தவ்ஹீத் ஜமாஅத்தும், பித்ரா நிதியும்!

ஃபித்ரா வழங்குவதற்காக மக்களிடம் திரட்டும் நிதியில் மீதமான தொகையை ஜகாத் கணக்கில் சேர்த்து விட்டதாக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா?

இவ்வாறு செய்தால் ஃபித்ரா கொடுத்தவர்களுக்கு ஃபித்ராவின் நன்மை கிடைத்து விடுமா?

என்று ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது.

ஃபித்ரா தொகையை ஃபித்ராவுக்குத் தான் பயன்படுத்த வேண்டும். இதில் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு மாற்றுக் கருத்து இல்லை. அது போல் குறிப்பிட்ட மார்க்கக் கடமை வகைக்காக திரட்டப்படும் நிதியை அந்தப் பணிக்குத் தான் செலவிட வேண்டும்.

இதிலும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு மாற்றுக் கருத்து கிடையாது. அதே நேரத்தில் தவ்ஹீத் ஜமாஅத் செய்து வரும் நடைமுறையிலும் மார்க்க அடிப்படையில் எந்தத் தவறும் கிடையாது.

மார்க்கத்தின் வரம்பு மீறப்படாத வகையிலும், ஏழைகளுக்கு பித்ராவின் பயன் முழுமையாகச் சென்றடையும் வகையிலும் தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் பித்ரா திரட்டுதலும், அதன் வினியோகமும் அமைந்துள்ளது. தவ்ஹீத் ஜமாஅத் 2004 ஆம் ஆண்டு முதல் கடைப்பிடித்து வரும் நடைமுறை இப்படித்தான் அமைந்துள்ளது. இதுபற்றி முழு விபரத்தையும் அறிந்து கொண்டால் இதில் மார்க்க வரம்பு சிறிதளவும் மீறப்படவில்லை என்பதை அறியலாம்.

தவ்ஹீத் ஜமாஅத் தலைமையைப் பொருத்த வரை உள்ளூரில் பித்ரா வசூலிப்பதில்லை. உள்ளூரில் அந்தந்தக் கிளைகள் தான் வசூலித்து விநியோகித்துக் கொள்வார்கள். மாநிலத் தலைமைக்கு நேரில் வந்து சில ஆயிரம் ரூபாய் அளவுக்கு சிலரால் வழங்கப்படும் பித்ரா மட்டுமே தலைமைக்கு உள்ளூரில் திரட்டப்படும் நிதியாகும்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் மூலம் கிளைகளுக்குப் பகிர்ந்து கொடுக்கும் பித்ரா தொகை முழுவதும் வெளிநாடுகளில் வாழும் நம் சகோதரர்கள் மூலம் தாயகத்தில் உள்ள உறவினர் வழியாக அனுப்படும் தொகை மட்டுமே.

வெளிநாடுகளில் வாழும் தவ்ஹீத் சகோதரர்கள் தங்கள் பித்ரா தொகையைப் பெற்றுக் கொள்ளும் நிலையில் ஏழைகள் இல்லை என்பதால் தங்கள் பித்ரா தொகையை என்ன செய்வது என்று கேள்விகள் எழுப்பி வந்தனர். இந்தக் கேள்விகள் 1992 முதல் எழுப்பப்பட்டு வந்தது.

உங்கள் ஃபித்ரா தொகையைத் தாயகத்தில் வழங்கினால் ஏழைகள் அதிகம் பயன்பெறுவார்கள் என்று நாம் கூறியதன் அடிப்படையில் சில சகோதரர்கள் மதுரையில் நான் அச்சகம் நடத்திக் கொண்டிருந்ததால் ஆரம்பத்தில் என் பெயருக்கு பித்ரா தொகையை அனுப்பி வைத்தார்கள். அதை மதுரை சகோதரர்களிடம் ஒப்படைத்து மதுரையில் மட்டும் விநியோகம் செய்தோம். 1994 லும் இதுபோல் அனுப்பப்பட்டது. இந்தக் கால கட்டங்களில் ஒரு லட்சம் ரூபாய்க்குள் பித்ரா அனுப்பப்பட்டு வந்தது.

1995ல் தமுமுக ஆரம்பிக்கப்பட்ட போது அந்தக் கால கட்டத்தில் அமைப்பு ரீதியாக தவ்ஹீத் ஜமாஅத் உருவாக்கப்படாமல் இருந்ததால் தமுமுகவுக்கு அனுப்பி வைக்குமாறு நான் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் பித்ரா தொகையை தமுமுகவுக்கு அனுப்பினார்கள்.

அந்தக் காலகட்டத்தில் தமுமுகவிற்கு பொருளாதாரத் தேவை இருந்ததால் வளைகுடாவில் உள்ள சகோதரர்கள் ஒன்று கூடி ஒரு முடிவை அறிவித்தார்கள்.

அதாவது இந்தியாவில் அன்றைய நிலவரப்படி ஒரு நபருக்கு முப்பது ரூபாய் பித்ரா என்று நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் சவூதி, மற்றும் வளைகுடாவில் சவூதி உலமாக்கள் 10 ரியால் என்று அன்றைக்கு நிர்ணயித்திருந்தனர். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் தொண்ணூறு அல்லது நூறு ரூபாய்.

பணமதிப்பில் உள்ள இந்த வேறுபாட்டைக் கவனத்தில் கொண்டு நாமும் 10 ரியால் பித்ரா திரட்டுவோம். இந்தியக் கணக்கின் படி பித்ரா விநியோகம் செய்து விட்டு எஞ்சிய தொகையை தமுமுக வளர்ச்சி நிதிக்கு பயன்படுத்திக் கொள்வது என்று வளைகுடா தமுமுகவினர் முடிவு எடுத்து அறிவித்தனர்.

ஏன் பித்ராவாக மூன்று திர்ஹத்தையே வாங்கலாமே? என்று நாம் கேட்டோம். வளைகுடா அரசுகள் பத்து ரியால் அல்லது பத்து திர்ஹம் என்று நிர்ணயித்துள்ளதால் அதை விடக் குறவாக பித்ரா கொடுக்க மக்கள் விரும்பவில்லை என்று அவர்கள் கூறினார்கள்.

அப்படியானால் இப்படிச் செய்வது தவறில்லை. ஆனால் பித்ரா வசூலிக்கும் படிவத்தில் இதைத் தெளிவாகக் குறிப்பிடுங்கள் என்று நாம் தெரிவித்தோம். அதாவது பித்ரா என்பது மூன்று திர்ஹம் தான். கூடுதல் தொகை இயக்கப் பணிகளுக்கு வழங்கப்படும் என்று குறிப்பிட்டால் இதற்கு முழு மனதுடன் சம்மதிப்பவர்கள் தான் நம்மிடம் தருவார்கள். அவர்களின் பித்ரா கடமையும் நிறைவேறி விடும். இயக்கத்துக்கான பணிக்கு உதவியாகவும் அமையும் என்று அறிவுறுத்தினோம்.

அதன்படி பத்து லட்சம் அவர்களிடமிருந்து வந்தால் நாலு லட்சம் பித்ராவாக விநியோகம் செய்யப்படும். ஆறு லட்சம் இயக்கத்துக்குப் பயன்படுத்தப்படும்.

நாலு லட்சம் மட்டும் விநியோகிப்பதே அனைவரின் பித்ராவுக்கும் இந்திய ரூபாய் மதிப்பின் படி போதுமான தொகையாகும்.

இந்த நிலையில் தான் தமுமுகவில் இருந்து தவ்ஹீத் சகோதரர்கள் மொத்தமாக வெளியேறி தவ்ஹீத் ஜமாஅத் என்று செயல்பட ஆரம்பித்தோம். தமுமுகவுக்கு அனுப்பி வந்த சகோதரர்களில் மிகப் பெரும்பாலோர் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு பித்ராவை அனுப்பலானார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகம் பித்ரா விநியோகம் செய்யும் முறையில் மாற்றம் செய்ய முடிவு செய்தது.

வளகுடாவில் இருந்து அனுப்பப்படும் தொகையில் இந்தியாவில் தமிழகத்தில் உள்ள விலவாசி நிலவரப்படி பித்ரா கொடுத்தாலே அனைவரின் பித்ரா நிறைவேறி விடும் என்றாலும் ஏழைகள் அதிகமாக உள்ளதால் வருகின்ற அனைத்தையும் நாம் விநியோகம் செய்து விடுவோம். நிர்வாகப் பணிக்கு அதிலிருந்து எதையும் பயன்படுத்த வேண்டாம் என்பது தான் அந்த முடிவு.

உதாரணமாக இந்த ஆண்டு சுமார் அறுபது லட்சம் ரூபாய் வருகிறது என்றால் தலைக்கு பத்து திர்கம் அல்லது ரியால் என்ற கணக்கில் தான் அவை திரட்டப்பட்டன. இந்த ஆண்டு தமிழக விலைவாசி நிலவரப்படி ஒரு நபருக்கு நாற்பது ரூபாய் பித்ரா என்ற கணக்குப் படி ஒவ்வொருவரும் பித்ராவை விட அறுபது ரூபாய்கள் கூடுதலாக வழங்கியுள்ளனர். அறுபது லட்சம் ரூபாயில் இருபது லட்சம் ரூபாய் பித்ரா வினியோகம் செய்தாலே அனைவரின் பித்ராவும் நிறைவேறி விடும். ஆனாலும் அறுபது லட்சம் ரூபாயையும் நாம் விநியோகம் செய்வது என்ற கொள்கை முடிவை எடுத்து செயல்படுத்தி வருகிறோம்.

சவூதிக்கும், நமக்கும் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் வித்தியாசத்தில் பெருநாள் வருவது வழக்கம். சவூதியில் உள்ளவர்கள் பெருநாள் காலை வரை பித்ராவை நமது கிளையில் கொடுப்பார்கள். தமிழகத்தில் பெருநாள் இன்னும் வராததால் அதைப் பெருநாளைக்கு முன்பே இங்கே விநியோகித்து விட முடியும் என்பதால் அங்குள்ள கிளைகள் பெருநாள் காலை வரை பித்ராவைப் பெற்றுக் கொள்வார்கள்.

மேலும் ஒவ்வொரு பகுதியிலும் எவ்வளவு திரட்டப்பட்டது என்பதை அவர்கள் மொத்தமாகச் சொல்ல மாட்டார்கள். அப்படிச் சொல்லவும் முடியாது.

பிறை 27ல் எங்கள் கணக்கில் இரண்டு லட்சம் எழுதிக் கொள்ளுங்கள் என்பார்கள். ஒரு மணி நேரம் கழித்து இன்னும் பத்தாயிரம் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று உடனுக்குடன் அப்டேட் செய்வார்கள். தகவல் வருவதற்கு ஏற்ப மாவட்டங்களுக்குத் தெரிவிக்கப்படும். ஒரு மாவட்டத்துக்கு ஐந்து லட்சம் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படும். மறு நாள் மேலும் ஒரு லட்சம் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று வரும் தொகைக்கு ஏற்ப சொல்லப்பட்டுக் கொண்டு வரும்.

சில நேரங்களில் நாம் கடைசியாகத் தெரிவித்த தொகையை அவர்களால் விநியோகம் செய்ய முடியாமல் போய் விடும். கிளைகள் இனிமேல் விநியோகிக்க முடியாது என்று தெரிவித்தால் அந்தத் தொகையை தலைமையில் ஒப்படைப்பார்கள். இதனால் மிகச் சிறிய அளவிலான தொகை மீதமாகிவிடும். பெருநாள் முடிந்த பின் பித்ரா என்ற அடிப்படையில் அதை வினியோகிக்க முடியாது.

வளைகுடாவில் உள்ள சகோதரர்கள் பெருநாளைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் தமது பித்ராவை வழங்கினால் தவிர அனைத்தையும் விநியோகிப்பது சாத்தியம் இல்லை. அதே நேரத்தில் சில ஆயிரங்கள் அல்லது ஓரிரு லட்சங்கள் மிஞ்சி விட்டாலும் நாம் ஏற்கனவே விநியோகித்த தொகையே பித்ராவை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளதால் இது யாருடைய பித்ராவையும் பாதிக்காது.

வளைகுடா விலைவாசிக்கும், தமிழக விலைவாசிக்கும் உள்ள வேறுபாட்டை நாம் சமுதாயம் அதிக நன்மை அடையும் வகையில் பயன்படுத்திக் கொள்வதால் இந்த நிலை ஏற்படுகிறது.

ஒரு வேளை வளைகுடாவிலும், தமிழகத்திலும் ஒரே தொகை தான் பித்ரா என்ற நிலை வருமானால் பெருநாளைக்கு முதல் நாளே தந்தால் தான் எங்களால் விநியோகிக்க முடியும் என்று அறிவித்து விடுவோம். இன்றைய நிலையில் ஏழைகளுக்குப் பயன்படும் வகையில் நாணய மாற்றத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி மக்களுக்கு நன்மை செய்கிறோம்.

மற்றவர்களைப் போல் ஃபித்ரா என்று வசூலித்து மக்களுக்கு விநியோகம் செய்யாமல் தங்கள் நிறுவனத்துக்குப் பயன்படுத்துவதும், வந்தது எவ்வளவு என்பதற்கு விபரம் சொல்லாமல் இருட்டடிப்புச் செய்வதும் தவ்ஹீத் ஜமாஅத்தில் இல்லை.

பித்ரா மோசடிக்காரர்களும், திருடர்களும், மக்களிடம் பித்ராவைத் திரட்ட முடியாமல் நம்பிக்கை இழந்தவர்களும் இது பற்றி கள்ளப் பெயர்களில் கேள்வி கேட்கிறார்கள். யாராக இருந்தாலும் விநியோகம் செய்யவே முடியாத நிலை நிச்சயம் ஏற்படும். அப்போது அதைக் கடலில் போட வேண்டும் என்கிறார்களா? அல்லது ஏப்பம் விட்டு விட்டு கள்ளக் கணக்கு காட்ட வேண்டும் என்கிறார்களா என்று தெரியவில்லை.

தவ்ஹீத் ஜமாஅத் எவ்வளவு தான் முயன்றும் தன்னால் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் மிஞ்சிய சிறிதளவு தொகையை ஜகாத்தில் சேர்ப்பது இவர்களுக்கு ஆச்சரியமாக உள்ளது. இத் பித்ரா கடமை அனைவருக்கும் நிறைவேறுவதைப் பாதிக்காது என்பதை முன்னர் நாம் அளித்த விளக்கத்தில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

குறிப்பு : இந்த நிலைபாட்டை யாராவது ஒப்புக் கொள்ள மறுத்தால் அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தில் தங்கள் பித்ராவை ஒப்படைக்காமல் இருக்கலாம். தங்களுக்கு நம்பிக்கையான நிறுவனத்தில் மூலம் தாராளமாகக் கொடுக்கலாம். அல்லது இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஏற்கத்தக்க தீர்வை சொல்லலாம்.