கியிருப்பார்கள். பிறை பார்த்து நோன்பைத் துவக்க வேண்டும் என்றால் 13 அல்லது 14ஆம் தேதி தான் முதல் நோன்பாகும்.

அடிவருடிகள் என்ற வார்த்தையையும் விமர்சித்துள்ளீர்கள். இது ஒன்றும் கெட்ட வார்த்தை கிடையாது. தமிழில் வழக்கத்தில் உள்ள வார்த்தை தான். தமிழ் அகராதிகளில் எதில் வேண்டுமானாலும் இதற்கான பொருளைப் பார்த்துக் கொள்ளலாம். அடிவருடிகள் என்றால் சுய மரியாதையை இழந்து பிழைப்பவர்கள் என்று பொருள். இதில் என்ன தவறு இருக்கின்றது? ஜாக் தலைமையிலிருந்து கிடைக்கும் பணத்திற்காகக் கொள்கையை அடகு வைப்பவர்களை வேறு எந்த வார்த்தையில் அழைப்பது?

சவூதி உட்பட அனைத்து அரபு நாடுகளிலும் 13.09.07 அன்று தான் நோன்பைத் துவக்கினார்கள். ஆனால் இவர்கள் 12.09.07 அன்றே, அதாவது சவூதிக்கு ஒரு நாள் முன்னதாகவே நோன்பைத் துவக்கினார்கள். இதன் மூலம் சவூதியே பிறை விஷயத்தில் தவறில் இருக்கிறது, நாங்கள் தான் சரியான கருத்தில் இருக்கிறோம் என்று வாதிட்டார்கள். இவர்கள் இதில் உறுதியாக இருந்தால் ஹஜ் பெருநாளிலும் அதே நிலையை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் கடந்த 18.12.07 அன்று கமாலுத்தீன் மதனி பத்திரிகையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று அரபாவில் மக்கள் கூடுவதால் இன்று தான் அரபா நாள்; அதற்கு அடுத்த நாள் பெருநாள் என்று கூறியுள்ளார். அதைப் பின்பற்றி அவருடைய அடிவருடிகளும் இதே கருத்தை மறு நாள் பத்திரிகையில் அறிக்கையாக வெளியிட்டதுடன் 19.12.07 அன்று பெருநாளும் கொண்டாடினார்கள்.

பிறையின் அடிப்படையில் இன்று பெருநாள் என்று கூறாமல் சவூதியில் அரபாவில் மக்கள் கூடுகிறார்கள் என்பதால் அதற்கு அடுத்த நாள் தான் பெருநாள் என்று கூறுகிறார்கள்.

 “பிறை பார்த்த அடிப்படையில் 12.09.07 அன்று நோன்பு துவக்கம்” என்று சுவரொட்டி ஒட்டினார்கள். “பிறையைக் கணிப்பது குர்ஆன், ஹதீசுக்கு எதிரானதா?” என்று பிரசுரம் வெளியிட்டார்கள். “சவூதியில் பெருநாள் என்பதால் நமக்கும் பெருநாள்” என்று பத்திரிகையில் அறிக்கை வெளியிடுகிறார்கள்.

இவர்கள் பிறையைப் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்களா? கணிக்க வேண்டும் என்று கூறுகிறார்களா? அல்லது சவூதியைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்களா?

மார்க்க விஷயத்தில் இவர்கள் செய்து வரும் இந்தக் குழப்பத்தை நாம் பலமுறை சுட்டிக் காட்டிய பின்னரும் அதைக் கண்டு கொள்ளாமல் ஜாக்கின் தலைமையிலிருந்து தங்களுக்கு வரும் உதவிகளுக்காக மார்க்கத்தில் விளையாடுகிறார்கள் என்றால் இவர்களை அடிவருடிகள் – சுய மரியாதையை இழந்து பிழைப்பவர்கள் என்று கூறுவதில் எந்தத் தவறும் இல்லை.