ஓரிறைக் கொள்கையை அறிந்து கொள்வதன் அவசியம்
சென்ற இதழின் தொடர்ச்சி….
இணை கற்பித்தல்
கே.எம். அப்துந் நாஸிர், கடையநல்லூர்
அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது
அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்!
திருக்குர்ஆன் 4:36
“வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு பொறுப்பாளனை ஏற்படுத்திக் கொள்வேனா? அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை” என்று கூறுவீராக! “கட்டுப்பட்டு நடப்போரில் முதலாமவனாக இருக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன்” எனவும் கூறுவீராக! இணை கற்பித்தவராக ஒரு போதும் நீர் ஆகி விடாதீர்!
திருக்குர்ஆன் 6:14
“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, “நீங்கள் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்கக் கூடாது” என்பதே.
திருக்குர்ஆன் 6:151
“மனிதர்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகத்தில் இருந்தால் (எனக்குக் கவலையில்லை.) அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குவோரை வணங்க மாட்டேன். மாறாக உங்களைக் கைப்பற்றவுள்ள அல்லாஹ்வையே வணங்குவேன். நம்பிக்கை கொண்டவனாக இருக்கக் கட்டளையிடப் பட்டுள்ளேன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக! உண்மை வழியில் நின்று இம்மார்க்கத்தை நோக்கி உமது கவனத்தைத் திருப்புவீராக! இணை கற்பிப்பவராக ஆகி விடாதீர்! அல்லாஹ்வையன்றி உமக்குப் பயனும், தீங்கும் தராதவற்றைப் பிரார்த்திக்காதீர்! (அவ்வாறு) செய்தால் நீர் அநீதி இழைத்தவராவீர்!
திருக்குர்ஆன் 10:104-106
“அல்லாஹ்வை நான் வணங்க வேண்டும். அவனுக்கு இணை கற்பிக்கக் கூடாது என்று கட்டளையிடப்பட்டுள்ளேன். அவன் பக்கமே அழைக்கிறேன். மீளுதலும் அவனிடமே உள்ளது” என்று கூறுவீராக!
திருக்குர்ஆன் 13:36
அல்லாஹ்வின் வசனங்கள் உமக்கு அருளப்பட்ட பின்னர் அதை விட்டும் உம்மை (எதுவும்) தடுத்திட வேண்டாம்! உமது இறைவனை நோக்கி அழைப்பீராக! இணை கற்பிப்பவராக நீர் ஆகாதீர்! அல்லாஹ்வுடன் வேறு கடவுளை நீர் பிரார்த்திக்காதீர்! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவனது முகத்தைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழியக் கூடியது. அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
திருக்குர்ஆன் 28:87, 88
“நான் எனது இறைவனையே பிரார்த்திக்கிறேன். அவனுக்கு யாரையும் இணையாக்க மாட்டேன்” என (முஹம்மதே!) கூறுவீராக! நான் உங்களுக்குத் தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்றும் கூறுவீராக!
திருக்குர்ஆன் 72:20
அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் பெரும் பாவம்
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
திருக்குர்ஆன் 4:48
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.
திருக்குர்ஆன் 4:116
லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது “என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்” என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!
திருக்குர்ஆன் 31:13
இணை வைத்தல் என்பது இவ்வுலகில் மனிதன் செய்யும் பாவங்களிலேயே மிகப்பெரும் பாவமாகும். கொலை, கொள்ளை, விபச்சாரம், திருட்டு ஆகிய எந்தப் பாவத்தை எடுத்துக் கொண்டாலும் அவற்றை விட மிகக் கடுமையான பாவமாக இணை வைத்தலைத் தான் நபியவர்கள் கூறியுள்ளார்கள். இதிலிருந்தே இந்த இணை வைத்தலுக்கு எதிரான ஏகத்துவக் கொள்கையை, அதாவது ஓரிறைக் கொள்கையை நாம் கற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொள்ளலாம். பின்வரும் ஹதீஸ்கள் இணை வைத்தல் எவ்வளவு கடுமையான குற்றம் என்பதற்குத் தெளிவான சான்றுகளாகும்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் “அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணை கற்பிப்பது” என்று சொன்னார்கள். நான், “நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம்தான்” என்று சொல்லிவிட்டு “பிறகு எது?” என்று கேட்டேன். “உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குப்போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது” என்று சொன்னார்கள். நான், “பிறகு எது?” என்று கேட்க, அவர்கள், “உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: புகாரீ 4477
நபி (ஸல்) அவர்களிடம் பெரும்பாவங்கள் பற்றி கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரீ 2653
“அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் “அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், “அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், “நியாயமின்றி கொல்லக் கூடாது‘ என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின் போது புறமுதுகிட்டு ஓடுவதும், அப்பாவிகளான இறை நம்பிக்கை கொண்ட கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 2766
இணை கற்பித்தால் நல்லறங்கள் அனைத்தும் அழிந்து விடும்
இணை கற்பித்தல் என்பது மனிதனின் உடலில் புகுந்த விஷத்திற்குச் சமமாகும். ஒருவன் உளூ இல்லாமல் ஆயிரம் ரக்அத்துகள் தொழுதாலும், ஆயிரம் வருடங்கள் தொழுதாலும் அவனுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது. அதுபோல் ஒருவன் இணை வைத்துக் கொண்டு எவ்வளவு தொழுதாலும், நோன்பு வைத்தாலும், ஹஜ் செய்தாலும், தான தர்மங்கள் செய்தாலும் அவனுடைய எந்த நல்லறமும் நன்மையாக மாறாது. அவையனைத்தும் அழிந்து போய் விடும். நாம் செய்யும் நல்லறங்கள் நன்மையாக மாறுவதற்காவது நாம் ஓரிறைக் கொள்கையையும், அதற்கு எதிரான இணை கற்பிக்கும் காரியங்களையும் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடியோரை இதன் மூலம் நேர் வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.
திருக்குர்ஆன் 6:88
“நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.
திருக்குர்ஆன் 39:65, 66
இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 9:17
(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும் இணை கற்பிப்போரும் நரக நெருப்பில் இருப்பார்கள். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்.
திருக்குர்ஆன் 98:6
இணை கற்பித்தலுக்கு மன்னிப்பே கிடையாது
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
திருக்குர்ஆன் 4:48
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.
திருக்குர்ஆன் 4:116
“மர்யமின் மகன் மஸீஹ் தான் அல்லாஹ்” எனக் கூறியவர்கள் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். “இஸ்ராயீலின் மக்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்! அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை” என்றே மஸீஹ் கூறினார்.
திருக்குர்ஆன் 5:72
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒவ்வொரு வியாழக்கிழமையும் திங்கட்கிழமையும் அமல்கள் (இறைவனிடம்) எடுத்துக் காட்டப்படுகின்றன. அப்போது அந்நாளில் கண்ணியமும் மகத்துவம் பொருந்திய அல்லாஹ் தனக்கு இணை வைக்காத ஒவ்வொருவரையும் மன்னிக்கிறான். ஆனால் தனக்கும் தன்னுடைய சகோதரருக்கும் மத்தியில் பகைமை யாரிடம் இருக்குமோ அவரை மன்னிப்பதில்லை. “இவர்கள் இருவரும் இணக்கமாகும் வரை எதிர்பாருங்கள்! இவர்கள் இருவரும் இணக்கமாகும் வரை எதிர்பாருங்கள்!‘ என்று சொல்லப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 4654
இறைவனுக்கு இணை வைத்து விட்ட ஒருவன் மறுமையில் இவ்வுலக அளவிற்குத் தங்கத்தைக் கொடுத்தாலும் நரக வேதனையிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை பின்வரக்கூடிய ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் ஒரு காஃபிர் (அல்லாஹ்வின் முன்னிலையில்) கொண்டு வரப்படுவான். “உனக்கு பூமி நிறைய தங்கம் இருந்தால் நீ (நரக வேதனையிலிருந்து தப்பிப்பதற்காக) அதனை ஈடாகக் கொடுத்து விடுவாயா? நீ என்ன கருதுகின்றாய்?” என்று அவனிடம் கேட்கப்படும். அதற்கு அவன் “ஆம்” என்று கூறுவான். “இதை விட மிக இலேசான ஒன்றை (எனக்கு இணை கற்பிக்காதே என்று) தானே நீ உலகத்தில் கேட்கப்பட்டாய். (ஆனால் இணை வைத்து நிரந்தர நரகத்தில் வீழ்ந்து விட்டாய்)” என்று அவனுக்கு கூறப்படும்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 6538
ஏகத்துவாதிக்கே நபிகள் நாயகத்தின் பரிந்துரை
இன்றைக்கு இஸ்லாமிய சமுதாயத்தினர், இறைநேசர்களாகக் கருதப்படக் கூடிய இறந்தவர்கள் மறுமையில் நமக்காகப் பரிந்துரை செய்வார்கள் என்ற எண்ணத்தில் தர்ஹாக்களில் சென்று அவர்களிடம் பரிந்துரையைக் கேட்கின்றனர். இன்னும் பல்வேறு விதமான இணை வைப்புக் காரியங்களையும் செய்து வருகின்றனர். ஆனால் இணை வைப்புக் காரியங்களைத் தவிர்ந்து ஓரிறைக் கொள்கையில் உறுதியாக இருப்பவர்களுக்குத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே பரிந்துரை செய்ய இயலும் என்பதை நபியவர்கள் பின்வரும் ஹதீஸில் நமக்குத் தெளிவுபடுத்துகிறார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாளில் தங்களின் பரிந்துரைக்கு பாக்கியம் பெறும் மனிதர் யார்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அப்போது, “அபூஹுரைரா! என்னைப் பற்றிய செய்திகள் மீது உமக்கிருக்கும் பேராவல் எனக்குத் தெரியும். ஆதலால், இந்தச் செய்தியைப் பற்றியும் உமக்கு முன்னர் யாரும் என்னிடம் கேட்க மாட்டார்கள் என நான் எண்ணினேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, “மறுமை நாளில் மக்கள் அனைவரிலும் என் பரிந்துரைக்குத் தகுதி பெறும் பாக்கியமுடையவர் யார் எனில், தூய எண்ணத்துடன் யார் “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை‘ (லாயிலாஹ இல்லல்லாஹ்) என்று சொன்னாரோ அவர் தாம்” என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 99
ஓரிறைக் கொள்கைக்காகப் போர் செய்தல்
இந்த ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டுவதற்காகத் தான் மார்க்கம் போர் செய்வதையே நமக்குக் கடமையாக்கியுள்ளது. ஆயுதம் ஏந்தி போர் செய்வதற்குப் பல்வேறு நிலைகளைத் திருமறைக் குர்ஆன் விளக்கினாலும் அந்தப் போர் என்பதை ஓரிறைக் கொள்கைகாகத் தான் வலியுறுத்துகிறது.
இதிலிருந்து இந்த ஓரிறைக் கொள்கை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். இன்றைக்குச் சிலர், திருமறைக் குர்ஆனில் ஜிஹாத் பற்றி வரும் வசனங்களை எடுத்துக் கூறி இளைஞர்களுக்குத் தவறான பாதையின் பக்கம் வழிகாட்டுகின்றனர். ஆனால் போர் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டால் அதன் முதல் காரணம் சத்தியக் கொள்கைக்காகத் தான் இருக்க வேண்டும் என்பதே மார்க்கத்தின் கட்டளையாகும்.
சத்தியக் கொள்கையையும் அதன் வகைகளையும், இணை வைப்புக் கொள்கைகளையும் அதன் வகைகளையும் அறிந்து கொள்ளாதவர்கள் தங்கள் உயிர்களை இழப்பதால் அவர்களுக்கு இவ்வுலகத்திலும் மறுமையிலும் நஷ்டம் தான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்‘ என உறுதி மொழிந்து, (கடமையான) தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத் (எனும் ஏழைகளின் உரிமையை) வழங்காத வரை (இணை வைக்கும்) மக்களுடன் போரிடும்படி நான் கட்டளையிடப்பட்டேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிரையும் உடைமைகளையும் என்னிடமிருந்து அவர்கள் பாதுகாத்துக் கொள்ள முடியும். (மரண தண்டனைக்குரிய) இஸ்லாத்தின் இதர உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறினாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ளது.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: புகாரி 25
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் (உறுதிமொழி) கூறி, (மக்களால்) வழிபாடு செய்யப்படும் இதர தெய்வங்களை நிராகரித்து விடுகிறாரோ அவரது உடைமையும் உயிரும் பாதுகாப்புப் பெற்றுவிடும். அவரது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது.
அறிவிப்பவர்: தாரிக் பின் அஷ்யம் (ரலி)
நூல்: முஸ்லிம் 37
ஜிஹாத் என்பது அநீதி நடக்கும் போது அதைத் தட்டிக் கேட்பதற்காக ஒரு அரசாங்கம் ஆயுதம் தாங்கிப் போரிடுவது மட்டுமல்ல! மாற்று மத மக்களிடயே இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி அவர்களுடைய மனங்களில் இந்தத் தூய மார்க்கத்தை நிலைபெறச் செய்வதும் ஜிஹாத் தான்.
இறைவன் குர்ஆனை வைத்து ஜிஹாத் செய்யச் சொல்கிறான். குர்ஆனை வைத்து ஜிஹாத் செய்வதென்றால் குர்ஆனுடைய கருத்துக்களை மக்களிடையே அழகிய முறையில் எடுத்துக் கூறி உண்மையை நிலைநாட்டப் பாடுபடுவதாகும்.
எனவே (ஏக இறைவனை) மறுப்போருக்கு நீர் கட்டுப்படாதீர்! இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் கடுமையாகப் போரிடுவீராக!
அல்குர்ஆன் 25:52
அன்றைக்கு இஸ்லாத்தை அழிப்பதற்காக இணை வைப்பாளர்கள் இஸ்லாத்தின் பெயரால் பலவிதமான அவதூறுகளை பரப்பிக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களை அழிக்க வேண்டும் என்று பேராசைப்பட்டார்கள். இப்படிப்பட்ட கொடிய உள்ளம் படைத்தவர்களிடத்திலும் குர்ஆனை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று இறைவன் இந்த வசனத்தில் குறிப்பிடுகின்றான். நபி (ஸல்) அவர்களும் மார்க்கத்தை எடுத்துச் சொல்லிப் போராடும் படி வலியுறுத்தியிருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஜிஹாதில் மிகச் சிறந்தது சத்தியக் கொள்கையை அநியாயக்கார அரசனிடம் எடுத்துக் கூறுவதாகும்.
நூல்: நஸயீ 4138
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இணை வைப்பாளர்களிடத்தில் உங்களுடைய பொருட்களாலும் கைகளாலும் நாவுகளாலும் போரிடுங்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: நஸயீ 3045
நாவுகளால் போரிட வேண்டும் என்றால் இணை வைப்பாளர்களிடத்தில் உள்ள அசத்தியக் கருத்துக்களை எடுத்துக் கூறி, அவர்களை சத்தியத்தின் பால் கொண்டு வருவதாகும். நபி (ஸல்) அவர்கள் எந்த ஒரு போருக்குச் சென்றாலும் முதலில் அவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றி எடுத்துச் சொல்வார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்தக் கூட்டத்தாரிடம் போரிட்டாலும் அவர்களை (இஸ்லாத்தின் பால்) அழைக்காமல் இருந்ததில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அஹ்மத் 2001
கைபர் போர்க் களத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக யூதர்கள் களம் இறங்கினார்கள். அவர்களிடம் போரிடுவதற்காக நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களைத் தலைவராக நியமிக்கிறார்கள்.
அப்போது அலீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், “எதிரிகள் நம்மைப் போன்று முஸ்லிம்களாக ஆகும் வரை நான் அவர்களிடம் போர் செய்யட்டுமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறிய பதில் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.
“நிதானத்தைக் கடைபிடிப்பீராக! அவர்களுடைய களத்திற்கு நீர் சென்றவுடன் அவர்களை இஸ்லாத்தின் பால் அழைத்து அவர்கள் மீது கடமையாகுபவற்றை அவர்களுக்குத் தெரிவிப்பீராக! அல்லாஹ்வின் மீதாணையாக உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது சிகப்பு ஒட்டகங்களை விட உங்களுக்குச் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ரலி)
நூல்: புகாரி 2942
அலீ (ரலி) அவர்கள், “நான் முதலில் சண்டையிடட்டுமா?’ என்று கேட்கும் போது, “அவசரப்படாதே! முதலில் அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்’ என்று கூறுகிறார்கள். இங்கு தான் நாம் ஒரு முக்கியமான விஷயத்தை நினைவுக்குக் கொண்டு வர வேண்டும்.
இன்றைக்கு நம்மைச் சுற்றிப் பெரும்பாலும் கள்ளம் கபடமில்லாமல் அண்ணன் தம்பிகளைப் போன்று பழகிக் கொண்டிருக்கும் மாற்று மதச் சகோதரர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். கொடியவர்களுக்கு இஸ்லாத்தைச் சொல்வது நம்மீது கடமையென்றால் இந்த அப்பாவி மக்களுக்கு ஓரிறைக் கொள்கையை எடுத்துச் சொல்வது நம்மீது கடமையில்லையா?
மேற்கண்ட ஹதீஸ்கள் இணை வைப்புக்கு எதிராக நம்முடைய உயிரையும் நாம் கொடுக்கத் தயாராக வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகின்றன. இதன் மூலம் ஓரிறைக் கொள்கையை கற்றுக் கொள்வதின் அவசியத்தை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.
இணை வைப்பவர்களுக்கு மார்க்கத்தின் மதிப்பு
இணை வைப்பதின் பேராபத்தையும், தவ்ஹீதின் சிறப்பையும் நாம் அறிந்து கொள்ள வேண்டுமென்றால் இணை வைப்பவர்களை மார்க்கம் எவ்வாறு மதிக்கிறது என்பதை அறிந்து கொள்வதின் மூலம் உணர்ந்து கொள்ள இயலும். பின்வரும் வசனத்தில் இணை கற்பிப்பவர்கள் அசுத்தமானவர்கள் என்று இறைவன் கூறுகிறான்.
நம்பிக்கை கொண்டோரே! இணை கற்பிப்போர் அசுத்தமானவர்களே. எனவே அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை இவ்வாண்டுக்குப் பின் நெருங்கக் கூடாது. நீங்கள் வறுமையைப் பயந்தால் அல்லாஹ் நாடினால் தனது அருளால் உங்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
அல்குர்ஆன் 9:28
அல்லாஹ்வின் வேதமான திருக்குர்ஆன் எல்லாற்றிற்கும் வழி காட்டுவது போன்று, இணை வைப்பவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் வழி காட்டுகின்றது.
மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.
மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான். அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள்.
அல்குர்ஆன் 60:8, 9
இணை கற்பிப்பவர்களுடன் கொடுக்கல் வாங்கல், வியாபாரம் போன்ற உலக விஷயங்களில் உறவு கொள்வதை இந்த வசனங்கள் அனுமதிக்கின்றன.
உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப் படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.
அல்குர்ஆன் 31:15
நமது பெற்றோர்கள் இணை வைப்பில் இருந்தாலும் அவர்களிடம் உலக விஷயத்தில் நல்ல முறையில் நடந்து கொள்ள இந்த வசனம் சொல்கிறது. அத்துடன் இந்த வசனம் தான் “ஃபித்துன்யா – இவ்வுலகில்’ என்று குறிப்பிட்டு, முஷ்ரிக்குகளுடன் நாம் கொள்ள வேண்டிய தொடர்பை இம்மை, மறுமை என்று பிரித்துக் காட்டுகின்றது.
இணை கற்பிப்பவர்களிடம் மறுமை, மார்க்க விஷயத்தில் எவ்விதத் தொடர்பும் கொள்ளக் கூடாது என்று ஒரு பட்டியலையே போடுகின்றது.
- திருமணம் 2. பள்ளிவாசல் நிர்வாகம் 3. பாவ மன்னிப்புத் தேடுதல் 4. ஜனாஸா தொழுகை போன்ற மார்க்க விஷயங்களில் அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று மார்க்கம் வலியுறுத்துகின்றது. இதற்கான ஆதாரங்களை இப்போது பார்ப்போம்.
திருமணம்
இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
அல்குர்ஆன் 2:221
ஒரு முஸ்லிமான ஆண், இணை வைக்கும் பெண்ணை ஒரு போதும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது. ஒரு முஸ்லிமான பெண், இணை வைக்கும் ஆணை ஒரு போதும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று இந்த வசனம் தெளிவாகக் கட்டளையிடுகின்றது.
பள்ளிவாசல் நிர்வாகம்
இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்குத் தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்.
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைப் போல் ஹாஜிகளுக்குத் தண்ணீர் வழங்கி, மஸ்ஜிதுல் ஹராமை நிர்வகிப்போரைக் கருதுகிறீர்களா? அவர்கள் அல்லாஹ்விடம் சமமாக மாட்டார்கள். அநீதி இழைத்த கூட்டத்துக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
அல்குர்ஆன் 9:17, 18, 19
பாவ மன்னிப்புத் தேடுதல்
இணை கற்பிப்பவர்கள் இறந்து விட்டால் அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவதற்கும் அல்லாஹ் தடை விதித்து விட்டான்.
இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.
அல்குர்ஆன் 9:113
இந்த வசனத்தின் மொழி பெயர்ப்பை நாம் இங்கு இடம் பெறச் செய்துள்ளோம். இந்த வசனம் இறங்கிய காரணங்கள், பின்னணிகள் ஆகியவற்றைப் பார்ப்போம். அந்தக் காரணமும், பின்னணியும் இதன் கருத்தை நம் உள்ளத்தில் பதிய வைக்கத் துணையாக அமையும்.
(நபியவர்களுடைய பெரிய தந்தை) அபூ தாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்து விட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அங்கே, அவரருகே அபூ ஜஹ்லையும், அப்துல்லாஹ் பின் அபீ உமய்யா பின் முஃகீராவையும் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “என் பெரிய தந்தையே! லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதி மொழிக்கான) சொல்லை வைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுவேன்” என்று சொன்னார்கள். அப்போது அபூ ஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவும் “அபூ தாலிபே! நீங்கள் (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா வெறுத்து ஒதுக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதி மொழியைக் கூறும்படி அவர்களை வற்புறுத்திக் கொண்டேயிருந்தார்கள். அவ்விருவரும் தாம் முன்பு சொன்னதையே சொல்லி (அவரைத் தடுத்து)க் கொண்டேயிருந்தார்கள். இறுதியில் அபூ தாலிப் கடைசியாக அவர்களிடம் பேசியது, “நான் (என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் இருக்கிறேன்” என்பதாகவே இருந்தது. லா இலாஹ இல்லல்லாஹ் எனும் உறுதி மொழியைச் சொல்ல அவர் மறுத்து விட்டார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தடை விதிக்கப்படும் வரை உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்டுக் கொண்டேயிருப்பேன்” என்று சொன்னார்கள். அப்போது தான், “இணை வைப்போருக்காகப் பாவ மன்னிப்புக் கோர இறைத்தூதருக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் உரிமை இல்லை” எனும் (9:113வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அபூதாலிப் தொடர்பாக (நபியவர்கள் வருந்திய போது) அல்லாஹ், “நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான்” எனும் (28:56வது) வசனத்தை அருளினான்.
நூல்: புகாரி 4772
இணை வைப்பில் இறந்தவர்களுக்கு முஸ்லிம்கள் பாவ மன்னிப்புத் தேடக் கூடாது என்பதை இந்த ஹதீஸ் ஐயத்திற்கிடமின்றி மிகத் தெளிவாக விளக்குகின்றது.
நபி (ஸல்) அவர்கள் தமது தாயாரின் கப்ரைச் சந்தித்தார்கள். அப்போது அவர்கள் தாமும் அழுது, தம்மைச் சுற்றியுள்ளவர்களையும் அழ வைத்து விட்டார்கள். “என்னுடைய தாய்க்குப் பாவ மன்னிப்புத் தேட அல்லாஹ்விடம் நான் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி தரப்படவில்லை. எனது தாயின் கப்ரைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஏனெனில் அது மரணத்தை நினைவூட்டுகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1622
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கே, அவர்களது தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோருவதற்கு அனுமதி கிடையாது எனும் போது ஷிர்க் (இணை) வைத்து விட்டு இறந்த மற்றவர்களுக்கு எந்த ஒரு முஸ்லிமும் பாவ மன்னிப்புக் கேட்க அனுமதியில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
ஜனாஸா தொழுகை
இணை வைப்பில் இறந்து போனவர்களுக்கு நாம் பாவ மன்னிப்புத் தேட முடியாது என்றாகி விடுகின்றது. ஒரு முஸ்லிம் இறந்தவுடன் நாம் தொழுகின்ற ஜனாஸா தொழுகை தான் நாம் அவருக்காகச் செய்யக் கூடிய தலையாய பாவ மன்னிப்புத் தேடுதலாகும். எனவே ஜனாஸா தொழுகை என்ற இந்தப் பாவ மன்னிப்புப் பிரார்த்தனையை, முஷ்ரிக்குக்காக அதாவது இணை வைத்த நிலையில் இறந்தவருக்காக நாம் செய்ய முடியாது. இதற்குப் பின்வரும் வசனங்களும் வலுவூட்டுபவையாக அமைந்துள்ளன.
(முஹம்மதே!) அவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கேளும்! அல்லது கேட்காமல் இரும்! அவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவமன்னிப்புக் கேட்டாலும் அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவர்கள் மறுத்ததே இதற்குக் காரணம். குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
அல்குர்ஆன் 9:80
அவர்களில் இறந்து விட்ட எவருக்காகவும் நீர் தொழுகை நடத்தாதீர்! எவரது சமாதியிலும் நிற்காதீர்! அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் ஏற்க மறுத்தனர். குற்றம் புரிவோராகவே மரணித்தனர்.
அல்குர்ஆன் 9:84
நாம் மேலே பட்டியலிட்ட விஷயங்களில் பள்ளிவாசல் நிர்வாகம் என்பது ஏகத்துவ வாதிகளை நேரடியாகப் பாதித்து விடுவதில்லை. ஆனால் திருமணம், மரணம் போன்ற விஷயங்கள் ஒவ்வொரு ஏகத்துவ வாதியையும் நேரடியாகப் பாதிக்க வைப்பவையாகும்.
இணை வைப்போரைப் புறக்கணித்தல்
நம்பிக்கை கொண்டோரே! உங்களின் பெற்றோரும், உங்களின் உடன் பிறந்தோரும் நம்பிக்கையை விட (இறை) மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள். “உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன்பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் 9:23, 24
(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!
அல்குர்ஆன் 6:106
உமக்குக் கட்டளையிடப் பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக!
அல்குர்ஆன் 15:94
இன்றைய முஸ்லிம்கள் மறுமையை, வேதத்தை, இறைத் தூதர்களை நம்புகிறார்கள். ஐந்து வேளை தொழுகின்றார்கள்; நோன்பு நோற்கிறார்கள்; ஹஜ் செய்கிறார்கள்; ஜகாத் கொடுக்கிறார்கள். எனவே இவர்களை எப்படி முஷ்ரிக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்? என்று நினைக்கிறார்கள். அதனால் தான் இவர்களைப் பின்பற்றித் தொழலாம் என்ற வாதத்தை வைக்கின்றார்கள். இப்படிச் சொல்பவர்கள் அல்லாஹ்வின் வசனத்தை வசதியாக மறந்து விடுகின்றார்கள்.
அவர்களில் பெரும்பாலோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை.
அல்குர்ஆன் 12:106
அல்லாஹ்வை நம்பிய ஒருவன் இணை கற்பித்தாலும் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பதைத் தான் இந்த வசனம் காட்டுகின்றது.