தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி!

தமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி!

தவ்ஹீது ஜமாஅத் தனது நெடிய வரலாற்றுப் பயணத்தின் இடையே,    மே 10, 11 ஆகிய தேதிகளில் ஒரு மாநாட்டைக் காணவுள்ளது.

இது தவ்ஹீது ஜமாஅத்தின் வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் என்ற பெயரில் அமைப்பு கண்ட பிறகு நாம் காணும் முதல் மாநாடாகும்.

இதற்கு முன்பாக நாம் இறையருளால் பல மாநாடுகளைக் கண்டிருக்கிறோம். அவற்றில் திருச்சி, நாகர்கோவில், மேலப்பாளையம், மதுரை மாநாடுகள் திருப்புமுனையாக அமைந்தவை.

இம்மாநாடுகளில் மதுரை மாநாட்டைத் தவிர மற்றவை, நாம் வளர்த்த ஒரு இயக்கத்தின் பெயரில் நடத்தப்பட்டவை. அந்த இயக்கம் சமுதாய, அரசியல் ரீதியான பிரச்சனைகளில் தலையிடாமல் தூரப் போனது.

சமுதாய, அரசியல் ரீதியிலான பிரச்சனைகளையும் நாம் கையில் எடுத்தாக வேண்டும் என்ற நம்முடைய வேண்டுகோள் செவிடன் காதில் ஊதிய சங்கானது. பற்பல ஊர்களில் பற்பல அமர்வுகள்! சமுதாயப் பிரச்சனைகளைக் கையில் எடுப்பது காலத்தின் கட்டாயம், ஒட்டுமொத்த தமிழகத்தில் அரசியல் ரீதியிலான பிரச்சனைகளில் முஸ்லிம்களுக்கு ஒரு வெற்றிடம் உள்ளது; அதை நம்மைத் தவிர வேறு யாரும் நிரப்ப முடியாது என்று விளக்கி, அதற்குக் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இன்னின்ன ஆதாரங்கள் என்று சமர்ப்பணம் செய்தோம்.

ஒவ்வொரு அமர்விலும் ஆமாம், ஆமாம் என்று தலையாட்டி விட்டு, அமர்விலிருந்து அப்பால் சென்றதும் சறுகி விடுவதே அந்த இயக்கத் தலைவரின் வாடிக்கையாக இருந்தது.

இவர்கள் அழைப்புப் பணி செய்வது அரபு நாட்டுச் சம்பளத்திற்கு செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பதற்குத் தான்!

“சமுதாயப் பிரச்சனைகளில் தலையிட்டால் உளவுத் துறையின் ஆந்தைப் பார்வைக்கு ஆளாக நேரிட்டு அபாயத்தில் சிக்கிக் கொள்ள வேண்டும்! அது நம்முடைய அரபக வருவாய்க்கு ஆப்பு வைத்து விடும். அதனால் நமக்கு ஏன் இந்த வம்பு?”

இது தான் இவர்களின் செயல்பாடுகளிலிருந்து முடிவாக நாம் கண்டதும், கவனித்ததும் ஆகும்.

அதனால் ஆன்மீகத்தை மட்டும் வைத்துக் காலத்தைத் தள்ளுவோம் என்பது தான் அவரது கணக்கு!

சத்தியப் பணிக்கு ஓரமைப்பு

சமுதாயப் பணிக்கு ஓரமைப்பு

உலகாதாயத்தை மட்டும் லட்சியமாகக் கொண்ட இவர்களிடம் மறுமை லாபத்தை எதிர்பார்ப்பது இலவு காத்த கிளி கதை தான் என்றெண்ணி, சமுதாயப் பாதைக்கு ஓர் அமைப்பு, சத்தியப் பாதைக்கு அதாவது ஏகத்துவ அழைப்புப் பணிக்கு ஓர் அமைப்பு என்று கண்டோம்.

சமுதாயப் பணிக்காகக் கண்ட இயக்கம் காலப் போக்கில் தவ்ஹீதுப் பணியை ஜீரணிக்கவில்லை. சத்தியத்திற்குக் கிடைத்த கிரெடிட்டை, பலனை மட்டும் அனுபவித்து விட்டு, சாறை உறிஞ்சி விட்டு நம்மை சக்கையாக வெளியே தள்ளியது. முகத்துக்கு நேராகப் புகழ்ந்து தள்ளிய அந்த முனாஃபிக்குகள் முதுகில் குத்தினார்கள். ஏகத்துவம் எனும் வட்டத்திற்குள் நாங்கள் வர மாட்டோம்; நாங்கள் வகுக்கும் வட்டத்திற்குள் தான் ஏகத்துவம் வர வேண்டும் என்ற நிலைபாட்டை நிறுவினர்.

இனி ஈரமைப்பில்லை! ஓரமைப்பு தான்!

இது தான் நம்மைச் சிந்திக்க வைத்தது. சத்தியத்திற்கென்று ஒரு அமைப்பைக் கண்டோம். அதில் மதனிகள் சம்பளத்தைக் கவனத்தில் கொண்டு சமுதாயப் பிரச்சனைகளை மறுத்தார்கள். சமுதாயத்துக்கென்று ஒரு அமைப்பைக் கண்டோம். அவர்கள் சத்தியத்திற்குக் கதவைச் சாத்துகிறார்கள். இனி மேல் நமக்கு முன் இருப்பது, சத்தியத்திற்கு ஓரமைப்பு, சமுதாயத்திற்கு வேறமைப்பு என்ற அத்தியாயத்திற்கு முடிவுரை எழுதி விட்டு, இரண்டிற்கும் ஒரே அமைப்பு என்ற புதிய அத்தியாயத்தைத் துவங்க வேண்டியத தான் என்று முடிவெடுத்தோம்.

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அது தான் இன்று நம்மை அரவணைத்துக் கொண்டிருக்கின்ற ஓர் இயக்கம். அந்தப் பேரியக்கம் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!

இப்போது சத்தியம், சமுதாயம் என்ற இரு சக்கரங்களுடன் இந்த இயக்கம் தமிழகத்தில் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த வேளையில் ஒரு வேதனையையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

சமுதாயப் பிரச்சனையை நாங்கள் கையில் எடுக்க மாட்டோம் என்று கூறிய அந்த இயக்கமும், ஏகத்துவம் எங்களுக்கு இரண்டாம் பட்சம் என்று நம்மை வெளியே அனுப்பிய பங்காளி இயக்கமும் நாம் வெளியே வந்த பிறகு, பக்காவாகக் கூட்டாளிகளாகிக் கொண்டன. எதற்கு? நம்மை எதிர்ப்பதற்கு!

அத்தனையையும் தாண்டித் தான் அல்லாஹ்வின் மகத்தான கருணையால் சத்தியப் பணிகளையும் சமுதாயப் பணிகளையும் ஒருங்கே செய்து தவ்ஹீது ஜமாஅத் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றது

சத்திய, சமுதாயப் பாதைகளில் நாம் கண்ட சாதனைகளை இங்கே நாம் காணவிருக்கின்றோம்.

முதலில் சத்தியப் பாதையில் நாம் கண்ட சாதனைகளைப் பார்ப்போம்.

சாதனைகள் என்று நாம் குறிப்பிடும் போது இந்தச் சாதனைகள் 1980களுக்குப் பிந்தைய காலத்திலிருந்தே துவங்குகின்றன. இயக்கங்கள் பலவாக இருந்தாலும், அன்றிலிருந்து இன்று வரை எடுத்து வைக்கும் கொள்கை ஒன்று தான். அந்தக் கொள்கையைத் தடம் புரளாமல் எடுத்துச் சொல்லும் ஆட்களும் அதே ஆட்கள் தான். அதனால் 80களிலிருந்தே இந்தச் சாதனைப் பட்டியலைத் தொடங்குவதற்கு நமக்கு எல்லா வகையான தார்மீக உரிமையும் உள்ளது என்ற விளக்கத்தைத் தெரிந்து கொண்டு இந்த சாதனைப் பட்டியலைப் பார்வையிடச் செல்வோம்.

தலைகீழாகக் கிடந்த ஷரீஅத் வரைபடம்

1980க்கு முன்பு தமிழகத்தில் தவ்ஹீது என்ற வார்த்தை கூட அறிமுகமாகி இருக்கவில்லை. ஆனால் ஆலிம்களிடம் அறிமுகமாகி இருந்தது. இன்றைக்கு நாம் விளங்கி வைத்திருக்கும் அர்த்தத்தில் அல்ல! “இறந்து விட்ட எந்தப் பெரியாரிடமும் உதவி தேடக் கூடாது; அவர்கள் ஒரு போதும் செவியேற்க மாட்டார்கள்; அல்லாஹ் ஒருவனிடம் மட்டுமே பிரார்த்திக்க வேண்டும்’ என்று நாம் இன்று விளங்கி வைத்திருக்கும் அர்த்தத்தில் அன்று இந்த வார்த்தை அறிமுகமாகவில்லை. இறந்து விட்ட பெரியார்களிடமும் பிரார்த்திக்கலாம், அதுவும் தவ்ஹீதில் உள்ளது தான் என்று விளங்கி வைத்திருந்தோம்.

84, 85 கால கட்டத்தில் சங்கரன்பந்தலில் நாங்கள் பணியாற்றிக் கொண்டிருந்த போது அந்த மதரஸாவுக்கு அரபகத்திலிருந்து ஒரு நூல் தொகுப்பு வந்து இறங்கியது. ஒன்பது அல்லது பத்து பாகங்கள் கொண்ட இந்தத் தொகுப்பு புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய நூற்களுக்குரிய அட்டவணையாகும்.

இந்நூற்களில் இடம் பெற்றுள்ள ஓர் அரபி வார்த்தை தெரிந்திருந்தால் போதும்! அந்த வார்த்தை இந்த  நூற்களில் எந்தப் பாடத்தில், எந்தப் பாகத்தில், எந்தப் பக்கத்தில், எத்தனை இடங்களில் பதிவாகியுள்ளது என்று அந்த அட்டவணை துல்லியமாகச் சொல்லி விடும்.

கம்ப்யூட்டர் இல்லாத காலத்தில் அந்த அட்டவணை நூல் ஒரு புதிய புரட்சிப் படைப்பு தான். இத்தனைக்கும் அந்த நூலின் ஆசிரியர் ஒரு யூதர்.

கற்ற இஸ்லாம் ஒன்று!

கண்ட இஸ்லாம் வேறு!

அந்த அட்டவணையில் ஒரு சோதனை முயற்சியாக கப்ர் என்ற வார்த்தையை எடுத்துக் கொண்டு அட்டவணை காட்டும் பாகம், பக்கத்தில் தேடினோம்.

பாகம், பக்கமெல்லாம் சரியாக இருந்தது.

ஆனால் எங்கள் பார்வைக்குக் கிடைத்த கப்ர் தொடர்பான ஹதீஸ்கள் எங்களை அதிர்ச்சியில் உறைய வைத்தன.

படிக்கும் காலத்தில் பார்வைக்குத் தட்டுப்படாத ஹதீஸ்கள்… பல ஆயிரம் வோல்ட்டேஜ் மின்சாரம் தாக்கிய உணர்வை அடைந்தோம்.

அதுவும் அந்த ஹதீஸ்கள் புகாரி, முஸ்லிம் போன்ற நூற்களில்!

இவை நமக்குத் தெரியாமல் ஆகி விட்டனவே என்று அதிர்ந்தோம். புகாரி, முஸ்லிம் போன்ற நூற்களிலும் யூதர்களின் கைவரிசை நுழைந்து விட்டதா? என்றெல்லாம் ஐயப்பாடு எழுந்தது.

ஒருவாறாக உறைவிலிருந்து ஒரு சுய உணர்விக்கு வந்தோம். அப்போது எங்களுக்குத் தெரிந்த உண்மை, மார்க்கம் தூய்மையான வடிவில் தரப்படவில்லை என்பது தான்.

கலப்பற்ற மார்க்கம் கலப்படமாகி உள்ளது. ஷரீஅத்தின் வரைபடம் தலைகீழாக மாறிக் கிடக்கின்றது. இந்த நிலையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற வைராக்கியம் ஏற்பட்டது.

அப்போதிருந்து சத்தியப் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தலை கீழாகக் கிடக்கும் ஷரீஅத் வரைபடத்தை, தலை மேலாக மாட்ட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினோம். இன்றும் அந்தப் பயணத்தில் தொடர்ந்து செல்கிறோம்.

மார்க்கத்தை அதன் தூய வடிவத்தில் எப்படியெல்லாம் அமல்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

தர்ஹாக்கள் – சாபத்திற்குரிய தலங்கள்

உம்மு ஹபீபா அவர்களும் உம்மு சலமா அவர்களும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைக் குறித்து (என்னிடம்) பேசினார்கள். மேலும் அவ்விருவரும், நபி (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும் போது அவரது சமாதியின் மீது வணக்கத்தலம் ஒன்றைக் கட்டி அதில் (அவருடைய) அந்த உருவங்களை வரைவார்கள். அவர்கள் தாம் மறுமை நாளில் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 427

கப்ருகள் அருகில் தொழத் தடை

நீங்கள் கப்ருகள் மீது அமராதீர்கள். கப்ருகளை நோக்கித் தொழாதீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமர்ஸத் அல்ஃகனவீ

நூல்: முஸ்லிம் 1613

கப்ருகளைக் கட்டாதீர்

கப்ரு பூசப்படுவதையும் அதன் மீது அமர்வதையும் அதைக் கட்டுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 1610

கப்ருகள் பூசப்படுவதையும், அதன் மீது எழுதப்படுவதையும், அதன் மீது கட்டடம் எழுப்புவதையும் அதை மிதிப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: திர்மிதீ 972

தரைமட்டமாக்கப்பட வேண்டிய தர்ஹாக்கள்

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டு விடாதீர்; (தரையை விட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அசதீ

நூல்: முஸ்லிம் 1609

எங்களை அன்று அதிர்ச்சியில் உறைய வைத்த ஹதீஸ்கள் இவை தான்! இவை அன்றைய தினம் எங்களுக்குத் தெரியாதவை. அந்த அளவுக்கு ஹதீஸ்கள் மறைக்கப்பட்டு இருந்தன. இந்த ஹதீஸ்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து இதன் படி மக்களை இன்று செயல்பட வைத்திருக்கின்றோம், அல்ஹம்துலில்லாஹ்!

கப்ருகள், விண்ணைத் தொடும் மினாராக்களுடன் கட்டப்பட்ட தர்ஹாக்கள் தகர்க்கப்படவும், தரை மட்டமாக்கப்படவும் வேண்டிய பணியை மட்டும் நம்மால் செய்ய முடியவில்லை. காரணம், இது ஆட்சியாளர்களால் செய்யப்பட வேண்டியதாகும். எல்லோரும் மொத்தமாக ஏகத்துவத்தில் இணைந்த சகோதரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கப்ருகளைத் தரை மட்டமாக்கிய வரலாறும் உண்டு.

ஆனால் அதே சமயம் தர்ஹாக்களே கதி என்று குடியிருந்தவர்கள் எல்லாம் தவ்ஹீதே கதி என்றாகி விட்டனர். குறிப்பாகப் பெண்களிடம் இத்தகைய மாற்றம் ஏற்பட்டது அல்லாஹ்வின் மகத்தான கருணையாகும்.

பெண்கள் தான் அதிகமாக தர்ஹா வழிபாட்டில் மூழ்கிக் கிடந்தவர்கள். அவர்கள் இன்று தவ்ஹீதைத் தங்கள் உள்ளங்களில் ஏந்திக் கொண்டு தவ்ஹீதுக் கூட்டங்களில் தேனீக்கள் போன்று மொய்க்கும் காட்சி தமிழகம் காணாத வரலாற்றுப் புரட்சியாகும்.

தலாக் – நடைமுறைக்கு வந்த நபிவழிச் சட்டம்

மனைவி மீது ஆத்திரப்பட்டு, அவசரப்பட்டு ஒருவர் ஒரே மூச்சில் முத்தலாக் சொல்லி விட்டால், அவள் ஒரேயடியாக விவாகரத்தாகி விடுவாள். இனி அவளை இன்னொருவர் மணமுடித்து, விவாகரத்துச் செய்த பின்னர் தான் முதல் கணவர் திருமணம் முடிக்க வேண்டும்.

இது மத்ஹபுகள் கூறும் முத்தலாக் முறையாகும்.

காலங்காலமாக பல நூற்றாண்டு காலமாக மக்களிடமிருந்த இந்த மத்ஹப் தலாக் முறையை மயானத்திற்கு அனுப்பி விட்டு, குர்ஆன் கூறும் தலாக்கை மக்களிடம் நிலை நாட்டினோம்.

இதனால் கசங்கிப் போகவிருந்த மங்கையர் மறுவாழ்வு பெற்றனர். கருகிப் போகவிருந்த அவர்களது வாழ்வு மறுமலர்ச்சி பெற்றது. இங்கே மார்க்க அடிப்படையிலான தலாக்கை சுருக்கமாக உங்கள் பார்வைக்குத் தருகிறோம்.

தலாக் கூறிட ஆண்களுக்கு மூன்று வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திய பின் அவர்கள் திரும்பவும் சேர்ந்து வாழலாம். மூன்றாவது வாய்ப்பையும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் சேர்ந்து வாழ முடியாது. இது தான் தலாக் கூறுவதற்கு இஸ்லாம் காட்டும் நெறியாகும்.

விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம்.

அல்குர்ஆன் 2:229

இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு தடவை என்பது திரும்பப் பெறுவதற்குரிய இரண்டு தலாக்குகள் ஆகும். அதாவது இவ்விரு தலாக்குகளுக்குப் பிறகு மூன்றாவது முறை தலாக் விட்டால் அவர் தனது மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ள முடியாது. எனவே இத்தலாக் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ வேண்டும் என்பதை இந்த வசனம் விளக்குகிறது.

தடவை என்பதன் பொருளைத் தவறாக விளங்கிக் கொண்டதால் ஒருவன் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் என்றோ, முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறினால் அவன் மூன்று வாய்ப்புக்களையும் பயன்படுத்தி விட்டான், அவன் மனைவியை நிரந்தரமாகப் பிரிந்து விட்டான் என்று மத்ஹபுகளில் சட்டம் இயற்றி வைத்துள்ளார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இரண்டு தலாக்குகள் என்று கூறவில்லை. மாறாக தலாக் என்பது இரண்டு தடவைகள் என்று கூறுகின்றான். குறிப்பிட்ட காலக் கெடு முடிவடையாத வரை ஒரு தடவை என்பது பூர்த்தியாகாது.

ஒருவர் தன் மனைவியை நோக்கி ஒரே சமயததில், உன்னை மூன்று முறை தலாக் சொல்லி விட்டேன் என்று கூறினாலும் முன்னூறு முறை தலாக் சொல்லி விட்டேன் என்று கூறினாலும் அவர் ஒரு தடவை தலாக் கூறியதாகத் தான் பொருள்.

தடவை என்பதன் பொருளை விளங்கிக் கொள்ள சில உதாரணங்களைக் கூறலாம்.

ஒருவர் ஒரு மணி நேரம் குளித்துக் கொண்டேயிருக்கின்றார். அதன் பிறகு அவர் தலையைத் துவட்டிக் கொள்கிறார். இவர் எத்தனை தடவை குளித்தார் என்று கேட்டால் நாம் ஒரு தடவை என்று தான் கூறுவோம்.

இன்னொருவர் பத்து நிமிடம் குளிக்கின்றார். பிறகு வெளியே வந்து தலையைத் துவட்டிக் கொள்கிறார். மீண்டும் போய்க் குளிக்கின்றார். இப்படியே ஒரு மணி நேரத்தில் 5 தடவை இது போன்று செய்கின்றார். இவர் எத்தனை தடவை குளித்தார் என்று கேட்டால் 5 தடவை என்று கூறுவோம்.

ஒருவர் சாப்பிடுவதற்கு அமர்ந்து 10 இட்லி சாப்பிட்டு விட்டு கை கழுவுகின்றார். இவர் ஒரு தடவை சாப்பிட்டுள்ளார்.

மற்றொருவர் இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டு கை கழுவுகின்றார். பிறகு சிறிது நேரத்தில் மீண்டும் அமர்ந்து இரண்டு இட்லி சாப்பிடுகின்றார். இவர் முன்னவரை விடக் குறைவாகச் சாப்பிட்டிருந்தாலும் இரண்டு தடவை சாப்பிட்டார் என்று தான் கூறுவோம்.

இதை இங்கு குறிப்பிடக் காரணம் ஒரு தடவை என்றால் அதற்கு ஒரு ஆரம்பமும் முடிவும் இருக்க வேண்டும்.

இது போலத் தான் தலாக்கின் தடவை என்பதையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு தலாக் விட்டால் மூன்று மாத விடாய்க்குள்ளாக மீட்டி விட்டால் ஒரு தடவை தலாக் நிறைவேறி விட்டதாகப் பொருள். ஒரு தலாக் கூறி விட்டு, உரிய காலக் கெடுவுக்குள் மீட்டாமல் ஒருவர் ஆயிரம் முறை தலாக் என்று கூறினாலும் அது ஒரு தலாக் தான். ஏனென்றால் ஒரு தடவை என்பது இன்னும் முடிவுக்கு வராத நிலையில் அதை எத்தனை முறை கூறினாலும் ஒரு தடவை தான்.

இது தான் மேலே நாம் சுட்டிக் காட்டிய வசனத்தில் இடம் பெறும் தடவை என்பதன் பொருள்.

இதை வெறும் அறிவுப்பூர்வமாக நாம் சொல்லவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தின் நடைமுறையை ஆராய்ந்து தான் கூறுகின்றோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்தது என்னவெனில், ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் என்றோ, முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறினால் ஒருவன் தலாக் கூறத் தனக்கு வழங்கப்பட்டுள்ள மூன்று வாய்ப்புக்களில் ஒரு வாய்ப்பைத் தான் பயன்படுத்தியிருக்கிறான் என்பது தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது

அறிவிப்பவர்:  இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 2689

நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்ர் (ரலி) காலத்திலும் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் மூன்று ஆண்டு காலத்திலும் மூன்று (தலாக் என்பது) ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று அபுஸ்ஸஹ்பா என்பவர் இப்னு அப்பாஸிடம் கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: தாவூஸ்

நூல்: முஸ்லிம் 2690, 2691

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டிய ஷரீஅத் வரைபடத்தில், முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்துள்ளது.

இதற்கு மாற்றமாக மத்ஹபுகள் கொண்டு வந்த முத்தலாக் முறையை மாற்றி, ஷரீஅத் சட்டத்தை அல்லாஹ்வின் தூதர் காட்டிய முறையில் நடைமுறைப்படுத்தியது தவ்ஹீத் ஜமாஅத்தின் மாபெரும் சாதனையாகும்.

மஸ்ஜிதுக்கு வரும் மகளிர்

தொழுகையை நீட்டித் தொழ வேண்டும் என்று எண்ணி தொழுகையில் நான் நிற்கின்றேன். அப்பொழுது குழந்தையின் அழுகுரலைச் செவிமடுக்கின்றேன். அக்குழந்தையின் தாயை நான் சங்கடப்படுத்துவதை வெறுத்து, உடனே எனது தொழுகையை சுருக்கி விடுகின்றேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: புகாரி 868, 707

வல் முர்ஸலாத்தி உர்பன் என்ற 77வது அத்தியாயத்தை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓதும் போது செவிமடுத்த உம்முல் பழ்லு (ரலி) அவர்கள், “என்னருமை மகனே! இந்த சூராவை ஓதி எனக்கு (பழைய) நினைவை ஏற்படுத்தி விட்டாய். இதுதான் அல்லாஹ்வின் திருத்தூதர் மக்ரிபில் ஓதும் போது நான் செவிமடுத்த கடைசி அத்தியாயமாகும்” என்று கூறினார்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 763, திர்மிதி 283

“(தொழுகையில் இமாம் தவறிழைத்தால்) சுப்ஹானல்லாஹ் என்று கூறுவது ஆண்களுக்கு உரியதாகும். கைதட்டுதல் பெண்களுக்குரியதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1203, திர்மிதி 337

நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தவுடன்  பெண்கள் எழுந்து விடுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்று நேரம் அமர்ந்திருப்பார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)

நூல்: புகாரி 837, 866, 875

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸுப்ஹுத் தொழுது முடிந்தவுடன் பெண்கள் போர்வையால் போர்த்திக் கொண்டு வீடுகளுக்கு புறப்படுவார்கள். இருட்டின் காரணத்தினால் அவர்கள் யாரென அறியப்பட மாட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 867, 372, 578, 872

நபி (ஸல்) அவர்கள் (ஒருநாள்) இஷாவைத் தாமதப்படுத்தினார்கள். பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர் என உமர் (ரலி) அவர்கள் கூறியதும் நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தார்கள். “இப்பூமியில் வசிப்பவர்கள் உங்களைத் தவிர வேறெவரும் இத்தொழுகையை எதிர் பார்த்திருக்கவில்லை” என்றார்கள். அந்த நாட்களில் மதீனாவைத் தவிர வேறெங்கும் தொழுகை நடத்தப்படவில்லை. இஷாவை அடிவானத்தின் செம்மை மறைந்ததிலிருந்து இரவின் மூன்றில் ஒரு பகுதி கழிவது வரை மக்கள் தொழுது வந்தனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 864, 866, 569, 862

“உங்களில் ஒருத்தி பள்ளிக்கு வரும் போது நறுமணம் பூசக் கூடாது” என்று எங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜைனப் (ரலி)

நூல்: முஸ்லிம் 674

“உங்களுடைய மனைவிமார்கள் (தொழுவதற்காக) பள்ளிவாசலுக்குச் செல்ல  உங்களிடம் அனுமதி கோரினால் அவர்களைத் தடுக்காதீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றேன் என் இப்னு உமர் (ரலி) அவர்கள் (தமது மகனுக்கு) கூறினார்கள். (அதற்கு அவருடைய மகன்) பிலால் பின் அப்தில்லாஹ், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் அவர்களைத் தடுப்பேன்” என்று கூறினார். உடனே இப்னு உமர் (ரலி) அவர்கள் அவரை முன்னோக்கி மிக மோசமாகத் திட்டினார்கள். அது போன்று திட்டியதை நான் ஒருபோதும் கேட்டதில்லை. பிறகு “நான் நபியவர்களிடமிருந்து உனக்கு அறிவிக்கின்றேன். நீயோ அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் தடுப்பேன் என்று கூறுகின்றாய்” என்று கூறினார்கள்’

அறிவிப்பவர்: ஸாலிம் பின் அப்தில்லாஹ்

நூல்: முஸ்லிம் 666

இப்னு உமர் (ரலி) அவர்கள், “இரவில் பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடுக்காதீர்கள்” என்று சொன்னதும் இப்னு உமர் (ரலி) அவர்களின் மகனார், “பெண்களை வர விட மாட்டோம் இதை (அப்பெண்கள்) குழப்பம் ஏற்படுத்துவதற்குரிய வாய்ப்பாக ஆக்கிக் கொள்வார்கள்” என்று பதில் சொன;னார். உடனே அவரைக் கடுமையாக வெறுத்தார்கள். “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொல்கிறேன்.  நீ வர விட மாட்டேன் என்கிறாயா?” என்றும் தன் மகனை நோக்கிக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஜாஹித்

நூல்: முஸ்லிம் 670

அடுக்கடுக்காகத் தொடுக்கப் பட்டிருக்கும் இந்த ஹதீஸ்களெல்லாம் மகளிருக்கும் மஸ்ஜிதுக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகின்றன.

ஷரீஅத் வரைபடத்தில் உள்ள இந்தச் சட்டப் பகுதி சமுதாயத்தில் நடைமுறையில் இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பெண்கள் அறவே அனுமதிக்கப் படுவதில்லை. விதிவிலக்காக எங்காவது ஒரு சில பள்ளிகளில் ரமளானில், அதுவும் தனியாக ஜமாஅத் நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கலாம். இது தவிர ஏனைய அனைத்துப் பள்ளிகளிலும் பெண்களுக்குக் கதவு சாத்தப்பட்டுத் தான் உள்ளன.

“பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடை செய்யாதீர்கள். அவர்களது வீடுகளில் தொழுவது அவர்களுக்குச் சிறந்தது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: அபூதாவூத் 480

இந்த ஹதீஸைத் தங்கள் நிலைபாட்டிற்கு ஆதாரமாகக் காட்டி பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடுக்கின்றனர். சிறந்தது என்று கூறிய நபி (ஸல்) அவர்கள், பெண்கள் வந்தால் தடை செய்யக் கூடாது என்று கூறியிருப்பதை வசதியாக மறந்து விடுகின்றனர்.

பெண்களுக்கான இந்த வாசல் அடைக்கப்பட்டதால் தான் அவர்கள் தர்ஹாக்களின் பக்கம் சென்றனர். இந்த நிலையை மாற்றி அல்லாஹ்வின் அருளால் இன்று பெண்கள் பள்ளிவாசலுக்கு வரும் நிலையை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தியுள்ளது. தலைகீழாகிக் கிடந்த ஷரீஅத் வரைபடத்தை நேராக்கியுள்ளது.

திடலுக்கு வந்த பெருநாள் தொழுகை

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெரு நாளிலும் (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்குச் செல்பவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீது அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 956

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையைத் தொழுததாக எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸும் இல்லை.

“மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட எனது இந்தப் பள்ளியில் (மஸ்ஜிதுத் நபவீ) தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1190

இந்த ஹதீஸின் அடிப்படையில் மஸ்ஜிதுந் நபவீயில் தொழுவது மற்ற சாதாரண பள்ளிகளில் தொழுவதை விட ஆயிரம் மடங்கு சிறந்ததாகும். பெருநாள் தொழுகைகளை பள்ளியில் தொழுவது சரியான நடைமுறையாக இருந்திருந்தால் ஆயிரம் மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடிய மஸ்ஜிதுந் நபவீயில் நபி (ஸல்) அவர்கள் தொழுதிருப்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த விஷயத்தில் நன்மைகள் அதிகமோ அதைத் தான் நடைமுறைப்படுத்துவார்கள். அந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைகளை திட-ல் தொழுதிருக்கும் போது, அதைப் புறக்கணித்து விட்டு பள்ளியிலேயே தொழுவது நபிவழிக்கு மாற்றமானது ஆகும்.

தமிழகத்தில் ஒரு சில இடங்களைத் தவிர பெரும்பாலான பகுதிகளில் திடலில் தொழும் நடைமுறை இல்லை. பள்ளிவாச-லேயே பெருநாள் தொழுகையைத் தொழுது வருகிறார்கள். இவ்வாறு பள்ளிவாசலில் தொழும்போது மாதவிடாய்ப் பெண்களுக்கு பெருநாள் சந்தோஷங்களில் பங்கெடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது. இதன் மூலம் அவர்களுடைய உரிமையை நாம் மறுப்பதோடு பரக்கத்தும் புனிதமும் மிக்க அந்த நாளில் அவர்கள் (குத்பா) உரையைக் கேட்பது, தக்பீர் கூறுவது, துஆச் செய்வது போன்ற நற்செயல்களில் ஈடுபடுவதை விட்டும் தடுத்தவர்களாகி விடுகிறோம். அதிலும் குறிப்பாக ஹனபி மத்ஹப் பகுதிகளில் பெண்களுக்கு சுத்தமாக பெருநாள் தொழுகையே கிடையாது.

ஷாபி மத்ஹப் பகுதிகளில் பெண்கள் தனி ஜமாஅத்தாகத் தொழும் வழக்கம் உள்ளது. ஹனபி மத்ஹப் பகுதிகளில் இந்த வாய்ப்பு பெண்களுக்கு முற்றிலும் மறுக்கப்படுகிறது.

இந்தக் கலாச்சாரத்தைத் தகர்த்தெறிந்து ஹனபி, ஷாபி மத்ஹப் பகுதிகளில் ஆண்களும், பெண்களும் பெருநாள் தொழுகையில் பங்கேற்கும் வகையில் பெருநாள் தொழுகையைத் திடலில் தொழுவது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இது தமிழகம் இதுவரை காணாத மற்றொரு வரலாற்றுப் புரட்சியாகும்.

ஏழு தக்பீர்கள் அறிமுகமும், அமலாக்கமும்

நபி (ஸல்) அவர்கள் ஒன்றைச் செய்தார்கள் என்றால், அதற்கு நேர் மாற்றமாக நின்று செயல்படும் மத்ஹப் ஹனபி மத்ஹபாகும். அந்த மத்ஹபுக்காரர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் மூன்று தக்பீர்களும், அடுத்த ரக்அத்தில் மூன்று தக்பீர்களும் ஆக 3+3 ஆறு தக்பீர்கள் மட்டுமே அதிகமாகச் சொல்லும் முறையை இதுவரை காலம் காலமாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த நடைமுறையை மாற்றி நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த 7+5 தக்பீர்கள் கூடுதலாகச் சொல்லும் வழிமுறையை தவ்ஹீத் ஜமாஅத் அமலாக்கம் செய்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் 7 தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் 5 தக்பீர்களும் கிராஅத்திற்கு முன்பு கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)

நூல்கள்: திர்மிதி 492, அபூதாவூத்

ஜனாஸா தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹா

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குப் பின்னால் நின்று ஜனாஸா தொழுகையை நிறைவேற்றினேன். அப்போது அவர் ஃபாத்திஹா அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார். பிறகு, “நீங்கள் இதை நபிவழி என அறிந்து கொள்வதற்காகவே (சப்தமிட்டு ஓதினேன்)” என்றார்.

அறிவிப்பவர்: தல்ஹா

நூல்: புகாரீ 1335

இது தான் ஷரீஅத் வரைபடத்தில் உள்ள வரைகோடாகும். நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறைக்கு நேர்முரணாக ஹனபி மத்ஹபில் ஜனாஸா தொழுகையில் “ஸனா’வை மட்டும் ஓதும் வழக்கம் உள்ளது.

இதை மாற்றி ஷரீஅத் வரைபடத்தில் உள்ளபடி ஜனாஸா தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹா ஓதும் நபிவழியை தவ்ஹீத் ஜமாஅத் நடைமுறைப்படுத்தியது.

ஒரு பாங்கு தான்! இரண்டு பாங்கில்லை!

நபி (ஸல்) அவர்களின் காலத்திலும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), காலங்களிலும் ஜுமுஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான் (ரலி) காலத்தில் மக்கள் பெருகிய போது கடை வீதியில் (பாங்கு இகாமத் தவிர) மூன்றாவது அழைப்பு அதிகமானது. இதுவே நிலை பெற்று விட்டது.

அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத் (ரலி)

நூல்: புகாரீ 916

ஜுமுஆ அன்று ஒரு பாங்கு சொல்வது தான் நபிவழியில் உள்ளது. இதற்கு மாற்றமாக தமிழகத்தில் இரண்டு பாங்கு சொல்லும் நடைமுறை உள்ளது.

ஷரீஅத் வரைபடத்திலுள்ளது ஒரு பாங்கு தான் என்பதைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியது தவ்ஹீது ஜமாஅத்.

சப்தமின்றி திக்ரு செய்தல்

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!

அல்குர்ஆன் 7:205

திக்ரு செய்வதில் திருக்குர்ஆன் கூறும் வழிமுறை இது தான். அது போன்று நபவழியில் காணும் நடைமுறையும் இது தான்.

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். நாங்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறும் போது, “லா இலாஹ இல்லல்லாஹ் -வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை” என்றும், “அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன்” என்றும் கூறி வந்தோம். (ஒரு கட்டத்தில்) எங்கள் குரல்கள் உயர்ந்து விட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், “மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில்,  நீங்கள் காது கேட்காதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைக்கவில்லை. அவன் உங்களுடனேயே இருக்கின்றான். அவன் செவியேற்பவன்; அருகில் இருப்பவன். (இறைவனான) அவனது திருப்பெயர் நிறைவானது. அவனது மதிப்பு உயர்ந்தது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூசா அஷ்அரீ (ரலி)

நூல்: புகாரி 2992

குர்ஆன், ஹதீஸின் இந்த வழிகாட்டுதலுக்கு மாற்றமாக, பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் சப்தமிட்டு திக்ரு செய்வது இதுவரை நடந்தேறும் வரம்பு மீறல்களாகும்.

இந்த வரம்பு மீறலை மாற்றி, வரைபடத்தில் உள்ளதைப் போல் மனதிற்குள் திக்ர் செய்யும் வழிமுறையை தவ்ஹீத் ஜமாஅத் அறிமுகம் செய்தது.

சத்தியப் பாதையில் தவ்ஹீத் ஜமாஅத் நிகழ்த்திய சாதனைகள் இவை மட்டுமல்ல! இன்னும் ஏராளம் உள்ளன. அவற்றை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.