மாநபியும் மனிதரே!

இணை கற்பித்தல்    தொடர்: 24

மாநபியும் மனிதரே!

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதற்கான ஆதாரங்களைப் பார்த்து வருகிறோம். நபிகள் நாயகத்தின் பிரியத்திற்குரிய மனைவியான அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு கூறப்பட்ட சம்பவத்தைக் கடந்த இதழில் கண்டோம். நபியவர்களுக்கு மறைவான செய்திகள் தெரியாது என்பதை விளக்க இதைவிடப் பெரிய ஆதாரம் தேவையில்லை எனும் அளவுக்கு இந்த அவதூறு சம்பவம் சான்றாக அமைந்துள்ளது.

நபிகளாருக்கு மறைவான ஞானம் தெரியாது என்பதற்கு இன்னும் ஏராளமான சான்றுகள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் “அன்னையே!  முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (மிஅராஜ்-விண்ணுலகப் பயணத்தின் போது நேரில்) பார்த்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சி-ர்த்து விட்டது. மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின? அவற்றை உங்களிடம் யார் தெரிவிக்கின்றாரோ அவர் பொய்யுரைத்து விட்டார். முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் யார் கூறுகிறாரோ அவர் பொய் சொல்-விட்டார்என்று கூறிவிட்டு, பிறகு “கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கின்றான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான்எனும் (6:103ஆவது) வசனத்தையும், “எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும் வஹியின் (வேத அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பா-ருந்தோ, ஒரு தூதரை அனுப்பி வைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லைஎனும் (42:51ஆவது) வசனத்தையும் ஓதினார்கள்.

மேலும், “எவர் உங்களிடம் முஹம்மது (ஸல்) அவர்கள் நாளை நடப்பவற்றையும் அறிவார்கள்என்று சொல்கிறாரோ, அவரும் பொய்யே சொன்னார்என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) “எந்த மனிதனும் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லைஎனும் (31:34ஆவது) வசனத்தை ஓதினார்கள். மேலும், “எவர் உங்களிடம் முஹம்மது (ஸல்) அவர்கள் (மக்களுக்கு எடுத்துரைத்துவிடுமாறு பணிக்கப் பட்ட ஒன்றை) மறைத்துவிட்டார்கள்என்று சொன்னாரோ, அவரும் பொய்யே சொன்னார்என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) “தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுங்கள்…எனும் (5:67ஆவது) வசனத்தை ஓதினார்கள். “மாறாக, முஹம்மது (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களையே அவரது (நிஜத்) தோற்றத்தில் இரண்டு முறை கண்டார்கள்என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக் பின் அஜ்தஉ, நூல்: புகாரி 4855

ஆயிஷா (ரலி) அவர்களுடைய இயல்பு என்னவென்றால் யாரிடமும் எந்த ஒரு விஷயத்தைப் பேசுவதாக இருந்தால் அதற்கான ஆதாரத்தைச் சொல்லித்தான் பேசுவார்கள். குர்ஆன் வசனத்தையோ அல்லது அல்லாஹ்வின் தூதர் இவ்வாறு சொன்னார்கள் என்று ஆதாரத்தையோ குறிப்பிட்டே பேசுவார்கள்.

அந்த அடிப்படையில் நாம் ஒருவரைப் பற்றி அவருடைய குணங்கள் – தன்மைகள், அவர் நல்லவனா கெட்டவரா ஆகியவற்றைப் பற்றி தெரிவதாக இருந்தால் அவருடைய மனைவியிடம் கேட்டாலே அவரைப் பற்றிய முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம். அல்லது அவருடைய நண்பனிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அவரைப் பற்றி ஒன்று விடாமல் சொல்லி விடுவார்கள்.

இந்த ஹதீஸில் தன்னுடைய கணவரும் ஒரு மனிதர் தான். அவருக்கு மறைவான விஷயங்களை அறிந்து கொள்ளும் ஆற்றல் இல்லை என்பதை வெறும் வாய் வார்த்தையாக மட்டும் சொல்லாமல் இறைவசனத்தை ஆதாரமாகக் காட்டி மக்களுக்குத் தெளிவுபடுத்துகிறார்கள். ஏனென்றால் இறைவனை ஏற்றுக் கொள்ளாத மக்கள் – எதிரிகள் அனைவரும் அல்லாஹ்வின் தூதருடைய பிரச்சாரத்தை முறியடிப்பதற்காக இவரை சூனியக்காரர் என்று மக்களிடம் பொய் பிரச்சாரத்தை பரப்பினால் மக்கள் நம்பி விடுவார்கள். அவரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று எண்ணம் கொண்டிருந்தனர். அந்த எதிரிகளின் பொய்ப் பிரச்சாரத்தை அவர்களின் தவறான எண்ணங்களைப் பொய்ப்பிக்கும் விதமாகத் தான் ஆயிஷா (ரலி) அவர்கள் ஆதாரங்களோடு நிருபிக்கிறார்கள்.

அதிலும் நபிகளாருக்கு மறைவான விஷயங்கள் அறியும் ஆற்றல் இருக்கிறது என்றால் முதலில் அவர்களுடைய மனைவிக்குத் தான் தெரிய வேண்டும். ஏனென்றால் எந்த ஒரு பெண்ணும் தன்னுடைய கணவணை 24 மணி நேரமும் கண்காணிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். தெருவில் யாராவது ஒரு பெண்ணுக்கு தனது கணவன் உதவி செய்வதைப் பார்த்துவிட்டால் அல்லது ஒரு வீட்டின் முன் நின்று பெண்ணிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டால் அல்லது செல்போனில் அதிக நேரம் அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் அதிக நேரம் செல்போனில் பேசிவிட்டோம் என்றால் அவ்வளவுதான். வீடே இரண்டாகிவிடும். அவளுடன் என்ன உங்களுக்கு என்ன பேச்சு? அப்படி எதைத் தான் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தீர்கள்? யாரிடம் போனில் சிரித்து சிரித்து இவ்வளவு நேரம் பேசிக்கொண்டிருந்தீர்கள்? என்று துருவி துருவி விசாரிக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த அளவுக்குப் பெண்கள் தன்னுடைய கணவனை கண்காணிக்கக் கூடியவர்களாக  இருப்பார்கள். இது அவர்களுடைய இயல்பான குணங்களில் ஒன்று என்றே சொல்லலாம்.

இப்படி இருக்கும் போது நபிகள் நாயகத்துக்கு மறைவான விஷயங்கள் தெரியும்; நாளை நடக்கும் விஷயங்களை அறிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கின்றது. நபியவர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு தன்மையை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறான் என்றால் அவர்களுடைய 12 மனைவிமார்களில் ஒருவருக்குக் கூடவா இந்த விசயம் தெரியாமல் போய்விட்டது? ஒருவேளை நபியவர்கள் தன்னுடைய மனைவிமார்களிடத்தில் சொல்ல மாட்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட அவர்களுடைய பழக்கவழக்கங்கள்- நடவடிக்கைகளைப் பார்த்தாவது கண்டுபிடித்திருப்பார்களே!

எனவே நபியவர்களுக்கு மறைவான விஷயம் தெரியும் என்று யார் சொன்னாலும் அவன் பொய்யன் தான். அது குர்ஆனுக்கு மாற்றம்தான். குர்ஆனில் அல்லாஹ் சொன்னதற்கு எதிராக இருக்கின்றது. அப்படி ஒரு நிலைமை அல்லாஹ்வின் தூதருக்கு இருக்கவில்லை என்று மறுக்கிறார்கள்.

இதுதொடர்பாக மேலும் ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்.

இந்த உலகில்  புகழை விரும்பாத எந்த ஒரு மனிதருமே கிடையாது. செய்தவற்றிற்குப் புகழை விரும்பினால் கூட பரவாயில்லை. ஆனால் செய்யாத செயல்களுக்காகப் புகழை விரும்புபவர்களும் இருக்கிறார்கள். அதிலும் வரம்பு மீறி தன்னை யாராவது புகழ்ந்தால் அதற்காகப் பெருமைப்படக் கூடியவர்களும் நம்மில் இருக்கிறார்கள். ஆனால் நபியவர்கள் அந்தப் பெருமையை விரும்பாதவர்களாக இருந்தார்கள். தன்னை வரம்பு மீறிப் புகழ்ந்த ஒரு சிறுமியை அவர்கள் அவர்கள் கண்டித்த செய்தியை நாம் காணலாம்.

எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். -(இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் பின் தக்வான் -ரஹ்- அவர்களிடம்) “எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள்” (என்று ருபய்யிஉ கூறினார்கள்)- அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, “எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், “இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி), நூல்: புகாரி 4001

மேலும் நபிகளாருக்கு மறைவான ஞானம் இல்லையென்பதற்கு மற்றொரு சம்பவமும் சான்றாக அமைகிறது.

என்னிடத்தில் ஒரு பெண்மணி அமர்ந்திருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் (வீட்டுக்கு) வந்தார்கள். “யார் இவர்?” என்று கேட்டார்கள். நான் “இவர் இன்னவர்?’ என்று கூறிவிட்டு அவரது தொழுகை பற்றி (“அவர் அதிகம் வணங்குபவர்என்று புகழ்ந்து) கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “போதும் நிறுத்து! (வணக்கவழிபாடுகள் உள்ளிட்ட) நற்செயல்களில் உங்களால் முடிந்தவற்றைச் செய்துவாருங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படையமாட்டான். மேலும் மார்க்கத்தின் நல்லறங்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது, நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள்தான்என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 43

இச்சம்பவத்தில் நபிகளாருக்கு மறைவான ஞானம் இல்லையென்பது தெள்ளத் தெளிவாக விளங்குகின்றது. ஏனென்றால் நபிகளாருக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் தனது வீட்டில் இருந்த பெண்ணை யார் இவர் என்று கேட்டிருக்க மாட்டார்கள். மாறாக நீங்கள் இன்னார்தானே? நன்றாக இருக்கிறீர்களா என்று அந்தப் பெண்ணை நலம் விசாரித்திருப்பார்கள். நமக்குத் தெரியாத நபர் நம் வீட்டிற்கு வந்தால் நாம் எப்படி இருப்போமோ அந்த மாதிரிதான் நபிகளாரும் நடந்து கொண்டதைப் பார்க்கலாம். நாம் எவ்வாறு அறிமுகம் இல்லாத நபரை யாரென கண்டுபிடிக்க முடியாதோ அந்த மாதிரி தான் நபிகளாரும் இதுவரை அறிமுகம் இல்லாத அந்தப் பெண்ணைப் பார்த்தபோதும் இவர் யார் எனக் கேட்டார்கள்.

அதுபோன்று பஹ்ரைன் என்ற ஊரிலிருந்து இஸ்லாத்தை ஏற்ற அப்துல் கைஸ் என்ற ஒரு கூட்டம் நபியவர்களிடம் வருகிறார்கள். முதன் முதலாக மதினாவிற்கு வெளியே ஜும்ஆ நடத்தப்பட்ட ஊரும் அதுதான். முதன் முதலாக ஒரு ஊரே இஸ்லாத்திற்கு வந்தது என்று சொன்னால் அது பஹ்ரைன் தான். அத்தகைய சிறப்புகளைப் பெற்ற அந்த ஊரிலிருந்து ஒரு கூட்டம் நபிகளாரைப் பார்ப்பதற்கு வருகிறது. அவர்கள் நபிகளாரிடத்தில் வந்த உடன் அவர்களைப் பார்த்து இவர்கள் யார்? இவர்கள் எங்கிருந்து வந்திருக்கிறார்கள்? ஏன் வந்திருக்கிறார்கள்? என்று கேட்கிறார்கள். அதற்கு பிறகு தான் அந்தக் கூட்டம் தாங்கள் யார் என்பதை நபிகளாருக்கு அறிமுகம் செய்கிறார்கள். (பார்க்க: புகாரி53

நபியவர்கள் ஏன் அந்தக் கூட்டத்தினரைப் பார்த்து அவ்வாறு கேட்க வேண்டும்? நபியவர்களுக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் அந்தக் கேள்வியை அவர்கள் கேட்டிருக்க மாட்டார்கள். அதுமட்டுமல்லாமல் அந்தக் கேள்வியைக் கேட்காமல் அவர்கள் வந்திருந்த மாத்திரத்திலேயே அவர்கள் யார் என்பதையும் கண்டுபிடித்து, வாருங்கள், நீங்களா? நீங்கள் பஹ்ரைன் நாட்டைச் சார்ந்தவர்கள் தானே என்று அவர்களை வரவேற்றிருப்பார்கள். ஆனால் இந்த கேள்வியை கேட்டதிலிருந்தே நபியவர்களுக்கு மறைவான ஞானம் இல்லையென்பது தெளிவாகிறது.

(நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில்  தங்கியிருந்த இரவில்) நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழைந்தார்கள். அப்போது (அவர்கள் “அங்கசுத்திசெய்வதற்காக) அவர்களுக்காக நான் தண்ணீர் வைத்தேன். அவர்கள் (திரும்பிவந்ததும்), “இதை வைத்தவர் யார்?” என்று கேட்டார்கள். (என்னைப் பற்றித்) தெரிவிக்கப்பட்டது. உடனே “இறைவா! இவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பாயாக!என்று (எனக்காக) நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 143

இந்த ஹதீஸில் நபியவர்களுக்குத் தண்ணீர் எடுத்து வைத்தவர் யார் என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. தண்ணீர் எடுத்து வைத்த அனஸ் (ரலி) அவர்கள் பக்கத்தில் தான் நிற்கிறார்கள். அதுவும் தண்ணீர் எடுத்து வைத்து சில நிமிடங்கள் கூட ஆகவில்லை. ஆனால் அவர்களால் இதைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் போனதே! அவர்களுக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் அந்த இடத்தில் இந்த கேள்வியைக் கேட்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்காது. நீதான் இந்த (தண்ணீர் எடுத்து வைத்த) செயலை செய்தாயா? அல்லாஹ் உனக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பானாக என்று துஆ செய்திருப்பார்களே! ஆனால் சில நிமிடங்களுக்க முன்னால் நடந்த செயலை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால் நாம் என்ன விளங்கி வைத்திருக்கிறோம்? அவ்லியாக்கள் என்பவர்கள் மனித சக்திகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள்; அவர்கள் நேற்று நடந்ததையும் இன்று நடப்பதையும் நாளை நடக்க இருப்பதையும் சூழ்ந்து அறியக்கூடியவர்கள்; பல வருடங்களுக்கு முன்னால் நடந்ததையெல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு அதைப் பற்றி கேட்டால் அதை யோசிக்காமல் சொல்பவர்கள் என்று நம்பிக் கொண்டு இருக்கின்றோம். ஆனால் அவ்லியாக்களுக்கெல்லாம் அவ்லியாவான நபியவர்கள் தமக்கு முன்னால் நடந்த செயலைக் கூட அறியாதவர்களாக இருந்திருக்கிறார்கள். இவையனைத்தும் நபியவர்கள் மனிதர் தான் என்பதற்குச் சான்றாக அமைகின்றன.

வளரும் இன்ஷா அல்லாஹ்