தேனீக்களின் தேனிலவு

அறிவியல் அற்புதங்கள்                          தொடர்: 4

தேனீக்களின் தேனிலவு

எம். ஷம்சுல்லுஹா

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

அல்குர்ஆன் 30:21

இல்லற வாழ்க்கை என்பது ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் மன அமைதியாகும். இதன் துவக்கம் தான் திருமணம். இதில் ஆணும், பெண்ணும் இணைகின்றனர். திருமணம் முடிந்ததும் தம்பதியர்கள் தங்கள் இல்லற சுகத்தை அனுபவிப்பதற்குச் செல்லும் சுற்றுலாவிற்கு, தேனிலவு என்று பெயர். இதற்காக ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்குச் சுற்றுலா சென்று வருகின்றனர். தாம்பத்திய உறவு மனிதர்களுக்குத் தேனாக இனிப்பதால் இதற்குத் தேனிலவு என்று மிகப் பொருத்தமாகவே பெயரிட்டுள்ளனர்.

இந்த இன்பம் தேனைத் தருகின்ற அந்தத் தேனீக்களுக்கு இருக்காதா? அதற்கும் உண்டு! ஆனால் ஒரு வித்தியாசம்!

மனிதர்களுக்கு மத்தியில் திருமணத்தின் மூலம் மலர்கின்ற உடலுறவு வெறுமனே உடல் ரீதியாக மட்டும் அமைந்து விடுவதில்லை. அவர்களுடைய உள்ளங்களுக்கு மத்தியில் தொடர்பை ஏற்படுத்தும் பாசக் கயிறாக அமைகின்றது.

திருமணத்திற்குப் பின் பிறக்கும் குழந்தைகள் அந்தப் பாசக் கயிற்றை மேலும் முறுக்கேற்றி பலப்படுத்தி விடுகின்றனர். அந்தப் பிள்ளைகள் பெரியவர்களாகி அவர்களுக்குத் திருமணம், குழந்தைகள் என்று திருமண வாழ்வு ஒரு வரலாற்றைப் படைத்து விடுகின்றது.

ஆனால் தேனீக்களின் உடலுறவு அப்படி அமைவதில்லை. அதிலும் குறிப்பாக, பல்லாயிரக்கணக்கான தாவர இனங்களுக்கு மத்தியில் மகரந்தச் சேர்க்கை என்ற திருமண உறவை ஏற்படுத்துகின்ற இந்தத் தேனீக்களின் திருமண வாழ்க்கை மிகவும் பரிதாபத்துக்குரியதாக அமைந்திருக்கின்றது.

மனிதர்களின் மண வாழ்வைப் போன்று சுக முடிவில் அமைவதில்லை. சோக முடிவில் அமைந்து விடுகின்றது. இது எல்லாம் வல்ல அல்லாஹ்வின் ஏற்பாடு!

உடலுறவும் உயிர் துறவும்

நமது விழிப் பார்வைகளை வியப்புடன் பார்க்க வைக்கும் அந்த விந்தையை இப்போது பார்ப்போம்.

முட்டையிலிருந்து வெளி வருவதற்கு முன்பாகவே ராணித் தேனீயானது, தான் வெளி வரப்போவதாக ஓர் அறிக்கை விடுகின்றது. இதன் பின் முட்டையிலிருந்து ராணித் தேனீ வெளிவருகின்றது.

வந்த பின் மறு அறிக்கை ஒன்று வெளியாகின்றது. அதற்கு ஆங்கிலத்தில் டஒடஒசஏ என்று பெயர். இந்த அறிக்கை, முட்டைக்குள் கருவாக இருக்கும் போட்டி ராணிக்களுக்குப் போய்ச் சேருகின்றது. ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் இளைய ராணித் தேனீக்கு அவை பதிலும் அளிக்கின்றன. அதற்கு ணமஆஈஃஒசஏ என்று பெயர்.

ராணித் தேனீயின் முதல் வேலை முட்டையிலிருந்து வெளியே வந்த மற்ற குஞ்சு ராணித் தேனீக்களைக் கொல்வதாகும். அடுத்தக்கட்ட வேலை, முட்டைக்குள் பொரியாமல் இருக்கும் குஞ்சுகளைக் கொல்வதாகும். தன்னைப் பெற்றெடுத்த மூத்த ராணித் தேனீயின் கதையையும் முடிக்காமல் விடுவதில்லை.

அதன் பின்னர் தான் ராணித் தேனீ, தேனிலவுக்குத் தயாராகின்றது. ஆண் தேனீக்கள் சங்கமிக்கும் பகுதிக்கு ராணித் தேனீ வருகையளிக்கின்றது. அங்கு அந்தரத்தில் தேன் கூட்டிலிருந்து சுமார் முப்பது அடி உயரத்தில் ஆண் தேனீ, ராணித் தேனீயிடம் உறவு கொள்கிறது. அப்போது ராணித் தேனீயின் வயது 9 நாள்! உறவு கொண்ட மாத்திரத்திலேயே ஆண் தேனீயின் அடிவயிறு கிழிந்து மல்லாக்க விழுந்து இறந்து விடுகின்றது. ஏன்? அது தன் உறுப்பை, ராணித் தேனீயிடம் செலுத்திய பிறகு அதைத் திரும்ப எடுக்க முடிவதில்லை. காரணம் அது வெளியே எடுக்க முடியாத அளவுக்கு அம்பு போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பது தான். அதிலுள்ள கடைசிச் சொட்டு விந்துத் துளி ராணித் தேனீயின் கர்ப்பக் குழாயில் இறங்கும் வரை அதிலேயே ஊடுறுவி நிற்கின்றது. இது போன்று மற்ற ஆண் தேனீக்களும் ராணித் தேனீயிடம் உடலுறவு கொள்கின்றன. அவ்வாறு உடலுறவு கொள்வதற்கு முன்னால் அங்கு ஏற்கனவே பதிந்திருக்கும் ஆண் தேனீயின் உறுப்பை அகற்றிக் கொள்கிறது. அதன் பின் முந்தைய ஆண் தேனீயைப் போன்றே இதுவும் உடலுறவு கொண்டு உயிரை மாய்க்கின்றது. இப்படி சுமார் 10க்கும் மேற்பட்ட தேனீக்கள் உடலுறவு கொள்கின்றன. உண்மையில் இது அல்லாஹ்வின் படைப்பில் விந்தையும் விநோதமும் ஆகும்.

உடலுறவின் போது ஆண் தேனீக்களிடமிருந்து செலுத்தப் படுகின்ற விந்தின் அணுக்கள் ராணித் தேனீயின் கருக்குழாயில் சேமிக்கப்படுகின்றன. சேமிக்கப்படும் விந்து அணுக்களின் அளவு 90 மில்லியன்கள். இவற்றில் சுமார் ஏழு லட்சம் விந்தணுக்கள் மட்டும் ராணித் தேனீயின் உடற்கூறில் உள்ள ஒரு தனிப் பையில் சேமிக்கப்படுகின்றது. இந்தச் சிறப்புப் பைக்கு நடஊதஙஆபஐஊஈஆ என்று பெயர்.

இவ்வாறு கருவுற்ற பின்னர் இன்னொரு முறை ஆண் தேனீயுடன் உடலுறவு கொள்ள முனைப்பு காட்டுவதில்லை.

சேமிக்கப்பட்ட இந்த விந்தணுக்கள் அழிந்து போகாமல் இருப்பதற்காக ராணித் தேனீயின் உடலுக்குள்ளாகவே புரதச் சத்து அமைக்கப்பட்டுள்ளது. இது அந்த விந்தணுக்கள் அழுகிப் போகாமல் பாதுகாக்கின்றது.

இப்படி ஒரு பாதுகாப்பைப் பெற்ற ராணித் தேனீ, இல்லை! இறைவனின் அதிசயமிக்க ராட்சத இயந்திரம் விந்தைச் சுமந்த பத்து நாட்களுக்குப் பின் தேன் கூட்டுக்குள் முட்டையிட வருகின்றது. வந்ததும் கண்ட இடத்திலும் கொட்டி விட்டுச் செல்கின்ற குப்பை லாரி போன்று அல்லாமல் கூட்டின் ஒவ்வொரு அறைக்கும் வருகையளித்து, அறையின் மறு முனை வரை பார்த்து, தூய்மையாகவும் துப்புரவாகவும் இருக்கும் அறையில் தான் முட்டையிடுகின்றது. தன் மனதிற்குத் திருப்தியடையாத வரை அது அங்கு முட்டையிடுவதில்லை. இதற்காக ராணித் தேனீ அதிகக் கவனம் எடுத்துக் கொள்கிறது.

அறையின் தூய்மையை உறுதி செய்த பின் பசை போன்ற ஒரு திரவத்தை முதலில் சுரக்கின்றது. தான் இடுகின்ற முட்டை அந்தப் பசையில் ஒட்டிக் கொள்வதற்காக இந்தத் திரவத்தைச் சுரக்கின்றது. ஒவ்வொரு அறைக்குள்ளும் சென்று இவ்வாறு நின்ற நிலையிலேயே முட்டையிடுகின்றது.

24 மணி நேரமும்   இயங்கும் ராணி

ஒரு நாளில் 24 மணி நேரமும் சுமார் இரண்டாயிரம் முட்டைகளை இட்டுக் கொண்டேயிருக்கின்றது. இந்த வேளையில் ராணித் தேனீக்கு ஓய்வே இல்லை. உணவு உண்பதற்குக் கூட நேரமில்லை. மனித வாழ்வில் தாய் தான் தன் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டக் கண்டிருக்கிறோம். ஆனால் தேனீயின் வாழ்வில் பிள்ளைகள் தான், அதாவது பாட்டாளித் தேனீக்கள் தான் ராணித் தேனீக்கு உணவு ஊட்டுகின்றன. ஒவ்வொரு கூட்டிலும் முட்டையிட்ட பிறகு இந்த உணவூட்டும் வைபவம் நடக்கின்றது. அத்துடன் அது கழிக்கின்ற கழிவுகளையும் பாட்டாளித் தேனீக்கள் சுத்தம் செய்கின்றன.

இப்படி எத்தனை நாட்கள் முட்டையிடுகின்றது? அதன் ஆயுட்காலமான சுமார் ஐந்தாண்டுகள் வரை! தேனீயின் சரமாரியான இந்த சந்ததிப் பெருக்கம் அல்லாஹ்வின் படைப்பாற்றலைப் பறைசாற்றுகின்றது. இது ஓர் அபாரமான, அற்புதமான படைப்பு என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இந்த அற்புதப் படைப்பின் அதிசயங்களைத் தொடர்ந்து பார்ப்போம்.

நாள் ஒன்றுக்கு 1500 அல்லது 2000 முட்டைகள் வீதம் ஆண்டுக்கு லட்சக்கணக்கான, மில்லியன் கணக்கான முட்டைகளை இடுகிறது. இவ்வளவு முட்டைகளை இடுவதற்காகத் தான் ராணித் தேனீயின் கருக்குழாயிலும், இதற்கென தேனடையில் வைக்கப்பட்டிருக்கும் பையிலும் மில்லியன் கணக்கில் விந்தணுக்கள் சேமிக்கப்படுகின்றன.

ஒரு நாளைக்கு ராணித் தேனீ இடுகின்ற முட்டைகளின் கனம் ராணித் தேனீயின் உடலை விடக் கனமானது என்பது அதிசயிக்க வைக்கும் உண்மையாகும்.

ராணித் தேனீயின் உடற் கூட்டுக்குள்ளேயே முட்டைகள் இருக்கின்றன. முட்டைக் கருக்களும் இருக்கின்றன. இவ்விரண்டில் ஒன்று மற்றொன்றுடன் கலந்து விடுவதற்கும் அல்லது தடுப்பதற்கும் வசதியாக தேனீயின் உடற்கூட்டில் ஒரு வால்வு இருக்கின்றது.

ராணித் தேனீயானது பாட்டாளித் தேனீக்கான அறையில் முட்டை யிட்டு, அதனுடன் விந்தணுவையும் சேர்த்து விட்டால் அது பாட்டாளித் தேனீயாக உருவெடுக்கின்றது. விந்தணுக்கள் இல்லாமல் வெறுமனே முட்டை மட்டும் இட்டால் அது ஆண் தேனீயாக உருவெடுக்கின்றது.

இவ்வாறு தேனீயின் இனப் பெருக்கத்திலுள்ள ஒவ்வொரு அம்சமும், அதன் அறிவாற்றலும் நாம் அதிசயிக்கத்தக்க வகையில் அமைந்திருக்கின்றன. மனித இனத்தின் பகுத்தறிவை மிஞ்சுகின்ற வகையில் அமைந்துள்ள தேனீக்களின் இந்த இனப்பெருக்க முறையைக் காணும் போது, இது நிச்சயமாக அனைத்தையும் அறிந்த ஓர் இறைவன் வழங்கிய ஆற்றல் தான் என்று நாம் அவனிடமே  நமது வியப்பைத் தெரிவிக்க வேண்டியுள்ளது.

அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான். (அல்குர்ஆன் 23:14) என்று திருக்குர்ஆன் கூறுவது போல் அவன் அழகிய படைப்பாளனே!

வளரும் இன்ஷா அல்லாஹ்