தாயின் சகோதரி மகளைத் திருமணம் செய்யலாமா?

? தாயின் சகோதரி மகளைத் திருமணம் செய்யலாமா?

தாயின் சகோதரியுடைய மகளைத் திருமணம் செய்து கொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

திருமணம் செய்து கொள்ளத் தடை செய்யப்பட்டவர்களை திருக்குர்ஆனில் இறைவன் பட்டியலிடுகின்றான். இறைவன் குறிப்பிட்டுக் காட்டிய நபர்களைத் தவிர மற்றவர்கள் அனுமதிக்கப்பட்டவர்கள் என்று இறைவன் தெளிவுபடுத்துகிறான்.

உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்கு (வேறு கணவர் மூலம்) பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாக ரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (தடுக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர். இது) அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்(து மணக்கொடையில் மாற்றம் செய்)தால் உங்கள் மீது குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:23, 24

திருமணம் செய்யத் தடை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் தாயின் சகோதரியுடைய மகளை இறைவன் குறிப்பிடவில்லை. நபி (ஸல்) அவர்களும் இதைத் தடை செய்யவில்லை. எனவே தாயின் சகோதரியுடைய மகளை மணந்து கொள்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்கிறோம்.

மேலும் நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களுடைய தாயின் சகோதரியின் மகள் ஆகுமானவர் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியரில் யாருக்கு அவர்களின் மணக்கொடையைக் கொடுத்து விட்டீரோ அவர்களையும், அல்லாஹ் உமக்கு போர்க் கைதிகளாகக் கொடுத்த அடிமைப் பெண்களையும், உமது தந்தையின் சகோதரரின் புதல்விகள், உமது தந்தையின் சகோதரிகளுடைய புதல்விகள், உமது தாயின் சகோதரருடைய புதல்விகள், உமது தாயின் சகோதரிகளுடைய புதல்விகள் ஆகியோரில் உம்முடன் ஹிஜ்ரத் செய்தோரையும் உமக்கு (மணமுடிக்க) நாம் அனுமதித்துள்ளோம்.

அல்குர்ஆன் 33:50