? மக்களிடம் நிதி திரட்டாமல் பணிசெய்ய முடியாதா?

? மக்களிடம் நிதி திரட்டாமல் பணிசெய்ய முடியாதா? நாம் நடத்தும் அனைத்து மார்க்கப் பணிகளுக்கும் மக்களிடம் பணம் பெறப்படுகிறது. இதுதான் நிலையா? இது எல்லாம் இல்லாமல் தப்லீக் என்ற இயக்கம் மக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்து உலகம் முழுவதும் பரவி விட்டனர். நம் ஏன் மக்களை நேரடியாகச் சென்று சந்திப்பது இல்லை? பெரும்பாலும் மறைமுகமாகவே அவர்களை தவ்ஹீத் பக்கம் அழைக்கிறோம்? இவர்களைப் போன்று பொருட்செலவில்லாமல் யாரிடமும் கேட்காமல் அவரே மனமுவந்து அளித்தாலே தவிர பெறாமல் தவ்ஹீத் பணி செய்யக்கூடாதா? செல்வத்தை சோதனை என்று இஸ்லாம் கூறுகின்றது. மார்க்கப் பணிக்கு இந்தச் செல்வம் தேவை தானா?

தமீம் அன்சாரி

தப்லீக் ஜமாஅத்தினர் மார்க்கப் பணிக்காகப் பிறரிடம் உதவிகளைக் கேட்பதில்லை என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். இது தவறான கருத்தாகும்.

அவர்கள் நம்மைப் போன்று பொதுமக்களிடம் வெளிப்படையாகக் கேட்க மாட்டார்கள். ஆனால் சமுதாயத்தில் பெரும் பெரும் பணக்காரர்களைத் தேடிச் சென்று உதவிகளைக் கேட்டுப் பெற்றுக் கொள்கின்றனர். இவர்கள் கேட்டால் கொடுப்பதற்கு ஏராளமான செல்வந்தர்கள் இருக்கின்றார்கள்.

எத்தனையோ தப்லீக் மத்ரஸாக்கள் பலருக்குச் சம்பளம் கொடுத்து மத்ரஸாவிற்காக நிதிதிரட்டி வருமாறு ஊரெல்லாம் அனுப்பி வைக்கின்றார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் வந்துவிட்டால் ஒரு வீடு விடாமல் ஏறிச் சென்று ஏழைகளுக்குச் சேர வேண்டிய தோலை மத்ரஸா பணிக்காக இவர்கள் வாங்கிச் சென்று விடுகிறார்கள்.

எனவே தப்லீக் ஜமாஅத்தினர் மார்க்கப் பணிக்காகப் பிறரிடம் உதவி கேட்டுச் செல்வதில்லை என்பது தவறான கருத்தாகும். இவர்கள் பொதுமக்களிடம் வெளிப்படையாக உதவி கேட்காமல் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.

முதலில் இவர்களின் வட்டம் மிகச் சிறியது. ஆறு விஷயங்களை மட்டும் பள்ளிவாசலுக்குச் சென்று சொல்வதும் தனி நபர்களைச் சந்தித்து சொல்வதுமாகும். இதற்குப் பொருளாதாரம் தேவை இல்லை.

சமுதாயப் பணிகளைப் பற்றியோ, தீமைகளைக் கண்டித்துக் களமிறங்குவது பற்றியோ இவர்கள் கவலைப்படுவதில்லை.

அதே நேரத்தில் இஜ்திமா என்ற பெயரில் இவர்கள் நடத்தும் மாநாடுகளுக்கு பெருமளவு பொருட் செலவு செய்கிறார்கள். தனவந்தர்களிடம் வாங்கித் தான் இப்பணியைச் செய்கிறார்கள்.

இவர்கள் மார்க்கப் பணியை வீரியமாகவும் விவேகமாகவும் செய்ய மாட்டார்கள். எந்த வழியில் சென்றால் பிரச்சனையும் சிரமமும் இருக்காதோ அந்த வழியில் மட்டுமே மார்க்கத்தைப் போதிப்பார்கள்.

பொருளாதாரத்தைச் செலவு செய்து மார்க்கத்தைப் பலருக்கு எத்தி வைக்கப் பல வழிகள் உள்ளன. ஆனால் இவர்கள் மார்க்கத்தைப் பரப்ப இப்படிப்பட்ட சுமைகளைச் சுமக்க மாட்டார்கள். கஷ்டப்படாமல் மார்க்கத்தைச் சொல்ல வேண்டும் என்று நினைப்பார்கள்.

பொதுவாக சத்தியக் கொள்கையைப் பின்பற்றுபவர்கள் பெரும்பாலும் சமானியர்களாகவே இருப்பார்கள். ஓரிரு செல்வந்தர்களும் இவர்களுடன் இருக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலை இது போன்றதாகும்.

இந்த ஜமாஅத்துக்குச் சில செல்வந்தர்கள் உதவி செய்தாலும் அவர்களின் உதவி மட்டும் ஜமாஅத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை. நடுத்தரமான அல்லது ஏழை மக்கள் ஒவ்வொருவரும் இந்த ஜமாஅத்தை நம்பி, தம்மால் இயன்ற உதவியை அளிக்கின்றார்கள். இவர்களின் உதவியும் ஜமாஅத்திற்குத் தேவைப்படுகின்றது.

இந்த மார்க்கத்தை உலகெங்கும் பரப்புவதற்கு இலகுவான வழி ஏதாவது இருந்தால் அதற்காகப் பணம் செலவழித்தாலும் பரவாயில்லை. அநேக மக்களுக்கு சத்தியம் சென்றடைய வேண்டும் என்று மட்டுமே ஜமாஅத் நினைக்கின்றது. இதற்காகப் பொதுமக்களிடம் சிறு சிறு தொகையாக பணம் திரட்டும் கடினமான முயற்சியில் ஜமாஅத் இறங்குகின்றது.

ஒருவர் தவ்ஹீது ஜமாஅத் செய்யும் பணிகளையும் தப்லீக் ஜமாஅத் செய்யும் பணிகளையும் எடைபோட்டுப் பார்த்தால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்வார்.

செல்வம் சோதனை என்று மார்க்கம் கூறுவதை நீங்கள் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். செல்வம் சோதனை என்பதால் பிறரிடம் உதவிகளைக் கேட்கக் கூடாது என்பது உங்கள் வாதம்.

இது தவறான வாதமாகும். செல்வம் சோதனை என்பதால் நீங்கள் சம்பாதிக்காமல் இருப்பீர்களா? உங்களுக்குச் செல்வம் தேவைப்படும் போது அடுத்தவரிடம் உதவி கேட்காமல் இருப்பீர்களா?

மனிதன் செல்வத்தின் மீது அதிக ஆசை வைத்துள்ளான். செல்வத்தின் மீதுள்ள ஆசையால் அல்லாஹ்வின் வரம்புகளை மீறி ஹராமான வழியில் செல்வத்தைத் தேடி விடக்கூடாது. காசு பணத்துக்காக மார்க்கத்தை புறந்தள்ளிவிடக் கூடாது என்பதற்காகவே செல்வம் சோதனை என்று கூறப்பட்டுள்ளது.

இந்தச் செல்வம் பலரைத் தவறான பாதையில் அழைத்துச் செல்வதைப் பார்க்கின்றோம். அது போன்று நாமும் தவறான பாதையில் சென்று விடக்கூடாது என்பதே இதன் கருத்து.

ஆனால் ஆகுமான வழியில் செல்வத்தைத் தேட மார்க்கத்தில் எந்தத் தடையுமில்லை. நல்ல காரியங்களுக்கு உதவி செய்யுமாறு பிறரிடம் வெளிப்படையாகக் கேட்பது தவறல்ல.

நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒரு வருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

அல்குர்ஆன் 5:2

மக்களிடம் மார்க்கப் பணிக்காக தாருங்கள் என்று கூறி பணம் வசூலித்து அந்த வகைக்காகச் செலவழிக்காமல் சுருட்டிக்கொள்வது தான் பாவம். மக்களிடம் உதவி பெற்று மக்கள் அனைவரும் பயன் பெரும் வகையில் செலவிடுவது நன்மையான செயலாகும்.

நபி (ஸல்) அவர்கள் நன்மையான பணிக்காக மக்களிடம் வெளிப்படையாக உதவி கேட்ட சம்பவங்கள் நிறைய இருக்கின்றன. பின்வரும் சம்பவம் இதற்குச் சிறந்த ஆதாரமாக உள்ளது.

ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(ஒரு நாள்) நாங்கள் முற்பகல் நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தோம். அப்போது செருப்பணியாத, (அரை) நிர்வாணிகளான, வட்டமாய் கிழிந்த “கம்பளி ஆடைஅல்லது “நீளங்கிஅணிந்த ஒரு கூட்டத்தார் தம் (கழுத்துகளில்) வாட்களைத் தொங்க விட்டவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் “முளர்குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இல்லை; அவர்களில் அனைவருமே “முளர்குலத்தைச் சேர்ந்தவர்கள்தாம்.

அவர்களது ஏழ்மை நிலையைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறமாறிவிட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருவிதத் தவிப்பு நிலையுடன்) வீட்டுக்குள் சென்றுவிட்டு வெளியே வந்து, பிலால் (ரலி) அவர்களிடம் உத்தரவிட, பிலால் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்புச் செய்து இகாமத்தும் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு, மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.

அப்போது “மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்!எனும் (4:1ஆவது) இறைவசனத்தை முழுமையாக ஓதிக்காட்டினார்கள். மேலும், “அல்ஹஷ்ர்அத்தியாயத்திலுள்ள “நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நாளைக்கு என தாம் செய்த வினையை ஒவ்வொருவரும் கவனிக்கட்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்எனும் (59:18ஆவது) வசனத்தையும் ஓதிக் காட்டி(முளர் கூட்டத்தாருக்கு தர்மம் செய்யுமாறு கூறி)னார்கள். அப்போது “(உங்களில்) ஒருவர் தமது பொற்காசு, வெள்ளிக்காசு, துணி, ஒரு “ஸாஉகோதுமை, ஒரு “ஸாஉபேரீச்சம் பழம் ஆகியவற்றைத் தர்மம் செய்யட்டும்என்று கூறி, “பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டையேனும் தர்மம் செய்யட்டும்என்று வலியுறுத்தினார்கள்.

உடனே (நபித்தோழர்களில்) ஒவ்வொருவரும் தம்மிடமிருந்த பொற்காசுகளிலிருந்தும் வெள்ளிக்காசுகளிலிருந்தும்  ஆடைகளிலிருந்தும் ஒரு “ஸாஉகோதுமையிலிருந்தும் ஒரு “ஸாஉபேரீச்சம் பழத்திலிருந்தும் தர்மம் செய்தார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர் ஒரு பை (நிறைய பொருட்களைக்) கொண்டு வந்தார். அதைத் தூக்க முடியாமல் அவரது கை திணறியது; தூக்கவே முடியவில்லை எனலாம். பின்னர் தொடர்ந்து மக்கள் (தங்களின் தர்மப் பொருட்களுடன்) வந்து கொண்டிருந்தனர்.

இறுதியில் உணவுப் பொருட்களாலும் ஆடைகளாலும் இரு குவியல்கள் சேர்ந்துவிட்டதை நான் கண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் பொன்னைப் போன்று மின்னிக்கொண்டிருப்பதையும் நான் கண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் இஸ்லாத்தில் ஓர் அழகிய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் நன்மையும் உண்டு; அதற்காக அவர்களது நன்மையில் எதுவும் குறைந்துவிடாது. அவ்வாறே, யார் இஸ்லாத்தில் ஒரு தீய நடைமுறையை உருவாக்குகிறாரோ அவருக்கு அதன் பாவமும் அவருக்குப் பின் அதன்படி செயல்படுபவர்களின் பாவமும் -அ(தன்படி செயல்பட்ட)வர்களின் பாவத்திலிருந்து எதுவும் குறையாமல்- உண்டுஎன்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1848

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணியையும் செய்தார்கள். மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்க மக்களிடம் தான் கேட்டு வாங்க முடியும். மருத்துவ உதவி, ஜகாத் உதவி, புயல் நிவாரண உதவி என்று கூறிக் கொண்டு தப்லீக் ஜமாஅத்தை யாரும் அணுக முடியுமா? அணுகினால் அல்லாஹ் பார்த்துக் கொள்வான் எனப் பொருத்தமற்ற இடத்தில் அல்லாஹ்வின் பெயரை துஷ்பிரயோகம் செய்து விடுவார்கள்.

இதைப் புரிந்து கொண்டால் உங்கள் கேள்வி தவறானது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.