அல்லாஹ்வின் ஆற்றலுக்கு  அணை போடும் கஸ்ஸாலி

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?                 தொடர்: 12

அல்லாஹ்வின் ஆற்றலுக்கு  அணை போடும் கஸ்ஸாலி

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

அறிவுக்கடல் கஸ்ஸாலி என்று தமிழக ஆலிம்களில் பாராட்டப்படுகின்ற கஸ்ஸாலி ஷியா சிந்தனைவாதி என்பதைக் கடந்த இதழில் தெளிவான ஆதாரங்களின் அடிப்படையில் கண்டோம். இவர் அறிவுக்கடல் அல்ல! அறியாமைக் கடல் என்பதற்கு அடுக்கடுக்கான சான்றுகளைப் பார்த்து இருக்கிறோம். மார்க்கம் என்ற பெயரில் அறியாமைக் களத்தில் நின்று இவர் ஆடிய ஆட்டம் சாதாரண ஆட்டமல்ல! சகிக்க முடியாத ஆட்டமாகும்.

நபி (ஸல்) அவர்களுக்கு வந்த வஹீக்கு மாற்றாக, தவமிருக்கும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தனி வஹீ உதிக்கும் என்ற இவரது கதையளப்பை முன்பு நாம் பார்த்தோம். தூதர் (ஸல்) அவர்களிடம் விளையாட்டுக் காட்டிய கஸ்ஸாலி, தூய அல்லாஹ்விடமே தனது விளையாட்டைக் காட்டுவதைப் பார்ப்போம்.

உணவு, தவணை, மகிழ்ச்சி, துக்கம், கவலை, ஆற்றல், இறை நம்பிக்கை, இறை மறுப்பு, கட்டுப்படுதல், மாறு செய்தல் என்று அல்லாஹ் தனது அடியார்களுக்கிடையே செய்த பங்கீடு அனைத்துமே நீதியும் நியாயமும் ஆகும். அதில் அநியாயமே இல்லை. எனினும் அது அவசியத்திற்கு ஒப்பவும் அவசியத்திற்குத் தக்கவும், அவசியத்திற்கு ஏற்பவும் நீதமான, கட்டாயமான ஓர் ஒழுங்குமுறைப்படி அமைந்திருக்கின்றது. இதைவிட மிக அழகான, நிறைவான, முழுமையான வேறொரு (உலக) அமைப்பு இருப்பதற்கு அறவே சாத்தியமில்லை.

இதற்கு அப்பால் இறையாற்றல் இல்லை

ஒரு பேச்சுக்கு அப்படி ஓர் உலகம் சாத்தியமாகி, அவன் தன் ஆற்றலுடன் அதைப் படைத்து அருட்புரியாமல் தன் வசம் சேமித்து வைத்திருந்தால், அது அவனது வடிகட்டிய கஞ்சத்தனமும் கருமித்தனமும் ஆகும். இது அவனது கொடைத் தன்மைக்கு நேர் எதிரான செயல்பாடாகும். அவனது நீதத் தன்மைக்கு எதிரான அநீதமான, அநியாயமான செயல்பாடாகும்.

இதை கஸ்ஸாலி (ஹகீக்கத்து தவ்ஹீத்) ஏகத்துவத்தின் யதார்த்தம் அல்லது உண்மை வெளிப்பாடு என்ற தலைப்பின் கீழ் குறிப்பிடுகின்றார்.

பார்ப்பதற்கும், கேட்பதற்கும் இந்த வார்த்தைகள் பக்கா தவ்ஹீதையும் அல்லாஹ்வின் நீத, நியாயத்தன்மையை அப்படியே அழகாகப் பிரதிபலிப்பது போல் தோன்றும். ஆனால் அத்தனையும் பசப்பு மொழி, பாசாங்கு மொழி என்பதை அவரது கடைசி விளக்கத்தைப் படித்தால் தெரிந்து விடும்.

அதாவது, இங்கு உலகத்தின் படைப்புத் திறன், அதன் படைப்பழகு, அதில் அல்லாஹ் பகிர்ந்திருக்கும் நீதி பகிர்மானம், உணவு விதி பரிபாலணம் அத்தனையும் அருமையிலும் அருமை என்று கூறுகின்ற அதே வேளையில், அல்லாஹ்வுக்கு இதைத் தாண்டி படைப்பதற்கு ஆற்றல் இல்லை என்று பகிரங்க, பூர்வாங்க வாக்குமூலம் கொடுக்கின்றார் கஸ்ஸாலி!

இந்தக் கொள்கையும் கோட்பாடும் கஸ்ஸாலியுடையதல்ல! இது தத்துவஞானிகளின் கொள்கையும் கோட்பாடுமாகும்.

தத்துவஞானிகளின் தறிகெட்டக் கொள்கை

அல்லாஹ் உலகைப் படைத்துவிட்டான். இதன் மூலம் அவனது நாட்டம் நிறைவேறிவிட்டது. அவனது நாட்டம் நிறைவேறிவிட்டதால் அந்த நாட்டம் அவனிடமிருந்து பிரிந்துவிட்டது. அல்லாஹ் தன் ஆற்றலால் இந்த உலகைப் படைத்துவிட்டான். அத்துடன் அவனது ஆற்றல் அவனை விட்டும் அறுந்துவிட்டது. அவனுக்கும் அந்த ஆற்றலுக்கும் சம்பந்தம் இல்லை. இதன் விளைவு, இனி இதுபோன்ற உலகத்தை அவனால் படைக்க இயலாது.

இதுதான் தத்துவவியல் கொள்கையும் கோட்பாடுமாகும். அல்லாஹ் இந்த அபத்தத்திலிருந்தும், அபாண்டத்திலிருந்தும் நம்மைக் காக்க வேண்டும்.

இதைப் பற்றி, கஸ்ஸாலியை கல்விக் கடல் என்று புகழ்கின்ற அவரது மாணவரான அபூபக்ர் பின் அரபீ தனது அஸ்மாஉல் ஹுஸ்னா (அழகிய திருநாமங்கள்) என்ற நூலின் விளக்கவுரையில் குறிப்பிடுவதாவது:

நம்முடைய ஆசிரியர் அபூஹாமித் (கஸ்ஸாலி) ஒரு பிரம்மாண்டமான, படுமோசமான கருத்தைக் கூறுகின்றார். அந்தக் கருத்துக்கு எதிராக உலமாக்கள் தங்களது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறார்கள்.

“தொழில்நுட்பத்திலும் நுணுக்கத்திலும் அல்லாஹ்வின் ஆற்றலில் இந்த உலகத்தைத் தவிர அழகான, அருமையான வேறொரு உலகம் இருக்க முடியாது. அவனது ஆற்றலில் இதைவிட வேறொரு அழகான, அருமையான வேறொரு உலகம் இருந்து, ஒரு வாதத்திற்கு அதை அவன் படைக்கவில்லை என்றால் அது அவனது தயாள, தாராள கொடைத்தன்மையை முடிவு கட்டுவதாக ஆகிவிடும். இது அசாத்தியமாகும்”

இதுதான் நம்முடைய ஆசிரியர் கஸ்ஸாலியின் கருத்தாகும்.

இவ்வாறு அபூபக்ர் பின் அரபீ அவர்கள் கூறிவிட்டு அதற்குப் பின்வரும் பதிலையும் அளிக்கின்றார்.

அல்லாஹ்வின் ஆற்றல் என்பது அனைத்தையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கின்ற ஓர் ஆற்றலாகும். உருவானவற்றுக்கும் அவனது ஆற்றலுக்கும் சம்பந்தமும் தொடர்பும் உண்டு. ஏற்கனவே உருவான பொருட்கள் மட்டுமே உருவானவை. இனி எதுவும் உருவாகாது என்று எல்லையோ வரம்போ அல்லாஹ்வின் ஆற்றலுக்குக் கிடையாது என்ற கொள்கையிலிருந்து கஸ்ஸாலி விலகி, தூரமாகிப் போய்விட்டார்.

அவனது ஆற்றல், உருவான இந்த உலகத்தில் மட்டும் தான் அடங்கியிருக்கின்றது. ஏனையவற்றில் இல்லை என்ற கொள்கையில் கஸ்ஸாலி உள்ளார். இது தத்துவவியலாளர்களின் தறிகெட்ட கொள்கையாகும். உண்மைகளைத் தலைகீழாகப் புரட்டிப் போடுவது தத்துவவியலாளர்களின் வேலையாகும்.

உதாரணத்திற்கு, உயிருடன் இருக்கின்ற ஒரு பொருளுடன் மட்டும் தான் இறைவனின் தொழில்நுட்பத்தை இந்தக் கொள்கை இணைத்துப் பார்க்கின்றது. தற்போது செயல்படுகின்ற செவி, பார்வைப் புலன்களில் மட்டும் தான் அவனது ஆற்றல் அடங்கியிருப்பதாக இந்தக் கொள்கை நம்புகிறது.

இவர்களின் இந்தக் குருட்டு சிந்தனை, இவர்களது உள்ளங்களில் நல்ல, நியாயமான சிந்தனைக்கு அறவே இடமில்லாமல் ஆக்கிவிட்டது. இது அபத்தமான, ஆபத்தான கருத்து என்பதில் இஸ்லாமிய சமுதாயம் ஒன்றுபட்டிருக்கின்றது.

இறையாற்றலுக்கு எல்லை இல்லை

அல்லாஹ்வின் ஆற்றலால் உருவாகக்கூடியவைகளுக்கு எல்லையே கிடையாது. ஏற்கனவே அல்லாஹ்வின் ஆற்றலால் உருவானதை மட்டுமே அல்லாஹ்வால் உருவாக்க முடியும் என்று நம்புவது இறைநம்பிக்கையல்ல. அவனது ஆற்றலால் எதையும் உருவாக்க முடியும் என்று நம்புவதே நமது நம்பிக்கையாகும். ஏனெனில் அல்லாஹ்வின் ஆற்றல் நடந்தே தீரும் என்ற நம்பிக்கை தான் இதற்குக் காரணமாகும்.

இவ்வாறு கூறுவதுடன் அபூபக்ர் பின் அரபி நிறுத்தவில்லை.

புலி வாலைப் பிடித்த கஸ்ஸாலி

“நம்முடைய ஆசிரியர் அபூஹாமித் (கஸ்ஸாலி) தத்துவவியலாளர்களின் தத்துவவியலை வாயில் விழுங்கி விட்டார். அதை அவர் வாந்தி எடுக்க வேண்டும் என்று நினைக்கின்றார். ஆனால் அது அவரால் முடியவில்லை. அவரது கதை புலி வாலைப் பிடித்த கதையாகிவிட்டது” என்றும் குறிப்பிடுகின்றார்.

படைத்தவன் விவகாரத்திலும் இதுபோன்ற வாசகப் பிரயோகங்களைப் பயன்படுத்துவது தேவையற்ற காரியமாகும் என்று பத்ருத்தீன் ஜர்கஸீ தெரிவிக்கின்றார். மேற்கண்ட இந்தக் கருத்துக்களை ஹாபிழ் தஹபீ அவர்கள் தமது ஸியர் அஃலாமின் நுபலாவில் பதிவு செய்துள்ளார்கள்.

“விதிக்கென்று ரகசியம் உண்டு. அதைப் பரப்பக்கூடாது என்று எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று நம்முடைய ஆசிரியர் கஸ்ஸாலி கூறியுள்ளார். இவ்வாறு கூறிய கருத்துக்களுக்காகவும் அவர் கடுமையான கண்டனத்துக்குள்ளானார். விதிக்கு என்ன ரகசியம் வேண்டிக் கிடக்கின்றது? ஆய்வின் அடிப்படையில் அதை அடைய முடியும் என்றால் கண்டிப்பாக ஆய்வின் மூலம் அடைந்து விடலாம். ஹதீஸ்கள் அடிப்படையில் அதை அடைய முடியும் என்றால் அவ்வாறு அடைந்து விடலாம். ஆனால் இது தொடர்பாக எந்த ஒரு ஹதீசும் நிரூபணம் ஆகவில்லை. ஞானநிலை, இர்பான் என்ற மறைமுக ஞானத்தின் மூலம் அதை அடைய முடியும் என்று கூறுவது வெட்டிப் பேச்சும் வெறும் பேச்சுமாகும். ரகசியத்தைப் பரப்புதல் என்று கஸ்ஸாலி குறிப்பிடுவதன் நோக்கம், நாம் விதி தொடர்பான விஷயத்தில் மூழ்கி அதில் சர்ச்சை செய்யக்கூடாது என்பதற்காகக் கூட இருக்கலாம்” என்றும் அபூபக்ர் பின் அரபி கூறுவதாக ஹாபிழ் தஹபீ அவர்கள் ஸியரில் குறிப்பிடுகின்றார்கள்.

நூலாசிரியர் மக்ராவியின் விமர்சனம்

கஸ்ஸாலியின் மாணவரான அபூபக்ர் பின் அரபியை விட வேறு ஓர் உண்மையாளர் வேண்டுமா? இவர் கஸ்ஸாலியின் மாணவராக இருந்தும் அவரது கொள்கையில் ஏற்பட்ட கோளாறை தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றார். கஸ்ஸாலி தத்துவக் கொள்கை எனும் கூடாரத்தில் குடியிருக்கின்றார். அவரிடமிருந்து பிறந்த கருத்துக்களில் அந்த சித்தாந்தத்தின் பாதிப்பே பிரதிபலிக்கின்றது.

தத்துவக் கொள்கையின் தகிடுதத்தங்களைப் பார்க்க விரும்புவர் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யாவின் தஆருலுல் அக்ல் வன்னக்ல் என்ற நூலைப் புரட்ட வேண்டும். அதில் இப்னு தைமிய்யா அவர்கள் தத்துவவியலாளர்களின் முகமூடிகளைக் கிழித்தெறிந்து அவர்களைத் தெளிவாக அடையாளம் காட்டுகின்றார்.

எது எப்படி இருப்பினும் இங்கு நாம் காண வேண்டிய முக்கியமான விஷயம், அபூபக்ர் பின் அரபி, தனது ஆசிரியரின் கொள்கை முஸ்லிம்களின் சரியான கொள்கைக்கு நேர் முரணாக அமைந்திருக்கின்றது என்று படம்பிடித்துக் காட்டியிருப்பதைத் தான்.

அல்லாஹ்வின் தகுதிக்கும் தரத்திற்கும் ஒவ்வாத விஷயங்களைக் கொண்டு அவனை அறிமுகப்படுத்துகின்றார்.  அல்லாஹ்வின் பண்புகளுக்கும் அவனது பெயர்களுக்கும் வரம்பு கட்டுபவர் அவனது பெயர்களைத் திரித்துக் கூறுபவர் ஆவார். அல்லாஹ்வின் ஆற்றலுக்கும் வரையோ, வரம்போ இல்லை.

தனது படைப்பினத்தைப் பற்றிய விளக்கம் அல்லாஹ்வுக்கு இருக்கின்றது. தனது அருளால் அவர்களை அரவணைத்துக் கொள்கின்றான். அவனது ஞானத்தின்படி படைப்பினங்களைப் புதிதாக உருவாக்கிக் கொள்கின்றான். அடியார்களுக்குரிய ஒரே கடமை, அதை அப்படியே நம்பி அவனது அருட்கொடைகளைப் போற்றிப் பாராட்டுவதாகும்.

அல்லாஹ்வை ஆட்சேபிப்பவர், அவனை விவாதப் பொருளாக்குபவர், அவன் மீது சுயமுடிவுகளைச் சொல்பவர் அல்லாஹ்வை மதிக்கத் தவறியவர் ஆவார்.

நமது விமர்சனம்

கஸ்ஸாலியின் ஆக்கமான இஹ்யாவைப் படிப்பவர், அல்லாஹ்வின் ஆற்றலுக்கு வரம்பு கட்டுகின்ற இந்த வரிகளைக் கட்டாயம் படிப்பார். இந்த வரிகள் கக்குகின்ற நெருப்புப் பொறிகளைக் காணவிடாமல் அந்த வாசகனின் கண்களை கஸ்ஸாலியின் மீது கொண்டுள்ள குரு பக்தியும் குருட்டு பக்தியும் மறைக்கின்றது. அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

அல்லாஹ்வை அவமதிப்பவர்கள்

அல்லாஹ்வின் ஆற்றலுக்கும் வரம்பு கட்டுகின்ற கஸ்ஸாலியின் இந்த அத்துமீறிய போக்கை மேற்கண்ட அறிஞர்கள் மிகக் கடுமையாகக் கண்டிக்கின்றனர். ஆனால் தமிழக ஆலிம்களின் கண்களில் இது தவறாகப்படவில்லை. இதற்குக் காரணம் தமிழக மதரஸாக்களின் கடவுள் கொள்கையே தவறாக அமைந்திருப்பது தான். அல்லாஹ் எங்கிருக்கின்றான் என்று கேட்டால் இந்த அடிப்படைக் கேள்விக்குரிய விளக்கம் கூட மதரஸாக்களில் போதிக்கப்படுவதில்லை.

ஆடு மேய்க்கும் சிறுமியிடம் நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் எங்கிருக்கின்றான்?” என்ற கேட்கின்றார்கள். அதற்கு அந்தச் சிறுமி, “வானத்தில் இருக்கின்றான்என்று பதிலளிக்கின்றாள். நான் யார்? என்று நபியவர்கள் கேட்கிறார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று அவள் பதிலளிக்கின்றாள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவளை விடுதலை செய். ஏனெனில் இவள் இறைநம்பிக்கை கொண்டவள்என்று முஆவியா பின் ஹகம் (ரலி) அவர்களிடம் தெரிவிக்கின்றார்கள்.

நூல்: முஸ்லிம் 537

அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான். (அல்குர்ஆன் 20:5)

அல்லாஹ் அர்ஷில் அமர்ந்திருக்கின்றான் என்று இந்த வசனம் தெரிவிக்கின்றது.

வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும். அல்லது வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கல்மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களா? எனது எச்சரிக்கை எத்தகையது என்பதை அப்போது அறிந்து கொள்வீர்கள்.

அல்குர்ஆன் 67:16, 17

அல்லாஹ் வானத்தில் இருக்கின்றான் என்று இந்த வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. இந்த அடிப்படைக் கடவுள் கொள்கை தெரிந்திருந்தால் மன்சூர் ஹல்லாஜ் போன்ற வழிகேடர்களைத் தமிழக ஆலிம்கள் தூக்கிப் பிடிக்கமாட்டார்கள்.

தமிழக மதரஸாக்களில் கடவுள் கொள்கை என்பது அத்வைதக் கொள்கையாகத் தான் அமைந்திருக்கின்றது. ராத்திபத்துல் ஜலாலிய்யா என்ற பெயரில் வெள்ளிக்கிழமை இரவுகளில் திக்ரு நடைபெறும். அந்த திக்ரில்,

லா மவ்ஜூத் இல்லல்லாஹ் – காணும் பொருள் எல்லாம் கடவுள் தான்

அல்லாஹ் மவ்ஜூதுன் பில் உஜூத் – அல்லாஹ் படைப்பினத்தில் காட்சியளிக்கின்றான்

இதுபோன்ற திக்ருகள் இடம்பெறுகின்றன. இந்த அபத்தங்கள் நிறைந்த ராத்திபுகளை ஆலிம்களே முன்னின்று நடத்துகின்றனர் என்பது இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயமாகும்.

மக்கா இணை வைப்பாளர்களையும் இறை மறுப்பாளர்களையும் நோக்கி அல்லாஹ் கூறும் போது, அல்லாஹ்வை மதிக்காதவர்கள் என்று குற்றம் சாட்டுகின்றான்.

அவர்கள் அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்த வேண்டிய அளவுக்கு கண்ணியப்படுத்தவில்லை. அல்லாஹ் வலிமை மிக்கவன்; மிகைத்தவன்;

அல்குர்ஆன் 22:74

இதற்குக் காரணம், அல்லாஹ்வுக்குரிய ஆற்றலை அப்படியே அவனது அடியார்களுக்குத் தாரளமாக, சர்வ சாதாரணமாக தூக்கிக் கொடுத்தார்கள்.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். “அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்என்றும் கூறுகின்றனர். “வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணைகற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 10:18)

அவர்கள் அல்லாஹ்விடம் பரிந்துரைப்பார்கள் என்று கூறினார்கள்.

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் “அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 39:3)

அல்லாஹ்விடம் நெருக்கி வைப்பார்கள் என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் எச்சரிக்கை

இதனால் தான் அல்லாஹ் அவர்களைப் பற்றிக் கூறும் போது, அவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய விதத்தில் மதிக்கவில்லை என்று குறிப்பிடுகின்றான். இந்தக் குற்றச்சாட்டு தமிழக ஆலிம்களுக்கு அப்படியே பொருந்திப் போகின்றது.

முஹம்மது (ஸல்) அவர்கள், முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, காஜா முஈனுத்தீன், ஷாகுல் ஹமீது ஆகியோரை அழைத்துப் பிரார்த்திப்பதன் மூலம் அவர்கள் உயிரோடிருப்பதாக இந்த ஆலிம்கள் நம்புகிறார்கள்.

எப்போதும் உயிருடன் இருப்பது, செவிமடுப்பது, பதிலளிப்பது, நிவாரணம் அளிப்பது அல்லாஹ்வின் அளப்பெரிய தனியாற்றல். அந்த ஆற்றலை இந்த நல்லடியார்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கின்றனர். இது அல்லாஹ்வை மதிக்க வேண்டிய விதத்தில் மதிக்காத தன்மையாகும். இப்படி அல்லாஹ்வை உரிய விதத்தில் மதிக்காத இந்த ஆலிம்களிடம் கஸ்ஸாலியின் அத்துமீறல் எப்படித் தவறாகத் தெரியும்? அல்லாஹ்வின் ஆற்றலை ஒரு குறுகிய வரம்புக்குள் கொண்டு வருகின்ற கஸ்ஸாலியை இந்த ஆலிம்கள் எப்படி குற்றம் காண முடியும்? கண்டு கொள்ளவே மாட்டார்கள்; கண்டிக்கவும் மாட்டார்கள்.

ஆனால் இவர்கள் திருந்தவில்லை என்றால் கஸ்ஸாலியையும் அவரது கோட்பாட்டை நம்புபவர்களையும் அல்லாஹ் விட்டுவைக்கப் போவதில்லை.

அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 7:180)

இந்த எச்சரிக்கையை இதன் மூலம் கஸ்ஸாலியின் பக்த கோடிகளுக்குச் சமர்ப்பிக்கின்றோம்.

இஹ்யா பற்றி இமாம் தஹபீ

இஹ்யா…. அது ஒட்டுமொத்தமான பொய்யான ஹதீஸ்களின் ஒதுங்குமிடமாகும். வழிகெட்ட சூபிகள், தத்துவ ஞானிகளின் பாட்டைகளில் அமைந்த துறவுநிலை, அவர்களின் தடங்கள், அவர்களின் செயல்பாடுகள் போன்றவை இஹ்யாவில் இடம்பெறவில்லை என்றால் இஹ்யாவில் அதிக நன்மைகள் உள்ளன என்று கூறவிடலாம். நாம் அல்லாஹ்விடம் பயனுள்ள கல்வியைக் கேட்போமாக! பயனுள்ள கல்வி என்றால் என்ன?

அல்லாஹ் குர்ஆனில் அருளி, அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல், செயல் மூலம் விளக்கமளித்த கல்வி தான். அல்லாஹ் அருளாததை, அவனது தூதர் (ஸல்) தடை செய்து விட்டார்கள். எனது வழிமுறையை வெறுப்பவர் என்னைச் சார்ந்தவனல்ல என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள். (புகாரி 5063)

என்னருமைச் சகோதரனே! குர்ஆனின் சிந்தனையில் நீ ஈடுபடு! புகாரி, முஸ்லிம், நஸயீ, இமாம் நவவீயின் ரியாளுஸ்ஸாலிஹீன், அவர் இயற்றியிருக்கும் திக்ருகளை ஆழ்ந்து படி! நீ வெற்றி பெறுவாய். தத்துவஞானிகளின் பாட்டை, ஆன்மீக பயிற்சியாளர்கள், பாதிரிகளின் பாதையில் பயணம் செய்யாதே என்று உன்னை நான் எச்சரிக்கிறேன். தனிமை தவம் புரியும் தற்குறிகளின் தறிகெட்ட போதனைகளைச் செவிமடுக்காதே என்று உன்னை நான் எச்சரிக்கிறேன். நன்மைகள் அனைத்தும் தூய, நேரிய மார்க்கத்தைப் பின்பற்றுவதில் தான் அடங்கியிருக்கின்றது.அல்லாஹ்வின் ரட்சிப்பைக் கோருவோமாக! யா அல்லாஹ்! நேரிய பாதையை எங்களுக்குக் காட்டுவாயாக!

நூலாசிரியர் மக்ராவி கூறுகின்றார்:

இஹ்யாவைப் பற்றிய தனது கருத்துக்களை இமாம் தஹபீ அவர்கள் தெளிவாகப் பதிவு செய்துவிட்டார்கள். அதில் உள்ள வழிகேடுகளை தோலுரித்துக் காட்டிவிட்டார்கள். பொய்யான ஹதீஸ்களின் பொதிகளைச் சுமக்கின்ற ஒரு சரக்கு வண்டியாக இஹ்யா அமைந்திருக்கின்றது. இது வழிகேடுகளில் மிகப்பெரிய வழிகேடாகும். ஹதீஸ் கலை அறிஞர்களிடத்தில் இது பாரதூரமான பாவமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய சுன்னத் (நடைமுறை) மீது பொங்கி எழுகின்ற ரோஷ உணர்வு ஒவ்வொரு முஸ்லிமிடமும் குடிகொண்டிருக்கின்றது. இதை இமாம் தஹபீ அவர்கள் தட்டி எழுப்புகின்றார்கள்.

அத்துடன் குர்ஆன், ஹதீஸை மட்டுமே வழிகாட்டு நெறியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இமாம் தஹபீ அறிவுரை வழங்குகின்றார்கள். சூபிகளின், தத்துவ ஞானிகளின் போதை நிறைந்த பாதையைப் புறந்தள்ளச் சொல்கிறார்கள்.

இஹ்யாவிலிருந்து பொய்யான ஹதீஸ்கள், தத்துவ ஞானிகளின் புனையல்கள், ஆத்ம ஞானிகளின் அஞ்ஞானப் பாட்டைகள் அத்தனையும் நீக்கி விட்டுப் பார்த்தால் அது வெள்ளை வெளேரென்று வெறுந்தாளாக மட்டுமே காட்சியளிக்கும். ஒரு கருப்பு எழுத்தைக் கூட காணமுடியாது. இதுதான் இந்த இஹ்யாவின் வண்டவாளம். இந்த வண்டவாளம் இன்ஷா அல்லாஹ் இனியும் தொடரும்.