தடம் புரண்ட டவுண் காஜி

தடம் புரண்ட டவுண் காஜி

தமிழகத்தில் கடந்த 07.11.10 அன்று சந்தேகத்திற்குரிய நாளில் பிறை எங்குமே தென்படாததைத் தொடர்ந்து துல்கஅதா மாதத்தை 30ஆகப் பூர்த்தி செய்து, 18.11.10 வியாழன் அன்று ஹஜ்ஜுப் பெருநாள் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்புப் செய்தது.

ஆனால், எந்த ஒரு மார்க்க நெறிமுறையையும் பேணாத தமிழக டவுண் காஜியோ மஹாராஷ்டிர மாநிலம் மாலேகானில் பிறை பார்த்ததன் அடிப்படையில் தமிழகத்தில் 17.11.10 அன்று பெருநாள் என்று அறிவிப்புச் அறிவித்தார். தமிழக டவுண் காஜியின் அறிவிப்பு எந்த ஒரு நெறிமுறையும், மார்க்க வரைமுறையும் அற்ற அறிவிப்பு என்பதை,  பிறை குறித்த டவுண் காஜியின் கடந்த கால அறிவிப்புகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் விளங்கிக்கொள்ளாலாம்.

கடந்த ரமளான் மாதம், தலைப் பிறை தமிழகத்தில் தெரிவதற்கு முன்பே கேரள மாநிலத்தில் தென்பட்டது. இப்போது தமிழகத்திற்கு அருகிலுள்ள கர்நாடகாவையும் தாண்டி மஹாராஷ்டிராவிற்குத் தாவிய டவுண் காஜி, சென்ற ரமளானில் கேரள மாநிலத்தில் பார்க்கப்பட்ட பிறையை நிராகரித்தார். தமிழகத்தில் பிறை பார்க்கப்பட்டால் தான் ஏற்றுக் கொள்வேன் என்று கூறிவிட்டு இப்போது மஹாராஷ்டிராவை ஆதாரமாகக் கொண்ட மர்மம் நமக்கு விளங்கவில்லை.

உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த டவுண் காஜியின் பேட்டி

”சமுதாய ஒற்றுமை” என்ற மாத இதழுக்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தமிழகத்திலிருந்து பிறை பர்க்கப்பட்டதாக தகவல் கிடைத்தால் ஏற்றுக் கொள்வேன் என்றும், ”இந்தியாவில் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திரா காந்தி அவர்கள் தனது ஆட்சியின் போது ஹிலால் கமிட்டி ஒன்றை ஏற்படுத்தினார்கள். சில மார்க்க காரணங்களினால் அதன்படி செய்ய முடியாமல் போனது” என்று அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவதற்கு சில மார்க்க காரணங்கள் தடையாக இருக்கின்றன என்று தெரிவித்துவிட்டு, தற்போது அவர் சொன்ன நிலைபாட்டிற்கு அவரே முரண்பட்டு மஹாராஷ்டிரா பிறையை அறிவித்து மக்களை குழப்பியுள்ளார். அவர் கொண்டிருந்த நிலைப்பாட்டிலிருந்து  அவரே குழம்பி விட்டு, மக்களையும் குழப்பிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமையகத்திலிருந்து மாநிலச் செயலாளர்கள் கானத்தூர் பஷீர் மற்றும் அப்துல் ஜப்பார் ஆகியோர் கடந்த 15.11.10 திங்கள் அன்று மாலை 5 மணிக்கு டவுண் காஜியை நேரில் சந்தித்து விளக்கம் கேட்கச் சென்றனர்.

டவுண் காஜியின் அற்புத (?) விளக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகளை அவரது அலுவலகத்தில் சந்தித்த டவுண் காஜியிடம், எந்த அடிப்படையில் 17.11.10 அன்று பெருநாள் என்று அறிவித்தீர்கள்? என்று கேட்டதற்கு, “தமிழகத்தில் எங்கும் பிறை தென்படவில்லை, மஹாராஷ்டிர மாநிலம் மாலேகானில் பிறை தென்பட்டதன் அடிப்படையில் தான் அறிவித்தேன். ஆந்திரா, கர்நாடகா என்று இந்தியாவில் எங்கு பிறை தென்பட்டாலும் அதை அறிவிப்பேன்” என்று அவர் கடந்த காலத்தில் கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கு மாற்றமாகவும், அவர் அளித்த பேட்டிக்கு மற்றமாகவும் உளறியுள்ளார்.

“அப்படியானால் கடந்த காலங்களில் டெல்லியில் பார்க்கப்பட்ட பிறையை ஏற்று பெருநாள் அறிவிக்காதது ஏன்?” என்று நமது நிர்வாகிகள் கேள்வி எழுப்பியதற்கு, டெல்லியில் இருந்து வரும் அறிவிப்பை ஏற்க மாட்டேன் என்று ஒரு அற்புத (?) விளக்கத்தை கூறியுள்ளார். “டெல்லி என்பது இந்தியாவில் தானே உள்ளது, உங்கள் நிலைப்பாட்டின் படி அது என்ன வேறு நாடா?” என்று நமது நிர்வாகிகள் கேட்டதற்கு, “டெல்லியைப் பொறுத்தமட்டிலும் அவர்கள் தாங்களாக அறிவிப்பது கிடையாது அவர்கள் கலகத்தாவை வைத்து அறிவிப்பார்கள்” என்ற அறிவிப்பூர்வமான விளக்கத்தை கூறியுள்ளார். கல்கத்தாவும் இந்தியாவில் தானே உள்ளது என்ற நமது நிர்வாகிகளின் கேள்விக்குத் தகுந்த பதில் இல்லை.

“இந்த முறை பெருநாளை நாங்களும் அறிவித்து விட்டோம், நீங்களும் அறிவித்து விட்டீர்கள். எனவே அடுத்த வருடம் 6 மாதங்களுக்கு முன்பாகவே வாருங்கள் நாம் அமர்ந்து பேசி முடிவெடுக்கலாம்” என்று சமாளிப்புப் பதில் தான் அவரிடத்திலிருந்து வந்ததே தவிர, ஒரு மார்க்கக் கடமையை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்வை அஞ்சி முடிவெடுக்க வேண்டுமே என்ற பொறுப்புணர்வுடன் அவர் நடந்து கொள்ளவில்லை.

இதைப் போன்று கடந்த சில வருடக்களுக்கு முன்பாக தமிழகத்தைத் தாண்டி ஒரு பிறை அறிவிப்பைச் செய்த டவுண் காஜியிடம் அப்போது தலைமைப் பொறுப்பிலிருந்தவர்களும், பாபாஜான் என்ற சகோதரரும் நேரில் சென்று விளக்கம் கேட்டு, “உங்களது மத்ஹபு சட்டத்தில் கூட நீங்கள் கூறுவது போல இல்லை. தத்தமது பகுதியில் பிறை பார்த்து தான் பிறையை அறிவிக்க வேண்டும்” என்ற ஆதாரத்தை காட்டினார்கள்.

அப்போது “இனிவரக் கூடிய காலங்களில் தமிழகத்தில் காணப்படும் பிறையை மட்டும் தான் ஏற்றுக் கொள்வேன். தமிழகத்திற்கு வெளியிலிருந்து வரும் அறிவிப்புகளை ஏற்க மாட்டேன்” என்று ஒப்புக்கொண்டவர் தான் இந்த டவுண் காஜி என்பதையும் நாம் சுட்டிக் காட்டிக் கொள்கிறோம்.