தப்லீக் ஜமாஅத் ஒரு பார்வை

தப்லீக் ஜமாஅத் ஒரு பார்வை

தப்லீக் ஜமாஅத்தினர் சில நன்மையான காரியங்களை சிறப்பான முறையில் செய்து வருவதை யாரும் மறுக்க இயலாது. மக்களை தொழுகைக்கு அழைப்பது, அதிகமான வணக்கங்கள் புரிவது, பாவம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு சரியான பயிற்சி அளித்து அவர்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்துவது, சில மார்க்க விஷயங்களில் பிடிப்பாகவும் பேணுதலாகவும் இருப்பது இது போன்ற நல்ல விஷயங்களை இவர்களிடம் காண முடிகிறது. இவ்விஷயத்தில் இவர்களை நாம் பாராட்டவே செய்கிறோம்.

இவர்கள் புரியும் இந்த நன்மையான காரியங்களை மட்டும் சிலர் கவனத்தில் கொண்டு இவர்கள் தான் மிகச் சரியாகச் செயல்படுகிறார்கள் என்ற தவறான முடிவுக்கு வருகின்றனர். தப்லீக் ஜமாஅத்தினருக்கு இப்படி ஒரு முகம் இருப்பது போன்று இவர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கின்றது. இவர்களுடைய மறுபாதியை பலர் கவனிக்கத் தவறிவிடுகின்றனர்.

ஒருவருடைய அனைத்து செயல்பாடுகளை வைத்துத் தான் அவர் நல்லவரா? கெட்டவரா என்ற முடிவை எடுக்க வேண்டும். சமுதாயத்துக்குத் தீங்கிழைக்கும் அரசியல்வாதிகள், கொலைகாரர்கள், திருடர்கள் போன்ற தீயவர்களிடம் கூட சில நன்மையான காரியங்களை பார்க்கத் தான் முடிகிறது. இதனால் ஒட்டுமொத்தமாக அவர்களை நல்லவர்கள் என்று நாம் கூறிவிடுவதில்லை. அவர்களின் அனைத்து செயல்பாடுகளையும் கவனத்தில் கொண்டே முடிவெடுக்கின்றோம்.

இதே போன்று தான் தப்லீக் ஜமாஅத் விஷயத்தில் நாம் முடிவெடுக்கக் கடமைபட்டிருக்கின்றோம். இவர்களிடம் பல நன்மையான காரிங்கள் இருப்பதைப் போன்று ஏராளமான வழிகேடுகளும் தவறான நம்பிக்கைகளும் நிறைந்துள்ளன.

இஸ்லாத்தைப் புறக்கணிப்பவர்கள்

நன்மைகளை ஏவி தீமைகளைத் தடுக்கும் பணியை இஸ்லாம் இந்தச் சமுதாயத்தில் ஒவ்வொருவரின் மீதும் சுமத்தியுள்ளது. குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் தீமையைத் தடுப்பதின் அவசியம் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றது.

குர்ஆன், நன்மையை மட்டும் ஏவவில்லை. தீமைகளை செய்யக்கூடாது  என தடுக்கவும் செய்கின்றது. நபி (ஸல்) அவர்கள் தனது தூதுப் பணியில் நன்மையை மட்டும் ஏவவில்லை. மாறாக சமுதாயத்தில் நிலவியிருந்த  அனைத்துத் தீமைகளையும் தடுத்து ஒழிக்கப் பாடுபட்டார்கள். அவற்றை சமூகத்திலிருந்து அகற்றியும் காட்டினார்கள்.

இப்படிப்பட்ட ஒரு முக்கியமான பணியை, தீமையை ஒழிக்கும் பணியைச் செய்ய வேண்டியதில்லை என்பது  தப்லீக் ஜமாஅத்தின் கொள்கை. நன்மையை மட்டும் சொன்னால் போதும். தீமை தானாகச் சென்றுவிடும் என்று குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் எதிராகப் பேசி வருகின்றனர்.

இஸ்லாம் என்றாலே நன்மையை ஏவும் மார்க்கம்; தீமையைத் தடுக்கும் மார்க்கம். இந்த இரண்டில் ஒன்றை ஏற்று, மற்றொன்றை விட்டதன் மூலம் இவர்கள் இஸ்லாத்தின் ஒரு பாதியைப் புறக்கணித்துவிட்டனர்.

நன்மைகளைச் சொல்லும் போது மக்கள் எதிர்ப்பதில்லை. தீமைகளைக் கண்டிக்கும் போது தான் எதிர்ப்புகளும் சிரமங்களும் தலை தூக்குகின்றன. இந்தச் சிரமங்களை  எதிர்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாத இவர்கள் தங்களால் இது இயலாது என்று கூறி ஒதுங்கிவிட்டால் அது வேறு விஷயம்.

ஆனால் அவ்வாறு தனது இயலாமையை ஒப்புக்கொள்ளாமல் அதை மறைப்பதற்காக நன்மைகளை மட்டும் சொல்வதே சிறந்த மார்க்கப் பணி என்றும் இதுவே அறிவுப்பூர்வமான வழி என்றும் பொய்யான தத்துவத்தைக் கூறுவதை ஒருக்காலும் ஏற்க முடியாது.

சமூகத் தீமைகளை ஒழிக்கவில்லை

இவர்களின் இந்தத் தவறான கொள்கையால் தான் சமுதாயம் கெட்டு நாசமாகி  இருந்தது. தமிழகத்தில் தவ்ஹீது வருவதற்குப் பல வருடங்களுக்கு முன்னரே இவர்கள் இருந்தனர். இவர்கள் தங்கள் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்ததால் இவர்கள் சமுதாயத்துக்கு நன்மையை ஏவிய காரணத்தால் சமூகத்தில் தீமை அழிந்து நல்ல நிலை ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் தவ்ஹீது ஆரம்பித்த அந்தக் காலகட்டத்தில் சமுதாய நிலையோ படுமோசமாக இருந்தது. இணைவைப்பு, பித்அத், வட்டி, வரதட்சணை மூட நம்பிக்கைகள் எல்லா அனாச்சாரங்களும் வீரியமாக நடந்தேறிக் கொண்டிருந்தன.

தீமையைத் தடுக்காததின் விளைவால் அந்நேரத்தில் தொழுகையாளியாக இருந்த பலர் இணை வைத்துக் கொண்டும் பித்அத்களை செய்து கொண்டும் மூட நம்பிக்கைகளில் மூழ்கியும் இருந்தனர். வட்டி, வரதட்சணை போன்ற பாவங்களை சர்வ சாதாரணமாகச் செய்து கொண்டிருந்தனர். பள்ளிவாசல் நிர்வாகிகளே பாவமான காரியங்களுக்கு முன்னோடியாக இருந்தனர். தப்லீக் ஜமாஅத்தினர் தீமையைக் கண்டிப்பதை விட்டுவிட்டு நன்மையை மட்டும் ஏவியதே இந்த மோசமான நிலைக்குக் காரணம்.

இதன் பிறகு தவ்ஹீது பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டு, தீமைகளுக்கு எதிராகக் குரல் ஒலித்த பின்பே இந்தத் தீமைகள் ஓரளவுக்கு ஒடுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டன.

சமுதாயத்தில் இந்தத் தீமைகள் புரையோடிப் போயிருந்ததற்கு இவர்களுடைய இந்தத் தவறான கொள்கையே காரணம். சிரமம் இல்லாமல் மார்க்கப் பணி ஆற்ற வேண்டும் என்ற எண்ணமே இந்த நிலைபாட்டிற்கு இவர்களைத் தள்ளியது. தீமையைத் தடுத்ததின் விளைவால் வரலாற்றில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை கண்கூடாகக் கண்ட பிறகும் கூட தங்களின் நிலைபாட்டை இவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை. இன்றும் இவர்கள் தீமைகளைக் கண்டித்துப் பேசுவதில்லை.

தீமைகள் இவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. எனவே தான் வரதட்சணை போன்ற மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்கள் நடக்கும் திருமணங்களில் சர்வ சாதாரணமாகக் கலந்து கொள்கின்றனர். சில நேரங்களில் தாங்களே இத்தீமைகளைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டாலும் கொஞ்சம் கூடத் தடுமாறாமல் இவற்றைச் செய்துவிடுகின்றனர். மார்க்கத்திற்கு எதிராக உறவோ நட்போ வரும் போது மார்க்கத்தை விட உறவுக்கும் நட்பிற்குமே முன்னுரிமை கொடுக்கின்றார்கள்.

இஸ்லாமிய பிரச்சாரத்தின் பாதியை புறக்கணிக்கச் சொல்லும் இப்படிப்பட்ட ஜமாஅத்தால் சமுதாயம் ஒருக்காலும் முன்னுக்கு வர முடியாது. இவர்களால் சமுதாயத்தை நல்ல ஒரு நிலைக்குக் கொண்டு வரவும் முடியாது.

அடிப்படையில் கோளாறு

குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே ஒரு முஸ்லிமுடைய அடிப்படைக் கொள்கையாகும். இந்த அடிப்படைக் கொள்கையில் கோட்டை விட்டவர் மறுமையில் வெற்றி பெற முடியாது. தப்லீக் ஜமாஅத்தினர் இந்த அடிப்படைக் கொள்கையில் கோட்டை விட்டுள்ளனர். குர்ஆன் ஹதீஸ் என்ற வட்டத்தைத் தாண்டி மத்ஹபுகளை மார்க்கமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

மத்ஹபுச் சட்டங்கள் மனிதர்களின் சுய சிந்தனையால் உருவாக்கப்பட்டவை. குர்ஆனுடனும் ஹதீஸ்களுடனும் மோதும் வகையில் அமைந்தவை. இந்த வழிகேட்டை இவர்கள் சரி என்று நம்புகின்றனர். தனது வணக்க வழிபாடுகளை இதனடிப்படையிலேயே அமைத்துக் கொள்கின்றனர். இந்தச் சட்டங்கள் குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் மாற்றமாக அமைந்திருப்பதை அறிந்த பின்னவரும் இவற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கின்றனர்.

தவ்ஹீதை மட்டும் எதிர்ப்பார்கள்

தீமைகளைத் தடுக்க வேண்டியதில்லை என்ற கொள்கையில் உள்ள இவர்கள் நம் விஷயத்தில் மட்டும் இக்கொள்கையை தளர்த்திக் கொண்டனர்.

இவர்களின் கருத்துப்படி நமது கொள்கையும் செயல்பாடுகளும் தீமையானது. இவர்களின் கொள்கைப்படி பார்த்தால் இவர்கள் நம்மை எதிர்க்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் இவர்கள் தமிழகத்தில் பல பகுதிகளில் நமக்கு எதிராக முழு முயற்சியுடன் செயல்படுகின்றனர். எப்பாடு பட்டாவது நம்மை அழித்துவிட வேண்டும் என்று நினைக்கின்றனர்.

தப்லீக் உலமாக்களும் கப்ரு வழிபாட்டை ஆதரிக்கும் பரேலவிகளும் கொள்கையில் மாறுபட்டவர்கள். தர்ஹா வழிபாட்டை அங்கீகரிக்காத தப்லீக் உலமாக்கள் பரேலவிஸத்திற்கு எதிராகப் போர்க்குரல் கொடுக்கவில்லை; போர்க்கொடி உயர்த்தவில்லை.

மாறாக மத்ஹபுகள் கூடாது என்று நாம் சொன்னதற்காக இவர்களும், பரேலவிகளும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு, நமக்கு எதிராகக் கை கோர்த்துக் கொண்டு நம்மைப் பூண்டோடு களையெடுக்கக் களமிறங்கினர்.

தப்லீக் அணியில் முன்னணி வகித்த கலீல் அஹ்மது கீரனூரியார் நமக்கு எதிராகப் போர் முழக்கமிட்டுக் கொண்டிருந்தார். பரேலவிஸத்தை எதிர்ப்பதை விட நம்மை எதிர்ப்பதில் தான் முனைப்புடன் செயல்பட்டார். தப்லீகும், பரேலவிஸமும் ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமானது. இப்படிப்பட்டவர்கள் நம்மை எதிர்ப்பதில், ஒழிப்பதில் ஓரணியில் நின்றனர் என்றால் இவர்களது வெறுப்பு எந்த அளவுக்கு ஆழமானது என்பதை நம்மால் உணர முடிகின்றது.

இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் கலீல் அஹ்மது கீரனூரி நம்மை மேடையில் விமர்சித்தது போன்று பரேலவிகளைப் பிளந்தெடுக்க வேண்டாம். கொஞ்சம் பிடித்தாவது விடலாம். அப்படிக் கூடச் செய்யவில்லை. ஆனால் நம்மை வாட்டி வறுத்தெடுக்க வகை வகையான கூட்டங்கள், மாநாடுகள்!

அரைக்க அரைக்க சந்தனம் மணக்கும்! தீட்டத் தீட்ட வைரம் மிளிரும் என்பது போல் இவர்கள் நம்மைத் திட்டத் திட்ட இறையருளால் நாம் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறோம், அல்ஹம்துலில்லாஹ்!

இன்று இஸ்லாமிய மாநாடுகள் என்றால் அது ஏகத்துவ மாநாடுகள் என்றாகி விட்டன. இவர்களது மாநாடுகளே பள்ளிவாசலின் வளாகங்களில் தான் நடக்கின்றன. இது தமிழகத்தில் அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கும் மாற்றமும் மறுமலர்ச்சியும் ஆகும்.

தனிமனித வழிபாடு

இஸ்லாம் அனுமதிக்காத தனிமனித வழிபாட்டை இவர்களிடம் காண முடியும். அமீர் ஸாப் என்று ஒருவரை ஏற்படுத்தி அவரை மற்ற மனிதர்களை விட்டும் வித்தியாசப்படுத்திப் பார்க்கின்றனர். மக்கள் நீண்ட அணியில் நின்று ஒருவர் பின் ஒருவராக அவரிடம் முஸாபஹா செய்யும் பழக்கத்தை கொண்டுவந்துள்ளனர்.

இந்த அமீர் இறைநேசர் என்பது நூறு சதவீதம் உறுதியானதைப் போன்றும் இவரிடம் முஸாபஹா  செய்தால் தனக்கு நல்வாழ்வு கிடைப்பது நிச்சயம் என்ற நம்பிக்கையிலும் இவ்வாறு முஸாபஹா செய்கின்றனர்.

இது இஸ்லாத்திற்குப் புறம்பானதாகும். அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர் யார்? அவனுக்கு நெருக்கமானவர் யார்? என்பதை யாராலும் உறுதிபடக் கூற முடியாது. அப்படி ஒருவர் உறுதியாக அறியப்பட்டாலும் கூட இவ்வாறு செய்து மக்களை விட்டும் தன்னை தனிமைப்படுத்தி, பெருமைப்படுத்திக் கொள்வது கூடாது.

ஏனென்றால் நபி (ஸல்) அவர்களோ, அவர்களால் இறைநேசர்கள் என்று சான்று வழங்கப்பட்ட அவர்களின் தோழர்களோ இவ்வாறு தங்களை மக்களிடம் பெருமைபடுத்திக் கொள்ளவில்லை. மாறாக மக்களுடன் மக்களாக எல்லோரையும் போன்றே வாழ்ந்தார்கள். பணிவை வெளிப்படுத்தினார்கள். சொல்லப்போனால் தங்களை மக்களுக்குப் பணியாற்றும் பணியாளர்கள் என்றே கருதி மக்கள நலப் பணிகளைச் செய்தனர்.

பெரியார் கதைகள்

இவர்கள் மக்களுக்கு நல்லுபதேசங்களைச் செய்கின்ற போது மக்களுக்குத் தேவையான சரியான தகவல்களை மட்டும் கூறுவதில்லை. மாறாக, பொய்யான கதைகளையும் கப்ஸாக்களையும் கூறுகின்றனர். பெரும்பாலும் இந்தக் கப்ஸாக்கள் பெரியார்களைப் பற்றிய கதைகளாகவே இருக்கின்றன. இவை கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும் இவற்றை சிந்தித்துப் பார்த்தால் இவற்றில் ஏராளமான அறியாமையும் மார்க்கத்திற்கு முரணான அம்சங்களும் இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமான விஷயங்களும் இருப்பதைக் காணலாம்.

மனித குலத்துக்குத் தேவையான அனைத்து உபதேசங்களும் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் ஏராளமாகப் பரவி கிடக்கின்றன. அப்படியிருக்க இந்தப் புருடாக்கள் எதற்கு? இவை மக்களை அறிவீனர்களாக ஆக்குமே தவிர அறிவாளிகளாக ஆக்காது.

கடமை தவறுபவர்கள்

ஒரு மனிதன் இறைவனுக்கு ஆற்ற வேண்டிய  கடமைகளை இஸ்லாம் வலியுறுத்துவதைப் போன்று பிற மனிதர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும் இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இந்தக் கடமைகளை ஒருவர் முறையாக நிறைவேற்றினாôல் இதுவும் வணக்கமாகிவிடுகின்றது. எனவே அதற்கு நன்மை உண்டு என்று மார்க்கம் கூறுகின்றது.

இஸ்லாத்தின் உபதேசங்கள், கொள்கை கோட்பாடுகள், சட்டதிட்டங்கள் ஆகிய அனைத்தும் பிறரைப் பாதிக்காத வகையில் பிறருக்கு நன்மை ஏற்படுத்தக்கூடிய வகையிலேயே அமைந்துள்ளன.

மார்க்கத்தை அறிந்து கொள்வதற்காகக் குறிப்பிட்ட சில நாட்களை ஒதுக்குவது மார்க்கத்தில் குற்றமில்லை. மாறாக இது ஒரு நன்மையான காரியமே. ஆனால் ஒருவர், தான் ஆற்ற வேண்டிய மற்ற கடமைகளுக்கு பங்கம் ஏற்படாத வகையில் இந்த நல்ல காரியத்தைச் செய்ய வேண்டும்.

இந்தச் சாதாரண விஷயத்தைக் கூட தப்லீக் ஜமாஅத்தினர் விளங்கவில்லை. ஒரு வாரம் ஜமாஅத், 40 நாள் ஜமாஅத், நான்கு மாதம் பத்து நாட்கள், என்று வாரக் கணக்கில், மாதக் கணக்கில் நாள் ஒதுக்குமாறு இவர்கள் மக்களிடம் கூறுகின்றனர்.

குடும்ப சூழ்நிலையின் காரணத்தால் இதில் வர இயலாதவர்களும் இருப்பார்கள். இத்தகையவர்கள், “நாங்கள் கடையைப் பார்க்க வேண்டியுள்ளது; குடும்பத்தைப் பார்க்க வேண்டியுள்ளது; எனவே தற்போதைய சூழ்நிலையில் எங்களால் ஜமாஅத்திற்கு வர இயலாது’ என்று கூறுவர். ஆனால் ஜமாஅத்தினர் இவர்களை விட்டு விடுவதில்லை. குடும்பத்தை அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று கூறி இவர்களை அழைத்துச் சென்றுவிடுகின்றனர்.

இவர்களின் இத்தகைய பிரச்சாரத்தால் பலர் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை விட்டுவிட்டு அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் ஜமாஅத்திற்குப் புறப்பட்டு விடுகின்றனர். ஆனால் இவர்களின் குடும்பமோ ஊரில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும். தப்லீக் ஜமாஅத்தில் செல்லும் பலரது குடும்பம் இந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றது. பலர் தங்களுடைய பொருளாதாரத்தை இழந்துள்ளனர். அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்ற குருட்டு நம்பிக்கையே இதற்குக் காரணம்.

தன்னால் இயன்ற முயற்சிகளைச் செய்துவிட்டு இதன் பிறகே இறைவன் பார்த்துக் கொள்வான் என நம்பிக்கை வைக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் இவர்களோ முயற்சியைக் கைவிட்டுவிட்டு இறைவன் மீது நம்பிக்கை வைக்கிறார்கள்.

சாப்பாட்டு விஷயத்தில் மட்டும் இறைவன் மீது பழி போடாமல் தாங்கள் செய்ய வேண்டிய பணிகளை முறையாகச் செய்கின்றனர். ஜமாஅத்திற்குச் செல்லும் போது உணவுப் பொருட்களையும் பாத்திரங்களையும் ஒன்று விடாமல் தேவையான அனைத்தையும் எடுத்துச் செல்கின்றனர். இறைவன் பார்த்துக் கொள்வான் என்று கூறி இவற்றை விட்டுவிடுவதில்லை.

மேலும் தப்லீக் ஜமாஅத்தில் உள்ள பலர் எளிமை என்ற பெயரில் தங்களைத் தானே வருத்திக் கொள்கின்றனர். மார்க்கம் அனுமதித்த இன்பங்களை ஹராமாக்கிக் கொள்கின்றனர். அலங்கோலமான தோற்றத்தில் தங்களை மாற்றிக் கொள்கின்றனர்.

தப்லீக் ஜமாஅத் என்பது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் செயல்படாத ஒரு ஜமாஅத் என்பதை விளங்கிக் கொள்ள மேற்கண்ட ஆதாரங்களே போதுமானவையாகும்.