தொழுகையில் களா இல்லை! தொழுவோருக்குக் கஷ்டம் இல்லை!

 தொழுகையில் களா இல்லை!

தொழுவோருக்குக் கஷ்டம் இல்லை!

தொழுகையைக் குறிப்பிட்ட நேரத்தில், உடனே தொழுவதற்கு “அதா’ என்று பெயர். குறிப்பிட்ட நேரத்தில் தொழாமல் ஆறப் போட்டு, கடன் மாதிரித் தொழுவதற்குப் பெயர் “களா’ ஆகும். இவ்வாறு தொழுவது இன்று நடைமுறையில் இருந்து வருகிறது.

சிலர் இஷா நேரத்தில் சுபுஹ் தொழுவார்கள். காலையில் கடைக்கு அல்லது அலுவலகத்திற்குச் சென்று விடுவார்கள். இஷா வரை எந்தத் தொழுகையையும் தொழ மாட்டார்கள். பிறகு அலுவல் முடிந்து வீட்டுக்கு வரும் போது காலையிலிருந்து கணக்குப் பார்த்து, ஐந்து வேளை தொழுகையையும் தொழுது முடிப்பர்.

தொழுகையை அந்தந்த நேரத்தில் தொழுதே ஆக வேண்டும். அவ்வாறு தொழவில்லை என்றால் அவர் குற்றவாளி ஆகி விடுகின்றார். போர்க்களத்தில் கூட தொழுகையை ஒத்திப் போட அனுமதியில்லை. இதற்காக போர்க்காலத் தொழுகை என்ற சலுகையை வழங்கி, அந்தந்த நேரத்தில் தொழச் செய்கிறான். கடமையான தொழுகையை போர்க்களத்திலேயே தள்ளிப் போட அனுமதியில்லை எனும் போது மற்ற சாதாரண நேரத்தில் தள்ளிப் போட முடியுமா? என்று சிந்திக்க வேண்டும்.

கடமையான தொழுகைகளைத் தள்ளிப் போடக் கூடாது என்பதற்கு, போர்க்காலத் தொழுகை ஓர் ஆணித்தரமான சான்றாகும்.

இதனால் தான் தொழுகைக்காகப் பல சலுகைகளை வழங்கியுள்ளான்.

  1. தொழுகைக்காக உளூச் செய்வதற்குத் தண்ணீர் இல்லா விட்டால் தயம்மம் செய்தல்.
  2. குளிப்பு கடமையாகி விட்டாலும் தண்ணீர் இல்லாவிட்டால் அல்லது குளிக்க முடியாத நிலை ஏற்பட்டால் தயம்மம் செய்தல்.
  3. பயணத்தில் இருந்தால் இரு தொழுகைகளை ஒரே நேரத்தில் சேர்த்துத் தொழுதல்.
  4. பயணத்தில் நான்கு ரக்அத்களை இரண்டு ரக்அத்களாகச் சுருக்கித் தொழுதல்.
  5. நோயாளியாக இருப்பவர் நின்று தொழ முடியாவிட்டால் உட்கார்ந்து தொழுதல்; உட்கார்ந்து தொழ முடியாதவர்கள் படுத்துத் தொழுதல்; அதற்கும் இயலாவிட்டால் சைகை மூலம் தொழுதல்.

இது போன்ற எண்ணற்ற சலுகைகளை மார்க்கம் வழங்கி, தொழுகையைத் தள்ளிப் போடக் கூடாது, களாச் செய்யக் கூடாது என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றது.

ஒரு கம்பெனியில் பணி புரியும் பணியாளர்கள், விடுப்பு எடுக்கக் கூடாது என்று நிர்வாகம் நிபந்தனையிடுகின்றது. குடும்பத்தைப் போய் பார்க்க வேண்டும் என்று அதன் தொழிலாளர்கள் கூறும் போது, பக்கத்திலேயே குடியிருப்பை நிர்வாகம் கட்டிக் கொடுக்கிறது. சாமான்கள் வாங்க கடைக்குப் போக வேண்டும் என்றால், அதற்காக கடைகளையும் அதில் ஏற்படுத்துகிறது. குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும் என்றால், பள்ளிக்கூடத்தையும் கட்டித் தருகிறது என்று வைத்துக் கொள்வோம்.

இத்தனை சலுகைகளையும் அந்தக் கம்பெனி வழங்குவதற்குக் காரணம், தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என்பதற்காகத் தான்.

இது போன்று தான் தயம்மும், ஜம்வு, கஸ்ர் என பல்வேறு சலுகைகளை இறைவன் வழங்கியிருப்பதற்குக் காரணம் உரிய நேரத்தில் தொழாமல் விடுப்பு எடுக்கக் கூடாது என்பதால் தான். இதன் மூலம் தொழுகைக்குக் களா இல்லை என்று தெளிவாக அறிவிக்கிறான்.

காலா காலம் களாச் செய்யும் கொடுமை

அந்தந்த நேரத்தில் தொழ வேண்டும் என்று 4:103 வசனத்தில் அல்லாஹ் கடுமையாகக் கூறியிருந்தும் மேற்கண்ட ஹதீஸ்களில் நபி (ஸல்) அவர்கள் உரிய நேரத்தில் தொழுதாக வேண்டும் என்று கண்டிப்பாக உணர்த்தியிருந்தும் சிலர் சுபுஹ் தொழுகையிலிருந்து இஷா தொழுகை வரை மொத்தமாகத் தொழுது கடனைக் கழித்து கணக்கைத் தீர்ப்பதற்குக் காரணம், ஒரு வேளையில் தொழுகையை விட்டு விட்டால் மறு வேளையில் தொழுது கொள்ளலாம் என்பது போன்ற சட்டங்களைச் சொல்வதால் தான்.

“தொழுகையை இவ்வாறு களாச் செய்யலாம் என்று சொல்வது நல்ல நோக்கத்திற்காகத் தான்.  ஓர் அடியான் தன் மீது கடமையாகி விட்ட தொழுகையை விட்டு விட்டால் அது கடனாகி விடுகின்றது.  கடனை திருப்பிச் செலுத்துவது எப்படி கட்டாயமோ அது போல் செலுத்தியாக வேண்டும். இல்லையேல் அல்லாஹ் தண்டித்து விடுவான் என்பதற்காகத்தான் களாத் தொழுகை உண்டு என்று கூறுகின்றோம்” என்று மார்க்கத் தீர்ப்பு வழங்குகின்றனர்.

மார்க்கத்தில் இல்லாத இது போன்ற தீர்ப்புகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியமாகும். “இவ்வளவு நாளும் தொழாமல் இருந்து விட்டோமே, சரி இன்றையிலிருந்து இனிமேலாவது ஒழுங்காகத் தொழுவோம்” என்ற நல்ல முடிவிற்கு ஒருவன் வந்து, மார்க்க அறிஞரிடம் ஃபத்வா கேட்கின்றான்.  இன்றையிலிருந்து நான் தொழப் போகின்றேன், இதுவரை நான் விட்ட தொழுகைகளின் நிலை என்ன? என்று கேட்கின்றான்.

அதற்கு அந்த மார்க்க அறிஞர் ஓர் அதிரடித் தீர்ப்பை வழங்குகின்றார். “15 வயதில் உனக்குத் தொழுகை கடமையாகி விட்டது. ஆனால் இருபது வருடங்களாகத் தொழாமல் இருந்து விட்டாய். எனவே இருபது ஆண்டு காலத் தொழுகையை நீ களாச் செய்ய வேண்டும்” என்று தீர்ப்பு வழங்குகின்றார்.

தொழப் போகிறேன் என்று திருந்தி வந்தவருக்கு இந்தத் தீர்ப்பு திருப்பு முனையாக அமையவில்லை. திருந்தி, வருந்தி வந்தவரின் நம்பிக்கையை அறுத்து விடும் கத்தி முனையாக அமைந்து விட்டது. இவ்வளவு நாட்கள் நிலுவையாகக் குவிந்து கிடக்கும் தொழுகைகளுடன் இனிமேல் உள்ள தொழுகைகளும் கிடந்து விட்டுப் போகட்டும் என்று வந்த வழியைப் பார்த்து திரும்பி விடுகின்றார்.

இல்லையென்றால் காலா காலம் களாச் செய்து அவதிப்படுகின்றார்.

அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான்.

அல்குர்ஆன் 5:6

உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை.

அல்குர்ஆன் 22:78

அல்லாஹ் இந்த மார்க்கத்தை எளிமையாக்கியிருக்கும் போது இம்மார்க்கத்தை நாம் சிரமமாக்குவது எந்த வகையில் நியாயமாகும்?

உறக்கமும் மறதியும்

ஒருவர் தொழாமல் தூங்கி விட்டால் தூக்கத்திலிருந்து விழித்ததும் தொழலாம்.  அல்லது மறந்து போய் தொழாமல் இருந்து விட்டால் நினைவு வந்ததும் தொழவேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் யுத்தத்தில் இருந்து திரும்பும் போது இரவுப் பயணம் மேற்கொண்டார்கள்.  எங்களுக்குத் தூக்கம் வந்ததும் ஓய்வெடுத்தார்கள்.  பிலாலிடம் இன்றைய இரவில் காவல் காப்பீராக! என்று சொன்னார்கள்.  பிலால் தன்னுடைய வாகனத்தில் சாய்ந்து கொண்டிருக்கும் போதே அவர்களது கண்களில் தூக்கம் மிகைத்து விட்டது.  சூரிய வெளிச்சம் தங்கள் மீது வருகின்றவரை நபி (ஸல்) அவர்களோ, பிலாலோ அவர்கள் தோழர்களில் வேறு யாருமே விழிக்கவில்லை.  அவர்களில் முதன் முதலில் விழித்தது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தான்!  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திடுக்கம் அடைந்து, பிலாலே! என்றார்கள்.  “அல்லாஹ்வின் தூதரே! எனது தாயும் தந்தையும் அர்ப்பண மாகட்டும்!  உங்களுடைய உயிரைப் பிடித்து வைத்திருந்தவனே என்னுடைய உயிரையும் பிடித்து விட்டான்” என்று பிலால் சொன்னார்.  உடனே அவர்களுடைய வாகனங்களில் கொஞ்சம் ஓட்டிச் சென்றனர்.  பிறகு நபி (ஸல்) அவர்கள் உலூச் செய்து பிலாலுக்கு உத்தரவு இட்டார்கள்.

பிலால் தொழுகைக்கு இகாமத் சொன்னார்.  அவர்களுக்கு நபி (ஸல்) சுப்ஹ் தொழுவித்தார்கள்.  தொழுகை முடிந்ததும், “தொழுகையை மறந்தவர் அந்தத் தொழுகை நினைவுக்கு வந்தவுடன் தொழுது விடுவாராக!  ஏனெனில் என்னை நினைவு கூர்வதற்காக தொழுகையை நிலை நாட்டுவீராக! என்று அல்லாஹ் சொல்கிறான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத்

இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் உறங்கி விட்டார்கள்.  சூரியன் உதித்த பிறகு தான் விழிக்கிறார்கள். எழுந்ததும் உடனே அந்த இடத்தை விட்டு கொஞ்சம் கடந்து சென்று தொழுகை நடத்துகின்றார்கள். தொழுது முடித்து விட்டு, “மறந்தவர்கள் நினைவு வந்ததும் தொழுங்கள்” என்று சொல்கின்றார்கள்.

இன்னொரு ஹதீஸில், “யார் தொழுகையை மறந்து விடுகிறாரோ அல்லது தொழாமல் உறங்கி விடுகிறாரோ அதற்குரிய பரிகாரம் நினைவு வந்ததும் அதைத் தொழுவது தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி அனஸ் (ரலி) மூலம் அறிவிக்கப்பட்டு, முஸ்லிமில் இடம் பெறுகின்றது.

மற்றோர் இடத்தில், “தூங்கிக் கொண்டிருக்கையில் (தொழுகையை) தாமதப்படுத்துதல் (குற்றம்) இல்லை. தாமதப்படுத்துதல் (என்ற குற்றம்) அடுத்த நேரத் தொழுகை வரும் வரை தொழாமல் இருப்பவர் மீது தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூகதாதா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

இந்த ஹதீஸ்களிலிருந்து தூக்கம், மறதி ஆகியவற்றின் காரணமாக தொழுகை தாமதமாகி விட்டால் அல்லாஹ் நம்மைத் தண்டிக்க மாட்டான்.  ஏனெனில் இவை இரண்டுமே நம்முடைய கட்டுப் பாட்டில் இல்லாத விஷயங்கள்.

அதற்காக அலாரத்தை அணைத்து விட்டு வேண்டுமென்றே சுபுஹ் தொழாமல் தூங்குபவருக்கு இது பொருந்தாது.  எதுவுமே தெரியாத அளவுக்குத் தூங்கி விட்டால் அதை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். இந்த இரண்டு காரணங்களைத் தவிர்த்து சுய நினைவுடன் தொழுகையை விடுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை.

அப்படியானால் களா தொழுகையே இல்லையா? இவ்வளவு நாளும் தொழாமல் 20 வருடங்களாகத் தேங்கிப் போனவருக்கு வழி வகை என்ன? என்பதை இப்போது பார்ப்போம்.

அல்லாஹ் திருக்குர்ஆன் 2:183 வசனத்தில் நோன்பைக் கடமையாக்குகின்றான். 185வது வசனத்தில் நோன்பு மாதம் வந்து, ஒருவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் ரமலான் மாதம் அல்லாத வேறு நாட்களில் நோன்பு நோற்க வேண்டும் என்று நோன்பை களாச் செய்யுமாறு கூறுகின்றான்.

இப்படி நோன்பில் களாச் செய்யுமாறு கூறிய இறைவனுக்கு தொழுகையில் சலுகையளிக்க மறந்து விடவில்லை; மறக்கவும் மாட்டான். நிச்சயமாக அவன் ஞானமிக்கவன்.

உமது இறைவன் மறப்பவனாக இல்லை.

அல்குர்ஆன் 19:64

என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்.

அல்குர்ஆன் 20:52

தொழுகையில் அல்லாஹ் களாவை விரும்பவில்லை. அவ்வப்போது உடனே தொழ வேண்டும் என்று உறுதியாகக் கட்டளையிடுகின்றான்.  அல்லாஹ் தன் திருமறையில் 4:102 வசனத்தில், போர்க்களத்தில் எப்படித் தொழ வேண்டும் என்பதைக் குறிப்பிட்டு விட்டுப் பின்னர், தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று கூறுகின்றான்.

தொழுகையைக் களாச் செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கு ஏற்ற இடம் உண்டென்றால் அது போர்க்களம் தான்.  எதிரிகள் முஸ்லிம்களை அழித்து விடத் துடிக்கும் அந்தக் கட்டத்தில் கூட தொழுகையை விடக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிடுவதிலிருந்து களாத் தொழுகை என்பது இஸ்லாத்தில் அறவே அனுமதிக்கப் பட்டதல்ல என்பதை விளங்கலாம்.

எனவே தொழுகையைக் களாச் செய்வதற்கு வல்ல அல்லாஹ் எந்தவிதமான வழியையும் விட்டு வைக்கவில்லை. அந்தந்த நேரத்தில் உரிய தொழுகையைக் கண்டிப்பாகத் தொழுதாக வேண்டும்.

களாத் தொழுகை என்ற ஒன்று இருக்கின்றது என்று சொல்வதால் தான் மக்களிடம் அலட்சியம் ஏற்படுகின்றது. அதனால் தொழுகையை விட்டு விட்டு களாவாக, 17 ரக்அத்துகளையும் மொத்தமாகத் தொழும் நிலைக்குச் சென்று விடுகின்றார்கள். சினிமாவுக்குச் செல்வதற்காகத் தொழுகையை விட்டு விட்டு, சினிமா முடிந்த பின்னர் மூன்று வேளைத் தொழுகைகளைச் சேர்த்துத் தொழுபவர்களும் உண்டு.

ஒரு நேரத் தொழுகையை வேண்டுமென்று விடுவது இறை நிராகரிப்புக்குக் கொண்டு செல்லும் பெரும் பாவம் என்று மக்களிடம் எடுத்துச் சொல்லும் போது அவர்கள் உணரத் தலைப்பட்டு அந்தந்த நேரத்தில் அந்தந்த தொழுகையை நிலைநாட்டுவார்கள்.

ஒருவர் தனக்குத் தொழுகை கடமையான நாளிலிருந்து 20 வருடங்களாகத் தொழவில்லை என்றால் அதற்காக அவரது மனம் வருந்துகின்றது. அவர் 15 வயதிலிருந்து விட்ட தொழுகையை எல்லாம் தொழ வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதற்குப் பரிகாரம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுவது தான். எல்லாம் வல்ல அல்லாஹ் இத்தகையவர்களை மன்னிக்கக் காத்திருக்கின்றான்.

மனிதன் மாபெரும் தவறுகளைச் செய்திருந்தாலும், அவன் திருந்தி பாவ மன்னிப்புத் தேடுகின்ற போது அவனது கடந்த காலத் தவறுகளையெல்லாம் அல்லாஹ் நன்மைகளாக மாற்றி விடுகிறான்.

அவர்களுக்குப் பின்னர் வழித் தோன்றல்கள் வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் நஷ்டத்தைச் சந்திப்பார்கள்.

திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

அல்குர்ஆன் 19:59, 60

அல்லாஹ் இப்படி ஒரு விசாலத்தைத் தன் அடியார்களுக்கு வழங்கியிருக்கும் போது அதில் இந்த அறிஞர்கள் குறுக்கிட்டு, திருந்தி வருபவர்களிடம் களா எனும் பெரும் பாரத்தை ஏற்றி அவர்களை விரக்தியாளர்களாக, அல்லாஹ்வின் அருளை விட்டும் நிராசையடையக் கூடியவர்களாக ஆக்கிவிடுகின்றனர்.

சமுதாயத்தில் இன்று அதிகமான மக்கள் தொழாமல் இருக்கின்றனர். அவர்களுக்குக் கடந்த காலத் தொழுகைகள் ஆயிரக்கணக்கில் தேங்கிக் கிடக்கும். அப்படிப் பட்டவர்கள் திருந்தி வருகின்ற போது மத்ஹபுப் பாணியைக் கடைப்பிடித்தால் அவர்கள் காலா காலம் பள்ளிக்கு வரவே மாட்டார்கள். மார்க்கம் கூறும் இந்த உண்மையான வழியைக் காட்டினால் தான் அதிகமான மக்கள் தொழ முன்வருவார்கள்.

இப்படி ஒரு இலகுவான மார்க்கத்தில் மனந்திருந்த வரும் அடியார் மீது களா எனும் நெருக்கடியைத் திணித்து, எளிமையான இந்த மார்க்கத்தைக் கடின சித்தாந்தமாக இந்த மார்க்க அறிஞர்கள் மாற்றி விட்டனர்.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

அல்குர்ஆன் 39:53

“இத்தனை நாளும் தொழாத மக்களே! கவலைப்படாதீர்கள்! உங்களை நான் மன்னிக்கக் காத்திருக்கிறேன்” என்று அல்லாஹ் அழைப்பு விடுக்கிறான்.

எனவே இந்த எளிய மார்க்கத்தில், சுவனத்தின் வாயில்கள் திறந்திருக்கும் இந்த ரமளான் மாதத்தில் தொழுகையைத் தொடங்கி, அதன் மூலம் சுவனத்தில் நுழைய ஏகத்துவம் இதழ் உங்களை அழைக்கிறது.