கிறித்தவத்திடமிருந்து கல்வியைக் காப்போம்

கிறித்தவத்திடமிருந்து கல்வியைக் காப்போம்

இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட முஸ்லிம்கள் தங்கள் உயிர், உடைமை அத்தனையையும் இழந்தனர். அத்துடன் நில்லாமல், “அடிமை இந்தியா வெள்ளையர்களிடமிருந்து நில அடிப்படையிலும் நிர்வாக அடிப்படையிலும் பெறுவது மட்டும் விடுதலையாகாது; வெள்ளையரின் கல்வி, கலாச்சாரம், பண்பாடு அடிப்படையிலும் விடுதலை பெற வேண்டும்’ என்ற நோக்கில் “ஆங்கிலம் படிப்பது ஹராம்’ என்று முழங்கினர்.

இந்தக் கலாச்சார விடுதலை தான் வெள்ளை ஏகாதிபத்தியத்திடமிருந்து, ஆங்கில ஆதிக்கபுரிகளிடமிருந்து அடைகின்ற முழுமையான விடுதலை என்று முடிவு கட்டி, முழு மூச்சாகக் களமிறங்கினர்; அதில் வெற்றியும் கண்டனர். ஆனால் நாடு விடுதலை பெற்ற பிறகு அது முஸ்லிம்களுக்குப் பெரும் பாதகமாக அமைந்தது.

வெள்ளையர்களுக்கு வெண்சாமரம் வீசியவர்கள் இன்று கல்வி, அரசியல், பொருளாதாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் முன்னேறி விட்டனர். ஆனால் முஸ்லிம்களோ பல நூற்றாண்டுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பெரிய பின்னடைவை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களால் உந்தி எழுந்து, எகிறி மற்ற சமுதாயங்களைக் காட்டிலும் முந்தி வர முடியாமல் முடங்கிக் கிடக்கின்றனர்.

கல்வித் துறையில் முன்னேறிய ஒரு சமுதாயம் கிறித்தவ சமுதாயம் என்று அடித்துச் சொல்லலாம். கல்வி, மருத்துவம் என்ற இரண்டு துறைகளையும் கையில் எடுத்துக் கொண்டு அந்தச் சமுதாயம் முன்னேறியது. இவ்விரண்டிற்கும் சேவை செய்கிறோம் என்ற சாயத்தைப் பூசிக் கொண்டு, கிறிஸ்தவம் என்பதைக் குறியீடாகக் கொண்டு இன்று வரை செயல்படுகின்றது.

இந்த இரண்டு துறைகள் மூலம் வலிந்து கிறிஸ்தவ மதத்தைத் திணிக்கின்றனர்.

யூதர்களும், கிறித்தவர்களும் அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். “அல்லாஹ்வின் வழியே (சரியான) வழியாகும்எனக் கூறுவீராக! உமக்கு விளக்கம் வந்த பின் அவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்றினால், அல்லாஹ்விடமிருந்து காப்பாற்றுபவனோ, உதவுபவனோ உமக்கு இல்லை.

அல்குர்ஆன் 2:120

அல்லாஹ் சொல்வது போன்று அவர்களின் அந்த முயற்சியில் பின்தங்காமல் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த வகையில் முஸ்லிம்களைப் பார்த்தால் இவ்விரு துறைகளிலும் பூஜ்யமாகவே உள்ளனர். இவர்களிடம் உள்ள பொருளாதாரம் அனைத்தும் கல்யாணப் பந்தல்களிலும் விருந்துகளிலும் காலியாகி, கரைந்து போய்க் கொண்டிருக்கின்றது. இதனால் முஸ்லிம்களிடம் இவ்விரு துறைகளிலும் வெற்றிடமே நிலவுகின்றது.

குறிப்பாக, தவ்ஹீது சிந்தனை கொண்ட கொள்கைவாதிகள் இந்தக் கிறித்தவ கல்வி நிறுவனங்களால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

தமிழகத்தில் இந்தியாவின் ஏனைய பகுதிகளைப் போன்றே 12ஆம் வகுப்பு வரை பள்ளிக் கல்வியாகும். இதற்கு 10ஆம் வகுப்பு முடிந்தவுடன் எஸ்எஸ்எல்சி சான்றிதழும் 12ஆம் வகுப்பு முடிந்தவுடன் எச்.எஸ்.சி. சான்றிதழும் வழங்குகின்றனர். இதற்குப் பின்னால் மாணவர்கள் குறிப்பிட்ட பாடங்களைத் தேர்வு செய்து கல்லூரியில் சேர்கின்றனர்.

12ஆம் வகுப்பு வரைக்கும் உள்ள பள்ளிக்கூடங்களை அரசாங்கமும் நடத்துகின்றது, தனியாரும் நடத்துகின்றனர். அரசாங்கம் நடத்துகின்ற பள்ளிக்கூடங்களை விட தனியார் நடத்துகின்ற பள்ளிக்கூடங்கள் தான் தரமிக்கவையாக உள்ளன.

தனியார் கல்வி நிறுவனங்கள் கட்டணங்கள் அடிப்படையில் அமைந்தவை. கல்வித் தரத்திற்கு ஏற்ப கட்டணங்கள் அதிகமாக அமையும். அதனால் இங்கு ஓரளவு வசதியான மாணவர்கள் தான் படிக்க முடியும். அரசாங்கப் பள்ளிக்கூடங்களில் ஏழை மாணவர்கள் படிக்கின்றனர்.

இந்தத் தனியார் கல்வி நிறுவனங்களில் 90 சதவிகிதம் கிறித்தவ நிறுவனங்கள் தான். அந்த நிறுவனங்கள் கல்வி மூலம் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றன.

கிறித்தவக் கல்வி நிறுவனங்கள் கல்வியைத் தரமாக வழங்குகின்றன. அதனால் அவர்கள் நிர்ணயிக்கும் எந்தக் கட்டணத்தையும் மக்கள் செலுத்தத் தயாராக இருக்கின்றனர்.

இந்த நிறுவனங்களில் முஸ்லிம்கள் தங்கள் பிள்ளைகளைக் கொண்டு சேர்க்கத் தயங்குவதில்லை. காரணம் முஸ்லிம்களிடம் தரமான கல்வி நிறுவனங்கள் இல்லை.

இந்தக் கிறித்தவ நிறுவனங்கள் ஒன்றாம் வகுப்புக்கு முந்தைய வகுப்பான LKG,  UKG  (KINDER GARDEN)  என குழந்தைகளுக்கான இரண்டு வகுப்புகளை நடத்துகின்றன. இன்னும் சில நிறுவனங்கள் Pre KG எனும் அதற்கு முந்தைய வகுப்பையும் நடத்துகின்றன.

இதில் மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் இந்த நிறுவனங்களில் படிக்கும் குழந்தைகளில் துவங்கி அவர்கள் பள்ளிக்கூடப் படிப்பை முடித்து கல்லூரி செல்கின்ற வரை தங்களுடைய கிறித்தவ மதக் கொள்கைகளை அவர்களிடம் புகுத்துவது தான்.

  • சிறு குழந்தைகளாக இருக்கும் போது தும்மல் ஏற்பட்டால் கூட “ஏசப்பா’ என்று சொல்வதற்குக் கற்றுக் கொடுக்கின்றனர்.
  • காலையில் பள்ளி ஆரம்பிக்கும் போது பிரேயர் என்ற பெயரில் மண்டியிட்டு பைபிளின் அத்தியாயங்கள், வசனங்களைப் படிக்கச் செய்கின்றனர்.
  • தொழுகின்ற நேரம் வந்தால் மாணவ, மாணவியரை தொழுகைக்கு அனுமதிப்பதில்லை.
  • ஜும்ஆ தொழுகைக்கும் அனுமதி மறுக்கின்றனர்.
  • தாடி வைக்கும் மாணவர்களிடம் தாடியை மழிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர்.

ஆ அதிகமான மாணவர்கள் கிறித்தவ கல்விக்கூடங்களுக்கு 5 முதல் 10 கி.மீ. வரை சைக்கிளில் பயணம் செய்து செல்கின்றனர். இப்படிச் செல்லும் மாணவ, மாணவியருக்கு நோன்பு நேரங்களில் வழக்கமான பாட நேரமான காலை 9.30 மணி முதல் 4.30 மணி வரை என்ற நேரத்தில் எந்தச் சலுகையும் காட்டுவதில்லை. இதனால் நோன்பு வைப்பதையே மாணவ, மாணவியர் தவிர்க்கும் நிலை ஏற்படுகின்றது.

  • பெருநாளைக்குக் கூட சில கிறித்தவக் கல்வியகங்களில் விடுமுறை அளிப்பதில்லை.
  • பருவமடைந்த, அல்லது பருவ வயதுக்கு நெருங்கிய மாணவிகளைக் கூட தொடை தெரியுமளவுக்கு ஆடைகளை (சீருடைகளை) அணியச் சொல்கின்றனர்.
  • அவர்களை தலையைத் திறந்து போடச் சொல்கின்றனர். புர்கா அணிவதற்கு அனுமதியில்லை. இப்படி புர்கா இல்லாமல் அரைகுறை ஆடைகளுடன் மாணவியர் படிக்கும் கல்விக் கூடங்களில் ஆண் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் அவல நிலை.
  • ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கோ எஜுகேஷன் கல்விமுறை. இதனால் வழிதவறிய பாதைக்கு மாணவ, மாணவியர் செல்லும் நிலை.
  • பள்ளி ஆண்டு விழா என்ற பெயரில் சிறுவர், சிறுமியரையும் பருவ வயதுடைய மாணவ, மாணவியரையும் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்வது, நாடகங்களில் நடிக்கச் செய்வது, சினிமா பாடல்களை பாடி ஆடச் செய்வது போன்ற கலாச்சாரச் சீரழிவில் தள்ளுகின்றனர்.

தற்போது இருக்கின்ற ஒரு சில முஸ்லிம் நிறுவனங்களில் நமது பிள்ளைகளைச் சேர்க்கலாம் என்றால் அந்த நிறுவனங்கள் கிறித்தவ நிறுவனங்களை விட சற்றும் வேறுபட்டவையாக இல்லை. அங்கு நடக்கும் அத்தனை தீமைகளும் இங்கும் நடக்கின்றன. ஒரு சில வித்தியாசங்கள் என்னவென்றால் அங்கு பாடம் துவங்கும் போது பைபிளை வாசிப்பார்கள். இங்கு முஹம்மது (ஸல்) அவர்களை அழைத்து வணங்குகின்ற யாநபி பாடலைப் படிக்கின்றனர். அத்துடன் இவர்கள் கல்வி நிறுவனம் நடத்தும் நோக்கமே வணிகம் தான்.

இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு தான் என்ன?

ஏகத்துவக் கொள்கையில் உள்ள நாம் தான் இந்தக் கல்வித் திட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும். ஆனால் இன்று தவ்ஹீதுப் பாதையில், பணியில் உள்ள அழுத்தத்தையே நம்மால் தாங்க முடியாததால் கல்வித் துறையில் உரிய கவனம் செலுத்த முடியவில்லை. எனவே இனி வரும் எதிர் காலத்தில் இதை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும்.

அதற்கு இடைப்பட்ட காலத்தில் நமது சந்ததிகளைப் பள்ளிக்கூடங்களில் சேர்க்கும் போது மேற்கண்ட பிரச்சனைகளைக் கவனத்தில் கொண்டு இஸ்லாமிய கொள்கைகளுக்குப் பாதிப்பில்லாத, பாதுகாப்புள்ள நிறுவனங்களில் சேர்க்க வேண்டும்.

முஸ்லிம் நிறுவனங்கள் என்றால் மிகக் கவனம் செலுத்த வேண்டும். ஒரு கிறித்தவ நிறுவனம் எனும் போது அது ஓர் அந்நிய நிறுவனம் என்ற எண்ணம் நமது குழந்தைகளைக் காப்பதற்கு ஒரு சிறிய கவசமாகச் செயல்படும். முஸ்லிம் நிறுவனம் எனும் போது இந்தக் கவசம், கவனம் இருக்காது.

இணை வைப்புக் கொள்கையில் இருப்பவர்கள் முஸ்லிம் பெயர்களில் நடத்தும் கல்வி நிறுவனங்களில் நம் குழந்தைகளைச் சேர்க்கும் போது, இணை வைப்பில் நம் குழந்தைகளைத் தள்ளி விடும் அபாயம் இருக்கின்றது.

எனவே கிறித்தவ நிறுவனம் என்றாலும், முஸ்லிம் நிறுவனம் என்றாலும் ஏகத்துவக் கொள்கை, ஒழுக்கம், பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு எந்தப் பங்கமும் வராத அளவில் கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து நமது குழந்தைச் செல்வங்களைப் பாதுகாப்போமாக!