ஏகத்துவம் – மே 2009

தலையங்கம்

நாகூர் கந்தூரி நாசமாகும் அமல்கள்

தமிழகத்திலுள்ள முஸ்லிம் பெண்கள் ஹிஜ்ரி மாதக் கணக்கை நன்கு நினைவு வைத்திருப்பர். ஆனால் அவர்களுக்கு அரபு மாதங்களின் பெயர்கள் தெரியாது. இதற்குக் காரணம் அவர்கள் அந்தந்த மாதத்தில் நடக்கும் அவ்லியாக்களின் கந்தூரிகளை வைத்து மாதத்தைக் கணக்கிடுவது தான்.

ரசூலுல்லாஹ் மவ்லிது (ரபிய்யுல் அவ்வல்), முஹ்யித்தீன் மவ்லிது (ரபிய்யுல் ஆகிர்), பஷீரப்பா கந்தூரி (ஜமாதில் அவ்வல்), ஷாகுல் ஹமீது மவ்லிது (ஜமாதில் ஆகிர்), காஜா நாயகம் மவ்லிது (ரஜப் மாதம்) என அவ்லியாக்களின் பெயரிலேயே மாதப் பிறையைக் கணக்கு வைத்திருக்கிறார்கள்.

அந்த அளவுக்கு அவ்லியாக்களின் கந்தூரிகள் அவர்களை ஆக்கிரமித்து நிற்கின்றன.

ஜமாதில் ஆகிர் மாதம் பிறக்கவிருக்கின்றது. பெண்கள் கணக்குப்படி ஷாகுல் ஹமீது மவ்லிதுப் பிறை, நாகூர் கந்தூரிப் பிறை பிறக்கவிருக்கின்றது.

பிறை 1 முதல் 14 நாட்கள் நடக்கும் இந்தக் கந்தூரி நாகூரில் படு விமரிசையாக நடைபெறும்.

நாகூர் செல்ல முடியாதவர்களுக்காக ஷாகுல் ஹமீது தர்காவின் கிளைகளும் சில ஊர்களில் உண்டு. அந்தக் கிளைகளில் அவர்கள் கந்தூரிகளைக் கொண்டாடி தங்கள் பக்திகளை வெளிப்படுத்திக் கொள்வார்கள்.

இக்கந்தூரியில் கலந்து கொள்வதற்காகத் தமிழகத்திலிருந்து மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் கூட பக்தர்கள் வந்து நாகூர் சன்னதியில் குழுமுவார்கள்.

இப்படி இவர்கள் வந்து நாகூரில் குழுமுவதன், கூடுவதன் நோக்கம் என்ன? “இவையெல்லாம் அவ்லியாக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுத் தரும். இவை அல்லாஹ்விடம் நெருக்கி வைக்கும் காரியங்கள்” இது தான் இவர்களது எண்ணம். அதற்காகத் தான் இத்தனை பெரிய பயணம், செலவுகள், 14 நாட்களுக்கு மேற்கொள்ளும் சிரமங்கள்.

நாம் இங்கே பார்க்கப் போவது இவர்கள் செய்கின்ற இந்தக் காரியங்கள் இவர்களுக்கு எள் அளவாவது, எள் முனையளவாவது பயனளிக்குமா? என்பதைத் தான்.

இந்தக் கேள்விக்கு, நன்மையையும் தீமையையும் பிரித்துக் காட்ட வந்த அல்குர்ஆன் அளிக்கும் பதிலைப் பார்ப்போம்.

என்னையன்றி எனது அடியார்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள (என்னை) மறுப்போர் நினைக்கிறார்களா? (நம்மை) மறுப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயாரித்துள்ளோம்.

அல்குர்ஆன் 18:102

இந்த வசனத்தில் இவர்களை இறை மறுப்பாளர்கள் என்று அழைப்பதுடன் இவர்களின் இந்தக் காரியங்களுக்குத் தண்டனையாக நரகம் தான் பரிசு என்று இறைவன் குறிப்பிடுகின்றான்.

(ஏக இறைவனை) மறுப்போரின் செயல்கள் பாலைவனத்தில் (தெரியும்) கானல் நீர் போன்றது. தாகம் ஏற்பட்டவன் அதைத் தண்ணீர் என நினைப்பான். முடிவில் அங்கே அவன் வரும் போது எதையும் காண மாட்டான். அங்கே அல்லாஹ்வைத் தான் காண்பான். அப்போது அவனது கணக்கை நேர் செய்வான். அல்லாஹ் விரைந்து விசாரிப்பவன்.

அல்குர்ஆன் 24:39

இவர்கள் செய்கின்ற இந்த வணக்கங்களை கானல் நீர் என்று மேற்கண்ட வசனம் கூறுகின்றது.

இந்தக் கானல் நீரை தண்ணீராகக் காண்பவர்கள் மாபெரும் நஷ்டவாளிகள்!

இதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ் விளக்குகின்றான்.

செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்பீராக!

இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர்.

அல்குர்ஆன் 18:103, 104

  1. மாபெரும் நஷ்டவாளிகள்
  2. இவர்களது முயற்சி இவ்வுலகிலேயே வீணாகி விடுகின்றது.
  3. தீமையைச் செய்து விட்டு அதை நன்மை என்று நம்பி ஏமாறுகின்ற கொடுமை!

ஒருவன் ரயிலில் டிக்கெட் வாங்காமல் பயணம் செய்து மாட்டிக் கொண்டு தண்டனை பெறுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். அவ்வாறு தண்டனை பெறுகின்ற அவன், தனக்கு அந்தத் தண்டனை நியாயமானது தான் என்று உணர்ந்தே ஏற்றுக் கொள்கிறான். இதில் அவனுக்கு எந்த ஏமாற்றமும் இல்லை.

ஆனால் அதே சமயம், டிக்கெட் வாங்கிக் கொண்டு பயணம் செய்த ஒருவன், தான் வாங்கிய டிக்கெட் போலியானது என்றாகி, அதற்காகத் தண்டனை பெறும் போது அவன் பெருத்த ஏமாற்றத்திற்குள்ளாகி விடுகின்றான். அதை அவனால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இதன் மூலம் அவன் அடைகின்ற ஏமாற்றத்திற்கு ஓர் அளவே இல்லை. அவ்லியா பக்தர்களின் நிலை இதைப் போன்றது தான்.

கடவுள் மறுப்புக் கொள்கையுள்ள ஒருவன் அல்லாஹ்வை நம்பப் போவதில்லை; மறுமையையும் நம்பப் போவதில்லை. நாளை மறுமையில் அவன் தண்டனை பெறுகின்ற போது அது அவனுக்குப் பெரிய ஏமாற்றத்தைத் தரப் போவதில்லை. காரணம், தான் செய்த தப்புக்கு அந்தத் தண்டனை என்று அவன் ஏற்றுக் கொள்ளப் போகின்றான்.

ஆனால் அவ்லியா பக்தர்களின் நிலை அவ்வாறல்ல! அவர்கள் தாங்கள் செய்த காரியங்களை நன்மை என்று நம்பியவர்கள்! அதனால் அவர்களது ஏமாற்றம் அளவிட முடியாதது.

ஷாகுல் ஹமீது மீது பக்தி கொண்டு மவ்லிது ஓதுவது, சந்தனக்கூடு எடுப்பது, கொடி ஏற்றுவது, பீரோட்டம் ஓடுவது, நாகூருக்குப் பயணம் மேற்கொள்வது, அங்கு 14 நாட்கள் தங்குவது போன்ற எல்லாமே மார்க்கத்தின் பெயரால் நன்மை என்று கருதிச் செய்யப்படும் வீணான காரியங்கள்.

வீணான காரியங்களை நன்மை என்று செய்பவர்கள் அல்லாஹ்விடம் மாபெரும் நஷ்டத்திற்குரியவர்கள். நரகத்தைத் தங்குமிடமாக ஆக்கிக் கொள்பவர்கள்.

எனவே ஷாகுல் ஹமீது கந்தூரி மட்டுமல்ல! ஒவ்வொரு அவ்லியா கந்தூரி கொண்டாடும் முஸ்லிமும் இந்தப் பட்டியலில் தான் இடம் பெறுவார் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தப் பட்டியலில் ஈடுபடுவோர் தாங்கள் நல்லமல்களைச் செய்திருக்கிறோம் என்று நம்புகிறார்கள். அந்த அமல்கள் அனைத்தையும் காற்றில் பறக்கும் புழுதிகளாக, கரைந்து போகும் சாம்பல்களாக இறைவன் ஆக்கி விடுகின்றான். இதனால் இவர்களது அமல்களை நிறுப்பதற்குத் தராசைக் கூட வைப்பதில்லை.

அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே கியாமத் நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம். அவர்கள் (என்னை) மறுத்ததற்கும், எனது வசனங்களையும் தூதர்களையும் கேலியாக ஆக்கியதற்கும் இந்த நரகமே உரிய தண்டனை.

அல்குர்ஆன் 18:105, 106

இத்தனைக்குப் பிறகும் ஒருவர் நாகூர் செல்வாரானால் அவர் அல்லாஹ்வின் இந்த வசனங்களைக் கேலிப் பொருளாக்கியவர் என்பதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்? அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

ஷாகுல் ஹமீது மவ்லிது தொடர்பான கதை கப்ஸாக்களையும், கவிதை வரிகளையும், கந்தூரி என்ற பெயரில் நடக்கும் மடைமைத்தனங்களையும் மவ்ட்டீகங்களையும் இந்த இதழ் உங்களுக்கு அடையாளம் காட்டுகின்றது.

நேர்வழி காட்டுவதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.

ஷாஹே மீரான் சஞ்சலம் தீர்ப்பாரா?

ஷாஹே மீரான் சஞ்சலம் தீர்க்கும் எங்கள் கஞ்ச சவாயி நாகூரார்!

நமனை விரட்ட மருந்தொன்று விற்குது நாகூர் தர்ஹாவிலே!

இவை நாகூர் ஹனீபாவின் பாடல் வரிகள். இல்லை! இல்லை! கொழுந்து விட்டெரியும் கொடிய நரகின் நெருப்புப் பொறிகள்.

சாதாரணப் பாடல் வரிகளை நமது வாய்கள் நம்மை அறியாமல் முணுமுணுக்கும். அதனால் நாம் பாவிகளாகி விட மாட்டோம். ஆனால் இந்தப் பாடல் வரிகளை ஒரு முஸ்லிமின் வாய் முணுமுணுத்து விட்டால் அவன் இஸ்லாத்தை விட்டு வெளியே போய் விடுவான். மீண்டும் ஏகத்துவக் கலிமாவைச் சொல்லி அவன் இஸ்லாத்தை ஏற்க வேண்டும். அந்த அளவுக்குப் பாவமான பாடல் வரிகள். காரணம், இது இஸ்லாத்தின் கடவுள் கொள்கையைத் தகர்த்தெறிந்து விடுகின்றது.

அவனே என்னைப் படைத்தான். அவனே எனக்கு நேர் வழி காட்டுகிறான். அவனே எனக்கு உணவளித்து (தண்ணீர்) பருகச் செய்கிறான். நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான். அவனே என்னை மரணிக்கச் செய்கிறான். பின்னர் எனக்கு உயிர் கொடுப்பான்.

அல்குர்ஆன் 26:78-81

எல்லாம் வல்ல அல்லாஹ் தான் நோயை நீக்குபவன் என்று திருக்குர்ஆன் கூறியிருக்கையில், நாகூர் ஷாகுல் ஹமீதுக்கு அந்த ஆற்றல் இருப்பதாகக் கூறி அவரைக் கடவுளாக்கிக் கவிதை பாடுகின்றார்.

இத்துடன் மட்டும் அவர் நிற்காமல் இன்னும் ஒரு படி தாண்டி, நமனை, அதாவது எமனைக் கூட இவர் விரட்டி விடுவாராம். பாருங்கள்! பாடலாசிரியரின் இந்தப் பைத்தியக்காரத்தனத்தை!

உயிர் கொடுப்பதும், உயிரைப் பறிப்பதும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கையில் இருக்கின்றது என்று இப்ராஹீம் (அலை) கூறுகின்றார்கள். ஆனால் பாழாய் போன பாடலாசிரியர் இந்த ஆற்றல் ஷாகுல் ஹமீதுக்கு இருக்கின்றது என்று பிதற்றுகின்றார்.

ஷாகுல் ஹமீதைக் கடவுளாக்கும் கவிதை வரிகளைக் கண்டு எந்த ஓர் ஆலிமும் குரல் எழுப்ப வரவில்லை. கண்டனம் தெரிவிக்கவில்லை. தெரிவிக்கவும் மாட்டார்கள். காரணம், ஏழாண்டு படித்த இந்த ஆலிம்களும் ஷாகுல் ஹமீதைக் கடவுளாகத் தான் கொண்டிருக்கிறார்கள்.

நமனிடம் மாட்டிய நாகூர் மீரான்

முஹ்யித்தீனைப் புகழ்கின்ற ஒவ்வொரு மவ்லிதுக் கிதாபிலும் யாகுத்பா, யாஸய்யிதீ வஷைஹீ என்ற பாடல்கள் இடம்பெறுகின்றன.

சுப்ஹான மவ்லிது ஓதினாலும் முஹ்யித்தீன் மவ்லிது ஓதினாலும் இந்தப் பாடல்களைப் பாடாமல் விட மாட்டார்கள். அப்படி ஓர் அதி முக்கியத்துவத்தை இந்தப் பாடல்கள் பெற்றிருக்கின்றன. அதிலும் குறிப்பாக சில வரிகள் மிக மிக முக்கியத்துவம் பெறுகின்றன. அந்த வரிகளை மூன்று தடவை பாடுவார்கள்.

அதி முக்கியத்துவம் வாய்ந்த பாடல் வரிகள் இவை தான்.

நாகூராரே! நன்மைகளின் சங்கமமே! செவிப்புலனிலும் சீரிய உறுப்புகளிலும் அழகிய பார்வையிலும் குறைந்த ஆயுளில்லாமல் நீடித்த ஆயுளைப் பெறுவதிலும் எனக்கு உதவிடுங்கள்.

காதர் மீரானை இந்த ஆலிம்களே கடவுளாக்கிப் பாடும் போது அந்தத் தமிழ் பாடலின் ஆசிரியரை மட்டும் எப்படிக் குறை காண முடியும்?

அரபியிலும் தமிழிலும் போட்டி போட்டுக் கொண்டு இந்த அறிவிலிக் கவிஞர்கள் காதர் மீறானைக் கடவுளாக்கி மகிழ்கின்றார்கள்.

காதர் மீறானைக் கடவுளாக்குவதில் இருவரும் சம நிலையில் தான் இருக்கின்றார்கள். ஒரேயொரு வித்தியாசம்! ஹனீபா பாடும் கவிதை தமிழில் இருக்கிறது. ஆலிம்கள் பாடும் கவிதை அரபியில் இருக்கிறது.

ஹனீபா பாட்டை சாதாரண பாடலாக நினைத்துக் கேட்பார்கள். மவ்லிது அரபியில் இருப்பதால் அதைப் புனிதமாகக் கருதி ஆலிம்களை வைத்துப் பாடுவார்கள்.

இதில் வேடிக்கை என்னவெனில், “நமனை விரட்ட மருந்தொன்று இருக்கிறது’ என்று இவர்களால் பாராட்டப்படுகின்ற நாகூர் மீறான் நமனின் பிடியில், அதாவது மலக்குல் மவ்த்தின் பிடியில் சிக்கி மரணத்தைத் தழுவியவர்.

நாகூர் மீறான், தன்னுடைய உயிரைக் கைப்பற்ற வந்த மலக்குல் மவ்த்தை ஓட ஓட விரட்டியடித்து, சாகாவரம் பெற்ற சாஸ்தவமாய் இதுவரை வாழ்ந்து கொண்டிருந்தால் இப்படிப் பாடுவதில் ஓர் அர்த்தமிருக்கும்.

ஆனால் அவரே மலக்குல் மவ்த்தின் பிடியில் மாட்டி மரணித்து விட்டார். அவரிடம் என்ன மருந்து இருக்கும்? என்று இந்த அறிவிலிக் கவிஞர்களும் அதைப் பாடிக் காசு பணம் சம்பாதிக்கும் ஆலிம்களும் சிந்திக்கவில்லை. இது உண்மையில் வேடிக்கையும் வினோதமும் ஆகும்.

பிணத்திடம் ஒரு பிரார்த்தனை

அத்துடன் இன்னொரு வேடிக்கை வினோதத்தைப் பார்ப்போம்.

ஒருவர் இறந்து விட்டால் அவருடைய உறுப்புகள் அத்தனையும் உடனே செயலிழந்து விடுகின்றன. கண்கள் மட்டும் ஆறு மணி நேரங்கள் கழித்து செயலிழக்கின்றன. இறந்து விட்ட ஷாகுல் ஹமீதுக்கும் இதே நிலை தான்.

ஷாகுல் ஹமீது இறந்து ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன.

அவரது கண்களுக்குப் பார்வையில்லை. அவரது காதுகளுக்குச் செவியுறும் ஆற்றல் இல்லை. கை, கால்கள் போன்ற உறுப்புகளுக்கு அசையக் கூடிய ஆற்றல் இல்லை. இதைக் கீழ்க்காணும் வசனத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

(எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 7:193-194

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர்.

அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். “எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 16:20, 21

இந்த வசனங்களின் அடிப்படையிலும், அறிவியல் அடிப்படையிலும் ஷாகுல் ஹமீது மரணித்தவர். அவருக்குப் பார்க்கின்ற கண்கள் இல்லை. கேட்கின்ற காதுகள் இல்லை. பிடிக்கின்ற கைகள் இல்லை. நடக்கின்ற கால்கள் இல்லை. அவர் ஒரு மய்யித்! ஆம்! இறந்த ஒரு சடலம்! செத்த பிணம்!

அவரிடம் போய், கண் பார்வையைத் தா, செவிப்புலனைத் தா, உறுப்புகளுக்கு ஆற்றலைத் தா என்று இவர்கள் கேட்கிறார்கள் என்றால் இவர்களை நாம் என்னவென்பது?

அற்புதப் படைப்புகள்

ஒரு மனிதன் உயிருடன் இருக்கின்றானா? இல்லையா? என்பதை அறிவதற்கு அடையாளமாகவும், ஆதாரமாகவும் அமைந்திருப்பதே கண் பார்வையும் செவிப்புலனும் தான். பார்வைப் புலனும், செவிப் புலனும் படைப்பாளன் அல்லாஹ்வின் படைப்பாற்றலைப் பறைசாற்றி நிற்கின்ற அற்புத அரிய படைப்புகள். அதனால் தான் அல்லாஹ் இப்படியொரு சவாலை விடுக்கின்றான்.

உங்கள் செவிப் புலனையும், பார்வைகளையும் அல்லாஹ் நீக்கி விட்டு, உங்கள் உள்ளங்கள் மீது முத்திரையிட்டால் அதைக் கொண்டு வருகின்ற அல்லாஹ் அல்லாத (வேறு) கடவுள் யாரேனும் உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!எனக் கேட்பீராக! சான்றுகளை எவ்வாறு விளக்குகிறோம் என்பதையும், பின்னர் அவர்கள் எவ்வாறு புறக்கணிக்கின்றனர் என்பதையும் கவனிப்பீராக!

அல்குர்ஆன் 6:46

இந்த அறிவிலிக் கவிஞர்களோ அல்லாஹ்வின் சவாலை ஷாகுல் ஹமீது எதிர் கொள்வார் என்று கூறுகின்றனர். செவிப்புலனையும் பார்வைப்புலனையும் அல்லாஹ் நீக்கி விட்டால் அதைத் தருகின்ற ஆற்றல் ஷாகுல் ஹமீதுக்கு இருப்பதாகக் கூறுகின்றனர். அந்தோ பரிதாபம்! அவரோ கரையானுக்கு இரையாகி, மண்ணோடு மண்ணாகி விட்டார். அவருடைய உயிர், எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கையில் இருக்கின்றது.

நாளை மறுமையில் அவர் எழுப்பப்பட்டு இறைவன் முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்படுவார். இதைத் தான் அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடுகின்றான்.

நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

அல்குர்ஆன் 35:14

நாளை மறுமையில் ஷாகுல் ஹமீது உண்மையில் ஓர் இறைநேசராக இருந்து, மக்கள் அவரை உதவிக்கு அழைத்து வணங்கியிருந்தால் அவர் மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் நிறுத்தப்படுவார். கூடெடுத்து, கொடியேற்றி, மவ்லிது ஓதி பக்தியை வெளிப்படுத்திய அவ்லியா பக்தர்களும் இறைவன் முன்னிலையில் நிறுத்தப்படுவர்.

அப்போது ஷாகுல் ஹமீது, தனது பக்தர்கள் தன்னை வணங்கியதை மறுத்து விடுவார். அழைத்தவர்கள் அம்போவென்று நரகத்தில் தூக்கி வீசியெறியப்படுவார்கள். ஷாகுல் ஹமீது நல்லவராக இருந்தால் அவர் சுவனம் செல்வார். தீயவராக இருந்தால் அவரும் அவர்களுடன் சேர்ந்து நரகம் போவார்.

இப்படிப்பட்ட அடியார்களை அழைத்துப் பிரார்த்தித்து, நரகத்தில் மாட்டிக் கொள்ளலாமா?

தரையில் ஓடும் கப்பல்கள்

தவத்தில் வாடும் பீர்கள்

சந்திரனுக்குப் போக முடியுமா? சாத்தியமா? என்று மனிதனின் சிந்தனை தான் அன்று இறக்கை கட்டிப் பறந்தது. ஆனால் இருபதாம் நூற்றாண்டில் மனிதன் சந்திரனுக்கு இறக்கை கட்டிப் பறந்தே விட்டான். அங்கு போய் கொடியும் நாட்டி விட்டான். அவனுடைய அடுத்தக் கனவு செவ்வாய் கிரகம்.

இப்போது இருபத்தோறாம் நூற்றாண்டில் செவ்வாய்க்கு இயந்திர மனிதனை முன்னோட்டமாக அனுப்பி வெள்ளோட்டம் பார்த்துக் கொண்டிருக்கிறான். செவ்வாயில் தன் செவ்வாய்க்குத் தண்ணீர் கிடைக்காதா? என்று அங்கு தண்ணீரைக் கண்டறிய தணியாத தாகத்தில் இருக்கிறான்.

அறிவியல் கொளுத்தி விட்ட புரட்சி வெளிச்சத்தில் சந்திரனில் கொடியேற்றி, செவ்வாய்க்கு இயந்திரக் கூடு அனுப்பி சாதனை படைத்துக் கொண்டிருக்கின்ற மனிதர்கள் வாழ்கின்ற இந்த நவீன உலகத்தில், சமாதியை நோக்கி சந்தனக் கூடு எடுத்து, சன்னிதான சன்னதியில் கொடி ஏற்றி இருட்டில் தட்டழிந்து கொண்டிருக்கின்ற மனிதர்களும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அதற்கு நாகூர் கந்தூரியை ஓர் எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

கடலில் கப்பல் ஓடக் கண்டிருக்கிறோம். ஆனால் கரையில், கட்டாந்தரையில் கப்பல் ஓடக் கண்டிருக்கிறோமா? நிச்சயமாக இல்லை. ஆனால் தரையில், தார் போட்ட சாலையில் கப்பல் ஓடுகின்றது. நாகப்பட்டிணத்திலிருந்து புறப்பட்டு நாகூர் வரை ஓடுகின்றது.

தண்ணீரில் கப்பல் நீரைக் கிழித்துக் கொண்டு சீறிப் பாய்ந்து செல்லலாம். ஆனால் தரையில் அப்படிச் செல்ல முடியாதல்லவா?

அதனால் நாகையில் இஷாவுக்குப் பிறகு அந்தக் கப்பல் புறப்பட்டு, போதை ஏறியவனைப் போன்று தள்ளாடித் தள்ளாடி சுப்ஹ் நேரத்தில் நாகூர் வந்து சேர்கின்றது.

மனிதர்களைத் தூக்கி வருவதற்குப் பெயர் தான் கப்பல்! ஆனால் இந்தக் கப்பலை மனிதர்கள் – மண்டையில் சரக்கில்லாத மாலுமிகள் – தார்ச்சாலையில் தாங்கிப் பிடித்து இழுத்து வருகின்றார்கள்.

ஊர் கூடித் தேர் இழுத்தல்

கோயில் திருவிழாக்களின் போது இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் ஊர் கூடித் தேர் இழுப்பார்கள். அவர்கள் கூட தரையில் ஓடக் கூடியதைத் தான் தரையில் இழுத்துச் செல்கின்றனர். ஆனால் இந்த அவ்லியா பக்தர்களோ கடலில் ஓடும் கப்பலை அல்லவா தரையில் ஓட்டுகிறார்கள்?

இங்கே தரையில் இவ்வாறு கப்பல் ஓடுகின்றது என்றால் தர்ஹாவில் கந்தூரி நாட்களின் போது அங்குள்ள தர்மகர்த்தா ஒருவர் பீர் என்ற பெயரில் ஒரு தவம் இருப்பார். பீர் இருக்கும் அவ்வேளையில் மூன்று நாட்கள் நோன்பும் நோற்கிறார்கள். இந்த மூன்று நாட்களும் மிளகு மூட்டையில் உட்கார்ந்து இருப்பார்களாம்.

தர்ஹாவில் தவக்கோலம் பூண்டிருக்கும் அவரிடம் வந்து ஆண்களும் பெண்களும் ஈக்களாய் மொய்ப்பார்கள்.

“அவருக்குக் கராமத் விளங்குகிறது; காரணம் துலங்குகிறது’ என்ற நம்பிக்கையில் இந்த ஆச்சாரியாரிடம் ஆசி பெற மக்கள் முண்டியடித்துக் கொண்டு அவர் முன்னால் வந்து கூடுவார்கள். பத்து நாட்கள் பீர் இருந்த அவர் கடற்கரையை நோக்கி ஓடுகின்றார். அப்போது அங்கு தோண்டப்பட்ட குழியில் அற்புதமாக நீர் பொங்குகின்றது என்றெல்லாம் காதில் பூச்சுற்றுகின்றார்கள். குழந்தையில்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற படுமோசமான நம்பிக்கையும் மக்களிடம் உள்ளது.

இவ்வாறு பீர் சாஹிபாக இருந்த அவருக்கு ஒரு தெய்வீகத் தன்மை ஊட்டப்படுகின்றது. அதனால் தேரோட்டம் போன்று நாகூரில் பீரோட்டம் ஒன்று நடைபெறுகின்றது. இதற்காகவும் ஒரு கூட்டம் அலை போன்று கரையில் அலை மோதும்.

ஏனிந்த கூட்டம் இப்படி அலைமோதுகின்றது? எதற்காக இப்படி ஒரு கூட்டம் அணி திரள்கின்றது?

இதுவெல்லாம் தங்களுக்கு நன்மையைத் தரும் என்ற நம்பிக்கையில் தான். ஆனால் இது நன்மையைப் பெற்றுத் தருமா?

யாருக்கு அவனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகானதாகக் கருதினானோ அவனா (சொர்க்கவாசி)? அல்லாஹ், தான் நாடியோரை வழி கேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விட வேண்டாம். அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.

அல்குர்ஆன் 35:8

இவர்கள் ஷைத்தானின் மாய, தீய வலையில் சிக்கியவர்கள். இவர்களுக்காக நீங்கள் கவலைப்படக்கூடாது என்று அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்குக் கூறுகின்றான் என்றால் இவர்கள் எவ்வளவு பெரிய நஷ்டவாளிகள் எனத் தெரிந்து கொள்ளலாம். இந்தத் தீய திருவிழா கந்தூரி கூட்டத்திலிருந்து அலலாஹ் நம்மைப் பாதுகாப்பானாக!

————————————————————————————————————————————————

நிர்வாகவியல்        தொடர்: 3

இஸ்லாமிய நிர்வாகம்

அன்றாட நடவடிக்கைகளின் ஒழுங்கு

சிலரை பார்த்தால் அவர்கள் குடியிருக்கும் வீடு அழுக்கடைந்து போய், எந்தப் பொருளும் இருக்க வேண்டிய இடத்தில் இருக்காது. ஒரு பொருளை வைத்தால் தேவைக்குக் கிடைக்காது. கண்ட இடமெல்லாம் பொருட்கள். ஒரு நாளைக்கு மேசை மேல் இருக்கும்; ஒரு நாளைக்கு அலமாரியில் இருக்கும்.

காலையில் ஒரு நாள் 7 மணிக்கு எழுவார். ஒரு நாள் 5 மணிக்கு! ஒரு நாள் 6 மணிக்கு! உறங்கச் செல்வதும் இப்படித் தான்.

இப்படித் தனது தினசரி நடவடிக்கைகளையே ஒழுங்குற நிர்வகிக்கத் தெரியாமல் எவ்வளவு நேர விரையம்? பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்?

நமது செயல்பாடுகளை ஒழுங்குற அமைத்துக் கொள்ள வேண்டும். எழும் நேரம், உறங்கும் நேரம், உணவு உண்ணும் நேரம், வீடு சுத்தம், உடை சுத்தம், தினசரி தொடர்ச்சியாகச் செய்யும் செயல்கள், வாராந்திரச் செயல்கள், மாதாந்திரச் செயல்கள் என ஒரு தெளிவான திட்டமிடுதல் வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் இதில் நமக்குப் பெரிய முன்மாதிரியாவார்கள். அவர்களின் நடவடிக்கைகள் எல்லாம் குறிப்பிட்ட நேரத்தில் அமைந்தன.

தொழுகை என்ற வணக்கம் நமக்குக் கற்றுத் தரும் பாடங்களில் இவை முக்கியமானவை.

“தொழுகை நம்பிக்கை கொண்டவர்கள் மீது நேரம் குறிப்பிட்ட கடமை”

“ஆதமின் மக்களே! பள்ளிக்கு வரும் போது உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள்”

என அன்றாட வாழ்வில் நேர ஒழுங்குகளைப் பேணி நடக்க, ஆடைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள, தலைமுடி தாடி போன்றவற்றை ஒழுங்குறப் பராமரிக்க என தினசரி வாழ்வின் அத்தனை செயல்களையும் முறைப்படுத்தும் பயிற்சியாகவும் தொழுகை அமைந்துள்ளது.

உணர்ச்சி

மக்களின் உணர்ச்சிகளை சரியான முறையில் ஒரு தலைவர், நிர்வாகி தெரிந்திருக்க வேண்டும்.

இன்றைய காலங்களில் மக்களின் உணர்ச்சிகள் தவறாகத் தூண்டப்பட்டு, தவறாக வழிநடத்தப்படுவதைப் பார்க்கிறோம். அது  இஸம் சார்ந்த உணர்ச்சியாகவோ, தனிமனித வெறியாகவோ இருக்கலாம்.

மறுபுறம் உணர்ச்சி வசப்படாதீர்கள் என சிலர் கூறுவது முழுமையாக ஏற்கக் கூடியதுமில்லை. இஸ்லாம் இதில் நடு நிலையைப் போதிக்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் ஜகாத் வசூலிக்க அனுப்பிய தோழர், தாம் வசூலித்து வந்த பொருளில், “இது எனக்கு, இது ஜகாத்திற்கு” எனக் கூறியபோது நபியவர்களின் முகம் சிவந்தது. மக்களை அழைத்து செய்தியைக் கூறினார்கள். (பார்க்க: புகாரி 7174, 6979)

இது தனி நபரைக் கேவலப்படுத்த அல்ல. லஞ்சம் என்ற ஒரு சமூகத் தீமைக்கு இது வழிவகுத்து விடக்கூடாது என்ற தொலை நோக்கில் அவ்வாறு செய்தார்கள்.

ஆனால் போர் படையில் புகுந்து நம்பிக்கையாளர்களை மக்கா, மதீனா என்ற அடிப்படையில் பிரிக்க அப்துல்லாஹ் பின் சலூல் என்ற நயவஞ்சகன் முயன்ற போது, “இவனுக்குத் தண்டனை கொடுத்து விடலாம்” என உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் கூறிய போது தடுத்தார்கள். (பார்க்க: புகாரி 3518)

போர் வெற்றிப் பொருட்களைப் பிரிப்பதில் தங்களுக்குப் பாதகம் ஏற்பட்டு விட்டது என மதீனத்து அன்சாரித் தோழர்கள் கூறிய போது, “மக்கள் எல்லாம் வெற்றிப் பொருட்களுடன் போகும் போது நீங்கள் அல்லாஹ்வின் தூதருடன் செல்ல பிரியப்பட மாட்டீர்களா?” என கண்ணீர் மல்க, உணர்ச்சிப் பெருக்குடன் கேட்டார்கள். (பார்க்க: புகாரி 3147, 4330, 4331)

அதனால் தேவையான நேரத்தில், தேவையான அளவு சரியான முறையில் உணர்ச்சிப்பூர்வமாக நடந்து கொள்வதால் உணர்ச்சிகள் சரியான முறையில் கையாளப்படும். அது நன்மைகளையும் ஏற்படுத்தும்.

உறுதி

நன்மைகளை ஏவி, தீமைகளைத் தடுக்கும் பணி இஸ்லாமியப் பணிகளில் எல்லாக் காலங்களிலும் பின்பற்றியாக வேண்டிய ஒன்று!

நன்மையை ஏவும் பணியை மட்டும் செய்தால் மிகச் சுலபம். சிலர் நன்மையை செய்துவிட்டால் தீமை தானாகப் போய்விடும் என்று வாதிடுகின்றர்கள்.

இதற்குக் காரணம், தீமையைத் தடுத்தால் ஏற்படும் சமூக மாற்றங்கள், எதிர்ப்புகள், நாம் கொலை செய்யப்படலாம் என்றளவுக்குப் பரவிக்கிடக்கும் தீமையைக் கண்டு ஒரு வகை பயம்.

நன்மையைச் செய்து விடுவதால் தீமை ஒரு போதும் அகலாது. இது, நாற்றமெடுத்த ஒரு அறையில் நறுமணப் பொருட்களை வைப்பது போன்றதாகும். நறுமணம் போன பிறகு மீண்டும் நாற்றமடிக்கும். எனவே நாற்றத்திற்கான காரணத்தைக் கண்டுபிடித்து அகற்றுவது, பின் நறுமணம் அடிப்பது தான் சரியான முறையாகும்.

நபி (ஸல்) அவர்கள் இஸ்ரா வல் மிஃராஜ் பயணம் போய் வந்த போது, குறைஷிகளிடம் இதைச் சொன்னால் அவர்கள் பொய்ப்பிப்பார்கள் என்பது மட்டுமல்ல; இதுவரை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் பலரும் திரும்பி விடுவார்கள் என்பது தெரிந்தும் செய்தியைப் போட்டுடைத்த உறுதி தான் இஸ்லாமிய நிர்வாகியின் உறுதி.

பொறுமை

பல நேரங்களில் தவறாக அர்த்தம் செய்யப்படும், எல்லோருக்கும் இருக்க வேண்டிய ஒரு நல்ல குணம். சில நிர்வாகிகள் பொறுப்பை ஏற்றுக் கொண்டதோடு இருக்கும் இடம் தெரியாது. கேட்டால், “பொறுமையாக எல்லாம் நடக்கும்” என்பார்கள். முடங்கிக் கிடப்பதற்கு மறுபெயர் பொறுமை எனத் தவறாக விளங்கியுள்ளார்கள்.

பொறுமை என்பது ஒரு காரியத்தைச் செய்து விட்டு, அதற்கான விளைவுக்கு அவசரப்படாதிருப்பதாகும். நாம் செய்யும் காரியங்களால் ஏற்படும் எதிர்ப்புகளைப் பொறுத்துக் கொள்வதாகும்.

உதாரணமாக, ஒரு மாநாட்டை நடத்தினால் அதனால் எவ்வளவு மக்களை வென்றெடுத்துள்ளோம்; வேறு என்னென்ன நன்மைகள் விளைந்துள்ளன என பார்ப்பது அவசியம். ஆனால் நடத்தி முடித்த மறு நாளே, “அது அப்படி நடக்கவில்லை; இது இப்படி நடக்கவில்லை’ என அதில் நடந்த குறைகளை பெரிதுபடுத்திப் பேசி, நன்மைகளை இருட்டடிப்புச் செய்வது பொறுமையாகாது.

ஒரு கிராமத்தில் அழைப்பு பணியை, சீர்திருத்தப் பணியை மேற்கொள்வோர் மக்களின் எதிர்ப்புகளைப் பார்க்கும் போது, அந்த மக்கள் விளங்காமல் செய்வது போலவே பதிலுக்கு நாமும் செய்ய வேண்டும் என்று நினைப்பது பொறுமையான செயல் அல்ல!

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் பிரச்சாரத்தைத் தொடங்கி 13 ஆண்டுகள் பட்ட கஷ்டங்கள், கல்லெறி முதல் கொலை முயற்சி வரை! அவர்கள் அத்தனைக்கும் பொறுமை! பொறுமை! பொறுமையை மட்டுமே பதிலாகத் தந்தார்கள்.

வீரம்

தைரியம் இல்லாத மனிதர்கள் நிர்வாகப் பொறுப்புகளுக்கு வருவது மிகவும் ஆபத்தானது.

“எதிரிகளின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்தியதாலேயே எனக்கு வெற்றி கிடைத்தது” என நபி (ஸல்) கூறினார்கள். (புகாரி)

நாம் பயந்தால் நமது எதிரிகளுக்கு வெற்றியை நாமே கொடுத்து விடுவோம். உண்மையை, சத்தியத்தைப் பேசும் போது, எடுத்துரைக்கும் போது நாள்பட்ட புண்களுக்கு மருந்து போடுவது போல் வலிக்கும். ஆனால் மருந்து போடாவிட்டால் புண் பெரிதாகும்.

எதிர்ப்புகள், விமர்சனங்கள், தாக்குதல்கள் ஆகியவற்றைக் கண்டு பயந்து நமது பணிகளை அத்துடன் நிறுத்தி விட்டு, “ஊரோடு ஒத்துப் போவோம்’ என கோழைத்தனத்திற்கு புதிய வியாக்கியானம் பேசக்கூடாது.

எதிர்ப்புகள், அச்சுறுத்தல்கள் பாதிக்காமல் அடுத்த கட்டங்களை யோசித்து முடிவு செய்து நடைமுறைப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். வீரம் என்பது விளையும் விதை!

உண்மை எதுவென்றால் எல்லா நேரங்களிலும் நமக்கு அல்லாஹ்வின் உதவி உள்ளது; அவன் நம்மோடு இருக்கின்றான் என்ற நம்பிக்கை வேண்டும்.

எங்கள் இறைவா! அவன் (ஃபிர்அவ்ன்) எங்களுக்குத் தீங்கிழைப்பான்; அல்லது அவன் எங்கள் மீது வரம்பு மீறுவான்; என அஞ்சுகிறோம்என்று (மூஸா, ஹாரூன் ஆகிய) இருவரும் கூறினர். “அஞ்சாதீர்கள்! நான் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் உங்களுடன் இருக்கிறேன்என்று அவன் கூறினான்.

அல்குர்ஆன் 20:45, 46

விவேகம்

உறுதி, வீரம், பொறுமை போன்ற அத்தனை ஆற்றல்களும் “முட்டாள்’ என்ற பெயரை வாங்கித் தந்து விடாமல் இருப்பதற்கு விவேகம் மிகவும் முக்கியம். எதை முதலில் செய்ய வேண்டும்? எதை எங்கு செய்ய வேண்டும்? எப்போது பொங்கி எழ வேண்டும்? எப்போது பின் வாங்க வேண்டும்? என சூழ்நிலை, நேரத்தைப் பொறுத்துச் செய்யப்படும் முடிவு தான் விவேகம்.

நபி (ஸல்) அவர்கள் ஹுதைபியாவில் நடந்து கொண்ட விதத்தைப் பாருங்கள். அவர்கள் மக்கத்துக் காபிர்களுக்குப் பணிந்து போய்விட்டார்கள் என நபித்தோழர்கள் எல்லாம் எண்ணினார்கள். ஆனால் அவர்களின் தூர நோக்குப் பார்வையை அல்லாஹ், “மகத்தான வெற்றி’ என்று பாராட்டுகின்றான்.

(முஹம்மதே!) உமது பாவத்தில் முந்தியதையும் பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும், தெளிவான ஒரு வெற்றியை உமக்கு நாம் அளித்தோம்.

அல்குர்ஆன் 48:1-3

புதுமைகளைப் பயன்படுத்துதல்

இன்றைய அறிவியல் வளர்ச்சி எல்லா துறைகளிலும் நாள்தோறும் பல மாற்றங்களைப் புதுமைகளைக் கண்டு வருகின்றது அவற்றை முறையாகக் கற்று, பயன்படுத்தாவிட்டால் நாம் பின்தங்கி விடுவோம். நமது வளர்ச்சி, எந்தத் துறையிலும் எங்கும் நின்று விடக்கூடாது.

இஸ்லாம், வணக்க வழிபாடுகளில் புதுமைகள் புகுவதை இரும்புக் கரம் கொண்டு தடுக்கும். ஆனால் வாழ்க்கை வசதிகளில் புதுமைகளை உடனே ஏற்றுக் கொள்ள ஒரு மார்க்கம் வழிகாட்டுகின்றது என்றால் அது இஸ்லாம் மட்டுமே!

நடத்தைகள், நிர்வாகவியல், சமூகவியல், அரசியல், அறிவியல், கணிணி, இணைய தளங்கள், தொடர்பு முறைகள் போன்றவற்றைத் தெரிந்து கொள்வதோடு அவற்றின் சமீபத்திய வளர்ச்சிகளை உடனே கற்றுக் கொள்ள வேண்டும். இது தொடர வேண்டும்.

அதே சமயம் இதில் வீண் விரயம், பகட்டு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

————————————————————————————————————————————————

ஹதீஸ் கலை ஆய்வு                 தொடர்: 14

மதம் மாறியவனைக் கொல்ல வேண்டுமா?

மதம் மாறியவனைக் கொல்லுமாறு மார்க்கம் சொல்லவில்லை என்பதற்குப் பல குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டினோம். எதிர் கருத்தைக் கொண்டவர்கள் இவற்றுக்குக் கூறும் மறுப்புகளுக்கான விளக்கத்தையும், “எதிர்வாதங்களும் முறையான பதில்களும்’ என்ற தலைப்பின் கீழ் கண்டோம்.

மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்பதற்கு வேறு சில ஆதாரங்களையும் எடுத்துக் காட்டுகிறார்கள். அவற்றுக்கான விளக்கத்தைப் பார்த்து வருகிறோம்.

ஆதாரம்: 2

மதம் மாறியவன் யாராக இருந்தாலும் அவனைக் கொல்ல வேண்டும் என்பதற்குப் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று உறுதிமொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை. அவை:

  1. திருமணமானவன் விபச்சாரம் செய்வது.
  2. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்குப் பதிலாக கொலை செய்வது.
  3. ஜமாஅத் எனும் சமூகக் கூட்டமைப்பை விட்டு வெளியேறி தமது மார்க்கத்தை விட்டு விட்டவன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: முஸ்லிம் 3465

மார்க்கத்தை விட்டுவிட்டவனைக் கொல்ல வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் மதம் மாறிகளைக் கொல்ல வேண்டும் என்று கூறுகிறார்கள்.

நமது விளக்கம்

இஸ்லாத்தை விட்டு விட்டவன் என்பதுடன் ஜமாஅத் எனும் சமூகக் கூட்டமைப்பை விட்டு வெளியேறியவன் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் இணைத்துச் சொல்கிறார்கள்.

அரசாங்கத்திற்குக் கட்டுப்படாமல் அதற்கு எதிராகக் கிளம்புபவன் தான் கொல்லப்படுவான் என்பதே இதன் பொருள். ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இதே மாதிரியான ஹதீஸ் இதை தெள்ளத் தெளிவாக விளக்குகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று தன்மைகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலே தவிர (வேறெந்த நிலையிலும்) முஸ்லிமான மனிதரைக் கொல்வது ஆகுமானதல்ல. திருமணம் முடித்த பிறகும் விபச்சாரம் செய்தவன் கல்லெறிந்து கொல்லப்படுவான். ஒருவரை வேண்டுமென்றே கொலை செய்தவன் கொல்லப்படுவான். இஸ்லாத்தை விட்டும் வெளியேறி அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்தவன் கொல்லப்படுவான் அல்லது சிலுவையில் ஏற்றப்படுவான் அல்லது நாடு கடத்தப்படுவான்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: நஸயீ 3980

ஆதாரம்: 3

மதம் மாறியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கொல்ல வேண்டும் என்பதற்குப் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

அபூ மூஸா (ரலி) அவர்கள் கூறியதாவது: (யூதராயிருந்த) ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டுப் பின்பு யூதராக மாறி விட்டார். அந்த மனிதர் என்னிடம் இருந்த போது முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் வந்தார்கள். இவருக்கு என்ன? என்று முஆத் கேட்டார்கள். நான், “இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டு யூதராகி விட்டார்என்று சொன்னேன். முஆத் (ரலி) அவர்கள், “நான் இவருக்கு மரண தண்டனை அளிக்காதவரை அமர மாட்டேன். இது தான் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் தீர்ப்பாகும்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

நூல்: புகாரி 7157

மதம் மாறிய யூதரைக் கொல்ல வேண்டும். இது தான் அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் தீர்ப்பு என்று முஆத் (ரலி) அவர்கள் கூறுவதால் மதம் மாறியவனைக் கொல்ல வேண்டும் என்று எதிர்த்தரப்பினர் கூறுகிறார்கள்.

நமது விளக்கம்

முஆத் (ரலி) அவர்கள் குர்ஆனுடைய ஒரு வசனத்தை அல்லது நபி (ஸல்) அவர்களுடைய ஹதீஸைச் சுட்டிக்காட்டி இது அல்லாஹ்வுடைய தீர்ப்பு, இன்னும் அவனது தூதருடைய தீர்ப்பு என்று கூறவில்லை. மாறாக எந்த ஆதாரத்தையும் காட்டாமல் பொதுவாகவே இப்படிச் சொல்கிறார்கள்.

அல்லாஹ்வுடைய தீர்ப்பு என்றால் எந்த வசனத்தில் அல்லாஹ் மதம் மாறியவர்களைக் கொல்லுமாறு கட்டளையிட்டுள்ளான்? குர்ஆனில் அப்படி ஒரு கட்டளை இல்லவே இல்லை. மதம் மாறியவர்களைக் கொல்வது ரசூலுடைய தீர்ப்பு என்றால் ரசூல் (ஸல்) அவர்கள் எந்த ஹதீஸில் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்? நபி (ஸல்) அவர்கள் மதம் மாறியவர்களைக் கொல்லுமாறு சொல்லவில்லை என்பதை மேலே நிரூபித்திருக்கிறோம்.

ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்கள் கூறாததை அவர்கள் பெயரால் இட்டுக்கட்ட மாட்டார்கள் என்பதில் எள்ளளவும் நமக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் ஒரு வசனத்தையோ அல்லது ஹதீஸையோ புரிந்து கொள்வதில் மனிதன் என்ற அடிப்படையில் தவறு அவர்களிடம் வர வாய்ப்புண்டு. அவர்கள் எந்த ஆதாரத்திலிருந்து இதை விளங்கினார்களோ அந்த ஆதாரத்திலிருந்து முறையாக இவர்கள் தீர்ப்பளித்திருக்கவும் வாய்ப்புள்ளது. புரிந்து கொள்வதில் தவறு ஏற்பட்டு தவறாக தீர்ப்பளிக்கவும் வாய்ப்புள்ளது.

ஏனென்றால் இச்சட்டத்தை நேரடியாக நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதாக முஆத் (ரலி) அவர்கள் சொல்லவில்லை. அல்லது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு யாருக்காவது தீர்ப்பளித்ததைக் கண்டதாகவும் அவர்கள் கூறவில்லை. ஒரு ஹதீஸிலிருந்து தானாக விளங்கியும் இவ்வாறு கூற முடியும்.

சரியாகவும், தவறாகவும் கூறியிருக்க வாய்ப்பு இருக்கும் போது இதைக் கொண்டு வந்து நிறுத்தி, ஒருவரைக் கொல்வது சம்பந்தமான விஷயத்தை நிறுவக் கூடாது.

எனவே முஆத் (ரலி) அவர்கள், “இது அல்லாஹ் மற்றும் நபி (ஸல்) தீர்ப்பு’ என்று எந்த ஆதாரத்தை வைத்துச் சொன்னார்களோ அந்த ஆதாரம் நமக்குக் காண்பிக்கப்பட்ட பிறகு தான் இது உண்மையில் அல்லாஹ்வுடைய தீர்ப்பா? இல்லையா? என்று முடிவு செய்ய முடியும்.

ஒரு பிரச்சனைக்குச் சரியான முடிவைக் காண்பதாக இருந்தால் அது தொடர்பாக வரும் அனைத்து ஆதாரங்களையும் ஒன்று சேர்த்துத் தான் முடிவைக் காண வேண்டும். மதம் மாறியவர்களாக இருந்தாலும் அவர்கள் இஸ்லாமிய விரோதிகளாக மாறும் போது தான் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பதைப் பல ஹதீஸ்களின் மூலம் முன்பே நிரூபித்தோம்.

எதிர் தரப்பினர் எடுத்துக் காட்டிய ஹதீஸில் யூதன் மதம் மாறி இஸ்லாத்திற்கு எதிராகச் சென்றவன் என்றோ அல்லது எதிரி அல்ல என்றோ இடம் பெறவில்லை. பொதுவாக மதம் மாறியவன் என்று தான் வருகிறது. இஸ்லாமிய விரோதியாக மாறியவனைத் தான் கொல்ல வேண்டும் என்று பல ஹதீஸ்கள் கூறுவதால் இந்த யூதன் இஸ்லாத்திற்கு விரோதமாகச் சென்றதால் முஆத் (ரலி) அவர்கள் கொல்லும் படி கூறினார்கள் என்றே புரிந்து கொள்ள வேண்டும். இது தான் ஹதீஸையும், நபித்தோழர்களின் செயலையும் இணைத்து விளங்கியதாக அமையும்.

நடைமுறை சிக்கல்கள்

இச்சட்டம் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமாக இருப்பதுடன் பல நடைமுறைச் சிக்கல்களையும் தோற்றுவிக்கிறது.

  1. மதம் மாறியவனைக் கொல்ல வேண்டும் என்று நாம் கூறினால் இஸ்லாத்திற்கு வந்தவன் இஸ்லாத்தைப் பற்றிச் சிந்திக்கப் பயப்படுவான். அவனுக்கு ஏற்படும் சந்தேகங்களை வெளிக்கொணர அஞ்சுவான். ஆனால் இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை என்று கூறினால் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தைக் கூறி விளங்கிக் கொள்ள முயற்சிப்பான். அவன் மேலும் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கு இம்முறை உதவும். இல்லையென்றால் இந்தச் சந்தேகங்கள் அவனுக்கு மிகைத்து இறுதியில் மதம் மாறுகின்ற நிலைக்குத் தள்ளப்படுவான்.
  2. அல்லாஹ்வுடைய இந்த மார்க்கம் உண்மையானதென்றும், தெளிவானதென்றும், எல்லாக் கேள்விகளுக்கும் சரியான பதிலைத் தரக் கூடியதென்றும் நாம் நம்பும் போது ஏன் இப்படி ஒரு சட்டத்தை இயற்றி நிர்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும்?
  3. மாற்று மதத்திற்கு மாறியவனைக் கொலை செய்வது மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தாமல் மதவெறியைத் தான் உருவாக்கும். முஸ்லிம்களுடன் பழக்கம் வைப்பதை மக்கள் விட்டுவிட்டு இஸ்லாத்தின் எதிரிகளோடு இணைந்து கொள்வார்கள்.
  4. இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை என்று கூறினால் தான் இஸ்லாத்தை விளங்காத மக்கள் கூட விளங்கிக் கொள்வதற்காக இஸ்லாத்தில் இணைந்து கொள்வார்கள். இதன் மூலம் அவர்கள் உண்மையான முஸ்லிமாவதற்குரிய வாய்ப்பு ஏற்படும். மதம் மாறியவரைக் கொலை செய்வோம் என்றால் விளங்க நினைப்பவர்கள் கூட பயந்து கொண்டு இதில் இணைய மறுத்து விடுவார்கள்.
  5. இதை இஸ்லாமியச் சட்டம் என்றால் உலக மக்களிடையே இஸ்லாம் கொடூரமான மார்க்கம் என்ற தவறான கொள்கை எளிதாகப் பரவி விடும். இன்னும் இஸ்லாம் தவறான கொள்கையுள்ள மார்க்கம் என்பதால் தான் சவாலை எதிர் கொள்ளாமல் நிர்ப்பந்தப்படுத்துகிறது என்ற எண்ணமும் அவர்களுடைய மனதில் எழும்.
  6. இஸ்லாம் ஒளிவு மறைவு இல்லாத மார்க்கம் என்பதால் மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்று கூறுபவர்கள் மேடை அமைத்து இச்சட்டத்தைப் பகிரங்கப்படுத்துவார்களா? பகிரங்கப்படுத்த முடியாத ஒரு சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் மக்களுக்குச் சொல்வார்களா?
  7. இஸ்லாத்தை விரும்பாதவர்களை இஸ்லாமிய சமுதாயத்தில் நிர்பந்தப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தால் அவன் இச்சமுதாயத்திற்குத் தீங்கு செய்ய நினைப்பானே தவிர நன்மை செய்ய நாட மாட்டான்.
  8. இஸ்லாத்தை விட்டு யாரும் வெளியேறக் கூடாது. அப்படி வெளியேறினால் கொல்லப்படுவார்கள் என்று ஒரு புறம் நாம் கூறிக் கொண்டு, இன்னொரு புறம் மாற்று மதத்தினரை நோக்கி, “உங்கள் மார்க்கத்தை விட்டுவிட்டு எங்கள் மார்க்கத்தில் இணைந்து கொள்ளுங்கள்’ என்று கூறுவது நம்மை மத வெறி பிடித்தவர்களாக மக்கள் மன்றத்தில் காட்டும். இது நம்முடைய அழைப்புப் பணிக்குப் பெரும் முட்டுக்கட்டையாக அமையும்.
  9. இஸ்லாம் அழகிய மார்க்கம் என்று நாம் அனைவரும் ஒத்துக் கொண்டுள்ளோம். மதம் மாறியவனைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது என்றால் இச்சட்டம் அறிவுப்பூர்வமானது, அழகானது என்பதை நிரூபிக்கும் கடமை இச்சட்டத்தைக் கூறுபவர்களுக்கு உண்டு. இவர்கள் இந்தச் சட்டத்தை அழகானது அறிவுப்பூர்வமானது என்று எப்படி நிரூபிப்பார்கள்?

————————————————————————————————————————————————

ஷாகுல்ஹமீது மவ்லிது ஓர் ஆய்வு

தமிழக முஸ்லிம்களிலுள்ள மவ்லிது அபிமானிகளின் இதயத்தில் மூன்றாவது இடம் ஷாகுல் ஹமீது மவ்லிதுக்கு உள்ளது. நாகூரிலும் இலங்கையிலும் அடக்கம் செய்யப்பட்டதாக நம்பப்படுகின்ற அப்துல் காதிர் எனும் ஷாகுல் ஹமீதைப் புகழ்ந்து எழுதப்பட்டதாகக் கூறப்படும் இந்த மவ்லிதிலும் ஏராளமான அபத்தங்கள் உள்ளன.

சுப்ஹான மவ்லிது, முஹ்யித்தீன் மவ்லிது போலவே இஸ்லாத்திற்கு முரணான ஏராளமான கருத்துக்கள் இந்த மவ்லிதிலும் காணப்படுகின்றன.

இதிலுள்ள அபத்தங்களை அறியாமல் அப்பாவி முஸ்லிம்கள் இதை பக்திப் பரவசத்துடன் ஓதி வருகின்றனர். எனவே இந்த மவ்லிதையும் குர்ஆன், ஹதீஸ் ஒளியில் ஆராய்ந்து அம்பலப்படுத்தவே இந்தக் கட்டுரையை வாசகர்கள் முன்வைக்கின்றோம்.

ஷாகுல் ஹமீதைப் புகழ்வதாக எண்ணிக் கொண்டு அவரை இழிவுபடுத்துகின்ற ஏராளமான கதைகள், கப்ஸாக்கள் இந்த மவ்லிதில் உள்ளன. மேலும் இஸ்லாத்திற்கு முரணான கருத்துக்களும், இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் கருத்துக்களும் இடையிடையே புகுத்தப்பட்டுள்ளன.

இந்த மவ்லிதில் கூறப்பட்டுள்ள கதைகளை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

வெற்றிலைக் குழந்தை?

மலட்டுத் தன்மையுடைய நூருத்தீன் என்பவருக்கு வெற்றிலை எச்சிலால் நான்கு ஆண்மக்களை அவர் வழங்கியது அவரது அற்புதங்களில் ஒன்றாகும். அவர்களில் யூசுப் என்ற தலைமகனை தன்னிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்ற அடிப்படையில் இவ்வாறு செய்தனர்.

இது ஷாகுல் ஹமீது மவ்லிதில் உள்ள ஒரு கதை.

இந்தக் கதை குறித்து, மவ்லிதின் ஹிகாயத் எனும் உரைநடைப் பகுதியில் கீழ்க்கண்டவாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஷாஹுல் ஹமீது அவர்கள் ஒப்புக் கொள்ளப்பட்ட  ஹஜ்ஜை நாடிப் புறப்பட்டு லாகூர் எனும் ஊரை அடைந்தார்கள். அங்கே அவர்களை தலைசிறந்த முஃப்தி பெரியார் நூருத்தீன் அவர்கள் சந்தித்தார்கள். ஷாஹுல் ஹமீது அவர்களிடம் தமக்கு ஒரு குழந்தை வேண்டுமென வேண்டினார்கள். அதற்கு ஷாஹுல் ஹமீது அவர்கள் “காலம் சென்ற எனது மூத்த சகோதரர் யூசுப் அவர்களின் பெயரை முதல் குழந்தைக்குச் சூட்டி மறுப்போ கவலையோ இன்றி அக்குழந்தையை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அக்குழந்தையை எனது மகனாக நான் ஆக்கிக் கொள்வேன். அக்குழந்தை எனக்குக் காணிக்கையாக வழங்கப்படும் அனைத்துக்கும் வாரிசாகத் திகழ்வார்” என்று நிபந்தனையிட்டார்கள். நூருத்தீன் இந்த நிபந்தனையை ஒப்புக் கொண்டபின் வெற்றிலை எச்சிலில் சிறிதளவு அவருக்குக் கொடுத்தார்கள். ஷாஹுல் ஹமீதின் மகிமையால் அல்லாஹ் அவருக்கு நான்கு ஆண்மக்களையும் பெண்மக்களையும் அளித்தான்.

இது ஹிகாயத் எனும் உரைநடைப் பகுதியில் கூறப்பட்டுள்ள கதை விளக்கம்.

இதில் எவ்வளவு அபத்தங்கள் உள்ளன என்று பார்ப்போம்.

லாகூரில் ஷைக் நூருத்தீன் என்பவர் முப்தியாக இருந்தாராம். அவருக்குக் குழந்தை இல்லாததால் ஷாகுல் ஹமீதிடம் குழந்தை வேண்டினாராம்.

மாபெரும் முப்தியாக இருந்தவருக்கு யாரிடத்தில் குழந்தையைக் கேட்க வேண்டும் என்ற அறிவு கூட இல்லை. பிள்ளைப் பேறு பாக்கியத்தை எவருக்காவது யாராலும் கொடுக்க முடியுமா? இதுபற்றிக் குர்ஆன் கூறுவதென்ன?

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான்.

அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.

அல்குர்ஆன் 42:49, 50

குழந்தைகளை வழங்கும் அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரியது என்று இங்கே தெளிவுபடுத்துகிறான்.

குழந்தை வழங்கும் ஆற்றலை அல்லாஹ் யாருக்கேனும் வழங்குவதாக இருந்தால் நிச்சயமாக அந்த ஆற்றலை நபிமார்களுக்கு வழங்கியிருப்பான். ஆனால் எத்தனையோ நபிமார்கள் குழந்தைப் பாக்கியம் இல்லாதிருந்து இறைவனிடமே இறைஞ்சி அந்தப் பாக்கியத்தைப் பெற்றுள்ளனர். தமக்கே கூட அவர்களால் குழந்தையை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை.

(இது) உமது இறைவன் தனது அடியார் ஸக்கரிய்யாவுக்கு செய்த அருளைக் கூறுதல்! அவர் தமது இறைவனை இரகசியமாக அழைத்துப் பிரார்த்தித்தார். “என் இறைவா! என் எலும்பு பலவீனமடைந்து விட்டது. தலையும் நரையால் மின்னுகிறது. என் இறைவா! உன்னிடம் பிரார்த்தித்ததில் நான் துர்ப்பாக்கியசாலியாக இருந்ததில்லை. எனக்குப் பின் உறவினர்கள் குறித்து நான் அஞ்சுகிறேன். என் மனைவியும் பிள்ளைப்பேறு அற்றவளாக இருக்கிறார். எனவே ஒரு பொறுப்பாளரை நீ எனக்கு வழங்குவாயாக! அவர் எனக்கும், யஃகூபின் குடும்பத்தாருக்கும் வாரிசாவார். என் இறைவா! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராக ஆக்குவாயாக!என்றார்.

அல்குர்ஆன் 19:2-6

தள்ளாத வயது வரை குழந்தை பாக்கியம் இல்லாதிருந்தும் ஸக்கரிய்யா நபியவர்கள் தமக்காக ஒரு வாரிசை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை. படைத்த இறைவனிடமே இறைஞ்சியுள்ளனர்.

3:38, 37:100, 21:89,90 ஆகிய வசனங்களிலும் ஸக்கரியா (அலை) அவர்கள் குழந்தை பாக்கியத்துக்காக இறைவனிடம் இறைஞ்சியதைப் பற்றிக் குறிப்பிடுகின்றான்.

இறைவனுக்கு மட்டுமே உரிய இந்தத் தனி அதிகாரம் ஒரு மனிதருக்கு உண்டு என்று ஒரு முப்தி நம்பினாராம். ஷாகுல் ஹமீதிடம் முறையிட்டாராம். இதை அறிவுடைய எவரேனும் நம்ப முடியுமா? இஸ்லாத்தின் அடிப்படைக்கு முரணாக, மனிதனைக் கடவுளாக்கியவர் முப்தியாக இருக்க முடியுமா?

முப்திக்குத் தான் மார்க்கத்தைப் பற்றி அறிவு இல்லை. போகட்டும்! போலி முப்தியாக இருந்திருப்பார் என்று வைத்துக் கொள்வோம்.

இறைவனின் நெருக்கத்தைப் பெற்ற மகான் ஷாகுல் ஹமீது, குர்ஆனைப் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைகளைப் பற்றியும் அறிந்தவராக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்?

“முப்தியே! மனிதனிடம் குழந்தை பாக்கியத்தைக் கேட்க முடியாது. எந்த மனிதனுக்கும் எந்த மனிதனும் இத்தகைய பாக்கியத்தைக் கொடுக்க முடியாது” என்று போதனை செய்திருக்க வேண்டாமா? நாம் எடுத்துக் காட்டிய வசனங்களை அந்தப் போலி முப்திக்கு எடுத்துக் காட்டி இறைவனிடம் இறைஞ்சுமாறு வழிகாட்டியிருக்கலாம் அல்லவா?

தாமே இறைவன் போலவும், தாம் நினைத்தவருக்கு நினைத்த போது குழந்தையைக் கொடுக்க முடியும் என்பது போன்றும் ஒரு பெரியார் நடந்திருப்பாரா? இப்படி ஏராளமான கேள்விகளை இந்த மவ்லிதுப் பாடல் எழுப்புகின்றது.

அது மட்டுமின்றி முதலில் ஆண் குழந்தை பிறக்கும் என்பதையும் முன்கூட்டியே அறிந்து கொள்கிறார். தனது மூத்த சகோதரர் பெயரை முதல் ஆண் குழந்தைக்குச் சூட்ட வேண்டும் என்று நிபந்தனையிடுகிறார்.

உண்மையிலேயே ஷாகுல் ஹமீது குழந்தை வரம் கொடுக்கும் ஆற்றலுடையவர் என்று ஒரு வாதத்துக்காக ஏற்றுக் கொள்வோம்.

அனைத்தையும் துறந்தவர் எனக் கூறப்படும் ஞானி ஒருவர் தமது சகோதரனின் பெயரைத் தான் அக்குழந்தைக்குச் சூட்ட வேண்டும் என்ற நிபந்தனையில் ஒரு வியாபாரியின் பேரம் பேசும் மனப்பான்மை தான் வெளிப்படுகின்றதே தவிர ஒரு ஞானியின் மனப்பக்குவம் அதில் அறவே இல்லை.

மேலும் முப்தி நூருத்தீன் தனக்காக ஒரு குழந்தை வேண்டும் என்று தான் கோரினார். இவரோ குழந்தையையும் கொடுத்து விட்டு அதைத் தனக்கு மகனாகத் தந்து விட வேண்டும் என்கிறார். இங்கேயும் வியாபாரியைப் போன்று பேரம் பேசுகின்றார்.

குழந்தை வேண்டுமென்றால் இவர் இஸ்லாம் காட்டும் வழியில் மணமுடித்து குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமே தவிர இன்னொருவரின் பிள்ளையைத் தன் பிள்ளையாக்குவது என்ன நியாயம்?

வளர்ப்பு மகன் என்ற போலித் தத்துவத்தை இஸ்லாம் முழுமையாகத் தகர்த்தெறிந்து விட்டது என்ற விபரம் கூடத் தெரியாதவராக ஷாகுல் ஹமீது இந்த மவ்லிதில் சித்தரிக்கப்படுகிறார்.

உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை.

அல்குர்ஆன் 33:4

அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்! அதுவே அல்லாஹ்விடம் நீதியானது.

அல்குர்ஆன் 33:5

என்றெல்லாம் இறைவன் தன் திருமறையில் தெளிவாகப் பிரகடனம் செய்கிறான்.

இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் யாருக்கோ பிறந்த குழந்தையைத் தனது குழந்தை என்று உரிமை கொண்டாடுகிறார்.

ஒருவர் யாருடைய குழந்தையையோ எடுத்து வளர்த்தால் அந்தக் குழந்தை வளர்த்தவரின் வாரிசாக முடியாது. இதுவும் இஸ்லாத்தின் கருத்து வேறுபாடில்லாத சட்டங்களில் ஒன்று.

இவருக்குக் கிடைக்கும் காணிக்கைகளுக்கு யாருடைய குழந்தையையோ வாரிசு என்று கூறுகிறார். குர்ஆன் பற்றிய அறியாமையை வெளிப்படுத்துகிறார்.

மேலும் முப்தி நூருத்தீன் அறியாமையினால் இவரிடம் வந்து குழந்தையைக் கேட்கிறார். இவர் என்ன செய்திருக்க வேண்டும்? அல்லாஹ்விடம் அவருக்காக துஆச் செய்திருக்க வேண்டும்.

இந்த வழியையெல்லாம் அவர் எண்ணிப் பார்க்கவில்லை. வெற்றிலையை மென்று அதை முப்தியிடம் கொடுக்கிறார். அதாவது குடுகுடுப்பைக்காரர்கள், மாயாஜாலப் பேர்வழிகள் ஆகியோரின் வழிமுறையை இவர் கடைப்பிடிக்கின்றார்.

வெற்றிலைக்கும் குழந்தைக்கும் என்ன சம்பந்தம்?

இப்படி ஏராளமான அபத்தங்கள்! ஷாகுல் ஹமீதைப் புகழ்வதாக எண்ணிக் கொண்டு அவரை இகழும் வகையில் இந்தக் கதை அமைந்துள்ளது.

ஒரு பிள்ளை! இரு தந்தையர்!

ஷைக் நூருத்தீன் என்பவருக்கு வெற்றிலையை மென்றுக் கொடுத்து பிள்ளை வரம் கொடுத்த அந்தக் கதையின் தொடராக அடுத்து ஒரு சம்பவம் கூறப்படுகின்றது.

யூசுப் ஏழு வயதை அடைந்த போது தன்னந்தனியாக செருப்பணியாமல் கால்நடையாக “ஸன்ஆ” எனும் நகருக்கு வந்தார். இதையறிந்த ஷாஹுல் ஹமீது அவர்கள் தம்முடைய மாணவர்கள் சிலரை அவருக்கு பயணத்தோழர்களாக இருக்க அனுப்பி வைத்தார்கள். அவர் வந்து சேர்ந்ததும் “கண் குளிர்ச்சியே! நீர் தான் எனது கலீபாவாவீர்” எனக் கூறினார்கள்.

இதில் கூறப்படுவது என்னவென்பதை விளங்காதவர்கள், ஹிகாயத் எனப்படும் உரைநடை விளக்கத்தைப் பாருங்கள்.

 (ஷாஹுல் ஹமீத் அவர்களின் வெற்றிலை வரத்தால்) யூசுப் பிறந்து ஏழு வயதை அடைந்தார். அப்போது “யூசுபே உன்மேல் அன்பு வைத்துள்ள, உனது வருகைக்காக மஸ்ஜிதில் ஹராமில் காத்திருக்கின்ற உனது உண்மையான தந்தையிடம் போய்ச் சேர்ந்து கொள்” என்று ஒரு அசரீரியைக் கேட்டார். உடனே தம் தந்தையிடம் வந்து, “எனது உண்மையான தந்தை யார்?” என்று கேட்டார். இதைக்கேட்டு தந்தை வியந்தார். திகைத்தார். சிந்தித்தார். பின்னர் நினைவு கூர்ந்தார். “இந்த இரகசியமான செய்தியை உனக்கு கூறியவர் யார்?” என்று கேட்டார். “யாவற்றையும் அறிந்த அல்லாஹ்தான் எனக்கு அறிவித்துக் கொடுத்தான்” என்று யூசுப் கூறினார். “உனது உயிருக்குரிய தந்தை பைதுல் ஹராமுக்குப் பயணமாகிவிட்டார்” எனக் கூறினார்.

அதற்கு யூசுப், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரிடம் கால்நடையாகவே நடந்து செல்வேன். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அவரைச் சந்திப்பேன்” எனக் கூறினார். ஆயினும் அவர் தடை செய்யப்பட்டார். “நான் புறப்பட்டே ஆகவேண்டும்” என்று  கூறிவிட்டுத் தனியாக நடக்கலானார். அதன் பிறகு தன் குடும்பத்தாரிடம் திரும்பிப் பார்க்கவில்லை. ஸன்ஆ கடற்கரையை அடைந்த போது ஷாஹுல் ஹமீத் இவரது வருகையைப் பற்றித் தம் சகாக்களுக்குக் கூறினார். அவரை வரவேற்பதற்காகத் தமது தோழர்களில் சிலரை அனுப்பினார். வந்து சேர்ந்ததும் அவரை வாழ்த்தி வரவேற்று மரியாதை செலுத்தினார். “நீர் தான் எனது உண்மையான மகன். எனது கலீபாக்களில் பெரியவரும் நீர்தான். மேலும் எனது நேர்ச்சை செய்யப்படும் பொருட்களுக்கு தலைமுறை தலைமுறையாக நீரே வாரிசாவீர்” என்று கூறினார்.

இதுதான் கதை! இந்தக் கதையில் தான் எத்தனை அபத்தம் என்று பாருங்கள்!

“உனது உண்மையான தந்தையுடன் சேர்ந்து கொள்” என்று இறைவன் யூசுபிடம் பேசியதாகக் கூறப்படுகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இறைச் செய்தி வருவது நின்று விட்டது என்பதில் எந்த முஸ்லிமுக்கும் இரண்டாவது கருத்து இல்லை. அவ்வாறு இறைச் செய்தி வருவதாகக் கூறிய மிர்ஸா குலாம் என்பவனைப் பொய்யன், காஃபிர் என்று உலம் முழுதும் உள்ள முஸ்லிம்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

முஸ்லிம்களின் இந்த நம்பிக்கைக்கு மாற்றமாக யூசுப் என்பாருக்கு இறைவனிடமிருந்து செய்தி வந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

அல்லாஹ்விடமிருந்து இவருக்கு அப்படி என்ன செய்தி வந்துள்ளது?

“உனது உண்மையான தந்தையிடம் போய்ச் சேர்ந்து கொள்” என்பது தான் அந்தச் செய்தி!

“பெற்றெடுத்தவர் மட்டுமே தந்தையாக இருக்க முடியும்; பெற்றவர் அல்லாத எவரையும் தந்தை என்று அழைக்கக் கூடாது’ என திருக்குர்ஆன் அழுத்தம் திருத்தமாகக் கூறுவதை மேலே குறிப்பிட்டுள்ளோம்.

திருக்குர்ஆனில் அல்லாஹ் எதைத் தடை செய்துள்ளானோ அதற்கு மாற்றமாக ஒரு செய்தியை இறைவன் கூறுவானா? குர்ஆனுக்கு மாற்றமாக உள்ள ஒரு கருத்து அசரீரியாகக் கேட்டால் அது ஷைத்தானிடமிருந்து வந்திருக்க முடியுமே தவிர நிச்சயமாக இறைவனிடமிருந்து வந்திருக்க முடியாது.

பெற்ற தந்தையிடம் வந்து, “என் உண்மையான தந்தை யார்? அவர் எங்கே?” என்று யூசுப், தன் தாயின் கற்பின் மீது களங்கம் ஏற்படுத்தும் இந்தக் கேள்வியைக் கேட்கிறார். பெற்ற தந்தைக்கு இதைவிடக் கேவலம் வேறு என்ன இருக்க முடியும்?

உமது உண்மையான தந்தை இன்னார் தான்; அவர் மஸ்ஜிதுல் ஹராமில் காத்துக் கொண்டிருக்கிறார் என்று அல்லாஹ்வே இவரிடம் தெரிவித்த பின், என்னுடைய தந்தை யார்? என்று இவர் எதற்காகப் போய் கேட்க வேண்டும்? அல்லாஹ் அறிவித்ததில் (?) இவருக்கு நம்பிக்கையில்லையா? மக்காவிலில் மஸ்ஜிதுல் ஹராமில் இருக்கும் ஷாகுல் ஹமீதிடம் போய்ச் சேர்வற்கு சரியான பாதையை அல்லாஹ் சொல்லியிருக்க மாட்டானா?

(பாகிஸ்தானிலுள்ள) லாகூரிலிருந்து மக்கா செல்லும் வழியில் ஸன்ஆ என்ற ஊரை யூசுப் அடைந்தார் எனக் கூறப்படுகிறது. மேலும் கால்நடையாகவே அவர் நடந்து சென்றதாகவும் இந்தக் கதையில் கூறப்படுகின்றது.

ஸன்ஆ என்ற ஊர் ஏமன் நாட்டில் உள்ளது. லாகூரிலிருந்து தரை மார்க்கமாக ஸன்ஆவுக்குச் செல்ல முடியாது. ஏனெனில் இரு ஊர்களுக்கும் மத்தியில் கடல் இருக்கின்றது.

தரை வழியாகச் செல்ல வேண்டுமெனில் லாகூரிலிருந்து ஈரான், இராக் வழியாகத் தான் செல்ல முடியும். இதுவும் சவூதிக்குள் நுழைந்து மக்காவைக் கடந்து தான் ஸன்ஆவுக்குச் செல்ல முடியும்.

கடல் தரையாக மாறி விட்டது என்று சொல்லப் போகிறார்களா? அல்லது கடல் மேல் நடந்து சென்று ஸன்ஆவுக்குப் போனார் என்று கூறப் போகின்றார்களா? அல்லது ஈரான் வழியாக சவூதிக்குள் நுழைந்து, மக்காவுக்குப் போய் அதைக் கடந்து ஸன்ஆவுக்குப் போய் மீண்டும் மக்கா வந்தாரா?

லாகூரிலிருந்து ஸன்ஆ வரை யூசுப் வந்து விட்டார் என்று ஷாகுல் ஹமீது தன் சகாக்களிடம் கூறியுள்ளதாக இந்தக் கதையில் கூறப்பட்டுள்ளது.

இவர் லாகூரிலிருந்து வெற்றிலை வரம் கொடுத்து விட்டு மக்காவுக்குச் சென்றிருக்கிறார். லாகூரிலிருந்து மக்காவுக்கு வரும் வழியை கராமத் அடிப்படையில் அறிய முடியாவிட்டாலும், தாம் சென்ற வழியை அனுபவப்பூர்வமாக அறிந்தாவது, லாகூருக்கும் மக்காவுக்கும் மத்தியில் ஸன்ஆ வராது என்பதை விளங்கியிருக்க வேண்டாமா?

இதிலிருந்து ஷாகுல் ஹமீது லாகூருக்கு வரவில்லை. அவ்வழியாக மக்காவுக்கும் வரவில்லை. பிள்ளை வரமும் கொடுக்கவில்லை. அந்தப் பிள்ளை நடந்தே மக்காவுக்கும் செல்லவில்லை. எல்லாமே கற்பனை தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஷாகுல் ஹமீதிடம் யூசுப் போய்ச் சேர்ந்த போது, “இவர் தான் எனது வாரிசு, எனக்காக நேர்ச்சை செய்யப்படும் பொருட்களுக்கு இவரே வாரிசாவார்” என்று கூறியுள்ளார்.

நேர்ச்சை என்பது ஒரு வணக்கம். எந்த வணக்கத்தையும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்காகவும் செய்யக் கூடாது. இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை!

இந்த அடிப்படைக் கொள்கையை சாதாரண மக்கள் அறியாமல் இருந்தால் பரவாயில்லை. அதில் ஆச்சரியமில்லை. ஆனால் ஒரு மகான், அவ்லியாவுக்கு இந்த அடிப்படை கூடத் தெரியாமல் இருக்குமா? எனக்காகச் செய்யப்படும் நேர்ச்சைகளுக்கு இவர் வாரிசு என்று கூறியிருக்க முடியுமா? மவ்லிது அபிமானிகளே! சிந்தியுங்கள்.

குளத்தங்கரையில் அவ்லியா?

வறுமையைக் காரணம் காட்டி யூசுப் திருமணம் செய்ய மறுத்த போது ஷாகுல் ஹமீது வாக்களித்தார்.

என்னே மகிமை! துன்பங்களைப் போக்க இவரது உதவி எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கவிதையில் கூறப்படுவது விளங்கவில்லையா? உரைநடைப் பகுதியில் இந்தக் கதை விரிவாக விளக்கப்படுகிறது.

ஒருநாள் இரவு யூசுபிடம், “உயர்ந்த குடும்பத்துப் பெண்ணை உனக்கு மணமுடிக்க இருக்கிறேன்” எனறு ஷாகுல் ஹமீது கூறினார். வறுமையைப் பயந்ததால் யூசுப் திருமணம் செய்ய மறுத்து விட்டார். “இரவில் விளக்குக்கு எண்ணையோ திரியோ நமக்கு இல்லாத நிலையில் நான் எப்படித் திருமணம் செய்ய முடியும்?” என்று யூசுப் கேட்டார்.

அதற்கு ஷாகுல் ஹமீது, “நான் நினைத்ததை நீ எவ்வாறு மறுக்கலாம்? எனக்கு மக்கள்களையும் பேரர்களையும் தருவதாக அல்லாஹ் வாக்களித்துள்ளான். பல்வேறு ஊர்களிலிருந்து என் வாசலுக்கு வரும் காணிக்கைகளுக்கு இன்றும் நாளையும் உலக முடிவு நாள் வரையிலும் அவர்கள் வாரிசாக இருப்பார்கள். இறைவன், மகன் மற்றும் பேரப்பிள்ளைகளைத் தருவதாக வாக்களித்தது உன்னையும் உன் சந்ததிகளையும் குறிப்பதாக இருக்கக் கூடும்.

எனவே அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை! அவனே உனக்குப் போதுமானவன். உனது செல்வமோ உழைப்போ அல்ல! எனவே உனது உள்ளம் தடுமாறவோ, திடுக்கிடவோ வேண்டாம். உனது முதுகில் ஆறு ஆண் மக்களும், இரண்டு பெண் மக்களும் உள்ளனர். நீங்கள் வறுமையை அஞ்சினால் அல்லாஹ் தனது அருளால் உங்களைச் செல்வந்தர்களாக ஆக்குவான்.

எனக்காக மக்கள் நேர்ச்சை செய்து வருவதும், எனக்காக எழுதி வைப்பதும் அவனது அருட்கொடைகளில் உள்ளவையாகும். நீங்கள் அறியாத வகையில் நீங்கள் விரும்புவதையெல்லாம் உங்களுக்கு வழங்குமாறு அல்லாஹ்விடம் நான் துஆச் செய்வேன். நீங்கள் உலகம் அழியும் நாள் வரை செழிப்பாகவும் வசதியாகவும் வாழ்க்கை நடத்துவீர்கள்” என்று யூசுபுக்கு ஷாகுல் ஹமீது அறிவுரை வழங்கினார்.

இதன் பிறகு யூசுப் ஒப்புக் கொண்டார். அவரும் அவரது சந்ததியினரும் கஷ்டப்படாமல் வாக்களிக்கப்பட்டதைப் பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் ஜும்ஆ உரைக்குப் பின் பெண் பேசுவதற்காக ஷாகுல் ஹமீது நாகூர் வீதிகளில் நடந்து கொண்டிருந்தார். ஹூருல் ஈன் போன்ற இரண்டு பெண்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருந்ததைக் கண்டார். அவர்களின் மூத்தவளின் தலையில் தடவினார். அவரது பெயர் பீபி ஜஹ்ரா. “என் மகனுக்கு இவர் தான் மனைவி” என்று கூறினார். “இவளது தந்தை ஒப்புக் கொண்டால் தாமதமின்றி இது நடக்கும்” என்றார்.

பின்னர் அப்பெண்களின் தந்தை பற்றி விசாரித்தார். காஜா மக்தூம் என்பது அவரது பெயர் எனவும், அவருக்கு இரண்டு கப்பல்கள் ஓடுகின்றன என்றும் கூறப்பட்டது. அவரது வீட்டில் சென்று ஷாகுல் ஹமீது விசாரித்தார். அவர் வீட்டில் இல்லை, வெளியே சென்று விட்டார் என்று கூறப்பட்டது.

“அவர் வந்தால் நம்மிடம் வரட்டும்; நாம் கூறுவதைக் கேட்கட்டும்” என்று கூறிவிட்டு ஷாகுல் ஹமீது வந்து விட்டார்.

காஜா மக்தூம் திரும்பி வந்ததும் அவரிடம் நடந்தது பற்றிக் கூறப்பட்டது. அதற்கவர், “ஷாகுல் ஹமீது எதற்காக இங்கு வந்தார் என்பதை நாம் அறிவோம். நமக்கும் அவருக்குமிடையே பெரும் இடைவெளி உள்ளது. யூசுப், பிச்சைக்காரரின் வளர்ப்பு மகன். தலைவரின் மகளாகிய ஜஹ்ராவுக்கு அவர் நிகராக மாட்டார். இதை நாம் ஏற்றுக் கொண்டால் நமது புதல்விகளுக்கும் பக்கிரிகளின் புதல்வர்களுக்குமிடையே எவ்வாறு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்? இவர்கள் தமது தேவைகளுக்காக தலைவர்களிடம் யாசிக்கின்றனர்” என்று கூறினார்.

அன்றிரவை அவர்கள் கழித்தனர். அவரது மகள் அன்றிரவு மரணித்து விட்டார். வந்தவர்கள் எல்லாம் அவரைப் பழித்தனர். விடிந்ததும் தனது மற்றொரு மகளான சுல்தானா பீபியை மணமுடித்துக் கொடுக்க நினைத்தார். ஷாகுல் ஹமீதிடம் சென்றார். கடுமையாக அழுதார். நல்லோர்களின் முன்னிலையில் நபிவழியில் நல்ல நேரத்தில் திருமணம் நடந்தது.

இதுதான் உரைநடையில் கூறப்படும் கதை.

இந்தக் கதையில் எத்தனை அபத்தங்கள்! திருக்குர்ஆனுக்கு முரணான எத்தனை கப்ஸாக்கள் என்று பாருங்கள்.

கப்ஸா – 1

ஷாகுல் ஹமீதுக்குத் திருமணம் நடக்கவில்லை. இன்னொருவரின் மகனாகிய யூசுபைத் தான் இவர் மகன் என்று கூறி வந்தார். இது அனைவரும் அறிந்த உண்மை.

இவ்வாறிருந்தும் இவருக்கு மகனும் பேரப்பிள்ளைகளும் பிறப்பார்கள் என்று இறைவன் கூறினானாம். மகன் என்று இறைவன் குறிப்பிட்டது யூசுபைத் தான் என்று விளக்கம் தருகிறார்.

இதற்கு இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா?

உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை. இது உங்கள் வாய்களால் கூறும் வார்த்தை. அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர் வழி காட்டுகிறான். அவர்களை அவர்களின் தந்தையருடனே சேர்த்து அழையுங்கள்!

அல்குர்ஆன் 33:5, 6

வளர்ப்பு மகன்கள் ஒருபோதும் மகன்களாக முடியாது என்று இறைவன் தெளிவாக அறிவித்த பிறகு இதற்கு முரணாக ஷாகுல் ஹமீது கூறியுள்ளார். எனவே இந்தக் கதை பொய்யாக இருக்க வேண்டும். அல்லது ஷாகுல் ஹமீது இறைவனுக்கு மாறு செய்தவராக இருக்க வேண்டும்.

கப்ஸா – 2

வறுமையில் இருந்தாலும் திருமணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் ஷாகுல் ஹமீது, திருமணத்தின் அவசியத்தைப் புரிந்து கொண்டு வேண்டுமென்றே தனது திருமணத்தைத் தவிர்த்திருக்கிறார் என்பது இந்தக் கதையிலிருந்து தெளிவாகின்றது.

கப்ஸா – 3

யூசுபுக்கு ஆறு ஆண் மக்களும், இரண்டு பெண் மக்களும் பிறப்பார்கள் என்று முன்னறிவிப்புச் செய்கிறார். இவ்வாறு எவராவது கண்டு பிடிக்க முடியுமா? இதற்கான ஞானத்தை அல்லாஹ் யாருக்காவது வழங்கியிருக்கின்றானா? நிச்சயமாக இல்லை.

எத்தனையோ நபிமார்களுக்குக் குழந்தை இல்லாமலிருந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்து குழந்தை பாக்கியம் பெற்றுள்ளனர். ஆயினும் இது குறித்து இறைவன் அறிவித்துக் கொடுப்பதற்கு முன் நபிமார்களால் இதை அறிந்து கொள்ள இயலவில்லை.

ஐந்து விஷயங்களை இறைவன் மட்டுமே அறிவான் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. கருவறையில் உள்ளதை அவனே அறிவான் என்பதும் அதில் ஒன்றாகும்.

அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.

அல்குர்ஆன் 31:34

ஒரு கருவறையில் எத்தனை குழந்தைகள் உருவாகும்? அவற்றில் ஆண் எத்தனை? பெண் எத்தனை? என்பதை நபிமார்களாக இருந்தாலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் இந்த விபரங்கள் எல்லாம் ஷாகுல் ஹமீதுக்குத் தெரிந்தன என்று கூறுவது பச்சைப் பொய் இல்லாமல் வேறென்ன?

கப்ஸா – 4

இரண்டு பெண்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனராம். அவர்களில் மூத்தவளின் தலையைத் தடவிக் கொடுத்தாராம்.

இவ்வாறு செய்வதை எந்த வசனம் அனுமதிக்கின்றது? எந்த நபிமொழியில் இதற்கு அங்கீகாரம் இருக்கின்றது? சாதாரண நிலையில் அந்நியப் பெண்ணைத் தொடவோ, தலையைத் தடவவோ அனுமதியில்லாத போது குளிக்கும் பெண்களைத் தொடலாமா? பெண்கள் குளிக்கும் பகுதிக்குச் செல்லலாமா?

ஷேக்மார்கள் பெண்களிடம் சில்மிஷம் செய்வதற்கு ஆதாரமாகத் தான் இவ்வாறு கதையைக் கட்டியிருக்க முடியும். நல்லடியார்கள் ஒருக்காலும் இத்தகைய ஈனச் செயலில் ஈடுபட மாட்டார்கள்.

கப்ஸா – 5

தங்கள் மண வாழ்க்கையைத் தேர்வு செய்யும் அதிகாரம் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெண் விரும்பினால் தான் அவளை யாரும் திருமணம் செய்ய முடியும். இதுதான் நபிகள் நாயகம் காட்டிய வழிமுறையாகும்.

ஏதோ ஆடு மாடுகளை வாங்குவது போல் குளத்தில் குளிக்கும் பெண்ணைப் பார்த்து விட்டு மணமுடித்துத் தருமாறு கேட்பது நம்பும்படியாக இல்லை.

ஒரு பக்கிரிக்கு, எந்த வசதியுமில்லாதவருக்குத் தன் மகளை மண முடித்துக் கொடுத்தால், கண் கலங்காமல் அவளைக் காப்பாற்ற மாட்டார் என்று ஒரு தந்தை நினைக்கும் போது அவருக்குத் தன் மகளை மணமுடித்துக் கொடுக்க மறுக்கலாம். இதில் எந்தத் தவறும் இல்லை.

ஷாகுல் ஹமீது விரும்பியதைச் செய்ய மறுத்தால் பயங்கரமான விளைவுகள் ஏற்படும் என்று பயம் காட்டுவதற்காக அவரது மகள் இறந்து விட்டார் என்று கற்பனை செய்துள்ளனர்.

ஏனைய மதங்களில் மனிதர்களுக்குக் கடவுள் தன்மை வழங்கி, அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, மக்கள் அஞ்சி நடுங்கும் நிலை இருக்கின்றது. அதுபோன்று ஒரு நிலையை இஸ்லாமிய மார்க்கத்திலும் ஏற்படுத்துவதற்காகத் தான் இந்தக் கதை புனையப்பட்டுள்ளது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

செத்த மாட்டை உயிர்ப்பித்தவர்?

கெட்ட எண்ணத்துடன் மூடர்களான சில சீடர்கள் பசியின் காரணமாக அறுத்து உண்ட மாட்டின் எலும்புகளுக்கு இவர் உயிர் கொடுத்தார். மாட்டின் உரிமையாளர்கள் சண்டைக்கு வந்த போது இவ்வாறு செய்தார்.

இந்தக் கவிதையிலிருந்து விளங்காதவர்களுக்கு உரைநடைப் பகுதியில் பின்வருமாறு விளக்கம் கூறப்படுகின்றது.

ஷாகுல் ஹமீது அவர்களும், அவருடன் வந்த பக்கீர்களும் தென்காசியில் சில காலம் தங்கினார்கள். அதன் சுற்றுப்புறங்களிலெல்லாம் கடுமையான பஞ்சம் நிலவியது. அவர்களில் எவரிடமும் பசியைப் போக்கும் உணவு இருக்கவில்லை. அவர்களில் மனோ இச்சை மிகுந்த மூடன் ஒருவன் முன்வந்து அங்குள்ள கோவிலின் மாட்டை அறுத்தான். சீடர்கள் அனைவருக்கும் அதன் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுத்தான். கோவில் அறங்காவலர்கள் ஷாகுல் ஹமீது அவர்களிடம் கூட்டமாக வந்து வாதம் செய்தனர். உடனே ஷாகுல் ஹமீது மாட்டின் எலும்புகளைத் திரட்டக் கட்டளையிட்டார்கள். தமது கைத்தடியால் அதனை அடித்தார்கள். உடனே அல்லாஹ் அதற்கு உயிர் கொடுத்தான். மாடு உயிர் பெற்று எழுந்தது. கோவில் அறங்காவலர்கள் அவருக்கு சாஷ்டாங்கம் செய்தனர். ஸலாம் கூறினர். அவரிடமிருந்து மரியாதையுடன் திரும்பிச் சென்றனர். இரு உலகிலும் அல்லாஹ் அவரை நமக்கு இமாமாக ஆக்குவானாக!

இது தான் கதை! ஷாகுல் ஹமீதின் மதிப்பை உயர்த்துவதற்காகவும், அவருக்குக் கடவுள் தன்மையை வழங்குவதற்காகவும் இந்தக் கதை புனையப்பட்டிருக்கின்றது என்பதில் ஐயமில்லை.

ஷாகுல் ஹமீத் அல்லாஹ்வின் நல்லடியாராக இருந்தால் தம்முடன் அழைத்துச் செல்லும் சீடர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். ஆனால் இவரது சீடர்களில் ஒருவர் கூட நல்லவராக இருக்கவில்லை என்று இந்தக் கதை கூறுகின்றது.

பிறருக்குச் சொந்தமான மாட்டை ஒரு மூடச் சீடர் அறுத்து விடுகின்றார். அத்துடன் அதன் இறைச்சியை ஏனைய சீடர்களுக்கும் பங்கிட்டுக் கொடுக்கிறார். அவர்களில் ஒருவர் கூட அதை ஆட்சேபிக்காமல் பெற்றுக் கொள்கிறார்கள்.

ஹராமான உணவை உண்ணக் கூடாது என்ற பாடத்தை இவரது சீடர்களில் ஒருவர் கூடப் படிக்கவில்லை. யாருக்கோ சொந்தமான மாட்டை அறுத்து அனைவரும் உண்கிறார்கள். அந்த அக்கிரமச் செயலைக் கண்டித்ததாகக் கூட இந்தக் கதையில் கூறப்படவில்லை.

அற்புதமான முறையில் மாட்டை உயிர்ப்பித்து (?) விட்டதால் அவரது சீடர்கள் சாப்பிட்ட அந்த உணவு ஹலாலாகி விடுமா?

செத்துப் போன மாட்டை மந்திர சக்தியால் உயிர்ப்பித்த ஷாகுல் ஹமீது, தமது சீடர்கள் பிறருக்குச் சொந்தமான மாட்டை அறுக்கப் போகிறார்கள் என்பதை அறிந்து தடுக்க முடியவில்லை.

தமது சீடர்கள் பசியால் வாடுவதையும் அவர் உணரவில்லை. பிறரது மாட்டைச் சாப்பிட்டு விட்டுப் பின்னர் அதற்கு உயிர் கொடுப்பதை விடப் புதிய மாட்டை மந்திரத்தில் உருவாக்கி தம் சீடர்களுக்குக் வழங்கி அவர்களை ஹராமான உணவிலிருந்து தடுக்க இயலவில்லை.

இவ்வளவு பலவீனமான நிலையில் இருந்தவர், எலும்புகளை உயிராக்கினார் என்று கூறுவது பச்சைப் பொய் என்பதை இது விளக்குகின்றது.

முஆத் (ரலி) என்ற நபித்தோழர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலில் விழுந்து ஸஜ்தாச் செய்ய அனுமதி கேட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி மறுத்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கால்களில் விழுவதற்கே அனுமதி இல்லை என்றால் மற்றவர்களின் கால்களில் விழுவது எவ்வளவு பெரிய தவறு என்பது தெரிய வரும்.

ஆனால் ஷாகுல் ஹமீது தம் கால்களில் விழுந்தவர்களைத் தடுக்கவில்லை. காலில் விழுவது தவறு என்பதையும் அவர்களுக்கு விளக்கவில்லை. நல்லடியார் ஒருவர் மார்க்கத்திற்கு முரணான இந்தச் செயலைச் செய்திருக்க முடியுமா? நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.

இவரை இரு உலகிலும் இமாமாக ஆக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்யப்படுகின்றது.

இந்த உலகில் இமாமாக, வழிகாட்டியாக ஏற்க வேண்டும் என்றால் என்ன பொருள்? யாருடைய மாட்டையாவது பிடித்து அறுத்து உண்ண வேண்டுமா? எலும்புகளைக் குவித்து வைத்து கைத்தடியால் அடிக்க வேண்டுமா? தமது காலில் விழ வருபவர்களைத் தடுக்காமல் அங்கீகரிக்க வேண்டுமா? இவரை வழிகாட்டியாக ஏற்க வேண்டும் என்றால் இது தான் பொருள்.

மறுமையில் ஒவ்வொரு நபிமார்களும் தத்தம் சமுதாயத்தவருக்கு இமாமாக வருவார்கள்.

அந்த நேரத்தில் நாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விட்டு விட்டு இவருக்குப் பின்னால் அணிவகுத்து நிற்க வேண்டுமா? அப்படியானால் இவர் ஒரு நபியா? இவருக்குத் தனியாக உம்மத் உண்டா?

இவரே இமாமாக நிற்பார் என்றால் நபிகள் நாயகத்தின் உம்மத்தில் ஒருவராக இவர் வர மாட்டாரா? தனித் தலைவராகத் தான் வருவாரா? மறுமையில் தலைவராக வருவார் என்பதற்கு இதைத் தவிர வேறு என்ன விளக்கம் கூறப் போகிறார்கள்?

ஷாகுல் ஹமீதுக்கு அல்லாஹ்வின் ஆற்றலை வழங்கி நபிகள் நாயகத்துக்குச் சமமாக அவரை ஆக்குவது தான் இந்த மவ்லிதின் நோக்கம் என்பது தெளிவாகவே தெரிகின்றது.

இத்தகைய அபத்தமான பாடல்களைப் புனிதம் என்று கருதி ஓதலாமா? இதற்கு மறுமையில் நன்மை கிடைக்குமா? அல்லது பாவம் சேருமா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

வார் இல்லாத செருப்பு

வார் இல்லாத, விரலுக்குப் பிடிமானம் இல்லாத, மரத்தால் செய்யப்பட்ட காலணியை அணிந்து ஷாகுல் ஹமீது அவர்கள் நடப்பவர்களாக இருந்தனர்.

ஷாகுல் ஹமீது மவ்லிதில் கூறப்படும் அற்புதக் கதை இது! இதற்கு விளக்கமாக உரைநடையில் கூறப்படுவதையும் பார்ப்போம்.

ஒரு தச்சர் ஷாகுல் ஹமீதுக்கு ஒரு மரத்தால் செய்யப்பட்ட காலணியை காணிக்கையாக வழங்கினார். அந்தக் காலணிக்கு வாரும் இல்லை. கால் விரல்களுக்குப் பிடிமானமும் அதில் இல்லை. அதை அணிந்து தான் ஷாகுல் ஹமீது நடந்து வந்தார். அந்தக் காலணிகள் நாகூர் தர்காவின் ஐந்தாம் வாசலில், தங்கத் தட்டில் இன்றளவும் வைக்கப்பட்டுள்ளன. வேலைப்பாடுகளுடன் கூடிய, தங்கத்தால் செய்யப்பட்ட கால்களின் மீது அது நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளித் தகடுகளால் சுற்றப்பட்டுள்ளது. அதைச் சுற்றி விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. திறந்த தலை மீது அதைச் சுமந்த வெற்றி பெற்றவர்களில் நம்மை அல்லாஹ் ஆக்குவானாக!

எந்தப் பிடிமானமும் இல்லாமல் அடிப்பாகத்தை மட்டும் கொண்ட செருப்பால் ஷாகுல் ஹமீது நடந்ததாக இந்தக் கதை கூறுகின்றது.

அதாவது ஷாகுல் ஹமீது காலைத் தூக்கி நடக்கும் போது எந்தப் பிடிமானமும் இல்லாமல் அந்தக் காலணி அந்தரத்தில் அவரது காலுடன் ஒட்டிக் கொண்டிருந்ததாம்.

பிடிமானம் இல்லாமல் அந்தரத்தில் ஒரு பொருள் நின்றால் புவி ஈர்ப்பு விசையின் காரணமாக அது கீழே விழுந்து விடும். புவி ஈர்ப்பு விசைக்கு எதிரான ஒரு சக்தி இருந்தால் மட்டுமே அந்தரத்தில் நிற்க முடியும். அல்லது பாதங்களில் பெவிகால் தடவி அந்தக் காலணியை ஒட்டிக் கொண்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.

ஆயினும் ஷாகுல் ஹமீது ஓர் அதிசயப் பிறவி, மனித நிலைக்கு அப்பாற்பட்டவர் என்று காட்டுவதற்காகவே இவ்வாறு கதை கட்டப்பட்டுள்ளது.

நபிமார்கள், தாம் இறைவனின் தூதர்கள் என்பதை நிரூபிப்பதற்காக இறைவனின் அனுமதியுடன் சில அற்புதங்களை நிகழ்த்தியுள்ளனர். ஒவ்வொரு நபியும் அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கவில்லை.

இவரோ எந்நேரமும் வார் இல்லாத செருப்பை அணிந்து அற்புதத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தார் என்று இந்தக் கதை கூறுகின்றது.

இறைத் தூதர்களாக இருந்தாலும் அல்லாஹ்வின் அனுமதியின்றி அற்புதம் நிகழ்த்த முடியாது என்று திருக்குர்ஆன் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றது.

எந்த ஒரு தூதரும் அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் கொண்டு வர முடியாது.

அல்குர்ஆன் 13:38

ஈஸா நபியவர்கள் சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி தமது தூதுத்துவத்தை நிரூபித்தார்கள். அல்லாஹ்வின் அனுமதி பெற்றே இதைச் செய்வதாக அவர்கள் கூறினார்கள். (பார்க்க: அல்குர்ஆன் 3:49)

மூஸா நபியவர்களிடம் உள்ள கைத்தடியை அல்லாஹ் பாம்பாக மாற்றிக் காட்டினான். அந்த அற்புதங்களை அவர்கள் ஃபிர்அவ்னிடம் செய்து காட்டினார்கள். அதைப் பார்த்த ஃபிர்அவ்ன் அது போன்ற மந்திரத்தைச் செய்து காட்ட மந்திரவாதிகள் தன்னிடமும் இருக்கிறார்கள் என்று கூறி அவர்களுடன் போட்டியிட்டு வெல்ல மூஸா நபிக்கு அறைகூவல் விடுத்தான். அதன் அடிப்படையில் மூஸா நபியவர்களுக்கும் மந்திரவாதிகளுக்கும் போட்டி ஏற்படுத்தப்பட்டது.

மந்திரவாதிகள் தங்களிடமுள்ள கயிறுகளையும் கைத்தடிகளையும் பாம்புகள் போன்று தோற்றமளிக்கச் செய்தனர். அதைக் கண்டவுடன் மூஸா நபியவர்கள் தமது கைத்தடியைப் போட்டு பாம்பாக மாற்றிக் காட்டவில்லை. மாறாக மந்திரவாதிகளின் அற்புதத்தைக் கண்டு திடுக்குற்றார்கள். “உமது கைத்தடியைப் போடுவீராக” என்று இறைவனது கட்டளை வந்த பின்பு தான் அந்தக் கைத்தடியைப் போட்டார்கள்.

ஏற்கனவே அந்தக் கைத்தடி பாம்பாக மாறியிருந்தும், நாம் போடும் போதெல்லாம் அது பாம்பாக மாறும் என்று மூஸா நபியவர்கள் நம்பவில்லை. அற்புதம் என்பது நிரந்தரமாக, நீடித்தத் தன்மை கொண்டவை என்று அவர்கள் நம்பவில்லை. மாறாக அல்லாஹ் எப்போது அதைப் பயன்படுத்தக் கட்டளையிடுகின்றானோ அந்த் நேரத்தில் மட்டும் தான் நிகழும் என்று நம்பினார்கள்.

இந்த விபரங்களைக் கீழ்க்காணும் வசனங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மூஸாவே! அதைப் போடுவீராக!என்று அவன் கூறினான். அதை அவர் போட்ட போது உடனே அது சீறும் பாம்பாக ஆனது. “அஞ்சாமல் அதைப் பிடிப்பீராக! அதனுடைய முந்தைய நிலைக்கு அதை மாற்றுவோம்என்று அவன் கூறினான்.

அல்குர்ஆன் 20:19-21

மூஸாவே! நீர் போடுகிறீரா? நாங்கள் முதலில் போடட்டுமா?” என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.

இல்லை! நீங்களே போடுங்கள்!என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது.

மூஸா தமக்குள் அச்சத்தை உணர்ந்தார்.

அஞ்சாதீர்! நீர் தான் வெற்றி பெறுவீர்என்று கூறினோம்.

உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்” (என்றும் கூறினோம்.)

உடனே சூனியக்காரர்கள் ஸஜ்தாவில் விழுந்து, “மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனை நம்பினோம்என்றனர்.

அல்குர்ஆன் 20:65-70

மூஸா நபியின் சமுதாயத்தவர்களும் மூஸா நபியும் ஃபிர்அவ்னால் விரட்டப்பட்ட போது சுயமாகத் தமது கைத்தடியால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. மாறாக, “என்னுடைய இறைவன் என்னுடன் இருக்கிறான்; அவன் எனக்கு வழி காட்டுவான்” என்று தான் கூறினார்கள். “கைத்தடியால் கடலில் அடிப்பீராக” என்று இறைவன் கட்டளையிட்ட பிறகு தான் அவ்வாறு செய்தார்கள். அற்புதமும் நிகழ்ந்தது.

இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்ட போது “நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்என்று மூஸாவின் சகாக்கள் கூறினர். “அவ்வாறு இல்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான்என்று அவர் கூறினார். “உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராகஎன்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.

அல்குர்ஆன் 26:61-63

மூஸா நபியும் அவர்களது சமுதாயத்தினரும் பயணம் செல்லும் போது மக்கள் தாகத்தைத் தீர்க்க மூஸா நபியிடம் முறையிட்டனர். தமது கைத்தடியைப் பயன்படுத்தி அவர்கள் தண்ணீரை வரவழைக்கவில்லை. மாறாக அல்லாஹ்விடம் துஆச் செய்தனர். அல்லாஹ்வின் கட்டளை வந்த பின் தமது கைத்தடியால் பாறையை அடித்தார்கள். தண்ணீர் பீறிட்டுக் கிளம்பியது.

மூஸா, தமது சமுதாயத்திற்காக (நம்மிடம்) தண்ணீர் வேண்டிய போது “உமது கைத்தடியால் அந்தப் பாறையில் அடிப்பீராக!என்று கூறினோம். உடனே அதில் பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. ஒவ்வொரு கூட்டத்தாரும் தத்தமது நீர்த் துறையை அறிந்து கொண்டனர்

அல்குர்ஆன் 2:60

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இறை மறுப்பாளர்கள் பல்வேறு அற்புதங்களைக் கோரினார்கள். “நான் மனிதத் தூதர் தான்” என்று நபியவர்களைக் கூறச் செய்து மறுப்பாளர்களின் கோரிக்கையை இறைவன் நிராகரித்து விடுகின்றான்.

இப்பூமியில் நீரூற்றை எங்களுக்காக நீர் ஓடச் செய்யாத வரை உம்மை நாங்கள் நம்பவே மாட்டோம்என்று கூறுகின்றனர்.

அல்லது உமக்கு பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டம் இருக்க வேண்டும். அவற்றுக்கு இடையே நதிகளை நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய வேண்டும்.

அல்லது நீர் நினைப்பது போல் வானத்தை துண்டு துண்டாக எங்கள் மீது விழச் செய்ய வேண்டும். அல்லது அல்லாஹ்வையும், வானவர்களையும் நேரில் நீர் கொண்டு வர வேண்டும்.

அல்லது தங்கத்தால் உமக்கு ஒரு வீடு இருக்க வேண்டும். அல்லது வானத்தில் நீர் ஏற வேண்டும். நாங்கள் வாசிக்கும் விதமாக எங்களிடம் ஒரு புத்தகத்துடன் இறங்கினால் தவிர நீர் ஏறிச் சென்றதை நம்ப மாட்டோம் (எனவும் கூறுகின்றனர்) “என் இறைவன் தூயவன். நான் மனிதனாகவும், தூதராகவுமே இருக்கிறேன்என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 17:90-93

ஆனால் ஷாகுல் ஹமீது அவர்களோ எந்நேரமும் அற்புதத்தை நிகழத்துபவராகச் சித்தரிக்கப்படுகிறார். இவ்வாறு மிகைப்படுத்தி அவரது பெயரால் பொய்களை இட்டுக்கட்டக் காரணம் என்ன என்பதை அந்த உரைநடைப் பகுதி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

நாகூர் தர்காவில் அந்தச் செருப்பை வைத்திருக்கிறார்கள். அதைத் தலையில் தூக்கி வைத்துக் கொள்வதன் மூலம் வெற்றி பெற முடியுமாம். செருப்பைத் தலையில் வைத்துக் கொள்ளத் தூண்டி, அதன் மூலம் வருவாயைப் பெருக்குவதற்காகத் தான் செருப்பின் மகாத்மியம் பற்றி அந்தப் பாடலில் கூறப்பட்டுள்ளது.

காலில் அணிய வேண்டிய செருப்பைத் தலையில் தூக்கி வைத்துக் கொள்வதும், அதற்குத் தங்கத் தட்டும், வெள்ளிப் பேழையும், விளக்குகளின் அலங்காரமும், இவை அனைத்தையும் நியாயப்படுத்துவதும் தான் இஸ்லாமா?

நபி (ஸல்) அவர்கள் எந்தத் தீமையை ஒழிக்கக் காலமெல்லாம் பாடுபட்டார்களோ அந்தத் தீமைகளை இஸ்லாத்தின் பெயரால் நிலைநிறுத்த இந்த மவ்லிதுகள் முயற்சிக்கின்றன.

பொருள் தெரியாத நம்மவர்கள் பக்திப் பரவசத்துடன் இதை ஓதி வருகின்றனர். இதன் பொருளை அறிந்து கொண்ட எந்த ஒரு முஸ்லிமும் மவ்லிதின் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்க மாட்டான்.

பால் கிடைக்காத சாபம்

ஷாகுல் ஹமீது தமது மானுக்காகப் பால் கேட்ட போது தர மறுத்தவர்களுக்குப் பாலே கிடைக்காமல் போய் விட்டது.

இந்தக் கதைச் சுருக்கத்துக்கு ஹிகாயத் எனும் உரைநடைப் பகுதியில் பின்வருமாறு விளக்கம் தரப்படுகின்றது.

ஷாகுல் ஹமீது நத்தம் எனும் கிராமத்தில் ஓரிரவு தங்கினார். தமது மான் குட்டிக்காக ஒரு குடும்பத்தாரிடம் பால் கேட்டார். அவர்களிடம் பால் இருந்தும் அதைத் தர மறுத்தனர். ஷாகுல் ஹமீதை விருந்தாளியாக ஏற்க மறுத்து விட்டனர். அன்றிலிருந்து இன்று வரை அந்தக் குடும்பத்தினருக்கு இரகசியமாகவோ, பகிரங்கமாகவோ பால் கிடைக்காமல் ஆகி            விட்டது. அவரது பெருந்தன்மையினால் சோதனைகளிலிருந்தும், சிரமங்களிலிருந்தும் அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

இந்தக் கதை, உண்மை சிறிதளவும் கலக்காத பச்சைப் பொய் என்பதை அறிவுடைய எவரும் விளங்க முடியும்.

ஷாகுல் ஹமீது அனைத்தையும், குடும்ப வாழ்க்கையைக் கூடத் துறந்து விட்டு ஊர் ஊராகச் சுற்றி வநதவர் என்று அவரது அபிமானிகள் கூறுகிறார்கள். இந்த மவ்லிதும் அவரைப் பற்றி அப்படித் தான் சித்தரிக்கின்றது.

அனைத்தையும் துறந்த ஞானிக்கு மான் குட்டி எதற்காக? தனக்கும் தன் தோழர்களுக்கும் மற்றவர்களிடம் உணவைப் பெற்று உண்பவர், வேண்டாத இந்தச் சுமையை ஏன் சுமக்க வேண்டும்?

தற்செயலாகக் கண்ணில் பட்ட மானுக்காகப் பால் கேட்டிருக்கலாம் அல்லவா? என்று யாரேனும் கேட்கக் கூடும்.

“தமது மானுக்காக” என்று இக்கதையில் கூறப்படுகின்றது. அவர் தமக்குச் சொந்தமாக இந்த மானை வளர்த்து வந்தார் என்பதை இது நிரூபிக்கின்றது.

வாயில்லா ஜீவனுக்கு உணவளிக்கச் சக்தியில்லாதவர் எதற்காக அதை வளர்க்க வேண்டும்? ஊர் ஊராக இவர் சுற்றிக் கொண்டிருந்தது போல் மான் குட்டியையும் சுற்றச் செய்து அதற்கு ஏன் சிரமத்தை ஏற்படுத்த வேண்டும்?

மனிதனுக்கு அவசியத் தேவையான, மார்க்கக் கடமையான திருமணத்தைக் கூட உதறித் தள்ளியவர், இறை வழிபாட்டில் மூழ்கித் திளைப்பதற்காகத் துறவறம் மேற்கொண்டவருக்கு மான் எதற்கு? அதைப் பராமரிப்பதால் முழு அளவில் இறை வழிபாட்டில் ஈடுபட முடியுமா?

இந்தக் கதை பொய்யென்பதை நிரூபிக்க இவையே போதும் என்றாலும் மேலும் பல காரணங்கள் உள்ளன.

ஒரு குடும்பத்தாரிடம் தமது மானுக்காக இவர் பால் கேட்டிருக்கிறார். இதை ஏற்றுக் கொள்வோம். அக்குடும்பத்தாரிடம் பால் இருந்தும் அதை வழங்க மறுத்து விட்டனர். அதையும் ஏற்றுக் கொள்வோம். அதற்காக அவர்களுக்குப் பாலே கிடைக்கக் கூடாது என்று சபிக்கலாமா? இது தான் இஸ்லாம் காட்டும் வழிமுறையா? இப்படித் தான் நபிமார்களும் நபித்தோழர்களும் நடந்திருக்கின்றார்களா?

மூஸா (அலை) அவர்களும், கிழ்ரு (அலை) அவர்களும் ஒரு கிராமத்துக்குச் சென்று உணவு கேட்டனர். அக்கிராமத்தினர் உணவளிக்க மறுத்து விட்டனர். கால்நடைகளின் பசியைப் போக்க உணவு கேட்கவில்லை. தமது பசியைப் போக்கிக் கொள்ளவே உணவு கேட்டனர். கிழ்ரு (அலை) அவர்கள் பல சிறப்புத் தகுதிகள் வழங்கப்பட்டிருந்தனர். ஆயினும் அவர்கள், விருந்து தராத மக்களைச் சபிக்கவில்லை. அம்மக்களுக்கு உணவு கிடைக்காமல் போகட்டும் என்று சாபமிடவில்லை. அல்குர்ஆனின் கஹ்ஃப் அத்தியாயத்திலிருந்து இதை அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாயிப் நகரத்திற்குச் சென்றனர். அந்த மக்கள் அவர்களை உபசரிக்காதது மட்டுமின்றி அடித்துக் காயப்படுத்தி விரட்டினார்கள்.

“இறைவா! என் சமுதாயத்தினர் அறியாதவர்களாக உள்ளனர். அவர்களை மன்னித்து விடு” என்பது தான் நபியவர்களின் பிரார்த்தனையாக இருந்ததே தவிர அவர்களுக்கு உணவு கிடைக்கக்கூடாது என்று சாபமிடவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழியில் நடப்பதன் மூலம் தான் ஒருவர் இறைநேசராக முடியுமே தவிர அவர்களின் வழிமுறைக்கு மாறு செய்வதன் மூலம் இறைநேசராக முடியாது. ஆனால் ஷாகுல் ஹமீது நபிவழியை மீறியவராக இந்தக் கதையில் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கதை பொய்யானது என்பதை நிரூபிக்கும் சான்றுகள் இன்னும் உள்ளன.

இவரது துஆவின் காரணமாக அந்தக் குடும்பத்தினருக்கு மட்டும் பால் கிடைக்காமல் போகவில்லையாம். தலைமுறை தலைமுறையாக இன்று வரையிலும் சாபம் தொடர்கிறதாம்.

அவர்கள் பால் தர மறுத்ததற்காக இவர் கோபப்பட்டு அவர்களைச் சபித்ததைக் கூட ஒப்புக் கொள்வோம். அது படுபயங்கரமான குற்றம் என்றே வைத்துக் கொள்வோம். அதற்காக அவர்களைத் தான் தண்டிக்க வேண்டுமே தவிர அந்தக் குற்றத்தில் எள் முனையளவு கூடச் சம்பந்தமில்லாத அவர்களின் வழித்தோன்றல்கள் தண்டிக்கப்படுவது என்ன நியாயம்?

ஆதம் (அலை) அவர்கள் செய்த பாவம் தலைமுறை தலைமுயைôகத் தொடர்கிறது என்ற கிறித்தவக் கோட்பாட்டை இஸ்லாம் வன்மையாக மறுக்கிறது.

ஒருவரது சுமையை இன்னொருவர் சுமக்க மாட்டார் என்று திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றது.

இது அல்லாஹ்வின் நியதி மட்டுமின்றி உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளப்பட்ட நீதியும் இது தான். தந்தை செய்த கொலைக்காக மகனைத் தண்டிப்பது உலகில் எங்குமே கிடையாது.

இந்த நீதி நெறியை மீறி ஒரு குடும்பத்தினர் செய்த தவறுக்காக (?) தலைமுறை தலைமுறையாகத் தண்டித்திருக்கிறார். ஒரு நல்லடியார் இவ்வாறு செய்திருக்க முடியாது என்பதால் இது கட்டுக் கதை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இப்படியெல்லாம் சபித்ததையும் கூட ஒப்புக் கொள்வோம். இவர் சபித்தால் அது நடந்து விடுமா? நிச்சயமாக நடக்காது.

உஹதுப் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பற்கள் உடைக்கப்பட்டு, அதன் காரணமாக அவர்களின் முகத்தில் இரத்தம் வடிந்த போது, “நபியின் முகத்தில் இரத்தச் சாயம் பூசியவர்கள் எப்படி வெற்றி பெற இயலும்” என்று நபி (ஸல்) அவர்கள் சபித்தனர்.

ஆனால் நடந்தது என்ன? “அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை” என்று இறைவன் கூறிவிட்டான். மேலும் உஹதுப் போரில் எதிரிகளுக்கு வெற்றியையும் வழங்கினான். முஸ்லிம்களின் தரப்பில் பெரிய சேதத்தையும் ஏற்படுத்தினான்.

உணவு அளிக்காமல் இருப்பதை விட நபிகள் நாயகத்தை அடித்துத் துன்புறுத்துவது கடும் குற்றமாகும். அந்தக் குற்றத்திற்காகக் கூட அவர்கள் விஷயத்தில் நபியவர்கள் முடிவெடுக்கக் கூடாது என்று இறைவன் தெளிவாகப் பிரகடனம் செய்கின்றான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தடை செய்த ஒன்றை ஷாகுல் ஹமீதுக்கு அல்லாஹ் அனுமதித்தானா?

நபிகள் நாயகத்தை விட இவர் ஆற்றலிலும் சிறப்பிலும் கூடுதலானவரா? நபிகள் நாயகத்தின் தரத்தைக் குறைத்துக் காட்டவே இதைப் புனைந்துள்ளனர் என்பதில் ஐயமில்லை.

நத்தம் என்ற கிராமத்தில் சபிக்கப்பட்ட அந்தக் குடும்பத்தினர் யார்? இன்று வரை அந்தக் குடும்பத்துக்குப் பால் கிடைக்காமல் இருப்பதை எவ்வாறு உறுதிப்படுத்தினார்கள்? அந்தக் குடும்பத்தினரின் முகவரியை மவ்லிது அபிமானிகள் எடுத்துக் காட்டுவார்களா? அவ்வாறு காட்டினால் இரகசியமாக என்ன? பகிரங்கமாகவே அவர்களுக்குப் பால் கிடைக்கச் செய்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம்.

இவை யாவற்றையும் விடப் பெரிய கொடுமை என்னவென்றால் இவர் இவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டதாக ஒரு பக்கம் கூறி விட்டு, “இவரது பெருந்தன்மை காரணமாக அல்லாஹ் சோதனையிலிருந்து காப்பாற்றுவானாக” என்று கூறுகிறது இந்த மவ்லிது.

இது தான் பெருந்தன்மையா? இறை நேசருக்குரிய இலக்கணமா?

ஆகவே ஷாகுல் ஹமீதை அல்லாஹ்வுக்கு நிகராக்கியது மட்டுமின்றி அவரையும் இந்த மவ்லிது இழிவுபடுத்துகின்றது என்பது தான் உண்மை.

உப்புத் தண்ணீர் சாபம்

விருந்தளிக்க மறுத்தவர்களின் குடிநீர் உப்பு நீராக, கொதி நீரைப் போல் மாறி விட்டது.

இது ஷாகுல் ஹமீது மவ்லிதில் உள்ள கதையாகும். இந்தக் கதை ஹிகாயத் எனும் விளக்கவுரைப் பகுதியில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஷாகுல் ஹமீதும், அவருடன் இருந்த பக்கீர்களும் கீழக்கரை வந்து அவ்வூராரிடம் உணவு கேட்டனர். அவர்கள் எந்த விருந்தையும் முன்வைக்கவில்லை. அவர்களுக்கு விளக்கு எரிக்கவில்லை. உப்புத் தண்ணீரையே கொடுத்தனர். அப்போது ஷாகுல் ஹமீதின் நாவில், “இவர்களின் கிணறுகளில் நல்ல தண்ணீர் ஒரு காலமும் ஊறாமல் போகட்டும்; தாகமாக இருந்தாலும் அந்தத் தண்ணீரை ஒருக்காலும் குடிக்க முடியாமல் ஆகட்டும்” என்ற வார்த்தை வெளியானது.

அன்றிலிருந்து சதக்கத்துல்லாஹ் காலம் வரை அவ்வூரின் தண்ணீர் கசக்கும் உப்பாக மாறியது. இத்தண்ணீரால் முகம் கழுவியவர் வெப்பத்தை உணர்வார். அவர்களின் பேரருளால் அவர்களுக்கும் அவர்களின் வாரிசுகளுக்கும் உதவிகள் செய்தவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவனாக!

நல்லடியார்கள் இதுபோன்று சாபமிட மாட்டார்கள் என்பதை முன்னர் நாம் குறிப்பிட்டுள்ளோம். மூஸா, கிழ்ரு ஆகியோருக்கு உணவளிக்க மறுத்த மக்களுக்காக அவர்கள் சாபமிடவில்லை. நபி (ஸல்) அவர்களை விரட்டியடித்த தாயிப் நகர மக்களுக்காக அவர்கள் இவ்வாறு சாபமிடவில்லை.

நபித்தோழர்களுக்கு ஒரு கூட்டத்தினர் உணவளிக்க மறுத்தனர். அந்தக் கூட்டத்தின் தலைவனுக்குத் தேள் கொட்டிய போது நபித்தோழர்கள் சூரத்துல் பாத்திஹாவைக் கொண்டு ஓதிப் பார்த்தார்களே தவிர அந்தக் கூட்டத்தினருக்கு எதிராக நபித்தோழர்கள் சாபமிடவில்லை.

நல்லடியார்கள் இதுபோன்ற சோதனைகளைச் சந்திக்கும் போது அதைச் சகித்துக் கொள்ள வேண்டுமே தவிர சபிக்கக் கூடாது. அதற்கான அதிகாரம் எவருக்கும் கிடையாது. இந்த அடிப்படையை மீறி ஷாகுல் ஹமீது நடந்து கொண்டார் என்று கூறுவது அவரை அவமதிப்பதாகும்.

மேலும் இந்தச் சாபம் பலித்திருக்க வாய்ப்புள்ளதா? என்றால் நிச்சயமாகப் பலித்திருக்க முடியாது. ஏனெனில் தண்ணீர் குடிக்காமல் மனிதன் உயிர் வாழவே முடியாது. ஷாகுல் ஹமீது சாபமிட்டதிலிருந்து சதக்கத்துல்லாஹ் காலம் வரை தாகம் ஏற்பட்டாலும் அந்தத் தண்ணீரைக் குடிக்க முடியாமல் போய் விட்டது என்று கூறப்பட்டுள்ளது. அப்படியானால் பல நூறு ஆண்டுகள் தண்ணீரே குடிக்காமல் அந்த மக்கள் செத்து மடிந்திருப்பார்களே!

“எக்காலத்திலும் தண்ணீர் குடிக்க முடியாமல் ஆக வேண்டும்’ என்பது தான் சாபம். ஆனால் சதக்கத்துல்லாஹ் காலம் வரை தான் அந்த நிலை ஏற்பட்டது என்று மவ்லிதே கூறுகின்றது. அப்படியானால் ‘எக்காலத்திலும்’ என்ற சாபம் பலிக்காமல் போய்விட்டது என்பது உறுதி.

பொதுவாகக் கடற்கரைகளில் அமைந்த ஊர்களில் கிணறுகளில் தண்ணீர் உப்பாகத் தான் இருக்கும். இதுபோன்று நூற்றுக்கணக்கான ஊர்கள் தமிழகத்தில் உள்ளன. அந்த ஊர்களுக்கெல்லாம் சாபமிட்டது யார்? சதக்கத்துல்லாஹ் காலம் வரை தான் சாபம் பலித்தது என்றால், அதற்குப் பிறகு அந்த ஊரில் கிணற்றுத் தண்ணீர் சுவையாக மாறி விட்டதா? அதைத் தான் கீழக்கரை மக்கள் இன்றளவும் குடிக்கிறார்களா?

இப்படி ஏராளமான கேள்விகள் இதில் எழுகின்றன. இவற்றுக்கெல்லாம் மவ்லிது அபிமானிகள் பதில் சொல்ல மாட்டார்கள். பதில் சொல்ல முடியாது. ஏன் இப்படி இட்டுக்கட்டியுள்ளனர்? இதனால் யாருக்கு என்ன லாபம்? இந்தக் கேள்விக்கான விடை இதே கதையின் இறுதியில் கூறப்பட்டுள்ளது.

தர்ஹாவுக்கும், அதை வைத்துப் பிழைப்பு நடத்துவோருக்கும் உதவிகள் செய்ய அல்லாஹ் அருள் புரியட்டும் என்று இந்தக் கதை முடிகின்றது. அதாவது இதுபோன்ற கதைகள் மூலம் “நினைத்தனை முடிப்பவர்’ என்று ஷாகுல் ஹமீது கருதப்பட வேண்டும். அதனால் உண்டியல் நிரம்ப வேண்டும் என்பது தான் இதன் நோக்கம்.

கீழக்கரை மக்களுக்காக நாம் பரிதாபப்பட வேண்டும். யாரோ செய்த தவறுக்காக தலைமுறை தலைமுறையாகத் தண்டிக்கப்பட்டார்கள் என்ற இழிவையும், சாபத்தையும் உள்ளடக்கிய மவ்லிதை அவர்களையும் அறியாமல் ஓதித் தங்களை அவமானப்படுத்திக் கொள்கிறார்கள். பாவம் கீழக்கரையிலுள்ள மவ்லிது அபிமானிகள்!

விட்டலாச்சாரியார் கதைகள்

தோல் வியாபாரியின் தோலை இவரது சீடர்கள் எடுத்துக் கொண்டனர். இதற்காக ஷாஹுல் ஹமீத் அவர்கள் மண்ணைக் காசாக மாற்றி தோல் வியாபாரியிடம் கொடுத்தனர்.

இதற்கு விளக்கவுரையாக உரைநடைப் பகுதியில் கூறப்படுவதையும் பாருங்கள்.

ஷாஹுல் ஹமீத் அவர்களும் அவர்களுடன் வந்த பக்கிரிகளும் ஆய்க்குடிவால் என்ற ஊரில் குளக்கரையில் தங்கினர். நிழல் தேடி அங்குள்ள மரங்களினடியில் அமர்ந்தார்கள். அப்போது ஒரு கிராமவாசி ஆட்டுத் தோல், மான் தோல் ஆகியவற்றை விற்பனை செய்து கொண்டு வருவதைக் கண்டனர். காசு வாங்காமல் ஷாஹுல் ஹமீதுக்கு காணிக்கையாகத் தரப்படும் பொருள் என்று எண்ணிய பக்கிரிகள் அந்தத் தோலை எடுத்துக் கொண்டார்கள். உடனே அந்தக் கிராமவாசி ஷாஹுல் ஹமீதிடம் முறையிட்டார். கடுமையாக அழுதார். இதனால் அவர் மீது இரக்கம் கொண்ட ஷாஹுல் ஹமீத் அவர்கள் உனது தோலின் விலையளவுக்குக் குளத்து மண்ணை பணமாக எடுத்துக் கொள் என்று கூறினார்கள். கட்டளையிடப்பட்டவாறே அவர் முழுமையாக எடுத்துக் கொண்டார். தனது குடும்பத்தாரிடம் மகிழ்ச்சியுடன் திரும்பினார். அவரது அருளால் நமது காரியங்களை அல்லாஹ் சிரமமானதாக ஆக்காமல் எளிதாக்கட்டும்.

இந்தக் கதையில் உள்ள அதிசயம் நடந்திருக்குமா? என்பது தனியாக இருக்கட்டும். இந்தக் கதையில் உள்ள முரண்பாட்டையும் குழப்பத்தையும் கவனித்தாலே இது கட்டுக்கதை என்பது தெளிவாகும்.

தோல் வியாபாரியான கிராமவாசி தோல் விற்றுக் கொண்டு வருகிறார். ஷாகுல் ஹமீதின் சீடர்கள், இது ஷாகுல் ஹமீதுக்கு வழங்கப்படும் காணிக்கை என்ற எண்ணத்தில் அதைப் பறித்துக் கொள்கின்றனர்.

கிராமவாசி ஷாகுல் ஹமீதிடம் முறையிட்டதிலிருந்தும், கடுமையாக அழுததிலிருந்தும் அவரது சீடர்கள் வலுக்கட்டாயமாகத் தோலைப் பறித்துக் கொண்டனர் என்பது உறுதியாகின்றது.

ஷாகுல் ஹமீதின் சீடர்கள் வழிப்பறிக் கொள்ளையர்களைப் போல் நடந்திருக்கின்றனர் என்றால் அவர் எவ்வாறு தன் சீடர்களைப் பயிற்றுவித்திருக்கின்றார் என்பதை அறிய முடிகின்றது. பாதிக்கப்பட்ட கிராமவாசி அழுது முறையிட்ட பின்பாவது தன் சீடர்களைக் கடுமையாகக் கண்டித்தாரா என்றால் அதுவுமில்லை. இது இட்டுக்கட்டப்பட்ட கட்டுக்கதை தான் என்பதற்கு இது போதுமான சான்றாக உள்ளது. இதை உண்மை என்று நம்பினால் சீடர்களின் வழிப்பறியில் ஷாகுல் ஹமீதுக்கும் பங்குண்டு என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். குளத்து மண்ணைக் காசாக மாற்றிக் காட்டும் வல்லமை (?) பெற்ற ஷாகுல் ஹமீது, தன் சீடர்களின் வரம்பு மீறலைக் கூட அறிந்து கொள்ள முடியவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்களும் எவ்வளவோ வறுமையில் உழன்று வந்தனர். யாராவது நம்மை விருந்துக்கு அழைக்க மாட்டார்களா? என்று ஏங்கும் அளவுக்குப் பல சந்தர்ப்பங்களில் வறுமையின் பிடியில் சிக்கியிருந்தனர். மதீனாவின் மண்ணை எடுத்து தங்கக் காசுகளாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாற்றவில்லை.

நபிகள் நாயகத்திடம் இறை மறுப்பாளர்கள் வந்து, தங்கத்தினாலான மாளிகையை உருவாக்கிக் காட்டுங்கள் என்று கேட்டனர். அவ்வாறு ஆக்கி விட்டால் தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதாகவும் கூறினர். ஆனால் அதற்கு அல்லாஹ் கூறிய பதில், “நான் மனிதனாகவும், தூதராகவும் இருக்கிறேன் என்று கூறுவீராக” என்பது தான்.

நபிகள் நாயகத்தை விட ஆற்றல் மிக்கவராக ஷாகுல் ஹமீதைச் சித்தரித்து அதன் மூலம் அவருக்குக் கடவுள் தன்மையை வழங்கி இஸ்லாத்திலிருந்து முஸ்லிம்களை அப்புறப்படுத்துவதே இதன் நோக்கம் என்பதைச் சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்ளலாம்.

மற்றொரு விட்டலாச்சாரி கதையைப் பாருங்கள்.

ஷாஹுல் ஹமீது அவர்கள் சிலருக்குக் கீமியாவை வழங்கினார்கள். வேறு சிலருக்கு சீமியாவை வழங்கினார்கள். மற்றும் சிலருக்கு ரீமியாவை வழங்கினார்கள். அனைத்துத் துறைகளிலும் அவர்களுக்கு இருந்த ஞானத்தை என்ன வென்பது?

அது என்ன? கீமியா, ரீமியா, சேமியா என்று விளங்கவில்லையா? குழம்ப வேண்டாம். உரைநடைப் பகுதியில் விளக்கம் கூறப்பட்டுள்ளது.

ஷாஹுல் ஹமீது அவர்கள் குதைமா என்ற மலையில் ஏறினார்கள். அங்கே பழமையான குகையைக் கண்டார்கள். அங்கே நாற்பது நாட்கள் தங்கினார்கள். அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்றார்கள். உடனே அவரது இறைவன் அவருக்குத் தனது அருளைச் சொரிந்தான். அவரது பங்குக்கு ஏற்றவாறு அவருக்குச் சில ஆற்றல்களை வழங்கினான். குகையிலிருந்து வெளியே வந்தவுடன் அந்த மலையில் இருந்த சிலருக்கு இரும்பைத் தங்கமாக்கும் கீமியா எனும் கலையைக் கற்றுக் கொடுத்தனர். சில துறவிகளுக்கு மற்றவர்களிடமிருந்து தன்னை மறைத்துக் கொள்ளும் ஹீமியா எனும் கலையைக் கற்றுக் கொடுத்தார்கள். இன்னும் சில துறவிகளுக்கு மறைவாக உள்ள நல்லவை கெட்டவை அனைத்தையும் வெளிப்படுத்தும் சீமியா எனும் கலையைக் கற்றுக் கொடுத்தார்கள். வேறு சில துறவிகளுக்கு ஒரு உடலிலிருந்து வேறொரு உடலுக்கு உயிரை மாற்றுகின்ற ரீமியா என்னும் கலையைக் கற்றுக் கொடுத்தார்கள்.

இந்தக் கலைகள் உண்மையில் உள்ளனவா? இவ்வாறு இறைவன் வழங்கியதற்கு இஸ்லாமிய அடிப்படையில் ஏதேனும் ஆதாரம் உள்ளதா? நிச்சயமாக இல்லை.

இந்துப் புராணங்களிலும், விட்டாலாச்சாரியாரின் சினிமாப் படங்களிலும் தான் இது சாத்திமாகுமே தவிர நடைமுறையில் இது சாத்தியமே இல்லை.

மனிதன் தன்னை யாரும் காணாமல் உருவமற்றவனாக மாறி விடுவது என்பது அறவே நடக்க முடியாததாகும். எதிரிகளால் கடுமையாக ஆபத்துகளை எதிர்நோக்கியிருந்த எத்தனையோ நபிமார்களுக்கு இது தேவையாக இருந்தது. யாருக்கும் தெரியாமல் மறைந்து தங்களை அவர்கள் காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும். ஆனால் எந்த நபிக்கும் அப்படி ஒரு ஆற்றலை அல்லாஹ் வழங்கவில்லை. எத்தனையோ நபித்தோழர்கள் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளானார்கள். யாரும் காணாமல் உடலை மறைத்துக் கொள்ளும் ஆற்றல் அவர்களுக்கு இருந்தால் தங்களை இந்தச் சித்ரவதைகளிலிருந்து காத்துக் கொண்டிருக்க முடியும். இப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை.

போர்க் காலங்களில் எதிரிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பலரையும் பல பகுதிகளுக்கு உளவாளிகளாக அனுப்பினார்கள். யாருக்கும் தெரியாமல் உடலை மறைத்துக் கொள்வது இந்த உளவுத் துறைக்கு மிகவும் உபயோகமாக இருந்திருக்கும். உளவு பார்க்க அனுப்பியவர்களுக்கு இந்தக் கலையைக் கற்றுக் கொடுத்து அனுப்ப முடியவில்லை. ஏனென்றால் அப்படி ஒரு கலையே உலகில் கிடையாது.

ஆனால் ஷாகுல் ஹமீதுக்கு மட்டும் அல்லாஹ் அந்தக் கலையைக் கற்றுக் கொடுத்தானாம். அதுமட்டுமின்றி அவர் தவமிருந்து பெற்ற இந்தக் கலையை மலையில் இருந்த சாமியார்களுக்குக் கற்றுக் கொடுத்தாராம்.

இது உண்மை என்று வைத்துக் கொண்டாலும் நாற்பது நாட்கள் தவமிருந்து இந்தக் கலையை இவர் பெறுகிறார் என்றால் அதை அவர் மட்டும் தானே பயன்படுத்த முடியும்? அவருக்கு மட்டும் தானே இறைவன் அதை வழங்கினான். அந்த வரத்தைத் தவறான கொள்கையில் உள்ள சாமியார்களுக்கு இவர் கற்றுக் கொடுக்கலாமா? மக்கள் கண்களிலிருந்து மறையும் இந்தக் கலை மூலம் இஸ்லாத்திற்கு எதிராக அவர்கள் செயல்பட்டால் என்ன செய்வது?

இது பைத்தியக்காரனின் உளறலாக உள்ளதே தவிர பக்தியுடன் ஓதுவதற்கு ஏற்றதாக இல்லை.

மறைவானவற்றையெல்லாம் வெளிப்படுத்தக் கூடிய கலை என்று ஒன்று உள்ளதா? மறைவானவற்றை அல்லாஹ் மட்டுமே அறிவான்; அறிய முடியும் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம். நபிமார்கள், மலக்குகள், ஜின்கள் யாராக இருந்தாலும் மறைவானவற்றை அறிய முடியாது என்பதைத் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது.

ஆனால் ஷாகுல் ஹமீதுக்கு மட்டும் மறைவானவற்றை வெளிப்படுத்தும் கலையை அல்லாஹ் கற்றுக் கொடுத்தானாம். அவர் அதைப் பெருந்தன்மையோடு சாமியார்களுக்குக் கற்றுக் கொடுத்து விட்டாராம்.

அதாவது சாமியார்கள் மறைவானவற்றை அறிவார்கள் என்று முஸ்லிம்களை நம்பச் செய்து அவர்களை இஸ்லாத்திலிருந்து அப்புறப்படுத்துவதே இதன் நோக்கம்.

கூடு விட்டுக் கூடு பாயும் கலையையும் அல்லாஹ் அவருக்குக் கற்றுக் கொடுத்தானாம். அவர் அதையும் சாமியார்களுக்குக் கற்றுக் கொடுத்து விட்டாராம். திருக்குர்ஆன், நபிமொழிகளில் இதற்கு ஆதாரம் உள்ளதா? அல்லது நடைமுறையிலாவது யாரேனும் கூடு விட்டுக் கூடு பாய்ந்து காட்டியிருக்கிறார்களா? நிச்சயமாக இல்லை.

ஏனைய மதத்தவர்கள் இதுபோன்ற கட்டுக்கதைகளைக் கூறி வருகின்றனர். இவற்றையெல்லாம் களையெடுக்க அருளப்பட்ட இஸ்லாத்தில் இவற்றைத் திணிப்பது தான் இந்த மவ்லிதுகளின் நோக்கம்.

இரும்பைத் தங்கமாக்குதல், கூடு விட்டுக் கூடு பாய்தல், மாயாவி வித்தை, மறைவானவற்றை அறிதல் இவையெல்லாம் சாமியார்களுக்குத் தெரியும் என்று நம்ப வைத்து, முஸ்லிம்களை அவர்களுக்கு அடிமையாக்கி இஸ்லாத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றுவது தான் இந்த மவ்லிதை எழுதியவர்களின் நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இதுபோன்ற கட்டுக்கதைகள், இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் கப்ஸாக்கள் அடங்கிய மவ்லிதுக் குப்பைகளைப் படிப்பதை விட்டும் அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக!