சிறுவர் இமாமத் செய்யலாமா?

ஆய்வுக்கூடம்

சிறுவர் இமாமத் செய்யலாமா?

கடந்த 2014 ஜனவரி மாத மனாருல் ஹுதா எனும் இதழில் மௌலான பதில்கள் எனும் பகுதியில் ஒருவர் பின்வருமாறு கேள்வியை எழுப்புகிறார்.

? பெரியவர்கள் நிறைந்த ஜமாஅத்திற்கு பருவ வயதை அடையாத பத்து வயதிற்கும் குறைவான சிறுவர் இமாமத் செய்யலாமா?

இக்கேள்விக்கு மௌலானா (?) அவர்கள் பதில் அளிக்கும் போது

பருவ வயதை அடையாத சிறு பிள்ளைகளுக்குத் தொழுகை கடமை இல்லை. எனவே அவர்களைப் பின்பற்றித் தொழக்கூடாது. அது பர்ளு தொழுகையாக இருந்தாலும் இதே சட்டம் தான். எனவே இவர்களைப் பின்பற்றித் தொழுதால் அத்தொழுகையைப் திருப்பித் தொழ வேண்டும்.

நூல்: தஹ்தாவீ 157

அச்சிறுவன் விளக்கமுள்ள சிறுவனாக இருந்தால் அப்பொழுது அவனைப் பின்பற்றித் தொழலாம் என்பது ஷாபி மத்ஹப் சட்டம்.

இவ்வாறு மௌலானா (?) விளக்கம் அளித்திருந்தார்.

மௌலானா (?) அளித்திருக்கும் இந்தப் பதில் குர்ஆன் சுன்னா அடிப்படையில் சரியானது தானா? என்பதை அலசுவோம்.

இந்த ஃபத்வாவை மௌலானா அவர்கள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அளித்திருந்தால் அதற்கு ஆதாரமாக இறை வசனங்களையோ நபிமொழிகளையோ குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு எதையும் குறிப்பிடாமல் மத்ஹபு நூல்களில் உள்ள மனிதக் கருத்துக்களை தன் (மார்க்கத் தீர்ப்புக்கு) ஃபத்வாவுக்கு ஆதாரமாக்கியுள்ளார். குர்ஆனிலோ ஹதீஸிலோ இதற்கான விளக்கத்தைத் தேட அவர் முன்வரவில்லை. மாறாக மத்ஹபு நூலே தமக்குப் போதும் என்று இருந்துவிட்டார்.

சிறுவன் இமாமத் செய்யலாமா? என்பது தொடர்பாக இறைக் கருத்தை தேட முன்வராமல் மனிதக் கருத்திலிருந்து அளிக்கப்பட்டிருக்கும் இந்த ஃபத்வா எப்படி மார்க்க ஃபத்வாவாக ஆகும். இதுவே இந்தத் தீர்ப்பு குர்ஆன் சுன்னா அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்ப்பல்ல என்பதை உறுதி செய்கிறது.

மேலும் ஷாபி மத்ஹபின் படி சிறுவன் விபரமுள்ளவனாக இருந்தால் இமாமத் செய்யலாம் என்றும் அதே ஃபத்வாவில் கூறுகிறார்.

சிறுவன் இமாமத் செய்யலாம் என்பதும், செய்யக் கூடாது என்பதும் முரண்பாடான இரு சட்டங்கள். ஒரு மத்ஹபு கூடும் என்கிறது. இன்னொரு மத்ஹபு கூடாது என்கிறது. இரண்டில் ஒன்று தான் சரியாக இருக்க முடியும் எனும் போது, ஷாபி மத்ஹபில் கூடும்; ஆனால் ஹனபி மத்ஹபில் கூடாது என்று சொல்லப்படும் இந்த பதிலில் உள்ள முரண்பாடே இது குர்ஆன் சுன்னா அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவல்ல என்பதை மேலும் உறுதி செய்கிறது.

அப்படியெனில் இது தொடர்பாகக் குர்ஆன் ஹதீஸ் என்ன சொல்கிறது?

இமாமத் செய்பவரின் தகுதியை நபி (ஸல்) அவர்கள் சொல்லும் போது குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்: அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவரும் அதை முதலில் ஓதக் கற்றுக்கொண்டவரும் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பார். அவர்கள் அனைவருமே சம அளவில் ஓதத் தெரிந்தவர்களாய் இருந்தால் அவர்களில் முதலில் நாடு துறந்து (ஹிஜ்ரத்) வந்தவர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும். அவர்கள் அனைவரும் சம காலத்தில் நாடு துறந்து வந்தவர்களாய் இருந்தால் அவர்களில் வயதில் மூத்தவர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும். ஒருவரது வீட்டிலோ அல்லது ஒருவருடைய அதிகாரத்திற்குட்பட்ட இடத்திலோ (அவருடைய அனுமதியின்றி) நீங்கள் தலைமை தாங்கித் தொழுவிக்க வேண்டாம். ஒருவருடைய வீட்டில் “அவர் உங்களுக்கு அனுமதியளித்தால் தவிரஅல்லது “அவரது அனுமதியின்றிஅவரது விரிப்பின் மீது நீங்கள் அமராதீர்கள்.

நூல்: முஸ்லிம் 1193

குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்திருக்க வேண்டும் என்பது தான் இமாமத் செய்பவருக்கு இருக்க வேண்டிய முதல் தகுதியாகும். இதற்கு அடுத்து தான் பெரியவராக இருக்க வேண்டும் என்பதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே சிறுவராக இருந்தாலும் குர்ஆனை நன்கு தெரிந்தவராக இருப்பின் தாராளமாக பெரியவர்களுக்கு இமாமத் செய்யலாம் என்பது தான் ஹதீஸிலிருந்து கிடைக்கும் தீர்வாகும்.

இதைப் பின்வரும் நபிமொழி தெளிவாக எடுத்துரைக்கின்றது.

அம்ர் பின் சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், “மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?” என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், “அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத் தூதராக) அனுப்பியிருப்பதாக…. அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக்…. கூறுகிறார்என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக் காட்டிக்) கூறுவார்கள். உடனே நான் அந்த (இறை)வாக்கை மனப்பாடம் செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போல ஆகிவிட்டது.

அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள், “அவரை அவருடைய குலத்தா(ரான குறைஷிய)ருடன் விட்டு விடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர் தாம் (என்று நிரூபணமாகிவிடும்)என்று சொன்னார்கள்.

மக்கா வெற்றிச் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து  இஸ்லாத்தை ஏற்றார். நபி (ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்த போது, “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி (ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள், “இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்என்று சொன்னார்கள்எனக் கூறினார்கள்.

ஆகவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்த போது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும் (எங்களிடையே) இருக்கவில்லை. ஆகவே,  (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய(சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும் போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின்புறத்தைக்) காட்டிவந்தது. ஆகவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், “உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?” என்று கேட்டார். ஆகவே, அவர்கள் (துணி) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போல வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.

நூல்: புகாரி 4302

அம்ர் பின் ஸலமா (ரலி) அவர்கள் சிறுவராக இருந்த போதும் குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்திருந்த காரணத்தினால் பெரியவர்கள் நிறைந்த ஜமாஅத்திற்கு இமாமத் செய்துள்ளார்கள். வஹீ அருளப்பட்ட காலத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதால் இது தவறாக இருந்தால் இதை நபி (ஸல்) அவர்கள் கண்டித்திருப்பார்கள். ஆனால் நபியவர்கள் கண்டிக்கவில்லை.

எனவே சிறுவர் குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்தவராக இருந்தால் பெரியவர்களுக்கு இமாமத் செய்யலாம் என்பதைத் தெளிவாக இந்த நபிமொழிகள் எடுத்துரைக்கின்றன.

இவ்வாறு நபிமொழியில் தெளிவாக இமாமத் செய்யலாம் என்று இருந்தும் ஹதீஸைக் குறிப்பிடாமல் மத்ஹபு நூல்களைக் குறிப்பிட வேண்டிய அவசியமென்ன?

இந்நிலையில் சிறுவர் பெரியவர்களுக்குத் தொழ வைத்தால் மக்கள் அந்தத் தொழுகையை திருப்பி தொழ வேண்டும் என்று வேறு அந்தப் பதிலில் குறிப்பிடுகிறார்கள். என்ன கொடுமை இது?

இனியாவது கேள்விக்குப் பதிலளிக்கும் போது தகுந்த ஆதாரத்தை குர்ஆன் ஹதீஸிலிருந்து குறிப்பிடுவார்களா? அல்லது வழக்கம் போல் மௌலானாவின் பதில்கள் என்று கண்டதையும் உளறுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

குறிப்பு: தொழுகையில் சிறுவர்களையும் விபரமில்லாதவர்களையும் இமாமாக முன்னிறுத்தாதீர்கள் என்று அலீ (ரலி) அவர்களின் கூற்றாக தைலமீ என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பலவீனமான அறிவிப்பாகும். மேலும் இவ்வாறு நபிகள் நாயகம் கூறியதாக ஆதாரப்பூர்வமான ஏற்கத்தக்க எந்தச் செய்தியும் இல்லை.

இவ்வாறு கூறுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. இது அடிப்படையற்ற செய்தி என்பதை அறிஞர்களும் உறுதி செய்துள்ளார்கள்.