தினமும் வாகிஆ சூராவை இரவில் ஓதினால் ஆரோக்கியம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். இது சரியா?

தினமும் வாகிஆ சூராவை இரவில் ஓதினால் ஆரோக்கியம் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். இது சரியா?

காஜா முஹைதீன்

நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்தி பைஹகியில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு இரவும் அல்வாகிஆ அத்தியாயத்தை யார் ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு போதும் வறுமை ஏற்படாது.

அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல் : பைஹகீ (2392)

மேற்கண்ட செய்தியில் இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெறுவதால் இது பலவீனமான செய்தியாகும். இந்தச் செய்தியை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து அபூ ளப்யா என்பவரும் அபூ ளப்யாவிடமிருந்து அபூ ஷுஜாஉ என்பவரும் அறிவிக்கின்றனர். இவ்விரு அறிவிப்பாளர்களும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்கள் என்று அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.

அபூ ளப்யா நம்பகத்தன்மை உறுதிசெய்யப்படாதவர் என்று இமாம் இப்னு ஹஜர் அவர்களும் இமாம் தஹபீ அவர்களும் கூறியுள்ளனர்.

நூல் : லிசானுல் மீஸான், பாகம் : 9, பக்கம் : 103

நூல் : மீஸானுல் இஃதிதால், பாகம் : 4, பக்கம் : 542

அபூ ளப்யாவிடமிருந்து அறிவிக்கும் அபூ ஷுஜாஉ என்பவரின் நம்பகத்தன்மையும் உறுதிசெய்யப்படவில்லை என்று மேற்கண்ட இரு அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

நூல் : மீஸானுல் இஃதிதால், பாகம் : 7, பக்கம் : 380

நூல் : லிசானுல் மீஸான், பாகம் : 7, பக்கம் : 60

இமாம் அஹ்மது அவர்கள், இந்த ஹதீஸ் மறுக்கப்படவேண்டியது. ஏனென்றால் இதில் இடம்பெறும் அறிவிப்பாளர் அபூ ஷுஜாஉ என்பவரின் நம்கத்தன்மை தெரியவில்லை எனக் கூறியுள்ளார்கள். இதை இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தனது நூலில் எடுத்தெழுதியுள்ளார்கள்.

நூல் : அல்இலலுல் முதனாஹியா, பாகம் : 1, பக்கம் : 112

எனவே ஒவ்வொரு இரவிலும் அல்வாகிஆ அத்தியாயத்தை ஓதினால் வறுமை நீங்கும் என்று நம்புவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.