ஏகத்துவம் – டிசம்பர் 2008

தலையங்கம்

இறை ஆலயமும் இப்ராஹீம் நபியும்

உலகத்தில் முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் கஅபாவாகும்.

அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.

அல்குர்ஆன் 3:96

இது, முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் தொழுத புனித ஆலயமாகும்.

“(கஅபாவிலுள்ள) ஹஜருல் அஸ்வத் (எனும் கல்லானது) சுவனத்திலிருந்து வந்ததாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: நஸயீ 2886

ஆதம் (அலை) அவர்களுக்குப் பின்னால் அந்த ஆலயத்தின் தொடர்பு எப்போது அறுந்து போனது? என்பதை அடித்துச் சென்ற கால வெள்ளத்தில், அரித்துச் சென்ற நீர் வெள்ளத்தில் கண்டுபிடிப்பதற்குக் குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்தத் தடயமும் இல்லை.

ஆனால் அது எப்போது புதுப்பிக்கப்பட்டது? புனர் நிர்மாணம் செய்யப்பட்டது? என்பதைத் திருக்குர்ஆனில் நாம் தெளிவாகக் காணலாம்.

ஆம்! அந்த இறையாலயத்தைப் புதுப்பித்த புண்ணியவான்கள் ஏகத்துவப் புரட்சியாளரும் இறை நண்பருமான இப்ராஹீம் (அலை) அவர்களும், அவரது மகன் இஸ்மாயீல் (அலை) அவர்களும் தான்.

எனவே அவர்கள் எழுப்பிய ஆலயமான கஅபாவின் வரலாற்றை இந்தத் துல்கஅதா, துல்ஹஜ் மாதங்களில் நினைத்துப் பார்ப்பது மிகவும் பொருத்தம் என்ற அடிப்படையில் இவ்விரு மாத ஏகத்துவ இதழ்களில் கஅபாவின் வரலாற்றைக் கொண்டு வர முடிவு செய்து சென்ற இதழில் அதன் ஒரு பகுதியை வெளியிட்டோம்.

அந்தக் கஅபா வரலாறு தரும் கரு இது தான்.

கண்ணியமிக்க ஏகத்துவ இமாம் இப்ராஹீம் நபியினால் கட்டப்பட்ட ஏகத்துவ மையமான கஅபா, அவர்களது சந்ததிகளால்      இணை வைப்பிற்குக் கடத்திச் செல்லப்பட்டது.

அதன் பின்னர் இப்ராஹீம் நபியின் சந்ததியில், இரத்த பந்தத்தாலும் ஏகத்துவ பந்தத்தாலும் சொந்தமான முஹம்மத் (ஸல்) அவர்கள் அதன் மீட்புப் பணியில் ஈடுபடுகின்றார்கள்.

தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அந்த மீட்புப் பணியை மேற்கொள்ளும் போது அந்த ஆலயத்திலிருந்து விரட்டியடிக்கப் படுகிறார்கள். பிறகு அவ்வூரை, மக்காவை விட்டும் துரத்தப் படுகிறார்கள்.

அகதியாய் ஆன அவர்கள் ஆட்சித் தலைவராக அந்த ஆலயத்தை மீட்டு, மீண்டும் ஏகத்துவ மையமாக ஆக்குகின்றார்கள். இதைத் தான் இந்தக் கஅபா வரலாற்றில் நாம் காணவிருக்கின்றோம்.

ஏகத்துவவாதிகளாகிய நாம் பல்வேறு சோதனைகளைச் சந்திக்கிறோம். ஊர் நீக்கம், தாக்குதல்கள், கொலை முயற்சி, பள்ளிவாசலில் தொழுவதற்குத் தடை போன்ற அக்கிரமங்கள் இன்றும் தொடர்கின்றன.

இதுபோன்ற சோதனைகளைச் சந்திக்கும் ஏகத்துவவாதிகள் துவண்டு விடாமல், கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாமல், ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) அவர்கள் கற்றுத் தந்த கொள்கை உறுதியுடன், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் நடந்தால் நமக்கும் இது போன்ற ஒரு வெற்றியை இறைவன் தருவான் என்ற படிப்பினையும் இந்த வரலாற்றில் அடங்கியுள்ளது.

இப்ராஹீம் நபியின் தியாகங்களை நினைத்துப் பார்க்கும் வகையில் அமைந்த இந்த ஹஜ் மாதத்தில், ஏகத்துவம் இதழை ஹஜ் சிறப்பிதழாக, கஅபா வரலாற்றுச் சிறப்பிதழாக உங்களுக்கு வழங்குகின்றோம்.

———————————————————————————————————————————————–

கஅபா வரலாறு

சென்ற இதழின் தொடர்ச்சி…

அன்பு மனைவியையும், அருமைச் செல்வன் இஸ்மாயீலையும் பாலைவனத்தில் விட்டு விட்டுத் திரும்பி விட்டார்கள் இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள்.

ஒரு பயணத்திற்குத் தேவையான, வாகனப் பிராணி சுமக்கின்ற அளவிலான தண்ணீர் தான் அன்னை ஹாஜர் அவர்களிடம் இருந்திருக்கும். அது பயணத்திற்குப் போதுமா என்பதே கேள்விக் குறி! பாலைவனத் தாகத்திற்கு நிச்சயமாக அது போதாது.

தண்ணீருக்குத் தவிக்கின்ற அன்னை ஹாஜர் அவர்கள் ஸஃபா குன்றில் ஏறிப் பார்க்கிறார்கள். மர்வாவுக்கு அருகில் தண்ணீர் தெரிகின்றது. உடனே மர்வா குன்றுக்கு ஓடி வருகிறார்கள். மர்வா குன்றின் மீது ஏறிப் பார்க்கையில் தன் கண்ணில் பட்டது தண்ணீர் அல்ல! கானல் நீர் தான் என்று விளங்குகின்றது.

மர்வாவிலிருந்து பார்க்கையில் ஸஃபாவில் தண்ணீர் ஓடுவதாகத் தெரிகிறது. அங்கு ஓடுகிறார்கள். அங்கும் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுகின்றது.

அன்னை ஹாஜர் ஓடிய அந்த ஓட்டம் தான் இன்று ஹஜ் செய்கின்ற ஹாஜிகளின் வணக்கமானது. இதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.

பூமியில் தமக்கு மிக அண்மையிலுள்ள மலையாக ஸஃபாவைக் கண்டார்கள். அதன் மீது (ஏறி) நின்று கொண்டு (மனிதர்கள்) யாராவது கண்ணுக்குத் தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டபடி பள்ளத்தாக்கை நோக்கிப் பார்வையைச் செலுத்தினார்கள். எவரையும் அவர்கள் காணவில்லை. ஆகவே, ஸஃபாவிலிருந்து இறங்கி விட்டார்கள். இறுதியில் பள்ளத்தாக்கை அவர்கள் அடைந்த போது தம் மேலங்கியின் ஓரத்தை உயர்த்திக் கொண்டு சிரமப்பட்டு ஓடும் ஒரு மனிதனைப் போன்று ஓடிச் சென்று பள்ளத்தாக்கைக் கடந்தார்கள். பிறகு மர்வா மலைக் குன்றுக்கு வந்து அதன் மீது (ஏறி) நின்று யாராவது தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டார்கள். எவரையும் காணவில்லை. இவ்வாறே ஏழு முறைகள் செய்தார்கள்.

இது தான் (இன்று ஹஜ்ஜில்) மக்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்கும் இடையே செய்கின்ற “சஃயு‘ (தொங்கோட்டம்) ஆகும்என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

நூல்: புகாரி 2264

இப்போது தான் ஓர் அற்புதம் நடக்கின்றது. அது தான் ஸம்ஸம் என்ற ஊற்றுக் கண்ணின் உதயமாகும். அன்னை ஹாஜர் அவசரப்பட்டு அள்ளவும், அணை கட்டவும் ஆரம்பித்தார்கள். இதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

அவர்கள் மர்வாவின் மீது ஏறி நின்று கொண்ட போது ஒரு குரலைக் கேட்டார்கள். உடனே, “சும்மாயிருஎன்று தமக்கே கூறிக் கொண்டார்கள். பிறகு, காதைத் தீட்டிக் கொண்டு கேட்டார்கள். அப்போதும் (அதே போன்ற குரலைச்) செவியுற்றார்கள். உடனே, “(அல்லாஹ்வின் அடியாரே!) நீங்கள் சொன்னதை நான் செவியுற்றேன். உங்களிடம் உதவியாளர் எவரேனும் இருந்தால் (என்னிடம் அனுப்பி என்னைக் காப்பாற்றுங்கள்)என்று சொன்னார்கள். அப்போது அங்கே தம் முன் வானவர் ஒருவரை (இப்போதுள்ள) ஸம்ஸம் (கிணற்றின்) அருகே கண்டார்கள். அந்த வானவர் தம் குதிகாலால் (மண்ணில்) தோண்டினார். (…அல்லது “தமது இறக்கையினால் தோண்டினார்என்று அறிவிப்பாளர் சொல்லியிருக்கலாம்…) அதன் விளைவாகத் தண்ணீர் வெளிப்பட்டது. உடனே ஹாஜர் (அலை) அவர்கள் அதை ஒரு தடாகம் போல் (கையில்) அமைக்கலானார்கள்; அதைத் தம் கையால் இப்படி (“ஓடிவிடாதே! நில்என்று சைகை செய்து) சொன்னார்கள். அந்தத் தண்ணீரிலிருந்து அள்ளித் தம் தண்ணீர்ப் பையில் போட்டுக் கொள்ளத் தொடங்கினார்கள். அவர்கள் அள்ளியெடுக்க எடுக்க அது பொங்கிய படியே இருந்தது.

நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ், இஸ்மாயீல் (அலை) அவர்களின் அன்னைக்குக் கருணை புரிவானாக! ஸம்ஸம் நீரை அவர் அப்படியே விட்டுவிட்டிருந்தால்… அல்லது அந்தத் தண்ணீரிலிருந்து அள்ளியிருக்கா விட்டால்…. ஸம்ஸம் நீர் பூமியில் ஓடும் ஓர் ஊற்றாக மாறிவிட்டிருக்கும்என்று சொன்னார்கள்என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.

நூல்: புகாரி 3364

பாலை மணற்பரப்பு முழுவதையும் நனைக்க வேண்டிய சுனை, அன்னையார் போட்ட அணைக்கட்டிற்குள் ஐக்கியமானது! அடங்கிப் போனது!

அவரது நாவையும், அவரது பாலகரின் நாவையும் மட்டும் அன்று நனைத்த அந்த நீர், அதன் பின்னர் உலகில் எந்த முனையிலிருந்து வந்த – வந்து கொண்டிருக்கின்ற – இனி வரப் போகின்ற கோடான கோடி மக்களின் நாவுகளையும் நனைக்கின்றது. தரையில் பெருக்கெடுத்துப் பிரவாகித்து ஓடாவிட்டாலும், அந்த மக்கள் கொண்டு வருகின்ற பீப்பாய்களில் தரை, கடல், ஆகாய மார்க்கமாக உலகின் பல பகுதிகளுக்கும் வெள்ளமாகப் பாய்ந்து கொண்டிருக்கின்றது. இது உண்மையில் ஒரு பேரற்புதம்! பெரும் அதிசயம்!

குடிநீரும் குடிமக்களும்

இந்தப் பேரற்புதம் பிறந்ததும் – குடிநீர் கொப்பளிக்க ஆரம்பித்ததும் – நீர் வளம் பொங்கத் துவங்கியதும் அதை நோக்கி மனித வளம் பெருக்கெடுத்து வந்து தங்கத் துவங்கியது. குடிநீர் கொப்பளிக்கும் அந்த இடத்தில் குடிமக்கள் கூடாரமடிக்கவும் குடியிருக்கவும் வந்தனர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நபி) இஸ்மாயீலின் தாயாருக்கு (ஹாஜருக்கு) அல்லாஹ் கருணை புரிவானாக! “ஸம்ஸம்நீரை அவர், (பள்ளம் தோண்டி அணை கட்டாமல்) விட்டு விட்டிருந்தால் – (அல்லது நபியவர்கள் இப்படிச் சொன்னார்கள்:) – தண்ணீரைக் கையால் அள்ளிக் குடிக்காமல் இருந்திருந்தால் – அது (நிற்காமல்) ஓடுகின்ற நீரோடையாக இருந்திருக்கும். (பிறகு) பனூ ஜுர்ஹும் குலத்தார் அங்கு வந்து, “உங்கள் இடத்தில் நாங்கள் தங்கி வசித்துக் கொள்ள நீங்கள் அனுமதிப்பீர்களா?” என்று (ஹாஜரிடம்) கேட்டார்கள். அதற்கு அவர்கள், “சரி; (தங்கி வசித்துக் கொள்ளுங்கள்.) ஆனால், (இந்தத்) தண்ணீரில் உங்களுக்கு எந்த பாத்தியதையும் இருக்காதுஎன்று கூறினார்கள். அதற்கு ஜுர்ஹும் குலத்தார், “சரி (அவ்வாறே ஒப்புக் கொள்கிறோம்)என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 2368

(யமன் நாட்டைச் சேர்ந்த) ஜுர்ஹும் குலத்தாரின் ஒரு குழுவினர்…. அல்லது ஜுர்ஹும் குலத்தாரில் ஒரு வீட்டார்…. அவர்களைக் கடந்து சென்றார்கள். அவர்கள் “கதாஎனும் கணவாயின் வழியாக முன்னோக்கி வந்து மக்காவின் கீழ்ப்பகுதியில் தங்கினர். அப்போது தண்ணீரின் மீதே வட்டமடித்துப் பறக்கும் (வழக்கமுடைய) ஒரு வகைப் பறவையைக் கண்டு, “இந்தப் பறவை தண்ணீரின் மீது தான் வட்டமடித்துக் கொண்டிருக்க வேண்டும்; நாம் இந்தப் பள்ளத்தாக்கைப் பற்றி முன்பே அறிந்திருக்கின்றோம். அப்போது இதில் தண்ணீர் இருந்ததில்லையேஎன்று (வியப்புடன்) பேசிக் கொண்டார்கள். பிறகு அவர்கள் ஒரு தூதுவரை அல்லது இரு தூதுவர்களை செய்தி அறிந்து வர அனுப்பினார்கள். அவர்கள் (சென்று பார்த்த போது) அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டார்கள். உடனே அவர்கள் (தம் குலத்தாரிடம்) திரும்பிச் சென்று அங்கே தண்ணீர் இருப்பதைத் தெரிவித்தார்கள். உடனே அக்குலத்தார், இஸ்மாயீலின் அன்னை தண்ணீரருகே இருக்க முன்னே சென்று, “நாங்கள் உங்களிடம் தங்கிக் கொள்ள எங்களுக்கு நீங்கள் அனுமதியளிப்பீர்களா?” என்று கேட்க, அவர்கள், “ஆம் (அனுமதியளிக்கிறேன்); ஆனால், தண்ணீரில் உங்களுக்கு உரிமை ஏதும் இருக்காதுஎன்று சொன்னார்கள். அவர்கள், “சரிஎன்று சம்மதித்தனர்.

“(ஜுர்ஹும் குலத்தார் தங்கிக் கொள்ள அனுமதி கேட்ட) அந்தச் சந்தர்ப்பம் இஸ்மாயீலின் தாயாருக்கு, அவர்கள் (தனிமையால் துன்பமடைந்து) மக்களுடன் கலந்து வாழ்வதை விரும்பிக் கொண்டிருந்த வேளையில் வாய்த்ததுஎன்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்…என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

நூல்: புகாரி 3364

நபி (ஸல்) அவர்களின் இந்தக் கூற்றிலிருந்து அன்னை ஹாஜர் அவர்களுக்கு ஏற்பட்ட தனிமையையும் அதன் கோரத் தாக்கத்தையும் உணரலாம்.

மக்களின் இந்த வருகை, சாரை சாரையாக வந்து சங்கமிக்கும் அவர்களது சஞ்சாரம் எதைக் காட்டுகின்றது?

ஈரமில்லாத இறுகிய பாலையில், நீர் வளமில்லாத நிலத்தில் தன் ஈரக்குலை இஸ்மாயீலை விட வேண்டும் என்ற இறைக் கட்டளை வந்த போது அதை அப்படியே நிறைவேற்றிய இப்ராஹீம் (அலை) அவர்கள், இறைவனிடத்தில் கேட்ட பிரார்த்தனை அப்படியே ஒப்புக் கொள்ளப்பட்டதை இங்கே நாம் பார்க்கிறோம்.

எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலயத்திற்கருகில், விவசாயத்துக்குத் தகுதி இல்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறைவேற்றுவதற்காக குடியமர்த்தி விட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களில் சிலரது உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக! இவர்கள் நன்றி செலுத்திட இவர்களுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக!

அல்குர்ஆன் 14:37

துளியளவு கூட மனித சஞ்சாரமில்லாத ஒரு பாலைவனத்தில் தனது துளிர் இஸ்மாயீலை நோக்கி மனித உள்ளங்களை ஈர்க்கச் செய் என்று இப்ராஹீம் நபி கேட்ட பிரார்த்தனையை அல்லாஹ் ஒப்புக் கொண்டு விட்டான்.

இவ்வளவும் எதற்காக? அங்கே திட்டாகக் காட்சியளிக்கும் புனிதத் தலம் புனர் நிர்மாணம் பெறுவதற்காக! புதுப்பிக்கப்படுவதற்காக! இதற்காகத் தான் இந்த இறை ஏற்பாடு!

அந்த முதல் ஆலயம் – முதல் மனிதர் ஆதம் நபி தொழுத அந்தத் தூய வணக்கத்தலம் ஒரு மணல் திட்டாகக் கிடக்கின்றது. மீண்டும் அது மையமாக மாற அந்த மண் வாசனைக்குத் தேவை மனித வாசனை! அந்த மனித வாசனையாகத் தான் இஸ்மாயீல், ஹாஜர் ஆகியோரைத் தொடர்ந்து ஜுர்ஹும் கிளையார் வந்து சங்கமிக்கின்றனர்.

இவ்வாறு அங்கு ஒரு மனித சமுதாயத்தின் கிளை தழைத்துக் கொண்டிருந்தது.

கனவை நனவாக்கும் இறைத்தூதர்

இஸ்மாயீல் (அலை) அவர்கள் மனித சஞ்சாரத்துடன் வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கையில் அவரைச் சந்திக்க வந்த தந்தை இப்ராஹீம் (அலை) அவர்கள், தாம் கண்ட கனவைத் தெரிவிக்கின்றார்கள். இதைத் திருக்குர்ஆன் ஒளியில் பார்ப்போம்.

அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது “என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறுஎன்று கேட்டார். “என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப் பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்என்று பதிலளித்தார்.

அல்குர்ஆன் 37:102

கனவை நனவாக்குவதற்காக தமது மகனை அறுத்துப் பலியிடச் சென்ற இப்ராஹீம் (அலை) அவர்களை ஷைத்தான் மூன்று இடங்களில் வழி மறிக்கிறான். அந்த மூன்று இடங்களிலும் அவர்கள் ஷைத்தானின் மீது கல்லெறிகின்றார்கள்.

இப்ராஹீம் நபி கல்லெறிந்த சம்பவத்தை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நாம் நேரடியாக எந்த ஆதாரத்தையும் காண முடியவில்லை. ஆயினும் நபி (ஸல்) அவர்கள் ஹஜ் வணக்கத்தின் போது மூன்று இடங்களிலும் கல்லெறிதலை வணக்கமாக்கியுள்ளார்கள்.

ஹஜ் வணக்கம் நபி (ஸல்) அவர்களுக்கு முன்பே அறியாமைக் காலம் வரை குறைஷிகளால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அந்த ஹஜ் வணக்கத்தில் கலந்து விட்ட தீயவைகளை, இல்லாதவற்றைக் களைந்து நல்லவற்றை மட்டும் முஹம்மது (ஸல்) அவர்கள் நடைமுறைப் படுத்தினார்கள். ஷைத்தானை நோக்கிக் கல்லெறிதலை நபி (ஸல்) அவர்கள் ஹஜ் வணக்கமாக ஆக்கியுள்ளதால் இப்ராஹீம் நபியவர்கள் கல்லெறிந்த இந்தச் சம்பவம் உண்மையானது என்று விளங்கிக் கொள்ளலாம்.

ஷைத்தானின் வழிமறிப்பைத் தாண்டி இப்ராஹீம் நபியவர்கள் தமது மகன் இஸ்மாயீலை அறுத்துப் பலியிட முனைகின்றார்கள். அப்போது தான் அல்லாஹ் அதை நிறுத்தி, ஓர் ஆட்டைப் பலியிடச் செய்தான்.

இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, “இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்என்று அவரை அழைத்துக் கூறினோம்.

அல்குர்ஆன் 37:103-105

இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம்.

அல்குர்ஆன் 37:106-107

இதை ஒரு பெரும் சோதனை என்று இறைவன் குறிப்பிடுகின்றான்.

சந்ததியுடன் ஒரு சந்திப்பு

இந்தப் பலியீடு நடந்த பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் தம் மகனை விட்டு விட்டுச் சென்று விடுகிறார்கள். சில காலத்திற்குப் பிறகு சந்திக்க வருகிறார்கள். அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்கள் திருமணம் முடித்திருந்தார்கள்.

இஸ்மாயீலின் மனைவியிடம் இஸ்மாயீலைக் குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர், “எங்களுக்காக வருமானம் தேடி வெளியே சென்றிருக்கிறார்என்று சொன்னார். இப்ராஹீம் (அலை) அவர்கள், “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் (நலம் தானா)?”    என்று கேட்டார்கள். மேலும், அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார். அதற்கு இஸ்மாயீலின் துணைவியார், “நாங்கள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம்என்று சொல்லிவிட்டு உயர்ந்தவனும் வல்லவனுமான அல்லாஹ்வைப் புகழ்ந்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள், “உங்கள் உணவு எது?” என்று கேட்க அவர், “இறைச்சிஎன்று பதிலளித்தார். அவர்கள், “உங்கள் பானம் எது?” என்று கேட்க, “தண்ணீர்என்று பதிலளித்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள், “இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும் தண்ணீரிலும் பரக்கத்தை – அருள் வளத்தை அளிப்பாயாக!என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “அந்த நேரத்தில் அவர்களிடம் உணவு தானியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் அருள்வளம் தரும்படி இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தித்திருப்பார்கள். ஆகவே தான், மக்காவைத் தவிர பிற இடங்களில் அவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்ணீரையும்) வழக்கமாகப் பயன்படுத்தி வருபவர்களுக்கு அவை ஒத்துக் கொள்வதேயில்லைஎன்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 3364

உண்மையில் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுவது போல் இது ஓர் அற்புதம் தான். மக்காவின் இறைச்சியில் பரக்கத்தை வேண்டி இப்ராஹீம் (அலை) அவர்கள் செய்த பிரார்த்தனையின் வலிமையை இப்போதும் நாம் பார்க்க முடிகின்றது. மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் குழுமுகின்ற மக்காவில், லட்சக்கணக்கான கால்நடைகள் பலியிடப்படுகின்றன. உலகில் வேறெந்த பகுதியிலும் இந்த அற்புதத்தை நாம் பார்க்கவே முடியாது.

கஅபாவைக் கட்டுமாறு கட்டளை

இதன் பின்னர் கஅபாவைக் கட்டுமாறு இப்ராஹீம் நபிக்கும், இஸ்மாயீல் நபிக்கும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதி மொழி வாங்கினோம்.

அல்குர்ஆன் 2:125

வெறும் மணல் மேட்டை மண்ணின் சிகரமாக, ஏகத்துவத்தின் மாபெரும் மையமாக அந்த ஆலயத்தை அமைக்கச் செய்கின்றான்.

எனக்கு எதையும் இணை கற்பிக்காதீர்! தவாஃப் செய்வோருக்காகவும், நின்று வணங்குவோருக்காகவும், ருகூவு செய்து ஸஜ்தா செய்வோருக்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!என்று (கூறி) அந்த ஆலயத்தின் இடத்தை இப்ராஹீமுக்கு நாம் நிர்ணயித்ததை நினைவூட்டுவீராக!

அல்குர்ஆன் 22:26

புத்தாக்கம் பெற்ற புனித கஅபா

இதன்படி இப்ராஹீம், இஸ்மாயீல் ஆகிய இரு இறைத் தூதர்களும் புனித ஆலயத்தை எழுப்புகின்ற புனிதப் பணியைத் துவங்கினர்.

அந்த ஆலயத்தின் அடித்தளத்தை இப்ராஹீமும், இஸ்மாயீலும் உயர்த்திய போது “எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்” (என்றனர்.)

அல்குர்ஆன் 2:127

இரு வாசல்கள்

(இன்று தலைக்கு மேல் கஅபாவின் வாசல் அமைந்திருப்பது போல் அல்லாமல்) இப்ராஹீம் நபி, கஅபாவை தரையுடன் ஒட்டியே கட்டியிருந்தார்கள். அதற்குக் கிழக்கிலும், மேற்கிலும் மக்கள் உள்ளே சென்று வரத் தக்க வகையில் இரு வாசல்களை அமைத்திருந்தார்கள்.

இன்று ஹிஜ்ர் என்ற அரை வட்டம் கஅபாவை விட்டும் ஆறு முழங்கள் தள்ளி, தனியாகக் கிடக்கின்றது. ஆனால் இப்ராஹீம் (அலை) அவர்கள் அந்த அரை வட்டத்தையும் கஅபாவுடன் உள்ளடக்கியே கட்டியிருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன் சமுதாயத்தார் “அறியாமைக் காலத்திற்குஅல்லது “இறைமறுப்பிற்குநெருக்கமானவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்பது மட்டும் இல்லையாயின், கஅபாவின் கருவூலங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிட்டிருப்பேன். மேலும், “ஹிஜ்ர்எனும் அரை வட்டப் பகுதியை கஅபாவுடன் இணைத்து, கஅபாவின் தலை வாயிலை (கீழிறக்கி) பூமியோடு சேர்ந்தாற்போல் ஆக்கியிருப்பேன்என்றார்கள்.

நூல்: முஸ்லிம் 2587

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆயிஷா! உன் சமுதாயத்தார் இணைவைப்புக்கு நெருக்கமான காலத்தவர்கள் என்பது மட்டும் இல்லையாயின், கஅபாவை நான் இடித்துவிட்டு, (உயர்ந்திருக்கும் அதன் தளத்தைத்) தரையோடு சேர்ந்தாற்போல் ஆக்கியிருப்பேன். மேலும், கிழக்கே ஒன்றும் மேற்கே ஒன்றுமாக அதற்கு இரு வாயில்களை அமைத்திருப்பேன். “ஹிஜ்ர்பகுதியில் ஆறு முழங்களைக் கூடுதலாக்கி இருப்பேன். ஏனெனில், குறைஷியர் கஅபாவை(ப் புதுப்பித்து)க் கட்டிய போது அதைக் குறைத்து (சற்று உள்ளடக்கிக் கட்டி) விட்டனர்என்றார்கள்.

நூல்: முஸ்லிம் 2588

ஒப்புக்கொள்ளுமாறு உயரிய பிரார்த்தனை

கஅபாவைக் கட்டி முடித்த பின் இப்ராஹீம், இஸ்மாயீல் ஆகிய இருவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றார்கள்.

எங்கள் இறைவா! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியுறுபவன்; அறிந்தவன்” (என்றனர்.)

அல்குர்ஆன் 2:127

ஹஜ்ஜைக் கற்றுத் தர கோரிக்கை

எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 2:128

தூதரை அனுப்புமாறு தூய பிரார்த்தனை

எங்கள் இறைவா! அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 2:129

இந்தப் பிரார்த்தனைகள் அனைத்தும் வல்ல அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

இணை வைப்பாளர்களின் பிடியில் இறையில்லம்

ஆலயப் பணியை முடித்த இப்ராஹீம் (அலை) அவர்களிடம், ஹஜ்ஜுக்கு மக்களை அழைக்குமாறு இறைவன் கட்டளையிடுகிறான்.

மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக! அவர்கள் உம்மிடம் நடந்தும், ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் வருவார்கள். அவை அவர்களைத் தொலைவிலுள்ள ஒவ்வொரு பாதையிலிருந்தும் கொண்டு வந்து சேர்க்கும்” (என்றும் கூறினோம்.)

அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காகக் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!

பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும்.

அல்குர்ஆன் 22:27-29

அன்றிலிருந்து துவங்கிய ஹஜ் வணக்கம், குறைஷியர்களிடம் வாழையடி வாழையாகத் தொடர்ந்தது. காலப்போக்கில் குறைஷிகள் இணை வைப்பில் மூழ்கினர். இப்ராஹீம் நபியின் மார்க்கத்தை மறந்தனர். தாங்கள் விரும்பியவற்றை எல்லாம் ஹஜ்ஜில் நுழைத்தனர்.

நிர்வாண தவாஃப்

குறைஷிகள் ஹஜ்ஜில் நுழைத்தது தான் நிர்வாண தவாஃப் ஆகும். இது போன்ற அநாகரீக, ஆபாசமான காரியங்களை ஏன் செய்கிறீர்கள்? என்று கேட்டால் அதற்கு அவர்கள் அளித்த பதில்:

அவர்கள் வெட்கக்கேடான காரியத்தைச் செய்யும் போது “எங்கள் முன்னோர்களை இப்படித் தான் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்குக் கட்டளையிட்டான்என்று கூறுகின்றனர். “அல்லாஹ் வெட்கக் கேடானதை ஏவ மாட்டான். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?” என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 7:28

அல்லாஹ்வே இதற்குப் பதிலும் கூறி விடுகின்றான். ஹிஜிரி 9ம் ஆண்டு வரை இந்த நிர்வாண தவாஃப் குறைஷிகளிடம் தொடர்ந்தது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறியலாம்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் (தலைமையில் “ஹஜ்ஜத்துல் வதாவிற்கு முந்தைய ஆண்டு நடந்த) அந்த ஹஜ்ஜின் போது “இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்ய (வர)க்கூடாது; நிர்வாணமானவர் எவரும் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரக்கூடாதுஎன்று “மினாவில் பொது அறிவிப்புச் செய்யும்படி சிலரை அனுப்பி வைத்தார்கள். அவர்களுடன் என்னையும் அனுப்பினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 369

ஓரிறைக் கொள்கை மையத்தில் உருவப் படங்கள்

கஅபாவெனும் அந்த ஆலயம் ஓரிறைக் கொள்கையின் உச்சக்கட்ட, உயர்மட்ட மையமாகும். இந்த மையத்திலேயே குறைஷிகள் உருவப் படங்களை வரைந்தனர். அதுவும் ஏகத்துவக் கொள்கையின் சின்னங்களாக, சிகரங்களாகத் திகழ்ந்த இப்ராஹீம், இஸ்மாயீல் ஆகியோரது உருவப் படங்களை வரைந்தனர். அவர்களது கையில் குறி கேட்கும் அம்புகளைக் கொடுத்து அழகு பார்த்தனர்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்த போது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறி பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவங்களும் இருந்தன. அவற்றையும் வெளியேற்றினார்கள். இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களை அழிப்பானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்விரு நபிமார்களும் அம்புகள் மூலமாகக் குறி பார்ப்பவர்களாக ஒரு போதும் இருந்ததில்லை என்பதை இதைச் செய்தவர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்என்று கூறிவிட்டுக் கஅபாவில் நுழைந்தார்கள். அதன் ஓரங்களில் (நின்று) தக்பீர் கூறினார்கள்; அதில் தொழவில்லை.

நூல்: புகாரி 1601, 3352

360 சிலைகள்

அந்தப் புனித ஆலயத்தில் நாளுக்கொரு தெய்வம் என்ற ரீதியில் 360 சிலைகளை கஅபாவைச் சுற்றி அமைத்திருந்தனர்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருக்க, மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள், தம் கையிலிருந்த குச்சியால் அவற்றை (குத்தி) அடிக்கத் தொடங்கினார்கள். “உண்மை வந்து விட்டது; பொய் அழிந்து விட்டது” (திருக்குர்ஆன் 17:81) என்னும் வசனத்தைக் கூறத் தொடங்கினார்கள்.

நூல்: புகாரி 2478

திருக் கஅபாவில் தீண்டாமை

ஹஜ் என்ற வணக்கமே தீண்டாமையை உடைத்தெறியும் ஓர் உன்னத, உயர்ந்த வணக்கமாகும். அந்த வணக்கத்தில் கூட இந்தக் குறைஷியர் தீண்டாமையைப் புகுத்தினர்.

கஅபாவின் வாசலைத் தரையோடு தரையாக வைக்காமல் அதை மேலே உயர்த்தி வைத்தனர். இதற்கு அடிப்படைக் காரணம் தங்கள் குலப் பெருமையை நிலைநாட்டுவது தான்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் கஅபாவின் அருகிலுள்ள ஒரு (வளைந்த சிறு) சுவரைப் பற்றி, “இது கஅபாவில் சேர்ந்ததா?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம்!என்றார்கள். பிறகு நான் “எதற்காக அவர்கள் இதனைக் கஅபாவோடு இணைக்கவில்லை?” எனக் கேட்டேன். அதற்கவர்கள் “உனது சமூகத்தாருக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் தான்!என்று பதிலளித்தார்கள். நான் “கஅபாவின் வாசலை உயரத்தில் வைத்திருப்பதற்குக் காரணம் என்ன?” எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “தங்களுக்கு வேண்டியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும் தங்களுக்கு வேண்டாதவர்களைத் தடுத்து விடுவதற்காகவும் தான் உனது கூட்டத்தினர் அவ்வாறு செய்தார்கள். “உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாக இருப்பதால், அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும்என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் நான் இச்சுவரைக் கஅபாவினுள் இணைத்து அதன் கதவைக் கீழிறக்கி பூமியோடு சேர்ந்தாற் போலாக்கியிருப்பேன்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1584

மக்கள் அரஃபாவில் ஒன்று கூடுகின்ற போது குறைஷிகள் மட்டும் அவர்களுடன் சேர மாட்டார்கள்; முஸ்தலிஃபாவிலேயே நின்று கொள்வார்கள். இதன் மூலம் தங்கள் உயர் சாதிக் கொள்கையை நிறுவினர்.

(அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின் போது) குறைஷியரும் அவர்களுடைய மதத்தவர்களும் முஸ்தலிஃபாவிலேயே தங்கி விடுவார்கள். (ஹரம் – புனித எல்லையை விட்டு வெளியேற மாட்டார்கள்.) அவர்கள் (இந்த விஷயத்தில்) “உறுதிமிக்கவர்கள்எனப் பெயரிடப்பட்டு வந்தனர். மற்ற அரபுகள் அனைவருமே அரஃபாத்தில் தங்கி வந்தார்கள். இஸ்லாம் வந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (ஃதுல்ஹஜ் 9ஆவது நாளில்) அரஃபாத் சென்று, அங்கே தங்கியிருந்துவிட்டு அங்கிருந்தே திரும்ப வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டான். அந்தக் கட்டளை தான் “மக்கள் அனைவரும் திரும்புகின்ற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்எனும் (2:199ஆவது) இறை வசனமாகும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 4520

கூத்துக்கள்; கும்மாளங்கள்

கஅபாவெனும் ஆலயத்தில் வணக்கம் என்ற பெயரில் கூத்துக்கள் கும்மாளங்கள் அடித்துக் கொண்டிருந்தனர்.

சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர (வேறெதுவும்) இந்த ஆலயத்தில் அவர்களின் தொழுகையாக இருக்கவில்லை.

அல்குர்ஆன் 8:35

மக்கத்து அரபிகள் – குறைஷியர்கள் ஹஜ் எனும் வணக்கத்தை மட்டுமன்றி இப்ராஹீம் நபியவர்கள் கற்றுக் கொடுத்த தூய இஸ்லாத்தையே சிதைத்து விட்டிருந்தனர்.

புனித ஆலயத்திற்குப் போர்வை போர்த்துதல்

ஏகத்துவச் சின்னமான அந்த இறை இல்லத்தை இப்படிச் சின்னாபின்னப் படுத்திவிட்டு அதற்குப் போர்வை போர்த்துவதில் ஒரு குறையும் வைக்கவில்லை. அவர்கள் முஹர்ரம் பத்தாம் நாளில் கஅபாவிற்குப் போர்வை போர்த்திக் கொண்டிருந்தனர்.

ரமளான் நோன்பு கடமையாக்கப்படுதவற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் 10ஆம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 1592

ஏகத்துவக் கொள்கையைக் குழி தோண்டிப் புதைத்த குறைஷியர்கள், இது போன்ற சடங்குகளை மட்டும் விட்டு வைக்கவில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கலாம்.

அஸ்திவாரத்தை மாற்றிய குறைஷியர்

இப்ராஹீம் (அலை) அவர்கள் கொண்டு வந்த ஏகத்துவம் எனும் அஸ்திவாரத்தை மாற்றி விட்ட குறைஷிகள், கஅபாவின் அஸ்திவாரத்தையும் சேர்த்தே மாற்றினர்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “ஆயிஷா! நிச்சயமாக உனது கூட்டத்தினர் கஅபாவைக் கட்டும் போது இப்ராஹீம் (அலை) இட்ட அடித்தளத்தைக் குறைத்து விட்டார்கள் என்பதை நீ அறியவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! இப்ராஹீம் (அலை) இட்ட அடித்தளத்தின்படி நீங்கள் அதை மாற்றலாமல்லவா?” எனக் கேட்டேன். “உனது கூட்டத்தினர் இப்போது தான் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்; இல்லை எனில் அவ்வாறே நான் செய்திருப்பேன்என்றார்கள்.

நூல்: புகாரி 1583

குறைஷிகள் காலத்தில் நடந்த இந்தக் கஅபா புனரமைப்புப் பணியில் நபி (ஸல்) அவர்களும் ஈடுபட்டிருந்தார்கள்.

(நபியவர்களின் காலத்தில் குறைஷிகளால்) கஅபா (புதுப்பித்துக்) கட்டப்பட்ட போது நபி (ஸல்) அவர்களும் அப்பாஸ் (ரலி) அவர்களும் கற்களை(ச் சுமந்து) எடுத்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் (சிறுவரான) நபி (ஸல்) அவர்களிடம், “உங்கள் வேட்டியை (கழற்றி) உங்கள் கழுத்துக்கு மேல் வைத்துக் கொள்ளுங்கள். கல்லி(ன் சுமையால் ஏற்படும் வலியி)லிருந்து அது உங்களைக் காப்பாற்றும்என்று சொன்னார்கள். (நபி (ஸல்) அவர்கள் அப்படிச் செய்ய முனைந்த போது) அவர்கள் பூமியில் (மூர்ச்சித்து) விழுந்து விட்டார்கள். அவர்களுடைய இரு கண்களும் வானத்தை நோக்கியபடி நிலைகுத்தி நின்று விட்டன. பிறகு மூர்ச்சை தெளிந்ததும், “என் வேட்டி, என் வேட்டிஎன்று கேட்கலானார்கள். (வேட்டி தரப்பட்ட) உடனே அதை இறுக்கமாக கட்டிக் கொண்டார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி)

நூல்: புகாரி 3829

இந்தப் புனரமைப்பின் போது குறைஷிகள் கஅபாவின் ஓரங்கமான ஹிஜ்ர் என்ற அரை வட்டத்தை 6 முழங்கள் தள்ளிக் கட்டினர். ஆனால் அன்று புனித கஅபாவின் புனரமைப்பில் ஈடுபட்டிருந்த முஹம்மது (ஸல்) அவர்களுக்கு, தாம் ஒரு இறைத் தூதர் ஆகப் போகிறோம், இந்தப் புனித கஅபாவின் ஒட்டுமொத்த நிர்வாகமும் தம் கைவசம் வரப் போகின்றது என்று தெரிந்திருக்கவில்லை.

புனரமைப்புப் பணியில் ஈடுபடும் மக்களில் தாமும் ஒருவர் என்ற அளவிலேயே அவர்களது அன்றைய பங்கெடுப்பு அமைந்திருந்தது. இவ்வாறு குறைஷிகள் காலத்தில் கஅபா புத்தாக்கம் பெற்றது; புது வடிவம் அடைந்தது.

கஅபாவின் அஸ்திவாரம் மாற்றப்பட்டதுடன், இப்ராஹீம் (அலை) அவர்கள் கொண்டு வந்த ஏகத்துவம் எனும் அஸ்திவாரத்தை விட்டும் தரையிறங்கிக் கிடந்தது. அந்தக் கொள்கை அஸ்திவாரத்தை மாற்றுவதற்காகவும், தரையிரங்கிக் கிடந்த அந்த அஸ்திவாரத்தைத் தூக்கி நிறுத்துவதற்காகவும் இதோ முஹம்மது (ஸல்) அவர்கள் தூதுச் செய்தியைப் பெறுகின்றார்கள்.

கஅபாவைக் கட்டி முடித்ததும், “இந்த ஆலயத்தை அதன் கொள்கை அஸ்திவாரத்தில் கொண்டு செல்ல ஒரு தூதரை அனுப்பு’ என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் செய்த பிரார்த்தனை நிறைவேறும் தருணம் வந்தது. ஆம்! தூதர் இப்ராஹீம் கேட்ட துஆ ஒப்புக் கொள்ளப்பட்டது.

வஹீ வருகின்றது! வரலாறு மாறுகின்றது!

“ஓதுவீராக!’ என்ற வசனத்தின் மூலம் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத் தூதராக நியமிக்கப்படுகின்றார்கள். அதன் பின்னர் அடுக்கடுக்காக இறங்கிய வசன மழைகள், வறண்ட மக்காவின் வரலாற்றை மாற்றும் விதத்தில் அமைந்தன.

தூதுச் செய்தி வருவதற்கு முன்னால் குறைஷிகளிடம் நெருக்கத்தில் இருந்த – அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்த முஹம்மது (ஸல்) அவர்கள் இப்போது தூரத்தில் போய் விட்டார்கள். குறைஷிகளின் உள்ளத்தை விட்டு மட்டுமல்ல! ஊரை விட்டும் தூரமாகி விட்டார்கள். ஆம்! முஹம்மத் (ஸல்) அவர்களை ஊர் நீக்கம் செய்கின்றார்கள். புனித கஅபாவில் தொழ விடாமல் தடுக்கின்றார்கள். கஅபாவிற்கு உள்ளே நபியவர்களைத் தாக்கவும் செய்கின்றார்கள்.

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபா அருகில் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது (அபூஜஹ்ல், உக்பா பின் அபீமுஐத் உள்ளிட்ட) குறைஷிக் குழாம் ஒன்று தங்கள் அவையில் கூடியிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவன், “இந்த பகட்டுக்காரரை நீங்கள் பார்க்கவில்லையா?” என்று கூறிவிட்டு, “இறைச்சிக்காக அறுக்கப்பட்ட இன்ன குடும்பத்தாரின் ஒட்டகத்தை நோக்கிச் சென்று அதன் சாணத்தையும், அதன் இரத்தத்தையும் அதன் கருவைச் சுற்றியுள்ள சவ்வையும் கொண்டு வந்து, முஹம்மத் சிர வணக்கம் செய்யும் நேரம் பார்த்து அவரது முதுகின் மீது அதை வைத்து விட வேண்டும். (யார் இதற்குத் தயார்?)” என்று கேட்டான். அங்கிருந்தவர்களிலேயே படு பாதகனாயிருந்த ஒருவன் (அதற்கு) முன்வந்தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிர வணக்கம் செய்த போது அவர்களுடைய முதுகின் மீது அ(ந்த அசுத்தத்)தைப் போட்டனர். நபி (ஸல்) அவர்கள் அப்படியே சிர வணக்கம் செய்தவாறே இருந்தார்கள்.

(இதைப் பார்த்துக் கொண்டிருந்த குறைஷியர்) ஒருவர் மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். உடனே ஒருவர் (நபியவர்களின் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களை நோக்கிச் சென்றார். -அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் சிறுமியாக இருந்தார்கள். (செய்தியறிந்த) ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஓடோடி வந்தார்கள்.

அவர்கள் வந்து அசுத்தங்களை அவர்களை விட்டும் எடுத்தெறியும் வரை நபியவர்கள் அப்படியே சிர வணக்கம் செய்தபடியே இருந்தார்கள். அ(வ்வாறு செய்த)வர்களைப் பார்த்து ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஏசினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் (பின்வருமாறு) பிராத்தித்தார்கள்:

இறைவா! குறைஷியரை நீ கவனித்துக் கொள்வாயாக! இறைவா! குறைஷியரை நீ கவனித்துக் கொள்வாயாக! என்று (பொதுவாகக்) கூறிவிட்டு, “அல்லாஹ்வே! அம்ர் பின் ஹிஷாம் (அபூஜஹ்ல்), உத்பா பின் ரபிஆ, ஷைபா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா, உமய்யா பின் கலஃப், உக்பா பின் அபீமுஐத், உமாரா பின் அல்வலீத் ஆகியோரை நீ கவனித்துக் கொள்வாயாக!என்று (ஏழு பேரின்) பெயர் குறிப்பிட்டுப் பிராத்தித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 520, 2934 முஸ்லிம் 3349

ஆலயத் தடுப்பில் அபூஜஹ்ல்

இந்த அநியாயங்களை அரங்கேற்றிய அபூஜஹ்ல் போன்றோரைப் பார்த்துத் தான் அல்லாஹ் மிகக் கடுமையாகக் கண்டித்து வசனங்களை இறக்குகின்றான்.

தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா? அவர் நேர் வழியில் இருப்பதையே, அல்லது இறையச்சத்தை ஏவுவதையே அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா? அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? அவ்வாறில்லை அவன் விலகிக் கொள்ளவில்லையானால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த பொய் கூறிய முன் நெற்றி. அவன் தனது சபையோரை அழைக்கட்டும். நாம் நரகின் காவலர்களை அழைப்போம். எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர்! ஸஜ்தாச் செய்வீராக! நெருங்குவீராக!

அல்குர்ஆன் 96:9-19

அபூஜஹ்ல் கூட்டத்தினரின் ஆலயத் தடுப்பு நீடிக்கின்றது. இந்த ஆதிக்க வர்க்கத்தின் அடாவடித்தனங்களின் இறுதிக் கட்டம் தான் ஹிஜ்ரத்! மக்கா துறப்பு!

தங்கள் இறைவன் அல்லாஹ் என்று சொன்ன ஒரே காரணத்திற்காக நாடு துறக்கும் நிலைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். இப்போதும் அபூஜஹ்லின் ஆத்திரம் தணிந்தபாடில்லை! ஆலயத் தடுப்பு நடவடிக்கையை நிறுத்தியபாடில்லை.

சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் உம்ரா செய்யச் சென்றார்கள். (மக்காவில் இணை வைப்போரின் தலைவர்களில் ஒருவனான) உமய்யா பின் கலஃப் அபூ ஸஃப்வானிடம் தங்கினார்கள். உமய்யா (வியாபாரத்திற்காக) ஷாம் நாட்டிற்கு மதீனா வழியாகச் செல்லும் போது சஅத் (ரலி) அவர்களிடம் தங்கு(ம் பழக்கம் உடையவன் ஆ)வான். உமய்யா, “நண்பகல் நேரம் வரும் வரை சற்றுக் காத்திருந்து, மக்கள் ஓய்வெடுத்துக் கொள்ளும் (அந்த) நேரத்தில் நீங்கள் சென்று (கஅபாவை) வலம் வரலாமேஎன்று கேட்டான்.

அவ்வாறே, சஅத்(ரலி) அவர்கள் வலம் வந்து கொண்டிருந்த போது அபூஜஹ்ல் வந்து, “கஅபாவை வலம் வருவது யார்?” என்று கேட்டான். சஅத் (ரலி) அவர்கள், “நான் தான் சஅத்என்று கூறினார்கள். அதற்கு அபூஜஹ்ல், “(மதீனாவாசிகளான) நீங்கள் முஹம்மதுக்கும் அவருடைய தோழர்களுக்கும் (மதீனாவில்) புகலிடம் கொடுத்திருக்க, இங்கே கஅபாவை நீ அச்சமின்றி வலம் வந்து கொண்டிருக்கிறாயா?” என்று கேட்டான்.

அதற்கு சஅத் (ரலி) அவர்கள், “ஆம் (அதற்கென்ன?)” என்று கேட்டார்கள். அவ்விருவருக்கும் இடையே (அதையொட்டி) சச்சரவும் வாக்குவாதமும் ஏற்பட்டது. உடனே உமய்யா, சஅத் (ரலி) அவர்களிடம், “அபுல் ஹகமை விட குரலை உயர்த்தாதீர். ஏனெனில், அவர் இந்த (மக்கா) பள்ளத்தாக்கின் தலைவர்என்று சொன்னான். பிறகு சஅத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இறையில்லத்தை வலம் வர விடாமல் என்னை நீ தடுத்தால் நீ ஷாம் நாட்டிற்குச் செல்லும் வாணிபப் பாதையை நான் துண்டித்து விடுவேன்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 3632

கிப்லாவான கஅபா

கஅபா, இணை வைப்பாளர்களின் நிர்வாகத்தில் இருந்தாலும் அதை எல்லாம் வல்ல அல்லாஹ், ஹிஜிரி இரண்டாம் ஆண்டில் முஸ்லிம்களின் கிப்லாவாக ஆக்கி, அது முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் வரப் போகின்றது என்பதை உணர்த்தி விட்டான்.

(முஹம்மதே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்புவீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! “இதுவே தமது இறைவனிடமிருந்து வந்த உண்மைஎன்று வேதம் கொடுக்கப்பட்டோர் அறிவார்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.

வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அத்தனை சான்றுகளையும் (முஹம்மதே!) நீர் கொண்டு சென்றாலும் அவர்கள் உமது கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள். நீர் அவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவராக இல்லை. அவர்களிலேயே ஒருவர் மற்றவரின் கிப்லாவைப் பின்பற்றுபவராக இல்லை. உமக்கு விளக்கம் வந்த பின் அவர்களின் மனோ இச்சையை நீர் பின்பற்றினால் நீர் அநீதி இழைத்தவராவீர்!

அல்குர்ஆன் 2:144, 145

நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும், எனது அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப் படுத்துவதும், நீங்கள் நேர் வழி பெறுவதுமே இதற்குக் காரணம். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்!

அல்குர்ஆன் 2:150

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த ஆரம்பத்தில் “தம் பாட்டனார்களி(ன் வம்சா வழியினரி)டத்தில்அல்லது “அன்சாரிகளிலுள்ள தம் மாமன்மார்களி(ன் வம்சா வழியினரி)டத்தில்தங்கியிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் (ஜெரூசலேமிலுள்ள) பைத்துல் மக்திஸ் நோக்கி “பதினாறு மாதங்கள்அல்லது “பதினேழு மாதங்கள்தொழுதார்கள். (மக்காவிலுள்ள) இறையில்லம் கஅபாவே தொழுகையில் தாம் முன்னோக்கும் திசையாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. (பிறகு கஅபாவை முன்னோக்கித் தொழும்படி, இறைவனிடமிருந்து உத்தரவு வந்தது). (கஅபாவை முன்னோக்கி) நபி (ஸல்) அவர்கள் தொழுத முதல் தொழுகை அஸ்ர் தொழுகையாகும். (அந்தத் தொழுகையை) நபி (ஸல்) அவர்களுடன் மற்ற சிலரும் தொழுதனர். அவர்களில் ஒருவர் அங்கிருந்து புறப்பட்டு (மற்றொரு) பள்ளிவாசலில் (தொழுது கொண்டு) இருந்தவர்களைக் கடந்து சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் “ருகூஉசெய்து கொண்டிருந்தனர். உடனே அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து மக்கா(விலுள்ள கஅபா)வை நோக்கித் தொழுதேன்என்று சொல்ல, அவர்கள் (அனைவரும்) அப்படியே (ருகூஉவிலிருந்தபடியே சுழன்று) கஅபாவை நோக்கித் திரும்பிக் கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பைத்துல் மக்திஸை நோக்கித் தொழுது வந்தது (கண்டு) யூதர்களுக்கும் மற்ற வேதக்காரர்களுக்கும் மகிழ்ச்சியாகவே இருந்து வந்தது. (தொழுகையில்) தமது முகத்தை நபி (ஸல்) அவர்கள் கஅபாவை நோக்கித் திருப்பிக் கொண்டுவிட்ட போது அதை அவர்கள் வெறுத்தார்கள்.

அறிவிப்பவர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)

நூல்: புகாரி 40

அது வரை வேதக்காரர்களின் கிப்லாவான பைத்துல் முகத்தஸை முன்னோக்கித் தொழுது கொண்டிருந்தார்கள். அந்தக் கிப்லாவை மாற்றுவது நபி (ஸல்) அவர்களுக்கு நெருடலாகவே இருந்தது. அந்த நெருடலைப் போக்கும் வகையிலும், முஸ்லிம்களின் வழி தனி வழி! அவர்கள் வேறு யார் வழியையும் காப்பியடிப்பவர்கள் அல்லர் என்பதை உணர்த்தும் விதமாகவும் இந்தக் கட்டளை அமைந்தது.

அது வரை உலகத்தின் மையம் என்ற தகுதி பைத்துல் மக்தஸுக்குத் தான் இருந்தது. இப்போது அந்தத் தகுதி கஅபாவுக்குத் திருப்பப்பட்டது. அதே சமயம் ஒரு வணக்கத் தலம், புனிதத் தலம் என்ற தகுதி பைத்துல் மக்தஸுக்கு நீடிக்கத் தான் செய்கின்றது. எனினும் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாமல் வேதக்காரர்கள் பொறாமையால் துடித்தனர்.

ஆறாம் ஆண்டில் ஆலயத் தடுப்பு

இதன் பின்னர் பத்ருப் போர் நிகழ்கின்றது. இதில், ஆலயத் தடுப்பின் தலைவன் அபூஜஹ்ல் மற்றும் அவனது ஆதரவாளர்கள் கொல்லப்படுகிறார்கள். இதன் பின்னர் ஹிஜிரி 3ம் ஆண்டில் உஹதுப் போர்!

அபூஜஹ்லும் அவனது ஆதரவாளர்களும் கொல்லப்பட்டாலும் இதிலிருந்து குறைஷிகள் எந்தப் பாடத்தையும் படிப்பினையையும் பெறவில்லை. இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு தான் ஹிஜிரி 6ம் ஆண்டில் நடைபெற்ற ஆலயத் தடுப்பாகும்.

ஹிஜிரி 6ம் ஆண்டில் நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்வதற்காக மக்காவை நோக்கி வருகின்றார்கள். அப்போது அவர்களுடன் தோழர்கள் சுமார் 1500 பேர் இருந்தனர்.

ஹுதைபிய்யா தினத்தன்று நபி (ஸல்) அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தவர்கள் ஆயிரத்து ஐநூறு பேர் இருந்தனர்என்று ஜாபிர் அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்.

அறிவிப்பவர்: கத்தாஹ்

நூல்: புகாரி 4153

ஜாபிர் (ரலி) அவர்களின் அறிவிப்பில் 1400 பேர் என்றும் கூறப்பட்டுள்ளது.

உளவுத் துறையின் உறுதியான தகவல்

நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்து உம்ராவுக்குச் சென்று கொண்டிருந்த போது, உம்ராச் செய்ய விடாமல் தடுப்பதற்காகக் குறைஷிகள் படை திரட்டியுள்ளதாக உளவுத் துறையின் செய்தி கிடைக்கின்றது.

நபி (ஸல்) அவர்கள் “ஹுதைபிய்யாஆண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்களுடன் மதீனாவிலிருந்து புறப்பட்டு துல்ஹுலைஃபாவுக்கு வந்ததும் தியாகப் பிராணியின் கழுத்தில் மாலை போன்றவற்றைத் தொங்கவிட்டு அதற்கு அடையாளமும் இட்டார்கள். பின்னர் அங்கிருந்து உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் “குஸாஆகுலத்தாரில் (புஸ்ர் பின் சுஃப்யான் என்ற) ஒருவரை உளவாளியாக அனுப்பி வைத்தார்கள். “ஃகதீருல் அஷ்தாத்எனும் இடத்தில் நபியவர்கள் சென்று கொண்டிருந்த போது, அவர்களின் உளவாளி வந்து, “குறைஷிகள் உங்களைத் தாக்குவதற்காகப் பெரும் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர்; பல்வேறு குலத்தினரை (ஓரிடத்தில்) ஒன்று திரட்டி வைத்துள்ளனர். அவர்கள் உங்களுடன் போரிட்டு உங்களை இறையில்லம் (கஅபாவிற்குச்) செல்ல விடாமல் தடுப்பார்கள்என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “மக்களே! இறையில்லத்திற்குச் செல்ல விடாமல் நம்மைத் தடுக்க நினைக்கும் இவர்களின் குடும்பத்தாரிடமும் சந்ததிகளிடமும் நான் (போர் தொடுக்கச்) செல்ல வேண்டுமென நீங்கள் கருதுகிறீர்களா? நம்மிடம் அவர்கள் (போர் புரிய) வந்தால், (அதற்கு நாம் பொறுப்பல்ல. நாம் அனுப்பி வைத்த) உளவாளியை(யும்) அந்த இணை வைப்பாளர்களுக்குத் தெரியாமல் அல்லாஹ் ஆக்கி விட்டான். அவ்வாறு அவர்கள் வராவிட்டால் அவர்களை நாம் இழப்புக்குள்ளாக்கி விட்டுச் செல்வோம்என்று கூறினார்கள்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இந்த இறையில்லத்தை நாடித் தானே நீங்கள் புறப்பட்டு வந்தீர்கள். யாரையும் கொல்லவோ எவரிடத்திலும் போரிடவோ நீங்கள் வரவில்லையே. எனவே, இறையில்லத்தை நோக்கிச் செல்லுங்கள். இறையில்லத்திற்குச் செல்ல விடாமல் நம்மை எவன் தடுக்கின்றானோ அவனிடம் நாம் போரிடுவோம்என்று (ஆலோசனை) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் பெயரால் பயணத்தைத் தொடருங்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா, மர்வான் பின் ஹகம்

நூல்: புகாரி 4179

தாங்கள் மக்காவிற்கு வருவது உம்ரா செய்வதற்காகத் தான் என்பதைத் தெளிவுபடுத்தித் தமது மருமகன் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைக்கின்றார்கள். தூது சென்ற உஸ்மான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டதாகத் தகவல் கிடைக்கின்றது. உடனே நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் உஸ்மான் (ரலி) அவர்களின் உயிருக்காகத் தங்கள் உயிரை அர்ப்பணிப்போம் என்று உடன்படிக்கை எடுத்தனர்.

பைஅத்துர் ரிள்வான்சத்தியப் பிரமாண நிகழ்ச்சியில் உஸ்மான் (ரலி) அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், உஸ்மான் (ரலி) அவர்களை விடக் கண்ணியம் வாய்ந்த ஒருவர் (மக்கா பள்ளத்தாக்கில் இல்லை. அப்படி) இருந்திருந்தால் உஸ்மான் அவர்களுக்குப் பதிலாக அவரை நபி (ஸல்) அவர்கள் (குறைஷிகளிடம் பேச மக்காவிற்குத் தம் தூதுவராக) அனுப்பியிருப்பார்கள். (அப்படி ஒருவரும் இல்லை😉 எனவே தான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஸ்மானை அனுப்பினார்கள். மேலும், இந்த சத்தியப் பிரமாண நிகழ்ச்சி உஸ்மான் (ரலி) அவர்கள் மக்காவிற்குப் போன பின்பு தான் நடைபெற்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வலக் கையைச் சுட்டிக் காட்டி, “இது உஸ்மானுடைய கைஎன்று சொல்லி அதைத் தம் (இடக்) கையின் மீது தட்டினார்கள். பிறகு, ” (இப்போது நான் செய்த) இந்த சத்தியப் பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 3699

இதற்கு முன்பு நபி (ஸல்) அவர்கள் குஸாஆ கிளையினரைச் சார்ந்த கிராஷ் பின் உமைய்யாவை ஸஃலப் என்ற ஒட்டகத்தின் மீது அமர்த்தி அனுப்பி வைத்திருந்தார்கள். அவர் மக்காவிற்குள் நுழைந்ததுமே குறைஷிகள் அவரது ஒட்டகத்தை அறுத்து அவரைக் கொலை செய்யவும் நினைத்தனர். ஆனால் பனூ கினானா கிளையைச் சேர்ந்தவர்கள் அதைச் செய்ய விடாமல் குறைஷிகளைத் தடுத்து விட்டனர். (குறைஷிகளிடமிருந்து தப்பித்த) கிராஷ், நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்.

இதனால் உமரை அனுப்பி வைப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! குறைஷிகள் என்னைக் கொன்று விடுவார்கள் என்று அஞ்சுகின்றேன். (என்னுடைய) பனூ அதீ குடும்பத்திலிருந்து என்னைக் காப்பாற்றுபவர் யாருமில்லை. நான் குறைஷிகள் மீது கொண்டிருக்கும் விரோதத்தையும் கடுமையையும் பனூ அதீ குடும்பம் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றது. எனினும் நான் என்னை விடக் கண்ணியமிக்க ஒருவரை உங்களுக்குக் காட்டுகிறேன். அவர் தான் உஸ்மான் பின் அஃப்பான்என்று கூறினார்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்களை அழைத்து, தாம் போர் செய்வதற்காக வரவில்லை; கஅபாவின் கண்ணியத்தை மதித்தவனாக அதைச் சந்திக்கவே (உம்ரா செய்யவே) வந்திருக்கிறேன் என்று தெரிவித்து வருமாறு அவரைக் குறைஷிகளிடம் அனுப்பி வைத்தார்கள்.

உஸ்மான் புறப்பட்டு மக்கா வந்து சேர்ந்தார். அவரை அபான் பின் ஸயீத் வந்து சந்திக்கிறார். உஸ்மான் (ரலி) அவர்களை வாகனத்திலிருந்து இறக்கி, தமது (வாகனத்தின்) முன்னால் வைத்து, தான் பின்னால் இருந்து அபான் பின் ஸயீத் அடைக்கலம் கொடுக்கிறார்.

கடைசியாக உஸ்மான் (ரலி), நபி (ஸல்) அவர்களின் செய்தியைச் சமர்ப்பிக்கின்றார். அதன் பிறகு அபூசுப்யானிடமும், மற்ற குறைஷிகளின் பெரும் புள்ளிகளிடமும் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் செய்தியைத் தெரிவிக்கின்றார்கள்.

அதற்கு குறைஷித் தலைவர்கள், “நீ தவாஃப் செய்ய வேண்டும் என்று விரும்பினால் தவாஃப் செய்து கொள்! (முஹம்மதின் விவகாரத்தை இங்கு பேசாதே!)என்று சொல்லி விடுகின்றனர். அதற்கு உஸ்மான் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தவாஃப் செய்யாத வரை நான் செய்ய மாட்டேன்என்று பதிலளிக்கின்றார். உடனே அவர்கள் உஸ்மானை வர விடாமல் தடுத்து விடுகின்றனர். அப்போது தான் உஸ்மான் (ரலி) படுகொலை செய்யப்பட்டதாக நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தகவல் கிடைக்கின்றது.

அறிவிப்பவர்: மிஸ்வர் பின் மக்ரமா (ரலி)

நூல்: அஹ்மத் 18152

(இதன் அறிவிப்பாளர் வரிசையில் முஹம்மது பின் இஸ்ஹாக் இடம் பெறுகின்றார். இவர் தத்லீஸ் (முந்தைய அறிவிப்பாளரை இருட்டடிப்பு) செய்பவர்; எனவே இவர், தனக்கு இன்னார் அறிவித்தார் என்று கூறாமல், “இன்னாரிடமிருந்து’ என்று கூறினால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது. இந்த ஹதீஸில் இவர், “இன்னாரிடமிருந்து’ என்று அறிவித்திருந்தாலும், இதே கருத்திலான மற்ற ஹதீஸ்களில் இவர், “தனக்கு இன்னார் தெரிவித்தார்’ என்று அறிவிக்கின்றார். அதனால் இது ஏற்றுக் கொள்ளத்தக்க அறிவிப்பாக ஆகி விடுகின்றது.)

உயிரைக் கொடுக்க உடன்படிக்கை

உம்ராவுக்கு வந்த நபித்தோழர்கள் ஹுதைபிய்யாவில் ஏற்பட்ட திருப்பத்தின் காரணமாக, கடைசி நிமிட மாற்றத்தின் காரணமாகத் தங்கள் உயிரையும் அர்ப்பணிக்க முன்வந்தனர்.

சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (“இறை மறுப்பாளர்களுடன் அறப்போர் புரிவேன்; இறை வழியில் துன்பங்களைச் சகிப்பேன்என்று)  நபி (ஸல்) அவர்களிடம் ஹுதைபிய்யாவில் உறுதிமொழி அளித்தேன்; பிறகு மரத்தின் நிழலில் (சற்று) ஒதுங்கினேன். (நபி (ஸல்) அவர்களைச் சுற்றிலுமிருந்த) மக்கள் (கூட்டம்) சற்று குறைந்த போது நபி (ஸல்) அவர்கள், “அக்வஃ உடைய மகனே! (சலமாவே!) நீ உறுதிமொழியளிக்கவில்லையா?”’என்று கேட்டார்கள். “நான் ஏற்கனவே உறுதிமொழியளித்து விட்டேன், அல்லாஹ்வின் தூதரே!என்று பதிலளித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மீண்டும் (அளிப்பீராக!)என்று கூறினார்கள். ஆகவே, நான் இரண்டாவது முறையாக உறுதிமொழியளித்தேன்.

அறிவிப்பாளர் யஸீத் பின் அபீ உபைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(இதை எனக்கு அறிவித்த சலமா பின் அக்வஃ (ரலி) அவர்களிடம்) நான், “அபூ முஸ்லிமே! அன்று (நபித்தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக (நபி (ஸல்) அவர்களிடம்) உறுதிமொழி அளித்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதிமொழியளித்தோம்என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 2960, முஸ்லிம் 3462

இந்த உடன்படிக்கையை எல்லாம் வல்ல அல்லாஹ் வெகுவாகப் பாராட்டுகின்றான். நபியவர்களிடம் தோழர்கள் செய்த உடன்படிக்கை தன்னிடம் செய்த உடன்படிக்கை என்று குறிப்பிடுகின்றான். அவர்களை திருப்திப்பட்டுக் கொண்டதாகவும் குறிப்பிடுகின்றான்.

உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதி மொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் தம்மிடம் அல்லாஹ் எடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்.

அல்குர்ஆன் 48:10

அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதி மொழி எடுத்த போது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களின் உள்ளங்களில் இருப்பதை அவன் அறிவான். அவர்களுக்கு நிம்மதியை அருளினான். அவர்களுக்குச் சமீபத்தில் இருக்கும் வெற்றியையும் வழங்கினான்.

அல்குர்ஆன் 48:18

நபியவர்களின் பாராட்டு

இவ்வாறு தங்கள் உயிர்களை அர்ப்பணிக்கத் துணிந்த அவர்களை “பூமியில் சிறந்தவர்கள்’ என்று நபி (ஸல்) அவர்களும் பாராட்டுகிறார்கள்.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது

நாங்கள் ஹுதைபியா தினத்தன்று ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம், “பூமியிலிருப்பவர்களில் நீங்களே சிறந்தவர்கள்என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 3453

குறைஷிகளுக்கு எச்சரிக்கை; குதிரையில் புறப்படும் காலித்

மக்காவை நோக்கி நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். பாதையில் சென்று கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்கள், “காலித் பின் வலீத், குறைஷிகளின் குதிரைப் படையுடன் “கமீம்என்னுமிடத்தில் (போர் வியூகத்துடன்) முதல் அணியாக (நம்மை எதிர் கொள்ளக்) காத்திருக்கின்றார். ஆகவே, வலப் பக்கப் பாதையில் செல்லுங்கள் (காலித் பின் வலீதுக்குத் தெரியாமல் மக்காவின் அருகே சென்று விடலாம்)என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் வருவதை காலித் அறியவில்லை. குறைஷி குதிரைப் படையினர் (முஸ்லிம்களுடைய) உம்ரா பயணக் குழுப் படை எழுப்பிய புழுதியைக் கண்டவுடன் (அதன் தளபதியான) காலித் பின் வலீத், குறைஷிகளை எச்சரிப்பதற்காக, குதிரையைக் காலால் உதைத்து விரட்டியவராக (விரைந்து) சென்றார். (புகாரி 2731)

யானையைத் தடுத்தவனே கஸ்வாவையும் தடுத்தான்

நபி (ஸல்) அவர்கள் பயணித்துச் சென்று கொண்டிருந்தார்கள். இறுதியில், மக்காவினுள் இறங்கும் வழியாக அமைந்துள்ள சிறிய மலை ஒன்றை அடைந்ததும் (“மிரார்என்னும் இடத்தில்) அவர்களுடைய வாகனம் (ஒட்டகம்) மண்டியிட்டு அமர்ந்து கொண்டது. மக்கள் (அதை எழுப்பி நடக்க வைப்பதற்காக) “ஹல்ஹல்என்று அதட்டினார்கள். அது எழும்ப மறுத்து முரண்டு பிடித்தது. உடனே, மக்கள், “கஸ்வா பிடிவாதம் பிடிக்கிறது, கஸ்வா பிடிவாதம் பிடிக்கிறதுஎன்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “கஸ்வா பிடிவாதம் பிடிக்கவுமில்லை; பிடிவாதம் பிடிப்பது அதன் குணமுமில்லை. ஆனால், (யமன் நாட்டு மன்னன் அப்ரஹா தலைமையில் யானைப் படை கஅபாவை இடிக்க வந்த போது) யானையைத் தடுத்த(இறை)வனே அதையும் தடுத்து வைத்திருக்கிறான்என்று கூறினார்கள். (புகாரி 2731)

சமாதானத்திற்கு முதலிடம்

என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (போரைக் கைவிட்டு) அல்லாஹ்வின் புனித(த் தல)ங்களை கண்ணியப்படுத்தும் ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டால் அதை நிச்சயம் அவர்களுக்கு நான் (வகுத்துக்) கொடுப்பேன்என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தம் ஒட்டகத்தைத் தட்டி எழுப்பினார்கள். உடனே அது குதித்தெழுந்தது. (புகாரி 2731)

அருவியான அம்பு

நபியவர்கள் மக்களை விட்டுத் திரும்பி ஹுதைபிய்யாவின் எல்லையில் சிறிதளவே தண்ணீர் இருந்த ஒரு பள்ளத்தின் அருகே முகாமிட்டார்கள். மக்கள் அதிலிருந்து சிறிது சிறிதாகத் தண்ணீர் எடுக்கலானார்கள். இறுதியில், அவர்கள் மிச்சம் வைக்காமல் தண்ணீர் முழுவதையும் இறைத்து (அதை காலி செய்து) விட்டார்கள்.

பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தாகம் எடுப்பதாக முறையிடப்பட்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள் தமது அம்புக் கூட்டிலிருந்து ஓர் அம்பை உருவியெடுத்து அதைப் பள்ளத்தில் போடும்படி மக்களுக்கு உத்தரவிட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (பள்ளத்தில் அம்பைப் போட்டதும்) அதிலிருந்து அவர்களுக்காகத் தண்ணீர் பீறிட்டு வெளிப்பட்டது. அவர்கள் அங்கிருந்து புறப்படும் வரை (தண்ணீர் தாராளமாகக் கிடைத்துக் கொண்டிருந்தது). – புகாரி 2731

அடுத்தடுத்து வந்த ஐந்து தூதர்கள்

  1. புதைல் பின் வரகா

இந்த நிலையில் புதைல் பின் வரகா அல்குஸாயீ அவர்கள், தம் குஸாஆ குலத்தார் சிலருடன் வருகை தந்தார்கள். அவர்கள் திஹாமாவாசிகளிடையே (மக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களிடையே) நபி (ஸல்) அவர்களின் நலம் நாடும் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தனர். புதைல் அவர்கள், “(முஹம்மத் அவர்களே!) கஅப் பின் லுஅய், மற்றும் ஆமிர் பின் லுஅய் ஆகியோர் ஹுதைபிய்யாவின் வற்றாத ஜீவ சுனைகளின் அருகே முகாமிட்டிருக்க, அங்கே அவர்களை விட்டு விட்டு (தங்களிடம் செய்தி சொல்ல) வந்துள்ளேன். அவர்களுடன் தாய் ஒட்டகங்களும் தம் குட்டிகளுடன் வந்துள்ளன. அவர்கள் உங்களுடன் போரிட்டு உங்களை இறையில்லம் கஅபாவை (சந்திக்க விடாமல்) தடுக்கப் போகிறார்கள்என்று கூறினார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள், “நாங்கள் எவருடனும் போரிடுவதற்காக வரவில்லை. மாறாக, நாங்கள் உம்ரா செய்வதற்காகத் தான் வந்திருக்கின்றோம். குறைஷிகள் அடிக்கடி போரிட்டுக் களைத்துப் போயிருக்கிறார்கள். போரின் காரணத்தால் அவர்களுக்கு நிறையவே இழப்பும் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு ஒரு காலகட்டம் குறிப்பிட்டு சமாதான ஒப்பந்தம் செய்து கொள்கிறேன். அவர்கள் எனக்கும் மக்களுக்குமிடையே (இஸ்லாமியப் பிரச்சாரத்திற்குத்) தடையாக இருக்க வேண்டாம். நான் வெற்றி பெற்று விட்டால், அவர்கள் விரும்பினால் மக்களெல்லாம் விரும்பி ஏற்றுக் கொள்ளும் இந்த மார்க்கத்திலேயே இணைந்து கொள்ளட்டும். இல்லையென்றால் (சில நாட்கள்) அவர்களுக்கு ஓய்வாவது கிடைக்கும். அவர்கள் இதற்கு மறுத்து விட்டால், என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! நான் எனது இந்த விவகாரத்திற்காக என் தலை துண்டாகி விடும் வரை அவர்களுடன் போரிடுவேன். அல்லாஹ், தன் திட்டத்தை நடத்தியே தீருவான்என்று கூறினார்கள்.

நீங்கள் சொல்வதை அவர்களுக்கு நான் எடுத்துரைப்பேன்என்று கூறிவிட்டு புதைல் பின் வரகா குறைஷிகளிடம் சென்று, “நாங்கள் இந்த மனிதரிடமிருந்து உங்களிடம் வந்திருக்கிறோம். அவர் ஒரு விஷயத்தைக் கூறியதை நாங்கள் கேட்டோம். அதை உங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் நாங்கள் அவ்வாறே செய்கிறோம்என்று சொன்னார்.

அப்போது அவர்களிலிருந்த அறிவிலிகள், “அவரைக் குறித்து எங்களுக்கு எதையும் நீர் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லைஎன்று கூறினர். அவர்களில் கருத்துத் தெளிவுடையவர்கள், “அவரிடமிருந்து நீங்கள் கேட்டதை எடுத்துச் சொல்லுங்கள்என்று கூறினர். புதைல், “அவர் இப்படியெல்லாம் சொல்லக் கேட்டேன்என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதை  அவர்களுக்கு எடுத்துரைத்தார். (புகாரி 2731)

  1. உர்வா பின் மஸ்ஊத்

உடனே, (அப்போது இறை மறுப்பாளராயிருந்த) உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகஃபீ எழுந்து நின்று, “என் சமுதாயத்தாரே! நீங்கள் என் தந்தையைப் போல் (என் மீது இரக்கமுடையவர்கள்) அல்லவா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆம்என்று பதிலளித்தனர். உர்வா, “நான் உங்கள் மகனைப் போல் (உங்கள் நலம் நாடுபவன்) இல்லையா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆம் (நீங்கள் எங்கள் நலம் நாடுபவர் தாம்)என்று பதிலளித்தனர். மேலும் அவர், “நீங்கள் என்னைச் சந்தேகிக்கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லைஎன்று பதிலளித்தனர்.

அப்போது உர்வா, “உக்காழ் (சந்தை) வாசிகளிடம் உங்களுக்கு உதவும்படி கேட்டதும் அவர்களால் உதவ முடியாத (நிலை ஏற்பட்ட) போது நான் என் வீட்டாரையும் என் குழந்தையையும் எனக்குக் கட்டுப்பட்டவர்களையும் உங்களிடம் கொண்டு வந்து விட்டேன் என்பதும் உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆம் (தெரியும்)என்று பதிலளித்தார்கள்.

அப்போது அவர், “முஹம்மது, உங்கள் முன் நல்லதொரு திட்டத்தைச் சமர்ப்பித்துள்ளார். நீங்கள் (அதற்கு) ஒப்புக் கொள்ளுங்கள். அவரிடம் என்னைச் செல்ல விடுங்கள்என்று கூறினார். அதற்கு அவர்கள், “அவரிடம் (எங்கள் சார்பாகப் பேசச்) செல்லுங்கள்என்று கூறினர். அவரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று பேசத் தொடங்கினார்.

நபி (ஸல்) அவர்கள் புதைலிடம் சொன்னதைப் போலவே சொன்னார்கள். அப்போது உர்வா, “முஹம்மதே! உங்கள் சமுதாயத்தினரை முற்றிலுமாக அழித்து விடுவதை நீங்கள் உசிதமாகக் கருதுகிறீர்களா? உங்களுக்கு முன்னால் அரபுகள் எவரேனும் தம் சமுதாயத்தாரை வேரோடு அழித்தார் என்று நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? வேறு விதமான முடிவு ஏற்பட்டாலும்… குறைஷிகள் வென்று விட்டாலும்…(அதனால் உங்கள் தோழர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விடுவார்கள் அல்லவா?) நானோ, அல்லாஹ்வின் மீதாணையாக! பல முகங்களை (உங்கள் தோழர்களிடம்) பார்க்கின்றேன்; மக்களில் பலதரப்பட்டவர்களைப் பார்க்கிறேன்; உங்களை விட்டு விட்டு விரண்டோடக் கூடிய (கோழைத்தனமுடைய)வர்களாகவே (இவர்களை) நான் பார்க்கிறேன்என்று கூறினார். (புகாரி 2731)

கோபத்தின் உச்சியில் அபூபக்ர்

(இதைக் கேட்ட) அபூபக்ர் (ரலி) அவர்கள் அவரை அக்கால வழக்கப்படி ஏசிவிட்டு, “நாங்கள் இறைத் தூதரை விட்டு விட்டு ஓடி விடுவோமா?” என்று (கோபத்துடன்) கேட்டார்கள். அதற்கு உர்வா, “இவர் யார்?” என்று கேட்டார். மக்கள் “அபூபக்ர்என்று பதிலளித்தார்கள். அதற்கு உர்வா, “நீங்கள் முன்பு எனக்கு உதவி செய்திருக்கிறீர்கள். அதற்கான நன்றிக் கடனை நான் உங்களுக்கு இன்னும் தீர்க்கவில்லை. அந்த நன்றிக் கடன் மட்டுமில்லாவிட்டால் நான் உங்களுக்கு (தகுந்த) பதில் கொடுத்திருப்பேன்என்று கூறி விட்டு, நபி (ஸல்) அவர்களிடம் பேசத் தொடங்கினார்; நபி (ஸல்) அவர்களுடன் பேசும் போதெல்லாம் அவர்களுடைய தாடியைப் பிடித்தபடி இருந்தார்.

அப்போது முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் (கையில்) வாளுடனும் தலையில் இரும்புத் தொப்பியுடனும் நபி (ஸல்) அவர்களின் தலைப் பக்கமாக நின்று கொண்டிருந்தார்கள். ஆகவே உர்வா, நபி (ஸல்) அவர்களின் தாடியைப் பிடிக்க முனைந்த போதெல்லாம் முகீரா (ரலி) அவர்கள், அவரது கையை வாளுறையின் (இரும்பாலான) அடிமுனையால் அடித்து, “உன் கையை அல்லாஹ்வின் தூதருடைய தாடியிலிருந்து அப்புறப்படுத்துஎன்று கூறிய வண்ணமிருந்தார்கள்.

அப்போது உர்வா தனது தலையை உயர்த்தி, “இவர் யார்?” என்று கேட்க மக்கள், “இவர் முகீரா பின் ஷுஅபாஎன்று கூறினார்கள். உடனே உர்வா, “மோசடிக்காரரே! நீர் மோசடி செய்த போது (உம்மை தண்டனையிலிருந்து பாதுகாத்திட) நான் உழைக்கவில்லையா?” என்று கேட்டார். (புகாரி 2731)

துரோகத்திற்குத் துணை நிற்காத இறைத் தூதர்

முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு) ஒரு குலத்தாருடன் (எகிப்து மன்னனைக் காண) பயணம் சென்றார்கள். அப்போது (அக்குலத்தார் வழியில் குடித்துவிட்டு மயங்கிக் கிடக்க,) அவர்களைக் கொன்றுவிட்டு அவர்களுடைய பொருட்களை எடுத்துக் கொண்டார்கள். (அதற்காக பனூ மாலிக் குலத்தார் முகீரா அவர்களைப் பழி வாங்க முனைந்த போது அவரது தந்தையின் சகோதரரான உர்வா தான், அவர்களை உயிரீட்டுத் தொகை கொடுத்து தண்டனையிலிருந்து காப்பாற்றினார்.)  பிறகு முகீரா (அங்கிருந்து) வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீ இஸ்லாத்தைத் தழுவியதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், (நீ அபகரித்துக் கொண்டு வந்த) பொருட்கள் எனக்கு அனுமதிக்கப்படவில்லைஎன்று கூறியிருந்தார்கள்.

உர்வா தன் தோழர்களிடம் சென்று, “என் சமுதாயத்தாரே! (ரோமாபுரி மன்னன்) சீசரிடமும், (பாரசீக மன்னன்) கிஸ்ராவிடமும், (அபிசீனிய மன்னன்) நஜாஷியிடமும் தூதுக் குழுவில் சென்றுள்ளேன். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் தோழர்கள் முஹம்மதுக்கு அளிக்கின்ற கண்ணியத்தைப் போல் எந்த அரசருக்கும் அவரது தோழர்கள் கண்ணியம் அளிப்பதை நான் பார்த்ததேயில்லை. மேலும், அவர் உங்கள் முன் நேரிய திட்டம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார். ஆகவே, அதை ஏற்றுக் கொள்ளுங்கள்என்று கூறினார். (புகாரி 2731)

  1. பனூகினானாவைச் சேர்ந்த அடுத்த தூதர்

உடனே பனூகினானா குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர், “என்னை அவரிடம் செல்ல விடுங்கள்என்று சொன்னார். அதற்கு அவர்கள், “சரி, செல்லுங்கள்என்று கூறினர். அவர் நபி (ஸல்) அவர்களிடமும் அவர்களின் தோழர்களிடமும் வந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது இன்னார். இவர் இறைவனுக்காக ஹஜ்ஜில் அறுக்கப்படும் தியாக ஒட்டகங்களை கண்ணியப்படுத்துகின்ற ஒரு குலத்தைச் சேர்ந்தவர். ஆகவே, இவரிடம் தியாகப் பலி ஒட்டகத்தை அனுப்பி வையுங்கள்என்று சொன்னார்கள். உடனே, அவரிடம் ஒரு தியாக ஒட்டகம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது. மக்கள் “தல்பியாகூறியபடி அவரை வரவேற்றார்கள். இதை அவர் கண்டவுடன், “சுப்ஹானல்லாஹ்! இவர்களை இறையில்லத்திற்கு வரவிடாமல் தடுப்பது சரியில்லையேஎன்று (தமக்குள்) கூறிக் கொண்டார்.

தம் தோழர்களிடம் (குறைஷிகளிடம்) திரும்பிச் சென்ற போது, “தியாக ஒட்டகங்கங்களுக்கு (அடையாள) மாலை கட்டித் தொங்கவிடப்பட்டு, அவற்றைக் கீறி காயப்படுத்தி அடையாளமிடப் பட்டிருப்பதை நான் கண்டேன். ஆகவே, இறையில்லத்திற்கு வர விடாமல் அவர்களைத் தடுப்பதை நான் சரியானதாகக் கருதவில்லைஎன்று கூறினார். (புகாரி 2731)

  1. மிக்ரஸ் பின் ஹஃப்ஸ்

அவர்களில் மிக்ரஸ் பின் ஹஃப்ஸ் என்றழைக்கப்பட்ட ஒரு மனிதர் எழுந்து, “என்னை அவரிடம் போக விடுங்கள்என்று கூறினார். மக்காவாசிகள், “சரி, நீங்கள் அவரிடம் போங்கள்என்று கூறினர். முஸ்லிம்களிடம் அவர் சென்ற போது நபி (ஸல்) அவர்கள், “இவன் மிக்ரஸ் என்பவன். இவன் ஒரு கெட்ட மனிதன்என்று கூறினார்கள். அவன் (வந்தவுடன்) நபி (ஸல்) அவர்களிடம் பேச ஆரம்பித்தான்.  (புகாரி 2731)

  1. ஐந்தாவது தூதர் சுஹைல்

அவன் பேசிக் கொண்டிருக்கையில், சுஹைல் பின் அம்ர் என்பவர் குறைஷிகளின் தரப்பிலிருந்து வந்தார். சுஹைல் பின் அம்ர் வந்த போது நபி (ஸல்) அவர்கள், “உங்கள் விவகாரம் சுலபமாகி விட்டதுஎன்று (“சஹ்ல்– சுலபம்என்னும் பொருள் கொண்ட பெயருடைய ஒருவர் வந்ததைக் கருதும் வகையில்) கூறினார்கள். சுஹைல் பின் அம்ர் வந்து, “(ஏட்டைக்) கொண்டு வாருங்கள். உங்களுக்கும் எங்களுக்கும் இடையிலான (சமாதான ஒப்பந்தத்திற்கான) பத்திரம் ஒன்றை எழுதுவோம்என்று கூறினார்.

 (புகாரி 2731)

ஹுதைபிய்யா உடன்படிக்கை பிஸ்மில்லாஹ்விலேயே பிரச்சனை

நபி (ஸல்) அவர்கள் எழுத்தரை அழைத்தார்கள். பின்னர், “பேரருளாளனும் கருணையன்பு உடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்…என்று (சமாதான ஒப்பந்தத்திற்கான வாசகத்தை) நபியவர்கள் சொன்னார்கள்.

சுஹைல், “ரஹ்மான்- கருணையன்புடையோன்என்பது என்ன என்று எனக்குத் தெரியாது. ஆயினும், “இறைவா! உன் திருப் பெயரால்…என்று நீங்கள் முன்பு எழுதிக் கொண்டிருந்ததைப் போல் தான் நான் எழுதுவேன்என்றார்.

முஸ்லிம்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் -அளவற்ற அருளாளனும் கருணையன்பு உடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்என்று தான் இதை எழுதுவோம்என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ” “பிஸ்மிக்க அல்லாஹும்ம – இறைவா! உன் திருப்பெயரால்என்றே எழுதுங்கள்என்று சொன்னார்கள். (புகாரி 2731)

அல்லாஹ்வின் தூதரா? அதுவும் வேண்டாம்!

பிறகு நபி (ஸல்) அவர்கள், “இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது அவர்கள் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம்என்று (எழுதும்படி வாசகம்) சொன்னார்கள்.  உடனே சுஹைல், “அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் இறையில்லத்திற்கு வரவிடாமல் உங்களைத் தடுத்திருக்கவும் மாட்டோம்; உங்களுடன் போரிட்டிருக்கவும் மாட்டோம். மாறாக, “முஹம்மத் பின் அப்தில்லாஹ் -அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதுஎன்று எழுதுங்கள்என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய் சொல்வதாக நீங்கள் கருதினாலும் நிச்சயம் நான் அல்லாஹ்வின் தூதர் தான். (இருந்தாலும் உங்கள் விருப்பப்படி) முஹம்மத் பின் அப்தில்லாஹ் – அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதுஎன்றே எழுதுங்கள்என்று கூறினார்கள்.  (புகாரி 2731)

(இவ்வாறெல்லாம் நபி (ஸல்) அவர்கள் இறங்கிச் சென்றதற்குக் காரணம், இமாம் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுவது போன்று, “அல்லாஹ்வினால் புனிதமாக அறிவிக்கப்பட்ட மக்கா நகரத்தைக் கண்ணியப்படுத்துகின்ற எந்த ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டாலும் அதை அவர்களுக்கு நான் (வகுத்துக்) கொடுப்பேன்” என்று முன்பே சொல்லியிருந்ததை நிறைவேற்றுவதற்காகத் தான்.)

நிபந்தனை: 1

அடுத்த ஆண்டு தான் உம்ரா

பிறகு சுஹைலுக்கு நபி (ஸல்) அவர்கள், “எங்களை (இந்த ஆண்டு) இறையில்லத்திற்குச் செல்ல விடாமலும் அதை நாங்கள் தவாஃப் செய்ய விடாமலும் தடுக்கக் கூடாதுஎன்று (வாசகம்) சொன்னார்கள். உடனே சுஹைல், “அல்லாஹ்வின் மீதாணையாக! (இதை ஏற்க) முடியாது. (இந்த ஆண்டே உம்ரா செய்ய நாங்கள் உங்களுக்கு அனுமதியளித்தால்) “நாங்கள் உங்கள் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து விட்டோம்என்று அரபுகள் பேசிக் கொள்வார்கள். ஆயினும், வருகிற ஆண்டில் நீங்கள் உம்ரா செய்து கொள்ளலாம்என்று கூறினார்; அவ்வாறே எழுதினார். (புகாரி 2731)

நிபந்தனை: 2

சுஹைல், “எங்களிடமிருந்து ஒருவர் உங்களிடம் வந்தால், அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்தாலும் சரி, அவரை எங்களிடம் நீங்கள் திருப்பியனுப்பி விட வேண்டும்என்று நிபந்தனையிட்டார். முஸ்லிம்கள், “சுப்ஹானல்லாஹ்! அவர் முஸ்லிமாக (எங்களிடம்) வந்திருக்க, அவரை எப்படி இணைவைப்பவர்களிடம் திருப்பியனுப்புவது?” என்று வியப்புடன் கேட்டார்கள். (புகாரி 2731)

அபூஜன்தலின் வருகை

அவர்கள் இவ்வாறு ஒப்பந்தம் பேசிக் கொண்டிருக்கும் போது (குறைஷிகளின் தரப்பிலிருந்து ஒப்பந்தம் பேச வந்த) சுஹைல் பின் அம்ருடைய மகன் அபூ ஜந்தல் (தம் கால்கள் பிணைக்கப்பட்டிருக்க) விலங்குகளுடன் தத்தித் தத்தி நடந்து வந்தார்கள். அவர்கள் மக்காவின் கீழ்ப் பகுதியிலிருந்து தப்பி வந்து முஸ்லிம்களிடையே வந்து தஞ்சம் புகுந்தார்கள்.

உடனே (அவரது தந்தையான) சுஹைல், “முஹம்மதே! (ஒப்பந்தப் படி) முதலாவதாக, இவரை எங்களிடம் ஒப்படைக்கும்படி உங்களிடம் கோருகிறேன்என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நாம் இன்னும் இந்த நிபந்தனையை எழுதி முடிக்கவில்லையேஎன்று பதிலளித்தார்கள்.

அதற்கு சுஹைல், “அப்படியென்றால், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களிடம் நான் எந்த அடிப்படையிலும் ஒரு போதும் சமாதானம் செய்து கொள்ள மாட்டேன்என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால் இவரை மட்டுமாவது நான் திருப்பியனுப்பாமலிருக்க எனக்கு அனுமதி தாருங்கள்என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், “நான் உங்களுக்கு அனுமதி தர மாட்டேன்என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை, இவரை மட்டுமாவது திருப்பியனுப்பாமல் நிறுத்திக் கொள்ள எனக்கு அனுமதி அளியுங்கள்என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், “நான் அனுமதியளிக்கப் போவதில்லைஎன்று கூறினார்.

மிக்ரஸ் என்பவர், “நாம் அதற்கு உங்களுக்கு அனுமதியளித்து விட்டோம்என்று கூறினார். அபூஜந்தல் (ரலி) அவர்கள், “முஸ்லிம்களே! நான் முஸ்லிமாக (உங்களிடம்) வந்திருக்க, என்னை இணை வைப்பவர்களிடம் திருப்பியனுப்புகிறீர்களா? நான் சந்தித்த துன்பங்களை நீங்கள் (சிந்தித்துப்) பார்க்க மாட்டீர்களா?” என்று கேட்டார். அவர் இறை வழியில் கடுமையாக வேதனை செய்யப்பட்டிருந்தார். (புகாரி 2731)

உமரின் கொந்தளிப்பும் தோழர்களின் பிரதிபலிப்பும்

அப்போது (நடந்ததை) உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

உடனே நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, “நீங்கள் சத்தியமாக அல்லாஹ்வின் தூதர் இல்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம், அல்லாஹ்வின் தூதர் தான்என்று பதிலளித்தார்கள். நான், “நாம் சத்திய மார்க்கத்திலும் நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா?” என்று கேட்டேன். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், “ஆம்என்று பதிலளித்தார்கள். நான், “அப்படியானால் (இந்த நிபந்தனைகளை ஏற்று) நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதராவேன். நான் அவனுக்கு மாறு செய்வதில்லை. அவனே எனக்கு உதவக் கூடியவன்என்று பதிலளித்தார்கள். நான், “விரைவில் நாம் இறையில்லம் கஅபாவைத் தவாஃப் செய்வோம்என்று தாங்கள் எங்களுக்கு சொல்லி வந்திருக்கவில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம். ஆனால், நாம் இந்த ஆண்டே கஅபாவுக்குச் செல்வோம் என்று நான் உங்களுக்குச் சொன்னேனா?” எனக் கேட்டார்கள். நான், “இல்லைஎன்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் நிச்சயம் கஅபாவுக்குச் சென்று அதை தவாஃப் செய்வீர்கள்என்று கூறினார்கள். (புகாரி 2731)

அபூபக்ரின் அறிவுரை

பிறகு நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று, “அபூபக்ரே, இவர்கள் உண்மையிலேயே அல்லாஹ்வின் தூதரல்லவா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்; அல்லாஹ்வின் தூதர் தான்என்று கூறினார்கள். நான், “நாம் சத்திய மார்க்கத்திலும் நம் பகைவர்கள் அசத்திய மார்க்கத்திலும் இல்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்என்றார்கள். நான், “அப்படியென்றால் இதை ஒப்புக் கொண்டு நம் மார்க்கத்திற்கு நாம் ஏன் இழிவைச் சேர்க்க வேண்டும்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நண்பரே! அல்லாஹ்வின் தூதர், தம் இறைவனுக்கு மாறு செய்ய முடியாது. அவனே அவர்களுக்கு உதவக் கூடியவன். அவர்களுடைய சுவட்டையே நீங்கள் பின்பற்றுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் சத்திய வழியில் தான் இருக்கிறார்கள்என்று கூறினார்கள்.

நான், “அவர்கள் நம்மிடம், “நாம் இறையில்லத்திற்குச் சென்று அதை தவாஃப் செய்வோம்என்று சொல்ல வில்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்; (சொன்னார்கள்.) ஆனால், “நீங்கள் இந்த ஆண்டே அங்கு செல்வீர்கள்என்று உங்களிடம் சொன்னார்களா?” என்று கேட்டார்கள். நான்,    “இல்லைஎன்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், “நீங்கள் நிச்சயம் அங்கு சென்று இறையில்லத்தை தவாஃப் செய்யத் தான் போகிறீர்கள்என்று கூறினார்கள்.  (புகாரி 2731)

நிபந்தனை: 3

முஹம்மதின் உடன்படிக்கையில் சேர்ந்து கொள்ள விரும்புவோர் சேர்ந்து கொள்ளலாம்; குறைஷிகளின் உடன்படிக்கையில் சேர்ந்து கொள்ள விரும்புபவர்கள் அவ்வாறு சேர்ந்து கொள்ளலாம்என்ற நிபந்தனையை எழுதிய உடனே குஸாஆ கிளையினர் நபி (ஸல்) அவர்களின் உடன்படிக்கையில் வந்து இணைந்து கொண்டனர். பனூபக்ர் கிளையினர் குறைஷிகளின் உடன்படிக்கையின் கீழ் இணைந்து கொண்டனர்.

அறிவிப்போர்: மிஸ்வர், மர்வான்

நூல்: அஹ்மத் 18152

நிபந்தனை: 4

அடுத்த ஆண்டு உம்ராவுக்கு வரும் போது நபி (ஸல்) அவர்கள் வாள்களைத் தவிர வேறு ஆயுதங்களை எடுத்து வரக் கூடாது என்பதும், குறைஷிகள் விரும்புகின்ற அளவுக்கு (மூன்று நாட்களுக்கு) மேலாக மக்காவில் தங்கக் கூடாது என்பதும் நிபந்தனைகளில் ஒன்றாகும்.

வரும் ஆண்டில், நான் (என் தோழர்களுடன்) உம்ரா செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்; வாள்களைத் தவிர வேறு ஆயுதங்களை நாங்கள் எடுத்து வர மாட்டோம்; குறைஷிகள் விரும்புகின்ற வரை மட்டுமே மக்காவில் தங்கியிருப்போம்என்னும் நிபந்தனையின் பேரில் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். (புகாரி 2701)

இந்த நிபந்தனைகளை உள்ளடக்கிய ஒப்பந்தம் நபித்தோழர்களை வெகுவாகப் பாதிக்கச் செய்தது.

* அன்றாடம் சித்ரவதைக்குள்ளாகி சங்கிலியில் பிணைக்கப்பட்டு வந்த முஸ்லிமான சகோதரர் அபூஜன்தல், தங்கள் கண்ணுக்கு முன்னால் மக்கத்து காஃபிர்களிடம் ஒப்படைக்கப்பட்ட கொடூரம்!

* ஒப்பந்தத்தின் நிபந்தனைகளில் நபி (ஸல்) அவர்கள் இறங்கிப் போன விதம்!

* ஒவ்வொரு நிபந்தனையிலும் குறைஷிகள் ஏறி மிதித்தது; எகிறிக் குதித்தது!

இவை அத்தனையுமே நபித்தோழர்களை உறைய வைத்தது.

மக்காவில் போய் முடியைக் களைந்து, தாங்கள் கொண்டு வந்திருந்த கால்நடைகளைப் பலியிடும் பணி மட்டும் மீதமாக இருந்தது. இப்போது நபி (ஸல்) அவர்கள் அந்தப் பணியில் இறங்குகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஒப்பந்தப் பத்திரத்தை எழுதி முடித்த பின்பு தம் தோழர்களை நோக்கி, “எழுந்து சென்று குர்பானி கொடுத்து விட்டு தலைமுடி களைந்து கொள்ளுங்கள்என்று உத்தரவிட்டார்கள். ஆனால், அவர்களில் ஒருவர் கூட எழுந்திருக்கவில்லை. எனவே, நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை இவ்வாறு கூறினார்கள். இருந்தும், அவர்களில் எவரும் எழுந்திருக்காத காரணத்தால் (தம் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்களிடம் சென்று மக்களிடமிருந்து தாம் சந்தித்த அதிருப்தியை சொன்னார்கள்.  (புகாரி 2731)

உம்மு ஸலமாவின் உயர் யோசனை

உம்மு சலமா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! தியாகப் பிராணியை அறுத்து விட்டுத் தலைமுடி களைந்து கொள்ள வேண்டும் என்பதை விரும்புகிறீர்களா? (நீங்கள் தியாகப் பிராணிகளை அறுத்து முடி கûளையப்) புறப்படுங்கள். நீங்கள் (தியாகப் பிராணிகளான) குர்பானி ஒட்டகங்களை அறுத்து விட்டு உங்கள் நாவிதரை அழைத்து, அவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்என்று (ஆலோசனை) கூறினார்கள்.

உடனே, நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களை குர்பானி கொடுத்து விட்டு, தம் நாவிதரை அழைத்துத் தலைமுடியைக் களைந்து கொண்டார்கள். அது வரை அவர்களில் எவரிடமும் நபியவர்கள் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று தியாகப் பிராணிகளை அறுத்து, ஒருவர் மற்றவரின் தலைமுடியைக் களையத் தொடங்கினார்கள். ஒருவர் மற்றவரை நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவிற்குப் போட்டி போட்டுக் கொண்டு (தியாகப் பிராணிகளை அறுக்கவும் முடி களையவும்) சென்றனர்.  (புகாரி 2731)

வெற்றி அத்தியாயம் அருளப்படுதல்

தோழர்கள் அனைவரும் இது தோல்வி என்று கருதித் திரும்பும் போது, எல்லாம் வல்ல அல்லாஹ் அதை “வெற்றி’ என்று கூறி ஒரு வெற்றி அத்தியாயத்தையே அருளுகின்றான்.

(முஹம்மதே!) உமது பாவத்தில் முந்தியதையும் பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும், தெளிவான ஒரு வெற்றியை உமக்கு நாம் அளித்தோம்.

அல்குர்ஆன் 48:1-3

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், இந்த அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் ஓதிக் காட்டியது தான்.

நாங்கள் ஹுதைபிய்யா உடன் படிக்கையின் போது நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். போர் புரிவது உசிதமானதென்று நாங்கள் கருதியிருந்தால் போர் புரிந்திருப்போம். (ஆனால், போர் புரியாமல் அவர்கள் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டோம்.) அப்போது உமர் அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நாம் சத்தியத்திலும் அவர்கள் அசத்தியத்திலும் இல்லையா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “ஆம்என்று பதிலளித்தார்கள். உமர்  அவர்கள், “போரில் கொலையுண்டு விடும் போது நமது வீரர்கள் சொர்க்கத்திலும் அவர்களுடைய வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள் இல்லையா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “ஆம்என்று பதிலளித்தார்கள்.

அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அப்படியிருக்க, நாம் ஏன் நமது மார்க்க விஷயத்தில் பணிந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்குமிடையே தீர்ப்பளிக்காமலிருக்கும் நிலையில் நாம் திரும்பி விடுவதா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “கத்தாபின் மகனே! நான் அல்லாஹ்வுடைய தூதராவேன். என்னை அல்லாஹ் ஒரு போதும் வீணாக்க மாட்டான்என்று பதிலளித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று நபி (ஸல்) அவர்களிடம் தாம் சொன்னதைப் போன்றே சொன்னார்கள். அப்போது அபூபக்ர் அவர்கள், “அவர்கள் அல்லாஹ்வின் தூதர். அவர்களை அல்லாஹ் ஒரு போதும் வீணாக்க மாட்டான்என்று கூறினார்கள்.

அப்போது “அல் ஃபத்ஹ்‘ (“உமக்கு நாம் பகிரங்கமான வெற்றியை அளித்து விட்டோம்என்று தொடங்கும்) அத்தியாயம் அருளப்பட்டது. அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமருக்கு இறுதி வரை ஓதிக் காட்டினார்கள். அப்போது உமர் அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! வெற்றியா அது?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “ஆம் (வெற்றி தான்)என்று பதிலளித்தார்கள். (புகாரி 3182)

ஹுதைபிய்யா! மக்கா வெற்றிக்கு ஓர் அடிக்கல்

நபி (ஸல்) அவர்கள் கூறியது போன்று ஹுதைபிய்யா உடன்படிக்கை ஒரு வெற்றி தானா? இதற்கான விடையை இனிவரும் செய்திகள் மூலம் கண்டு கொள்வோம்.

உம்ரத்துல் களா

ஒப்பந்தத்தின் நிபந்தனைப்படி நபி (ஸல்) அவர்கள் அடுத்த ஆண்டு, அதாவது ஹிஜிரி 7ஆம் ஆண்டு துல்கஅதா மாதத்தில், ஹுதைபிய்யாவில் விட்ட உம்ராவை களாச் செய்தார்கள்.

குறைஷிகளிடம் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தத்தின் படியே அடுத்த ஆண்டு உம்ரா செய்ய நாடி, மக்கா நகரினுள் நுழைந்தார்கள். அங்கு மூன்று நாட்கள் தங்கி (முடித்து) விட்ட போது, குறைஷிகள் நபி (ஸல்) அவர்களை (மக்காவை விட்டு) வெளியேறும் படி உத்தரவிட, நபி (ஸல்) அவர்களும் வெளியேறி விட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 4252

முதல் மூன்று சுற்றுக்களில் ஓட்டம்

நபி (ஸல்) அவர்கள் தோழர்களுடன் (மக்காவுக்கு) வந்த போது, “யஸ்ரிபின் ஜுரத்தால் (மதீனாவில் தோன்றிய காய்ச்சலால்) பலவீனப்பட்ட நிலையில் இவர்கள் வந்துள்ளனர்என்று இணை வைப்போர் பேசிக் கொண்டனர். அப்போது (பலவீனப்படவில்லை எனக் காட்டுவதற்காக) நபி (ஸல்) அவர்கள் மூன்று சுற்றுக்கள் தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும் என்றும் ஹஜருல் அஸ்வதுக்கும் ருக்னுல்யமானிக்கும் இடையே நடந்து செல்ல வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். தவாஃபின் மொத்தச் சுற்றுக்களிலும் தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும் என இரக்கத்தின் காரணமாகவே நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1602

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒப்பந்த விதிகளுக்குக் கொஞ்சமும் மாறு செய்யாமல் மிகக் கண்ணியமான முறையில் தமது உம்ராவை நிறைவேற்றி விட்டு, மூன்று நாட்களில் திரும்பச் சென்றார்கள். (பார்க்க: புகாரி 2701)

அடிவாங்கிய ஆலயத் தடுப்பு

நபி (ஸல்) அவர்களுக்கு உண்மையில் இது மகத்தான வெற்றியாகும். “கஅபா எங்கள் கைவசம் உள்ளது; இங்கு முஹம்மது வருவதற்கு உரிமை கிடையாது’ என்று ஜம்பம் பேசிக் கொண்டிருந்தவர்களிடம் தங்களுடைய உரிமையை நிலைநாட்டி விட்டுப் போய் விட்டார்கள். இனி மேல் எப்போதும் ஹஜ் செய்யலாம்; உம்ரா செய்யலாம் என்பதையும் நிலைநாட்டினார்கள். இது நபி (ஸல்) அவர்களுக்கு ஹுதைபிய்யாவின் மூலம் கிடைத்த வெற்றியாகும்.

தாங்கள் சாதித்து விட்டோம் என்று குறைஷிகள் சந்தோஷப் படுவதற்குரிய ஒரே நிபந்தனை, ஆலயத்திற்குள் வர விடாமல் தடுத்தது தான். ஆனால் இதில் அவர்களது ஆலயத் தடுப்பு நடவடிக்கை அடையாளம் தெரியாமல் ஆனது. இந்த வகையில் இது குறைஷிகளுக்குத் தோல்வியாகவே அமைந்தது.

எதிராய் முடிந்த இதர நிபந்தனைகள்

அவர்களுக்குச் சாதகம் என்று கருதிய நிபந்தனைகளில் மற்றொன்று, மக்காவிலிருந்து யார் முஸ்லிமாக வந்தாலும் அவரைத் தங்களிடமே திருப்பி அனுப்ப வேண்டும் என்பதாகும். இந்த நிபந்தனையும் மண்ணைக் கவ்வியது. அதை இப்போது பார்ப்போம்.

கொள்கையை ஏற்ற குறைஷியர்

(சமாதான ஒப்பந்தம் அமலில் இருந்த கால கட்டத்தில்) இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். உடனே, “நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர்.91 அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. ஏக இறைவனை மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள்என்னும் (60:10) இந்த வசனத்தை அல்லாஹ் அருளினான்.

உடனே, உமர் (ரலி) அவர்கள், இணை வைக்கும் மார்க்கத்திலிருந்த காலத்தில் தமக்கிருந்த இரு மனைவிமார்களை அன்று தலாக் (விவாகரத்து) செய்து விட்டார்கள். அவ்விருவரில் ஒருவரை முஆவியா பின் அபீ சுஃப்யான் அவர்களும் மற்றொரு வரை ஸஃப்வான் பின் உமய்யா அவர்களும் மணமுடித்துக் கொண்டார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்குத் திரும்பி வந்தார்கள்.

அப்போது குறைஷிகளில் ஒருவரான அபூபஸீர் என்பவர் முஸ்லிமாக இருக்கும் நிலையில் (மதீனாவுக்கு) வருகை தந்தார். உடனே, அவரைத் தேடி(ப் பிடிக்க) குறைஷிகள் இரண்டு பேரை அனுப்பி வைத்தனர். அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் வந்து), “நீங்கள் எங்களுக்குக் கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுங்கள்என்று கேட்டனர். உடனே, அவரை அந்த இருவரிடமும் நபி (ஸல்) அவர்கள் ஒப்படைத்தார்கள். அவர்கள் இருவரும் அபூபஸீர் அவர்களை அழைத்துக் கொண்டு துல்ஹுலைஃபாவை அடைந்தனர். அவர்கள், தம்முடைய பேரீச்சம் பழங்களைத் தின்று கொண்டே (ஒரு மரத் தடியில்) தங்கினார்கள்.

அபூபஸீர் (ரலி) அவர்கள் அவ்விரு நபர்களில் ஒருவரிடம், “அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னானே! உன்னுடைய இந்த வாளை நான் மிக நல்லதாகக் காண்கிறேன்என்றார். உடனே மற்றொருவர் வாளை உருவி, “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! இது மிக நல்ல வாள் தான். நான் இதைப் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன், மீண்டும் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன்; மீண்டும் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன்என்று சொன்னார்.

அபூபஸீர் அவர்கள், “எனக்குக் காட்டு. அதை நான் பார்க்கிறேன்என்று கேட்டு அவரைத் தன் வசத்தில் கொண்டு வந்து (அந்த வாளால்) குத்திக் கொன்று விட்டார். மற்றொருவர் விரண்டோடி மதீனா வரை சென்று விட்டார்; ஓடிக் கொண்டே பள்ளிவாசலுக்குள் புகுந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைக் கண்ட போது, “இவர் ஏதோ பீதியேற்படுத்தும் விஷயத்தைக் கண்டு விட்டிருக்கிறார்என்று கூறினார்கள்.

அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நின்ற போது, “அல்லாஹ்வின் மீதாணையாக! என் சகோதரர் கொல்லப்பட்டு விட்டார். (நீங்கள் அபூபஸீரைத் தடுக்கா விட்டால்) நானும் கொல்லப்பட்டு விடுவேன்என்று கூறினார்.

உடனே அபூபஸீர் அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் தங்கள் பொறுப்பை நிறைவேற்றி விட்டான். தாங்கள் என்னை அவர்களிடம் திருப்பியனுப்பி விட்டீர்கள். பிறகு அல்லாஹ், என்னை அவர்களிடமிருந்து காப்பாற்றி விட்டான்என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “இவரது தாய்க்குக் கேடுண்டாகட்டும். உதவுபவர் எவராவது இவருக்குக் கிடைத்தால் இவர் போர்த் தீயை மறுபடியும் மூட்டி விடுவார்என்று கூறினார்கள். இதைச் செவியுற்றவுடன் அபூபஸீர் அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தம்மை (மீண்டும்) குறைஷிகளிடம் திருப்பியனுப்பி விடுவார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அங்கிருந்து தப்பியோடி கடலோரத்திற்குச் சென்றார்கள்.

சுஹைலின் மகன் அபூ     ஜந்தல் (ரலி) அவர்களும் குறைஷிகளிடமிருந்து தப்பியோடி அபூபஸீர் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். பிறகு, குறைஷிகளில் எவர் இஸ்லாத்தைத் தழுவினாலும் அவர் (தப்பிச் சென்று) அபூபஸீர் அவர்களுடன் சேர்ந்து கொள்ளத் தொடங்கினார். இறுதியில், (இப்படி இஸ்லாத்தை ஏற்றவர்கள் மக்காவிலிருந்து தப்பியோடி வந்து) ஒரு குழுவினராக ஒன்று திரண்டு விட்டனர். (புகாரி 2731)

நிபந்தனையை மாற்றிய குறைஷியர்

ஷாம் நாட்டை நோக்கி குறைஷிகளின் ஒரு (வியாபாரப்) பயணக் குழு புறப்பட்டிருப்பதாகக் கேள்விப்படும் போதெல்லாம் அதை அவர்கள் இடைமறித்து அவர்களைக் கொன்று அவர்களுடைய செல்வங்களை (வியாபாரப் பொருட்களை)ப் பறித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

ஆகவே, (அபூபஸீரும் அபூஜன்தலும் தங்களுக்குத் தொல்லை தராமல் இருக்க) இருவருக்கும் ஆளனுப்பி உத்தரவிடும்படி அல்லாஹ்வின் பெயராலும் உறவு முறையின் பெயராலும் நபி (ஸல்) அவர்களிடம் குறைஷிகள் கேட்டுத் தூதனுப்பினார்கள்.

மேலும், “குறைஷிகளில் எவர் முஸ்லிமாக நபி (ஸல்) அவர்களிடம் வருகின்றாரோ அவர் அச்சமின்றி இருக்கலாம் (அவரை எங்களிடம் திருப்பியனுப்ப வேண்டாம்)என்று கூறிவிட்டனர்.

அப்போது தான் அல்லாஹ், “மக்காவின் மையப் பகுதியில் அவர்களுக்கு எதிராக அவன் உங்களுக்கு வெற்றி அளித்த பின் உங்கள் கைகளை அவர்களை விட்டும், அவர்கள் கைகளை உங்களை விட்டும் அவனே தடுத்தான். நீங்கள் செய்து கொண்டிருப்பதை அல்லாஹ் பார்ப்பவனாக இருக்கிறான்……. (ஏக இறைவனை) மறுத்தோர் தமது உள்ளங்களில் வைராக்கியத்தை, மூடத்தனமான வைராக்கியத்தை ஏற்படுத்திய போது, அல்லாஹ் தனது நிம்மதியைத் தனது தூதர் மீதும், நம்பிக்கை கொண்டோர் மீதும் அருளினான். (இறை) அச்சத்திற்கான வார்த்தையை அவர்கள் பற்றிப் பிடிக்குமாறு செய்தான். அவர்கள் அதற்கு உரிமை படைத்து, தகுதியுடையோராகவும் இருந்தனர். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்என்னும் (48:24-26) வசனத்தை அருளினான்.  (புகாரி 2731, 2732)

மக்காவிலிருந்து முஸ்லிமாக யார் மதீனாவுக்கு வந்தாலும் திருப்பி அனுப்ப வேண்டும் என்ற குறைஷிகளின் இரண்டாவது நிபந்தனையும் சமாதியானது. அவர்களே அந்த நிபந்தனையை மாற்றி, மக்காவிலிருந்து மதீனாவுக்கு வரும் முஸ்லிம்களைத் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று கூறும் அளவுக்கு நிலைமை தலைகீழானது. இந்த அடிப்படையில் இது முஸ்லிம்களுக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது.

பத்தாண்டு காலப் போர் நிறுத்தம்

மக்கள் அமைதியாக வாழ்வதற்காக (அடுத்த) பத்து ஆண்டுகளில் (இரு தரப்பினருக்கும் இடையில்) போர் இல்லை என்று உடன்படிக்கை ஏற்பட்டது.

அறிவிப்போர்: மிஸ்வர், மர்வான்

நூல்: அபூதாவூத் 2385

இந்த நிபந்தனையும் குறைஷிகளுக்குச் சாதகமாக அமையவில்லை. ஏன்?

ஒப்பந்த நிபந்தனைகளில் ஒன்று, மக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள இதர கிளையினர் நபி (ஸல்) அவர்களுடனோ, அல்லது குறைஷிகளுடனோ இணைந்து கொள்ளலாம் என்பதாகும். இதன்படி பனூகுஸாஆ கிளையினர் நபி (ஸல்) அவர்களுடன் இணைந்தனர். பனூபக்ர் கிளையினர் குறைஷிகளுடன் இணைந்தனர்.

இவ்விரு குலத்தாரிடையே நெடுங்காலமாக முன்விரோதம் இருந்து வந்தது. ஹுதைபிய்யா ஒப்பந்தத்தில் இணைந்த பிறகு பனூபக்ர் குலத்தைச் சேர்ந்த நவ்ஃபல் பின் முஆவியா என்பவர், பனூகுஸாஆ குலத்தைச் சேர்ந்த முனப்பிஹ் என்பவரை ஒரு நீர் நிலை தொடர்பான தகராறில் கொன்று விட்டார். இது இரு குலத்தாருக்கிடையில் மோதலாக அமைந்தது. இச்சமயத்தில் மக்கா குறைஷிகள் ஹுதைபிய்யா ஒப்பந்தத்தை மீறி, பனூபக்ர் குலத்தாருக்கு ஆயுத உதவி செய்ததுடன் அவர்களுடன் சேர்ந்து, இரவு நேரங்களில் பனூகுஸாஆ குலத்தாரைத் தாக்கியும் வந்தனர்.

இதனால் பனூகுஸாஆ குலத்தார் நபி (ஸல்) அவர்களிடம் உதவி கேட்டு வந்தனர். எனவே நபி (ஸல்) அவர்கள் குறைஷிகளைத் தட்டிக் கேட்கத் தமது தோழர்களைத் தயார் படுத்தினார்கள். (ஃபத்ஹுல் பாரி)

இந்த ஒப்பந்தமும் குறைஷிகளுக்குப் பாதகமாக அமைந்தது மட்டுமல்லாமல், இது தான் வரலாற்றில் மறக்க முடியாத மாபெரும் வெற்றியான மக்கா வெற்றிக்கு அடிக்கல் நாட்டியது! அஸ்திவாரம் போட்டது!

இதைத் தான் எல்லாம் வல்ல அல்லாஹ், உமக்குத் தெளிவான ஒரு வெற்றியை அளித்தோம் என்று 48:1 வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

இந்த அத்தியாயத்தைத் தான் ஹுதைபிய்யா ஒப்பந்தத்தின் போது உணர்ச்சிப் பிழம்பாய் மாறியிருந்த உமர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் மிகப் பொருத்தமாகவே ஓதிக் காட்டினார்கள். பின்னால் வெற்றியாக அமைந்த இந்த ஒப்பந்தம் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் நாம் கடுமையாக நடந்து கொண்டோமே என்று வருந்தி உமர் (ரலி) அவர்கள் பல வணக்கங்களைச் செய்கிறார்கள்.

நான் இப்படி (அதிருப்தியுடன் நபியவர்களிடம்) பேசியதற்குப் பரிகாரமாக பல வணக்கங்களைப் புரிந்தேன்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி 2731

மகத்தான மக்கா வெற்றி

குரங்கு கையில் பூமாலையைப் போல் குறைஷிகள் கையில் புனித ஆலயம் கஅபா மாட்டிக் கொண்டிருந்தது. முஹம்மத் (ஸல்) அவர்கள் ஏகத்துவத்தை எடுத்துரைக்க ஆரம்பித்ததும் நபியவர்களும், அவர்களது கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களும் புனித கஅபாவில் நுழைவதற்கும் அங்கு தொழுவதற்கும் தடை விதிக்கப்பட்டனர். மீறிச் சென்றால் தாக்கப்பட்டனர்.

குறைஷிகளின் இந்த அட்டூழியம் ஹிஜிரி ஆறாம் ஆண்டு வரை தொடர்ந்து, அதன் உச்சக்கட்டமாக, உம்ரா செய்ய வந்த மக்கா மண்ணின் மைந்தரான நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதன் விளைவாக ஏற்பட்டது தான் ஹுதைபிய்யா உடன்படிக்கை! மரத்தின் கீழ் உதயமான இந்த உடன்படிக்கை தந்த சுவையான கனி தான் மக்கா வெற்றியாகும்.

அந்த வெற்றி வரலாற்றை இப்போது பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் மக்கா மீது படையெடுப்பது என்று ரகசியமாக முடிவு செய்கின்றார்கள். ஆனால் அந்த ரகசியச் செய்தி மக்காவிற்கு ஒரு கடிதத்தின் வாயிலாகக் கடத்தப்படுகின்றது என்ற இறை அறிவிப்பு நபி (ஸல்) அவர்களுக்கு வருகின்றது.

அல்லாஹ்வின்  தூதர்  (ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் பின் அவ்வாம் அவர்களையும் மிக்தாத் பின் அஸ்வத் அவர்களையும், “நீங்கள் “ரவ்ளத்து காக்எனும் இடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண்  இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்என்று கூறி அனுப்பினார்கள். (அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தோடின.

இறுதியில், நாங்கள் “ரவ்ளாஎனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்), “கடிதத்தை வெளியே எடுஎன்று கூறினோம். அவள், “என்னிடம் கடிதம் எதுவுமில்லைஎன்று சொன்னாள். நாங்கள், “ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து (கொடுத்து)  விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு) விடுவோம்என்று சொன்னோம்.

உடனே, அவள் (இடுப்பு வரை நீண்டிருந்த) தனது சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து

கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றோம். அதில், ஹாத்திப் பின் அபீ பல்தஆ அவர்கள் மக்கா வாசிகளான இணை வைப்போரில் (பிரமுகர்கள்) சிலருக்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (ரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்ததைக் கண்டோம்.

உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஹாத்திபே! என்ன இது?”’என்று கேட்டார்கள். ஹாத்திப் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷிகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாகவே இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களுடைய வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கின்றார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால், (இணை வைப்பவர்களான) மக்காவாசிகளுக்கு நான்  உபகாரம்  எதையாவது செய்து அதற்குப் பிரதியுபகாரமாக அவர்கள் அங்குள்ள என் (பலவீனமான) உறவினர்களைக் காப்பாற்றட்டும் என்று விரும்பினேன்.  நான் என் மார்க்க(மான இஸ்லா)த்தை விட்டு வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறை மறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லைஎன்று கூறினார்கள்.

(இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவர் உங்களிடம் உண்மை பேசினார்என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள். இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விடுகிறேன்!என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், உங்களுக்கென்ன தெரியும்? ஒரு வேளை, அல்லாஹ் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களிடம் “நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்என்று கூறி விட்டிருக்கலாம்என்று சொன்னார்கள்.

அப்போது அல்லாஹ் பின்வரும் (60-வது) அத்தியாயத்தை அருளினான்: நம்பிக்கை கொண்டோரே! எனது பாதையிலும், எனது திருப்தியை நாடியும் அறப்போருக்குப் புறப்படுவோராக நீங்கள் இருந்தால் எனது பகைவரையும், உங்கள் பகைவரையும் நீங்கள் அன்பு செலுத்தும் உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்! அவர்கள் உங்களிடம் வந்துள்ள உண்மையை மறுக்கின்றனர்…….(60:1)

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: புகாரி 4274

இதன் பிறகு நபி (ஸல்) ஹிஜிரி 8ம் ஆண்டு, பத்தாயிரம் பேர் கொண்ட படையுடன் புறப்படுகின்றார்கள். ரமளான் மாதம் என்பதால் நோன்பு நோற்றவர்களாகச் செல்கிறார்கள். ஆனால் இடையில் நோன்பைத் துறந்து விடுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தம்முடன் முஸ்லிம்கள் பத்தாயிரம் பேரை அழைத்துக் கொண்டு (மக்கா வெற்றிப் போருக்காக) மதீனாவிலிருந்து மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள்.

இது நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வருகை தந்ததிலிருந்து எட்டரை ஆண்டின் தொடக்கத்தில் நடை பெற்றது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 4276

நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து மக்காவிற்குப்) பயணம் மேற்கொண்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். “உஸ்ஃபான்எனும் இடத்தை அடைந்ததும் தண்ணீர் உள்ள பாத்திரம் கொண்டு வரச் செய்து (ரமளானின்) பகற்பொழுதில் மக்கள் காண வேண்டுமென்பதற்காக அதை அருந்தி நோன்பை முறித்துக் கொண்டார்கள். மக்காவை அடையும் வரை நோன்பு நோற்கவில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 4279

உளவு பார்க்கும் குறைஷியர்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணம் மேற்கொண்ட போது, அவர்கள் வருகிற செய்தி (மக்கா) குறைஷிகளுக்கு எட்டியது. உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பற்றிய செய்தியை (உளவு) அறிவதற்காக அபூசுஃப்யான் பின் ஹர்ப், ஹகீம் பின் ஹிஸாம், புதைல் பின் வர்கா ஆகியோர் (மக்காவிலிருந்து) புறப்பட்டனர். அவர்கள் பயணம் மேற்கொண்டு “மர்ருழ் ழஹ்ரான்என்னும் இடத்திற்கு வந்து சேர்ந்த போது (அங்கே பல இடங்களில் மூட்டப்பட்டிருந்த) நெருப்புகளைக் கண்டனர். அவை, அரஃபா(வில் ஹாஜிகள் மூட்டும்) நெருப்புகள் போன்றிருந்தன.

கைது செய்யப்படும் தலைவர்கள்

அப்போது அபூசுஃப்யான், “இது என்ன நெருப்பு? இது அரஃபா நெருப்பைப் போன்றே இருக்கிறதேஎன்று கேட்டார். அதற்கு புதைல் பின் வர்கா, “இது (“குபாவில் குடியிருக்கும் “குஸாஆஎனப்படும்) பனூஅம்ர் குலத்தாரின் நெருப்புகள்என்று கூறினார். உடனே அபூ சுஃப்யான் “(பனூ)அம்ர் குலத்தவரின் எண்ணிக்கை இதை விட மிகக் குறைவாகும். (எனவே, அவர்களின் நெருப்புகளாக இருக்க வாய்ப்பில்லை)என்று கூறினார்.

அப்போது அவர்கள் மூவரையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காவலர்களில் சிலர் பார்த்து விட்டனர். உடனே, அவர்களை அடைந்து, அவர்களைப் பிடித்து (கைது செய்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தனர். பின்பு அபூ சுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

அணியணியாய் முஸ்லிம்கள் அதிர்ச்சியில் அபூசுஃப்யான்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவை நோக்கி முன்னேறிச்) சென்ற போது அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “குதிரைப் படை செல்லும் போது நெரிசல் ஏற்படக் கூடிய (குறுகலான) இடத்தில் அபூசுஃப்யானை நிறுத்தி வையுங்கள். அவர் முஸ்லிம்களைப் பார்க்கட்டும் (அவர்களது படை பலத்தைப் புரிந்து கொள்ளட்டும்)என்று கூறினார்கள். (அவ்வாறே) அப்பாஸ் (ரலி) அவர்கள் அவரை (அந்த இடத்தில்) நிறுத்தி வைத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுடன் அனைத்துக் குலத்தாரின் படைகளும் ஒவ்வொன்றாக அபூசுஃப்யானைக் கடந்து செல்லத் தொடங்கின.

அவரை ஒரு படை கடந்து சென்றவுடன் “அப்பாஸே! இவர்கள் யார்?” என்று அபூசுஃப்யான் கேட்டார். அதற்கு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இவர்கள் ஃகிஃபாரீ குலத்தினர்என்று பதிலளித்தார்கள். (உடனே,) “எனக்கும் ஃகிஃபார் குலத்தாருக்கும் என்ன சம்பந்தம்? (எங்களுக்கிடையில் பூசலோ மோதலோ இல்லையே!)என்று அபூசுஃப்யான் கூறினார்.

பிறகு ஜுஹைனா குலத்தார் அவரைக் கடந்து சென்றனர். அப்போது அபூசுஃப்யான் முன் போலவே கேட்டார். பிறகு (அவரைக் கடந்து) சஅத் பின் ஹுதைம் குலத்தினர் சென்றனர். அப்போதும் அதே போல அபூசுஃப்யான் கேட்டார்.

(பிறகு) சுலைம் குலத்தினர் சென்றனர். முன்பு போலவே அபூசுஃப்யான் கேட்டார். (அப்பாஸ் -ரலி- அவர்களும் முன்பு போலவே பதிலளித்தார்கள்.)

ஸஅதின் சாடல்

கடைசியில் ஒரு (பெரிய) படை முன்னோக்கி வந்தது. அதைப் போன்ற (பெரும்) படையை அபூசுஃப்யான் பார்த்திருக்கவில்லை. “இவர்கள் யார்?” என்று அபூசுஃப்யான் கேட்க, “இவர்கள் தாம் அன்சாரிகள். சஅத் பின் உபாதா இவர்களின் தலைவர். அவருடன் தான் (அன்சாரிகளின்) கொடியிருக்கிறதுஎன்று அப்பாஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

அப்போது சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், “அபூசுஃப்யானே! இன்று, (தப்பிக்க முடியாத மாபெரும்) யுத்த நாளாகும். இன்று கஅபாவி(ன் புனித எல்லையி)னுள்ளே கூட யுத்தம் அனுமதிக்கப்படும்என்று (உணர்ச்சி வசப்பட்டுக்) கூறினார்கள். அதற்கு அபூ சுஃப்யான் “அப்பாஸே! அழிவு நாளில் இது மிக நல்ல நாள் (குறைஷிகளுக்கு ஆபத்தே; என்றாலும், நீங்கள் கருணை காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு)என்று கூறினார்.

புகார் செய்யும் அபூசுஃப்யான்

பிறகு, ஒரு படை வந்தது. அது (இது வரை வந்த) படைகளிலேயே மிகவும் சிறியதாக இருந்தது. அவர்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்குரிய கொடி, ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களிடம் இருந்தது.

அபூ சுஃப்யானைக் கடந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்ற போது அவர், “சஅத் பின் உபாதா என்ன சொன்னார் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர் என்ன சொன்னார்?” என்று கேட்டார்கள். இப்படி… இப்படி… எல்லாம் கூறினார்என்று அபூசுஃப்யான் (விவரித்துச்) சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உண்மைக்குப் புறம்பானதை சஅத் கூறி விட்டார்என்று சொல்லிவிட்டு, “மாறாக, இந்த நாள் இறையில்லம் கஅபாவை அல்லாஹ் கண்ணியப்படுத்தும் நாள். கஅபாவிற்குத் திரை போர்த்தப்படும் (முக்கியமான) நாள்என்று கூறினார்கள்.

வெற்றிக் கொடி நாட்டிய வீரர் ஜுபைர்

(ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது எதிரணியில் இருந்த காலித் பின் வலீத் இப்போது நபி (ஸல்) அவர்களின் படையில் ஒரு தளபதியாய் இருந்தார்கள்.)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தக் கொடியினை (மக்காவின் பொது அடக்கத்தலத்திற்கு அருகிலுள்ள) “ஹஜூன்என்னும் இடத்தில் நட்டு வைக்கும்படி உத்தரவிட்டார்கள்.

(மக்கா வெற்றிக்குப் பின்) அப்பாஸ் (ரலி) அவர்கள் ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களிடம், “அபூ அப்தில்லாஹ்வே! இங்கு தான் அந்தக் கொடியினை நட்டு வைக்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கு உத்தரவிட்டார்கள்என்றார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் அன்றைய தினம் காலித் பின் வலீத் (ரலி) அவர்களை மக்காவின் மேற்பகுதியான “கதாஎன்னும் கணவாய் வழியாக (மக்காவிற்குள்) நுழையுமாறு உத்தரவிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் “குதாவழியாக நுழைந்தார்கள். அன்றைய தினம் காலித் பின் வலீத்

(ரலி) அவர்களின் குதிரைப் படையினரில் இருவரான ஹுபைஷ் பின் அல் அஷ்அர் (ரலி) அவர்களும் குர்ஸ் பின் ஜாபிர் அல்ஃபிஹ்ரீ (ரலி) அவர்களும் (உயிர்த் தியாகிகளாகக்) கொல்லப்பட்டனர். (புகாரி 4280)

வெற்றி அத்தியாயத்தை ஓதியவாறே…

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி “அல்ஃபதஹ்என்னும் (48வது) அத்தியாயத்தை “தர்ஜீஉஎன்னும் ஓசை நயத்துடன் ஓதிக் கொண்டிருந்தததை நான் கண்டேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)

நூல்: புகாரி 4281

மலரும் நினைவுகள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் ஏகத்துவப் பிரச்சாரத்தைச் செய்யும் போது, குறைஷிகள், முஹஸ்ஸப் என்ற பள்ளத்தாக்கில் ஒன்று கூடி “முஹம்மதுடன் கொடுக்கல் வாங்கல் கூடாது; திருமண சம்பந்தம் செய்யக் கூடாது” என்று இறை மறுப்பு சபதம் செய்தனர்.

அதை இங்கு நபி (ஸல்) அவர்கள் நினைவு கூர்ந்து, “வெற்றி கிடைத்து, அந்த இடத்தில் தங்குவோம்’ என்று கூறி, வாழ்வு சத்திய வாதிகளுக்கு! அழிவு அசத்திய வாதிகளுக்கு என்பதை குறைஷிகளுக்கும் உலகுக்கும் உணர்த்தும் வகையில் பறை சாற்றுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் (மக்கா மீது நமக்கு) வெற்றியளித்தால், இன்ஷா அல்லாஹ்- அல்லாஹ் நாடினால் நாம் தங்கப் போகும் இடம் (பனூ கினானா குலத்தாரின் “முஹஸ்ஸப்என்னும்) பள்ளத்தாக்கு ஆகும். அந்த இடத்தில் தான் (குறைஷிகள்) இறை மறுப்பின் மீதே (நிலைத்து) இருக்கப் போவதாகச் சூளுரைத்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 4284

உள்ளே நுழைந்ததும் உத்தரவு

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் தலையில் இரும்புத் தொப்பியுடன் (மக்காவினுள்) நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றிய போது ஒரு மனிதர் வந்து, “இப்னு கத்தல் என்பவன் கஅபாவின் திரைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றான்எனக் கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “அவனைக் கொன்று விடுங்கள்என்று உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 4286

இவன் போர்க் குற்றவாளி என்பதால் கஅபாவின் திரைச் சீலையைப் பிடித்துத் தொங்கினாலும் மன்னிப்பு இல்லை என்று ஆட்சித் தலைவரான, மக்காவின் அதிபரான முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த உத்தரவைப் பிறப்பிக்கின்றார்கள்.

அன்சாரிகளுக்கு அதிக மரியாதை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து புறப்பட்டு மக்காவுக்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களை, (தமது படையின்) இரு பக்கவாட்டுப் படைகளில் ஒன்றுக்குத் தளபதியாக நியமித்தார்கள்.

காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களை மற்றொரு பக்கவாட்டுப் படைக்குத் தளபதியாக நியமித்தார்கள். அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை நிராயுதபாணி(களான காலாட்படை)யினருக்குத் தளபதியாக நியமித்தார்கள்.

அவர்கள் அனைவரும் பள்ளத்தாக்கின் மையப் பகுதிக்கு வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படையின் முக்கியப் பகுதியில் இருந்தார்கள். அப்போது அவர்களது பார்வையில் நான் பட்டபோது, “அபூஹுரைரா நீயா?” என்று கேட்டார்கள். நான், “(ஆம்) இதோ, வந்தேன் அல்லாஹ்வின் தூதரே!என்றேன். அப்போது அவர்கள், “ஓர் அன்சாரித் தோழரே (இப்போது) என்னிடம் வருவார் (என்றே நான் எதிர்பார்த்தேன்)என்றார்கள்.

(மற்றொரு அறிவிப்பில், “அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனக்காக அன்சாரிகளைச் சப்தமிட்டு அழைப்பீராக! என்றார்கள். உடனே அன்சாரிகள் வந்து குழுமினர்என இடம்பெற்றுள்ளது.)

(எதிரிகளான) குறைஷியர் தம்முடைய பல்வேறு குலத்தாரையும் ஆதரவாளர்களையும் ஒன்றுகூட்டி, “இவர்களை நாம் (முதலில் போருக்கு) அனுப்பி வைப்போம். இவர்களுக்கு (வெற்றி) ஏதேனும் கிடைத்தால், (குறைஷியரான) நாமும் இவர்களுடன் சேர்ந்து கொள்வோம். இவர்களுக்குத் தோல்வி ஏற்பட்டால், நம்மிடம் (முஸ்லிம்களால்) கோரப்படுவதை நாம் வழங்கி விடுவோம்என்று கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீங்கள் (ஒற்றுமையாக உள்ள) குறைஷியரின் பல்வேறு குலத்தாரையும் ஆதரவாளர்களையும் காண்கிறீர்கள் (அல்லவா?)” என்று கூறிவிட்டு, தம்முடைய ஒரு கையின் மீது மற்றொரு கையை வைத்து (அவர்களது ஒற்றுமையை) சைகை செய்து காட்டினார்கள்.

பிறகு “நீங்கள் (வெற்றி அடைந்த பின்) என்னை “ஸஃபாமலைக்கருகில் வந்து சந்தியுங்கள்என்று கூறி(விட்டுப் போ)னார்கள்.

அவ்வாறே நாங்கள் நடந்து சென்றோம். எங்களில் ஒருவர் எதிரிகளில் ஒருவரைத் தாக்கி வீழ்த்த நினைத்தால், (தடையின்றித்) தாக்கி வீழ்த்தினார். ஆனால், எதிரிகளில் யாரும் எங்களை நோக்கி எதையும் வீச இயலவில்லை. (முஸ்லிம் 3331)

அபூசுஃப்யானின் தோல்விப் பிரகடனம்

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸஃபா மலை மீது ஏறினார்கள். அன்சாரிகள் வந்து ஸஃபா மலையைச் சுற்றி நின்று கொண்டனர். அப்போது அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! குறைஷிக் கூட்டத்தார் முற்றாகத் துடைத்தெறியப்படுகின்றனர். இன்றைய தினத்திற்குப் பிறகு குறைஷியர் எவரும் இருக்க மாட்டார்கள்என்று கூறினார்கள். (முஸ்லிம் 3331)

(ஆம்! ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களின் பிடியில் சிக்காமல் தலை தப்பியவர் இந்த அபூசுஃப்யான் தான். பத்ரில் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்து, உஹதில் பின்னடைவு ஏற்பட்ட போது, “வெற்றி தோல்வி என்பது போரில் சகஜம்; இதை வைத்து நீங்கள் (முஸ்லிம்கள்) சத்தியத்தில் இருப்பதாக எண்ணிக் கொள்ளாதீர்கள்என்று ஜம்பம் பேசியவர். – பார்க்க: புகாரி 3039, 4043)

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் அபூசுஃப்யானின் இல்லத்தினுள் நுழைந்து கொள்கிறாரோ, அவர் அபயம் பெற்றவராவார்என்று அறிவித்தார்கள். (முஸ்லிம் 3331)

அன்சாரிகளின் பேராசை

அப்போது அன்சாரிகள் ஒருவருக்கொருவர் “இந்த மனிதருக்கு (நபியவர்களுக்கு) தமது ஊர் மீது பற்றும், தம் குலத்தார் மீது பரிவும் ஏற்பட்டு விட்டதுஎன்று பேசிக் கொண்டனர்.

அப்போது இறைவனிடமிருந்து செய்தி (வஹீ) வந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு “வஹீவந்தால், அது எங்களுக்குத் தெரியாமல் போகாது. அப்போது “வஹீமுடிவடையும் வரை எங்களில் யாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிப் பார்வையைச் செலுத்த மாட்டர்.

அவ்வாறே “வஹீவந்து முடிந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அன்சாரி சமுதாயமே!என்று அழைத்தார்கள். அம்மக்கள் “இதோ வந்தோம், அல்லாஹ்வின் தூதரே!என்று கூறினர். “இம்மனிதருக்குத் தமது ஊர் மீது பற்று ஏற்பட்டு விட்டது என்று நீங்கள் சொன்னீர்கள் (தானே)?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் “ஆம்; அவ்வாறு கூறவே செய்தோம்என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவ்வாறன்று; நான் அல்லாஹ்வின் அடிமையும் தூதரும் ஆவேன். நான் அல்லாஹ்வை நோக்கியும் உங்களிடமும் (நாடு துறந்து) ஹிஜ்ரத் வந்தேன். என் வாழ்வு உங்கள் வாழ்வோடு தான்; என் இறப்பு உங்கள் இறப்போடு தான்என்று கூறினார்கள்.

அப்போது அன்சாரிகள் அழுது கொண்டே வந்து, “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் கொண்ட பேராசையின் காரணத்தாலேயே அவ்வாறு நாங்கள் கூறினோம்என்று சொன்னார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களது சொல்லை உண்மை என ஏற்று, நீங்கள் கூறிய காரணத்தையும் ஏற்கின்றனர்என்று சொன்னார்கள்.

அப்போது மக்களில் சிலர், அபூசுஃப்யானின் வீட்டை நோக்கிச் சென்றனர். வேறு சிலர் தங்கள் (வீட்டுக்) கதவுகளைப் பூட்டிக் கொண்டனர். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஹஜருல் அஸ்வத்எனும் கல் இருக்குமிடத்தை நோக்கி வந்து, அதைத் தமது கையால் தொட்டு முத்தமிட்டார்கள். பிறகு இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள்.

அப்போது இறையில்லம் கஅபாவுக்கு அருகிலிருந்த ஒரு சிலையை நோக்கி வந்தார்கள். அதை மக்கள் வழிபட்டு வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் வில்லொன்று இருந்தது. அவர்கள் அந்த வில்லின் வளைவுப் பகுதியை பிடித்திருந்தார்கள். அந்தச் சிலைக்கு அருகில் வந்ததும், அந்த வில்லால் அதன் கண்ணில் குத்திக் கொண்டே “உண்மை வந்துவிட்டது. பொய் அழிந்துவிட்டதுஎன்று கூறலானார்கள்.

இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்ததும் “ஸஃபாகுன்றுக்கு வந்து, அதன் மீது ஏறி, இறையில்லம் கஅபாவைப் பார்த்தார்கள். அப்போது அல்லாஹ்வைப் போற்றிப் புகழவும், அவன் நாடிய சிலவற்றை வேண்டிப் பிரார்த்திக்கவும் ஆரம்பித்தார்கள். (முஸ்லிம் 3331)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் (ஒட்டகத்தின் மீதமர்ந்த படி) வந்து, இறையில்லம் கஅபாவின் முற்றத்தில் இறங்கினார்கள். பிறகு (கஅபாவின் காவலராயிருந்த) உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களிடம் (அவர்களை அழைத்துவரும் படி) ஆளனுப்பினார்கள். உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்கள் சாவியுடன் வந்து கஅபாவின் கதவைத் திறந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களும் பிலால் (ரலி), உசாமா பின் ஸைத் (ரலி), உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோரும் கஅபாவிற்குள் நுழைந்தார்கள். உள்ளே நுழைந்ததும் கதவைத் தாழிடும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட, அவ்வாறே தாழிடப்பட்டது. பின்னர் அவர்கள் நீண்ட நேரம் அதனுள் தங்கியிருந்துவிட்டுப் பிறகு கதவைத் திறந்தார்கள்.

அறிவிப்பவர்:  இப்னு உமர் (ரலி)

நூல்: முஸ்லிம் 2576

சிலைகளை உடைக்க உத்தரவு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்த போது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச் சிலைகளில் (குறி பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இருந்த (இறைத்தூதர் களான) இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவங்களும் அகற்றப்பட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களை தன் கருணையை விட்டு அப்பாற்படுத்துவானாக! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவ்விரு வரும் அம்புகளின் மூலம் குறிபார்ப்பவர்களாக ஒரு போதும் இருந்ததில்லை என்பதை இ(தைச் செய்த)வர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்என்று கூறினார்கள். பிறகு, கஅபாவில் நுழைந்தார்கள். அதன் மூலைகளில் (நின்று) தக்பீர் கூறினார்கள்; ஆனால், அதனுள் தொழாமல் வெளியேறி விட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 4288

முகங்குப்புற விழுந்த 360 சிலைகள்

கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருக்க, நபி (ஸல்) அவர்கள் மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள், “சத்தியம் வந்து விட்டது; அசத்தியம் அழிந்து விட்டது. சத்தியம் வந்துவிட்டது; (இனி) அசத்தியம் மீண்டும் ஒரு முறை பிறக்காதுஎன்று கூறிக் கொண்டே, தம் கையிலிருந்த குச்சியால் அவற்றை (குத்தி) அடிக்கத் தொடங்கினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 4287

புனித நகரின் புனித மீட்புரை

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, “அல்லாஹ்வே மக்காவிற்குப் புனிதத்தை வழங்கியவன். அதற்குப் புனிதத்தை வழங்கியவர்கள் மனிதர்கள் அல்லர். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எவருக்கும் இங்கே இரத்தத்தைச் சிந்துவதோ இங்குள்ள மரத்தை வெட்டுவதோ அனுமதிக்கப்படவில்லை. அல்லாஹ்வின் தூதர் இங்கு போர் செய்ததனால் இதைப் பொது அனுமதி என்று யாரேனும் கருதினால், “அல்லாஹ் தன் தூதருக்குத் தான் அனுமதி வழங்கினான்; உங்களுக்கு அனுமதி வழங்கவில்லைஎன்று கூறிவிடுங்கள். எனக்குக் கூட பகலில் சிறிது நேரம் மட்டுமே (இங்கு போர் புரிய) அனுமதி அளிக்கப்பட்டது. இன்று அதன் புனிதத் தன்மை நேற்றைய அதன் புனிதத் தன்மையைப் போல் மீண்டு வந்து விட்டது. (இதை இங்கு) வந்திருப்போர் வராதவருக்குச் சொல்லி விடுங்கள்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஷுரைஹ் அல் அத்வீ (ரலி)

நூல்: புகாரி 4295

எல்லாம் வல்ல அல்லாஹ், இப்ராஹீம் (அலை) அவர்கள் எழுப்பிய அந்த ஆலயத்தை அவர்களது இரத்தமான, ஏகத்துவ சந்ததியான முஹம்மத் (ஸல்) அவர்களிடம் ஒப்படைத்தான்.

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்.

அல்குர்ஆன் 9:17, 18

இந்த வசனத்தில் கூறுவது போன்று, இணை வைப்பாளர்களின் கையிலிருந்த ஆலயத்தின் நிர்வாகத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைத்தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த ஆலயத்தை மட்டுமல்ல! அதில் நடைபெறும் ஹஜ் எனும் வணக்கத்தையும் தூய்மைப்படுத்தினார்கள்.

நிர்வாண தவாஃபுக்கு நிரந்தரத் தடை

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

விடைபெறும் ஹஜ்ஜுக்கு முந்தைய வருடம் நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) தலைமையில் மக்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி வைத்தார்கள். துல்ஹஜ் பிறை பத்தாம் நாள், “எச்சரிக்கை! இந்த வருடத்திற்குப் பின்னர் இணை வைப்பவர்கள் யாரும் ஹஜ் செய்யக் கூடாது. கஅபாவை நிர்வாணமாகத் தவாஃப் செய்யக் கூடாதுஎன அறிவிக்கச் செய்தார்கள்.

நூல்: புகாரி 1622

கஅபாவின் நிர்வாகத்தைக் கையில் எடுத்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜைத் தவிர அனைத்து வணக்கங்களையும் நிறைவேற்றியிருந்தார்கள். இப்போது அவர்களுக்கு முன் எஞ்சியிருந்தது ஹஜ் என்ற வணக்கம் மட்டும் தான். அதை ஹிஜிரி 10ஆம் ஆண்டு நிறைவேற்றிக் காட்டினார்கள்.

கட்டட அமைப்பில் மாற்றம் இல்லை

நபி (ஸல்) அவர்கள் கஅபாவைக் கைப்பற்றியதற்குப் பின்னால் கஅபாவின் கட்டட அமைப்பில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆயிஷா! உன் சமுதாயத்தார் இணைவைப்புக்கு நெருக்கமான காலத்தவர்கள் என்பது மட்டும் இல்லையாயின், கஅபாவை நான் இடித்துவிட்டு, (உயர்ந்திருக்கும் அதன் தளத்தைத்) தரையோடு சேர்ந்தாற்போல் ஆக்கியிருப்பேன். மேலும், கிழக்கே ஒன்றும் மேற்கே ஒன்றுமாக அதற்கு இரு வாயில்களை அமைத்திருப்பேன். “ஹிஜ்ர்பகுதியில் ஆறு முழங்களைக் கூடுதலாக்கியிருப்பேன். ஏனெனில், குறைஷியர் கஅபாவை(ப் புதுப்பித்து)க் கட்டிய போது அதைக் குறைத்து (சற்று உள்ளடக்கிக் கட்டி)விட்டனர்என்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 2588

நபிகளாரின் காலத்திற்குப் பின்…

யஸீத் பின் முஆவியா ஆட்சிக் காலத்தில் ஷாம்வாசிகள் (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக மக்காவை முற்றுகையிட்டு) போர் தொடுத்த போது, இறையில்லம் கஅபா தீக்கிரையானது. அப்போது நடந்தவை நடந்து முடிந்தன. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், மக்கள் ஹஜ் பருவத்தில் ஒன்று கூடும் வரை இறையில்லத்தை அதே நிலையிலேயே விட்டு வைத்தார்கள். ஷாம்வாசிகளுக்கு எதிராக “மக்களுக்கு எழுச்சியூட்டு வதற்காகவேஅல்லது “அவர்களை ரோஷம் கொள்ளச் செய்வதற்காகவேஅவ்வாறு விட்டு வைத்தார்கள்.

(ஹஜ்ஜை முடித்து) மக்கள் புறப்பட்ட போது அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், “மக்களே! கஅபா விஷயத்தில் எனக்கு ஆலோசனை கூறுங்கள். அதை இடித்து விட்டுப் புதிதாகக் கட்டுவதா, அல்லது அதில் பழுதடைந்த பகுதியை மட்டும் செப்பனிடுவதா?” என்று கேட்டார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “எனக்கு இது தொடர்பாக ஒரு யோசனை தோன்றுகிறது. அதில் பழுதடைந்த பகுதியை மட்டும் நீங்கள் செப்பனிடுங்கள். மக்கள் இஸ்லாத்தை ஏற்ற போதிருந்த அதே நிலையில் கஅபாவை விட்டு விடுங்கள்; மக்கள் இஸ்லாத்தை ஏற்ற போதும், நபி (ஸல்) அவர்கள் இறைத் தூதராக நியமிக்கப் பெற்ற போதும் இருந்த நிலையில் அதன் கற்களையும் (விட்டுவிடுங்கள்)என்றார்கள்.

அதற்கு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், “உங்களில் ஒருவரது இல்லம் தீக்கிரையானால் அதைப் புதுப்பிக்காத வரை அவரது மனம் திருப்தியடைவதில்லை. இந்நிலையில் இறையில்லத்தின் விஷயத்தில் மட்டும் எப்படி (நீங்கள் இவ்வாறு கூறுவீர்கள்)? நான் (கஅபாவை இடித்துப் புதுப்பிப்பதா, அல்லது பழுதடைந்ததைச் செப்பனிடுவதா எனும் விஷயத்தில்) என் இறைவனிடம் நன்முடிவு வேண்டி மூன்று முறை பிரார்த்திப்பேன். பிறகு ஒரு முடிவுக்கு வருவேன்என் றார்கள்.

நன்முடிவு வேண்டி மூன்று முறை பிரார்த்தித்தபோது, இடித்துவிட்டுப் புதுப்பிக்கும் முடிவுக்கு வந்தார்கள். அப்போது மக்கள் முதலில் கஅபாவின் மீது ஏறும் மனிதர் மீது வானத்திலிருந்து ஏதேனும் வேதனை இறங்கி விடும் என அச்சம் தெரிவித்தனர். இறுதியாக ஒரு மனிதர் கஅபாவின் மீதேறி அதிலிருந்து ஒரு கல்லை கீழே தள்ளினார். அவருக்கு எதுவும் நேராததைக் கண்ட மக்கள், ஒவ்வொருவராக (இடிக்கும் பணியில்) ஈடுபட்டு அதைத் தரைமட்டமாக்கினர். பின்னர் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கட்டடப் பணி நிறைவடையும் வரை (இறையில்லத்திற்குத் தாற்காலிகத்) தூண்கள் அமைத்து அவற்றின் மீது திரையும் தொங்க விட்டார்கள்.

மேலும், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா (ரலி) அவர்கள் “என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(உன்னுடைய சமுதாய) மக்கள் இறை மறுப்பிற்கு நெருக்கமான காலத்தவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்றில்லையாயின் – என்னிடம் கஅபாவின் கட்டடத்தை வலுப்படுத்தக் கூடிய அளவு பொருளாதாரம் இல்லை என்பது (ஒரு புறம்) இருக்க – நான் “ஹிஜ்ர்பகுதியில் ஐந்து முழங்களை கஅபாவுடன் சேர்த்து விட்டிருப்பேன். பின்னர் மக்கள் நுழைவதற்கு ஒரு வாயிலும் வெளியேறுவதற்கு ஒரு வாயிலுமாக (இரு வாயில்களை) அதற்கு அமைத்திருப்பேன்என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். இன்று என்னிடம் பொருளாதாரம் இருப்பதைக் காண்கிறேன். மக்களை அஞ்சும் நிலையிலும் நான் இல்லைஎன்று கூறி(விட்டு, கஅபாவைப் புதுப்பிக்கலா)னார்கள்.

பின்னர் கஅபாவில் “ஹிஜ்ர்பகுதியில் ஐந்து முழங்களைக் கூடுதலாக்கினார்கள்; மக்கள் பார்த்துக் கொண்டிருக்கவே (ஹிஜ்ர் பகுதியை அகழ்ந்து) ஓர் அடித்தளத்தை வெளியாக்கினார்கள். அதன் மீதே கஅபாவை எழுப்பினார்கள். (முடிவில்) கஅபாவின் உயரம் பதினெட்டு முழங்களாக இருந்தது. அதன் உயரத்தை அதிகமாக்கிய பின்பும் அது குறைவாகவே பட்டது. எனவே, மேலும் பத்து முழங்களை அதிகமாக்கினார்கள்; அத்துடன் உள்ளே நுழைவதற்கு ஒரு வாயில்; வெளியேறுவதற்கு ஒரு வாயில் என இறையில்லத்திற்கு இரு வாயில்களை அமைத்தார்கள்.

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட போது, ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் இந்த விவரங்களைத் தெரிவித்து (கலீஃபா) அப்துல் மலிக் பின் மர்வானுக்கு ஒரு கடிதம் வரைந்தார். அதில் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் (ஹிஜ்ர் பகுதியை அகழ்ந்து அங்கிருந்த) ஓர் அடித் தளத்தின் மீது கஅபாவை எழுப்பியுள்ளார்; அதை மக்காவின் நியாயவான்கள் பலரும் பார்த்துள்ளனர்என்றும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு அப்துல் மலிக் பின் மர்வான், “நாம் இப்னுஸ் ஸுபைரை எந்த விஷயத்திலும் களங்கப்படுத்த விரும்பவில்லை, எனவே, அவர் உயர்த்திக் கட்டியதை அப்படியே விட்டு விடுவீராக! “ஹிஜ்ர்பகுதியிலிருந்து அவர் அதிகப்படுத்தியதை (மட்டும்) பழையபடியே மாற்றி அமைப்பீராக! அவர் புதிதாகத் திறந்து விட்ட வாயிலை மூடிவிடுவீராக!என்று பதில் எழுதினார். எனவே, ஹஜ்ஜாஜ் (“ஹிஜ்ர்பகுதிச் சுவரை) இடித்து முன்பிருந்த அமைப்பிற்கே மாற்றி அமைத்தார்.

அறிவிப்பவர்: அதாஉ பின் அபீரபாஹ்

நூல்: முஸ்லிம் 2589

இதன் பின்னர் கஅபாவெனும் இந்த இறை ஆலயம் வேறெந்த மாற்றத்திற்கும் உள்ளாகாமல் இன்று முஸ்லிம்கள் கையிலேயே, குறிப்பாக ஏகத்துவவாதிகள் கையிலேயே இருந்து வருகின்றது.

தஜ்ஜாலால் நெருங்க முடியாது

மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காவல் புரிந்து கொண்டு இருப்பார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 1881

கஅபாவை நோக்கிப் படை

ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள்; வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல், கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்!என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாமவர் முதல், கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள்; கடை வீதிகளும் இருக்குமே!என நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் முதலாமவர் முதல், கடைசி நபர் வரை புதையுண்டு போகத் தான் செய்வார்கள்; எனினும் பின்னர் அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்!என்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2118

இறுதிக் காலத்தில் கஅபா இடிக்கப்படுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அபிசீனியாவைச் சேர்ந்த, மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1596