குர்ஆன் ஓதாதே! கூறுகிறார் கஸ்ஸாலி!

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?                தொடர்: 10

குர்ஆன் ஓதாதே! கூறுகிறார் கஸ்ஸாலி!

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

கஸ்ஸாலியின் இஹ்யாவைப் பற்றியும், அவரது நச்சுக் கருத்துக்களைப் பற்றிய அறிஞர்களின் மேற்கோள்கள் பற்றியும் பல்வேறு நூற்களில் இடம்பெற்றுள்ள கருத்துக்களை நாம் இதுவரை கண்டோம்.

“குர்ஆன் ஓதுவதிலும், ஹதீஸை எழுதுவதிலும் ஈடுபடக்கூடாது; ஏனென்றால் ஞானம் என்ற சட்டையை அணிவதை விட்டும் குர்ஆன், ஹதீஸின் ஈடுபாடு நம்மைத் தடுத்துவிடும்’ என்று கஸ்ஸாலி கூறியதாக காழி அப்துல்லாஹ் என்பார் கூறியதைக் கடந்த இதழ்களில் கண்டோம். அவர் கூறுகின்ற இந்தச் செய்தியை நேரடியாக இஹ்யாவிலிருந்து பார்ப்போம்.

யார் அல்லாஹ்வுக்காக ஆகி விட்டாரோ அவருக்காக அல்லாஹ்வும் ஆகிவிட்டான். இந்த ஞானப்பாதையை அடையும் முயற்சியில் ஈடுபடுபவர், உலகத் தொடர்புகள் அனைத்தையும் முழுமையாக அறுத்துவிட வேண்டும்.  குடும்பம், குழந்தை குட்டிகள், காசு பணம், நாடு, உலக அறிவு, ஆட்சியதிகாரம், அந்தஸ்து அனைத்தை விட்டும் தனது நாட்டத்தை, சிந்தனையைத் துண்டித்து விடவேண்டும்.

ஒரு பொருள் இருப்பதும் அது இல்லாமல் ஆவதும் சமம் என்ற நிலைக்கு அவனது உள்ளம் மாறிவிட வேண்டும். பிறகு கடமையான தொழுகை, வழமையான சுன்னத் தொழுகைகளுடன் மட்டும் நிறுத்திக் கொண்டு அவன் தனியாக ஒரு மூலையில் அமர்ந்துவிட வேண்டும். ஒட்டுமொத்த ஊக்கத்துடன் வெறும் வெள்ளை உள்ளத்துடன் ஓரிடத்தில் அவன் உட்கார வேண்டும்.

குர்ஆனை ஓதுவது, அதன் விளக்கத்தைப் பற்றி சிந்திப்பதன் மூலம், ஹதீஸ் அல்லது வேறு விஷயங்களை எழுதுவதன் மூலம் தன்னுடைய சிந்தனையை அவன் கலைத்துவிடக்கூடாது.

மாறாக, அல்லாஹ்வைத் தவிர அவனுடைய உள்ளத்தில் வேறெந்த சிந்தனையும் தோன்றாதவாறு அவன் முயற்சி செய்ய வேண்டும்.

உள்ளம் ஒன்றிய வண்ணம் தொடர்ந்து அல்லாஹ், அல்லாஹ் என்று தனது நாவினால் உருப்போட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

ஆடிக் கொண்டிருக்கும் நாவு தான் இறுதியில், அசைவின்றி அப்படியே நிற்க வேண்டும். ஆனால் அல்லாஹ் என்ற வார்த்தை மட்டும் ஓடிக் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இவை தான் கஸ்ஸாலி இஹ்யாவில் உதிர்க்கின்ற அஞ்ஞான முத்துக்களாகும்; ஆபத்தான அபத்தங்களாகும். கஸ்ஸாலியின் இந்த அபத்தங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

  1. தனிமை தவம்

கஸ்ஸாலி தெரிவிப்பது போன்று குடும்பம், குட்டிகள் அத்தனையும் மறந்துவிட்டு ஒருவர் தனியாக உட்கார முடியுமா? அப்படி ஒரு வழிமுறை மார்க்கத்தில் இருக்கின்றதா? என்றால் நிச்சயமாக இல்லை. அப்படியானால் இது கஸ்ஸாலி மார்க்கத்தில் புகுத்துகின்ற பித்அத் ஆகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 2697

அதே சமயம், தனிமையில் உட்கார்ந்து ஒருவர் அழுது கண்ணீர் வடித்து, அல்லாஹ்வை நினைவுகூர்வதை மார்க்கம் வெகுவாகப் பாராட்டி வரவேற்கின்றது. அத்தகையவர் மறுமையில் அர்ஷின் நிழலில் அரவணைப்பைப் பெறுகின்றார் என புகாரி, முஸ்லிமில் இடம்பெறும் ஹதீஸ் தெளிவாகத் தெரிவிக்கின்றது.

கஸ்ஸாலி குறிப்பிடுகின்ற தனிமை தவம் இந்த வகையைச் சார்ந்தது அல்ல. மாறாக, அது வானுல வஹீயின் வாசலைத் திறந்துவிடுகின்ற வகையைச் சார்ந்ததாகும். நபிமார்கள் இனியும் வருவார்கள் என்ற நாசக்கருத்தை நிலைநாட்டுகின்ற வாதமாகும்.

அத்துடன் இப்படி அனைத்தையும் மறந்துவிட்டு வெறும் தியானத்தில் ஈடுபட முடியாது. நபி (ஸல்) அவர்களுக்கே இது சாத்தியமில்லை.

உக்பா பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் அஸ்ர் தொழுதேன். அவர்கள் சலாம் கொடுத்ததும் வேகமாக எழுந்து தமது துணைவியின் இல்லத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பினார்கள். தமது விரைவைக் கண்டு மக்கள் வியப்படைவதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் “நான் தொழுது கொண்டிருக்கும்போது எங்களிடம் இருந்த தங்கக்கட்டி ஒன்று நினைவுக்கு வந்தது. அது எங்களிடம் ஒரு மாலைப்பொழுதோ, ஓர் இரவுப் பொழுதோ இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே அதைப் பகிர்ந்து வழங்குமாறு கட்டளையிட்டேன்என விளக்கினார்கள்.

நூல்: புகாரி 1221

இந்த ஹதீஸில், நபியவர்கள் தொழுகையில் இருக்கும் போது வீட்டில் தங்கக் கட்டி இருப்பது நினைவுக்கு வந்ததாகக் கூறுகின்றார்கள். அல்லாஹ்வின் தூதருக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களுக்கு இதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் எழுத்தர்களில் ஒருவரான ஹன்ழலா பின் அர்ரபீஉ அல்உசைதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, “ஹன்ழலா, எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “ஹன்ழலா நயவஞ்சகனாகி விட்டான்என்று சொன்னேன். அதற்கு “அல்லாஹ் தூயவன்; என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கருகில் இருக்கும்போது அவர்கள் சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றி நாம் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் புறப்பட்டு (வீட்டுக்கு) வந்ததும் துணைவியருடனும் குழந்தை குட்டிகளுடனும் கலந்துறவாடுகிறோம்; பிழைப்புகளில் ஈடுபட்டுவிடுகிறோம். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னவற்றில்) அதிகமானவற்றை மறந்துவிடுகிறோம்என்று சொன்னேன்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இதே நிலையை நாமும் சந்திக்கிறோம்என்று கூறினார்கள். பிறகு நானும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! ஹன்ழலா நயவஞ்சனாகிவிட்டான்என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்ன அது?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் அருகிலிருக்கும்போது தாங்கள் எங்களுக்கு நரகத்தையும் சொர்க்கத்தையும் நாங்கள் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறீர்கள். நாங்கள் உங்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றதும் துணைவியருடனும் குழந்தை குட்டிகளுடனும் கலந்துறவாடுகிறோம்; பிழைப்புகளில் ஈடுபட்டுவிடுகிறோம். அதிகமானவற்றை மறந்துவிடுகிறோம்என்று சொன்னேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் என்னிடம் இருக்கும் போதுள்ள நிலையிலும் இறை எண்ணத்திலும் எப்போதும் இருந்தால், உங்கள் படுக்கைகளிலும் நீங்கள் செல்லும் வழிகளிலும் வானவர்கள் (வந்து) உங்களுடன் கை குலுக்கியிருப்பார்கள். மாறாக, ஹன்ழலா! (இப்படிச்) சில நேரம் (அப்படிச்) சில நேரம்என்று மூன்று முறை கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 4937

தன் மனைவி, மக்கள் அனைத்தையும் மறந்துவிட்டு தவம் புரிவது, தியானமிருப்பது என்பதெல்லாம் நடைமுறை சாத்தியமற்றது, மார்க்கத்திற்கு முரணானது என்பதை இதன் மூலம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

  1. உபரியான தொழுகை வேண்டாம்?

தனித்து தவமிருத்தல் என்ற பிறமதக் கலாச்சாரத்தைத் திணிக்கும் கஸ்ஸாலி, தொழுகையே தியானம் என்பதை வசதியாக மறந்து விடுகின்றார். தொழுகையை விட உயர்ந்த வணக்கம், தியானம் என்னவாக இருக்க முடியும்? உண்மையில் தொழுகை என்பது ஓர் அடியான் அல்லாஹ்விடம் நடத்துகின்ற ஓர் உரையாடலாகும்.

தொழுகையி(ல் ஓதப்படும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தி)னை எனக்கும் என் அடியானுக்குமிடையே (துதித்தல், பிரார்த்தித்தல் ஆகிய)  இரு பகுதிகளாகப் பிரித்துள்ளேன். என் அடியான் கேட்டது அவனுக்குக் கிடைக்கும். அடியான் “அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்‘ (அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், “என் அடியான் என்னைப் புகழ்ந்துவிட்டான்என்று கூறுவான். அடியான் “அர்ரஹ்மானிர் ரஹீம்

(அவன் அளவிலா அருளாளன்; நிகரிலா அன்புடையோன்) என்று சொன்னால் மிக்க மேலான அல்லாஹ், “என் அடியான் என்னைத் துதித்துவிட்டான்என்று கூறுவான். அடியான் “மாலிக்கி யவ்மித்தீன்‘ (தீர்ப்பு நாளின் அதிபதி) என்று சொன்னால், அல்லாஹ், “என் அடியான் என்னைக் கண்ணியப்படுத்திவிட்டான்என்று கூறுவான்.

மேலும், அடியான் “இய்யாக்க நஅபுது வ இய்யாக்க நஸ்தஈன்‘ (உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்) என்று சொன்னால்அல்லாஹ், “இது எனக்கும் என் அடியானுக்கும் இடையே உள்ளது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்என்று கூறுவான். அடியான் “இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம். ஸிராத் தல்லதீன அன்அம்த்த அலைஹிம், ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன்‘ (எங்களுக்கு நீ நேரான வழியைக் காட்டுவாயாக. அவ்வழி உன்னுடைய அருளைப் பெற்றவர்களின் வழி. உன்னுடைய கோபத்திற்கு ஆளானவர்கள் வழியுமல்ல; வழிதவறியோரின் வழியுமல்ல) என்று சொன்னால், அல்லாஹ் “இது என் அடியானுக்கு உரியது. என் அடியானுக்கு அவன் கேட்டது கிடைக்கும்‘  என்று கூறுவான்.

நூல்: முஸ்லிம் 395

இறையிடம் இரகசியம்

கிப்லா திசையில் (காறி உமிழப்பட்டிருந்த) சளியை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். இது அவர்களுக்கு மன வருத்தத்தை அளித்தது. அதன் பிரதிபலிப்பு அவர்களின் முகத்திலும் காணப்பட்டது. உடனே அவர்கள் எழுந்து தமது கையால் அதைச் சுரண்டி (சுத்தப்படுத்தி)னார்கள். பிறகு “உங்களில் ஒருவர் தொழுகையில் நின்றுகொண்டிருக்கும்போது “அவர் தம் இறைவனுடன் அந்தரமாக உரையாடுகிறார்அல்லது “அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவருடைய இறைவன் இருக்கின்றான்‘. ஆகவே, எவரும் தமது கிப்லா திசை நோக்கிக் கண்டிப்பாக உமிழ வேண்டாம். தமது இடப்புறமோ அல்லது தமது பாதங்களுக்கு அடியிலோ உமிழ்ந்து கொள்ளட்டும்என்று கூறிவிட்டுப் பிறகு, தமது மேலங்கியின் ஓர் ஓரத்தை எடுத்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் கசக்கிவிட்டு, “அல்லது இவ்வாறு அவர் செய்துகொள்ளட்டும்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 405

பிரார்த்தனை என்பது ஓர் அடியான் தன்னுடைய இறைவனிடம் நடத்துகின்ற ரகசிய உரையாடலாகும். இதைவிட ஒருவன் இறைநெருக்கத்தைப் பெறவேண்டுமானால் அவன் அதிகமதிகம் தொழ வேண்டும். கடமையான தொழுகைகள், அதற்கு முன்பின் அமைந்திருக்கின்ற வழமையான தொழுகைகள், அவற்றைத் தாண்டி உபரியான தொழுகைகள் மூலம் இறைநெருக்கத்தைப் பெற வேண்டும். இதை நாமாகச் சொல்லவில்லை. நபி (ஸல்) அவர்களே சொல்கின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறினான்: எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதி யில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்துவிடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறைநம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),  நூல்: புகாரி 6502

இந்த ஹதீஸ் உபரியான தொழுகை மூலம் தான் ஒருவன் உயர்வான அல்லாஹ்வை அடைய முடியும் என்று அல்லாஹ்வே கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் கஸ்ஸாலியோ இந்தத் தொழுகைகளை விட்டும் தனிமையில் உட்கார்ந்து அல்லாஹ், அல்லாஹ் என்று அழைக்க வேண்டும் என்ற தனித் தவத்தை, அந்நிய மதக் கலாச்சாரத்தை இஸ்லாத்திற்குள் புகுத்துகின்றார்.

  1. சிந்தனையைக் குலைக்கும் குர்ஆன்?

எல்லாவற்றையும் தாண்டி குர்ஆன் ஹதீஸைப் படிப்பது பற்றி கஸ்ஸாலி சொல்வது தான் மிகவும் கொடூரமானது. குர்ஆன் ஓதவேண்டாம், குர்ஆனுடைய விளக்கவுரையை சிந்திக்க வேண்டாம், ஏனென்றால் பக்தனுடைய சிந்தனையைக் குலைத்துவிடும் என்று கூறுகிறார். இங்கு தான் கஸ்ஸாலி தனது வேடத்தைக் கலைக்கின்றார்.

கியாமத் நாளில் முழுமையாகத் தமது சுமைகளையும், அறிவின்றி யாரை இவர்கள் வழிகெடுத்தார்களோ அவர்களின் சுமைகளையும் சுமப்பதற்காக (இவ்வாறு கூறுகின்றனர்) கவனத்தில் கொள்க! அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 16:25)

அவர் திருந்தியிருந்தால் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பிவிடுவார். இல்லையேல் அல்லாஹ் திருமறையில் கூறுவது போன்று இதற்கான தண்டனையையும் இதைப் பின்பற்றி குர்ஆனை விட்டு விலகி ஓடியோரின் தண்டனையையும் சேர்த்தே அவர் சுமக்க வேண்டும்.

தமிழக மதரஸாக்களை கஸ்ஸாலியின் ரசிகர் மன்றங்கள் என்று தான் கூற வேண்டும். குர்ஆன், ஹதீஸைப் பற்றி யாரேனும் இகழ்வாகப் பேசிவிட்டால் கூட சகித்துக் கொள்வார்கள். ஆனால் கஸ்ஸாலியைப் பற்றிப் பேசிவிட்டால் போதும். கொதித்து, கொந்தளித்து விடுவார்கள். அந்த அளவுக்கு கஸ்ஸாலியின் போதை அவர்களது தலையில் அளவுக்கு மீறி ஏறியிருக்கின்றது. கஸ்ஸாலியின் மீதான காதல் அவர்களது உள்ளங்களைக் கொள்ளை கொண்டிருக்கின்றது.

குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வார்த்தைகள். அவை நிச்சயமாக அல்லாஹ்வின் நெருக்கத்தையும் அன்பையும் பெற்றுத் தருகின்ற அற்புத, அருள்மிகு வேத வரிகளாகும். இது சிந்தனையைக் கெடுக்கும், மன ஓர்மையைக் குலைக்கும், அமைதியைக் கலைக்கும் என்று சொல்கின்றார் என்றால் இஹ்யா என்ற நூலை எரிக்காமல் விடுவது அநியாயம் அல்லவா?

குர்ஆனைக் கண்டு யார் வெருண்டு ஓடுவார்கள்?

இந்த அறிவுரையைப் புறக்கணிக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் சிங்கத்தைக் கண்டு மிரண்டு வெருண்டோடும் கழுதைகளைப் போல் உள்ளனர். (அல்குர்ஆன் 74:51)

கஸ்ஸாலி இந்த ரகத்தைச் சார்ந்தவராகத் தானே இருக்க முடியும்?

உண்மையில் குர்ஆன் இறை சிந்தனையையும், இறை நேசத்தையும் அதிகரிக்கச் செய்யும் ஓர் அற்புத ஆயுதம். அல்லாஹ்விடம் ஓர் அடியான் உரையாடுகின்ற ஊடகம். அது சிந்தனையைக் குலைக்கின்றது என்றால் கோளாறு குர்ஆனில் இல்லை. இவர் கொண்டு வந்த சித்தாந்தத்தில் தான் கோளாறு இருக்கின்றது. இறை நினைவு என்ற பெயரில் இவர் சொல்கின்ற தவம், தியானம், தனிமை அனைத்துமே பிற மதத்தின் தத்துவங்கள் என்பதை இதிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

அல்லாஹ் திருக்குர்ஆனை ஓதுமாறு பல்வேறு இடங்களில் உத்தரவிடுகின்றான். குர்ஆனில் முதன்முதலில் இறங்கிய வசனமே “ஓதுக’ என்பது தான்.

(முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவன் மனிதனை கருவுற்ற சினைமுட்டையிலிருந்து படைத்தான். ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன். அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான்.

அல்குர்ஆன் 96:1-4

“(முஹம்மதே!) நீரும், உம்முடன் உள்ள ஒரு தொகையினரும் இரவில் மூன்றில் இரு பகுதிக்கு நெருக்கமாகவும், இரவில் பாதியும், இரவில் மூன்றில் ஒரு பகுதியும் நின்று வணங்குகின்றீர்கள்என்பதை உமது இறைவன் அறிவான். அல்லாஹ்வே இரவையும், பகலையும் அளவுடன் அமைத்துள்ளான். நீங்கள் அதைச் சரியாகக் கணிக்க மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிவான். எனவே அவன் உங்களை மன்னித்தான். ஆகவே குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள். உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்வோரும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் உருவாவார்கள் என்பதை அவன் அறிந்து வைத்துள்ளான். எனவே அதில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்!

அல்குர்ஆன் 73:20

இந்த வசனத்திலும் குர்ஆன் ஓதுமாறு இறைவன் கட்டளை யிடுகின்றான்.

குர்ஆன் ஓதுவதன் மகிமை

குர்ஆன் ஓதுவதற்கு நபி (ஸல்) அவர்கள் அதிகமான சிறப்புக்களையும் கூறுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று. (மற்ற நற்செயல்கள் செய்து கொண்டு) குர்ஆன் ஓதாமலிருப்பவர், பேரீச்சம் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று; (ஆனால்) அதற்கு வாசனை கிடையாது. தீயவனாகவும் இருந்து கொண்டு, குர்ஆனையும் ஓதிவருகின்றவனின் நிலையானது, துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் வாசனை நன்று; சுவையோ கசப்பு. தீமையும் செய்துகொண்டு, குர்ஆனையும் ஓதாமலிருப்பவனின் நிலையானது, குமட்டிக்காயின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் சுவையும் கசப்பு; அதற்கு வாசனையும் கிடையாது.

அறிவிப்பவர்: அபூமூசா அல்அஷ்அரீ (ரலி),  நூல்: புகாரி 5020

மலக்குகளின் நெருக்கம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை மனனமிட்டு(ச் சிரமமின்றி) ஓதிவருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும்) சிரமத்துடன் தொடர்ந்து ஓதி வருகின்றவருக்கு இரு மடங்கு நன்மைகள் உண்டு.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),  நூல்: புகாரி 4937, முஸ்லிம் 1329

குர்ஆன் ஓதுவதற்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வளவு சிறப்புகளைக் குறிப்பிடுகின்றார்கள். இதைத் தான் கஸ்ஸாலி ஓதக்கூடாது என்று தடுக்கின்றார். இத்தோடு அவர் நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை. குர்ஆனைப் பற்றி சிந்திக்கவும் கூடாது என்று சொல்கிறார் கஸ்ஸாலி!”

ஆனால் வல்ல அல்லாஹ்வோ குர்ஆனைச் சிந்திக்க வேண்டும் என்று ஏராளமான இடங்களில் கட்டளையிடுகின்றான். உதாரணத்திற்கு இந்த ஒரு வசனத்தைக் காட்டியுள்ளோம்.

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 4:82)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக் கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக் கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள் மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக் கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவுகூருகிறான். அறச் செயல்களில் பின்தங்கிவிட்ட ஒருவரைக் குலச் சிறப்பு முன்னுக்குக் கொண்டு வந்துவிடுவதில்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 4867

இவை அனைத்தும் உணர்த்துவது ஒன்றே ஒன்று தான். தொழுகையைத் தவிர மற்ற திக்ருகளை எடுத்துக் கொண்டால் குர்ஆன் ஓதுதல் தான் அதில் மிகச் சிறப்பான வணக்கமாகும்.

நபியவர்களின் இந்தக் கட்டளைக்கு மாற்றமாக, கஸ்ஸாலி குர்ஆன் ஓதுவதைத் தடை செய்கின்றார். இந்தக் கருத்தைத் தாங்கிய இஹ்யா தான் இன்றைக்கு மதரஸாக்களில் புனித வேதமாகப் போதிக்கப்படுகின்றது. குர்ஆன், சிந்தனையைக் குலைக்கும் என்று குருட்டு வாதம் பேசுகின்ற கஸ்ஸாலியின் நூலான இஹ்யா, கொளுத்தப்படுவதற்கு நூற்றுக்கு நூறு தகுதியான நூல் என்பதை இதன்மூலம் உணர்ந்து கொள்ளலாம்.