இஸ்லாத்தின் பார்வையில் அற்புதங்கள்

இணை கற்பித்தல்    தொடர்: 28

இஸ்லாத்தின் பார்வையில் அற்புதங்கள்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான செய்திகள் அனைத்தையும் அல்லாஹ் அறிவித்துக் கொடுத்து விடுவான் என்பதற்கு வழிகேடர்கள் சில வசனங்களையும், ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டுகின்றார்கள். அவற்றின் விளக்கங்களைப் பார்த்து வருகிறோம். இதுபோன்ற வசனங்களையும், ஹதீஸ்களையும் அவர்கள் காட்டும் போது, அதன் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் காட்டிவிட்டு, மற்றொரு பகுதியை மறைத்து விடுகின்றனர். ஆனால் இவர்கள் காட்டும் ஆதாரங்களை நன்றாகக் கவனித்துப் பார்த்தால் அது இவர்களுக்கு எதிரான ஆதாரங்களாகவே அமைந்துள்ளதை விளங்க முடியும்.

(போரை முடித்து) அவர்களிடம் நீங்கள் திரும்பும் போது அவர்கள் உங்களிடம் சமாளிக்கின்றனர். “சமாளிக்காதீர்கள்! நாங்கள் உங்களை நம்பப் போவதில்லை. உங்களைப் பற்றிய செய்திகளை அல்லாஹ் எங்களுக்கு அறிவித்து விட்டான்என்று (முஹம்மதே!) கூறுவீராக! உங்கள் நடவடிக்கையை அல்லாஹ்வும், அவனது தூதரும் அறிவார்கள். பின்னர் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனிடம் கொண்டு செல்லப்படுவீர்கள்! நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்.

அல்குர்ஆன் 9.94

இந்த வசனத்திலும் பாதியை மறைத்துவிட்டு பார்த்தீர்களா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அல்லாஹ்வைப் போன்று பார்க்கக்கூடிய சக்தியைப் பெற்றிருக்கிறார்கள் என்று நபியவர்களுக்கு மறைவான ஞானம் இருப்பதாக வாதிடுகிறார்கள். ஆனால் முழு வசனத்தையும் படித்துப் பார்த்தால் அந்த வசனம்  நபிகளாருக்கு மறைவான ஞானம் இல்லை என்பதைத் தான் நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.

மேலும் நபிகளார் போருக்குச் செல்லாதவர்களிடம் ஏன் போரில் கலந்து கொள்ளவில்லை என்று கேட்ட போது அவர்கள் சொல்கின்ற காரணத்தை நபிகளார் நம்பவில்லை. அவர்களுக்கு மறைவான ஞானம் இருப்பதால் அவர்கள் போருக்கு வராததற்குரிய காரணத்தைக் கண்டு பிடித்ததால் நபிகளார் நம்பவில்லை என்று நினைத்து விடக்கூடாது. அந்த வசனத்திலேயே இறைவன் நபிகளாரைப் பார்த்து, நீங்கள் சொல்லக்கூடிய காரணத்தை நம்ப மாட்டேன். ஏனென்றால், போருக்கு வராமல் பின் வாங்கிய காரணத்தை இறைவன் எனக்கு அறிவித்து விட்டான் என்று அவர்களிடம் சொல்லச் சொல்கிறான். இது, அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதைத் தானே காட்டுகின்றது.

இந்த வசனம் ஏன், எப்போது  இறக்கப்பட்டது என்பதை நாம் அறிந்தாலே நபிகளாருக்கு மறைவான ஞானம் இல்லை என்பது தெளிவாகும். அந்த ஹதீஸ் பின்வருமாறு:

அப்துல்லாஹ் பின் கஅப் பின் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தையும் (தபூக் போரில் கலந்து கொள்ளாததற்காக) பாவமன்னிப்பு வழங்கப் பெற்ற மூவரில் ஒருவருமான கஅப் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்உஸ்ரா‘ (எனும் தபூக்) போர், பத்ருப் போர் ஆகிய இரு போர்களைத் தவிர, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்து கொண்ட எந்த அறப்போரிலும் ஒரு போதும் நான் கலந்துகொள்ளாமல் இருந்ததில்லை.

மேலும் (தபூக் போரில் கலந்துகொள்ளாதது பற்றிய) உண்மையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முற்பக-ல் நான் சொல்-விட முடிவு செய்தேன். தாம் மேற்கொண்ட எந்தப் பயணத்தி-ருந்து (ஊரை நோக்கித் திரும்பி) வரும்போதும் முற்பகல் நேரத்தில்தான் பெரும்பாலும் நபி (ஸல்) அவர்கள் வருவார்கள். (அப்படி வந்ததும்) தம் வீட்டிற்குச் செல்லாமல் முத-ல் பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவது அவர்களின் வழக்கம். (வழக்கப்படி அன்றும் தொழுதுவிட்டு, தபூக் போரில் கலந்து கொள்ளாதவர்களான) என்னிடமும் (ஹிலால், முராரா எனும்) என்னிரு சகாக்களிடமும் பேசக் கூடாதென நபி (ஸல்) அவர்கள் (மக்களுக்குத்) தடை விதித்தார்கள்.

(அந்த அறப்போருக்குச் செல்லாமல்) பின் தங்கிவிட்டவர்களில் எங்களைத் தவிர வேறெவரிடமும் பேசக் கூடாதென்று நபி (ஸல்) அவர்கள் தடை விதிக்கவில்லை.

ஆகவே மக்கள் எங்களிடம் பேசுவதைத் தவிர்த்தனர். இந்த விவகாரம் நீண்டு கொண்டே சென்றது. நானும் இதே நிலையில் இருந்து வந்தேன். (அப்போது) எனக்கிருந்த கவலையெல்லாம், (இதே நிலையில்) நான் இறந்துவிட நபி (ஸல்) அவர்கள் எனக்கு (ஜனாஸா)த் தொழுவிக்காமல் இருந்துவிடுவார்களோ! அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட மக்கள் மத்தியில் இதே நிலையில் நான் இருக்க, அவர்களில் யாரும் என்னிடம் பேசாமலும் (நான் இறந்து போனால்) எனக்கு (ஜனாஸா)த் தொழுகை நடத்தப்படாமலும் போய்விடுமோ என்பது தான். அப்போதுதான் அல்லாஹ் எங்கள் பாவமன்னிப்புக் குறித்து தன் தூதருக்கு அருளினான். (எங்களுடன் பேசக்கூடாதென  மக்களுக்குத் தடை விதித்ததி-ருந்து ஐம்பது நாட்கள் முடிந்த பின்) இரவின் இறுதி மூன்றில் ஒரு பகுதி நேரம் எஞ்சியிருந்தபோது இது நடந்தது. அந்நேரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியாரான) உம்மு சலமா (ரலி) அவர்களிடம் இருந்து கொண்டிருந்தார்கள். உம்முசலமா (ரலி) அவர்கள் என்னைக் குறித்து நல்லெண்ணம் கொண்டவராகவும் என் விவகாரத்தில் தனிக் கவனம் செலுத்துபவராகவும் இருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உம்முசலமா! கஅபின் பாவம் மன்னிக்கப்பட்டு விட்டதுஎன்று சொன்னார்கள். உம்மு சலமா (ரலி) அவர்கள், “(அல்லாஹ்வின் தூதரே!) கஅபிடம் நான் ஆளனுப்பி அவருக்கு இந்த நற்செய்தியைத் தெரிவிக்கட்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (நடுநிசியைக் கடந்துவிட்ட இந்த நேரத்தில் நீ இச்செய்தியைத் தெரியப்படுத்தினால்) மக்கள் ஒன்றுகூடி எஞ்சிய இரவு முழுவதும் உங்களை உறங்கவிடாமல் செய்து விடுவார்கள்என்றார்கள்.

ஆக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையை நிறைவேற்றியபின் எங்கள் (மூவரின்) பாவங்களை அல்லாஹ் மன்னித்துவிட்டது குறித்து (மக்களுக்கு) அறிவிப்புச் செய்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு (ஏதேனும்) மகிழ்ச்சி ஏற்படும்போது அவர்களின் முகம் நிலவின் ஒரு துண்டு போலாகிப் பிரகாசிக்கும்.

(போருக்குச் செல்லாமல் இருந்துவிட்டு) சாக்குப்போக்குச் சொன்னவர்களிடமிருந்து அது ஒப்புக்கொள்ளப்பட்டிருந்த நிலையில், எங்கள் மூவரின் விஷயத்தில் மட்டுமே தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இச்சமயத்தில் தான் எங்கள் பாவமன்னிப்புக் குறித்து அல்லாஹ் (வசனத்தை) அருளினான். போரில் கலந்து கொள்ளாம-ருந்தவர்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பொய்யுரைத்துத் தவறான சாக்குப்போக்குகளைக் கூறியவர்கள் குறித்து மிகக் கடுமையாகப் பேசப்பட்டது. அதுபோல் யாரைக் குறித்தும் பேசப்பட்டதில்லை. அல்லாஹ் கூறுகிறான்:

(நம்பிக்கையாளர்களே! போர் முடிந்து) நீங்கள் அவர்களிடம் திரும்பிய சமயத்தில் உங்களிடம் அவர்கள் (வந்து போருக்குத் தாம் வராதது குறித்து மன்னிப்புத் தேடி) சாக்குப்போக்குக் கூறுகின்றனர். (ஆகவே, அவர்களை நோக்கி, நபியே!) நீங்கள் கூறுங்கள்: நீங்கள் சாக்குப்போக்குக் கூறாதீர்கள். நாங்கள் உங்களை ஒரு போதும் நம்பவே மாட்டோம். உங்கள் விஷயங்களை அல்லாஹ் எங்களுக்கு அறிவித்துவிட்டான். இனி அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்கள் செயலைப் பார்ப்பார்கள். பின்னர் நீங்கள், மறைவானவை, வெளிப்படையானவை ஆகிய அனைத்தையும் அறிந்தவனிடம் கொண்டுவரப்படுவீர்கள். நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை அந்த நேரத்தில் அவனே உங்களுக்கு அறிவிப்பான். (9:94)  

நூல்: புகாரி 4677

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் உள்ளிட்ட மூன்று பேரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சமூக பகிஷ்காரம் செய்கிறார்கள். ஆனால் இதே போன்று போருக்கு வராமல் இருந்துவிட்டு, பொய்யான காரணங்களைச் சொன்னவர்களை அவர்கள் தண்டிக்கவில்லை.

நபியவர்களுக்கு மறைவான செய்திகள் தெரியும் என்றால் அவர்கள் கூறுவது பொய் என்று தெரிந்து அவர்களைக் கடுமையாகத் தண்டித்திருப்பார்களே! உண்மையைச் சொன்ன கஅப் (ரலி) அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை விட பொய் சொன்னவர்களுக்குத் தான் அதிகமான தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்களை நபி (ஸல்) அவர்கள் மன்னித்து விடுகின்றார்கள். அல்லாஹ் அறிவித்துக் கொடுத்த பிறகு தான்  இவர்கள் பொய் சொல்லியுள்ளார்கள் என்பது நபியவர்களுக்குத் தெரிகின்றது. நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான செய்திகள் தெரியாது என்பதற்குத் தான் இந்த வசனம் ஆதாரமாக அமைந்துள்ளது.

இதுபோன்ற வசனங்களையும், நாம் இதுவரை சொன்ன சம்பவங்களையும் வைத்துக் கொண்டு நபிகளாருக்கு மறைவான ஞானம் இருக்கின்றது என்று வாதிடுகிறார்கள். ஆனால் அவர்கள் சொன்ன குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்களிலிருந்தே நபிகளாருக்கு மறைவான விஷயங்களை அறியும் ஆற்றல் இல்லை. அல்லாஹ் அறிவித்துக் கொடுத்ததின் மூலம் அவர்கள் அவற்றை அறிந்து கொண்டார்கள். அவர்களுக்கு எதுவெல்லாம் தெரியுமோ அவை அனைத்தும் நமக்கும் தெரியும் என்று நிரூபித்துள்ளோம்.

இவற்றை வைத்துக் கொண்டு நபிமார்களுக்கோ, மகான்களுக்கோ, அவ்லியாக்களுக்கோ மறைவான ஞானம் இருக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

இதுவரை நாம் அல்லாஹ்வைத் தவிர நபிமார்களுக்கோ மற்ற மனிதர்களுக்கோ மறைவான ஞானம் இல்லை என்பதற்கு இத்தனை ஆதாரங்களையும் பார்த்தோம்.

அடுத்ததாக,

இறைவன் பெரும்பாலான நபிமார்களுக்கு சில அற்புதங்களை செய்யக்கூடிய ஆற்றலை சில நேரங்களில் வழங்கியிருந்தான். அதில் சில நபிமார்களைப் பற்றித்தான் குர்ஆனில் சொல்லியிருக்கின்றான். ஆனால் அதிகமான நபிமார்களுக்கு நாம் நினைத்துப் பார்க்க இயலாத அற்புதங்களை வழங்கியிருக்கின்றான். அந்த அற்புதங்களைப் பார்க்கும் போது கண்டிப்பாக இவர்கள் மனிதப் படைப்பே இல்லை என்பது போன்று தெரியும்.

நபிமார்கள் செய்த அற்புதங்களைப் பார்க்கும் போது, இதுவரை நாம் நபிமார்களை சாதாரண மனிதப் படைப்பு, அவர்களுக்குப் பிரத்தியேக ஆற்றல் இல்லை என்று நினைத்திருந்தோம். ஆனால் நபிமார்கள் அற்புதங்கள் செய்திருக்கிறார்களே! அப்படியானால் அவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள்தானே! அவர்களுக்கு ஆற்றல் இருக்கின்றதே! என்று தோன்றலாம்.

இதில் புரிந்து கொள்வதில் தான் தவறு இருக்கின்றது. நாம் இதற்கு முன் நாம் பார்த்தவற்றையும் இந்த அற்புதங்கள் நிகழ்த்திய சம்பவங்களையும் இணைத்துப் பார்த்தோமென்றால் நபிமார்களுக்கு தனிப்பட்ட முறையில் அற்புதங்கள் செய்வதற்கும் ஆற்றல் இல்லை என்பதும் தெளிவாகும்.

ஆனால் இவர்கள் தங்களுக்குத் தோதுவாக குர்ஆன் வசனங்களை வளைத்து நபிமார்கள் செய்த அற்புதங்களைப் பட்டியலிட்டு மக்களுக்குக் காட்டி, அதை இணை கற்பிப்பதற்கு பெரிய ஒரு ஆதாரமாகக் காட்டுவார்கள். இது சம்பந்தமான விஷயத்தில் நாம் தெளிவு பெற வேண்டியது கட்டாயமாகும். இதுவரை நாம் பார்த்ததற்கு மாற்றமாகத் தான் இந்த அற்புதங்கள் இருக்கும். இந்த இரண்டையும் எப்படி இணைப்பது? இரண்டையும் முரண் இல்லாமல் எப்படி விளங்கிக் கொள்வது? அதையும் நம்ப வேண்டும். இதையும் நம்ப வேண்டும். இரண்டையும்  முரண் இல்லாமல் எப்படி நம்புவது?

அவர்கள் அற்புதங்கள் என்ற வகையில் என்னென்ன ஆதாரங்களைக் காட்டுகிறார்கள்? அதை எந்த வகையில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்? நபிமார்கள் அந்த அற்புதங்களைச் செய்த காரணத்தினால் அவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டுப் போயிட்டாôர்களா? அந்த அற்புதங்களைச் செய்ததினால் அவர்களுக்கு எல்லா ஆற்றலும் இருக்கின்றது என்று புரிந்து கொள்வதா? அவ்வாறு புரிந்து கொள்ளக்கூடாதென்றால் அதற்குரிய காரணங்கள், ஆதாரங்கள் என்ன? என்பதை நாம் இனி பார்க்க இருக்கின்றோம்.

அற்புதங்களைப் பற்றி இஸ்லாத்தின் நிலைபாடு

நபிமார்களின் மூலமாக அல்லாஹ் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியதற்குத் திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. அதே நேரத்தில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட எல்லா நபிமார்களும் எந்த அற்புதத்தையும் செய்ய முடியாத அளவிற்கு சாதாரண மனிதராகத் தான் வாழ்ந்தார்கள் என்பதற்கும் நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. இதை எவ்வாறு எடுத்துக் கொள்வது என்பதில் தெளிவு இல்லாத காரணத்தினால் முஸ்லிம்களில் இரண்டு சாரார் வரம்பு மீறிச் சென்றதை நம்மால் காண முடிகின்றது.

அதில் ஒரு சாரார் திருக்குர்ஆனில் எங்கெல்லாம் அற்புதங்கள் என்று வருகின்றதோ அந்த வார்த்தைக்கு அற்புதங்கள் என்ற அர்த்தம் கிடயாது. அதற்கு வேறு ஒரு அர்த்தம் இருக்கின்றது என்று சொல்லி அற்புதங்களை மறுத்த ஒரு கூட்டம் இஸ்லாத்தின் பெயரால் முன்பு இருந்தார்கள். ஆனால் இப்போது அந்தக் கருத்தில் உள்ளவர்கள் இல்லாமல் போய்விட்டார்கள்.

இன்னொரு சாரார், நபிமார்களுக்கு நிகழ்ந்த அற்புதங்களைப் பார்த்து விட்டு இந்த அற்புதங்களைச் செய்த காரணத்தினால் ஒட்டுமொத்த நபிமார்களின் வாழ்க்கையே அற்புதம் தான். அவர்கள் எதைச் செய்தாலும் அற்புதம் தான். அவர்கள் மனிதர்களாக இருக்கவேயில்லை. அவர்களுக்கு எல்லாவிதமான இறைத்தன்மையும் இருக்கின்றது என்று சொல்லக்கூய ஒரு கூட்டம்.

அல்லாஹ் என்னென்ன அற்புதங்களை நிகழ்த்தினான் என்பதற்குத் திருக்குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலும் நமக்குச் சான்று கிடைக்கின்றதோ அதெல்லாம் இறைவனுடைய நாட்டப்படி நடந்தது, நடத்திக் காட்டப்பட்டது. ஒரு சில விரல் விட்டு எண்ணக்கூடிய அளவைத் தவிர மற்ற இலட்சக்கணக்கான சம்பவங்களுமே ஒரு சாதாரண மனிதனுடைய காரியமாகத் தான் இருக்கும். அவர்கள் நினைத்ததையெல்லாம் செய்து விட முடியாது என்று நம்ப வேண்டும். இது தான் சரியான நேர்மையான நியாயமான ஒரு முடிவாகும்.

அந்த அடிப்படையில், நபிமார்களுக்கு அற்புதங்கள் நிகழ்ந்தது என்பதை  கண்டிப்பாக நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக  வேண்டும். அவற்றை யாராவது மறுத்தார்களேயானால் அதிலும் குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் போது மறுப்பார்களேயானால் அவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களாவர். அற்புதங்களை மறுத்தவர்களும் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவார்கள். ஏனென்றால் இவர்கள் குர்ஆன் வசனங்களை மறுத்தவர்களாவர். அதே போன்று, அற்புதங்கள் செய்ததினால் அல்லாஹ்விற்குரிய ஆற்றல் நபிமார்களுக்கும் இருக்கின்றது என்று நம்பினாலும் அவர்களும் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவார்கள். ஏனென்றால் இவர்கள் நபிமார்களை அல்லாஹ்வுக்கு நிகராக, சமமாக ஆக்கி இணை கற்பித்தவர்களாவர். ஆக இவை இரண்டும் நம்மை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றக்கூடிய பயங்கரமான பாவங்களாகும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்த அற்புதங்களைப் பொறுத்த வரைக்கும் அல்லாஹ் எதற்காக நிகழ்த்துகிறான் என்றால், அல்லாஹ் ஒரு மனிதரைத் தூதராகத் தேர்வு செய்து அனுப்புகிறான். தூதராக அனுப்பவதாக இருந்தால் கூட, வானத்திலிருந்து ஒரு மனிதரைத்  தூதராக அனுப்புவதாக இருந்தால் அற்புதங்கள் தேவைப்படாது. இப்போது நான் வானத்திலிருந்து ஒரு தூதரை நான் அனுப்பப் போகின்றேன் என்று சொல்லி நாம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வானத்திலிருந்து ஒரு தூதர் இறங்கி வந்தால் அப்போது அவர் தூதர் தான் என்பதற்கு எந்த ஆதாரமும் தேவையில்லை. ஏனென்றால் அவர் நம்மைப் போன்று தாய் தந்தைக்கு பிறக்காமல், நம் (மனித) இனத்தைச் சாராதவராக இருப்பதினால் அவர் மீது யாரும் சந்தேகப்பட மாட்டார்கள். உலக மக்களும் அவரைத் தூதர் என்று ஏற்றுக் கொள்வதற்கு எந்த தயக்கமும் வராது.

ஆனால், அல்லாஹ் தூதரை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறான்? நம்மை போல ஒரு தாய் தந்தைக்குப் பிறந்து, சிறுவயதில் நாம் செய்கின்ற செயல்களைச் செய்து, பொதுவாக ஒரு மனிதராக வாழ்ந்த ஒருவரை தூதராகத் தேர்வு செய்து இந்தச் செய்தியை மக்களுக்கு சொல்லுமாறு சொல்கிறான். அவர் மக்களிடத்தில், “நான் இறைத்தூதர் என்னை நம்புங்கள்’ என்று சொன்னால் யாரும் அவரை நம்புவார்களா?

“நீ அல்லாஹ்வுடைய தூதர் என்று சொல்கிறாய்? எங்களைப் போன்று தானே இருக்கிறாய்? உனக்கு மட்டும் அல்லாஹ்விடமிருந்து செய்தி வருகின்றது என்று சொல்கிறாய்? உனக்குச் சொன்ன செய்தியை இறைவன் எங்களுக்கும் சொல்ல வேண்டியது தானே? உன்னைத் தூதர் என்று சொன்னால் நாங்கள் எப்படி நம்புவது?. அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு செய்தியை வாங்கித் தருவதற்கு உன்னை நியமித்திருக்கிறான் என்றால் எங்களை விட உன்னிடம் வித்தியாசமாக என்ன இருக்கிறது? எங்களை விட படைப்பில் நீ வித்தியாசப்படுகிறாயா? எங்களிடம் இருக்கின்ற தன்மைகளில் ஏதாவது ஒரு தன்மையில் நீ வித்தியாசமாக இருக்கின்றாயா? ஒன்றுமே இல்லையே! எல்லா வகையிலும் எல்லா நிலையிலும் எங்களைப் போன்று தானே இருக்கின்றாய் என்று எல்லா மக்களும் சந்தேகப்படுவார்கள்.

அந்த மக்கள் தூதர்களை சந்தேகப்படக்கூடாது என்பதற்காகத் தான் இறைவன் அவர்கள் இறைத்தூதர்கள் என்பதை நிருபிப்பதற்காக இறைவனே செய்து காட்டக்கூடிய சில காரியங்களை, அற்புதங்களை சில நேரங்களில் அல்லாஹ் அவர்கள் மூலம் நிகழ்த்திக் காட்டுகின்றான்.

இந்த அற்புதங்களைச் செய்து காட்டவில்லையென்றால் இவர்களை எப்படித் தூதர்களாக நம்புவார்கள்? அற்புதங்கள் எதுவும் செய்து காட்டாமல் ஒருவர் தன்னைத் தூதர் என்று சொல்ல மக்களும் அதை நம்புவார்களானால் இன்றைக்கு எல்லோருமே தூதராக ஆக்கப்பட்டிருப்பார்கள். தூதர் இல்லாதவர்களையும், பொய்யான- போலியான தூதர்களையும் தூதர்கள் என்று நம்ப வேண்டிய ஒரு நிலை மனித குலத்திற்கு ஏற்பட்டிருக்கும்.

மக்கள் இறைத்தூதர்களை, தூதர்கள் என்று ஏற்றுக் கொள்வதில் குழம்பி விடக்கூடாது என்பதற்காகத்தான் நபிமார்ககளுக்கு சில அற்புதங்களைக் கொடுத்து அனுப்புகின்றான்.

இன்னும் சில நேரங்களில் அவர்களைச் சார்ந்த மக்களுடைய நம்பிக்கையை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் அற்புதங்களை நபிமார்களுக்கு வழங்குவான். நபிமார்களுடன் அந்த மக்கள் இருப்பார்கள். அவர்கள் சிரமப்படுவார்கள். கஷ்டப்படுவார்கள். அதைத் தூதர்களிடம் வந்து முறையிடுவார்கள். நபிமார்கள், அல்லாஹ்விடம் துஆ செய்தவுடன் அற்புதமான முறையில் அவர்களுடைய பிரார்த்தனைக்கு ஒரு விளைவு ஏற்படும்.

இது எதனால் ஏற்படுகின்றது? அந்த மக்கள் அவரை  நபி என்று ஏற்றுக் கொண்டவர்கள் தான். அந்த சிரமங்கள் நீங்குவதன் மூலமாக அவர்களுடைய நம்பிக்கை மேலும் அதிகரிக்கும். அந்த நம்பிக்கை கொண்ட மக்களுக்கு சில நேரங்களில் இப்படி ஒன்றிரண்டு அற்புதங்களைச் செய்து காட்டும் போது தான் அந்த மக்களுக்கு அவர் மீது எந்த சந்தேகமும் ஏற்படாது. எந்த அற்புதமுமே செய்து காட்டாமல் சும்மாவே இருந்தால் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு சில காலத்திலலேயே இவர் என்ன? நம்மை போலத்தானே இருக்கிறார். இவரிடத்தில் நம்மை விட என்ன சிறப்பு இருக்கிறது? எந்த வித்தியாசத்தையும் இவரிடத்தில் காணோமே என்று ஷைத்தான் அவர்களுடைய உள்ளங்களில் தீய எண்ணத்தைத் தோன்றச் செய்து விடுவான். இதுபோன்ற எண்ணங்கள் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவான்.

உதாரணமாக,  மூஸா நபி காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறலாம்.

ஒரு காளை மாட்டை நீங்கள் அறுக்க வேண்டும் என அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்என்று மூஸா, தமது சமுதாயத்திடம் கூறிய போது “எங்களைக் கேலிப் பொருளாகக் கருதுகிறீரா?” என்று கேட்டனர்.

உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! “அது எத்தகையதுஎன்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான்என்று அவர்கள் கேட்டனர். “அது கிழடும், கன்றும் அல்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட மாடு என்று அவன் கூறுகிறான். எனவே உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்!என்று அவர் கூறினார்.

உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! “அதன் நிறம் என்னஎன்பதை எங்களுக்கு அவன் விளக்குவான்என்று அவர்கள் கேட்டனர். “அது பார்ப்போரைப் பரவசப்படுத்துகிற கருமஞ்சள் நிற மாடு என்று அவன் கூறுகிறான்என்றார்.

உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! “அது எத்தகையதுஎன்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான். அந்த மாடு எங்களைக் குழப்புகிறது. அல்லாஹ் நாடினால் நாங்கள் வழி காண்போம்என்று அவர்கள் கூறினர்.

அது நிலத்தை உழவோ, விவசாயத்துக்கு நீரிறைக்கவோ பழக்கப்படுத்தப்படாத மாடு; குறைகளற்றது; தழும்புகள் இல்லாததுஎன்று அவன் கூறுவதாக (மூஸா) கூறினார். “இப்போது தான் சரியாகச் சொன்னீர்என்று கூறி செய்ய முடியாத நிலையிலும் (மிகுந்த சிரமப்பட்டு) அம்மாட்டை அவர்கள் அறுத்தனர்.

நீங்கள் ஒருவரைக் கொன்று விட்டு அது குறித்து விவாதித்துக் கொண்டிருந்ததையும் எண்ணிப் பாருங்கள்! நீங்கள் மறைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் வெளிப்படுத்துபவன்.

அதன் (மாட்டின்) ஒரு பகுதியால் அவரை (கொல்லப்பட்டவரை) அடியுங்கள்!என்று கூறினோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தோரை உயிர்ப்பிக்கிறான். நீங்கள் விளங்குவதற்காக தனது சான்றுகளை உங்களுக்குக் காட்டுகிறான்.

(அல்குர்ஆன் 2. 67-71)

மேற்கண்ட வசனத்தில் மூஸா நபி காலத்தில் ஒரு மனிதர் கொல்லப்படுகின்றார். அவரை யார் கொன்றார்கள் என்பது தெரியவில்லை. உடனே அங்கு வாழ்ந்த மக்கள் மூஸாவிடம் வந்து இந்த மனிதரை கொலை செய்தவார் யார் என்று தெரியப்படுத்துங்கள் என்று கேட்டனர். அப்போது அவர்கள் அல்லாஹ்விடம் முறையிடுகிறார்கள். ஒரு மாட்டை அறுத்து அந்த மாட்டின் ஒரு பகுதியால் அவரை அடிப்பீராக! அவர் உயிர் பெற்று, தன்னைக் கொன்றவரை அடையாளம் காட்டுவார் என்ற சொன்னவுடன் மூஸாவும் அவ்வாறே செய்தார். இப்படியாக ஒரு சம்பவம் அல்பகரா என்ற அத்தியாயத்தில் இடம் பெறுகின்றது.

இந்த அற்புதத்தை, அதாவது இறந்தவரை உயிர்ப்பித்த செயலை மூஸா நபி அல்லாஹ்வின் உதவியால் தான் செய்தார்களே தவிர தாமாகச் செய்யவில்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இறந்த ஒரு நபர் தானாக எழுந்து, “என்னைக் கொன்றவர் இவர்தான்’ என்று சொல்வது ஒரு அற்புதமான செயல்தான்.

வளரும் இன்ஷா அல்லாஹ்