ஹதீஸ் மாநாடு சிறப்பு மலர் – பாகம் 5

முதல்லஸ் (இருட்டடிப்பு செய்யப்பட்டது)

அறிவிப்பாளர் தொடரில் உள்ள குறையை மறைத்து விட்டு, வெளிப்படையில் அழகாகக் காட்டுவதற்கு “தத்லீஸ் (இருட்டடிப்பு செய்தல்)” என்று சொல்லப்படும்.

இவ்வாறு, எந்தச் செய்தியில் செய்யப்பட்டதோ அதற்கு “முதல்லஸ்” என்றும், தத்லீஸ் செய்தவருக்கு “முதல்லிஸ் (இருட்டடிப்பு செய்தவர்)” என்றும் சொல்லப்படும்.

ஒருவர், தனது ஆசிரியரிடம் கேட்காததை அறிவிப்பதும், அறிவிப்பாளர் தொடரில் உள்ள பலவீனமானவரைப் போக்கிவிட்டு ஸஹீஹான அறிவிப்பாளர் தொடரைப் போன்று வெளிப்படையில் காட்டுவதும், தனது ஆசிரியரின் பிரபலமான பெயரை மறைத்துவிட்டு பிரபலமில்லாத பெயரைச் சொல்வதும் தத்லீஸ் (இருட்டடிப்பு) ஆகும்.

ஒரு அறிவிப்பாளர் மீது முதல்லிஸ் (இருட்டடிப்பு) செய்பவர் என்ற குறை கூறப்பட்டிருந்தால் அவர், ஹதீஸ் அறிவிக்கும் போது கூறப்படும் தெளிவான வார்த்தைகளான “ஹத்தஸனா, அன்பஅனா, சமிஃத்து” போன்ற சொற்களைக் கூறினால் அந்தச் செய்தியை ஏற்றுக்கொள்ளலாம்.

அதேசமயம், மூடலான வார்த்தைகளான “அன், கால” போன்ற சொற்களை கூறினால் அந்தச் செய்தியை ஏற்றுக்கொள்ளக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹி என்ற துஆவை ஓதுவார்கள்.    

அறிவிப்பவர்:  அனஸ் (ரலி),

நூல்: அபூதாவூத் 4431

இந்தச் செய்தியின் அறிவிப்பாளரில் ஒருவராக இடம் பெறும் இப்னு ஜுரைஜ் என்பவர் தத்லீஸ் (இருட்டடிப்பு) செய்பவர் என்று விமர்சிக்கப்பட்டவர். இந்த செய்தியில் அவர் “அன்” என்ற மூடலான வார்த்தையைக் கூறியிருப்பதால் இந்தச் செய்தியை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

முஅன்அன்

ஹதீஸை அறிவிக்கும்போது  ”அன்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது “முஅன்அன்” எனப்படும்.

”அன் அபீஹுரைரா” ”அன் ஆயிஷா” (அபூஹுரைரா வழியாக – ஆயிஷா வழியாக) என்பது போல் குறிப்பிடும் ஹதீஸ்கள்  முஅன்அன் எனப்படும்.

”நமக்குச் சொன்னார்” ”நமக்கு அறிவித்தார்” ”நம்மிடம் தெரிவித்தார்” ”நான் காதால் அவரிடம் செவியுற்றேன்” என்பது போல் அறிவிக்கப்படும் ஹதீஸ்களில் அறிவிப்பாளர் நம்பகமானவர்களாக இருந்தால் அப்படியே அதை ஏற்க வேண்டும்.

ஆனால் முஅன்அன் என்ற வகையில் அமைந்த ஹதீஸ்கள் பரிசீலனைக்குப் பிறகே ஏற்கப்படும்.

தக்லீஸ் செய்யும் வழக்கமுடையவராக அவர் இல்லாதிருந்து இவ்வாறு பயன்படுத்தினால் அதனால் ஹதீஸின் தரம் பாதிக்காது.

”அவர் வழியாக” ”அவர் மூலம்” என்றெல்லாம் இவர் பயன்படுத்துவதற்கும், நமக்கு அறிவித்தார் என்பதற்கும் இவரைப் பொறுத்தவரை வித்தியாசம் இல்லை.

அவர் தக்லீஸ் செய்யும் வழக்கமுடையவராக இருந்து இவ்வாறு அவர் அறிவித்தால். இவர் நேரடியாகச் செவியுற்றது வேறு வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளதா? என்று பார்க்க வேண்டும்.

நிரூபிக்கப்பட்டிருந்தால் ஏற்கலாம். அவ்வாறு நிரூபிக்கப்படாவிட்டால் அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

அதாவது, முஅன்அன் என்று கூறப்பட்டவுடன் அதை ஏற்கவோ மறுக்கவோ கூடாது. மாறாக ஆய்வு செய்த பின்னர் தான் அது பற்றி முடிவு செய்ய வேண்டும்.

மேற்கூறப்பட்ட சட்டங்களில் ஏற்றுக் கொள்ளத் தக்கவையும்! ஏற்றுக் கொள்ளத் தகாதவையும்!

  1. கரீப்
  2. அஜீஸ்
  3. மஷ்ஹுர்
  4. குதுஸீ
  5. மர்ஃபூவு – ஆகிய வகைகளில் அமைந்த ஹதீஸ்களை அறிவிப்பாளர் தொடரும், கருத்தும் சரியாக அமைந்து இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  6. முர்ஸல்
  7. முஃளல்
  8. முன்கதிஃ
  9. முஅல்லக் – ஆகிய வகைகளைச் சார்ந்த செய்திகளில் அறிவிப்பாளர்கள் விடுபடுவதாலும், விடுபட்டவர்கள் யாரென்றும் அவர்களின் நம்பகத்தன்மை என்னவென்றும் தெரியாததாலும் இந்த வகைகளைச் சார்ந்த செய்திகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

“முதல்லஸ்’ என்ற வகையில் இருட்டடிப்பு செய்யக்கூடிய அறிவிப்பாளர் தெளிவான வார்த்தைகளை (ஹத்தஸனா, அன்பஅனா, ஸமிஃத்து என்று) கூறினால் ஏற்றுக் கொள்ளலாம். மூடலான வார்த்தைகளை (அன், கால) கூறினால் ஏற்றுக்கொள்ளக்கூடாது.

  1. மவ்கூஃப்,
  2. மக்தூஃ போன்ற வகைகளைப் பொறுத்த வரையில் அவை ஹதீஸ்களே கிடையாது.

ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்ட செய்திகள்தான் ஹதீஸ் என்று சொல்லப்படும்.

ஸஹாபாக்கள், தாபியீன்கள் சம்பந்தப்பட்ட செய்திகள் அஸர் என்றுதான் சொல்லப்படும்.

நபி (ஸல்) அவர்கள் சம்பந்தப்பட்டவைதான் இறைச்செய்தி – வஹியாகும். அதைத்தான் நாம் பின்பற்ற வேண்டும்.

அதைத் தவிர்த்து, ஸஹாபாக்கள், தாபியீன்கள் போன்ற மனிதர்களுடைய கூற்றுகளை நாம் மார்க்கமாகப் பின்பற்றினால் அது வழிகேடாகும்.

எனவே மவ்கூஃப், மக்தூஃ போன்ற செய்திகளை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. ஏனெனில் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்:

“உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கி பின்பற்றராதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்” (அல்குர்ஆன் 7:3)

முஸல்ஸல் (சங்கிலித் தொடர்)

நபி (ஸல்) அவர்கள் சொன்ன ஒரு ஹதீஸை ஓர் அறிவிப்பாளர் அறிவிக்கும் போது நபியவர்களிடம் ஏற்பட்ட செயல்ரீதியிலான வெளிப்பாடுகளையும், அங்க அசைவுகளையும் செய்து காட்டி தனக்கு அடுத்த அறிவிப்பாளருக்கு அறிவிப்பார்.

இந்தச் செயல்முறை கடைசி அறிவிப்பாளர் வரை தொடர்வதற்குப் பெயர்  முஸல்ஸல் என்று சொல்லப்படும்.

உதாரணம்:

நபி (ஸல்) அவர்கள் என்னுடைய கையை பிடித்து, முஆதே! அல்லாஹ்வின் மீதானையாக “உன்னை நான் விரும்புகிறேன், அல்லாஹ்வின் மீதானையாக “உன்னை நான் விரும்புகிறேன்’ என்று கூறினார்கள். பிறகு, முஆதே! “அல்லாஹும்ம அஇன்னி அலா திக்ரிக்க வஷுக்ரிக்க வஹுஸ்னி இபாத்தத்திக்க” (பொருள்: இறைவா! உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக!) என்று ஒவ்வொரு தொழுகைக்கு பின்னாலும் கூறாமல் இருக்காதே என உனக்கு நான் உபதேசிக்கின்றேன் என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)                                                                                             

நூல்: அபூதாவூத் 1524.

இந்த ஹதீஸில் “உன்னை நான் விரும்புகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி)க்கு சொன்னதைப் போன்றே, அறிவிப்பாளர்கள் அனைவரும் தங்களது மாணவர்களுக்கு அறிவிக்கும் போது “உன்னை நான் விரும்புகிறேன்” என்று சொல்லி அறிவித்திருக்கின்றார்கள்.

இது ஹதீஸ்களை அறிவிப்பதில் தனிச் சிறப்புமிக்க ஒரு முறையாகும்.

மகனிடமிருந்து தந்தை அறிவித்த ஹதீஸ்கள்

பொதுவாக, தந்தையிடமிருந்து மகன் அறிவிப்பது தான் வழக்கம். ஆனால் மகனிடமிருந்து தந்தை அறிவிக்கும் நிகழ்வுகளும் அரிதாக நடந்துள்ளன. அவ்வகை ஹதீஸ்களையும் அறிஞர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர். அறிவிப்பாளர் வரிசையில் குளறுபடி உள்ளதோ என்று கருதி இவ்வகை ஹதீஸ்களைப் புறக்கணித்து விடக்கூடாது என்பதே இதற்கு காரணமாகும்.

உதாரணம்:

“நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களை திருமணம் செய்துக் கொண்டதற்காக கோதுமை மாவையும் பேரீச்சம் பழங்களையும் வலிமா விருந்தாக கொடுத்தார்கள்”.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: திர்மிதீ 1015.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் “வாயில் பின் தாவூத்” என்பவர் இடம்பெறுகிறார். இவர் தாபி ஆவார். இவர் தனது மகனான பக்ர் பின் வாயில் என்பவரிடமிருந்து அறிவிக்கின்றார். இவர் தபஉத் தாபி ஆவார்.

நபிகள் நாயகம் அவர்களின் ஹதீஸ்களை காப்பதில் அறிஞர்கள் எடுத்துக் கொண்ட அதிகபட்ச பேணுதலையும், ஆய்வுக் கண்ணோட்டத்தையும் இது வெளிப்படுத்துகிறது.

சிறியவர்களிடமிருந்து பெரியவர்கள் அறிவித்த ஹதீஸ்கள்

ஓர் அறிவிப்பாளர் தன்னை விட வயதில், தரத்தில், கல்வியில் தனக்கு கீழுள்ள அறிவிப்பாளரிமிருந்து அறிவித்த செய்திகளை ஹதீஸ்கலை மேதைகள் அடையாளம் கண்டு வைத்துள்ளனர். இதற்கும் காரணம், அறிவிப்பாளர் வரிசை தவறுதலாக இடம்பெற்றுள்ளதோ என்று கருதி இவ்வகை ஹதீஸ்களைப் புறக்கணித்து விடக்கூடாது என்பதாகும்.

உதாரணம்:

“கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்கள் “முத்அத்துன்னிஸா’ (கால வரம்பிட்டு செய்யப்படும் திருமணம்) செய்ய வேண்டாம் என்று தடைவிதித்தார்கள்.

அறிவிப்பவர்: அலீ பின் அபீதாலிப் (ரலி). நூல்: நஸாயீ 3314

இந்த செய்தியில் யஹ்யா பின் சயீத் எனும் அறிவிப்பாளர் இடம்பெறுகிறார். இவர் தாபி ஆவார். இவர் தபஉத் தாபியும் தனது மாணவருமான மாலிக் பின் அனஸ் என்பவர் வழியாக இந்தச் செய்தியை அறிவிக்கின்றார். இவ்வாறு ஆசிரியர் மாணவரிடமிருந்தும், பெரியவர்கள் சிறியவர்களிடமிருந்தும் அறிவித்துள்ள ஹதீஸ்கள் பல உள்ளன.

நன்கு பிரபலமான நான்கு அப்துல்லாக்கள்

“அப்துல்லாஹ்” என்ற பெயரில் ஹதீஸ்களை அறிவிக்கின்ற நபித்தோழர்கள் அதிகமாக உள்ளனர். அவர்களில் நன்கு பிரபலமானவர் பின்வரும் நான்கு அப்துல்லாக்கள் ஆவர். அவர்களை அரபியில் பன்மையாக “அபாதிலா’ என்று ஹதீஸ் துறையில் குறிப்பிடுவர்.

நாஸிஹ், மன்ஸூஹ் ; புதிய சட்டம் – பழைய சட்டம்

இறைவன் மனிதர்களைப் படைத்து வெறுமனே விட்டுவிடாமல் அவர்கள் இந்த உலகில் எவ்வாறு வாழவேண்டும் என்பதற்குரிய வாழ்வியல் சட்டங்களை அளித்துள்ளான். அவ்வாறு சட்டங்களை அளிக்கும் போது ஆரம்பத்தில் ஒரு சட்டத்தைக் கூறிவிட்டுப் பின்னர் அவன் அதை மாற்றி விடுவான்.  அதற்குரிய காரணத்தை அல்லாஹ்வே பின்வரும் வசனத்தில் தெளிவுபடுத்துகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்:

ஏதேனும் வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதை மறக்கச் செய்தால் அதை விடச் சிறந்ததையோ அதற்குச் சமமானதையோ தருவோம். அனைத்து பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றல் உள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

அல்குர்ஆன்- 2:106.

அனைத்தையும் அறிந்த இறைவன் ஒரு சட்டத்தைக் கூறிவிட்டுப் பிறகு அதை ஏன் மாற்ற வேண்டும்?

பொதுவாக ஒரு மனிதன் 25 வயதை அடைந்த தனது மகனுக்கு அறிவுரை சொல்லும் போது மனைவியுடன நல்ல முறையில் குடும்பம் நடத்த வேண்டும் என்று அறிவுரை சொல்வான்.

அதேவேளை அவன் ஐந்து வயதில் இருந்த போது வேறு விதமாக அறிவுரை செய்திருப்பார். ஐந்து வயதில் கூறிய உபதேசத்தை 25 வயதில் கூறினால் அதில் எந்தப் பலனும் இருக்காது. மனிதன் என்பவன் அனைத்து விஷயத்தையும் பிறந்த உடனே அறிந்து கொள்வதில்லை. மாறாக, கல்வியின் மூலமும் அனுபவத்தின் மூலமும் படிப்படியாகத்தான் ஒவ்வொன்றையும் அறிந்து கொள்கிறான்.

மனிதனுடைய மூளையையும் உள்ளத்தையும் அவன் பிறந்தது முதல் இறக்கும் வரை இறைவன் ஒரே சீராக ஆக்கவில்லை. எனவே, அவனது மூளை எதை எப்போது ஏற்றுக் கொள்ளுமோ அதை அப்போது கூற வேண்டும் என்ற அடிப்படையில்தான் இறைவன் மனிதர்களுக்கு திருமறைக் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் சட்டங்களை அளிக்கின்றான்.

எனவே தான் படிப்படியாக ஒன்றன் பின் ஒன்றாக சட்டங்களைக் கூறும் போது, ஆரம்பத்தில் இலகுவாக இருந்த சட்டம் பின்னர் கடினமாக்கப்படலாம். ஆரம்பத்தில் கடினமாக இருந்த சட்டம் பின்னர் இலகுவாக்கப்படலாம்.

எனவே, ஆரம்பத்தில் தொழுகையில் மட்டும் மதுவைத் தடை செய்கிறான். பின்னர் அவர்கள் ஒரு பக்குவத்தை அடைந்ததும் முழுவதுமாகத் தடை செய்து விடுகிறான். இது போன்ற நிலையில் முன்னர் சொல்லப்பட்ட சட்டம் மாற்றப்படலாம்.

நாஸிஹ், மன்ஸூஹ் என்பது ஆரம்பத்தில் ஒரு சட்டம் கூறப்பட்டு, பின்னர் மற்றொரு சட்டத்தின் மூலம் முந்தைய சட்டம் மாற்றப்படுவதாகும். இதில் முந்தைய சட்டத்திற்கு மன்ஸூஹ் (மாற்றப்பட்டது) என்றும், புதிய சட்டத்திற்கு நாஸிஹ் (மாற்றியது) என்றும் பெயர் கூறப்படும்.  இதற்கு திருமறைக்குர்ஆனிலிருந்தே அழகிய எடுத்துக்காட்டுகளை நாம் காட்டலாம்.

படிப்படியாக மது தடைசெய்யப்படுதல்

திருமறைக் குர்ஆனிலும் இது போன்ற மாற்றப்பட்ட வசனங்கள் உள்ளன. ஆரம்பத்தில் மது தொழுகையில் மாத்திரம் தடை செய்யப்பட்டது. பின்னர் முழுவதுமாகத் தடைசெய்யப்பட்டது என்பதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

எடுத்த எடுப்பிலே மதுவை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று குர்ஆன் கட்டளையிடவில்லை. மதுவை ஒழிப்பதற்காக வேறுபட்ட கால கட்டங்களில் வெவ்வேறு கோணங்களில் மதுவைப் பற்றி குர்ஆன் மக்களுக்கு எச்சரித்தது. மது நல்ல பொருள் அல்ல என்ற கருத்தை முதலில் குர்ஆன் முன்வைத்தது.

பேரீச்சை மற்றும் திராட்சைக் கனிகளிலிருந்து மதுவையும், அழகிய உணவையும் தயாரிக்கிறீர்கள். விளங்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.

அல்குர்ஆன் 16:67

இந்த வசனம் மது தடை செய்யப்படுவதற்கு முன்னால் இறங்கிய வசனம். இந்த வசனத்தில் இறைவன் உணவு மற்றும் மது ஆகிய இரண்டையும் பற்றிப் பேசுகிறான்.

இரண்டு பொருட்களைப் பற்றி பேசும் போது ஒன்றை மட்டும் சிறந்தது என்று கூறினால் இன்னொன்று சிறந்ததல்ல என்ற கருத்து வரும். எனவே உணவு, மது ஆகிய இரண்டில் உணவு தான் அழகானது; சிறந்தது. மது சிறந்ததல்ல என்ற கருத்தை முதலில் முன்வைக்கிறான். இந்நேரத்தில் மது அருந்தக் கூடாது என்று குர்ஆன் தடை விதிக்கவில்லை.

இதன் பிறகு மதுவில் கேடு தான் அதிகமாக இருக்கிறது என்று திருக்குர்ஆன் தெளிவாக உணர்த்தியது. என்றாலும் மதுவைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கட்டளையை குர்ஆன் இப்போதும் இடவில்லை.

மது மற்றும் சூதாட்டம் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது” எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 2:219

இதன் பிறகு தொழுகைக்கு வரும் போது போதையுடன் வரக்கூடாது என்று குர்ஆன் கட்டளையிட்டது. ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுவது கடமையாக்கப்பட்டுள்ளது.

தொழுகைக்கு போதையில்லாமல் வர வேண்டும் என்றால் குறைந்தது தொழுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாவது மது அருந்தாமல் இருக்க வேண்டும். இதை ஒரு நாளைக்கு ஐந்து முறை கடைப்பிடிக்கும் போது எப்போதும் போதையில் திளைத்தவர்கள் சிறந்த பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள். போதையின்றி வாழ்வதற்குப் பழகிக் கொள்வார்கள். எனவே தான் மனித இயல்பை அறிந்த இறைவன் மதுவை முற்றிலும் தடுத்து விடாமல் தொழுகை நேரத்தில் மட்டும் அருந்த வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்தான்.

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்!

அல்குர்ஆன் 4:43

இந்த வசனம் இறங்குவதற்குப் பின்வரும் சம்பவம் காரணமாக இருந்தது.

அலீ (ரலி) மற்றும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) ஆகிய இருவரையும் அன்சாரிக் குலத்தைச் சார்ந்த ஒருவர் விருந்துக்கு அழைத்திருந்தார். அவ்விருவருக்கும் மதுவை குடிக்கக் கொடுத்தார். (இச்சம்பவம்) மது தடை செய்யப்படுவதற்கு முன்பு (நடந்தது). அலீ (ரலி) அவர்கள் (போதையுடன்) குல் யா அய்யுஹல் காஃபிரூன் என்ற சூராவை ஓதி மக்களுக்கு மஃக்ரிப் தொழ வைத்தார். (போதையின் காரணத்தினால்) தொழுகையில் தவறுதலாக ஓதிவிட்டார். அப்போது தான், “நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! (4:43) என்ற வசனம் இறங்கியது.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: அபூதாவூத் 3186

இறுதிக் கட்டமாக மதுவை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்று குர்ஆன் கட்டளையிட்டது.

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!

மது மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?

அல்குர்ஆன் 5:90

எத்தனையோ சட்டங்கள் ஏட்டளவில் இருக்கின்றன. மக்களில் எவரும் இந்தச் சட்டங்களை மதிப்பதும் இல்லை. பொருட் படுத்துவதும் இல்லை. ஏனென்றால் யாருமே கடைப்பிடிக்க முடியாத அளவிற்கு மிகக் கடினமாக இச்சட்டங்கள் இருக்கின்றன.

சட்டங்கள் இடுவது முக்கியமல்ல. எப்போது, எப்படிச் சட்டம் இயற்றினால் பலன் ஏற்படும்? என்ற தூர நோக்குப் பார்வையில் சட்டங்களை இயற்ற வேண்டும். மக்களின் மனநிலைகளை அல்லாஹ் முற்றிலும் அறிந்திருப்பதால் இத்தகைய வழிமுறையைக் கையாண்டுள்ளான்.

நாஸிஹ் மன்ஸுஹ் குர்ஆனில் உள்ளது போன்று ஹதீஸிலும் உள்ளது. அதற்குரிய எடுத்துக்காட்டுகளை இப்போது காண்போம்.

ஆஷுரா நோன்பு கடமை என்ற சட்டம் மாற்றப்படுதல்

முதலில் கூறப்பட்ட சட்டம் மாற்றப்பட்டு புதிய சட்டம் கூறப்பட்டதற்கு உதாரணமாக ஆஷுரா நோன்பு தொடர்பான சட்டத்தைக் கூறலாம்.

ஆரம்பத்தில் ஆஷூரா நோன்புதான் கடமையாக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டு ஆஷுரா நோன்பு விருப்பத்திற்குரியதாக மாற்றப்பட்டது. இதில் ஆஷுரா நோன்பிற்கு மன்ஸூஹ் (மாற்றப்பட்டது) என்றும் ரமலான் நோன்பிற்கு நாஸிஹ் (மாற்றியது) என்றும் சொல்லப்படும்.

அதாவது ஆஷுரா நோன்பு கட்டாயக் கடமை என்ற பழைய சட்டம் மாற்றப்பட்டு ரமலான் நோன்பு கட்டாயக் கடமை என்ற புதிய சட்டம் விதிக்கப்பட்டது.

“ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷுரா (முஹாரம் 10ஆம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அதுதான் கஅபாவுக்கு புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, “யார் (ஆஷுராவுடைய) நோன்பை நோற்க விரும்புகிறாரோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும்! யார் அதை விட்டுவிட விரும்புகிறரோ அவர் அதை விட்டுவிடட்டும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)

நூல்: புகாரி 1592.