உடலை வருத்தும் நேர்ச்சைகள்

உடலை வருத்தும் நேர்ச்சைகள்

மக்கள் தங்களுக்கு ஏதேனும் ஒரு காரியம் நிறைவேற வேண்டுமானால் அதற்காக நேர்ச்சை செய்வர். அலகு குத்துதல், தீச்சட்டி கையில் ஏந்துதல், காலில் செருப்பில்லாமல் ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்து கோயிலுக்குச் செல்லுதல், கோயிலைச் சுற்றி அங்கப் பிரதட்சிணம் செய்தல் என்று தங்களைத் தாங்களே வருத்திக் கொள்கின்ற நேர்ச்சைகளை செய்து வருகின்றனர்.

பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு விதமான நேர்ச்சைகளைச் செய்வதை நாம் காண்கிறோம். இது போன்று கடுமையான நேர்ச்சைகளைத் தான் கடவுள் ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையும் மக்களிடம் உள்ளது. அதனால் தான் இவ்வாறு தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ளும் நேர்ச்சைகளைச் செய்து, அதை நிறைவேற்றவும் செய்கின்றனர்.

மனிதர்களிடம் உள்ள இந்த இயற்கையான உணர்வுகளைப் புரிந்த இயற்கை மார்க்கமான இஸ்லாம் மார்க்கம், இந்த நேர்ச்சை விஷயத்திலும் சரியான ஒரு நெறிமுறையை வழங்குகின்றது.

பெற்ற பிள்ளையைப் பலியிடுவதாக நேர்ச்சை செய்து நரபலி கொடுக்கும் கொடுமைகள் நமது நாட்டில் பரவலாக நடைபெறுவதைப் பார்க்கிறோம். இது போன்று பாவமான காரியங்களில் நேர்ச்சை செய்வதை இஸ்லாம் தடை செய்கிறது. அப்படியே நேர்ச்சை செய்தாலும் அதை நிறைவேற்றக் கூடாது என்று கட்டளையிடுகிறது.

“அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் விஷயமாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்குக் கட்டுப்படட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ச்சை செய்தால் அவனுக்கு மாறு செய்யக் கூடாது” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 6696, 6700

அதே போல் தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ளும் நேர்ச்சைகளையும் மார்க்கம் தடை செய்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்கள் மத்தியில் ஒரு நாள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் பற்றி விசாரித்தனர். “அவர் பெயர் அபூ இஸ்ராயீல். அவர் உட்காராமல் நின்று கொண்டிருப்பதாகவும், வெயி-ல் நிற்பதாகவும், பேசுவதில்லை எனவும், நோன்பு நோற்பதாகவும் நேர்ச்சை செய்துள்ளார்” என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அவரைப் பேசுமாறும், நிழலுக்கு வருமாறும், உட்காருமாறும் நோன்பை (மட்டும்) முழுமைப்படுத்துமாறும் அவருக்குக் கூறுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 6704

“இன்ன காரியம் எனக்கு நிறைவேறினால் நான் ஒற்றைக் காலில் நிற்பேன்; தரையில் புரளுவேன்; செருப்பணியாமல் கொளுத்தும் வெயி-ல் நடப்பேன்” என்றெல்லாம் சிலர் நேர்ச்சை செய்கின்றனர்.

இப்படி தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்ளும் எந்தக் காரியத்தையும் நேர்ச்சை செய்யக் கூடாது. இதை மேற்கண்ட ஹதீஸி-ருந்தும் அறியலாம். மேலும் பல சான்றுகளும் உள்ளன.

ஒரு முதியவர் தனது இரு மகன்கள் தாங்கிக் கொள்ள நடந்து செல்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்தனர். “இவருக்கு என்ன நேர்ந்தது?” என்று விசாரித்தனர். “நடந்தே செல்வதாக இவர் நேர்ச்சை செய்து விட்டார்” என்று நபித்தோழர்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அந்த மனிதர் தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது” என்று கூறிவிட்டு வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு அவருக்குக் கட்டளையிட்டனர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 1865, 6701

எனவே நேர்ச்சையின் பெயரால் தன்னைத் தானே வேதனைப்படுத்திக் கொள்ளக் கூடாது. ஒரு பெண் இது போன்று நேர்ச்சை செய்த போது, அதை நிறைவேற்றுவதற்காக ஒரு எளிமையான தீர்ப்பை நபி (ஸல்) அவர்கள் வழங்குகிறார்கள்.

என் சகோதரி, கஅபா ஆலயத்துக்கு நடந்து செல்வதாக நேர்ச்சை செய்தார். அது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்குமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார். நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இது பற்றி விளக்கம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அவர் (சிறிது தூரம்) நடந்து விட்டு வாகனத்தில் ஏறிக் கொள்ளட்டும்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர்(ரலி)

நூல்: புகாரி 1866

நேர்ச்சை என்ற பெயரில் மடத்தனமான காரியங்களையோ அல்லது மனிதன் தன்னை வருத்திக் கொள்கின்ற காரியங்களையோ செய்வதற்கு இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இது இறைவனுக்குத் தேவையில்லை என்று தெளிவாக இந்த ஹதீஸ்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்கிறார்கள்.

மக்களுக்கு எளிமையையே இஸ்லாம் போதிக்கின்றது. சிரமத்தைப் போதிக்கவில்லை என்ற அடிப்படையைத் தன்னகத்தே கொண்டு மக்களைத் தன் பால் விரைந்து வர அழைப்பு விடுக்கின்றது.