ஆக்கம் – உம்மு சுஹைப்
எது என் இறைவன் ?
வீட்டை விட்டு வெளியேறினாலும் அவர் ஊரை விட்டெல்லாம் வெளியேறவில்லை .
ஊருக்குள் தான் நடமாடிக்கொண்டு இருந்தார் .
அவர் மனம் நன்றியால் நிரம்பி இருந்தது . அதனால் தான் இறைவனை வைக்கும் இடத்தில் படைப்பினங்களை வைப்பதைப் பார்த்துக்கொண்டு அவரால் சும்மா இருக்க இயலவில்லை .
தந்தை துரத்தி விடும் முன்னரும் கூட, அவர் அப்படித் தான் .
ஊர்மக்களிடமும் தந்தையிடமும் , “எதை வணங்குகிறீர்கள் ?” என்று கேட்பார்;
“இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவனைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள ?; படைத்தவனை விட்டு விட்டு பொய்யை வணங்குகிறீர்களா ?” என்பார் ;
ஊர் மக்கள் கண்டதையும் கடவுள் என்று கொண்டாடுவதைப் பார்த்து துடித்துக் கொண்டிருப்பார்..
இது எப்படிக் கடவுள் ஆகும் ?? என்ற சிந்தனை அவருக்குள் எப்போதும் இருந்து கொண்டு இருந்தது.
கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அவர் தவறவிடுவதில்லை…
அப்படிதான் ஒரு முறை ,.
இரவு நேரம்..
அப்படியே வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஒரு நட்சத்திரம் பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டிருந்தது .
மக்களுக்கு இணைவைப்பை உணர்த்திக்காட்டுவதற்காக இது தான் இறைவனாக இருக்குமோ? என்ற எண்ணம் தன் மனதில் தோன்றியதாக கூறினார்.
அனைவரிடமும் சொன்னார் , “அதோ ! அது தான் என் இறைவன்”
சொல்லிவிட்டு தூங்கி விட்டார் .
விடிந்ததும் நட்சத்திரம் காணாமல் போயிருந்தது.
“ இல்லை… மறைந்து போகக்கூடியவை எனக்கு பிடிக்காது “ என்றார்.
அன்றிரவும் அது போல ஒரு சிந்தனையில் இருந்தார் இப்ராஹீம்.
சந்திரனைக் கண்டார் .
அழகான பிரகாசமான பௌர்ணமி நிலவு அவரது உள்ளத்தை வசீகரித்தது.
இது தான் இறைவனோ ? ஒரு சிந்தனை உதித்தது அவர் மனதில் .
“இது தான் என் இறைவன் “ என்றார் .
அடுத்த காலை அதுவும் மறைந்து போய் விட்டது.
“ என்னைப் படைத்த இறைவன் மட்டும் எனக்கு வழிகாட்டவில்லை என்றால் நானும் இந்த வழிகெட்ட கூட்டத்தில் ஒருவனாக ஆகி விடுவேன் “ என்று தான் அறியாத இறைவனை மனதால் தேடத் தொடங்கினார் .
காலை பிரகாசமான சூரியனைக் கண்டதும் , “ஆஹா ! இது தான் மிகப் பெரியது !! இது தான் இறைவன் !!” என்றார் .
மாலை, சூரியன் மறைந்து வானம் இருட்டியது .
மறையக்கூடிய இவைகள் அனைத்தும் கடவுளாக இருக்க முடியாது. இவை அனைத்தையும் படைத்த ஒருவன் தான் இறைவன் என்பதை தெளிவுபடுத்த விரும்பினார்.
அவரது சமூகத்திடம் போய் சொன்னார்,
“மக்களே !”
“நீங்கள் இறைவனுக்கு இணையாக வணங்கும் அனைத்தையும் விட்டு நான் விலகி விட்டேன்…
வானங்களையும் பூமியையும் படைத்தவனை நோக்கி செல்கிறேன்…
நேரான வழியில் நின்றவனாக ,
அவன் பக்கம் என் முகத்தை திருப்பி விட்டேன்..
நான் இணை வைப்பவன் அல்ல “என்றார்.
அவர்கள் வாதம் செய்தார்கள் .
சூரியைனை இறைவன் என்று சொன்ன போது வராத கோபம் , சந்திரனையும் நட்சத்திரங்களையும் இறைவன் என்று சொன்ன போது வராத கோபம் , அவற்றை படைத்தவனைப் பற்றி சொல்லும் போது அவர்களுக்கு வந்தது.
கடுமையாக வாதம் செய்தனர் .
வழி வழியாக இதைத் தானே வணங்கி வருகிறோம்??
இவருக்கு என்ன ஆயிற்று? நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா? அவர்கள் சொன்னால் சரியாக தானே இருந்திருக்கும் ? இத்தனை காலமாக இந்த கடவுள்களுக்கு தானே வழிபாடு செய்து வந்தோம் ?
புதிதாக யார் அந்த அல்லாஹ்? முன்னோர்களுக்கு தெரியாதது இவருக்கு தெரிந்து விட்டதா?
பலவாறாக வாக்கு வாதம் செய்தனர் .
நம் தெய்வங்களைப் பற்றி குறை சொன்னால் கடும் விளைவுகள் ஏற்படும்..
என்ன நடக்கும் என்றே தெரியாது.. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வங்கள்… ஆபத்து வரப் போகிறது…
பயமுறுத்தினர் ..
இப்ராஹீம் சொன்னார்,
“ அல்லாஹ்வைப் பற்றியா வாதம் செய்கிறீர்கள் ??
அவன் தான் எனக்கு நேர்வழி காட்டினான் . நீங்கள் அவனுக்கு இணையாக செய்து வைத்திருக்கிற சிலைகளைப் பார்த்தெல்லாம் நான் பயப்பட மாட்டேன்..
அவன் நாடினால் தவிர எனக்கு எதுவும் ஏற்படாது..
அவன் ஒவ்வொன்றையும் சூழ்ந்து இருக்கிறான் ; அனைத்தையும் அறிகிறான்..
நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா??? “ என்றார் .
அவர்கள் தங்கள் பயமுறுத்தும் பேச்சுக்களை தொடர்ந்தனர்.
அதற்கு இப்ராஹிம் ,
“எந்த ஆதாரமும் இல்லாத சிலைகளை, உண்மையான இறைவனுக்கு சமமாக ஆக்குவதற்கு உங்களுக்கு பயம் இல்லை …..;
உங்கள் ஒன்றுமில்லாத தெய்வங்களைப் பார்த்து நான் பயப்படுவேனா ???
நம் இருவரில் பயமின்றி யார் இருக்க வேண்டும் ? நீங்கள் சிந்திப்போராக இருந்தால் சொல்லுங்கள்..!” என்றார் .
அவர்களிடம் பதிலில்லை..
இப்படிதான் அடிக்கடி அவர்களுக்குள் பேச்சு வார்த்தைகள் நடக்கும்.
இப்படி அவர் பேசுவது அவரது தந்தைக்கு பிடிக்காது .
அவரது தந்தையிடமும் பல முறை சொல்லியிருக்கிறார்;.
என்றாலும் இந்த முறை அவரின் கோபம் எல்லை மீறி விட்டது .
மூட நம்பிக்கையில் மூழ்கி இருப்பவர்களின் சிந்தனை விரிவது இல்லை .
அவர்களது உள்ளங்களில் ஈரம் சுரப்பது இல்லை . தம் வறட்டு வாதங்களை நிலைநாட்ட என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் .
அதிர்ந்தார் அரசர்
இறைவனை வணங்குவதும் , தொழுவதும் , சிந்திப்பதுமாய் அவரது வாழ்க்கை கழிந்து கொண்டிருந்தது.
அவருக்கு இறைவனுடனான தொடர்பு கிட்டியது .
இறைவனிடம் இருந்து அவருக்கு செய்திகள் வந்துகொண்டிருந்தன .
இப்ராஹீம்(அலை) அவரது ஊருக்குள் மக்களிடம் தொடர்ந்து விவாதித்து கொண்டே இருப்பார் . இறைவனைப் பற்றி, அவன் ஆற்றல்கள் பற்றி , மக்களின் மூட நம்பிக்கை பற்றி , பலவாறாக மக்களிடம் உரையாடுவார்.
ஒரு நாள் அந்த நாட்டு அரசரிடம் சென்றார் . அங்கும் இவரது பிரச்சாரம் தொடர்ந்தது . அப்போதெல்லாம் மக்கள் அரசர்களை தெய்வங்களாக வணங்குவார்கள் , இங்கும் நமது நாட்டில் கூட ஆட்சியாளர்கள் தெய்வங்கள் போல் வணங்கும் பழக்கம் இருந்தது .
அரசர் இப்ராஹிமிடம் இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தார் .
“என் இறைவன் உயிர் தருபவன்; மரணிக்க செய்பவன்.. “ என்றார் இப்ராஹிம் .
“நானும் தான் உயிர் கொடுப்பேன் ; மரணிக்க செய்வேன்.. “ என்றார் அரசர் .
“ ஓ ! அப்படியா ? சரி , என் இறைவன் கிழக்கில் சூரியனை உதிக்க வைக்கிறான் ; நீங்கள் கடவுள் தானே ? அதை மேற்கில் உதிக்க வையுங்கள் பார்ப்போம் ….” என்றார் .
மன்னர் வாயடைந்து போனார் .
……
ஒரு நாள் அவருக்கு ஒரு சந்தேகம் .
மரணித்த ஒருவர் எப்படி உயிர் பெற்று எழுவார் ??
இந்த சிந்தனை அவரை விடாமல் குடைந்து கொண்டு இருந்தது .
ஒரு நாள் இறைவனிடம் கேட்டார் ,” அல்லாஹ்வே ! நீ எப்படி மரணித்தவர்களை உயிர்ப்பிக்கிறாய் ?”
இறைவன் கேட்டான் , “ நீ நம்பவில்லையா ???”
“ நம்புகிறேன் அல்லாஹ்வே ! ஆனாலும் என் மனம் அமைதியாய் இருக்க , நீ எப்படி உயிர்ப்பிக்கிறாய் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் ..”
என்று பிரார்த்தனை செய்தார் .
நான்கு பறவைகளைப் பிடிக்குமாறு இறைவன் சொன்னான்; பிடித்தார் .
அவற்றை அழைத்தால் அவை வருவதற்கு பழக்கப் படுத்துமாறு சொன்னான் ; பழக்கப் படுத்தினார்.
அந்த பறவைகளை பல துண்டுகளாக வெட்டுமாறு சொன்னான் ; வெட்டினார் .
ஒவ்வொரு துண்டையும் ஒவ்வொரு மலை மீது வைக்குமாறு சொன்னான் ; வைத்தார் .
பறவைகளை அழைக்கச் சொன்னான் ; அழைத்தார் .
என்ன ஒரு ஆச்சரியம் ????!!!
பறவைகள் பறந்தோடி வந்தன அவரிடம்..!!!!!!!!!
அல்லாஹ்வுக்கு ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றல் உள்ளது என்பதை நேரடியாக அறிந்து கொண்டார் .
ஒருமுறை தன் தந்தையிடமும் ஊர் மக்களிடமும் அவர் கேட்டார் , “ எதை வணங்குகிறீர்கள் ??”
பல முறை அவர் அவர்களுக்கு படைப்பினங்களை வணங்குவது மூடத்தனம் என்பதை எடுத்துச் சொல்லி இருந்தார் .
எப்போதும் தெய்வங்கள் என்றே தாங்கள் வணங்குபவைகளைப் பற்றிக் குறிப்பிடும் அந்த மக்கள் இந்த முறை அழுத்தமாக சொன்னார்கள் ,
“ நாங்கள் கற்பனை தெய்வங்களை வணங்கிக் கொண்டே தான் இருப்போம் “ என்றார்கள் .
அதற்கு இப்ராஹீம் (அலை) கேட்டார் , “ நீங்கள் அழைத்தால் அவை கேட்கின்றனவா ??
உங்களுக்கு நன்மை ஏதேனும் செய்கின்றனவா ? அல்லது தீமை செய்கின்றனவா ??””
அவர்களிடம் பதில் இல்லை .
“எங்கள் முன்னோர்கள் இவ்வாறு தான் செய்தார்கள் “ என்று கூறி சமாளித்தார்கள் .
“அகிலத்தைப் படைத்த ஒரு இறைவனைத் தவிர வணங்கப்படும் போலி தெய்வங்கள் எல்லாம் என்னுடைய எதிரிகள் தான்;
அந்த இறைவன் தான் என்னைப் படைத்தான் ;
அவன்தான் என்னை நேர்வழியில் செலுத்துகிறான் ;
அவன் தான் எனக்கு உணவும் தருகிறான் தண்ணீரும் தருகிறான்;
நான் நோயுற்றால் அவன் தான் எனக்கு குணமளிக்கிறான்;
அவன் தான் என்னை மரணிக்கச் செய்வான் ;
அவனே மீண்டும் என்னை உயிர் கொடுத்து எழுப்புவான் ;”
இறைவன் என்பவன் யார் என்பதை அந்த மக்களுக்கு விளக்கமாகச் சொன்னார் இப்ராஹீம் (அலை).
மீண்டும் எழுப்பப்படும் நாளைப் பற்றிக் கூறியதும் அவர் உள்ளத்தில் ஒரு அச்சம் தோன்றியது .
“தீர்ப்பு நாளில் என் குற்றங்களை மன்னிக்க வேண்டும் என்று அவனிடம் கோரிக்கை வைக்கிறேன் “ என்றார்.
அந்த மக்களுக்கு இறைவனைப் பற்றிச் சொல்லிவிட்டு, இறைவனிடம் கையேந்தி பிரார்த்தனை செய்தார் , “ இறைவா! எனக்கு ஞானத்தைக் கொடு ! நல்ல மக்களுடன் என்னை சேர்த்து விடு ! எனக்கு பின் வருபவர்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்து ! இன்பம் நிறைந்த சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும் ஆக்கி விடு ! என் தந்தையை மன்னித்து விடு அவர் வழிகேடர்களில் ஒருவராக ஆகி விட்டார் ; மறுமையில் என்னை இழிவு படுத்தி விடாதே !” என்றார் .
அவரது தந்தை மேல் அவருக்கு இரக்கமாக இருந்தது . வேண்டுமென்று இறைவனை அவர் இறைவனை மறுக்கின்றாரே! ஊர் மக்களுடன் சேர்ந்து சத்தியத்தை நிராகரிக்கக் கூடியவராக இருக்கிறாரே ! என்கிற கவலையும் இருந்தது.
ஆகையால் இப்ராஹீம் அலை அவர்கள், தம் தந்தையின் மன்னிப்பிற்காக பிரார்தனை செய்தார் .
ஆனால் அல்லாஹ் மன்னிக்க மறுத்து விட்டான் .
ஏனெனில் , இறைவனுக்கு இணையாக மற்றவர்களை கருதுவது ஷிர்க் எனும் இணைவைப்பு ஆகும் .
அல்லாஹ்வை வைக்கவேண்டிய இடத்தில வேறு யாரையும் வைக்காமல் இருத்தலே ஈமான் ஆகும் .
இனியும் தொடரும்…..