தியாகமா? துரோகமா?

தியாகமா? துரோகமா?

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தில் இருந்து நீக்கப்பட்ட எஸ்.எம். பாக்கருடன் இருக்கும் சிலர், “ஜமாஅத்திற்காக பாக்கர் பெரிய தியாகம் செய்திருக்கின்றார்; அப்படிப்பட்ட தியாகியை அநியாயமாக நீக்கி விட்டார்கள்’ என்று திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருக்கிறார்கள். “நான் இந்த ஜமாஅத்திற்காகத் தியாகம் செய்தேன்’ என்று பாக்கரும் கூறிக் கொண்டிருக்கிறார்.

மண் டி.வி. விண் டி.வி.யானது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தியாகம் செய்தார்கள் என்று சொல்கிறோம். அதை அவர்களுடைய வாழ்க்கையில் நாம் பார்க்கிறோம். நபித்துவத்திற்கு முன்பு நபி (ஸல்) அவர்கள் செல்வந்தர்! நபித்துவம் வந்த பிறகு வறுமை நிலை! பெரும்பாலான நபித்தோழர்களின் நிலையும் இவ்வாறே இருந்தது. செல்வந்தர்களாக இருந்தவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின் அன்றாட உணவுக்கே கஷ்டப்பட்டார்கள்.

இது போன்று தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் துவங்குவதற்கு முன்பு பாக்கர் வசதியில் இருந்து இப்போது வறுமையில் உழல்கின்றாரா? என்றால் நிச்சயமாக இல்லை என்று சொல்லி விடலாம். உண்மையில் இதற்கு நேர் மாற்றம் தான்.

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் துவங்குவதற்கு முன்னால் பாக்கர் வின் டி.வி.யில் இயக்குநர் கிடையாது. இப்போதோ அவர் அதில் ஓர் இயக்குநர்! எந்த அளவுக்கென்றால் இன்று நமது ஜமாஅத்தின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப விடாமல் தடுக்கும் அளவுக்குச் செல்வாக்கு பெற்ற ஒரு இயக்குநர்! இந்த இயக்குநர் பொறுப்பு இந்த ஜமாஅத் துவங்கியதற்கு முன்பா? பின்பா?

ஜமாஅத்தின் டி.வி. நிகழ்ச்சிகளுக்காக லட்சக்கணக்கில் போட்டுக் கட்டினேன் என்று பாக்கர் கூறுகின்றார். அதுவும் தமுமுக காலத்திலிருந்து போட்டுக் கட்டினேன் என்கிறார்.

அவர் சொல்லும் நஷ்டக் கணக்கு அடிப்படையில் போட்டுக் கட்டியிருந்தால் பில்கேட்ஸால் கூட போட்டுக் கட்ட முடியாது.

ஆனால் தவ்ஹீது ஜமாஅத் மூலம் கிடைத்த விளம்பரம், நன்கொடைகள் அவரது நிகழ்ச்சிக்கு மட்டுமில்லாமல் அவரது வின் டி.வி.யின் வளர்ச்சிக்கும் பல பரிமாணங்களில் படிக்கட்டுகளாக அமைந்தன.

தவ்ஹீது ஜமாஅத்தின் நிகழ்ச்சி காரணமாக பட்டணத்திலிருந்து பட்டிதொட்டி வரையுள்ள கிளை உறுப்பினர்கள் சுவர்கள், தட்டிப் பலகைகள், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் செய்த விளம்பரங்கள் அதை மண் டி.வி. என்ற நிலையிலிருந்து விண் டி.வி.யாக உயர்த்தின.

தவ்ஹீது ஜமாஅத் ஆரம்பிப்பதற்கு முன்னால் வின் டி.வி.யில் நிகழ்ச்சி நடத்தும் வாடிக்கையாளராக இருந்த பாக்கர் இன்று அதே வின் டி.வி.யில் பங்குதாரர். தியாகம் என்றால் பக்கீராக ஆகியிருக்க வேண்டும். பங்குதாரர் என்ற தகுதி பொருளாதாரத்தின் வளர்ச்சியை உணர்த்துகின்றதா? அல்லது கட்டிய கைலியுடன் வெளியே நிற்கிறார் என்ற கையறு நிலையை உணர்த்துகின்றதா?

வந்தார்கள்! சென்றார்கள்!

தமுமுகவை விட்டு நாம் வெளியேற்றப்பட்டவுடன் பாக்கரும் வெளியே வந்தது ஒரு தியாகம் அல்லவா? என்று கூடக் கேட்கலாம்.

நம்மோடு வந்தது பாக்கர் மட்டுமல்ல! அல்லாஹ்வின் மகத்தான கிருபையினால் ஆயிரக்கணக்கான அழைப்பாளர்கள், லட்சக்கணக்கான செயல் வீரர்கள், ஏகத்துவமே உயிர் மூச்சு என்ற சிந்தனை உள்ளவர்கள் அத்தனை பேரும் வந்தார்கள். தமுமுக பிரிவதற்கு முன்னால் ஜாக்கை விட்டு வெளியே வந்த போதும் அப்படித் தான் வந்தார்கள். வந்த அழைப்பாளர்கள் அத்தனை பேரும் பிரச்சாரக் களத்தில் அடி உதை வாங்கியவர்கள். பாக்கரை விடவும் அதிகம் தியாகம் செய்த அடிமட்டத் தொண்டர்கள் அவர்கள். மேலும் அல்லாஹ்வின் அருளால் இவர்கள் இன்றளவும் ஜமாஅத்திலேயே இருக்கிறார்கள். பாக்கரைப் போல் வந்து விட்டு வெளியே சென்று விடவில்லை.

தீவிரப் பிரச்சாரத்தில் தியாகம்

பிரச்சாரத்தில் அவர் பெரிய தியாகம் செய்திருப்பதாகக் கூறிக் கொள்கிறார்கள். இதிலும் அவரால் பாஸ் மார்க் வாங்க முடியாது. அதிகமான கூட்டத்திற்குச் சென்றவர் யார் என்று கணக்கெடுத்தால் அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி தான் அதிக மதிப்பெண் வாங்குவார். அதற்குப் பிறகு மற்ற அழைப்பாளர்கள் அடுத்தடுத்த மதிப்பெண் வாங்குவார்கள்.

இதில் அடித்தட்டில் உள்ள தாயீக்கள் செய்யும் தியாகம் சாதாரணமானதல்ல!

பெருநாளன்று ஒருவர் தன் மனைவி மக்களுடன், தாய் தந்தையருடன் இருப்பதையே விரும்புவார். ஆனால் தவ்ஹீது ஜமாஅத்தின் தாயீக்கள் பெருநாள் அன்று வெளியூர்களுக்குச் சென்று பெருநாள் பேருரை நடத்தி விட்டு வருகின்றார்கள்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜும்ஆ உரையாற்றுவதற்காக அவர்கள் செய்கின்ற பயணம் மிகச் சிரமமான காரியமாகும். அத்துடன் பொதுக்கூட்டங்கள் ஆனாலும் சரி! ஜும்ஆ உரையானாலும் சரி! பெருநாள் உரையானாலும் சரி! அந்த உரைகளுக்காகக் குறிப்பெடுக்க ஒதுக்கும் நேரங்கள்! அதிலும் கம்ப்யூட்டர் வசதியில்லாதவர்கள் நூல்கள் மூலம் குறிப்பு எடுப்பதற்காகப் படும் சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல!

பாக்கருக்கு ஒரு குறிப்பும் தேவையில்லை. அவரது பேச்சைக் கேட்ட மாத்திரத்திலேயே இதைத் தெரிந்து கொள்ளலாம்.

இந்த இயக்கத்தின் வேர்கள் இரண்டு சாரார் ஆவர். ஒரு சாரார் தாயீக்கள்; மற்றொன்று மாவட்ட, நகரக் கிளை நிர்வாகிகள். இந்த வேர்கள் தான் தவ்ஹீது ஜமாஅத் என்ற மரத்தை எந்தப் புயலிலும் சூறாவளியிலும் சரிந்து, சாய்ந்து விடாமல் பாதுகாத்து நிற்கின்றன.

இதில் தாயீக்கள் என்ற சாரார் ஏழைகள்; பாட்டாளி வர்க்கத்தினர்! பாக்கர் அன்ட் கம்பெனியினர் போன்று காரில் பறக்கும் வசதி பெற்றவர்கள் அல்லர்!

சில சமயங்களில் பிரச்சாரத்திற்குச் செல்லும் இடங்களில் பயணச் செலவுத் தொகை கூட போதிய அளவுக்குக் கிடைக்காமல் கைக்காசு செலவழித்து விட்டு வருபவர்கள். சில ஊர்களில் சரியான உணவின்றித் திரும்புபவர்கள். அதனால் பாட்டாளி தாயீக்களின் அழைப்புப் பணிக்கு முன்னால் பாக்கரின் பிரச்சாரம் ஒன்றும் பெரிய தியாகம் அல்ல!

ஆனால் வின் டிவி நிகழ்ச்சிகளில் பாக்கர் தனது உரைகளைத் திட்டமிட்டு ஒளிபரப்பிக் கொண்டதன் மூலம் அந்தத் தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டார் என்று வேண்டுமானால் கூறலாம்.

செயல்பாட்டில் தியாகம்

இந்த இயக்கத்தின் வேர்களான மற்றொரு சாரார் மாவட்ட, கிளை நிர்வாகிகள். இவர்கள் இன்னொரு கண்ணோட்டத்தில் அழைப்பாளர் களும் கூட! இவர்களிடம் பிரச்சாரம் இல்லாவிட்டாலும் தங்களது செயல்பாட்டின் மூலம் மக்களைச் சத்தியத்தின் பக்கம் அழைக்கக் கூடியவர்கள்.

அந்தந்த ஊர்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்காக அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற் காகத் தங்கள் பிழைப்புகளை விட்டு விட்டு காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்களில் ஒரு நாள் அல்லது பல நாட்கள் காத்து கிடந்து தவ்ஹீது ஜமாஅத்தின் வளர்ச்சிக் காகப் பாடுபடுகிறார்கள். சில சமயங்களில் சிறைச்சாலை களையும் சந்திக்கின்றனர். இவர்களின் இந்தத் தியாகத்திற்கு முன்னால் பாக்கரின் தியாகம் ஒன்றும் மேலானதல்ல!

அன்று சாமானியர் இன்று ஜமீன்தார்

இந்த இயக்கம் தொடங்குவதற்கு முன்பு மற்றவர்களைப் போலவே பாக்கரும் ஒரு சாமானியர்; சராசரி மனிதர்! ஆனால் இன்று ஒரு கோடீஸ்வரர்!

ரியல் எஸ்டேட், ஹஜ் சர்வீஸ், தொலைக்காட்சி என அவரது பொருளாதார வட்டம் விரிந்து விட்டது. அவருடைய வளர்ச்சிக்கு இந்த ஜமாஅத் பயன்பட்டிருக்கின்றது. உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் செல்வந்தர்களைத் தங்களது பிஸினஸ் வலையில் பிடித்துப் போட இந்த ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் பதவி வசதியாகவும் வாய்ப்பாகவும் அமைந்தது.

அவர் இந்த ஜமாஅத்தால் பொருளாதாரத்தில் உயர்ந்து இருக்கிறாரா? அல்லது கீழ் நிலையில் வீழ்ந்திருக்கிறாரா? என்று பாருங்கள். உயர்ந்திருக்கிறார் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வோம். அப்படியென்றால் அதை எப்படி தியாகம் என்று சொல்ல முடியும்? இந்த ஜமாஅத்தின் மூலம் தான் அவர் பொருளாதார வளர்ச்சியும், வசதி வாய்ப்புகளும் கண்டிருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் அவருடைய இந்த பிசினஸ் வளர்ச்சி ஜமாஅத் வளர்ச்சிக்குத் தடைக்கல்லாக வந்து நின்றது. அவர் நடத்தும் ஹஜ் சர்வீஸை, ஜமாஅத் நடத்துவதாக நம்பி ஏமாந்து, இதில் ஹஜ் செய்யச் சென்றவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட வசதிக் குறைவின் காரணமாக சுமத்திய கடுமையான பழிகளையும் கண்டனங்களையும் ஜமாஅத்  தன் தலையில் சுமக்க வேண்டியிருந்தது.

இவர் செய்கின்ற ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் ஏற்படும் குறைபாடுகளுக்கும் ஜமாஅத் மீது தான் குற்றம் சுமத்தப்பட்டது. எனவே தான் இந்தப் பழியை ஜமாஅத் சுமக்க முடியாது என்று நிர்வாகம் ஒரு தீர்க்கமான முடிவை எடுத்து அதை உணர்விலும் அறிவித்தது. அதை அறிவித்த மாத்திரத்தில் பாக்கர் தணல் புழுவானார்; தாங்க முடியாத கோபத்திற்கு ஆளானார்.

ஜமாஅத்தின் வளர்ச்சிக்குக் குறுக்கே வந்து நிற்கும் வியாபாரத்தை விட்டொழித்திருந்தால் அதைத் தியாகம் என்று கூறலாம். அல்லது ஜமாஅத்தை விட்டே விலகியிருந்திருக்க வேண்டும். இந்த இரண்டையும் செய்யத் தவறியதால் இவர் இந்த ஜமாஅத்திற்காகத் தியாகம் செய்யவில்லை. துரோகம் தான் செய்திருக்கின்றார்.

தொடரும் துரோகப் பட்டியல்

இவர் செய்த துரோகங்களை எடுத்துப் பார்த்தால் அதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.

நாமெல்லாம் சாதாரணமாகப் பேருந்தில் பயணம் செய்யும் போது அதில் வீடியோ ஒளிபரப் பப்படுவதைப் பார்க்க நேரிடும். நகைச்சுவைக் காட்சிகள் வரும் போது சிரித்தால் கூட, “நாமெல்லாம் தாயீ ஆயிற்றே! நாம் சிரிப்பதை யாரேனும் பார்த்து விட்டால்?’ என்ற உறுத்தல் வந்தவுடனே சிரிப்பு வந்த வேகத்தில் திரும்பிப் போய்விடும்.

ஆனால் இவரோ பேருந்தில் ஒரு பெண்ணுடன் அமர்ந்து அதுவும் 10 மணி நேரத்திற்குக் குறையாத பயணத்தில், ஒரு ஜமாஅத்தின் பொதுச் செயலாளராக இருந்து கொண்டு செல்கிறார். இவ்வாறு அந்நியப் பெண் அருகில் இருந்து கொண்டு சரச சல்லாபத்துடன் செல்லும் போது அவரது மனம் உறுத்தவில்லை. ஜமாஅத்தின் கண்ணியம் காற்றில் பறக்குமே என்று கவலைப்படவில்லை. ஜமாஅத்தின் கண்ணியத்தைக் கவனத்தில் கொள்ளவில்லை; அதைப் பற்றி அவருக்குக் கவலையுமில்லை. இது ஜமாஅத்திற்குச் செய்த மிகப் பெரிய துரோகம்!

கொள்கை அடிப்படையில் நமது ஜமாஅத்தின் மீது குறை சொல்ல முடியாத எதிரிகள் கூட இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஜமாஅத்தை விமர்சிப்பதற்கு இவர் காரணமாக இருந்தார். நந்தினி பாக்கர் என்று ஜாக் மேடைகளில் விமர்சனம், மன்மதக் குஞ்சு என்று தமுமுகவினர் செய்த விமர்சனம் இவையனைத்தும் தனிப்பட்ட பாக்கரை மையமாக வைத்துச் செய்யப்படவில்லை. ஜமாஅத்தை மையப்படுத்தியே விமர்சிக்கப்பட்டது. இவ்வாறு ஜமாஅத்திற்கு இழுக்கைத் தேடித் தந்தது இவர் செய்த தியாகம் அல்ல, துரோகம் தான்.

இந்தத் துரோகத்தைப் பற்றி நிர்வாகக் குழுவில் விசாரிக்கையில், “அப்படி எதுவும் நடக்கவில்லை’ என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து மறுத்தது அடுத்த துரோகம்! இப்படி இவர் செய்த துரோகங்களை வேண்டுமானால் பட்டியல் போடலாம். தியாகங்களைப் பட்டியல் போட முடியாது.

இறுதி செயலே உறுதி செய்யும்

இத்தனை துரோகங்கள் செய்த இவரை தியாகி என்று இவரது சகாக்கள் சொல்வது பச்சைப் பொய் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். சரி! அப்படி இவர் தியாகம் செய்தார் என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தியாகத்திற்கு மதிப்பும் மரியாதையும் கிடைப்பது அவரது இறுதிச் செயலை வைத்துத் தான். இறுதிச் செயல் தான் அதைத் தியாகம் என்று தீர்மானிக்கும்.

நபி (ஸல்) அவர்களும் இணை வைப்போரும் (கைபர் போர்க் களத்தில்) சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர். நபியவர்கள் தம் படையின் பக்கம் சென்று விட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்று விட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு இடையே ஒருவர் இருந்தார். அவர், (எதிரிகளில்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் எவரையும் நபித் தோழர்களுக்கு விட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண்டிருந்தார். (அவரது துணிச்சலான போரைக் கண்ட) நபித் தோழர்கள், “இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லைஎன்று (வியந்து) கூறினார்கள்.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், “அவரோ நரகவாசியாவார்என்று கூறினார்கள். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதர், “நான் அவருடன் இருக்கிறேன் (அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு)என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாளின் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

(கண்காணித்த) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, “தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன்என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “என்ன விஷயம்?” என்று கேட்டார்கள். அவர், “சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி “அவர் நரகவாசிஎன்று கூறினீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். நான் (மக்களிடம்), “உங்களுக்காக (அவரது நிலைகளை அறிந்து வர) நான் அவருடன் போய் வருகிறேன்என்று கூறிவிட்டு, அவரைத் தேடிப் புறப்பட்டேன். அவர் கடுமையாக காயப்படுத்தப் பட்டார். உடனே, அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி, வாளின் பிடிமுனையை பூமியில் நட்டு, அதன் கூர்முனையைத் தன் இரு மார்புகளுக்கிடையே வைத்து, அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் அஸ் ஸாஇதீ (ரலி)

நூல்: புகாரி 2898

பாருங்கள்! நபித்தோழர்கள் வியக்கின்ற அளவுக்குப் போர்க் களத்தில் சாதனையும் சாகசமும் புரிந்த இந்த வீரரின் முடிவு விபரீதமாக அமைந்தது.

இவர் தொடர்பாகத் தான் நபி (ஸல்) அவர்கள், “முஸ்லிமான ஒருவர் தான் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும். மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் வாயிலாகவும் வலுவூட்டுகின்றான்” என்று கூறுகின்றார்கள். (புகாரி 3062)

இதையொட்டியே “ஓர் அடியார் மக்களின் பார்வையில் சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். (இதைப் போன்றே) ஓர் அடியார் மக்களின் பார்வையில் நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்துவருவார். (உண்மையில்) அவர் சொர்க்க வாசிகளில் ஒருவராக இருப்பார். இறுதி முடிவுகளைக் கொண்டே செயல்கள் தீர்மானிக்கப்படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (புகாரி 6493)

இந்த ஹதீஸ்களின் பின்னணியில், பாக்கருக்கு ஜமாஅத்தின் மீது பற்றும் பாசமும் இருந்திருக்குமானால் இவர் மீது ஹாமீன் இப்ராஹீம் சுமத்திய குற்றச்சாட்டுக்களை…

பொதுமக்கள் முன்னிலையில் மறுத்து, தன்னை நிரபராதி என்று நிரூபித்திருக்க வேண்டும்.

அல்லது செயற்குழுவில் தன்னை நிரபராதி என்று நிரூபித்திருக்க வேண்டும்.

அல்லது ஜமாஅத்தை விட்டு கண்ணியமாக ஒதுங்கி இருந்திருக்க வேண்டும்.

இந்த மூன்றில் எதையேனும் தேர்ந்தெடுத்திருந்தால் அவர், “செய்தேன்’ என்று சொல்கின்ற தியாகத்திற்கு ஓர் அர்த்தம் இருந்திருக்கும்.

செய்த குற்றத்திற்காக ஜமாஅத் ஒரு தண்டனையைக் கொடுக்கும் போது, அகபா உடன்படிக்கை தியாகியான கஅப் பின் மாலிக், பத்ருப் போர் தியாகிகளான முராரா பின் ரபீஃ அல்அம்ரீ, ஹிலால் பின் உமைய்யா அல்வாக்கிஃபி போன்று அந்தத் தண்டனையை ஏற்றுக் கொண்டார் என்றால் உண்மையில் அது தான் தியாகம்!

அவர் அமைதி காத்திருந்தால், அந்தக் கடைசி நிலையை வைத்து அவரது கண்ணியம் உயர்ந்திருக்கும். ஆனால் அதைச் செய்ய அவர் முன்வரவில்லை. அவர் முன்வந்தாலும் அவரது சகாக்கள் அவரை விடத் தயாரில்லை.

இன்று அவரது சகாக்கள், “ஒருவரது குறையை மறைக்க வேண்டும்; துருவித் துருவி ஆராயக் கூடாது’ என்றெல்லாம் பிரச்சாரம் செய்கிறார்கள். இந்த ஜமாஅத் பாக்கரின் குறையைக் கடைசி வரை மறைத்தது. ஜமாஅத்தின் கண்ணியம் கெட்டு விடக் கூடாது என்பதற்காக இவராக ஒதுங்கி விடுவார் என்று இவ்வளவு காலம் காத்திருந்தது. இறுதியில் ஜமாஅத்தை உடைக்கும் வேலையில் ஈடுபட்டவுடன் தான் நடவடிக்கையில் இறங்கியது.

கடைசி வரை இவரது தவறை மறைத்த ஜமாஅத்திற்கு நன்றியுடன் நடப்பதை விட்டு விட்டு, ஜமாஅத்திலிருந்து வெளியேறிய பாக்கர் தியாகம் செய்யவில்லை, துரோகமே செய்திருக்கின்றார்.

பாக்கர் தியாகம் செய்தவர் என்று சொல்லும் போது, அறியாத மக்கள் அதை நம்பி விடக் கூடாது என்பதற்காகவும், இனி மேல் ஜமாஅத்தில் உள்ளவர்கள் தனிமனித வழிபாட்டிற்குப் பலியாகி தடம்புரண்டு விடக் கூடாது என்பதற்காகவும் இந்தத் தலைப்பில் இப்படியொரு விளக்கத்தை வெளியிட வேண்டியதாயிற்று!