மறைவான ஞானம்

இணை கற்பித்தல்   தொடர்: 21

மறைவான ஞானம்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

எவ்வளவு பெரிய மகானாக இருந்தாலும், நபிமார்களாக இருந்தாலும் அவர்கள் எல்லா வகையிலும் மனிதர்களாகத் தான் இருந்தார்களே தவிர இறைவனுடைய தன்மையை, அதிகாரத்தை, ஆற்றலைப் பெற்றவர்களாக ஒருபோதும் இருக்கவில்லை.

ஒரு மனிதன் அடுத்த மனிதனைப் பற்றி வெளிப்படையான விஷயங்களை மட்டுமே அறிந்து வைத்திருக்க முடியும். ஒரு மனிதனுடைய மறைவானதை இன்னொரு மனிதன் அறிய முடியுமா என்றால் நிச்சயம் முடியாது. நபிமார்களுடைய நிலைமையும், நபிகள் நாயகத்தின் நிலையும் இவ்வாறு தான் இருந்தது என்பதற்குத் திருக்குர்ஆன் பல சான்றுகளை நமக்கு முன் வைக்கிறது.

நபி இப்ராஹீம் அவர்களுக்குக் குழந்தை பெறுகின்ற நற்செய்தியை சொல்வதற்காக வானவர்களை அல்லாஹ் அனுப்புகிறான். அவர்கள் ஆச்சரியப்பட்டு, “நான் வயது முதிர்ந்தவனாக இருக்கிறேன். எனக்கு எப்படிக் குழந்தை பிறக்கும்’ என்று அவர்கள் கேட்கிறார்கள் என்ற சம்பவங்களை நாம் இதற்கு முன் பார்த்தோம்.

இப்போது நாம் பார்க்க வேண்டிய செய்தி என்னவென்றால், மலக்குகள் இப்ராஹீம் நபியைச் சந்தித்து நற்செய்தியைக் கூற வருகிறார்கள். அப்போது மனிதர்களின் உருவத்தில் வருகிறார்கள். மனித உருவத்தில் வந்தவுடன் அவர்கள் மலக்குகள் என்பதை அறியாமல் அவர்களுக்கு விருந்தளித்து உபசரிக்கிறார்கள். ஆனால் மலக்குகள் அந்த உணவைச் சாப்பிடவில்லை. அவர்கள் இந்த உலகத்தில் உள்ள எந்த உணவையும் சாப்பிடவும் மாட்டார்கள். அவர்கள் முன்பாக வைக்கப்பட்ட சாப்பாட்டை அவர்கள் சாப்பிடாததைக் கண்ட இப்ராஹீம் நபிக்கு மனதிற்குள் சந்தேகம் ஏற்படுகிறது. இதை அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.

நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தனர். ஸலாம் என்று அவர்கள் கூறினர். அவரும் ஸலாம் என்றார். பொரிக்கப்பட்ட கன்றுக் குட்டியைத் தாமதமின்றி கொண்டு வந்தார்.

அவர்களின் கைகள் (உண்பதற்கு) அதை நோக்கிச் செல்லாததைக் கண்ட போது, அறிமுகமற்றவர்களாக அவர்களைக் கருதினார். அவர்களைப் பற்றி மனதுக்குள் பயந்தார். பயப்படாதீர்! நாங்கள் லூத் உடைய சமுதாயத்திற்காக அனுப்பப்பட்டுள்ளோம்என்று அவர்கள் கூறினர்.

அல்குர்ஆன் 11:69, 70

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் நம் கண்களுக்கு மலக்குகள் தென்பட மாட்டார்கள். அவர்களை நாம் பார்க்கவும் முடியாது. நம்முடன் இரண்டு மலக்குகள் எப்போதும் இருந்து கொண்டே இருப்பார்கள். அவர்களை நாம் என்றைக்காவது பார்த்திருப்போமா? இல்லை.

ஆனால் மலக்குமார்கள் வருகிறார்கள் என்றால் அதை நபிமார்கள் அறிந்து கொள்வார்கள்.

உதாரணத்திற்குச் சொல்வதாக இருந்தால் பத்ருப் போர்க்களத்தில் குதிரையில் அமர்ந்தவாறு வந்த ஜிப்ரிலைக் கண்டு, இதோ வானவர் ஜிப்ரில் தனது குதிரையில் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

மலக்குமார்கள் மனித வடிவத்தில் வந்தாலும் இவர்கள் மலக்குமார்கள் தான் என்று இறைவன் அறிவித்துக் கொடுத்தால் அவர்களுக்குத் தெரிந்து விடும்.

ஆனால் இப்ராஹீம் நபியவர்களிடம் மலக்குகள் வந்த போது, மனித வடிவில் வந்திருப்பது மலக்குகள் தான் என்பது தெரிந்ததா? அவர்களை அழைத்து உட்கார வைத்து உணவைச் சமைத்து அவர்கள் முன் வைக்கும் வரை வந்திருப்பவர்கள் மலக்குகள் என்பதை அறியாமலேயே இருந்தார்கள்.

ஏன் அவர்களால் அறிய முடியவில்லை?

மனிதனுக்குள்ள அறிவைக் கொண்டு என்ன விளங்க முடியுமோ அதைத்தான் அவர்களாலும் விளங்க முடிந்தது. நம் முன்னால் ஒருவர் மனிதத் தோற்றத்தில் வந்தால் அவர் மனிதராக இல்லாவிட்டாலும் அவரை மனிதராகத் தான் நாம் நினைப்போம். வேறு விதமாக நாம் நினைக்க மாட்டோம். அதே போன்று தான் இப்ராஹீம் நபியும் வந்திருப்பவர்கள் மனிதர்கள் விருந்தாளிகள் என்று தான் நினைத்தாரே தவிர, அவர்கள் இறைவனால் அனுப்பப்பட்ட மலக்குகள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

அவர் மலக்கா? மனிதரா என்பது ஐந்து புலன்களில் வராது. அவர்கள் யார் என்பதை முன்பே அல்லாஹ் அறிவித்துக் கொடுத்தால் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். சிந்தித்துப் பார்த்து இவர் மலக்கா? மனிதரா? என்று அறிய முடியாது. மலக்குகளை மனிதத் தோற்றத்தில் அல்லாஹ் அனுப்பியதை ஒரு நபியால் கூட அறிய முடியவில்லை என்பதற்கு இது சான்றாக அமைகிறது. மேலும் 51வது அத்தியாயம் 28வது வசனத்திலும் இதைப்பற்றிக் கூறுகிறான்.

ஆக, இப்ராஹீம் நபியவர்களுக்கு வந்திருப்பது மலக்கு என்று தெரியாமல் போனது ஏன்? அதை அறிந்து கொள்ளும் மறைவான ஞானத்தை அல்லாஹ் அவருக்குக் கொடுக்கவில்லை.

நாம் கண், காதுகளைக் கொண்டு எவற்றை அறிகின்றோமோ அவ்வாறு தான் நபிமார்களும் அறியக்கூடியவர்களாக இருந்தார்களே தவிர, நபிமார்களுக்கு ஞானக்கண் என்ற ஒரு கண் இருக்கிறது; அவர்கள் அதைக் கொண்டு அனைத்தையும் பார்ப்பார்கள் என்று சொல்வது தவறாகும். எல்லா மனிதர்களுக்கும் இருப்பதைப் போன்று அவர்களுக்கும் இரண்டு கண்கள் இருந்ததே தவிர, அவர்களுக்கு முதுகுக்குப் பின்னால் ஒரு கண் இருக்கிறது. அவர்கள் அதன்மூலம் பின்னால் நடக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்வார்கள் என்று கட்டுக்கதைகளை நம்பி வைத்திருக்கிறார்கள்.

அந்த மலக்குகள் இப்ராஹீம் நபிக்கு நற்செய்தி சொல்லிவிட்டுப் பின்பு லூத் நபி சமுதாயத்தை அழிப்பதற்காக லூத் நபியிடம் செல்கிறார்கள்.

அவர்களுக்கும் வந்திருப்பவர்கள் மலக்குகள் என்பது தெரியவில்லை. அவர்கள் மலக்குகளுக்குண்டான எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் அவரிடத்தில் வருகிறார்கள். அவர்களை மனிதர்கள் என்று நினைத்து கொண்டு, நீங்கள் யார்? நான் உங்களை இதுவரை பார்த்ததில்லையே! உங்களைப் பார்ப்பதற்கு வெளியூர் ஆட்கள் மாதிரி தெரிகிறதே! என்று அவர்களிடம் கேட்கிறார்கள். இதைப்பற்றி அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்.

அத்தூதர்கள் லூத்துடைய குடும்பத்தாரிடம் வந்த போது “‘நீங்கள் அறிமுகமற்ற சமுதாயமாக இருக்கிறீர்களே’ என்று அவர் கூறினார்.

(அதற்கவர்கள்) “அவ்வாறில்லை! அவர்கள் சந்தேகித்ததை உம்மிடம் கொண்டு வந்துள்ளோம்; உண்மையையே உம்மிடம் கொண்டு வந்தோம்; நாங்கள் உண்மை கூறுபவர்கள்; இரவின் ஒரு பகுதியில் உமது குடும்பத்தாருடன் செல்வீராக! அவர்களைப் பின் தொடர்ந்து (கடைசியில்) நீர் செல்வீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். கட்டளையிட்டவாறு செய்து முடியுங்கள்!என்று கூறினார்கள்.

அல்குர்ஆன் 15:61-65

இப்ராஹீம் நபிக்கும் லூத் நபிக்கும் மறைவான ஞானம் இருந்திருந்தால், மறைவான விஷயங்களை அறியக்கூடிய ஆற்றல் இருந்திருந்தால் இப்ராஹீம் நபி இப்படி நடந்து கொண்டிருப்பார்களா? அல்லது லூத் நபி இந்த கேள்வியைக் கேட்டிருப்பார்களா? கேட்டிருக்கவே மாட்டார்கள்.

“வாருங்கள்! நீங்கள் எனக்கு குழந்தை பற்றிய நற்செய்தி கூறத்தானே வந்திருக்கிறீர்கள். எங்களுக்கு நற்செய்தி சொல்லிவிட்டுப் பிறகு லூத் சமுதாயத்தை அழிக்கத்தானே போகிறீர்கள்’ என்று இப்ராஹீம் நபி அவர்கள் சொல்லியிருப்பார்களே!

“நீங்கள் இந்த சமுதாயத்தை அழிப்பதற்காகத்தான் வந்திருக்கிறீர்களா? இவர்களை அழித்து விடுங்கள். இவர்கள் யாரையும் விட்டு வைக்காதீர்கள்’ என்று லூத் நபியும் சொல்லியிருப்பார்களே!

இந்தச் சம்பவங்கள் எதைக் காட்டுகின்றன? அவர்களுக்குரிய அறிந்து கொள்ளும் தன்மை எல்லா மனிதர்களுக்கும் இருந்ததைப் போன்று தான் இருந்தது. மெஞ்ஞானம் எதுவும் கிடையாது. இவருக்கு மறைவான ஞானம் இல்லை என்பதை இந்தச் சம்பவங்கள் நமக்குக் காட்டவில்லையா?

ஜின்களுக்கு மறைவான ஞானம் உண்டா?

ஜின்கள் எனும் படைப்பு நம்மை விட வித்தியாசமான, விசித்திரமான படைப்பாக இருக்கிறார்கள். நம்மை விட எல்லாக் காரியத்தையும் விரைவாக வேகமாக செய்யக்கூடிவர்களாக இறைவன் ஜின்களைப் படைத்திருக்கிறான். அந்த ஜின்களை சுலைமான் நபிக்கு இறைவன் வசப்படுத்திக் கொடுத்ததைப் பற்றி சென்ற இதழில் நாம் பார்த்தோம்.

சுலைமான் நபியவர்கள் பைத்துல் முகத்தஸ் என்ற ஆலயத்தை ஜின்களின் உதவியுடன் கட்டுகின்றார்கள். இந்த ஆலயம் மனிதர்களால் கட்டப்பட்டது அல்ல. ஜின்கள் கட்டிய பள்ளியாகும். அந்த ஆலயத்தைக் கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது ஜின்கள் கட்டுமானப் பணியை சரியாக மேற்கொள்கிறார்களா? அல்லது ஏமாற்றுகிறார்களா? என்று ஜின்களைக் கண்காணிக்கும் பணியில் சுலைமான் நபியவர்கள் ஈடுபடுகிறார்கள்.

அவ்வாறு நின்று கொண்டிருக்கும் போது, நின்ற நிலையிலேயே சுலைமான் நபியவர்கள் மரணித்து விடுகிறார்கள். அப்போது அவருடைய கையில் ஒரு கைத்தடி ஒன்றைப் பிடித்த நிலையில் இறந்து விடுகிறார்கள். அவர் இறந்து போனது அங்கிருந்த ஜின்களுக்குத் தெரியவில்லை. கட்டட வேலை முடிந்த பிறகு அல்லாஹ் கரையானை அனுப்பி வைக்கிறான். அந்தக் கரையான்கள் அவருடைய கைத்தடியை அரிக்கின்றன. கரையான்கள் அவருடைய கைத்தடியை முழுமையாக அரித்து, அவர் கீழே விழுந்த பிறகு தான் அந்த ஜின்களுக்கு சுலைமான் நபி இறந்து விட்டார் என்பது தெரிகிறது. இதைப்பற்றி அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் கூறுகிறான்.

அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்) தான் அவரது மரணத்தைக் காட்டிக் கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழிவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க மாட்டோமே என்பதை ஜின்கள் விளங்கிக் கொண்டன.

அல்குர்ஆன் 34:14

சுலைமான் நபி ஜின்களின் கண் முன்னே இருக்கிறார். அவர் உயிருடன் இருக்கிறாரா? அல்லது மரணித்து விட்டாரா என்பது ஜின்களுக்குத் தெரியவில்லை. பெரிய பெரிய விஷயங்கள் எல்லாம் செய்யக்கூடிய ஜின்களுக்கு சுலைமான் நபி இறந்தது தெரியவில்லை. தங்களுக்கு முன்னால் சுலைமான் நபி நின்று நம்மை கவனித்துக் கொண்டு இருக்கிறார் என்பதை அறிந்த ஜின்களுக்கு அவர் இறந்தது தெரியாமல் போனது.

இதுதான் மறைவான விஷயமாகும். எவ்வளவு பெரிய சக்தி, ஆற்றல் நமக்கு இருந்தும் கூட மறைவான விஷயங்கள் தெரியாமல் போனதே என்று அப்போது தான் அவர்களுக்கு விளங்கியது. மறைவான விஷயம் மட்டும் நமக்குத் தெரிந்திருந்தால் அவர் இறந்தது தெரிந்தவுடனேயே நாம் இந்த இடத்தை விட்டு ஓடியிருக்கலாமே? இவ்வளவு சிரமம் மேற்கொள்ள வேண்டியதில்லையே என்று புலம்பினார்கள்.

மலக்குகளுக்கும் மறைவான ஞானம் இல்லை

ஆதம் நபியை முதன் முதலாக அல்லாஹ் படைக்கும் போது மலக்குமார்கள் அதற்கு அதிருப்தியைத் தெரிவிக்கிறார்கள். மறைவான விஷயங்கள் தெரிய வேண்டுமென்றால் முதலில் ஜின்களை விட, நபிமார்களை விட மலக்குமார்களுக்குத் தான் தெரிந்திருக்க வேண்டும். ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் படைக்கும் போது மலக்குமார்கள், நீ அவர்களைப் படைக்க வேண்டாம் என்கிறார்கள். இதைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்:

பூமியில் நான் ஒரு தலைமுறையைப் படைக்கப் போகிறேன்என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது, “அங்கே குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்துவோரையா அதில் படைக்கப் போகிறாய்? நாங்கள் உன்னைப் புகழ்ந்து போற்றுகிறோமே; குறைகளற்றவன் என உன்னை ஏற்றுக் கொண்டிருக்கிறோமேஎன்று கேட்டனர். “நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன்என்று (இறைவன்) கூறினான். அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி, “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்!என்று கேட்டான். “நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்என்று அவர்கள் கூறினர்.

ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்குக் கூறுவீராக!என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் கூறிய போது, “வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக் கொண்டிருந்ததையும் அறிவேன் என்றும் உங்களிடம் கூறவில்லையா?” என (இறைவன்) கேட்டான்.

அல்குர்ஆன் 2:30-32

மேற்கண்ட வசனங்கள் சுட்டிக்காட்டக்கூடிய செய்தி என்ன? இந்த ஆதம் நமக்கெல்லாம் அறிவாளியாக இருப்பார். இறைவன் வைத்த இந்தப் பரீட்சையில் வெற்றி பெற்று விடுவார் என்பது மலக்குமார்களுக்கே தெரியவில்லை.

ஏதோ இந்த மனிதர்கள் உலகில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியவர்களாக, ஒருவருக்கொருவர் வெட்டிக் கொண்டு இரத்தம் சிந்துபவர்களாகத் தான் இருப்பார்கள் என்றே நினைத்திருந்தார்கள். எத்தகைய சிறப்புமிக்க நபிமார்களாக இருந்தாலும், ஜின்களாக இருந்தாலும், எத்தகைய வலிமை மிக்க மலக்குமார்களாக இருந்தாலும் அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகின்றது. இறைவனும் பல சம்பவங்கள் வாயிலாக நமக்கு உணர்த்துகின்றான்.

மேலும், அல்லாஹ் ஒவ்வொரு மலக்குமார்களுக்கென்று சில பணிகளை ஒதுக்கியிருக்கிறான். அவன் சொன்ன கட்டளையை ஏற்று அவர்கள் அந்தப் பணிகளை செவ்வனே செய்து வருவார்கள். அவனுடைய கட்டளைக்கு எந்த மலக்குமார்களும் மாறு செய்ய மாட்டார்கள்.

அவர்களுடைய பணிகளில் சில: 1) வஹீயைக் கொண்டு வருதல். 2) நன்மை, தீமையைப் பதிவு செய்தல். 3) உயிரைக் கைப்பற்றுதல். 4) பாதுகாவல். 5) இறைவனின் சிம்மாசனத்தை (அர்ஷை) சுமத்தல். 6) நரகத்திற்கு காவலாளிகளாக இருத்தல். 7) கருவறையில் விதியை எழுதுதல். 8) கப்ரில் விசாரணை செய்தல் போன்ற பல பணிகளை – வேலைகளை மலக்குமார்களுக்கு அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அத்தகைய பணிகளில் ஒன்றைப் பற்றி அல்லாஹ் கூறும் போது,

வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை. (அல்குர்ஆன் 5018)

இந்த வசனத்தில் ஒவ்வொரு மனிதரும் இந்த உலகத்தில் செய்கின்ற நன்மை தீமையைப் பதிவு செய்வதற்கு ஒரு மலக்கு நியமிக்கப்பட்டிருப்பார். ஆனால் அந்த மலக்கு, பிறர் செய்கின்ற நன்மை தீமையை அறியமாட்டார்.

அவருக்கென்று நியமிக்கப்பட்ட மனிதரிடத்தில் ஏற்படுகின்ற நன்மை தீமையை அறிந்து அதைத் தான் பதிவு செய்வார். பிறரைப் பற்றிய மறைவான விஷயம் அவருக்கு தெரியாது. பிறரிடத்தில் ஏற்படுகின்ற நன்மை தீமையை அவர் அறிய மாட்டார். அவ்வாறு இறைவன் அவர்களைப் படைக்கவுமில்லை. மறைவானவற்றை அறிகின்ற ஆற்றலை அல்லாஹ் கொடுக்கவுமில்லை. எனவே மலக்குமார்களுக்கும் மறைவான ஞானம் இல்லை என்பது தெளிவாகிறது.

வளரும் இன்ஷா அல்லாஹ்