வீட்டில் தொட்டில் போட்டு ஆடுகிறார்கள். இப்படி ஆடுவது கூடுமா?

வீட்டில் தொட்டில் போட்டு ஆடுகிறார்கள். இப்படி ஆடுவது கூடுமா? ஆட்டம் என்பது ஷைத்தானின் செயல் இல்லையா?
ஸஜா, முதலாம் ஆண்டு மாணவி, அஸ்ஸுன்னா அகாடமி, அடியக்கமங்கலம்

தொட்டில் அமைத்து அதில் குழந்தையைப் போட்டு ஆட்டுவது, அல்லது ஊஞ்சல் போன்று ஏற்படுத்தி அதில் பெரியவர்கள் உட்கார்ந்து கொள்வது போன்றவை மார்க்கத்தில் தடுக்கப்பட்ட செயல்கள் அல்ல! ஈஸா (அலை) அவர்கள் குழந்தைப் பருவத்தில் தொட்டிலில் இருந்த போது பேசியதாக அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

மர்யமின் மகன் ஈஸாவே! உமக்கும், உமது தாயாருக்கும் நான் வழங்கிய அருட் கொடையையும், ரூஹுல் குதுஸ் மூலம் உம்மை வலுப்படுத்தியதையும் எண்ணிப் பார்ப்பீராக! தொட்டிலிலும், இளமைப் பருவத்திலும் மக்களிடம் நீர் பேசினீர்!

அல்குர்ஆன் 5:110

“ஹாரூனின் சகோதரியே! உனது தந்தை கெட்டவராக இருந்ததில்லை. உனது தாயும் நடத்தை கெட்டவராக இருக்கவில்லை” (என்றனர்)

அவர் குழந்தையைச் சுட்டிக் காட்டினார்! “தொட்டிலில் உள்ள குழந்தையிடம் எவ்வாறு பேசுவோம்?” என்று அவர்கள் கேட்டார்கள்.

அல்குர்ஆன் 19:28, 29

இதிலிருந்து தொட்டில் என்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட ஒன்றல்ல என்பதை விளங்கிக் கொள்ளலாம். ஆட்டம் என்பது ஷைத்தானின் செயல் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.