ஸைபுத்தீன் பரேலவி

ஸைபுத்தீன் பரேலவி

தமிழகத்தில் தவ்ஹீதுக் கருத்து வேரூன்றுவதற்கு முன்னால் சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர் இரு சாரார்களாக இருந்தனர்.

ஒரு சாரார் மத்ஹபு என்ற வட்டத்திற்குள் இருந்து கொண்டு சமாதி வழிபாட்டைக் கண்டிக்கின்ற சாரார்!

இந்த சாரார் தேவ்பந்த் மஸ்லக் – அதாவது தேவ்பந்த் தாருல் உலூம் அரபிக் கல்லூரியின் கொள்கைகளை, நடைமுறைகளைப் பின்பற்றுவதாக அறியப்பட்டனர்; அடையாளப்படுத்தப்பட்டனர்.

மற்றொரு சாரார், சமாதி வழிபாட்டை ஆதரித்து அதில் சாஷ்டாங்கம் செய்பவர்கள். இந்த சாரார் தர்ஹா தொடர்பான அனைத்து விஷயங்களையும் ஆதரிப்பர்.

கப்ருக்கு சந்தனம் பூசுதல், அதற்குப் போர்வை போர்த்துதல், அதன் அருகில் ஊதுபத்தி கொளுத்துதல், சாம்பிராணி போடுதல் போன்ற தீமைகள் அனைத்தையும் மார்க்கம் என்று மூர்க்கத்தனமாக வாதிடுவர்.

மல்விது ஓதுதல், அந்த மவ்லிதுக் கதாபாத்திரங்களான முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி, நாகூர் ஷாகுல் ஹமீது பாதுஷா, அஜ்மீர் காஜா ஆகிய அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள் என்ற படு மோசமான, இஸ்லாத்திற்கு எதிரான, பரேலவிச சந்நியாச சாமியார் கொள்கைகளைக் கொண்டவர்கள்.

இப்படி சுன்னத் வல் ஜமாஅத்தினர் இரு சாராக இருந்த நிலையில் தவ்ஹீது சிந்தனை தோன்றி, மத்ஹபு மாயையைத் தகர்த்தெறிந்தது. சமாதி வழிபாட்டுச் சிந்தனையை அடியோடு ஒழிக்கக் களமிறங்கியது.

வேஷம் போடும் வேடதாரிகள்

தவ்ஹீத் ஜமாஅத் தோன்றிய பின்னர் இவ்விரு சாராரும் சேர்ந்து கொண்டு மூர்க்கமாக, மும்முரமாக தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்க ஆரம்பித்தனர். அத்துடன் அதுவரையிலும் பரேலவிகளை எதிர்த்து நின்ற தேவ்பந்த் சிந்தனையாளர்களின் எதிர்ப்பின் வேகம் முனை மழுங்கிப் போனது; முடங்கிப் போனது.

காரணம், சமாதி வழிபாட்டை அவர்கள் கண்டிக்க ஆரம்பித்ததும் வஹ்ஹாபி என்ற முத்திரை அவர்களுக்குக் குத்தப்பட்டது. நஜாத் என்று அழைக்கப்பட்டனர். இந்த வேலையைச் செய்பவர்கள் வேறு யாருமல்லர்! சாட்சாத் ஷைத்தானின் தோழர்களான பரேலவிகள் தான். பரேலவிகளின் இந்த முத்திரைக்குப் பயந்து தேவ்பந்த் சாரார் முடங்கி, முடமாகிப் போயினர். இருப்பினும் தங்கள் கொள்கையில் அவர்கள் உறுதியாக இருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு சாரார் இருக்கின்றனர். இவர்கள் வேஷம் போடுகின்ற வேடதாரிகள். இவர்கள் தங்களை வெளியில் தேவ்பந்த் சிந்தனையாளர்கள் போல் காட்டிக் கொள்வார்கள். ஆனால் உள்ளுக்குள் பரேலவிச சிந்தனை கொண்டவர்கள்.

இவர்கள் பரேலவிசத் தலைவன், நரகப் பாதையின் ஏஜெண்ட் அப்துல்லாஹ் ஜமாலியுடன் பகிரங்கமாக மேடையைப் பகிர்வது கிடையாது. ஆனால் பேச்சில், பிரச்சாரத்தில் அப்துல்லாஹ் ஜமாலியை ஒத்தவர்கள், ஒருமித்தவர்கள்.

அதற்கு ஓர் எடுத்துக்காட்டு தான் தவ்ஹீத் ஜமாஅத்தின் வாதத்திற்குப் பதிலளித்து 12.02.2012 அன்று மேலப்பாளையத்தில் ஸைபுத்தீன் ரஷாதி பேசிய பேச்சு!

தவ்ஹீத் ஜமாஅத் வைத்த வாதம் என்ன?

யாகுத்பா என்ற பாடல் வரிகளை மேற்கோள் காட்டி, முஹ்யித்தீனைக் கடவுளாக்குகின்ற காட்டுமிராண்டித்தனத்தை கடுமையாகக் கண்டித்துப் பேசினோம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், யாகுத்பாவின் பாடல் வரிகளின் அபத்தங்களைப் பிரசுரமாக வெளியிட்டு மக்களிடம் அம்பலப்படுத்தியது. அந்தப் பிரசுரம் மக்களிடம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. தாங்குவாரா இந்தத் தர்ஹா பேர்வழி? விடுவாரா இந்தத் தவ்ஹீது விரோதி?

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி சொன்னதாக யாகுத்பாவில் இடம் பெறும் வரிகள் தன்னுடைய மாணவர்களைப் பார்த்துச் சொன்னது என்ற புது விளக்கத்தையும் வியாக்கியானத்தையும் கொடுத்தார். தான் ஒரு பக்கா பரேலவி என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தினார்; ஆணித்தரமாக விளம்பரப்படுத்தினார்.

இப்போது இவர் கூறும் விளக்கத்திற்கு வருவோம்.

எவர் ஒருவர் தனிமையில் அமர்ந்தவராகவும், தனது உறக்கத்தைக் களைந்தவராகவும், உறுதியான நம்பிக்கையுடனும் என் திருநாமத்தை ஆயிரம் தடவைகள் அழைப்பாரோ அவ்வாறு அவர் (என்னை) அழைத்த காரணத்திற்காக விரைந்தோடி வந்து நான் அவருக்கு மறுமொழி சொல்வேன்.

இதற்கு ஸைபுத்தீன் பரேலவி, விளக்கம் என்ற பெயரில் சொல்கின்ற குதர்க்கத்தையும், நடத்துகின்ற கூத்தையும் பாருங்கள்.

இந்தக் கவிதை வரியில் அல்ஃப் என்ற வார்த்தை இடம் பெறுகின்றது. இதன் பொருள் ஆயிரம் என்பதாகும். ஆனால் இதற்கு அர்த்தம் ஆயிரம் என்பதல்ல. அன்பு கொள்ளுதல், நேசம் கொள்ளுதல் என்பது தான் அதன் பொருள். அன்பு என்ற பொருளைக் கொண்ட “அல்ஃப்’ என்பது பெயர்ச் சொல்லாகப் பயன்படுத்தப்படாமல் வேர்ச் சொல்லாக அதாவது நேசித்தல் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் உறக்கத்தைக் களைந்தவராக, உறுதியான நம்பிக்கையுடன் என்ற பொருளில் உள்ள அரபி வார்த்தைகளும் வேர்ச் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டுள்ளன.

எனவே இதற்கு ஆயிரம் தடவை என்பதற்குப் பதிலாக, “அன்பு கொண்டவராக’ என்றே பொருள் கொள்ள வேண்டும்.

அவரது அழைப்புக்கு மறுமொழி சொல்வேன் என்றால் அவருக்காக நான் துஆ செய்வேன் என்று பொருள் கொள்ள வேண்டும்.

இது தான் ஸைபுத்தீன் பரேலவி கூறுகின்ற குதர்க்கமான விளக்கமாகும்.

இவர் கூறுகின்ற இந்தக் குதர்க்க விளக்கத்தின்படி இந்தக் கவிதையின் பொருளைப் பார்ப்போம்.

எவர் ஒருவர் தனிமையில் அமர்ந்தவராகவும், தனது உறக்கத்தைக் களைந்தவராகவும், உறுதியான நம்பிக்கையுடனும் அன்பு கொண்டவராக என் திருநாமத்தை அழைப்பாரோ அவ்வாறு அவர் (என்னை) அழைத்த காரணத்திற்காக விரைந்தோடி வந்து நான் அவருக்கு மறுமொழி சொல்வேன். (அதாவது துஆ செய்வேன்)

ஸைபுத்தீன் பரேலவியின் கருத்துப்படி யாகுத்பாவின் மேற்கண்ட வரிகளுக்கு இந்தப் பொருள் வருகின்றது.

இது தவிர அவர் கூறிய மற்றொரு அற்புத விளக்கம்: “இது முஹ்யித்தீன் அப்துல் காதிர் தன்னுடைய மாணவர்களை நோக்கிச் சொன்னதாகும். மக்களை நோக்கிச் சொன்னதல்ல’

இந்த ஏகத்துவ எதிரியிடம் நாம் எழுப்புகின்ற கேள்விகள்:

  1. யார் என் திருநாமத்தை, என்னுடைய பெயரை அழைப்பாரோ என்று தெளிவான வார்த்தை இங்கு இடம் பெறுகின்றது. அதற்குத் தக்க இந்தக் கவிதையின் இறுதியில், “அப்துல் காதிர் முஹ்யித்தீனே!’ என்று முடிகின்றது.

சந்தேகமில்லாமல் பெயரைக் குறிப்பிட்டு அழைப்பதைத் தான் இது தெரிவிக்கின்றது. இதற்கு ஸைபுத்தீன் கூறும் விளக்கத்தின்படி, இவரிடம் இவரது மாணவர், “ஸைபுத்தீனே’ என்று சொன்னால் ஏற்றுக் கொள்வாரா?

  1. அஃதி அல்ஃபன் லில் ஹள்ரத்தி – ஹஜரத்திற்கு ஆயிரம் கொடு என்று கூட்டப் பொறுப்பாளர் தன் பணியாளரிடம் அரபியில் சொன்னால், அதற்கு அந்தப் பணியாளர் ஸைபுத்தீனிடம் ஆயிரத்தைக் கொடுப்பாரா? அல்லது அன்பு செலுத்துவாரா? (இவருக்கு என்ன ரேட் என்று தெரியவில்லை).

முன்பின் உள்ள வாக்கிய அமைப்பைப் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை என்றால் இங்கேயும் அன்பு என்று பொருள் செய்வதில் எந்தப் பிரச்சனையும் இருக்காது.

இந்த ஸைபுத்தீன் பரேலவிக்கு மணமும் குணமும் சேர்த்து கறிச் சாப்பாடு பரிமாறப்பட்ட நிலையில் அந்த அன்பை நினைவில் கொண்டு உடனே கிளம்பி விடுவாரா? அல்லது தவறாமல் கவரை வாங்கிக் கொண்டு தான் போவரா? நிச்சயமாகக் காசு வாங்காமல் போக மாட்டார். காரணம், காசு என்றால் அவ்வளவு கவனம். கடவுள் கொள்கை என்றால் அவ்வளவு அலட்சியம்.

இந்தப் பரேலவி தலைவனை அழைத்து வந்த மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஆலிம்கள் யாகுத்பாவுக்கு இந்தப் பொருளைக் கொடுக்கவில்லை. காரணம் இந்த ஜென்மங்கள், குத்பியத் என்ற பெயரில் யாகுத்பா கவிதை வரியின் அடிப்படையில், இரவு நேரத்தில் விளக்கை அணைத்து விட்டு ஆயிரம் தடவை “யா முஹ்யித்தீன்’ என்று அழைத்து திக்ரு செய்கின்றனர். இனியும் அப்படித் தான் செய்வார்கள். ஏனென்றால் இதன் மூலம் அவர்களின் வயிறுகள் வளர்க்கப்படுகின்றன; நிரப்பப்படுகின்றன. இது தான் உண்மை! யதார்த்த நிலை!

இப்படி ஆயிரம் தடவை இருட்டு திக்ரு செய்வதிலிருந்தே, பெரிய அரபி படித்த பண்டிதர்கள் முதல் சாதாரண பாமரன் வரை இந்த வரிக்கு ஆயிரம் என்ற பொருளைத் தான் கொண்டிருக்கிறான் என்பதை விளங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த உண்மை நிலைக்கு மாறாக ஸைபுத்தீன் பரேலவி பேசுகின்றார். இது அப்பட்டமான குதர்க்கம்; இஸ்லாத்தின் கடவுள் கொள்கையில் விளையாடும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

நாம் அவருக்குச் சவால் விடுகிறோம். யாகுத்பாவுக்கு இவர் கொடுத்த விளக்கத்தின்படி தமிழகம் முழுவதும்… வேண்டாம்! குறைந்தபட்சம் இந்தப் பேச்சை அவர் பேசிய மேலப்பாளையத்திலாவது ‘இனிமேல் யாரும் ஆயிரம் தடவை முஹ்யித்தீன் என்று திக்ரு செய்யக் கூடாது; காரணம் அதற்கு அந்த அர்த்தமில்லை’ என்று பகிரங்கமாக பரேலவிகள் அறிவிக்கத் தயாரா?

இன்னும் காயல்பட்டணம், கீழக்கரை என்று இந்த இருட்டு திக்ரு நடக்கும் இடங்களில் இந்த அடிப்படையில் பொருள் செய்து ஆயிரம் தடவை முஹ்யித்தீனை அழைக்கும் கொடிய இணை வைத்தலை நிறுத்துவார்களா? ஒருபோதும் நிறுத்த மாட்டார்கள்.

யாகுத்பாவில் இடம் பெறும் “அல்ஃப்’ என்பதற்கு இந்த இடத்தில் ஆயிரம் என்பது பொருள். அதனால் தான் இவர்கள் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியை ஆயிரம் தடவை கூவிக் கூவி அழைக்கின்றார்கள்.

  1. மறுமொழி சொல்வேன் என்பதற்கு அரபியில். “அஜப்துஹு’ என்ற வார்த்தை இடம் பெறுகின்றது. இதற்கு, “பதிலளிப்பேன், மறுமொழி சொல்வேன்’ என்பது பொருள். இவ்வாறு பொருள் செய்து கொண்டு, மாணவர்கள் அழைத்தால் கஷ்ஃபில் – ஞான உதிப்பில் (?) தெரியும். அவ்வாறு தெரியும் போது அந்த மாணவர்களுக்காக துஆச் செய்வாராம் முஹ்யித்தீன்!

எவ்வளவு கூறுகெட்ட விளக்கத்தைக் கொடுக்கிறார் இந்த ஸைபுத்தீன் பரேலவி என்று பாருங்கள்.

“என்னைக் கூப்பிடு! நான் பதிலளிப்பேன்’ என்று தெளிவாக வருகின்றது.

நான் பதிலளிப்பேன் என்று மட்டும் சொல்லவில்லை. விரைவாகப் பதிலளிப்பேன் என்று நேரடியாக முஹ்யித்தீன் வருவதைத் தான் யாகுத்பா சொல்கின்றது. ஆனால் ஸைபுத்தீனோ, துஆ செய்வார் என்று குருட்டுத்தனமாகக் கூறுகின்றார்.

  1. யாகுத்பாவை இந்த அளவுக்குத் தூக்கி நிறுத்த வேண்டிய அவசியம் என்ன? அப்படி இதைப் பாட வேண்டிய அவசியம் என்ன? இப்படி வளைத்து, திரித்து ஒரு பொருளை ஏன் கொடுக்க வேண்டும்? “யாகுத்பா என்பது ஒரு குப்பை! எவனோ பிழைப்புக்காக இப்படி எழுதி வைத்திருக்கிறான். அதை யாரும் பாடக் கூடாது’ என்று ஒரு வரியில் சொல்ல வேண்டியது தானே! அல்லது “யாகுத்பா அதன் உண்மையான பொருளில் பாடப்படவில்லை. முஹ்யித்தீனை ஆயிரம் முறை அழைத்தால் வருவார் என்று கூறுவது தெளிவான ஷிர்க்; இந்தப் பொருளில் யாரேனும் யாகுத்பாவைப் பாடினால் அவர் இறைவனுக்கு இணை வைத்து விட்டார்’ என்று அறிவிக்கலாம் அல்லவா?

இப்படி ஒருபோதும் இவர் செய்ய மாட்டார். இறந்தவர்கள் மீண்டும் இவ்வுலகிற்கு வருவார்கள் என்று ஷியாக்கள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கையை ஸைபுத்தீன் பரேலவியும் கொண்டிருப்பதால் தான் இப்படி ஒரு விளக்கத்தைக் கொடுக்கின்றார். இதன் மூலம் இவர் ஒரு சரியான பரேலவி என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்.

அத்வைத ஸைபுத்தீன்

இது மட்டுமில்லாமல் இந்த ஸைபுத்தீன் பரேலவி அத்வைதக் கொள்கையையும் பகிரங்கமாக ஆதரிக்கின்றார்.

“அவன் (அல்லாஹ்) என்னைப் புகழ்கின்றான்; நான் அவனைப் புகழ்கின்றேன். அவன் என்னை வணங்குகின்றான்; நான் அவனை வணங்குகின்றேன்” என்று சொன்ன பரேலவிகளின் தலைவன் முஹ்யித்தீன் இப்னு அரபியையும்,

“நான் தூய்மையானவன்; நான் தூய்மையானவன். என்னுடைய விஷயம் எவ்வளவு மகத்துவமானது? என் ஜிப்பாவில் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை” என்று கூறிய அபூயஸீத் அல்புஸ்தாமியையும்,

காணும் பொருளெல்லாம் கடவுள் என்ற கொள்கையைத் தனது நூலில் பதிவு செய்த கஸ்ஸாலியையும் இந்தப் பரேலவி முல்லா ஆதரிக்கின்றார். “ஏதோ ஒரு நிலையில் அப்படிச் சொல்லி விட்டார்’ என்று கூறிச் சமாளிக்கின்றார். கடுகளவு ஏகத்துவச் சிந்தனை கொண்ட முஸ்லிம் கூட இந்த வார்த்தைகளை ஜீரணிக்க மாட்டான்.

அப்துல்லாஹ் கோமாளி போன்றவர்கள் தங்களைப் பரேலவிகள் என்று வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்கின்றார்கள்.

ஆனால் இவரோ தேவ்பந்த் போர்வையில் சுற்றி வருகின்ற பரேலவி என்பதை, அத்வைதக் கொள்கையை ஆதரிப்பதன் மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டார்.

பைத்தியம் பலவிதம்

“பைத்தியம் பலவிதம்; அதில் பரேலவிசம்’ ஒருவிதம் என்று சொன்னால் அது சரியான வாதமாகும்.

ஒருவர் இறந்து விட்டால் அவர் பேச மாட்டார்; அவர் கேட்க மாட்டார். அதனால் தான் அவர் உயிருடன் இருக்கின்ற வரை அவரை மரியாதையாக அழைத்த மக்கள், அவர் இறந்த பின்பு பிணம் வருகின்றது, மய்யித் வருகின்றது, சவம் கிடக்கின்றது, பிரேதத்தை அடக்கப் போகின்றோம் என்று பேசுகின்றனர்.

சவம், சடலம், பிணம், பிரேதம் என்ற அவப்பெயருக்கு இறந்தவர் ஆளாவதற்குக் காரணம் என்ன? அவருடைய உடலில் இருந்த உயிர் மறைந்ததால் இத்தகைய சிறப்புப் பட்டங்கள் கிடைக்கின்றன. இதில் நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடு கிடையாது. அனைவருக்கும் இதே கதி தான்.

இந்த உண்மையை சாதாரண பாமரன் கூடப் புரிந்து வைத்துள்ளான். ஆனால் இந்த உண்மை பரேலவிகளுக்குப் புரிவதில்லை. இவர்கள் எப்போதும் இறந்தவர்களை உயிருள்ளவர்கள் என்றே அழைப்பார்கள். இருளை ஒளி என்பார்கள். நிழலை வெயில் என்பார்கள். அதனால் இந்த வகையில் அவர்கள் சரியான பைத்தியம் என்று சொன்னால் அதற்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இவர்களது இந்தப் பைத்தியக்கார வாதங்களில், புத்தி பேதலிப்பு பிதற்றல்களில் ஒன்று தான், “நபி (ஸல்) அவர்கள் மனிதப் படைப்பல்ல! அவர்கள் ஒளியினால் படைக்கப்பட்ட படைப்பு” என்ற குருட்டுக் கருத்து!

தமிழகத்தில் தவ்ஹீதுக் கருத்து வேர் பிடிப்பதற்கு முன்பு இந்தத் தீய சிந்தனை தமிழக முஸ்லிம்களிடம் இடம் பிடித்திருந்தது. ஏகத்துவ சிந்தனை வந்தவுடன் இந்தக் கருத்து படிப்படியாக மறைந்து கொண்டிருக்கின்றது. ஒரேயடியாக இனி அது மரணிக்கவும் இருக்கின்றது. அவ்வாறு மரண அடி கொடுத்துக் கொண்டிருப்பது அல்லாஹ்வின் அருள் வசனங்கள் தான்.

அந்த அருள் வசனங்களில் ஒன்று தான் இது!

நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 18:110

நபி (ஸல்) அவர்கள் மனிதப் படைப்பு அல்ல என்ற குருட்டு வாதத்திற்குச் சம்மட்டி அடி கொடுக்கின்ற சத்திய வசனம் இது!

ஆனால் இந்த பைத்தியக்காரக் கூட்டம் அந்தச் சம்மட்டியை வளைக்கவும் உடைக்கவும் பார்க்கின்றது. அது எப்படி?

“நான் உங்களைப் போன்ற மனிதன் தான்’ என்று (முஹம்மதே!) கூறுவீராக!’ என்று அல்லாஹ் கூறுகின்றான். இதன் மூலம், அல்லாஹ் சொல்ல வருகின்ற கருத்து, “நான் உங்களைப் போன்ற மனிதன் தான் என்று நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள்; நான் அப்படிச் சொல்ல மாட்டேன்” என்பது தான்.

இப்படி ஒரு பரேலவிப் பைத்தியம் கூறியுள்ளது.

அல்லாஹ் குர்ஆனில் அதே வசனத்தில், “உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே” என்றும் சொல்லப்படுகின்றது. அப்படியானால் அதற்கு, “உங்களுடைய கடவுள் ஒரே ஒரு கடவுள் என்று நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள்; நான் அப்படிச் சொல்ல மாட்டேன். காரணம் நான் பல கடவுள் கொள்கையைத் தான் சொல்கிறேன்” என்ற மோசமான கருத்து வராதா?

அல்லாஹ் ஒருவன்என கூறுவீராக! (அல்குர்ஆன் 112:1)

இந்த வசனத்தில் “அல்லாஹ் ஒருவன் என்று கூறுவீராக’ என்று சொல்லப்படுகின்றது. இவர்களுடைய கிறுக்குத்தனமான வாதத்தின்படி, “அல்லாஹ் ஏகன் என்று நீங்கள் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளுங்கள்; ஆனால் உண்மையில் அல்லாஹ் ஏகன் கிடையாது; ஏராளமான அல்லாஹ் இருக்கிறான்” என்ற தீய கருத்து வராதா?

மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனை விட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியதுஎனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 2:219

பரேலவிகளின் பைத்திய விளக்கத்தின்படி, மதுவிலும் சூதாட்டத்திலும் மறுமையில் நன்மை இருக்கின்றது என்ற அர்த்தம் வந்து விடாதா?

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர். “அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் (உடலுறவு கொள்ளாமல்) விலகிக் கொள்ளுங்கள்! அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்! அவர்கள் தூய்மையாகி விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள்! திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்” எனக் கூறுவீராக!  (அல்குர்ஆன் 2:22)

இதிலும் இதே கருத்து வராதா?

இப்படி, “நபியே! நீங்கள் சொல்லுங்கள்’ என்ற கருத்தில் வரக்கூடிய அத்தனை வசனங்களுக்கும் பொருள் செய்தால் குர்ஆன் கூறக்கூடிய கொள்கை, கோட்பாடுகள், சட்ட திட்டங்கள் அனைத்துமே கேலிக்கூத்தாக ஆகிவிடும்.

நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் தாம். ஆயினும் தனது அடியார்களில் தான் நாடியவர் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். அல்லாஹ்வின் விருப்பமின்றி எந்த அற்புதத்தையும் உங்களிடம் எங்களால் கொண்டு வர இயலாது. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்என்று அவர்களின் தூதர்கள் கூறினர்.

அல்குர்ஆன் 14:11

நபி (ஸல்) அவர்கள் மட்டுமல்ல! ஏனைய இறைத்தூதர்கள் அனைவருமே மனிதப் படைப்பு தான் என்று இந்த வசனம் தெள்ளத்தெளிவாக, சந்தேகமில்லாமல் தெரிவிக்கின்றது.

எனவே முஹம்மத் (ஸல்) அவர்களும், அதற்கு முன்பு வந்த ஏனைய தூதர்களும் மனிதப் படைப்பு தான் என்பதைத் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது. நபி (ஸல்) அவர்களை மனிதப் படைப்பல்ல என்ற பரேலவிகளின் வாதம் பைத்தியக்காரத்தனமானது என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.