சோதனையின்றி சொர்க்கமில்லை

சோதனையின்றி சொர்க்கமில்லை

தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் துவங்கியதும் ஊர் நீக்கம், பள்ளிவாசல் தடை, அடக்கத்தலம் மறுப்பு, திருமணப் பதிவேடு மறுப்பு, பொதுக்கூட்டத்திற்குத் தடை, பொதுக்குழாய்களில் குடிநீர் பிடிப்பதற்குத் தடை என தவ்ஹீதுவாதிகளுக்கு எதிரான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

காட்டாற்று வெள்ளம் போல் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்தக் காட்டுத் தர்பார்களை எதிர்த்துக் களம் கண்டது தான் இந்த ஜமாஅத்! அப்போதெல்லாம் தவ்ஹீது அழைப்பாளர்களின் சொற்பொழிவுகளில் ஆதிக்கம் செலுத்தியதும், ஆக்கிரமித்து நின்றதும் இந்தக் குர்ஆன் வசனம் தான்.

உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. “அல்லாஹ்வின் உதவி எப்போது?” என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.

அல்குர்ஆன் 2:214

அந்த அளவுக்குத் தவ்ஹீதுவாதிகள் பாதிக்கப்பட்டார்கள்; சோதிக்கப்பட்டார்கள். இந்த வசனம், உதிரம் சிந்திய அவர்களின் காயத்திற்கு ஒற்றடமானது. உடைந்து போன அவர்களது உள்ளத்திற்கு ஆறுதலானது. ஒவ்வொரு தவ்ஹீதுவாதிக்கும் வேதனையே வாழ்க்கையானது.

தவ்ஹீதுவாதிகளுக்கு எதிர்ப்பலைகள், எரிமலைகள் புதிதல்ல! அல்லாஹ்வின் அருளால் அவர்கள் எந்த எதிர்ப்பலையிலும், எரிமலையிலும் எதிர் நீச்சல் போடுவதற்குத் தெம்பும் தைரியமும் கொண்டிருக்கிறார்கள்.

இதை இங்கு சொல்வதற்குக் காரணம், ஏகத்துவாதிகளின் வியர்வையிலும் உழைப்பிலும் வளர்ந்த துரோகி ஜவாஹிருல்லாஹ், “அதிமுக ஆட்சிக்கு வந்தால் திருவிடைச்சேரி சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்” என்று தேர்தலுக்கு முன் ஒரு தொலைக்காட்சிப் பிரச்சாரத்தில் கொக்கரித்திருப்பது தான்.

தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. திருவிடைச்சேரி சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் இருக்கின்றது. ஆனால் இவர் இதை தனது தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிடுவதற்குக் காரணம் தவ்ஹீத் ஜமாஅத்தைக் கருவருப்பதற்கு இந்தத் தேர்தல் களத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் தான்.

திருவிடைச்சேரி சம்பவத்தில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எள்ளளவும் சம்பந்தம் இல்லை என்பது தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்கப் போகிறேன் என்று திமிராக எக்காளமிடுகின்றார்.

ஏதோ இவருக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவி கிடைத்தது போன்று பேசுகின்றார். இவருக்குக் கிடைத்திருப்பது ஒரு எம்.எல்.ஏ. பதவி தான். அதுவும் அதிமுக போட்ட பிச்சை தான். இதற்கே இந்த ஆட்டம் போடுகிறார். கொஞ்சம் கூட சகிக்க முடியவில்லை.

இருப்பினும் அரசு எந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்து, தவ்ஹீத் ஜமாஅத்தை அடக்க நினைத்தால் இவருக்கு நாம் சொல்லிக் கொள்வது, தன்னைக் கடவுள் என்று வாதிட்ட ஃபிர்அவ்னிடம் வீர முழக்கமிட்ட மந்திரவாதிகளின் அக்னி வரிகளைத் தான்.

“நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுத் தந்த உங்களது குருவாவார். எனவே உங்களை மாறுகால் மாறுகை வெட்டி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும், நிலையானவரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள்” என்று (ஃபிர்அவ்ன்) கூறினான்.

“எங்களிடம் வந்த தெளிவான சான்றுகளையும், எங்களைப் படைத்தவனையும் விட நாங்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. நீ கூற வேண்டிய தீர்ப்பைக் கூறிக் கொள்! இவ்வுலக வாழ்க்கையில் தான் நீ தீர்ப்பு வழங்குவாய்” என்று அவர்கள் கூறினார்கள்.

அல்குர்ஆன் 20:71, 72